இரட்சிப்பு

இரட்சிப்பில் தேவனுடைய முன்குறிப்பு...
ஆசிரியர்: G.பிபு
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 12 நிமிடங்கள்

 மனிதனுடைய இரட்சிப்பின் காரியத்தில் தேவன் செய்துள்ள மாபெரும் காரியத்தை நாம் நினைவுகூர வேண்டும். நாம் இரட்சிப்பைக் குறித்துப் பேசும்போதெல்லாம், மனிதனுடைய பொறுப்பு என்ற கோணத்திலேயே அடிக்கடி நாம் சிந்திக்கவேண்டும். ஆனால், தேவனுக்கு வரவேண்டிய மகிமையை தேவனுக்குச் செலுத்தும் விதத்தில், இரட்சிப்பில் தேவன் செய்த காரியத்தை நாம் அதிகமாக சிந்திக்க வேண்டிய அவசியம் மிக அதிகமாகவே உள்ளது. அது நாமாகவே கற்பனை செய்துகொண்டு சொந்தமாகப் பேசும் வார்த்தைகள் அல்ல; பரிசுத்த வேதாகமம் முழுவதிலும், ஆதிமுதல் அந்தம் வரை, நமது இரட்சிப்பின் முழு மகிமையும் தேவனுக்கே செலுத்தப்படுவதை நாம் பார்க்கிறோம்.

இதைக் குறித்து நாம் எவ்வளவு அதிகமாக வேத வசனங்களைக் கொண்டு சிந்திக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நமது இரட்சிப்பை ஒரு மேன்மையான காரியமாகப் பார்க்கத் தொடங்குவோம். அதோடு, அழிந்துபோகிறவர்களின் விஷயத்திலும் தேவனுடைய சர்வ அதிகாரமுள்ள கரம் செயல்படுகிறது என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். ஏனென்றால், இரட்சிப்பின் விஷயத்தில் தேவன் நம் வாழ்வில் செய்த காரியத்தையும், அழிந்துபோகிறவர்களின் வாழ்வில் தேவன் செய்யாத காரியத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தேவன் நம்மேல் வைத்த அன்பை வேதத்தின் மூலம் நமக்குக் கற்பிக்கப்படுகிறது. அதன் மூலம் நமது இரட்சிப்பு இன்னும் மேன்மையானதாக நமக்குத் தோன்றும். இந்தக் கோணத்தில் சில சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

நமது வேத சிந்தனையின் ஆரம்பமாக, எபேசியருக்கு எழுதிய நிருபம் 2:1-3 வரையிலான வசனங்களை வாசிப்போம்:

"அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்தில் இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்தில் நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்."

இப்போது வாசித்த வேத வசனங்களிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் அப்போஸ்தலனாகிய பவுல் நமது இரட்சிப்பின் விஷயத்தில் தேவன் செய்த மாபெரும் காரியத்தை நினைவூட்டுகிறார். அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்துப்போயிருந்த நம்மை, கிறிஸ்துவுடனேகூட அவர் உயிர்ப்பித்தார். "நான் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டேன், நானே மனந்திரும்பினேன்" என்றெல்லாம் நாம் சொல்வது உண்மைதான். நாம்தான் விசுவாசித்தோம், நாம்தான் பாவங்களை அறிக்கை செய்தோம் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அவையெல்லாவற்றையும் நாம் செய்வதற்கு முன்பாக, பாவங்களினாலும் அக்கிரமங்களினாலும் மரித்துப்போயிருந்த நம்மை, கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பிக்க வேண்டிய அவசியம் இருந்தது. அந்தக் காரியத்தை தேவன் முதலில் நம்மில் செய்தார்.

தேவன் முதலில் செய்த அந்தக் காரியத்திற்குப் பதிலாகவே நாம் அவரை விசுவாசிக்கவும், மனந்திரும்பவும், அவர் பக்கம் திரும்பவும் முடிந்தது. இது வேதம் தொடர்ந்து நமக்குக் கற்பிக்கும் தேவனுடைய கிருபையைக் குறித்த சத்தியமாகும். இதை மறுப்பதற்கும் நிராகரிப்பதற்கும் அநேகர் பிரயாசப்படுகிறார்கள். ஆனால், வேதாகமத்தை முழுமையாகவும் சத்தியத்தின்படியும் ஆராய்ந்து பார்க்கும்போது, இரட்சிப்பில் முதல் அடியை தேவனே எடுத்து வைக்கிறார் என்ற சத்தியத்தை வேதம் மிகத் தெளிவாக நமக்குக் கற்பிக்கிறது.

மேற்வாசித்த 2,3 வசனங்களை நாம் கவனிக்கும்போது நமக்கு விளங்குவது என்னவென்றால், இரட்சிக்கப்படுவதற்கு முன்பாக நாம் எப்படி இருந்தோமோ, இப்போதும் கீழ்ப்படியாமையில் இருப்பவர்கள் அப்படியே இருக்கிறார்கள். அவர்களுக்கும் நமக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவர்கள் எத்தகைய உலக வழக்கத்தை பின்பற்றி நடக்கிறார்களோ, எத்தகைய பிசாசின் ஆவியின் ஆளுகையின்கீழ் செயல்படுகிறார்களோ, நாமும் அதே நிலைமையில்தான் இருந்தோம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார். சுபாவத்தினாலேயே நாமும் அவர்களைப் போலவே கோபாக்கினைக்குப் பாத்திரங்களாயிருந்தோம்.

அவர்களிடமிருந்து நம்மைப் பிரித்து, இரட்சிப்பிற்குள் வழிநடத்தி, தேவனுடைய கிருபைக்கும் இரக்கத்திற்கும் நம்மைப் பாத்திரவான்களாக்கியது, தேவன் நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்த காரியத்தின் மூலமாகவே என்பது இங்கே மிகத் தெளிவாகப் புரிகிறது. இதோடு சேர்த்து, ரோமருக்கு எழுதிய நிருபம் 9:21-23 வரையிலான வசனங்களை ஒருமுறை வாசிப்போம்:

"மிதிமண்ணின்மேல் குயவனுக்கு அதிகாரமில்லையோ? ஒரே முத்தையிலிருந்து ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் அவன் பண்ணலாமல்லவா? தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் என்ன? மகிமைக்காக அவர் எத்தனமாக்கின இரக்கத்தின் பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவேண்டுமென்று இப்படிச் செய்தாரானால் என்ன? அந்த இரக்கத்தின் பாத்திரங்கள் யூதரிலிருந்துமாத்திரமல்ல, புறஜாதிகளிலுமிருந்து தம்மால் அழைக்கப்பட்ட நாமே."

இங்கே அப்போஸ்தலனாகிய பவுல் என்ன சொல்கிறார் என்றால், ஒரே களிமணிலிருந்து ஒரு நல்ல பாத்திரத்தையும், ஒரு கனவீனமான பாத்திரத்தையும் உருவாக்க குயவனுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை நினைவூட்டுகிறார். குயவனை எதிர்த்துக் கேட்க களிமண்ணுக்கு எப்படி அதிகாரம் இல்லையோ, அதேபோல தேவனுடைய சர்வ அதிகாரமுள்ள கிருபையையும் திட்டத்தையும் கேள்வி கேட்கும் தகுதியோ உரிமையோ மனிதனுக்கும் இல்லை. மனிதர்கள் அனைவரும் ஒரே நிலையில்தான் (கோபாக்கினைக்குப் பாத்திரங்களாக) இருந்தார்கள் என்பதை எபேசியர் 2:3-ல் பார்த்தோம்.

நியாயப்படி அனைவரும் கோபாக்கினைக்குப் பாத்திரங்களாக இருக்கும்போது, அதிலிருந்து சிலரைத் தேவன் தமது இரக்கத்தைக் காண்பிப்பதற்காகக் கிருபையின் பாத்திரங்களாக மாற்றுவதற்கு சித்தங்கொண்டார். சிலரை அவர்கள் இருந்த அதே கோபாக்கினையின் நிலையிலேயே விட்டுவிடவும் சித்தங்கொண்டார். அப்படிச் செய்வதற்கு தேவனுக்கு முழு அதிகாரம் உள்ளது. ஏனென்றால், அனைவரையும் இரட்சிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் அவருக்கு இல்லை.

அவர் தமது இரக்கத்தைக் காண்பிக்கச் சித்தங்கொண்டபடியால், சிலரைத் தமது கிருபையின் பாத்திரங்களாக (இரட்சிப்பிற்கு நியமித்து, அவர்களைத் தம் பிள்ளைகளாக மாற்றிக்கொள்ள) உருவாக்கச் சித்தங்கொண்டார். இதை அப்போஸ்தலனாகிய பவுல் உருவகமாகப் பேசுகிறார். நேரடியாக அவர் என்ன சொல்கிறார் என்றால், சிலரை இரட்சிப்பதற்காகவும், சிலரை இரட்சிக்காமல் விட்டுவிடுவதற்காகவும் தேவன் தீர்மானம் செய்தார்.

அனைவருக்கும் கோபாக்கினைக்கு பாத்திரவான்களாக இருக்கும் நிலையில், தேவன் தமது அன்பைக் காண்பிப்பதற்காகச் சிலரைத் தமது சொந்த விருப்பத்தின்படி அவர்களை தெரிந்துகொண்டார். அதைக் குறித்துக் கேள்வி கேட்கும் உரிமையோ தகுதியோ மனிதர்களுக்கு இல்லை. அவர் முற்றிலும் தமது இலவசமான கிருபையின் மூலமே அப்படிச் செய்தார் என்றும், மற்றவர்களிடத்தில் அவர் தமது நியாயத்தைக் காண்பிப்பது நீதியானதே என்றும் பவுல் இங்கே கூறுகிறார்.

பலமுறை நாம், “தேவனுக்கு நாம் ஒரு வாய்ப்பைக் கொடுக்க வேண்டும், இயேசுவை விசுவாசித்து பாருங்கள்” என்றெல்லாம் தவறாகப் பேசுகிறோம். நாம் தேவனுக்கு வாய்ப்பளிப்பது இல்லை; நாம் இரட்சிக்கப்படுவதற்கு தேவனே நமக்கு வாய்ப்பளிக்கிறார். அது தேவனுடைய இலவசமான கிருபை. உண்மையாகவே அதைப் பெற யாருக்கும் தகுதியில்லை எனினும், தமது இலவசமான கிருபையினால் மட்டுமே தேவன் அப்படிச் செய்கிறார். அப்போஸ்தலர் 13:48-ம் வசனம்:

"புறஜாதியார் அந்த வார்த்தையைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, தேவனுடைய வார்த்தையை மகிமைப்படுத்தினார்கள்; நித்தியஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்."

தேவன் நித்திய ஜீவன் விஷயத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுள்ளார் என்பதை இந்த வசனம் மிகத் தெளிவாகப் போதிக்கிறது. விசுவாசிப்பதன் மூலம் யாரும் நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்படுவதில்லை; மாறாக, நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்களே விசுவாசிப்பார்கள். விசுவாசிப்பது என்ற காரியம், தேவனுடைய நியமனத்தினால் வந்த விளைவு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தேவன் யாரைத் தமது நித்திய ஜீவனுக்காக நியமித்தாரோ, அவர்கள் நிச்சயமாக விசுவாசிப்பார்கள். அவருடைய தீர்மானம் தோல்வியடைவது சாத்தியமில்லை. 1கொரிந்தியர் 1:26-29 வரையிலான வசனங்கள்:

"சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை... மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்."

அதேபோல, ரோமர் 11:5-ம் வசனம்:

"அப்படியே இக்காலத்திலேயும் கிருபையினாலே தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு பங்கு மீதியாயிருக்கிறது."

எபேசியர் 1:3-5 வசனங்கள்:

"...அவர் உலகத்தோற்றத்திற்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே நம்மை முன்குறித்து..."

தேவன் நம்மைக் கிறிஸ்துவுக்குள் தெரிந்துகொண்டார். எப்போது தெரிந்துகொண்டார் என்றால், உலகத் தோற்றத்திற்கு முன்னமே தெரிந்துகொண்டார். அது அவருடைய தயவுள்ள சித்தத்தின்படியும், அன்பினாலும் நடந்த காரியம். இதில் மனிதர்களுடைய பங்கு என்று ஒன்றுமே இல்லை. வீழ்ந்துபோன மனிதகுலத்திலிருந்து, தேவன் சிலரை அழிவுக்கு ஒப்புக்கொடுக்காமல், கிருபையின் பாத்திரங்களாக மாற்றச் சித்தங்கொண்டார் என்பதை வேதவாக்கியங்கள் நமக்குக் கற்பிக்கின்றன.

இன்று நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்றால், மற்றவர்களை விட நாம் சிறந்தவர்கள் என்றோ, நமக்கு நல்ல மனது இருக்கிறது என்றோ பெருமைப்பட இடமே இல்லை. அனைவரையும் போல நாமும் பிசாசின் ஆளுகையின்கீழ் கோபாக்கினைக்குப் பாத்திரங்களாகவே இருந்தோம். நம்மை மாற்றி அவர்களிடமிருந்து பிரித்தது, முற்றிலும் தேவனுடைய இலவசமான கிருபையே தவிர வேறொன்றுமில்லை.

2தெசலோனிக்கேயர் 2:13-ம் வசனம்:

"கர்த்தருக்குப் பிரியமான சகோதரரே, ஆவியானவர் உங்களைப் பரிசுத்தமாக்குகிறதினாலும், நீங்கள் சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும், இரட்சிப்படைவதற்கு தேவன் ஆதிமுதல் உங்களைத் தெரிந்துகொண்டபடியால், நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்."

நீங்கள் சத்தியத்தை விசுவாசிப்பதன் மூலமாகவும், ஆவியானவர் உங்களைப் பரிசுத்தமாக்குவதன் மூலமாகவும் நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்று தேவன் சித்தங்கொண்டார். நாம் இரட்சிக்கப்படுவதற்கான வழியையும் அவரே ஏற்பாடு செய்தார். எனவே, "ஏற்பாட்டில் உள்ளவர்கள் எப்படி வாழ்ந்தாலும் பரவாயில்லை, பாவத்தில் வாழ்ந்தாலும் இரட்சிக்கப்படுவார்கள்" என்று சொல்லும் போதனை வேதாகமப் போதனை அல்ல. இது பரிசுத்தமான, நற்கிரியைகளின் மீது ஆர்வமுள்ள மக்களைத் தமக்கென்று பிரித்தெடுத்துக்கொள்வதற்காக தேவன் செய்த ஏற்பாடு.

மத்தேயு சுவிசேஷம் 11:25-ம் வசனத்தில் இயேசு கிறிஸ்து பிதாவைத் துதிக்கிறார்:

"...பிதாவே, வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே, இவைகளை ஞானிகளுக்கும் அறிவுள்ளவர்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். ஆம் பிதாவே, இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது."

சிலருக்குத் தேவனுடைய சத்தியங்கள் மறைக்கப்பட்டன, சிலருக்கு வெளிப்படுத்தப்பட்டன. அப்படிச் செய்வது அவருடைய திருவுளத்துக்குப் (சித்தத்திற்கு) பிரியமாயிருந்தது என்று இயேசு கூறினார்.

சரி, தேவனுடைய ஏற்பாட்டில் இல்லாதவர்கள், இரட்சிக்கப்படாதவர்களைக் குறித்து வேதாகமம் என்ன சொல்கிறது?

அவர்கள் நரகத்திற்கே செல்வார்கள் என்று தேவனுக்கு தெரிந்திருந்தும் ஏன் மனிதர்களைச் சிருஷ்டித்தார் என்ற கேள்வி மனிதர்களாகிய நம்மில் பலருக்கும் எழுகிறது.

நீதிமொழிகள் 16:4-ம் வசனம்:

"கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்."

துன்மார்க்கனையும் தீங்கு நாளுக்காக அவரே உண்டாக்கினார். அவர்கள் நிச்சயமாக அழிந்துபோவார்கள் என்று தெரிந்தும், தேவன் தமக்கென்று சில நோக்கங்களுக்காக அவர்களைச் சிருஷ்டித்தார்.

யோவான் சுவிசேஷம் 10:26-ம் வசனம்:

"நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்."

அவர்கள் விசுவாசிக்காததற்குக் காரணம் என்னவென்றால், அவர்கள் அவருடைய மந்தையின் ஆடுகள் (அவருடைய ஏற்பாட்டில் உள்ளவர்கள்) அல்ல.

1 சாமுவேல் 2:25-ம் வசனம்:

"...அவர்களோ தங்கள் தகப்பன் சொல்லைக் கேளாதிருந்தார்கள்; கர்த்தர் அவர்களை அழிக்கச் சித்தமாயிருந்தார்."

ஏலியின் குமாரர்கள் தகப்பன் சொல்லைக் கேட்காததற்குக் காரணம், கர்த்தர் அவர்களை அழிக்கச் சித்தமாயிருந்தார் என்பதே.

1பேதுரு 2:8-ம் வசனம்:

"திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்."

லூக்கா சுவிசேஷம் 22:3-ம் வசனம்:

"பன்னிருவரில் ஒருவனாகிய காரியோத்து என்னப்பட்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்..."

யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுப்பது என்பது தேவனுடைய அநாதி திட்டத்தின் ஒரு பகுதி. அதற்காகவே அவன் நியமிக்கப்பட்டான். இது தேவனுடைய சர்வ அதிகாரமுள்ள திட்டத்தில் நடந்த காரியம்.

தேவனுடைய வார்த்தை இரட்சிப்பைப் பெறுபவர்களைக் குறித்து எவ்வளவு தெளிவாகச் சொல்கிறதோ, அதேபோல அழிந்துபோகிறவர்களைக் குறித்தும் அது தெளிவாகப் பேசுகிறது. இதைக் கேட்கும்போது நமக்குச் சில சமயங்களில் கடினமாக இருக்கலாம். ஆனால் இதுவே வேதம் போதிக்கும் தேவனுடைய சர்வ அதிகாரமுள்ள தன்மை. இரட்சிப்பின் முழு காரியமும் தேவனுடைய கரத்தில் இருக்கிறது. பிதா தமக்குக் கொடுத்தவர்கள் அனைவரும் தம்மிடம் வருவார்கள் என்றும், அப்படி வருகிறவர்களைத் தாம் ஒருபோதும் புறம்பே தள்ளுவதில்லை என்றும் இயேசு கிறிஸ்து கூறினார் (யோவான் 6:37).

ஆகவே, நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்றால், அது நம்முடைய திறமையோ, தகுதியோ, அல்லது நாம் சுவிசேஷத்திற்குப் பதிலளித்த நல்ல குணமோ அல்ல. அது முற்றிலும் தேவனுடைய இலவசமான கிருபை. உலகத் தோற்றத்திற்கு முன்பே அவர் நம்மைக் கிறிஸ்துவுக்குள் தெரிந்துகொண்டார். அவருடைய அன்பான சித்தம் நம்மேல் இருந்தது. இதை நினைத்து நாம் பெருமைப்படாமல், தேவனுக்கு முழு மகிமையையும், ஸ்தோத்திரத்தையும் செலுத்தக் கடனாளிகளாய் இருக்கிறோம். தேவனுடைய இந்தச் சர்வ அதிகாரமுள்ள கிருபையையும், அவருடைய முன்குறிப்பையும் நாம் விசுவாசித்து, அவரை ஆராதிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.