உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை

கவலை
ஆசிரியர்: A.W. பிங்க்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 2 நிமிடங்கள்

“நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல்...” (பிலிப்பியர் 4:6)

கவலை என்பது, திருடுவது எப்படிக் குற்றமோ, அப்படியே கண்டிப்பாகத் தடைசெய்யப்பட வேண்டிய ஒன்றாகும். நாம் இதை நிதானித்துச் சிந்திப்போமானால், இது ஒரு சாதாரண பலவீனம் அல்ல என்பதைத் தெளிவாக உணர முடியும். கவலையின் பாவத்தன்மையை நாம் எவ்வளவு அதிகமாக உணர்கிறோமோ, அவ்வளவு விரைவாக அது தேவனை மிகவும் கனவீனப்படுத்துகிறது என்பதை உணர்ந்து, அதற்கெதிராய்ப் போராடுவோம். "பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே" (எபிரேயர் 12:4). நாம் இந்தப் பாவத்திற்கெதிராக எவ்வாறு போராடலாம்?

  • முதலாவது, இதன் வீரியத்தை ஆழமாக உணரும்படி பரிசுத்த ஆவியானவரிடம் முழு மனதோடு மன்றாட வேண்டும்.

  • இரண்டாவது, இந்தப் பொல்லாங்கிலிருந்து விடுதலை பெறுவதற்காக, விசேஷமான, ஊக்கமான ஜெபத்தை ஏறெடுக்க வேண்டும்.

  • மூன்றாவது, கவலையின் தொடக்கத்தைக் கவனித்து, மனதில் குழப்பம் தோன்றும் சமயத்திலும், விசுவாசமற்ற எண்ணங்கள் எழும்பும் வேளையிலும், தாமதமின்றி நம் இருதயத்தை தேவனிடம் ஒப்புக்கொடுத்து, அவற்றிலிருந்து நம்மை விடுவிக்கும்படி அவரை நோக்கிக் கூப்பிட வேண்டும்.

கவலைக்குச் சிறந்த மருந்து தேவனின் நன்மைகளையும், வல்லமையையும், அவரே நமக்குப் போதுமானவராய் இருப்பதையும் அவ்வப்போது நம்முடைய சிந்தனையில் நினைவுகூருவதாகும். ஒரு தேவமனிதன், "கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்" என்று உறுதியாக உணரும்போது, "நான் தாழ்ச்சியடையேன்" என்ற முடிவுக்கு வரமுடியும். மேலே குறிப்பிடப்பட்ட வசனத்தைத் தொடர்ந்து வரும் வசனம்: "நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்" என்பதாகும். தேவ சமூகத்தில் சமர்ப்பிக்க முடியாத அளவுக்குப் பெரிய கவலையும் இல்லை, மிகச் சிறியதான கவலையும் இல்லை.

"ஸ்தோத்திரத்தோடே கூடிய" என்பதே இதில் மிக முக்கியமானது; ஆனால், அதில்தான் நாம் பெரும்பாலும் தவறிவிடுகிறோம். இதன் பொருள், தேவனிடமிருந்து பதிலைப் பெறுவதற்கு முன்பே, அதற்காக அவருக்கு நன்றி செலுத்துவதாகும். இது, ஒரு பிள்ளை தன் தகப்பனின் கிருபையை உறுதியாய் எதிர்பார்க்கும் நம்பிக்கைக்கு ஒப்பானதாகும்.

“ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? ... முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.” (மத்தேயு 6:25, 33)

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.