"நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம்." (1 யோவான் 1:6).
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற அனைவரும் இரட்சிக்கப்பட்டவர்களா? இந்தக் கேள்வி மிகவும் சர்ச்சைக்குரியது என்பதை நான் அறிவேன். ஆனாலும், இது பலரின் இரட்சிப்புக்குச் சம்பந்தப்பட்ட கேள்வி என்பதால் கேட்கிறேன். ஏனென்றால், மெய்யான விசுவாசத்தைப் போலவே தோற்றமளித்து, ஏமாற்றும் ஒரு போலியான விசுவாசம் இருப்பதாக வேதம் நம்மை எச்சரிக்கிறது. "கர்த்தாவே, கர்த்தாவே, என்று சொல்பவர்கள் அனைவரும் பரலோகத்திற்கு உரியவர்கள் அல்ல" என்றும், அவருடைய நாமத்தில் தீர்க்கதரிசனம் உரைப்பதும், பிசாசுகளைத் துரத்துவதும் மற்றும் பல அற்புதங்களைச் செய்வது மட்டுமே பரலோகத்திற்குத் தகுதியானது அல்ல என்றும் வேதம் சொல்லுகிறது. எனவே இயேசுவை விசுவாசித்தாலும், இரட்சிப்புக்கு ஏற்ற விசுவாசம், இரட்சிப்புக்கு ஏற்பில்லாத விசுவாசம் என இரண்டு வகையான விசுவாசங்கள் உண்டு. எல்லா விசுவாசமும் இரட்சிப்புக்கு வழிவகுக்காது. கேயாசி, யூதாஸ், தேமா, இவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் விசுவாசிகள்தாம். இன்றைய திருச்சபைகளில் கூட இப்படிப்பட்ட போலியான விசுவாசிகளுக்குப் பஞ்சமில்லை.
போலியானது என்று சொன்னாலே உண்மையானதைப் போலத் தோற்றமளித்து ஏமாற்றுவது என்றுதான் பொருள். மேலும் இதேபோலத்தான் போலியான விசுவாசம் என்பது உண்மையான விசுவாசத்துடன் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. "நமக்கு இருப்பது உண்மையான விசுவாசம்தான்" என ஏமாற்றுவது இந்த ஒற்றுமைகள்தான். எனவே, இந்த இரண்டுக்கும் ஒற்றுமைகள் என்ன என்பதை விழிப்புடன் வேத வசனத்தின் துணையோடு கவனியுங்கள்.
“நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மீதே விசுவாசம் வைத்தேன், எனவே நான் தேவனுடைய பிள்ளை” (யோவான் 1:12) என்று சொல்லிக்கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா? ஆனால், “அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள். அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை” என்று அதே வேதத்தில் எழுதப்பட்டுள்ளது (யோவான் 2:23,24). அவர்கள் விசுவாசித்தார்கள், ஆனால் அவர்களுடைய விசுவாசத்தில் அவருக்கு (இயேசு கிறிஸ்துவுக்கு) நம்பிக்கை இல்லை. மேலும், விசுவாசிப்பதாகச் சொல்லும் நம் இருதயங்களில் கூட, இயேசு கிறிஸ்து நம்மை அவருடையவராகச் செய்வதற்குத் தடையாகப் பல காரியங்கள் நம்மிடம் இருக்கும் ஆபத்து உண்டு.
“நான் தேவனுடைய வார்த்தையைக் கேட்டு விசுவாசித்தேன், விசுவாசம் கேள்வியினாலே வரும்” (ரோமர் 10:17) என்று சொல்லுவாயென்றால், கற்பாறை நிலம் போன்ற இருதயத்தைக் கொண்ட மனிதன் கூடத் தேவனுடைய வார்த்தையைக் கேட்டு விசுவாசித்தான். ஆயினும் அவனுடையது சோதனைக் காலத்தில் காணாமல் போன விசுவாசமாக இருக்கிறது. அது இறுதிவரை நிலைத்திருக்கும் விசுவாசம் அல்ல (மத்தேயு 13:20,21).
“அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.” இது உண்மையான இரட்சிப்பின் ஆதாரம் இல்லையா? (ரோமர் 14:17) என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் கற்பாறையான நிலமும், வசனத்தைக் கேட்டவுடனே மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாக வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. மனிதனுடைய உணர்வுகளே இரட்சிப்பிற்கான ஆதாரம் அல்ல.
“எனக்குள் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும், எனவே என்னுடைய இரட்சிப்பு உண்மையானதுதான்” என ஆறுதலடைகிறீர்களா? ஆனால், பரிசுத்த ஆவியானவரின் வரங்களைப் பெற்று, வீழ்ந்து போனவர்களைக் குறித்துச் சொல்லப்பட்ட வசனத்தை நினைவுகொள். “ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.” (எபிரேயர் 6:4-6).
“நான் கர்த்தரின் இரண்டாம் வருகைக்காகக் காத்திருக்கிறேன். எனவே எனக்கு என் விசுவாசத்தின் மீது எந்தவிதக் குழப்பமில்லை” என்று சொல்லுகிறாயா? மணவாளனுக்காகக் காத்திருந்த புத்தியுள்ள ஐந்து கன்னிகைகளோடு, புத்தியில்லாத ஐந்து கன்னிகைகள் இறுதியில் கைவிடப்பட்டனர் என்பதை மறந்துவிடாதே! (மத்தேயு 25:1-12). “கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ! அதினால் உங்களுக்கு என்ன உண்டு? கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயிருக்கும்.” (ஆமோஸ் 5:18).
உண்மையான விசுவாசிகளில் இருக்கும் ஐந்து குணங்கள் போலியான விசுவாசிகளிடம் கூட இருக்கிறது என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. இந்த இருபிரிவினரும் விசுவாசிப்பது இயேசுவின் நாமத்தையே; இருவரும் விசுவாசிப்பது தேவனுடைய வார்த்தையே! இந்த இருவரிலும் பரம ஆனந்தம் இருக்கிறது; இருவரும் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்கள்; இருவரும் தேவனின் இரண்டாம் வருகைக்காகக் காத்திருக்கின்றனர். இத்தனை ஒற்றுமை இருந்தாலும், நமக்கு இருப்பது உண்மையான விசுவாசமா? அல்லது போலியான விசுவாசமா? என்பதை எப்படி அறிந்து கொள்வது? அதைத் தெரிந்து கொள்வது அவ்வளவு கடினமானது அல்ல. உண்மையான விசுவாசத்துக்கும், போலியான விசுவாசத்துக்கும் உள்ள வேறுபாட்டை சுயபரிசோதனையின் மூலம் எளிதாகக் கண்டுபிடிக்கலாம். எனவே அந்த வேறுபாட்டை விழிப்போடுக் கவனியுங்கள்.
ஒரு போலியான விசுவாசி தன்னை நரகத்திலிருந்து காப்பாற்ற ஒரு மீட்பர் வேண்டும் என்று விரும்புகிறான். ஆனால் வேதம் எதிலிருந்து நம்மைக்காப்பாற்றுவதாக இரட்சகரான கிறிஸ்துவை அறிமுகப்படுத்துகின்றது? “ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்” என வேதம் நமக்குக் காண்பிக்கிறது (மத்தேயு 1:21). இயேசு கிறிஸ்து உண்மையாகவே உங்களை இரட்சித்தால் உங்கள் பாவங்களிலிருந்தே இரட்சிப்பார். இயேசு உன்னைப் பாவத்தின் அசுத்தத்திலிருந்தும், பாவத்தின் கட்டுகளிலிருந்தும், பாவத்தின் ஆளுகையிலிருந்தும் உன்னை இரட்சிப்பார். மேலும் பாவத்தின் தண்டனையிலிருந்தும், அதாவது நரகத்திலிருந்தும் காப்பாற்றுவார். ஆனால், உன்னைப் பாவத்தின் தண்டனையிலிருந்து மட்டும் காப்பாற்றி, பாவத்தின் அசுத்தத்தில் தொடரும் இரட்சிப்பை வேதம் போதிக்கவில்லை. இயேசு கிறிஸ்து உன் பாவத்திலிருந்து இரட்சிப்பவர்; நீ பாவத்தில் நீடிப்பதிலிருந்து இயேசு கிறிஸ்து உன்னை இரட்சிப்பவர். ஒருவேளை இயேசு உன்னை இரட்சித்து பாவத்தில் தொடரவிடுவார் என்பது தவறானது. இப்படிப்பட்ட தூஷணங்கள் நம்மை விட்டு வெகு தொலைவில் இருப்பதாக! இயேசு நம்மைப் பாவம் செய்ய வைப்பவர் அல்ல.
இயேசு கிறிஸ்து உன்னைப் பாவங்களிலிருந்து இரட்சித்தாரா? அப்படியானால் பாவத்தைப் பற்றிய அணுகுமுறையில் உங்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? சில தவறான பழக்கங்களை மட்டுமல்ல, எல்லாவிதப் பாவத்தையும் வெறுக்கும் நிலையை உன்னால் உன்னிடம் பார்க்க முடிகிறதா? தேவன் விரும்புகிறதை நீ விரும்பி, அவர் வெறுப்பதை நீயும் வெறுக்கிறாயா? அப்படியானால் இரட்சிக்கப்பட்டவர்கள் பாவமே செய்யமாட்டார்கள் என்று நான் சொல்லவில்லை. “நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.” (1 யோவான் 1:8). ஆனால் வேண்டுமென்றே பாவம் செய்து, அதில் தொடர்ந்து ஈடுபடுபவர்களுக்கு இரட்சிப்பு என்றால் என்னவென்று தெரியாது. “தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.” (1 யோவான் 3:9).
'இரட்சிப்பு கிருபையினாலும் விசுவாசத்தினாலும் உண்டாகிறதே தவிர கிரியைகளினால் அல்ல; “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" (எபேசியர் 2:8,9). பாவத்திலே தொடர்ந்தால் இரட்சிப்பு உங்களுக்கு இல்லை என்று ஏன் சொல்கிறீர்கள்?' என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் ஒரு மனிதனுக்கு இரட்சிப்பு எப்படி வரும் என்று சொல்கிறீர்கள்; ஆனால் நான் சொல்லுவது இரட்சிப்பு வந்தால் அந்த மனிதனுக்கு என்ன நடக்கும் என்று நான் சொல்கிறேன். “ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.” (எபேசியர் 2:10). இரட்சிப்பு கிரியைகளினால் வருவதில்லை, ஆனால் இரட்சிப்பினால் கிரியைகள் நிச்சயம் வரவேண்டும். “அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியம் உள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.” (தீத்து 2:14).
நற்செயல்கள் என்பது நம்முடைய இரட்சிப்பின் பலன்; அதுவே ஆதாரமல்ல. இரட்சிப்பின் விசுவாசம் மரித்ததல்ல, அது கிரியை மூலமாகத் தனது இருப்பை நிரூபிக்கின்ற ஒரு உயிருள்ள சட்டமாகும். “என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும். ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு; கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என் கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே. தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.” (யாக்கோபு 2:14-19).