ஆதியாகமம் 19:8 : "லோத்து தூதர்களைக் காப்பாற்றுவதற்காகத் தன் சொந்த மகள்களை மோசமான நடத்தையுள்ள ஒரு குழுவினருக்குக் கொடுக்க முன்வந்த செயல் பெண்களை இழிவாக நடத்துகிற செயல் அல்லவா?"
தொடக்கத்தில் நாம் குறிப்பிட்டபடி, இந்தக் காரியமானது அங்கே என்ன நடந்ததோ அதை எவ்விதப் பாரபட்சமும் இன்றி வெளிப்படையாகவும் உண்மையாகவும் வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சோதோமின் ஆண்கள் கூட்டம், அந்நிய ஆண்களுடன் தவறாக நடக்க விரும்பி லோத்தின் வீட்டைச் சுற்றி வளைத்துக்கொண்டனர். தன்னைத் தேடிவந்த இரண்டு தூதர்களுக்குப் பதிலாக, லோத்து தனது சொந்த மகள்களை வழங்க முன்வந்த செயல் சரியானதா? நிச்சயமாக இல்லை. இந்தச் சம்பவத்தில் லோத்து ஒரு தவறான பார்வையைக் கொண்டிருந்தான்; அதாவது அவன் நற்குணத்தில் தரம் தாழ்ந்தவனாகவும், உலகத்தாரைப் போலவும் நடந்துகொண்டான். ஆனால் அவனுடைய வீட்டிற்கு விருந்தினராக வந்த கர்த்தருடைய இரண்டு தூதர்கள், லோத்துவையும் அவனது இரண்டு மகள்களையும் அந்த ஊர் ஆண்களிடமிருந்து பாதுகாத்துக்கொண்டனர். தன்னையும் தன் வீட்டையும், தன் வீட்டுக்கு வந்த விருந்தினரையும் பாதுகாக்கும் பொருட்டே, இவ்விதமான முடிவை அவன் எடுத்தான். குறிப்பாக அந்த ஊர் ஆண்களைச் சமாதானப்படுத்தும் பொருட்டு இவ்விதமான வார்த்தைகளைப் பேசினான். ஆயினும் அவன் தன் சொந்த மகள்களை வழங்க வேண்டும் என்று எண்ணியது தவறான தீர்மானமே ஆகும்.
இருப்பினும் கர்த்தருடைய தூதர்கள் லோத்தின் செயலை நிராகரித்து, தங்களுடைய அதிகாரத்தால் அதை வேறு விதமாகக் கையாண்டார்கள். இதன் மூலம் லோத்தின் இத்தகைய தவறான நடத்தையைத் தேவன் ஏற்கவில்லை என்பதைக் காண்கிறோம். மேலும், அந்தப் பாவிகளைக் குருடாக்கியதன் மூலம் லோத்தின் மகள்களைப் பாதுகாக்கத் தேவையான காரியங்களை அவர் செய்தார் என்பதையும் இது காட்டுகிறது. ஒரு பூமிக்குரிய தந்தை தன் சொந்த மகள்களைப் பாதுகாக்கத் தவறினாலும் கூட, தேவன் அந்தப் பெண் பிள்ளைகளைப் பாதுகாத்தார்.
"இந்தக் காரியங்கள் நடந்த பின்னர், லோத்து தனது சொந்த மகள்கள் கர்ப்பந்தரிக்கக் காரணமானான். இதுவும் பெண்களைத் தவறாகக் கையாளுகிற செயல் அல்லவா?"
ஆதியாகமம் 19:31-38 வரையுள்ள வசனங்கள் இந்தச் சம்பவத்தின் காரண காரியங்களைத் தெளிவாக விளக்குகின்றன. லோத்தின் மகள்கள், தங்களைத் திருமணம் செய்து, சந்ததியை உண்டாக்குவதற்கு (அதாவது குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கு) அந்த இடத்தில் எந்த ஆண்களும் இல்லை என்று நம்பினர். ஏனெனில் அவர்கள் சோதோம் நகரின் அழிவைக் கண்டவர்கள். அங்கே எல்லாரும் இறந்திருக்கலாம் என்றும், பூமியில் எஞ்சியிருக்கும் மக்கள் தாங்கள் மட்டுமே என்றும் நம்பியிருக்கலாம். மேலும், இந்த இளம் பெண்கள் தாங்கள் அதுவரைக்கும் வாழ்ந்த நகரத்தின் பாவ கலாச்சாரத்தின் தாக்கத்தினாலும் இந்த முடிவை எடுத்திருக்கலாம். சோதோம் மக்களின் இயல்புக்கு மாறான, ஒழுக்கக்கேடான பாலியல் பழக்கங்களுக்காகவே தேவன் அவர்களைத் தண்டித்தார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இருப்பினும், இவ்விரு பெண்களும் தங்களது குடும்பத்தின் வம்சம் அழிந்துபோகாமல் காப்பாற்றத் தவறான வழியில் முயன்றனர்.
இங்கே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான காரியம், தந்தையோடு உடலுறவு கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் அந்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கே ஏற்பட்டது; அவர்களே இதற்கான முயற்சியைத் தொடங்கினார்கள். லோத்து தனது சொந்த மகள்களுடன் உடலுறவு கொண்டதற்கான காரணம் என்ன? அவருக்கு ஏற்கனவே மதுபானம் குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்தக் குடிப்பழக்கத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும்படி அவ்விரு வாலிபப் பெண்களும் சதிசெய்தார்கள். லோத்து ஏற்கனவே குடிகாரனாக இருந்ததால், தன் மகள்கள் கொடுத்த மதுபானத்தை விருப்பத்துடன் குடித்தான். அவனுக்கு மேலும் மேலும் மதுபானம் கொடுக்கப்பட்டதால் அவன் தன் கட்டுப்பாட்டையும் பொது அறிவையும் இழந்தான் (ஆதியாகமம் 19:30-38). மேலும் தான் என்ன செய்கிறான் என்று அவனுக்கே உணர்வில்லாத நிலை இருந்தது. இருப்பினும் இது அவன் செய்த பாவத்தை எந்த விதத்திலும் நியாயப்படுத்தாது. ஒரு நபர் அளவுக்கு அதிகமாக மதுபானம் குடிக்கும்போது, அவரால் சரியான காரியங்களைச் செய்யத் தீர்மானிக்க முடியாது. நாம் அனைவரும் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை இது.
மேலும், மோசேயினால் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்திலும் இத்தகைய முறை தவறிய உறவுகள் தடைசெய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது; தேவன் அங்கீகரிக்காத ஒன்றாகவே இது இருக்கிறது (லேவியராகமம் 18:6-26). இத்தகைய உறவுகள் தேவனுக்கு முன்பாக அருவருப்பான செயலாகவே கருதப்படுகிறது.





