முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

பந்தியில் பங்குபெறுவதன் மூலம், யோவான் ஆறாம் அதிகாரத்தில் கர்த்தர் போதித்த விதமாக அவருடைய சரீரம் மற்றும் இரத்தத்தைப் புசித்து, நித்திய ஜீவனைப் பெறுவதற்கு கர்த்தர் அங்கே குறிப்பிட்ட நிபந்தனையை நிறைவேற்றுகிறார்கள் என்று எழுத்தர்த்த வாதிகள் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் யோவான் ஆறாம் அதிகாரத்தில் கர்த்தர் சொன்ன வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன? அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம். ஏனென்றால், திரவிய மாற்று வாதிகள் பொதுவாகத் தவறாகப் புரிந்துகொள்வது இந்த வார்த்தைகளைத் தான். உதாரணமாக, இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள்:

"அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய சரீரத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவன் இல்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். என் சரீரம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலேயும் நான் அவனிலேயும் நிலைத்திருக்கிறோம்" (யோவான் 6:53-56).

கண்டிப்பாகத் தனது சரீரம் மற்றும் இரத்தத்தைச் சாப்பிட வேண்டும் என்றே சொல்வது போலத் தோன்றுகிறது அல்லவா? ஆனால், அந்த அதிகாரம் முழுவதையும் சூழலின் பின்னணியில் ஆய்வு செய்யும்போது, இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் கர்த்தர் நோக்கிய உண்மையான கருத்தை அறிவது எளிது.

1) இந்த உரையாடல் எங்கே தொடங்கியது?

ஐயாயிரம் பேருக்கு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு திருப்தியாக விருந்து செய்வித்த அற்புதத்தோடு யோவான் ஆறாம் அதிகாரம் தொடங்குகிறது. இன்னொரு முறை இலவச உணவு கிடைக்குமென்று அவர்கள் எல்லோரும் மறுநாளும் வந்து அமர்ந்தார்கள். அப்போது, "இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அடையாளங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்" (யோவான் 6:26-27). இந்தப் பின்னணியில் அவர் தன்னை உணவோடு ஒப்பிட்டுக்கொண்டு, தனது வழக்கத்தின்படி ஆவிக்குரிய காரியங்களை பௌதிக (சரீரப்பிரகாரமான) உவமையோடு அவர்களுக்குப் போதிக்கலானார்.

2) விசுவாசமே உண்மையான விஷயம்

இயேசு நித்திய ஜீவனைத் தருவேன் என்று அவர்களிடத்தில் சொன்னபோது (வசனம் 27), அவர்கள் செய்யவேண்டிய தேவனுக்கு ஏற்ற கிரியை என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள். அதற்கு "இயேசு: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கு ஏற்ற கிரியையாயிருக்கிறது என்று அவர்களுக்குப் பிரதியுத்தரமாகச் சொன்னார்" (யோவான் 6:29). இங்கே கர்த்தர் சாப்பிடுவதைக் குறித்து எதுவும் சொல்லவில்லை, வெறும் விசுவாசத்தைக் குறித்து மட்டுமே குறிப்பிட்டார் என்பதைக் கவனியுங்கள்.

3) உவமையைத் தெளிவுபடுத்திய கர்த்தருடைய வார்த்தைகள்

அதன் பிறகு அவர்கள், மோசே தங்கள் பிதாக்களுக்கு மன்னா பொழியச் செய்து போஷித்த விஷயத்தை எழுப்பினார்கள். அதற்கு அவர், பரலோகத்திலிருந்து இறங்கிவந்த மெய்யான அப்பம் தானே என்று அவர்களுக்குப் பதிலளித்தார் (வசனம் 32-33). ஆனால் ஒரு ஆவிக்குரிய காரியத்தை வெளிப்படுத்த ஒரு பௌதிக உவமையை அவர் பயன்படுத்துகிறார் என்பதைப் புரிந்துகொள்ளாமல், தங்களுக்கு அந்த அப்பம் வேண்டுமென்று யூதர்கள் கேட்கலானார்கள். அப்போது கர்த்தர், தனது வார்த்தைகளின் கருத்தை அவர்களுக்குத் தெளிவுபடுத்தி இவ்வாறு கூறினார்: "நானே ஜீவ அப்பம்; என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்" (யோவான் 6:35). இங்கே கர்த்தர் பௌதிக உணவைக் குறித்துப் பேசவில்லை என்பது தெளிவாகிறது. ஏனென்றால், பௌதிக உணவைச் சாப்பிடுகிறவர்களுக்கு மீண்டும் மீண்டும் பசி எடுக்கும். தான் ஆவிக்குரிய உணவு என்றும், விசுவாசத்தோடு தன்னை ஏற்றுக்கொண்டவர்களுக்கு ஆவிக்குரிய பசி நிரந்தரமாகத் தீர்ந்துபோகும் என்றும் இங்கே கர்த்தருடைய நோக்கம். கவனியுங்கள்: பசி தீரவேண்டுமென்றால் சாப்பிட வேண்டும், தாகம் தீரவேண்டுமென்றால் குடிக்க வேண்டும் அல்லவா? ஆனால் தன்னிடத்தில் வந்தால் பசி தீரும் என்றும், தன்னை விசுவாசித்தால் தாகமடையார்கள் என்றும் கர்த்தர் ஏன் சொன்னார்? தன்னைச் சாப்பிடுவது என்றால் தன்னிடத்தில் வருவதே; தன்னைக் குடிப்பது என்றால் தன்மீது விசுவாசம் வைப்பதே என்ற விளக்கம், கர்த்தரே சுயமாகக் கொடுத்த இந்த விளக்கத்தில் தெளிவாகக் காணப்படுகிறது.

4) பசி, உணவு

இப்படிப் பசியையும், உணவையும் உவமைகளாகப் பயன்படுத்துவது, கர்த்தர் பிரசங்கித்த மற்ற செய்திகளிலும் நமக்குக் காணப்படுகின்றன. உதாரணமாக, "நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்" (மத்தேயு 5:6). ஜீவ அப்பமாகிய கர்த்தருக்குள் நம்முடைய ஆவிக்குரிய பசிதாகங்கள் தீரும். அப்பமும் திராட்சை ரசமும் அந்தப் பசிதாகங்களைத் தீர்க்காது. பௌதிக உணவு பௌதிகப் பசிதாகங்களைத் தீர்க்கும்; ஆவிக்குரிய உணவு ஆவிக்குரிய பசிதாகங்களைத் தீர்க்கும்.

அப்படியே, "நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவக்காலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்" என்று யோவான் 4:14-ல் பார்க்கிறோம். இதுவும் சரீர தாகத்தைக் குறித்தோ மற்றும் அதைத் தீர்க்கும் தண்ணீரைக் குறித்தோ உள்ள குறிப்பு அல்ல என்று தனியாகச் சொல்லத் தேவையில்லை. அவர் கொடுக்கும் ஜீவ தண்ணீர் பரிசுத்த ஆவியானவர் என்று யோவான் 7:37-39 இல் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அதற்காகப் பரிசுத்த ஆவியானவர் எழுத்தர்த்தமாகத் தண்ணீரைப் போல இருப்பார் என்றோ அல்லது அவரைப் பெற்றவர்களுக்குள் தண்ணீராக ஜீரணமாவார் என்றோ கருதினால் அது வேதத்திற்கு எவ்வளவு முரணானது! கர்த்தருடைய இராபோஜனத்தை எழுத்தர்த்தமாகக் கர்த்தருடைய சரீரம் மற்றும் இரத்தம் என்று நினைப்பவர்கள் செய்யும் தவறும் சரியாக இப்படிப்பட்டதே.

5) எத்தனை முறை தெளிவுபடுத்தினாலும் தவறான புரிதலே மிஞ்சியது

தன்னை விசுவாசிக்க வேண்டும் என்பதே தனது வார்த்தைகளின் கருத்து என்று கர்த்தர் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு நினைப்பூட்டினார். "நீங்கள் என்னைக் கண்டும் விசுவாசியாமலிருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்" (யோவான் 6:36). "குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது" (யோவான் 6:40). நான்கு முறை இதே சத்தியத்தை வலியுறுத்திக் கூறினாலும், அவிசுவாசிகளான அந்த யூதர்களுக்குப் புரியவில்லை. அவரே சாப்பிடச் சொல்கிறார் என்று, அது எப்படிச் சாத்தியம் என்று பெரிய அமளியே செய்தார்கள் (யோவான் 6:42-43). ஆனாலும், அப்பம் பூமியிலிருந்து விளையும் தானியத்திலிருந்து வருகிறதே தவிர, பரலோகத்திலிருந்து வராது அல்லவா? தன்னைத் தான் பரலோகத்திலிருந்து வந்த அப்பமாக அழைக்கிறார், எனவே இது உவமையாகவே இருக்கும் என்று சிந்திக்கும் குறைந்தபட்ச அறிவுக்குக் கூட அவர்கள் வேலை கொடுக்கவில்லை. ஒருவேளை மன்னாவைப் போல பரலோகத்திலிருந்து அருளப்பட்டாலும், அப்பம் ஒரு உயிருள்ள நபராக இருக்காது அல்லவா? எனவே இது அலங்காரமாகவே இருக்க வேண்டும் என்று கூடக் குறைந்தபட்சம் சிந்திக்கவில்லை. அடிக்கடி உவமை ரீதியாகப் போதிக்கிறவர் என்பதால் இதுவும் அப்படியே இருக்கலாம் அல்லவா என்ற எண்ணம் கூட அவர்களுக்கு வரவில்லை.

"என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஜீவ அப்பம் நானே" (யோவான் 6:47-48). தன்னிடத்தில் வந்தவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு என்றும், அந்த ஜீவனைக் கொடுக்கும் அப்பம் தானே என்றும் இங்கே கர்த்தர் மீண்டும் ஒருமுறை இந்த உவமைக் கருத்தை விளக்கிக் கூறினார். இங்கே அப்பம் மற்றும் திராட்சை ரசத்தைக் குறித்துக் காட்டும்போதோ, சாப்பிடுவதைக் குறித்தோ ஏதுமில்லை. பௌதிக ஜீவனுக்கு அப்பத்திற்கும் உள்ள உறவே, நித்திய ஜீவனுக்குத் தனக்கும் உள்ளது என்று மட்டுமே இந்த உவமைக் கருத்து.

"உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். இதைப் புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி பரலோகத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே" (யோவான் 6:49-50). இங்கே கர்த்தர் அவர்களுக்குப் பௌதிக உணவுக்கும் ஆவிக்குரிய உணவுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்பித்து, மன்னா என்ற பௌதிக உணவைச் சாப்பிட்டவர்கள் மரித்தார்கள், ஆனால் ஆவிக்குரிய உணவான தன்னைச் சாப்பிட்டவர்கள் மரிக்கமாட்டார்கள் என்று இன்னும் விவரமாகச் சொன்னார். அப்படியே, பந்தியில் உள்ள அப்பம் மற்றும் திராட்சை ரசத்தைச் சாப்பிட்ட மாத்திரத்தில் யாரும் நித்தியமாக உயிர்வாழ மாட்டார்கள், ஆனால் கர்த்தரை விசுவாசித்தவர்களே நித்தியமாக வாழ்வார்கள்.

இவ்வளவு தெளிவாகச் சொன்னாலும், தங்களுக்கு ஆவிக்குரிய கருத்துக்களைப் பகுத்தறியும் திறன் துளியும் இல்லை என்று நிரூபிக்கும் வகையில், "யூதர்கள்: இவன் தன்னுடைய சரீரத்தை நமக்கு எப்படிப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம் பண்ணினார்கள்" (யோவான் 6:52). அவர் நித்திய ஜீவனுக்குத் தேவையான ஆவிக்குரிய அப்பம் என்பதே அவருடைய கருத்து என்று துளியும் கிரகிக்காமல், இன்னும் தங்கள் வயிறு பற்றியே சிந்திக்கிறார்கள். 'நீ மறுபடியும் பிறக்க வேண்டும்' என்று கர்த்தர் சொன்னபோது, மறுபடியும் தாயின் கர்ப்பத்திற்குள் பிரவேசித்துப் பிறப்பது எப்படிச் சாத்தியமாகும் என்று நிக்கொதேமுவுக்கு ஏற்பட்ட தவறான புரிதல் போன்றதே இங்கேயும் நிகழ்ந்தது (யோவான் 3:3-8). சரீரத்திற்குச் சரீரப் பிரகாரமான பிறப்பு, ஆவிக்கு ஆவிக்குரிய பிறப்பு. அப்படியே, சரீரத்திற்குப் பௌதிகமான உணவு, ஆவிக்குக் கிறிஸ்து என்னும் நித்திய ஜீவ அப்பம்.

6) யோவான் ஆறாம் அதிகாரத்தைக் கர்த்தருடைய இராபோஜனமாகப் பாவித்தால் எழும் பிரச்சனைகள்

அ) யோவான் ஆறாம் அதிகாரத்தின் சூழல் கர்த்தருடைய இராபோஜனத்தைக் குறித்ததே அல்ல என்றும், அப்பத்திற்காக அலைந்து கர்த்தரைத் தேடி வந்தவர்களுக்குத் தேவையான உண்மையான அப்பம் என்னவென்று விளக்கும் சூழல் மட்டுமே என்றும், அந்த அதிகாரத்தை யாராவது ஆராய்ந்தால் மறுக்கமுடியாதபடி உறுதிப்படுத்திக்கொள்ளலாம். தன்னையே புசித்து, குடிக்க வேண்டும் என்ற வார்த்தைகளைத் தவறாகப் புரிந்துகொண்டவர்களுக்கு விளக்கம் அளிக்கும்போது, இயேசு ஒரு அப்பத்தை எடுத்து அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்து, "இதோ என் சரீரம், இதைப் புசிக்கிறவர்கள் என் சரீரத்தில் பங்குபெறுவார்கள்" என்று சொல்லவில்லை. அப்படியென்று, ஓபிர் அவர்கள் நினைத்தது போல "பதில் கேட்பதற்கு அவர்கள் தகுதியற்றவர்கள்" என்பதால் அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை என்று நினைப்பதும் சரியாகாது (ஓபிர், கர்த்தருடைய இராபோஜன இரகசியம், பக்கம் 8). சொல்லப்பட்ட பதில் நம் சிந்தனைக்கு ஏற்றதாக இல்லாத காரணத்தினால் பதில் சொல்லவில்லை என்று உண்மைகளிலிருந்து திசை திருப்புவது நேர்மை என்று சொல்லப்படாது. தனது சரீரத்தையும் இரத்தத்தையும் புசித்து, குடிப்பதென்றால் தன்னிடத்தில் வந்து தன்மீது விசுவாசம் வைப்பது என்று தவிர வேறு எந்த விளக்கமும் கர்த்தர் அந்தச் சந்தர்ப்பத்தில் கொடுத்ததாக நாம் பார்க்கவில்லை. சபையோடு அவர் பிறகு ஏற்படுத்திய கர்த்தருடைய இராபோஜன சந்தர்ப்பத்தைக் கொண்டுவந்து, யூதர்களோடு மட்டுமே நிகழ்ந்த இந்த உரையாடலுக்கு இணைப்பது முற்றிலும் பொருத்தமற்ற வியாக்கியானமே ஆகும்.

ஆ) "நீங்கள் மனுஷகுமாரனுடைய சரீரத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவன் இல்லை" (யோவான் 6:53) என்று கர்த்தர் சொன்ன வார்த்தைகளை எழுத்தர்த்தமாக எடுத்துக்கொண்டால், தன்னோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளனுக்கு நித்திய ஜீவனை எப்படி வாக்குத்தத்தம் செய்ய முடியும்? (லூக்கா 23:43). அந்தக் கள்ளன் கர்த்தருடைய இராபோஜனத்தின் மூலம் அவருடைய சரீரத்தைப் புசித்து அவருடைய இரத்தத்தைக் குடித்து அந்த நித்திய ஜீவனைச் சம்பாதித்துக்கொண்டானா? இல்லை என்று நமக்குத் தெரியும். ஆனாலும், கர்த்தருடைய சரீரத்தைப் புசித்து, அவருடைய இரத்தத்தைக் குடித்தால் ஒழிய நித்திய ஜீவன் இல்லை என்று அவர் யூதர்களிடம் சொன்னார் அல்லவா? கர்த்தர் யூதர்களிடம் பொய் சொன்னாரா? அல்லது இந்தக் கள்ளனுக்கே போலியான உத்திரவாதம் அளிக்கிறாரா? யோவான் 6:53-56 ஐ எழுத்தர்த்தமாக எடுத்துக்கொள்வது இவ்விதமாகக் கர்த்தரைப் பொய்யராக்குவது போலவே ஆகும். இது கர்த்தருடைய இராபோஜனத்தைக் குறித்த குறிப்பு என்று நம்புபவர்கள் இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க முடியாது. ஆனால், அவரை விசுவாசிப்பதே அவரைப் புசிப்பது என்று யோவான் ஆறாம் அதிகாரத்தின் முழுச் சூழலும் நமக்குத் தெளிவுபடுத்துகிறபடியால், இந்தக் கருத்தில் அந்தக் கள்ளன் தனக்காகப் பிட்கப்பட்ட கர்த்தருடைய சரீரத்தைப் புசித்து, தனக்காகச் சிந்தப்பட்ட கர்த்தருடைய இரத்தத்தைக் குடித்தான். அவன் இயேசுவை விசுவாசித்தான். எனவே அவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. இந்த விளக்கம் மட்டுமே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு.

சிலுவையிலுள்ள கள்ளன் நிகழ்வு சபை ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்பு நடந்தது அல்லவா என்று யாராவது பதிலளித்தால், யோவான் 3:16-ல் நித்திய ஜீவன் எப்படிக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்ட வாக்குத்தத்தம், சபை ஸ்தாபிக்கப்பட்ட பிறகு ரத்து செய்யப்படவில்லை, சிறிதளவும் திருத்தப்படவில்லை என்று அவர்களுக்கு நினைப்பூட்டுகிறேன். கர்த்தரைப் புசித்து, குடியாதவனுக்கு நித்திய ஜீவன் இல்லை (யோவான் 6:53-56). ஆனால் அவரை விசுவாசித்தவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனைப் பெறுவான் (யோவான் 3:16). ஏனென்றால், கர்த்தரைப் புசித்து, குடிப்பதென்றால் அவரை விசுவாசிப்பதே.

இ) ஒருபுறம் இரட்சிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டால் மட்டுமே அப்பம் கர்த்தருடைய சரீரமாக மாறும் என்று போதித்துக்கொண்டு, மறுபுறம் நித்திய ஜீவனைப் பெறுவது நமக்குக் கர்த்தருடைய இராபோஜனத்தினால் கிடைக்கும் முதல் பயன் என்றும் ஓபிர் அவர்கள் எழுதினார் (ஓபிர், கர்த்தருடைய இராபோஜன இரகசியம், பக்கம் 12, 39). இரட்சிக்கப்பட்டவர்களுக்கு நித்திய ஜீவன் இல்லையா? இருந்தால், கர்த்தருடைய இராபோஜன சடங்கினால் வரும் நித்திய ஜீவன் என்ன? அதாவது, நித்திய ஜீவன் இல்லாத இரட்சிப்பும் இருக்குமா? பைபிள் அப்படி எதையும் போதிக்கவில்லை. ஒருவேளை நித்திய ஜீவனைக் கொடுக்கும் வல்லமை ஏதேனும் அந்தச் சடங்கில் இருந்தால், அதை இரட்சிப்புப் பெறாதவர்களுக்கு வழங்க வேண்டும் அல்லவா! ஆனால் வேதம் அதற்கு ஒப்புக்கொள்ளாது. இரட்சிப்புப் பெற்று, அதாவது விசுவாசத்தின் மூலம் நித்திய ஜீவனை அடைந்தவர்களே கர்த்தருடைய பந்தியில் கையை நீட்ட வேண்டும். எனவே, கர்த்தருடைய இராபோஜனம் நித்திய ஜீவனைக் கொடுக்கும் கர்த்தருடைய சரீரத்திலும் இரத்தத்திலும் பங்காளிகளாக ஆக்குவதற்கு உருவாக்கப்பட்ட ஏற்பாடு எள்ளளவும் அல்ல.

7) தெளிவான முடிவு

யோவான் ஆறாம் அதிகாரத்தில் தனது செய்தியை முடிக்கும்போது, தனது இந்த வார்த்தைகளை ஆவிக்குரிய கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமா அல்லது சரீரப் பிரகாரமான கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமா என்ற கேள்விக்கு, யாருக்கும் இனி எந்தச் சந்தேகத்திற்கும் இடமளிக்காத அளவு தெளிவான விளக்கத்தைக் கர்த்தரே சுயமாகக் கொடுத்தார். "ஆவியே உயிர்ப்பிக்கிறது, சரீரமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது" (யோவான் 6:63). சரீரப் பிரகாரமாகப் புசித்து, குடிப்பதினால் யாருக்கும் எந்த ஆவிக்குரிய நன்மையும் வராது. ஆவிக்குரிய விதமாகக் கர்த்தரை அணுகி அவரை விசுவாசிப்பதே நித்திய ஜீவனுக்கு ஒரே வழி. உவமைகளையும், ஆவிக்குரிய காரியங்களையும் புரிந்துகொள்ள முடியாத யூதர்களைப் போல, பிடிவாதமாக, முட்டாள்தனமாக, அர்த்தமற்ற சிந்தனைகளுக்கு இடமளிக்காமல் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

கட்டுரைகள்
More articles ...
More articles ...
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
ஏப்ரல் 13, 2026
பிரசங்கித்தல் என்பது தேவன் நமக்கு அளித்துள்ள ஒரு புனிதமான பொறுப்பாகும். தேவனுடைய வார்த்தையைப்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
கலாத்தியர் 2:11-14 வரையிலான வேதப்பகுதியை மையமாக வைத்து, "பெரிய ஊழியர்கள் செய்யும் பெரிய தவறுகள்"...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
இந்து வேதங்களான ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களில் உள்ள முப்பத்திமூன்று தெய்வங்களில் ஒருவரான...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
எங்களின் தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், கிறிஸ்தவர்களாகிய நீங்கள் "சிந்தியுங்கள்" என்று...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
லூக்கா சுவிசேஷம் 15-ம் அதிகாரத்தில், நம் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான மூன்று உவமைகளைக் குறித்து...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
உண்மையான கிறிஸ்தவன் என்பதற்கான ஒரே அடையாளம் (விதைக்கிறவன் உவமை) மத்தேயு 13:1-9 (வசனம்...

தெடர்ந்து வாசிக்க ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.