நற்செய்தி

ஆசிரியர்: முரளி
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 12 நிமிடங்கள்

உலகம் முழுவதும் கேள்விகளால் நிறைந்துள்ளது. ஆனால் இந்த ஐந்து கேள்விகள் மட்டுமே எல்லா கேள்விகளுக்கும் திறவுகோலாக இருக்கிறது. வாழ்க்கையின் மிக முக்கியமான பதில்களை இந்த ஐந்து கேள்விகளைக் கேட்பதன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.வேதாகமசுவிசேஷத்தின் மையத்தைத் திறக்கும் ஐந்து முக்கியமான கேள்விகள் நிட்சயமாக உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்ட ஒரு செய்தி. அவை என்ன என்பதைப் பார்ப்போம்.

  1. கடவுள் யார்?
  2. மனிதன் யார்?
  3. இயேசு கிறிஸ்து யார்?
  4. இதனால் எனக்கு என்ன பலன் கிடைக்கும்?
  5. நான் என்ன செய்ய வேண்டும்?

கேள்வி 1: கடவுள் யார்?

நாம் வாழும் இந்த பூமியில் பல்வேறு மதங்கள் இருந்தபோதிலும், வேதமும் மனிதனின் மனசாட்சியும் ஒரு ஒரே ஜீவனுள்ள கடவுளின் உண்மையை உறுதிப்படுத்துகின்றன. அவரே எல்லாவற்றையும் படைத்தவர். வேதம் இந்த ஒரே உயிருள்ள கடவுளை நான்கு செயல்களில் வெளிப்படுத்துகிறது: அவர் படைப்பின் கடவுள், பாரமரிப்பின் கடவுள், நீதியின் கடவுள், மற்றும் மீட்பின் கடவுள்.

படைப்பின் கடவுள்: இந்த ஒரே கடவுள் பரந்த உலகத்தைப் படைத்தவர், ஆறு நாட்களில் தம்முடைய வார்த்தையின் வல்லமையால் எதுவுமில்லாமையிலிருந்து இவ்வுலகத்தைப் படைத்தார். அவர் ஒரு சாதாரணமான, வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களால் நிறைந்த உலகத்தை உருவாக்கியிருக்கலாம், மண்ணை உண்ணச் சொல்லி நம்மை வாழச் செய்திருக்கலாம்! ஆனால், இந்த உலகின் ஒவ்வொரு அமைப்பு, சமச்சீர்மை, வண்ணங்கள் ஆகியவற்றில் உள்ள நுணுக்கமான திட்டமிடல் மற்றும் வேண்டுமென்றே செய்யப்பட்ட வடிவமைப்பு, மாபெரும் படைப்பாளரின் அழகு, ஞானம், வல்லமை, மற்றும் நற்குணத்தை அது பிரதிபலிக்கிறது.

மேலும், வேதம் இந்த படைப்பாளராகிய கடவுள் இயல்பாகவே நீதியுள்ளவரும் பரிசுத்தமானவரும் என்று கூறுகிறது. அவருடைய நீதியான குணத்தின் பிரதிபலிப்பாக, அவர் ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியிலும் தம்முடைய  சட்டத்தை எழுதியிருக்கிறார்; இது அவருக்கும், சக மனிதர்களுக்கும் நாம் செய்ய வேண்டிய கடமைகளை விவரிக்கிறது. இந்த சட்டங்கள், பொதுவாகப் பத்து கட்டளைகள் என்று அழைக்கப்படுகிறது. பொறாமை குணம், பொய் சொல்லுதல், திருடுதல், விபசாரம், கொலை, பெற்றோரை மதிக்காமை, ஓய்வு நாளை மீறுதல், அவருடைய பெயரை வீணாக உபயோகித்தல், மற்றும் உண்மையான கடவுளைத் தவிர வேறு எந்தப் பொருளையோ, விக்கிரகங்களையோ உருவாக்குதல் அல்லது வணங்குதல் ஆகியவற்றைத் தடை செய்கிறது. இந்த சட்டங்களில் ஏதேனும் ஒன்றை மீறுவது பாவம் என்று அழைக்கப்படுகிறது.

பராமரிப்பின் கடவுள்: இந்த படைப்பின்கடவுள் கர்த்தர் (LORD) என்றும் அறியப்படுகிறார். இது அவரது முழுமையான இறையாண்மையையும், அவர் படைத்த அனைத்தின் மீதும் அவருக்கு உள்ள முழு கட்டுப்பாட்டையும் வலியுறுத்துகிறது. அவர் உலகத்தை உண்டாக்கினது மட்டுமல்லாமல், அதின் ஒவ்வொரு அம்சத்தையும் தீவிரமாக பராமரித்து ஆளுகிறார். அவரே மனிதனுக்கு சுவாசத்தையும் மற்ற அனைத்தையும் கொடுக்கின்றவர்; ஒவ்வொரு மனிதனின் ஆயுட்காலம், வாழ்விடம் மற்றும் சூழ்நிலைகளை நிர்ணயிக்கின்றவர்.

நீதியின் கடவுள்: இந்த கடவுள் எல்லாவற்றையும் அறிந்தவராக இருப்பதால், ஒவ்வொரு மனிதனின் செயலையும், எண்ணத்தையும் முழுமையாக அறிந்திருக்கிறார். அவர் மனிதனின் வெளிப்படையான வாழ்க்கையை மட்டும் அல்லாமல், உள்ளார்ந்த மனதையும் பார்கிறார். காம எண்ணங்களை விபசாரமாகவும், கோபத்தை கொலையாகவும் கருதுகிறார். நீதியான கடவுளாக, அவர் இறுதியில் எல்லா பாவங்களையும் தண்டிக்க வேண்டும். அதற்காக அவர் ஒரு நாளை நிர்ணயித்துள்ளார். மனிதன் கடவுளின் சட்டங்களை மீறிய ஒவ்வொரு நிகழ்வையும் அவர் கவனமாக பதிவு செய்கிறார்.

பாவத்தின் அளவு அதைச் செய்தவர் யார் என்பதன் அடிப்படையில் அல்ல, மாறாக, அது யாருக்கு எதிராக செய்யப்பட்டது என்பதன் அடிப்படையில் அளவிடப்படுகிறது. மனிதர்கள் நித்திய கடவுளுக்கு எதிராக பாவம் செய்கிறார்கள், எனவே அவர்களின் பாவங்கள் நரகத்தில் நித்திய தண்டனைக்கு தகுதியானவை. கடவுளின் படைப்புகளாக, நாம் இறுதியில் நமது படைப்பாளருக்கு பொறுப்பாளிகள், மேலும் ஒருநாள் நமது எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களுக்குகாக நியாயந்தீர்க்கப்படுவோம். இப்படிப்பட்டவர் தான் வேதம் சுட்டிக்காண்பிக்கும் கடவுள்.

பலர் இந்த உண்மையான கடவுளின் இருப்பை சந்தேகிக்கிறார்கள், ஒருவேளை கடவுள் இருந்தால், "ஏன் இந்த உலகத்தில் இவ்வளவு துன்பம்?" என்று கேள்வி கேட்கிறார்கள். இதற்கான பதிலைப் புரிந்துகொள்ள, அடுத்ததாக "மனிதன் யார்?" என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

கேள்வி 2: மனிதன் யார்?

கடவுளின் படைப்பின் மணிமகுடம்:

மனிதன் கடவுளின் சாயலில் அற்புதமாகவும், ஆதிசியமாகவும் படைக்கப்பட்டவன்; கடவுளை மகிமைப்படுத்தவும், என்றென்றும் அவரை அனுபவிக்கவும் உருவாக்கப்பட்டவன். படைப்பாளியான கடவுளுக்கும், அவரது படைப்பான மனிதனுக்கும் இடையிலான பிணைப்பு மிக ஆழமானதும், சக்திவாய்ந்ததுமானது. மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான இந்த உறவு, எந்த வீழ்ச்சியாலும் முற்றிலும் அழிக்க முடியாதது. வேதம் கூறுகிறது, கடவுள் “அவனது நாசியில் உயிர் சுவாசத்தை ஊதினார், மனிதன் உயிருள்ளவனானான்.” ஒவ்வொரு மூச்சிலும் மனிதன் தனது படைப்பாளருடனான பந்தத்திற்காக ஏங்குகிறான். நாம் வெறுமனே கடவுளால் படைக்கப்பட்டதால் மட்டும் இருப்பதில்லை; அவர் ஒவ்வொரு நொடியும் நம்மை பராமரிப்பதால் தொடர்ந்து இருக்கிறோம். அவரில் நாம் வாழ்கிறோம், நகர்கிறோம், இருக்கிறோம். நம்முடைய உயிர் சக்தி, நம்முடைய இயக்கம், அனைத்தும் அவரிடமிருந்து நேரடியாக வருகிறது. இந்த விவரிக்க முடியாத பந்தம், கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான நித்திய ஒருமைப்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டது. ஒரு தாய் அவளுடைய பிள்ளைக்கிடையேயான பிணைப்பில் இதன் மங்கிய சாயல் பிரதிபலிக்கிறது. எந்தத் தாயும் கருவில் குழந்தையை உருவாக்குவதில் ஈடுபடுவதில்லை, ஆனால் இந்த கடவுள் ஒவ்வொரு கருவிலும் உள்ள ஒவ்வொரு நரம்பு, இரத்தக் குழாய்கள், எலும்புகளை உருவாக்குகிறார்.  

மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான இந்தப் பிணைப்பு மனித வாழ்விற்கு அடித்தளமாக, இறுதியில் அவனது நோக்கத்திற்காக, அவனது இருப்பின் துணியிலேயே பின்னிப் பிணைந்துள்ளது. மனிதகுலத்தின் அனைத்து அமைதியின்மையும் இந்த ஆழமான பிணைப்புக்கான ஏக்கமாகும். எதுவும் நிரப்ப முடியாத ஆழமான, வெறுமையை நாம் அனைவரும் நம்மில் உணர்கிறோம். எங்களுடைய இதயங்கள் உன்னை கண்டறியும் வரை அமைதியற்றவைஎன்பது ஹிப்போவின் ஆகஸ்டின் கூறிய புகழ்பெற்ற வார்த்தைகள். என்றென்றும் கடவுளை மகிமைப்படுத்தவும் அவரில் மகிழவும் படைக்கப்பட்ட மனிதன், ஒரு மகிமையுள்ள  படைப்பாக படைக்கப்பட்ட போதிலும், அவன் வீழ்ச்சியடைந்தான்!

வீழ்ச்சியடைந்த படைப்பு:

முதல் மனிதர்களான ஆதாமும் ஏவாளும், கடவுளின் சாயலில் சரியாக படைக்கப்பட்டிருந்தாலும், தங்கள் விருப்ப சுதந்தரத்தைப்  பயன்படுத்தி, கடவுளுக்கு கீழ்ப்படியாமல், கடவுளுடனான தங்கள் சரியான நிலையிலிருந்து விலகினார்கள், இதுவே “மனிதகுலத்தின் வீழ்ச்சி” என்று அழைக்கப்படுகிறது. ஆதாமும் ஏவாளும் மனித இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியதால், அவர்களிடமிருந்து வந்த அனைத்து மனிதர்களும், அவர்களின் தவறின் விளைவுகளை மட்டுமல்ல, அவர்களின் பாவமான குறைபாடுள்ள இயல்பையும் பெற்றனர். டோமினோக்களின் சங்கிலி போல, அவர்களுக்குப் பிறகு வரும் நாம் அனைவரும் அவர்களின் வீழ்ச்சிக்குள்  தள்ளப்பட்டோம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சில குணாதிசயங்களைக் கடத்துகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். உதாரணமாக, கண், தோல், நிறம் போன்றவை நமது பெற்றோரிடமிருந்து வருகிறது போல, தவறு செய்யும் போக்கும் நமது மரபணுவில் வந்துள்ளது! சரியானதைச் செய்வதற்குப் பதிலாக தவறானதைச் செய்யும் போக்கு அது போன்றதே. அது தலைமுறை தலைமுறையாகக் மனிதர்களில் கடத்தப்படுகிறது. நாம் தவறானதை நேசிக்கும் இயல்புடன் பிறந்திருக்கிறோம். மேலும் ஒவ்வொரு நாளும் மனிதர்களில் நோயின் அறிகுறிகளைப் பார்க்கிறோம், படிக்கிறோம், நாமும் அனுபவிக்கிறோம். பொறாமை, பொய், வெறுப்பு, திருட்டு, கோபம், விவாகரத்து, ஓய்வு நாளை மீறுதல், கடவுளின் பெயரை வீணாக பயன்படுத்துதல், மற்றும் அவருக்கு மேல் விக்கிரகங்களை முன்னுரிமைப்படுத்துதல் மூலம் கடவுளின் புனித சட்டத்தை மீறுகிறோம், உடைக்கிறோம். எனவே மனிதன் ஒரு வீழ்ச்சியடைந்த, பாவமுள்ள படைப்பு.

ஆணும் பெண்ணும் ஏன் துன்பப்படுகிறார்கள்?

ஆதாமும் ஏவாளும் செய்த கீழ்ப்படியாமையின் விளைவாகவும், அதைத் தொடர்ந்து கடவுள் அவர்கள் மீது விதித்த சாபங்களின் காரணமாகவே அனைத்து மனித துன்பங்களும் தோன்றின என்று ஆதியாகமம் என்ற புத்தகம் கூறுகிறது.

பெண்ணின் மீதான சாபங்கள்:

ஏவாள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் தடைசெய்யப்பட்ட பழத்தை உண்டதால், அவள் சபிக்கப்பட்டாள். இதன் விளைவாக, ஒவ்வொரு பெண்ணும் இரண்டு முக்கியமான பகுதிகளில் துன்பப்படுகிறாள்: ஒன்று அவளுடைய குழந்தைகள் அடுத்தது அவள் கணவனால். இதன் விளைவாக, ஒவ்வொரு பெண்ணும் வலியோடு பிள்ளைகளைப் பெறுவது மட்டுமல்லாமல், ஏவாள் தன் கீழ்ப்படியாமையால் கடவுளின் இதயத்தை உடைத்ததைப் போலவே, அவளுடைய குழந்தைகள் அவளுக்கு கீழ்ப்படியாமல் தொடர்ந்து அவளுடைய இதயத்தை உடைப்பார்கள். திருமணத்தில் உள்ள சாபம், ஏவாள் தன் கணவனைப் பழத்தை உண்ணும்படி செய்ததில் இருந்து உருவானது. அவள் எப்போதும் தன் கணவனைக் கட்டுப்படுத்த ஆசைப்படுவாள், அதேநேரம் அவன் அவளை ஆதிக்கம் செய்ய முயற்சிப்பான்;  இது தொடர்ந்து திருமண சண்டைகளுக்கு வழிவகுக்கும்.

ஆணின் மீதான சாபங்கள்

ஒவ்வொரு ஆணும் இரண்டு முக்கியமான பகுதிகளில் துன்பப்படுகிறான்: அவனுடைய வேலையிலும், அவனது தவிர்க்க முடியாத மரணத்திலும். முதல் மனிதனான ஆதாம், கடவுளுக்கு கீழ்ப்படியாமல் தடைசெய்யப்பட்ட கனியை உண்டதால், ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, தனக்கும் தன் குடும்பத்திற்கும் உணவு பெறுவதற்காக உழைக்க வேண்டிய சாபத்திற்கு உள்ளானான். இப்போது அவனது வாழ்க்கை, கடின உழைப்பிற்கும், அழுத்தங்களுக்கும் சவால்களுக்கும் உள்ளாகியிருக்கிறது. எனவே, ஒவ்வொரு மனிதனும் காலையில் எழுந்து, வேலைக்குச் சென்று, தினசரி உழைப்பையும் வேலை அழுத்தங்களையும் எதிர்கொள்கிறான். வீட்டிற்குத் திரும்பும்போது, அவனது குழந்தைகள் பெரும்பாலும் அவனுக்கு கீழ்ப்படிவதில்லை, மேலும் அவன் தன் மனைவியுடன் தொடர்ந்து திருமணப் போராட்டத்தில் இருக்கிறான். இதுவே மனிதனுக்கு ஒதுக்கப்பட்ட வாழ்க்கை, அவனது படைப்பாளரிடமிருந்து பிரிக்கப்பட்டவனாக வாழ்கிறான். இவை எல்லாம் எங்கு கொண்டு செல்கின்றன? ஒரு சிறந்த, ஒளிமயமான எதிர்காலத்திற்கா? இல்லை. மாறாக, இது உடல் சோர்வு, நோய், இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கிறது. "நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்" என்று கடவுள் மனிதனை சபித்தார். வேதம், "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று கூறுகிறது.

இப்போது, ‘பாவம்’ என்ற சிறிய வார்த்தை எவ்வாறு மனிதனின் இக்கட்டான நிலையை விளக்குகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். செய்தி இன்னும் மோசமாகிறது: மனித இனம் தானாகவே இந்த வீழ்ந்த நிலையிலிருந்து தப்பிக்க இயலாது, தவிர்க்க முடியாத மரணத்தை நோக்கிய சரிவை யாராலும் தடுக்க முடியாது, அதைத் தொடர்ந்து இந்த பரிசுத்த கடவுளுக்கு எதிரான அனைத்து பாவங்களுக்காகவும் தெய்வீக நியாயத்தீர்ப்பு மற்றும் நரகத்தில் நித்திய தண்டனை உள்ளது. மனிதன் வீழ்ச்சியுற்ற ஒரு பாவ உயிரினம், எனவே அவனால் அவனை படைத்த பரிசுத்தமுள்ள படைப்பாளரை அணுக முடியாது.

மனிதனின் இக்கட்டான சூழ்நிலையைப் புரிந்துகொள்கிறீர்களா? ஒருபுறம், மனிதனின் ஒவ்வொரு மூச்சும், ஒவ்வொரு அணுவும் தன் படைப்பாளருடன் ஆழமான உறவுக்காக ஏங்குகிறது, மறுபுறம், பாவியாக இருப்பதால், தன் முயற்சியால் பரிசுத்தமான கடவுளிடம் ஏற்றுக்கொள்ளப்பட முடியவில்லை. ஒருபுறம் எல்லையற்ற பரிசுத்த கடவுள், மறுபுறம் முற்றிலும் பாவமுள்ள மனிதன். இந்தப் பெரிய இடைவெளியை யார் நிரப்ப முடியும்?

இதுவே காலத்திற்கே உரித்தான பெரிய கேள்விக்கு இட்டுச் செல்கிறது:

இது நம்மை புராதன காலத்தின் மகத்தான கேள்விக்கு இட்டுச் செல்கிறது: ஒரு பாவி எவ்வாறு பரிசுத்த கடவுளுடன் ஒப்புரவாகி, அவனது வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு ஏக்கமான வெற்றிடத்தையும் நிரப்பக்கூடிய அமைதியைப்  பெற முடியும்? இது நம்மை மூன்றாவது கேள்விக்கு இட்டுச் செல்கிறது.

கேள்வி 3: இயேசு கிறிஸ்து யார்?

மீட்பின் கடவுள்: படைப்பின் கடவுளும், பராமரிப்பின் கடவுளுமான இவர், மீட்பின் கடவுள் என்று வேதம் வெளிப்படுத்துகிறது. மனிதகுலத்தை இந்த பரிதாபகரமான நிலையிலிருந்து மீட்க, அவர் அளவற்ற ஞானத்துடன் ஒரு அற்புதமான திட்டத்தை வடிவமைத்தார். இந்தத் திட்டம் முழுவதும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டது. இவரே திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகவும், கடவுளின் ஒரேபேறான குமாரனாகவும் இருப்பவர், கடவுளுக்கு சமமான மகிமையும் அதிகாரமும் உடையவர். ஆனாலும், அவர் நம்முடைய மனித சுபாவத்தை ஏற்றுக்கொண்டு, மிகுந்த மனத்தாழ்மையோடு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். இந்த மண்ணில் முப்பத்து மூன்று ஆண்டுகள் வாழ்ந்த அவர், பூமியில் அவர் வாழ்ந்த நாட்களில், அதிசயமான அற்புதங்கள், அதிகாரமுள்ள போதனைகள் மற்றும் பரிபூரணமான பரிசுத்த வாழ்க்கையின் மூலம் தனது தெய்வீகத் தன்மையை உறுதிப்படுத்தினார்.

பாவிகளாய் இருக்கும் நம் நிலையை அறிந்த அவர், நமக்கு அவசியமான இரண்டு மாபெரும் தேவைகளை நிறைவேற்றினார்:

நமக்குப் பதிலாக (பிரதிநிதியாக) ஒரு பரிபூரணமான வாழ்க்கையை வாழ்ந்தார்: முதல் ஆதாம் நமக்கு பாவத்தையும் மரணத்தையும் கொண்டுவந்தார். ஆனால் இரண்டாம் ஆதாமாகிய இயேசு, நமக்காக பரிபூரணமான நீதியை சம்பாதித்துத் தந்தார்.

இரண்டாவதாக, அவர் சிலுவையில் சொல்ல முடியாத அவமானத்தையும், துன்பத்தையும், வேதனையையும் தாங்கி, நமது பாவங்களுக்காக பரிகார பலியாகத் தன்னை ஒப்புக்கொடுத்தார்.

பாவிகளுக்காக இயேசுகிறிஸ்து நிறைவேற்றின பரிகார பலியை கடவுள் ஏற்றுக்கொண்டாரா? ஆம், மூன்றாம் நாளில் அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பியதன் மூலம் தேவன் தனது அங்கீகாரத்தை வெளிப்படுத்தினார். இதுவே உண்மையான நற்செய்தி! (1 கொரிந்தியர் 15:3,4) -ல், அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார், “சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்; அதை நீங்கள் பெற்றுக்கொண்டீர்கள், அதிலே நிலைத்திருக்கிறீர்கள். கிறிஸ்து வேதவாக்கியங்களின்படி நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்றும், அடக்கம் பண்ணப்பட்டார் என்றும், வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.”

கேள்வி 4: இதனால் எனக்கு என்ன பலன் கிடைக்கும்?

பணம், வசதி மற்றும் ஆரோக்கியம் போன்ற சாதாரண உலகத் தேவைகளுக்கு மேலாக கடவுள் நிச்சயமாக நமது தேவைகளைப் பூர்த்தி செய்கிறார். ஆனால் அதைவிட அளவிட முடியாத மகத்தான ஆசீர்வாதங்கள் உள்ளன! தேவன் நம்முடைய ஆழ்ந்த தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடிய நம்முடைய பிதாவானவர் என்று வேதம் அழகாக விளக்குகிறது. நாம் அவரிமிருந்து விலகி, பாவமான வாழ்க்கையால் போராடுகிறோம் என்பதை விளக்குகிறது. நாம் மனம்திரும்பி அவரிடம் வரும்போது, அவர் நம்மை வெறுமனே வரவேற்பது மட்டுமல்ல; அவர் ஒரு பிரமாண்டமான விருந்து தயார் செய்கிறார். உங்களுக்காகக் காத்திருக்கும் இந்த ஆசீர்வாதங்களை நீங்கள் தனிப்பட்ட முறையில் அனுபவிக்கும் வரை, அவற்றின் மகிமையை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. சில முக்கியமான ஆசீர்வாதங்களைப் பார்ப்போம்:

  1. மன்னிப்பு (Forgiveness)

உங்கள் கடந்தகால, தற்போதைய மற்றும் எதிர்கால பாவங்கள் அனைத்தும் முழுமையாக மன்னிக்கப்படுவதை கற்பனை செய்து பாருங்கள். ஒரு பாவம்கூட உங்களைக் குற்றவாளியாக்கவோ, தண்டிக்கவோ முடியாது. இந்த ஆழ்ந்த மன்னிப்பை அனுபவிப்பது உங்கள் மனசாட்சிக்குள் இணையற்ற சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

  1. நீதிமானாக்கல் (Justification)

மன்னிப்புக்கு மேலாக, கிறிஸ்துவின் சொந்த நீதி உங்கள் கணக்கிலே வைக்கப்படுகிறது. தேவனின் முன்பாக நீங்கள் பரிபூரணமாக நீதிமானாக அறிவிக்கப்படுகிறீர்கள்!

  1. தத்தெடுப்பு (Adoption)

நீங்கள் தேவனுடைய குடும்பத்தில் அவரது அன்புக்குரிய சொந்த பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளப்படுகிறீர்கள். இந்த தெய்வீக தத்தெடுப்பின் மூலம் விலைமதிப்பற்ற, அளவிட முடியாத ஆசீர்வாதங்கள் உங்களுக்குச் சொந்தமாகின்றன.

  1. பராமரிப்பது (Provision)

அன்புள்ள தந்தை போல, தேவன் இந்த பூமியில் உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக வாக்களிக்கிறார். (பிலிப்பியர் 4:19)

  1. கண்டிப்பு (Correction)

நீங்கள் வழிதவறும்போது, அவர் அன்புடன் உங்களைத் திருத்துவதன் மூலம் சரியான பாதைக்கு மீண்டும் வழிநடத்துகிறார். (எபிரெயர் 12)

  1. தெய்வீக நிர்வாகம் (Providence)

உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும், விதிவிலக்கு இன்றி அது எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் உங்கள் நித்திய நன்மைக்காகவே திட்டமிடப்பட்டுள்ளது. (ரோமர் 8:28)

  1. கடவுளுடைய சமாதானம் (Peace of God)

நீங்கள் கடவுளுடன் ஆழமான மற்றும் நிலையான அமைதியை அனுபவிப்பீர்கள், மேலும் உங்கள் இதயத்தில் ஒரு அமைதி உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் பரவச் செய்யும். இந்த சமாதானம் ஒரு நதிபோல் பாயும்; உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தேடிய அமைதியைக் கொண்டுவரும். உங்கள் ஆத்துமா ஏங்கிக் கொண்டிருந்தது இதுதான் என்பதை அப்போது நீங்கள் உணருவீர்கள்.

  1. புதிய இருதயம் (New Heart)

உங்கள் பழக்கவழக்கங்களிலும் குணத்திலும் உண்மையான மற்றும் நிலையான மாற்றத்திற்கான ஆசை இருந்தாலும், பெரும்பாலும் அவை தோல்வியடைந்த புத்தாண்டு தீர்மானங்களை போலவே இருக்கிறது. இங்கே அதற்கான விடை இருக்கிறது. கடவுள் உங்களில் உள்ளான மனமாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு புதிய இருதயத்தையும், மறுபிறப்பையும் கொடுப்பதாக வாக்குறுதியளிக்கிறார். போதைப்பழக்கம், ஆபாசம், கோபம், பேராசை போன்ற ஒவ்வொரு அழிவுகரமான பழக்கத்தையும் வெல்ல முடியும். நீங்கள் ஒரு காலத்தில் விரும்பிய கெட்ட காரியங்கள் தற்போது அருவருப்பாக மாறும், மேலும் நீங்கள் ஒரு காலத்தில் புறக்கணித்த நல்ல காரியங்கள் இப்போது உங்களுக்கு மகிழ்ச்சியாக மாறும். கடவுளை மகிமைப்படுத்தும் விதத்தில் சிந்திக்கவும், பேசவும், செயல்படவும் விரும்புகின்ற ஒரு புதிய விருப்பத்தை உங்களில் கண்டுபிடிப்பீர்கள்.

  1. நித்திய ஜீவன் (Eternal Life)

கடவுள் நித்திய ஜீவனை உங்களுக்கு பரிசாக வழங்குகிறார்.இந்தப் பரிசு மரணத்திற்கான அச்சத்தை அற்புதமாக நீக்கி, மரணம் ஒரு முடிவல்ல, மாறாக ஒரு பிரகாசமான புதிய ஆரம்பம் என்ற அறிவால் அதை மாற்றுகிறது. இயேசு உயிர்த்தெழுந்தது போலவே தானும் உயிர்த்தெழுவேன் எனும் கல்லறையைத் தாண்டிய அசைக்க முடியாத நம்பிக்கையை நீங்கள் பெறுகிறீர்கள். பரலோகத்தில் ஒரு நித்திய சுதந்தரம் உங்களுக்காகக் காத்திருக்கிறது என்பதை அறிந்துக் கொள்கிறீர்கள்.

  1. மகிமைப்படுத்தல் (Glorification)

இறுதியாக, அவர் உங்களை தம்முடைய வாரிசாக முடிசூட்டி, தம்மிடமுள்ள எல்லாவற்றையும் அணுகும் உரிமையை உங்களுக்கு வழங்குகிறார்!

உண்மையில், இந்த ஆசீர்வாதங்கள் முற்றிலும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன! அவை உங்களை தூய்மையான பேரின்பத்தின் உச்சிக்கு உயர்த்தி, உங்கள் இதயத்தை நிரம்பி வழியும் மகிழ்ச்சியால் நிரப்புகின்றன! இந்த மாபெரும் ஈவுகள் இல்லாமல் நம்முடைய வாழ்க்கை எவ்வளவு ஏழ்மையானது என்பதை நீங்கள் உணரவில்லையா?

இதை யோசித்துப் பாருங்கள்: மன்னிப்பு இல்லாமல் நாம் நம்முடைய கடந்தகாலப் பாவங்களின் சுமையாலும், நிகழ்காலப் பாவங்களின் நெருக்கதாலும், எதிர்காலத்தில் அதிகமான பாவங்களாலும் கட்டப்பட்டிருக்கிறோம். நீதிமானாக்கப்படாமல், நாம் கண்டிக்கப்பட்டவர்களாகவும், ஒருபோதும் உண்மையாக ஏற்றுக்கொள்ளப்படாதவர்களாகவும் இருக்கிறோம். தத்தெடுப்பு இல்லாமல், நாம் இந்த கொடுமை நிறைந்த உலகத்தில் அனாதைகளாக தவிப்போம். கடவுளுடைய ஈவுகள் இல்லாமல், நம் சொந்த சக்தியிலும் கவலைகளிலும் மட்டுமே சிக்கியிருப்போம். அவருடைய கண்டிப்பு இல்லாமல், இருளில் தடுமாறி, தவறான பாதைகளில் தள்ளாடுவோம். அவருடைய தெய்வீக கரம் இல்லையென்றால், நம்முடைய வாழ்க்கை குழப்பத்திற்கு ஆளாகி, எல்லாமே நம்முடைய அழிவுக்கு வேலை செய்யும். அவருடைய சமாதானம் இல்லையென்றால், நம்முடைய இருதயங்கள் அமைதியற்றதாகவும், திருப்தியற்றதாகவும் இருக்கும். புதிய இதயம் இல்லையென்றால், நாம் அழிவுகரமான நடத்தைகள் மற்றும் பழக்கங்களின் சுழற்சியில் சிக்கிக்கொள்வோம். நித்திய ஜீவன் இல்லையென்றால், நாம் நம்பிக்கையின்றி இறுதி நியாயத்தீர்ப்பின் பயத்தையும், ஆத்துமா  இழப்பையும் எதிர்கொள்கிறோம். இறுதியாக, மகிமையடைதல் இல்லாமல், நாம் நித்திய சுதந்தரத்தை இழப்பது மட்டுமல்லாமல், நரகத்தில் நித்திய கோபத்தைப் பெறுவோம்!

பாவியான என் அன்பான நண்பனே! இந்த அற்புதமான ஆசீர்வாதங்களை ஏற்றுக்கொள்! இவ்வளவு சிறப்பான வாழ்க்கையை மாற்றும் ஆசீர்வாதங்கள் உன்னால் அடையக்கூடியவையாக இருக்கும்போது, ஒரு நிமிடம் கூட பாவத்தால் சிதைந்த வாழ்க்கையை வாழாதீர்கள்!

கேள்வி 5:  நான் என்ன செய்ய வேண்டும்?

இந்த அற்புதமான ஆசீர்வாதங்களை உண்மையிலேயே அனுபவிக்க, சுவிசேஷம் இரண்டு அடிப்படை நிபந்தனைகளை முன்வைக்கிறது: மனந்திரும்புதல் மற்றும் விசுவாசம்.

மனந்திரும்புதல் (Repentance)

இது ஒரு ஆழமான உணர்வோடு தொடங்குகிறது. நீங்கள் ஒரு பாவி என்பதை ஒப்புக்கொள்வது. "பாவம்" என்ற சிறிய வார்த்தைக்குப் பின்னால் உள்ள பெரும் பாரத்தை புரிந்துகொள்வது. இதுவே உங்கள் வாழ்க்கையின் எல்லா போராட்டங்களுக்கும், துன்பங்களுக்கும் மூல காரணம் என்பதைப் புரிந்துகொள்வது. உண்மையான மனந்திரும்புதல் என்பது உங்கள் பாவங்களிலிருந்து விலகி, உங்கள் அன்பான தகப்பனாகிய தேவனை நோக்கி முழு மனதுடன் திரும்புவதாகும். இது உங்கள் மனதையும் இருதயத்தையும் மாற்றுவது, உங்கள் சொந்த வழிகளை விட்டு, கடவுளின் வழியைத் தழுவும் முடிவு.

  1. விசுவாசம் (Faith)

இது இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைப்பது: அவர் கடவுளுடைய குமாரன் என்றும், அவர் முழுமையான தெய்வீகமானவர் மற்றும் முழுமையான மனிதர் என்று நம்புவது. மேலும் அவரது வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் அவர் நிறைவேற்றியவற்றை அசைக்க முடியாத நம்பிக்கையுடன் விசுவாசிப்பதை உள்ளடக்கியது.  அவருடைய கோபநிவராண பலியே உங்கள் பாவங்களுக்கு இறுதிப் பரிகாரம் என்றும், அவர் மூலம் மட்டுமே நீங்கள் கடவுளுடன் ஒப்புரவாக முடியும் என்றும் நம்புவது.

இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளும் போது முன்பு விவரித்த அளவிட முடியாத அனைத்து ஆசீர்வாதங்களும் உங்களுடையவையாகும்! உங்கள் பாவத்திற்காக மனந்திரும்புங்கள், திறந்த மனதுடன் கடவுள் பக்கமாய் திரும்புங்கள், இயேசு கிறிஸ்துவில் உங்களின் முழு விசுவாசத்தை வையுங்கள். அப்போது, மகிழ்ச்சியின் உச்சமும் வாழ்க்கையின் முழுமையும் உனக்காக காத்திருக்கிறது!

கடவுளுடைய சமாதனம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக...

கருத்துக்களை தெரிவிக்க

Security code
Refresh

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.