நற்செய்தி

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்...
ஆசிரியர்: ஜோசப் கோவிந்த்
வாசிப்பதற்கான நேரம்: 3 நிமிடங்கள்

அன்பானவர்களே! இந்த உலகத்தில் ஜாதி மதம் இனம் மொழி நாடு என வேறுப்பாடு பார்க்காமல் உலகமெங்கும் ஒருமித்து இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுகிறார்கள். கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுவது போல் வேறு யாரையும் இந்த உலகம் கொண்டாடுவதில்லை, ஏன் என்று எப்போதாவது நாம் யோசித்தது உண்டா? இல்லை, பரிசுத்த வேதத்தை நாம் ஆராய்ந்து பார்த்தால் புரியும்.

அந்த வானத்தையும் இந்த பூமியையும் அதில் உள்ள எல்லாவற்றையும் படைத்து மனிதர்களாகிய நம்மையும் இந்த படைப்பில் பிறப்பித்து ஆளுகை செய்யக்கூடியவர், எதற்கும் நிகரே இல்லாதவரும், மனிதனுடைய கற்பனைக்கு எட்டாதவரும், காலங்கள் கடந்து நித்தியத்திலும் நிலைத்து இருக்ககூடியர். ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் மூல காரணமான அந்த தேவாதி தேவன் இரத்தமும் சதையும் கொண்டு நம்மை போன்ற மனிதனாக இராயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த பூமியில் பிறப்பதற்கு காரணம் என்ன? என்று பார்த்தால் அது “அன்பு”

ஆம் மனக்குலத்தை தேவன் அதிகமாக நேசித்தபடியால் தான் மனித உருவம் கொண்டு பூமியில் பிறக்க வேண்டியதாய் இருந்தது ஏனென்றால் ஒட்டுமொத்த மனக்குலத்தின் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் “பாவம்” இந்த பாவம் நம்மை படைத்த தேவனை மறக்க செய்கிறது. மனிதர்களிடையே சமாதானமின்மை ஏற்றத்தாழ்வுகள், மனிதர்கள் படைத்தவரை விட்டு படைப்பை வழிப்படுதல், சுயநல சிந்தனை இறுதியில் நித்திய காலமாக மனித இனத்தை நரகத்தில் தள்ளிவிடுகிறது. இவைகளே! பாவத்தினால் மனித இனம் அனுபவிக்கும் கோரங்கள்.

இந்த பாவம் எங்கு துவங்கியது என்று பார்த்தால் முதல் தம்பதிகளாகிய ஆதாம் – ஏவாள் என்பவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாமல் தங்கள் சுய சிந்தனைப்படி நடந்ததால் தான் இந்த பூமிக்கு பாவம் அறிமுகமானது. அன்று தொடங்கி இன்று வரை பாவம் என்னும் சிறையிலிருந்து மீண்டு வர முடியாத நிலையில் ஒட்டுமொத்த மனித இனமும் இருக்கிறது. மனிதன் பாவ சுபாவத்தோடு பிறந்து பாவ சுபாவத்தோடு வாழ்ந்து பாவ சுபாவத்தோடு மரிக்கும் அவலநிலை ஏற்பட்டது. பாவம் என்பது தலைமுறை தலைமுறையாக மனிதனை ஆண்டுக்கொண்டது. நரகம் என்ற துர்ச்செய்தியோடு வாழும் மனித இனம் தன்னால் போக்கிக் கொள்ள முடியாத பாவ சுமையை தேவன் மனித இனத்தை அதிகமாக நேசித்த படியால் முதல் மனிதன் மூலமாக வந்த பாவத்தை சுமப்பதற்கு தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரன் இயேசு கிறிஸ்துவை மனிதனாக இந்த பூமிக்கு அனுப்பினார்.

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்றால் பாவமே இல்லாமல் வாழ்ந்து பாவமே செய்யாமல், பாவத்தை நேசிக்காமல் அவர் முழு பரிசுத்தராக வாழ்ந்து, பாவிகளாகிய நமக்காக அவர் சிலுவையில் மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். மனிதர்களாகிய நாம் பாவத்தினால் அடைய வேண்டிய நரக தண்டனையிலிருந்து நம்மை காப்பாற்றுவதற்காக அவர் பலியானார். பாவம் என்ற துர்ச்செய்தியை சுமந்திருக்கும் மனித இனத்திற்கு உண்மையாகவே இது நற்செய்தி தான். நம்மை நேசித்த தேவன் நம்மிருக்கும் பாவ சிறையிலிருந்து நம்மை விடுவிக்க மாபெரும் தியாகத்தை செய்தார். இதை கேட்கும் நீங்கள் இந்த மாபெரும் உண்மையை இவ்விதமாக இதுவரை கேள்விப்படவில்லை என்றால், ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் உங்களுடைய இயலாமையை அறிந்த இயேசு கிறிஸ்து உங்களையும் நேசிக்கிறார், அவர் உங்கள் பாவத்திலிருந்து விடுவிக்க விரும்புகிறார்.

நாம் பாவிகளாய் இருக்கையில் நமக்காக வந்த இயேசு கிறிஸ்துவினுடைய மரணத்தினால் நம்முடைய பாவ மன்னிப்பு உறுதியானது என்பதை முழு மனதோடு விசுவாசித்தால், இந்த மாபெரும் ஆசீர்வாதமான முடிவில்லாத பாவ மன்னிப்பும், மரணத்திற்கு பிறகு நித்திய வாழ்வு உங்களுக்கு சொந்தமாகும். இதற்காகவே தேவாதி தேவன் மனிதர்கள் வாழும் இந்த பூமியில் பிறந்தார். இயேசுகிறிஸ்து பிறந்தார் என்று கொண்டாடும் நாம் அவருடைய பிறப்பின் காரணத்தை அறிந்துக்கொள்ளவேண்டும். வெறும் கொண்டாட்டம் மட்டும் நமக்கு நன்மை கொடுக்காது. கிறிஸ்து பிறந்தார் என்ற செய்தி தேவன் நம்மீது வைத்த அன்பை காட்டுகிறது. இதுவே மெய்யான கிறிஸ்துமஸ்.

அன்பானவர்களே! காலங்கள் கடந்து செல்கிறது இனியும் தாமதம் வேண்டும், இதை கேட்கும் நீங்கள் தேவனுடைய மாபெரும் பரிசாகிய இரட்சிப்பை பெற்றுக்கொள்ள இயேசு கிறிஸ்துவின் சிலுவை பலி எனக்காக என்பதை விசுவாசியுங்கள். "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை" (அப்போஸ்தலர் 4:12) "நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்." (1 யோவான் 2:2) "கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்." (ரோமர்10:9) “இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்.” (2 கொரிந்தியர் 6:2). "கர்த்தராகிய இயேசுவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" (அப்போஸ்தலர் 16:31) "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்." (ஏசாயா 53:5) . "கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்." (ஏசாயா 55:6). தேவனுடைய சமாதானம் நம் அனைவர்களுடன் இருப்பதாக ஆமென்.

 

 
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.