கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் வேதப்புத்தகமான பைபிள், பலத் தனிச்சிறப்புகளைக் கொண்டுள்ளது! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே இதை உங்களுக்காகவும், எனக்காகவும் கொடுத்திருக்கிறார் என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் இதில் உள்ளன. மேலும், இது உலகில் காணப்படும் மற்ற புத்தகங்களை விட முற்றிலும் வித்தியாசமானது. இந்த வேதபுத்தகத்தை நீங்கள் கருத்தாய் வாசிக்கும்போது, இயேசு கிறிஸ்துவே உங்களிடம் பேசுவதை உங்களால் உணர முடியும். இத்தகைய சிறப்புமிக்க வேதபுத்தகத்தைப் பற்றி நீங்கள் மேலும் அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்...
-
வேதபுத்தகத்தை நீங்கள் ஒரே புத்தகமாகப் பார்த்தாலும், அது 66 தனித்தனிப் புத்தகங்களை உள்ளடக்கிய ஒரே தொகுப்பாகும். இந்த 66 புத்தகங்களையும் சுமார் 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதியிருக்கிறார்கள். இவர்களில் சில ஆசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளனர். அறுபத்தி ஆறு புத்தகங்களில், முதல் புத்தகமான 'ஆதியாகமம்' என்பதற்கும், கடைசி புத்தகமான 'வெளிப்படுத்தின விசேஷம்' என்பதற்கும் இடைப்பட்ட காலப்பகுதி ஏறக்குறைய 1500 ஆண்டுகள் ஆகும். இன்றைக்கு இரண்டு வெவ்வேறு ஆசிரியர்கள், ஒரே தலைப்பில் தனித்தனிப் புத்தகங்களை எழுதினால், அந்த இரண்டு புத்தகங்களுக்கும் இடையில் பல வேறுபாடுகளைக் காண முடியும். சில சமயங்களில் இரண்டு புத்தகங்களிலும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களையும் பார்க்க நேரிடும். நீங்கள் படிக்கும் உங்கள் பாடப் புத்தகங்களே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அதுமட்டுமல்ல, சுமார் 20 அல்லது 30 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட பாடப்புத்தகங்களை, உங்கள் ஆசிரியரும் படிக்கச் சொல்வதில்லை; நீங்களும் படிப்பதில்லை. காரணம், புதிய புத்தகங்கள் வரும்பொழுது பழைய புத்தகத்தில் உள்ள செய்திகள் காலாவதியாகி விடுகின்றன. ஆனால், வேதபுத்தகத்தை எழுதிய 40 ஆசிரியர்களும் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்தவர்கள். தாங்கள் இந்த பூமியில் வாழ்ந்த காலத்தில் பலர் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டது கூட இல்லை. ஆனாலும், இந்த 66 புத்தகங்களிலும் ஒன்றுக்கொன்று முரண்பாடான செய்திகளை எங்கும் நீங்கள் காண முடியாது. மாறாக, ஒரு செய்தித் தொடர்ச்சியை நீங்கள் பார்க்க முடியும். மேலும், இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் இன்றைக்கும் நம் வாழ்க்கைக்குப் பயனுள்ளவையாக இருக்கின்றன.
-
இந்த வேதபுத்தகத்தை எழுதிய ஆசிரியர்களில் சிலர் நாடுகளை அரசாண்ட ராஜாக்களாயிருந்தார்கள்; சிலர் மருத்துவராயும், சிலர் கல்விமான்களாயும் இருந்தார்கள். இன்னும் சிலர் எந்தப் பின்னணியும் இல்லாத சாதாரண மனிதர்களாயும், மீன்பிடித் தொழில் செய்கிறவர்களாயும் இருந்தார்கள். மிகச் சிறந்த தகவல் தொழில்நுட்ப வசதிகள் உள்ள இந்தக் காலகட்டத்தில், ஒரே துறையைச் சேர்ந்த இருவர் எழுதும் புத்தகங்களே பல முரண்பாடுகளைக் கொண்டிருக்கையில், எந்தத் தகவல் தொழில்நுட்ப வசதியும் இல்லாத அந்தப் பழங்காலத்தில், பலதரப்பட்ட பின்னணியைச் சேர்ந்தவர்கள் எழுதிய புத்தகத்தில் எந்த முரண்பாடும் இல்லை என்பது ஏதோ எதேச்சையாக நடந்த ஒன்றாக இருக்க முடியாது.
-
வேதபுத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள், ஒரு கட்டுக்கதையோ அல்லது கற்பனைக் காவியமோ அல்ல. வேத புத்தகத்தையும் உலக வரலாற்றையும் நீங்கள் தனியாகப் பிரிக்க முடியாது. வரலாறு என்று சொல்லும்பொழுது, அது கடந்த காலத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களையே குறிக்கும். ஒருவேளை நீங்கள், "வேதபுத்தகத்தைக் கிறிஸ்தவர்கள் எழுதியிருக்கிறார்கள்; அதனால், அதை அவர்களுக்குத் தேவையானபடி மாற்றி எழுதியிருக்கலாம்" என்று சொல்லலாம். ஆம், வேதபுத்தகத்தைக் கிறிஸ்தவர்கள்தான் எழுதியிருக்கிறார்கள். ஆனால், உலக வரலாற்றைக் கிறிஸ்தவரல்லாத மக்களே எழுதியிருக்கிறார்கள். உலக வரலாற்றில் அவர்கள் பதிவு செய்து வைத்திருக்கிற சம்பவங்களும், வேத புத்தகத்தில் உள்ள சம்பவங்களும் முழுமையாகப் பொருந்துவதாகவே இருக்கின்றன. உதாரணமாக, வேதபுத்தகத்தில் கூறப்பட்டுள்ள சாலமோன், தாவீது மற்றும் நேபுகாத்நேசார் போன்ற அரசர்களைப் பற்றி நீங்கள் உங்கள் பள்ளி வரலாற்றுப் புத்தகங்களிலும் படித்திருப்பீர்கள்.
-
வேதபுத்தகத்தில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் நடைபெற்ற மையப்பகுதியான இன்றைய இஸ்ரவேல், எகிப்து, ஈரான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் மூலம் கிடைக்கப்பெற்ற சான்றுகள், வேதபுத்தகத்தில் கூறப்பட்டுள்ள சம்பவங்களை உறுதிப்படுத்துபவைகளாகவே உள்ளன. இயேசு கிறிஸ்துவின் காலகட்டத்தில் அவர் வாழ்ந்த இஸ்ரவேல் நாட்டில், எந்தெந்தப் பெயர்களில் அங்குள்ள கிராமங்கள் மற்றும் பட்டணங்கள் அழைக்கப்பட்டனவோ, அதே பெயர்களே இன்றும் அந்தப் பகுதிகளில் வழங்கப்பட்டு வருகின்றன.
-
வேதபுத்தகத்தில், கடந்தகால வரலாறு மட்டுமல்ல, எதிர்காலத்தில் என்ன நடைபெறப் போகிறது என்பதைப் பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது. சிறந்த அறிவியல் சாதனங்களை வைத்து ஆய்வு செய்து, "அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும்" என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தால், பல நேரங்களில் அது அப்படியே நடைபெறுவதில்லை. மழை பெய்யும் என்று அறிவித்தால் வெயில் அடிப்பதையும், வெயில் அடிக்கும் என்று அறிவித்தால் திடீரென்று மழை பெய்வதையும் நாம் பார்த்திருக்கிறோம். அடுத்த 24 மணி நேரத்தில் என்ன நிகழும் என்று நம்மால் சரியாகக் கணிக்க முடிவதில்லை. அப்படியானால், எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றிச் சொல்லும் ஒரு புத்தகத்தின் நம்பகத்தன்மையானது, கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் அந்தப் புத்தகத்தில் எவ்வளவு சரியாக முன்னறிவிக்கப்பட்டன என்பதைப் பொறுத்தே அமைகிறது. உதாரணமாக, இயேசு கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றி, அவர் பிறப்பதற்குச் சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்னதாகவே முன்னறிவிக்கப்பட்டிருந்தது. தீர்க்கதரிசிகள் குறிப்பிட்ட அதே காலகட்டத்தில் இயேசு கிறிஸ்து பிறந்தார். மேலும், எந்தெந்தப் போரில் எந்தெந்த நாடுகள் வெற்றி பெறும் என்று முன்னறிவிக்கப்பட்டதோ, அது துல்லியமாக அப்படியே நடந்தேறியது. நாம் வாழும் இந்தக் காலகட்டத்தில் என்ன நடைபெறும் என்று வேதபுத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறதோ, அது இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. இனி என்னென்ன நடைபெறப் போகிறது என்று சொல்லப்பட்டிருக்கிறதோ, அதுவும் அப்படியே நடைபெறப்போகிறது.
முடிவுரை: வேதபுத்தகம் உண்மையானது என்பதை நிரூபிப்பதற்காக இந்தக் கட்டுரை எழுதப்படவில்லை; ஏனென்றால், அது அதன் அடிப்படை அமைப்பிலேயே உண்மையானதாக இருக்கிறது. மாறாக, இத்தனை சிறப்பு வாய்ந்த, மனிதர்கள் மூலமாக இயேசு கிறிஸ்துவே எழுதிக்கொடுத்த வேதபுத்தகத்தை நீங்கள் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இது எழுதப்பட்டுள்ளது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, உங்களுடைய பாவத்திற்காகவும் சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து, மீண்டும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதை அறிந்து, அவரை விசுவாசித்து, பாவ மன்னிப்பையும் இரட்சிப்பையும் பெற்றுக்கொண்டு, நீங்களும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.