இளைஞர்களுக்கென ஏன் விசேஷமாகப் புத்திமதிகளைச் சொல்ல வேண்டும்?
அதற்குச் சில காரணங்களை நான் வரிசைப்படுத்திக் கூறப்போகிறேன்.
அ. தேவபக்தி கொண்டிருத்தல்
இளைஞர்களில் வெகு சிலரே தேவபக்தி உணர்வு உடையவர்களாய் இருக்கிறார்கள் என்கிற துயரமூட்டும் உண்மையை நாம் மறுப்பதற்கில்லை. யாரையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் பொதுவாகவே இதைச் சொல்லுகிறேன். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், அழகுள்ளவன், அழகில்லாதவன், கிராமத்தான், நகர்ப்புறத்தான் இப்படியாக யாரை எடுத்துக்கொண்டாலும் அதில் வித்தியாசமில்லை. ஒருசில வாலிபரே ஆவியினால் நடத்தப்படுகிறார்கள் என்பதை நான் கவனிக்கும்போது அதிர்ந்து போகிறேன். ஜீவனுக்குப் போகிற குறுகிய பாதையில் நடக்கிற இளைஞர்கள் வெகு சிலர் மட்டுமே! பரலோக காரியங்களில் ஒருசில வாலிபருக்கே நாட்டமிருக்கிறது. ஒருசில வாலிபரே தங்கள் சிலுவையை எடுத்துக்கொண்டு அனுதினமும் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாகத் தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். இவைகளை நான் மிகவும் துக்கத்தோடு கூறுகிறேன். ஆனால், தேவனின் பார்வையில் உண்மை நிலவரம் இப்படியாகத்தான் இருக்கிறது.
இளைஞர்களே, இந்த உலகத்திலே நீங்கள்தான் பெருவாரியான எண்ணிக்கையில் நிறைந்து காணப்படுகிறீர்கள்; நீங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். ஆனால், அதை அறியாதவர்களாக இருக்கிறீர்கள். உங்கள் ஆத்துமா எங்கே இருக்கிறது? அது என்ன நிலைமையில் காணப்படுகிறது? இதற்குரிய விடையை நாம் யாரிடம் கேட்டுப் பார்த்தாலும் ஒரே மாதிரியான பதில்தான் கிடைக்கிறது. இது மிகவும் பரிதாபம்!
ஒரு உண்மையான சுவிசேஷ ஊழியனை அணுகி நாம் சில கேள்விகளைக் கேட்டு, அதற்கு அவர் என்ன பதில் சொல்லுகிறார் எனப் பார்ப்போம். திருச்சபையில், கர்த்தருடைய பந்தியில் கலந்துகொள்ள ஆவலுடன் வருகிற திருமணமில்லாத வாலிபர்கள் எத்தனை பேர்? கிருபைக்குரிய காரியங்களில் மிகவும் பின்தங்கியிருப்பவர்கள் யார்? ஞாயிறு ஆராதனைக்கு ஒழுங்காக வராதவர்கள் யார்? வாராந்திர ஜெபக்கூட்டங்களுக்கும், வேதபாட வகுப்புகளுக்கும் வர வைப்பதற்கு மிகவும் கடினமானவர்கள் யார்? வேதபாடங்கள் நடக்கையில் சரியாகக் கவனிக்காதவர்கள் யார்? தனது சபையில் யாரைக் குறித்துப் போதகர் மிகவும் கவலையாயிருக்கிறார்? யாருடைய இருதயத்தை அவர் மிகவும் ஆராய்ந்து அறிய வேண்டியதாயிருக்கிறது? தனது மந்தையில் எந்த ஆடுகளை அவர் சிரமப்பட்டு நடத்த வேண்டியதாயிருக்கிறது? யார் அடிக்கடி எச்சரித்துக் கடிந்துகொள்ளப்பட வேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள்? மேய்ப்பனுக்கு மிகுந்த துயரத்தையும், மனச்சோர்வையும் அளிப்பது யார்? யாருடைய ஆத்துமாவைக் குறித்துப் பயமும், நம்பிக்கையற்ற நிலையும் ஏற்படுகிறது? இவ்வளவு கேள்விகளுக்கும் அந்த உண்மையான ஊழியன் தரும் பதில், 'வாலிபர்களைக் குறித்துத்தான்' என்பதாகவே இருக்கும்.
திருச்சபைக்கு வந்துகொண்டிருக்கிற பெற்றோரிடமும் சில கேள்விகளைக் கேட்கலாம். உங்களுடைய குடும்பத்தில் உங்களுக்கு மிகுந்த துக்கத்தையும் துயரத்தையும் தருவது யார்? யாரை மிகவும் கவனமாகப் பார்க்க வேண்டியதாயிருக்கிறது? யார் உங்களை மனச்சோர்வடையச் செய்வது? சரியான பாதையிலிருந்து யார் முதலில் வழிவிலகிச் செல்வது? எச்சரிப்புகளையும், புத்திமதிகளையும் கேட்பதில் கடைசியாக இருப்பது யார்? ஒழுக்கக் கட்டுப்பாட்டிற்குள்ளாக யாரைக் கொண்டுவருவது கடினமானது? துணிகரமான பாவங்களுக்கு உடன்படுவது யார்? தங்களுக்குக் கெட்ட பெயரைச் சம்பாதித்துக்கொள்வது யார்? நல்ல நண்பர்களைத் துயரப்படுத்துவது யார்? வயதானவர்களுக்கு வெறுப்புண்டாக்குவது யார்? நரைமயிரைத் துயரத்தோடு குழியில் இறங்கப்பண்ணுவது யார்? இந்த எல்லாவிதமான கேள்விகளுக்கும் அவர்கள் தரும் பதில் ‘இளைஞர்கள்’ என்கிற பதிலே கிடைக்கும்.
காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள் போன்றோரிடம் சில கேள்விகளைக் கேட்போம். குடிப்பழக்கம் பெரும்பாலும் எந்த வகுப்பினரிடையே காணப்படுகின்றது? சட்டத்தை மீறுபவர்கள் எந்த வயதில் அதிகமாகக் காணப்படுகிறார்கள்? கூட்டங்களைத் தூண்டிவிட்டுக் கலகம் விளைவிப்பதில் முன்னோடியாய் இருப்பவர்கள் எந்த வயதினர்? குடிபோதை, சட்டத்தை மீறுதல், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல், அத்துமீறுதல், திருட்டுத்தனம் போன்ற குற்றங்களில் ஈடுபட்டுச் சிறைச்சாலைக்குப் போகிறவர்களில் எந்த வயதினர் அதிகமாகக் காணப்படுகிறார்கள்? எந்த வயதினரை மிகவும் விழிப்போடு கவனிக்க வேண்டியதாயிருக்கிறது? இதற்கும் அவர்கள் தரும் பதில் ‘வாலிபர்கள்’ என்கிற பதிலாகத்தான் இருக்கும்.
சற்று வசதியான குடும்பங்களிலே என்ன நிலைமை காணப்படுகிறது என்று பார்ப்போம். ஒரு பணக்காரக் குடும்பத்திலே உள்ள பிள்ளைகள் தங்கள் நேரத்தையும், பணத்தையும், சரீர பெலனையும் சிற்றின்பங்களிலே ஈடுபட்டு வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள். மற்றொரு குடும்பத்திலே உள்ள மகன்கள் தங்களுடைய வருங்காலத்தைக் குறித்து எண்ணாமல், தங்களுக்கென ஒரு தொழில்திறமையை வளர்த்துக்கொள்ளாமல், தங்கள் வாழ்வின் பொன்னான காலத்தைச் சோம்பேறித்தனமாகப் போக்கிக்கொண்டிருக்கிறார்கள். மற்றொரு குடும்பத்திலே சொந்தமாகத் தொழில் இருந்தாலும், அதை விருத்திசெய்ய முயற்சிக்காமல் ஒரு பொழுதுபோக்கு போல ஏனோதானோவென அதை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு குடும்பத்திலே பிள்ளைகள் தவறான நண்பர்களோடு சேர்ந்துகொண்டு சூதாட்டங்களில் ஈடுபட்டுக் கடனாளியாகி, நல்ல நண்பர்களின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள். படிப்போ, பணமோ, பதவியோ இவர்களைக் கட்டுப்படுத்த முடியாமற்போவது என்ன பரிதாபம்!
கவலை குடிகொண்டுள்ள பெற்றோர், மனமுடைந்துபோன தாய்மார், துயரத்தில் ஆழ்ந்துள்ள சகோதரிமார் எத்தனை பேர்! அவர்கள் கூறும் சோகக்கதைகள்தான் எத்தனை ஆயிரம்! பெரும்பாலான குடும்பங்களில் ஒரு மகனோ, சகோதரனோ, மாமா பிள்ளையோ அல்லது அத்தை பிள்ளையோ தங்களைக் கெடுத்துக்கொண்டு அனைவருக்கும் துயரத்தை உருவாக்கிய வாலிபனைக் குறித்துச் சொல்லும் நிலையே காணப்படுகிறது. பணக்காரக் குடும்பங்களில் முள்ளாகக் காணப்படும் வாலிபர்கள் இருப்பது மிகவும் சகஜமாயிருக்கிறது. குடும்ப சந்தோஷத்திற்கு முட்டுக்கட்டையாக இதுமாதிரி வாலிபர்கள் இருக்கிறார்கள். பணமிருந்தாலும் எப்போதும் அவர்களைக் குறித்த கவலையும் துயரமும் உடையவர்களாகக் குடும்பத்தார் வாழ வேண்டியதாயிருக்கிறது. வாலிபப் பருவத்திலே பெரும்பாலும் இதுமாதிரியான பிரச்சனைகளே உண்டாகின்றன.
இவைகளைக் குறித்து நாம் என்ன சொல்லுவது? இவையெல்லாம் உண்மைதானே? நடைமுறை வாழ்க்கையில் நாம் பார்ப்பவைதானே? உண்மையை மறைக்க முடியுமா? நிதர்சனமான காரியங்களாகிய இவை எல்லாத் திசைகளிலிருந்தும் நம் கண் முன்னாலே வந்து நிற்கிறதே, இல்லையென மறுக்க முடியுமா? எவ்வளவு பயங்கரமான நிலை இது! ஒவ்வொரு இளைஞனையும் நான் பார்க்கும்போது, 'இவன் தேவனுக்கு விரோதமாக இருப்பானோ?' என நினைக்காமல் இருக்க முடியவில்லை. 'அகலமான பாதையில் போய்க்கொண்டிருக்கிறானே! அழிவுக்குப் போகும் பாதையில் இருக்கிறானே! பரலோகத்திற்குள் பிரவேசிக்கப் பாத்திரவானாக இல்லையே!' என்கிற இவ்வளவு உண்மைகள் எனக்கு முன்பாக நிற்கும்போது, என்னால் இளைஞர்களுக்குப் புத்தி சொல்லாமல் இருக்க முடியுமா? ஆகவே, நான் ஏன் இவர்களுக்குப் புத்தி சொல்கிறேன் என்பதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்படவும் வேண்டுமா?
ஆ. நியாயத்தீர்ப்பை மறத்தல்
மரணமும் நியாயத்தீர்ப்பும் மற்றவர்களுக்கு மாத்திரமல்ல, இளைஞர்களுக்கு முன்பாகவும் வைக்கப்பட்டிருக்கிறது. இதை மறந்துபோனது போல எல்லோருமே நடந்துகொள்ளுகிறார்கள். இளைஞனே, ஒரே தரம் மரிப்பதற்காக நீயும் நியமிக்கப்பட்டிருக்கிறாய். ஒருவேளை நீ இன்று பலசாலியாகவும் ஆரோக்கியமானவனாகவும் காணப்படலாம். ஆனால், உனது மரணநாளும் மிகவும் அருகிலேயே இருக்கலாம். வயதானவர்களைப் போலவே இளைஞர்களும் நோயில் விழுவதை நான் கண்டிருக்கிறேன். வயதானவர்களுக்கு மாத்திரமல்ல, இளைஞர்களுக்கும் நான் அடக்க ஆராதனை நடத்தியிருக்கிறேன். கல்லறைகளில் உன்னைக் காட்டிலும் வயது குறைந்தவர்களின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். குழந்தைப் பருவத்திலும் வயது முதிர்ந்தும் இறப்பவர்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், பெரும்பாலும் 13 முதல் 23 வரையுள்ள வயதில்தான் அதிகமான மரணம் நிகழ்கிறதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் நீயோ, "நான் இப்போது ஒன்றும் சாக மாட்டேன்" என்கிற நிச்சயமுடையவனாக வாழ்ந்துகொண்டிருக்கிறாய்.
ஆவிக்குரிய காரியங்களை நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்துக்கொண்டிருக்கிறாயா? சாலொமோன் கூறுவதை நினைவில்கொள்: "நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒரு நாள் பிறப்பிப்பதை அறியாயே" (நீதிமொழிகள் 27:1). கடினமானவைகளை நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் எனக் கூறிய கிரேக்கத் தளபதி ஒருவன், தனக்கு எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படிப்பதைத் தள்ளிப்போட்டான். அடுத்த நாளில் அவன் கொலைசெய்யப்படப் போவதைக் குறித்து எச்சரித்து எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை அவன் உரிய நேரத்தில் படிக்காமல் போனதால், அடுத்த நாளைப் பார்க்காமலே இறந்துபோனான். நாளைய தினம் சாத்தானுடையது; ஆனால், இன்றைய தினமோ கர்த்தருடையது. நாளைக்குச் செய்யலாம் எனத் திட்டமிட்டிருக்கும் ஆவிக்குரிய காரியங்கள், தீர்மானங்கள் ஆகியவை எவ்வளவுதான் சிறப்பாக இருந்தாலும் சாத்தான் அதைக் குறித்துக் கவலைப்படுவதில்லை. 'நாளைக்கு', 'பிறகு' போன்ற எண்ணங்கள் தோன்றிவிட்டாலே, சாத்தானுக்கு எல்லையற்ற மகிழ்ச்சிதான். ஆகவே இந்தக் காரியங்களில் சாத்தானுக்கு இடங்கொடாதிருங்கள். "சாத்தானே! நான் நினைத்ததை இன்றைக்கே, இப்போதிருந்தே செயல்படுத்த ஆரம்பிப்பேன்" என்று உறுதியாகச் சொல்லுங்கள்.
எல்லா மனிதர்களும் முற்பிதாக்களைப்போல வாழ்வதில்லை. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபைப் போன்ற வாழ்க்கை எல்லாருக்கும் கிடைப்பதில்லை. அநேகம் பிள்ளைகள் தங்கள் தகப்பனுக்கு முன்பாகவே மரிக்க நேரிடுகிறது. தாவீதின் இரண்டு அருமையான குமாரர்கள், தாவீதுக்கு முன்பாக மரித்துப்போக நேர்ந்தது. யோபு தனது பத்துப் பிள்ளைகளையும் ஒரே நாளில் பறிகொடுக்கும்படியாக ஆனது. தேவன் உங்களுக்கு என்ன குறித்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாது. சீக்கிரமாக மரணம் நேரிடுவதாக இருக்குமானால், நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் எனத் தள்ளிப்போடுவதால் பலன் ஒன்றுமில்லை. செய்வதை, சிந்திப்பதை உடனடியாகச் செய்ய வேண்டும்.
சரியான நேரம் வரும்போது இவைகளைப் பற்றிச் சிந்தித்துக்கொள்ளலாம் என நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? அத்தேனே பட்டணத்தாரும், பேலிக்ஸ் தேசாதிபதியுங்கூட அப்போஸ்தலனாகிய பவுலின் பிரசங்கத்தைக் கேட்டபோது இவ்வாறுதான் நினைத்துக்கொண்டிருந்தார்கள் (அப்போஸ்தலர் 17:32; 24:25). "இன்னொரு சமயம் கேட்கிறோம்" என்றார்கள். ஆனால் அப்படியொரு காலம் அவர்களுக்கு வராமலேயே போய்விட்டது. 'நாளைக்கு நேரம் கிடைக்கும்' என்பது போன்ற தோற்றத்தை நரகம் ஏற்படுத்துகிறது. சமயம் இருக்கும்போதே காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நித்தியத்துக்குரிய எந்தக் காரியத்தையும் தள்ளிப்போடாதிருங்கள். ஆத்துமா ஆபத்திலிருக்கும்போது அலட்சியமாக இருக்காதீர்கள். ஒரு ஆத்துமா இரட்சிப்பை அடைவதென்பது சாதாரணமான காரியமல்ல. வாலிபராக இருந்தாலும், முதியவராக இருந்தாலும் எல்லோருக்கும் அந்தப் பெரிதான இரட்சிப்பு அவசியமானதாக இருக்கிறது. எல்லோரும் மறுபடியும் பிறக்க வேண்டியதாக இருக்கிறது. எல்லோரும் இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட வேண்டியது மிகவும் அவசியம். எல்லோரும் பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமடைய வேண்டியது அவசியம். இவைகளைக் குறித்துச் சிந்தித்து, இவைகளை அடைந்துகொண்டவனே மிகவும் சந்தோஷமான மனிதன். தேவனின் பிள்ளையாகிவிட்டோம் என்கிற நிச்சயத்தைப் பரிசுத்த ஆவியினால் தன் உள்ளத்தில் பெறும்வரைக்கும் அவன் சும்மா இருக்கமாட்டான்.
இளைஞர்களே, உங்கள் காலம் குறுகியது. உங்கள் வாழ்நாள் ஒரு நிழலைப்போல மறைந்துபோய்விடும். புகையைப்போலக் காணாமல் போகும். உங்கள் வாழ்க்கை நடந்து முடிந்த சரித்திரமாக மாறிவிடும். உங்கள் சரீரம் வெண்கலத்தினால் ஆனதல்ல. "இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள்" என்று ஏசாயா 40:30-ல் சொல்லப்பட்டிருக்கிறது. உங்கள் பெலனெல்லாம் ஒரு நொடியிலே உங்களிடமிருந்து பறித்துக்கொள்ளப்படலாம். அதற்குப் பெரிய பிரயத்தனம் தேவையில்லை. ஒரு சின்ன தடுக்கி விழுதல், ஒரு காய்ச்சல், கட்டி அல்லது காயம்... இவை போதும்; பிறகு கல்லறையிலே புழு உங்களைத் தின்கிற நிலைமை வெகு விரைவில் வந்துவிடும். மரணத்திற்கும் உங்களுக்கும் இடையே ஒரு படி இருக்கிறது. உங்கள் ஆத்துமா தன்னை உருவாக்கியவரிடம் மறுபடியும் போகும். "இன்றிரவு உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து கேட்கப்படும்" (லூக்கா 12:20).
உலகத்தார் போகிற வழியிலே நீங்கள் விரைந்து போய்க்கொண்டிருக்கிறீர்கள். ஒருநாளிலே நீங்கள் இந்த உலகத்திலே இல்லாமலே போய்விடுவீர்கள். உங்கள் உலகவாழ்வு நிச்சயமானதல்ல. உங்களுடைய மரணமும், நியாயத்தீர்ப்பும் நிச்சயமாக வந்தே தீரும். நீங்களும் பிரதான தூதனுடைய எக்காள சத்தத்தைக் கேட்பீர்கள். வெள்ளைச் சிங்காசனத்தின் முன்பாக நியாயத்தீர்ப்படைவதற்கு நிற்பீர்கள் (வெளிப்படுத்தல் 20:11). "மரித்தோர்களே, எழுந்திருங்கள்; நியாயத்தீர்ப்படைய வாருங்கள்" என்கிற சத்தம் தன் காதுகளில் எப்போதும் ஒலித்துக்கொண்டேயிருப்பதாக ஜெரோம் (கி.பி. 345-420) என்பவர் கூறியது போல, அந்த அழைப்புக்கு நீங்களும் கீழ்ப்படிய வேண்டிய காலம் வரும். "இதோ, சீக்கிரமாய் வருகிறேன்" (வெளிப்படுத்தல் 22:7) என்று நியாயாதிபதியே கூறுகிறார். இப்படியிருக்கையில், வாலிபர்களே! என்னால் எப்படி உங்களுக்குப் புத்திமதி கூறாமல் இருக்க முடியும்? எனவே நான் உங்களை விட்டுவிடத் துணியமாட்டேன்.
ஓ! இளைஞர்களே, நீங்கள் எல்லோரும் பிரசங்கியின் வாக்கியங்களை மனதினுள் பொக்கிஷமாகப் பாதுகாத்து வையுங்கள்: "வாலிபனே, உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிபத்தின் நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி" (பிரசங்கி 11:9). காரியம் இப்படியிருக்கையில் எந்த மனிதனாவது அலட்சியமாகவோ, கவலையற்றோ இருக்க முடியுமா? உலக வாழ்க்கையே போதுமானது என நினைத்து, மரிப்பதற்கு ஆயத்தமில்லாமல் இருப்பவர்களைப் போன்ற முட்டாள்கள் யாரும் கிடையாது. வருங்காலத்தைக் குறித்த மனிதனுடைய விசுவாசமற்ற தன்மை மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஏசாயா மிகவும் தெளிவாக இதைத் தீர்க்கதரிசனமாக முன்னுரைத்திருக்கிறார்: "எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்?" (ஏசாயா 53:1). இயேசுக்கிறிஸ்துவும் அதையே குறிப்பிடுகிறார்: "மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ?" (லூக்கா 18:8). தேவனுடைய நியாயாசனத்திலே உங்களில் அநேகரைக் குறித்துக் கர்த்தர் 'அவர்கள் விசுவாசிக்கவில்லை' என்று கூறுவாரோ என நான் மிகவும் பயப்படுகிறேன். நீங்கள் வெகுசீக்கிரமாய் இந்த உலகத்தை விட்டு கடந்துபோய், விழித்தெழும்போது 'மரணமும் நியாயத்தீர்ப்பும் உண்மையாகவே இருக்கிறதே!' என்பதைக் காலங்கடந்து உணர்ந்துகொள்வீர்களோ என அஞ்சுகிறேன். இவைகளினிமித்தமாகவும் உங்களைக் குறித்து நான் பயப்படுவதால் உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்.
இ. எதிர்காலத்தைத் தீர்மானித்தல்
இப்பொழுது இளைஞர்கள் வாழுகின்றதான வாழ்க்கை முறையே அவர்களுடைய எதிர்காலத்தை எல்லா வகையிலும் நிர்ணயிப்பதாயிருக்கிறது. ஆனால், அவர்கள் அதை மறந்துபோனது போல வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒருவனுடைய முழுவாழ்க்கையையும் விதைக்கும் காலம் வாலிப வயது. அவனுடைய சொற்ப ஜீவிய காலத்தை ஒழுங்குபடுத்துவது வாலிப வயது. அவனுடைய வாழ்க்கையைத் திசை திருப்புவதும் வாலிப வயதே! விதையைக் கொண்டு மரத்தின் தரத்தை நாம் நிர்ணயிக்கலாம். பூக்கும் நிலையிலேயே பழங்கள் எப்படிப்பட்டதாயிருக்கும் என்பதைக் கணிக்கலாம். வசந்தத்தைப் பார்த்து அறுப்பு எப்படியிருக்கும் எனக் கூறலாம். காலைப்பொழுதின் மேகமூட்டத்தைக் கொண்டு அந்த நாளின் வானிலையைக் கூறலாம். ஒருவனுடைய வாலிப வயதின் குணாதிசயங்களைக் கொண்டு, பெரும்பாலும் அவன் முதிர்ச்சியடைந்த நிலையில் இப்படித்தான் இருப்பான் என்பதைத் தீர்மானிக்கலாம்.
இளைஞர்களே, ஏமாந்து போகாதீர்கள். வாலிப நாட்களைச் சிற்றின்பங்களிலும், கேளிக்கைகளிலும் கழித்துவிட்டு, சற்று வயது வந்த பிற்பாடு தேவனிடம் வந்து அவருக்குப் பிரியமாக நடந்துகொள்ளலாம் என நினைக்காதிருங்கள். வாழ்வின் ஆரம்ப காலத்தை ஏசாவைப் போலக் களியாட்டங்களில் கழித்துவிட்டு, மரிக்கும் தறுவாயில் யாக்கோபைப் போலப் பக்தனாக மாறிக்கொள்ளலாம் என ஒருபோதும் கனவு காணாதீர்கள். அப்படி நீங்கள் நினைப்பது தேவனையும் உங்கள் ஆத்துமாவையும் கேலி செய்வது போலாகும். வாலிப நாட்களின் பெலனையும் சக்தியையும் உலகத்துக்கும் சாத்தானுக்கும் கொடுத்துவிட்டு, பெலனற்றுப் போகும் முதிர்வயதில் எஞ்சியிருக்கும் மீதிகளை ராஜாதிராஜனுக்குக் கொடுக்கலாம் என நீங்கள் நினைப்பது எவ்வளவு அறிவீனம்? அப்படி ஒருபோதும் செய்ய முடியாது என்பதை நீங்கள் முடிவில்தான் உணருவீர்கள்.
கடைசியில் மனந்திரும்பிக்கொள்ளலாம் என நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறீர்கள். தேவனின் உதவியில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். மனந்திரும்புதலும் விசுவாசமும் தேவன் அருளும் ஈவுகள். வெகுநாட்களாக அவர் அதை உங்களுக்குக் கொடுப்பதற்காக வைத்துக்கொண்டிருந்தபோதும், நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டாதபடியினால் அவர் அதை இனிக் கொடுக்க மாட்டார். 'நீ என்னிடம் வந்தால் உடனடியாக உனக்கு மனந்திரும்புதலை அளிக்க இருக்கிறேன்; ஆனால், அதே சமயத்தில் நீ காலதாமதம் செய்துகொண்டே இருப்பாயானால் அதை அடையாமலே போவாய்' எனத் தேவன் எச்சரிக்கிறார். தனது பாவங்களுக்காக மனந்திரும்புகிற பாவியை, கடைசித் தருணமாயிருந்தாலும், அவன் நம்பிக்கையிழந்து போகாதபடிக்கு மன்னித்து இரட்சிக்கிற சிலாக்கியத்தைத் தான் கொண்டிருப்பதைக் காண்பிப்பதற்காகவே, சிலுவை மரத்திலே மனந்திரும்பிய கள்ளனை உதாரணத்திற்கு மன்னித்துக் காண்பித்தார். ஆனால் அப்படி மன்னிக்கப்பட்டது ஒரே ஒருவன் மாத்திரந்தான் என்பதை எல்லாருக்கும் எச்சரிப்பாகவும் வைத்திருக்கிறார். கடைசித் தருணத்தில் மன்னிக்கிற உரிமையைத் தேவன் கொண்டிருக்கிறார்; ஆனால், அப்படி மன்னிக்கப்படும் பாக்கியத்தை நீ அடைவாய் என்பது என்ன நிச்சயம்? "தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களை அவர் முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயிருக்கிறார்" (எபிரேயர் 7:25). இப்படியாக எழுதிய அதே பரிசுத்த ஆவியானவர்தான் இந்த எச்சரிப்பையும் கூறுகிறார் என்பதைக் கவனியுங்கள்: "நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனுமில்லை. என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள். ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படும் காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன்" (நீதிமொழிகள் 1:24-26).
இஷ்டமான சமயத்தில் தேவனிடம் வந்துவிடலாம் என்பது சுலபமல்ல. தேவபக்தனாகிய ஒரு போதகர் கூறினார்: "பாவத்திற்குப் போகிற வழி என்பது மலையிலிருந்து இறங்குவது போன்றது. ஒருவன் நிறுத்த வேண்டுமென விரும்பினாலும் அது கட்டுப்படாமல் அவனை வெகுசுலபமாக இறக்கத்திற்குக் கொண்டுவந்துவிடும்". பரிசுத்த காரியங்களில் ஆர்வமும் திட உறுதியும் அவ்வளவு இலகுவாக வந்துவிடுவதில்லை. அவை அந்த நூற்றுக்கதிபதியின் வேலைக்காரரைப் போன்றதல்ல; 'போ' என்றால் போய்விடுவதும், 'வா' என்றால் வந்துவிடுவதும் அல்ல. அது காண்டாமிருகத்தைப் போன்றது (யோபு 39:9). உன்னிடத்தில் பணிந்து வர சம்மதிக்காது. அவைகள் உன் சத்தத்துக்குக் கீழ்ப்படியாது; உன் கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளாது. நித்தியத்துக்குரிய காரியங்களில் இப்படிப்பட்டவை உனக்குச் சம்பவித்துவிடாதபடிக்கு, வாலிபனே நீ எச்சரிக்கையாயிரு.
நான் எதற்காக இவைகளையெல்லாம் சொல்லுகிறேன்? பழக்கவழக்கங்கள் நம்மை அடிமைப்படுத்தக்கூடிய ஆற்றலைப் பெற்றிருப்பதால் சொல்லுகிறேன். இளமையில் நல்ல பழக்கவழக்கங்களைப் பழகிக்கொள்ளாதவர்களைப் பிறகு மாற்றுவது கடினம் என்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். முதுமையில் மாற்றிக்கொள்வது மிகவும் அரிதாகும். பழக்கவழக்கங்கள் நம்மில் ஆழமாக வேரூன்றிவிடுகின்றன. இருதயத்திலே பாவம் தனது கூட்டைக் கட்டிக்கொள்ள நீ அனுமதித்தாயானால், அதை எவ்வளவு விரட்டினாலும் அது உன்னை விட்டுப் போகாது. பழக்கங்கள் இயற்கை சுபாவமாகவே மாறிப்போய்விடுகின்றன. அவை முப்புரி நூலைப் போன்றவை; எளிதில் அறாது. எரேமியா தீர்க்கதரிசி அழகாகச் சொல்லுகிறார்: "எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமைசெய்யப் பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும்" (எரேமியா 13:23). தீய பழக்கவழக்கங்கள் மலையின் அடிவாரத்தை நோக்கி ஓடுகின்ற பாறையைப் போன்றது. எவ்வளவு தூரத்திற்கு அது உருளுகின்றதோ அவ்வளவுக்கு அதன் வேகம் அதிகரிக்கிறது; கட்டுப்படுத்த முடியாதபடிக்குத் தறிகெட்டு ஓடுகிறது. மேலும், அவை மரங்களைப் போன்றவை. வெகுநாட்களாக இருக்கும் பழக்கவழக்கங்கள், நல்ல வைரம் பாய்ந்த மரத்தைப் போன்று உறுதியோடு இருக்கும். தேக்கு மரம் சிறிய செடியாக இருக்கும்போது ஒரு சிறுவன்கூட அதை எளிதில் பிடுங்கிவிட முடியும். ஆனால், அதுவே நாள்பட வளர்ந்து பெரிய மரமாகும்போது நூறு பலசாலிகள் சேர்ந்தால்கூட அதை அசைக்க முடியாது. அதுபோலத்தான் பழக்கவழக்கங்களும் இருக்கின்றன. எவ்வளவு நாள்பட அவை ஒருவனிடத்தில் இருக்கிறதோ அவ்வளவுக்கு அது அசைக்கப்பட முடியாமல் உறுதியோடு விளங்கும்; அவைகளை நீக்கிப்போடுவது சுலபமல்ல. தீய பழக்கவழக்கங்கள் பாவத்திற்குத் தீனி போட்டு வளர்க்கின்றன. பாவத்தை முதலில் செய்யும்போது, அது பயத்தை மெதுவாக நீக்கிவிடுகிறது. இருதயத்தைக் கடினப்படச் செய்கிறது; மனசாட்சியின் எச்சரிப்பின் குரலை மழுங்கச் செய்கிறது. பாவத்தை மேலும் செய்யும்படிக்கு நம்மைத் தூண்டிவிடுகிறது.
இளைஞர்களே, நான் உங்களை மிகவும் அதிகமாகப் பயப்படுத்துவதாக நீங்கள் நினைக்கலாம். நான் பார்த்தது போன்ற முதியவர்களை நீங்கள் சந்தித்தால் அப்படி நினைக்கமாட்டீர்கள். செத்தவர்களைப் போன்று உணர்ச்சியற்றவர்களாக, வறண்டு போனவர்களாக, இரக்கமற்றவர்களாக, மரித்தவர்களாக, கடினப்பட்டுப் போனவர்களாக வாழ்வின் விளிம்பிலே அவர்கள் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் ஆத்தும காரியங்களைக் குறித்து நீங்கள் ஏனோதானோவென இருக்க முடியாது. நல்ல பழக்கமோ, தீய பழக்கமோ அது நாள்தோறும் உங்கள் ஆத்துமாவில் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நீங்கள் ஒன்று தேவனுக்கு அருகாமையிலே கிட்டிச் சேர்ந்துகொண்டிருக்கிறீர்கள், அல்லது அவரை விட்டு விலகிப் போய்க்கொண்டிருக்கிறீர்கள். மனந்திரும்பாமல் கடந்துபோகின்ற ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்கும் பரலோகத்திற்கும் இடையிலுள்ள சுவர் உயரத்திலும் அகலத்திலும் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆழமானதும் அகலமானதுமான மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுக்கொண்டே போகிறது. பாவத்திலேயே தொடர்ந்து தரித்திருப்பது எவ்வளவு கடினமான பாதையை ஏற்படுத்திவிடுகிறது என்பதைக் குறித்துப் பயந்து நடுங்குங்கள். இப்போதே தகுந்த வேளை. கொடிய நாட்கள் வந்து உங்களை எதுவும் செய்யவிடாதபடிக்கு இன்றே செயல்படுங்கள். வாலிப நாட்களிலே நீங்கள் கர்த்தரைத் தேடிக் கண்டடையாவிட்டால், நீங்கள் ஒருபோதும் அவரைக் கண்டுபிடிக்காதபடிக்கு உங்கள் பழக்கவழக்கங்களே மிகவும் வலிமை பெற்று உங்கள் ஆத்துமாவை மேற்கொண்டுவிடும். இவைகளைக் குறித்து நான் பயப்படுவதால் உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்.
ஈ. சாத்தானைச் சமாளித்தல்
வாலிபர்களின் ஆத்துமாக்களை அழித்துப்போடச் சாத்தான் விசேஷித்த தீவிரத்தோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறான். அவர்களோ இதை உணராமல் இருக்கிறார்கள். உங்களை விட்டுவைத்தால், நீங்கள் அடுத்த சந்ததியையாவது தேவனுக்குள் கொண்டுவர வேண்டுமென முயற்சிப்பீர்கள் என்பது சாத்தானுக்குத் தெரியும். ஆகவே, அவன் அந்தந்த காலத்துக்கு ஏற்ப புதிய உத்திகளைத் தயாரித்து உங்களைத் தன் வசப்படுத்திக்கொள்ளுகிறான். அவனுடைய சூழ்ச்சிகளைக் குறித்து நீங்கள் அறியாமலிருக்கக் கூடாது.
தனது அதிபுத்திசாலித்தனமான தந்திரங்களைச் சாத்தான் வாலிபப் பருவத்தினர் மீது பிரயோகிக்கவே முயற்சிப்பான். உங்கள் இருதயத்தைத் தன்வசமாக்கிக்கொள்ளும்படிக்கு அவன் தன்னுடைய தந்திரமான வலைகளை மிகவும் கவனத்தோடு பின்னுகிறான். அதற்குள் தன்னுடைய மாயமான வலைகளைப் போட்டு உங்களைக் கவர்ந்திழுக்க வகை செய்கிறான். மிகுந்த ஞானத்தோடு தனது சோதனைகளாகிய விஷங்களைக் கவர்ச்சிகரமான காரியங்களுக்குள் மறைத்துவைத்து, தனது கடையைக் கவர்ச்சிகரமாக உங்கள் முன்னாலே விரிக்கிறான். சாத்தானுக்கு மிகவும் விருப்பமான ஆத்துமாக்கள் வாலிப ஆத்துமாக்கள்தான். கர்த்தர்தாமே சாத்தானைக் கடிந்துகொண்டு உங்களை அவன் வலையில் சிக்காமல் விடுவிப்பாராக!
இளைஞர்களே, சாத்தானின் கண்ணிகளுக்கு எச்சரிக்கையாய் இருங்கள். உங்கள் கண்களில் எதையாவது தூவிவிட்டு, நீங்கள் உண்மையைப் பாராதபடிக்கு உங்கள் மனதைக் குருடாக்குவதில் அவன் வல்லவன். நல்லவைகளைக் கெட்டதென்றும், தீயவைகளை நல்லதென்றும் உங்களை நம்பப்பண்ணுவான் (ஏசாயா 5:20). பாவத்திற்கு நல்ல வண்ணசாயம் பூசி, அதைக் கவர்ச்சிகரமானதாகத் தோன்றப்பண்ணி, பாவத்தையே நீங்கள் நேசிக்கும்படியாக மாற்றிவிடுவான் (2 கொரிந்தியர் 11:14-15). உண்மையான பக்தியை மாற்றிப்போட்டு, பக்திக்குத் தவறுதலான விளக்கங்களைக் கொடுத்து, அதைக் கேலிச்சித்திரமாக்கி, நீங்கள் தேவபக்தியை வெறுக்கும்படியாகச் செய்துவிடுவான். பொல்லாதவைகளில்தான் அதிக இன்பம் இருப்பது போலக் காண்பிப்பான்; ஆனால், அதிலுள்ள விஷத்தன்மையை நீங்கள் காணாதபடிக்கு மறைத்துவிடுவான். சிலுவையின் பாதையை மிகவும் கடினமானதாக உங்கள் கண்களுக்கு முன்பாகக் காண்பித்து, அதினால் அடையக்கூடிய நித்திய கிரீடங்களை மறைத்துவிடுவான். தனக்குச் சேவை செய்தால், சகல இன்பத்தையும் தருவதாக கிறிஸ்துவிடம் சொன்னது போலவே உங்களிடமும் கூறுவான் (மத்தேயு 4:8). ஒருவிதமான தேவபக்தியின் வேஷத்தைத் தரித்துக்கொள்ளச் செய்து (2 தீமோத்தேயு 3:5), பக்தியின் உண்மையான வல்லமையை மறந்துவிடுவதற்குச் சாத்தான் உங்களுக்கு உதவியும் செய்வான். உங்கள் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் நீங்கள் இருக்கும் இத்தருணத்தில், "இப்போதே தேவனுக்குச் சேவை செய்ய என்ன அவசரம்? வாழ்க்கையை இப்போது அனுபவித்துக்கொள். சற்று வயதான பிறகு தேவனுக்குச் சேவை செய்யலாம்" என உங்களுக்கு யோசனை கூறுவான். ஆனால், வாழ்வின் இறுதிகட்டம் வந்த பிறகோ, "இனி உன்னால் ஒன்றும் செய்ய முடியாது; காலதாமதம் ஆகிவிட்டது" எனக்கூறி உங்களைப் பார்த்து நகைப்பான். வாலிபர்களே, ஏமாந்துபோகாதிருங்கள்.
இந்த பயங்கரமான எதிரியிடமிருந்து வரக்கூடிய ஆபத்துக்களைக் குறித்து உங்களுக்கு ஒன்றும் தெரியாதிருக்கிறது. உங்களுடைய அறியாமையை எண்ணித்தான் நான் மிகவும் கலக்கமடைகிறேன். உங்களைச் சுற்றி வைக்கப்பட்டிருக்கிற ஆபத்தான பள்ளங்களையும், வழுக்கிவிழக்கூடிய சறுக்கலான இடங்களையும், கண்ணிகளையும் அறியாதவர்களாகக் குருடரைப் போல வாழ்க்கைப் பாதையில் நடந்துசென்று கொண்டிருக்கிறீர்கள் (லூக்கா 6:39).
உங்களுடைய எதிரி மிகவும் வல்லவன். அவன் உலகத்தின் அதிபதி என அழைக்கப்படுகிறான் (யோவான் 14:30). இயேசுக்கிறிஸ்துவின் ஊழியக்காலம் முழுவதும் அவரை எதிர்த்துக்கொண்டேயிருந்தான். ஆதாம் ஏவாளை ஏமாற்றி, அவர்களை விலக்கப்பட்ட கனியைப் புசிக்கும்படியாகச் செய்து, அதன் மூலமாக உலகத்துக்குள் பாவத்தை வரவழைத்துவிட்டான் (ஆதியாகமம் 3). தேவனுடைய இருதயத்துக்கு ஏற்றவனாகிய தாவீதைக்கூட சோதனைக்குட்படுத்தி, தாவீது தனது வாழ்நாளின் இறுதிப்பகுதி முழுவதையும் சஞ்சலத்தோடு கழிக்கும்படியாகச் செய்துவிட்டான் (2 சாமுவேல் 11). கர்த்தராலே தெரிந்தெடுக்கப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவையும் சோதனைக்குட்படுத்தி, கர்த்தரை மறுதலிக்கும்படியாகத் தூண்டிவிட்டான் (மத்தேயு 26:69-75). இளைஞர்களே! இந்த விரோதியைச் சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள்.
உங்கள் எதிரி ஓயாதவன். அவன் தூங்குவதே இல்லை; எவனை விழுங்கலாமோ என ஓயாமல் அலைந்துகொண்டிருக்கிற கெர்ச்சிக்கிற சிங்கம்போல வகைதேடிச் சுற்றித்திரிகிறான் (1 பேதுரு 5:8). எப்போதும் பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்துகொண்டே இருக்கிறான் (யோபு 1:7). உங்களுடைய ஆத்துமாவைக் குறித்து நீங்கள் வேண்டுமானால் அலட்சியமாக இருக்கலாம்; ஆனால், சாத்தான் அப்படியில்லை. உங்கள் ஆத்துமாவைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள ஓயாமல் பாடுபடுகிறான். தன்னைப்போலவே நீங்கள் ஒவ்வொருவரும் அதிகக் கேடான நிலையை அடைய வேண்டுமென விரும்பி, உங்களை அவனுடையவர்களாக்கிக்கொள்ள முயற்சி செய்துகொண்டேயிருக்கிறான். இந்த சத்துருவைக் குறித்துக் குறைவாக மதிப்பிட்டுவிடாதீர்கள்.
உங்களுடைய எதிரி தந்திரமானவன். ஏறக்குறைய ஆறாயிரம் வருஷங்களாக அவன் மனிதர்களுடைய இருதயத்தை ஆராய்ந்துகொண்டேயிருக்கிறான். ஆகவே இந்த விஷயத்தில் அவன் மிகவும் அனுபவசாலி என்பதை மறந்துவிடாதீர்கள். மனித இருதயத்தின் பலவீனங்கள், தந்திரமான எண்ணங்கள், முட்டாள்தனங்கள் இவை யாவும் சாத்தானுக்குத் தெளிவாகவே தெரியும். மனித இருதயங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய விதவிதமான சோதனைகளை அவன் ஏராளமாக உண்டுபண்ணுகிறான். அவனுக்கு மறைவாக எந்த இடத்திலும் நீங்கள் போய் ஒளிந்துகொள்ள முடியாது. பெரிய பட்டணங்களுக்குப் போங்கள், அவன் அங்கேயும் இருப்பான்; அல்லது பாலைவனத்திற்கே போங்கள், அவன் அங்கேயும் இருப்பான். குடிகாரர்கள் மத்தியிலும், பரியாசம்பண்ணுகிறவர்களின் மத்தியிலும் நீ போய் உட்கார்ந்திருந்தால் அவன் அங்கேயிருந்து உனக்கு உதவிகள்கூட செய்வான். திருச்சபைக்குச் சென்று பிரசங்கம் கேட்க நீ உட்கார்ந்திருக்கும்போது உனது கவனத்தைத் திசைதிருப்பும்படியாக அங்கேயும் வருவான். இந்த விரோதியைக் குறித்துத் தாழ்வாக எண்ணிவிட முடியுமா?
இளைஞர்களே, இந்த விரோதியை நீங்கள் சற்றும் நினைத்துப்பார்க்காவிட்டால்கூட அவன் உங்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறான். உங்களை அழித்துப்போடுவதையே அவன் குறியாகக் கொண்டு, மும்முரமாக வேலை செய்துகொண்டிருக்கிறான். அவனுடைய போராட்டத்திற்கு வெகுமதியாக உங்களைப் போன்ற வாலிபர்களின் ஆத்துமாவையே எதிர்பார்த்து உழைக்கிறான். ஒன்று நீங்கள் தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள் அல்லது அவருடைய சாபத்தைப் பெறுவீர்கள் என்பதை அறிந்திருக்கும் அவன், உங்களைத் தன்னுடைய ராஜ்யத்திற்கு உரியவர்களாக ஆக்கிக்கொள்வதற்காகப் பலவிதமான உபாய தந்திரங்களை உங்கள் வாழ்வின் ஆரம்பகால முதலே செய்ய ஆரம்பித்துவிடுகிறான். விளையும் பயிரை முளையிலேயே கிள்ளிவிட்டால் தனக்கு வேலை மிகவும் சுலபமாக முடிந்துவிடும் என்பதை நன்றாக அறிந்துவைத்திருப்பவன் சாத்தான். எலிசா தீர்க்கதரிசியின் வேலைக்காரனுடைய கண்கள் திறக்கப்பட்டதுபோல உங்களுடைய கண்களும் திறக்கப்படுமானால் எவ்வளவு நன்மையாயிருக்கும்! (2 ராஜாக்கள் 6:13-17). உங்களுடைய சமாதானத்தைக் குலைத்துப்போடுவதற்குச் சாத்தான் என்னென்ன திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறான் என்பதை நீங்கள் பார்க்கக்கூடுமானால் எவ்வளவு நன்றாயிருக்கும்! நீங்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, என்னால் உங்களை எச்சரிக்காமல் இருக்க முடியாது. உங்களை எச்சரிக்காமல் இருக்கத் துணியமாட்டேன். உங்களைச் சாத்தானின் பிடியிலும், அவனுடைய வஞ்சக வலையிலும் விழுவதற்கு விடமாட்டேன். எனவே நான் உங்களை எச்சரிக்கத்தான் வேண்டும். நான் உங்களுக்குப் புத்தி சொல்லத்தான் வேண்டும்.
உ. துன்பத்திலிருந்து காப்பாற்றுதல்
நீங்கள் அடையப்போகிற துயரத்திலிருந்து உங்களைக் காப்பாற்றி, தேவனுக்குரியவர்களாக்க வேண்டுமானால் உங்களுக்குப் புத்திமதி சொல்ல வேண்டியது அவசியம். பாவமானது அனைத்துத் துயரங்களையும் பிறப்பிக்கிறது. வாலிப வயதில் செய்கிற பாவந்தான் ஒருவனுக்கு அளவிடமுடியாத துயரங்களைக் கொண்டுவந்து சேர்க்கிறது. வாலிபப் பிராயத்தில் முட்டாள்தனமாகச் செய்த காரியங்கள், வீணாகக் கழித்த காலங்கள், செய்த தவறுகள், அவன் கொண்டிருந்த தவறான நட்புகள், ஆத்துமாவிலும் சரீரத்திலும் தனக்குத்தானே அவன் வருவித்துக்கொண்ட கேடுகள், சந்தோஷமாக இருப்பதற்குக் கொடுக்கப்பட்ட தருணங்களைத் தூக்கியெறிந்தது, உபயோககரமான வாய்ப்புகளை அலட்சியப்படுத்தியது; இவையெல்லாம் ஒரு மனிதனுடைய வாழ்நாளின் இறுதிப்பகுதிகளில் அவன் உள்ளத்தை மிகவும் குத்துகிறது. அதனால் அவன் உள்ளத்தில் நிறைந்த கசப்புகள் காணப்படுகின்றன. கடந்துபோன தனது வாலிப வாழ்க்கையை எண்ணி அவமானத்தினாலும் வெட்கத்தினாலும் தன்னைத்தானே கடிந்துகொள்ளுகிறவனாக வாழ்நாளின் எஞ்சிய பகுதிகளைக் கழித்துப்போடுகிறான்.
வாலிப நாட்களில் செய்த தவறுகளினாலே பலவித நோய்களுக்கு ஆளாகி உடல்நலக் குறைவு ஏற்பட்டதைக் குறித்துச் சில மனிதர்கள் உங்களுக்குச் சொல்லக்கூடும். எலும்புகள் வரைக்கும் வியாதியின் கொடூரம் தாக்கி, வாழவே வெறுத்துப்போனவர்களாக அவர்கள் வாழ்ந்துகொண்டிருப்பதைக் காணலாம். வாலிப வயதில் சரீர பலத்தையெல்லாம் வீணாக்கியதால் இப்போது பலமிழந்து, வெட்டுக்கிளியைக்கூடத் தூக்கியெறிய முடியாத பலவீன நிலையில் அவர்கள் காணப்படுவார்கள். வயதாவதற்கு முன்னாலேயே அவர்களுடைய கண்களின் பார்வை குன்றிவிடுகிறது. அவர்களுடைய பெலனெல்லாம் அற்றுப்போகிறது. வயதாவதற்கு முன்னாலேயே பலம் இழந்துபோய்த் தங்கள் சரீரம் அழிந்துகொண்டிருப்பதைக் கண்டு கலக்கமடைவார்கள். இப்படியான கசப்பான பாத்திரத்திலே பானம்பண்ணும்படியான நிலைமையை அவர்களே வருவித்துக்கொண்டார்கள்.
சோம்பேறித்தனத்தினால் ஏற்பட்ட விளைவுகளைக் குறித்துச் சிலபேர் உங்களுக்குச் சொல்லக்கூடும். படிப்பதற்குக் கிடைத்த பொன்னான காலத்தை அவர்கள் அலட்சியப்படுத்திவிட்டார்கள். தங்களுடைய மனதும் இருதயமும், அறிவையும் ஞானத்தையும் பெற்றுக்கொள்ளப் பக்குவமாயிருந்த காலத்திலே அதை அடைந்துகொள்ளாமல் வாலிப நாட்களை வீணாகக் கழித்துப்போட்டார்கள். இப்போது காலம் கடந்துவிட்டது. உட்கார்ந்து படித்துக் கற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை; நேரம் கிடைத்தாலும் கற்கின்ற வலிமை போய்விட்டது. இழந்துபோன காலங்களை என்ன கொடுத்தாலும் திரும்பப் பெற முடியாது; இதுவும் கசப்பானதாக இருக்கிறது.
சரியான பாதையைத் தேர்ந்தெடுக்கத் தவறியதால் ஏற்பட்ட துயரங்களைக் குறித்து இன்னும் சிலபேர் சொல்லக்கூடும். அதன்காரணமாக அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதுமாகத் துயரப்பட நேர்ந்ததைக் காணலாம். அவர்கள் தங்கள் சுய இஷ்டத்தின் பிரகாரம் தங்கள் பாதையை வகுத்துக்கொண்டார்கள். யாருடைய ஆலோசனையையும் அவர்கள் கேட்கவில்லை. தவறானவர்களோடு அவர்கள் ஏற்படுத்திக்கொண்ட பழக்கவழக்கங்கள் அவர்களுடைய சந்தோஷத்தையே அழித்துவிட்டது. தங்களுக்குப் பொருத்தமில்லாத ஒரு தொழிலை அல்லது வாழ்க்கையைச் சிலர் தேர்ந்தெடுத்திருக்கலாம்; அதை இப்போதுதான் உணருகிறார்கள். காலம் கடந்த பிறகுதான் அவர்கள் தெளிவாகப் பார்க்கத் தொடங்குகிறார்கள். இப்போது தெரிந்தாலும் அதை மாற்றிக்கொள்ள முடியாத சிக்கலான நிலைமை உருவாகிவிட்டதே; இதுவும் ஒரு கசப்பான பானமாக இருக்கிறது.
இளைஞர்களே! நீங்கள் வாலிப வயதின் இச்சையினால் பாரமடையாமல் சமாதானமுள்ள மனசாட்சியை உடையவர்களாயிருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அவைகள் உங்கள் இருதயத்தை மிகவும் ஆழமாகக் காயப்படுத்திவிடுமே! மனிதனின் உற்சாகத்தையே கொன்றுவிடக்கூடிய கொடிய விஷமுள்ள அம்புகளல்லவா அவை! ஆத்துமாவை ஊடுருவக்கூடிய இரும்பு அவை! உங்களைக் குறித்து நீங்களே இரக்கம் பாராட்ட வேண்டியதாயிருக்கிறது. கர்த்தரை வாலிப நாட்களிலே தேடுங்கள்; அப்போதுதான் அநேகம் கசப்பான கண்ணீர்களைத் தவிர்க்கலாம்.
இந்த உண்மையை யோபு அறிந்திருந்தார். "மகா கசப்பான தீர்ப்புகளை என்பேரில் எழுதுகிறீர்; என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கப்பண்ணுகிறீர்" (யோபு 13:26) என்று அவர் சொல்லுகிறார். அதைப் போலவே அவருடைய நண்பன் சோப்பாரும், "அவன் எலும்புகள் அவனுடைய பாலவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, அவனோடேகூட மண்ணிலே படுத்துக்கொள்ளும்" (யோபு 20:11) என்று கூறுகிறார். தாவீதுங்கூட இதை உணர்ந்திருந்தார். கர்த்தரிடம் அவர் வேண்டுகிறார்: "என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்" (சங்கீதம் 25:7).
இதை நன்கு உணர்ந்திருந்த ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த தியடோர் பெஸா (Theodore Beza) என்கிற சீர்திருத்தவாதி தமது உயிலில் இவ்வாறு எழுதி வைத்திருந்தார்: "தேவனின் பெரிதான கிருபையால் 16 வயதிலேயே உலகத்திலிருந்து தேவனுக்காகப் பிரித்தெடுக்கப்பட்டதையே நான் மிகப்பெரும் சொத்தாகக் கருதுகிறேன்."
நீங்கள் போய் எந்த விசுவாசியிடமும் கேளுங்கள்; அவர்களும் இதைப் போலத்தான் கூறுவார்கள். "ஓ! நான் என்னுடைய இளமை நாட்களை மீண்டுமொரு முறைகூட வாழுவேன்", "நல்லவேளையாக நான் என் இளமைக்காலத்தை ஒழுக்கத்தோடு செலவிட்டேன்; நான் என்னுடைய வாழ்நாளின் ஆரம்பத்திலேயே தீய பழக்கவழக்கங்கள் என்னை அணுகிவிடாதபடி பாதுகாத்துக்கொண்டேன்", இப்படியெல்லாம் கூறுவார்கள். ஆரம்பத்தை அவர்கள் சரியாகத் தொடங்கினபடியால்தான் விசுவாச வீரர்களாக அவர்களால் வாழ முடிந்தது என்பதை அனைவருமே ஒத்துக்கொள்ளுவார்கள்.
இளைஞர்களே, வாழ்நாளின் முடிவில் வருத்தமடையாதபடிக்கு நான் உங்களைக் காப்பாற்ற விரும்புகிறேன். வாழ்நாள் முடிந்தபின்தான் நரகம் எவ்வளவு கொடியது என்கிற உண்மை தெரியவரும். தக்க நேரத்திலே புத்தியடைந்து கொள்ளுங்கள். இளமையில் விதைப்பதை முதுமை அறுவடை செய்யும். உங்கள் வாழ்க்கையிலேயே அருமையான பருவத்தைத் தீயவைகளுக்குக் கொடுத்துவிட்டு, அதன்காரணமாக முதுமையில் அவதிப்படாதிருக்க நாடுங்கள். நீதியின் விதைகளை விதையுங்கள். உங்கள் இருதயமாகிய நிலத்தை உழுது பண்படுத்துங்கள். முட்களுக்கிடையே உங்கள் விதை வளராது; ஆகையால் முட்களை அகற்றிப்போடுங்கள்.
பாவம் இப்போது உங்களுக்கு மிகவும் சிறியதாகத் தோன்றலாம். உங்கள் வாயிலிருந்து சுலபமாக வரும் வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால் நாட்கள் போகப்போக நீங்கள் அதைத் திரும்பத் திரும்பச் சந்திக்க நேரிடும். அதன் வல்லமை அதிகமதிகமாகக் கிரியை செய்யத் தொடங்கும். அதை நீங்கள் விரும்பாவிட்டாலும் அது உங்களை வந்து தொடர்ந்து தாக்கிக்கொண்டேயிருக்கும். நாள்பட்ட காயங்கள் ஆறாத ஆழமான வடுக்களை ஏற்படுத்திவிடும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே ஈரமான இடத்திலே பதிந்த மிருகங்களின் காலடித்தடங்கள் அழியாத தடயங்களை ஏற்படுத்தியிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வியக்கிறார்களல்லவா? அதுபோல, காலங்கள் பல மறைந்துபோனாலும் இளமையில் செய்த பாவத்தின் அடிச்சுவடு நினைவில் மறையாது நின்று மிகுந்த துயரத்தைக் கொடுக்கும். அதிலிருந்து தப்புவதற்காக உங்கள் வாலிப நாட்களைக் காத்துக்கொள்ளுங்கள்.
"அனுபவங்கள் பாடம் கற்பிக்கிறது" என்பது ஒரு வழக்கச்சொல். தீமையான அனுபவங்களின் மூலமாக நீங்கள் ஒருபோதும் பாடம் கற்றுக்கொள்ளாதபடிக்குத் தப்ப வேண்டுமென்றிருக்கிறேன். தொடர்ந்து பிடிக்கின்ற இளவயதின் பாவங்களுக்கு விலகியோடித் தப்பித்துக்கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் புத்தி சொல்லுவதற்கு இதுதான் கடைசி காரணம்.





