இரட்சிப்பு

நாம் அனுதினமும் உட்கொள்ள வேண்டிய 10 ஆவிக்குரிய சிந்தனைகள்
ஆசிரியர்: A. அருள்நேசன்
வாசிப்பதற்கான நேரம்: 3 நிமிடங்கள்
  1. பிதாவாகிய தேவன் நித்தியத்திலே என்னை முன்குறித்துத் தெரிந்துகொண்டார். எனவே, தேவன் அழைத்த அழைப்பும் என்னுடைய இரட்சிப்பும் நிச்சயமானவை.

  2. பாவியாகிய எனக்காகக் கிறிஸ்து மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இதன் மூலமாக, கிறிஸ்துவின் அன்பையும் பாவத்தின் கொடூரத்தையும் நான் உணர்ந்துகொள்கிறேன். இந்த உண்மை, பாவத்தின் மீதான வெற்றியை எனக்குத் தருகிறது.

  3. இந்த உலக வாழ்க்கையில் நான் சரியாக வாழ்வதற்குத், தேவன் பரிசுத்த ஆவியானவரை எனக்குத் துணையாகக் கொடுத்திருக்கிறார். அவரைத் துக்கப்படுத்தாமல், அவருக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதே என்னுடைய முதன்மையான நோக்கமாகும்.

  4. இந்த உலகத்தில் நான் ஒரு உதவியற்ற பாவி என்பதை உணருகிறேன். திரித்துவ தேவனின் உதவி இல்லையெனில், நான் நிச்சயமாகப் பாவத்தில் அழிந்துபோயிருப்பேன். அவர் என்னைப் பாவத்திலிருந்து காப்பாற்றியதற்காகத் தாழ்மையுள்ள இருதயத்தோடு அவருக்கு நன்றி செலுத்துகிறேன்.

  5. தேவன் உன்னதங்களிலே சகல ஆசீர்வாதங்களினாலும் என்னை ஆசீர்வதித்திருக்கிறார். அந்த அளவிட முடியாத, கற்பனைக்கு எட்டாத ஆசீர்வாதங்கள் இன்று எனக்கு மறைபொருளாக இருந்தாலும், நித்தியத்தில் அவை எனக்குச் சொந்தமே.

  6. நான் தேவனின் கிருபையால் இலவசமாகப் பெற்ற இரட்சிப்பு கிறிஸ்துவைச் சார்ந்திருக்கிறது. அதை முடிவுபரியந்தம் அவர் காத்துக்கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எனவே, உலகச் சூழ்நிலைகளுக்கு நான் அஞ்சுவதில்லை.

  7. ஒவ்வொரு நாளும் நான் பரலோகத்தை நெருங்கிச் செல்கிறேன். பரலோகமே என்னுடைய வீடு என்பதால், நான் அந்த வீட்டிற்குத் தகுதியுள்ளவனாய் இருக்கும்படித் தேவையானவற்றைப் பயிற்சி செய்கிறேன்.

  8. பரிசுத்த வேதமே என் வழிகாட்டி! இந்த உலகத்தில் வாழ்கின்ற நான், என்னுடைய வாழ்வில் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் வேதத்தைச் சார்ந்தே நிற்பேன். வேதத்திற்கு விரோதமான எந்த ஒரு காரியத்தையும் நான் ஒருநாளும், ஒருபோதும் செய்யமாட்டேன்.

  9. இந்த நாளில் எனக்கும், எனது குடும்பத்திற்கும், எனது திருச்சபைக்கும் எது நன்மை பயக்குமோ, அதையே வேதத்திற்கு உட்பட்டு நேர்மறையாகச் சிந்திப்பேன்; மேலும் அதைச் செயல்படுத்துவேன். தேவன் எனக்குக் கொடுத்திருக்கும் அதிகாரத்தை அன்பில்லாமல் யார்மீதும் (மனைவி, பிள்ளைகள், சக விசுவாசிகள், நண்பர்கள், உடன் வேலையாட்கள்) திணிக்கமாட்டேன்.

  10. எனது குடும்பத்திற்கும், திருச்சபைக்கும், இந்தச் சமுதாயத்திற்கும் இடறலற்றவனாய் வாழ்வதற்கும், முன்னுதாரணமாய் வாழ்ந்து கிறிஸ்துவைக் காண்பிப்பதற்கும் முழுமனதோடு முயற்சி செய்வேன்.


முடிவுரை

நம்முடைய உடல் பலவீனங்களில் மருத்துவர் நமக்குக் கொடுக்கும் மாத்திரைகள், உடலுக்குள் சென்று எவ்வாறு செயல்படுகின்றன என்று நமக்குத் தெரியாது; ஆனால், நிச்சயமாக அவை நமக்குச் சுகத்தைத் தருகின்றன. அதுபோலவே, வேதத்தில் இருக்கும் இந்த உண்மைகளை நாம் அனுதினமும் சிந்திக்கும்போது, அது நமக்கு ஆறுதலையும், மகிழ்ச்சியையும், வேதத்தின்படியான விசுவாச வாழ்க்கை வாழ்வதற்கான உந்துதலையும் தருகிறது. விசுவாசத்திற்கு அடிப்படையான இந்த உண்மைகளை நீங்கள் சுருக்கமாகப் புரிந்துகொள்ளும்படி 10 குறிப்புகளில் தந்திருக்கிறோம். இதை அனுதினமும் சிந்தித்துப் பாருங்கள்; ஆவிக்குரியவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். திரித்துவ தேவன் உங்களுக்கு உதவி செய்வாராக.

“எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” (ரோமர் 8:30,31)

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.