உங்களுடைய நிர்வாணத்தை வெளிப்படுத்துவது போன்று மோசமானதே உங்கள் உருவத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தும் ஆடை அணிவதும் ஆகும். இத்தகைய இறுக்கமான ஆடைகள் பாலியல் உணர்வுகளைத் தூண்டுகின்றன என்பது ஊரறிந்த உண்மையாகும். இதை இந்த உலகம் நன்றாக அறிந்திருக்கிறது; இதை இல்லை என்று அது மறுக்கவும் செய்யாது. இறுக்கமான ஆடை அணிந்திருக்கும் ஒரு பெண், தன் உடலின் வளைவு நெளிவுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தும்போது, அதைக் காண்கிற ஓர் ஆணின் ஆன்மாவைத் துன்புறுத்துகிறாள். இத்தகைய இறுக்கமான ஆடைகள் நிர்வாணத்தையே வெளிப்படுத்துகின்றன என்று கூறுவது மிகையல்ல. இந்த உலகம் எதை இறுக்கமான ஆடை என்று அழைக்கிறது? எந்த ஆடை உடலின் அங்க வடிவமைப்பை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறதோ, அதையே இறுக்கமான ஆடை என்று அழைக்கிறது. இத்தகைய ஆடைகள் நிச்சயமாகவே தேவனின் நோக்கத்தை மீறுகின்றன. எனவே, தங்களை வேதபக்தியுள்ளவர்கள் என்று அழைத்துக்கொள்கிற ஒவ்வொரு பெண்ணும், தனது உருவமைப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தும் இறுக்கமான ஆடைகளை, 'எங்களுடைய வேதம் இதைத் தடை செய்கிறது' என்று கூறி தவிர்த்துவிட வேண்டும்.
இறுக்கமான ஸ்வெட்டர்கள், பனியன்கள், பின்னலாடைகள், உடலோடு ஒட்டிக் கொள்ளும் மெல்லிய துணியிலான ஆடைகள் ஆகியவற்றைப் பெண்கள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். உடலோடு ஒட்டிக்கொள்ளும்படி இல்லாமல் தளர்வான ஆடைகளாக இருந்தால், இவ்விதமான ஆடைகளை அணிவதில் பிரச்சினை இல்லை.
தறிகளில் நெய்யப்பட்ட துணியால் செய்யப்பட்ட ஆடைகள் மற்றும் சற்றுத் தடிமனான துணியால் செய்யப்பட்ட ஆடைகள் உங்களுக்குப் பொருத்தமாக இருப்பது மட்டுமின்றி, உங்கள் உடலின் வடிவத்தையும் மிகவும் சிறப்பாக மறைக்கும். குறிப்பாக, மார்பகங்கள் பெரியதாக இருக்கிற பெண்களுக்கு இத்தகைய ஆடைகள் மிகவும் பாதுகாப்பானவை என்பதை கவனத்தில் வைத்துக்கொள்வது மிகவும் சிறந்ததாகும். ஒரு பெண் தனது கவனக்குறைவால் இறுக்கமாக அணிகிற ஆடையானது, ஓர் ஆணை வரம்புமீறிய பாலியல் உணர்வைத் தூண்டக்கூடிய வழிகளில் ஒன்றாகும். மேலும் அவள் உண்மையாகவே தனது உடலை வெளிப்படுத்துவதற்காக அணிகிறாளா அல்லது அறியாமல் மெல்லிய துணியால் ஆன இறுக்கமான ஆடைகளை அணிகிறாளா என்பது முக்கியமல்ல; ஏனெனில் இவ்விதமாக ஆடை அணிவது நிச்சயமாகவே பிறரைப் பாதிக்கும் என்பது உலகம் அறிந்த உண்மை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்வெட்டரும் இறுக்கமான பாவாடையும் அணிந்த பெண்ணைப் பார்ப்பதால் கிடைக்கிற இன்பத்தைப் பற்றி இந்த உலகம் ஒரு பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டிருந்தது. இருபத்தைந்து ஆண்டுகள் கடந்தபின்னரும், இப்போதும் இத்தகைய ஆடை அணியும் பெண்களைக் கண்டு ஆண்கள் உணர்ச்சிப் பெருக்கால் பாடுகிற பாடல்களுக்குப் பஞ்சமேயில்லை. மனிதனின் இயல்பு இன்றளவும் மாறவில்லை என்பதே உண்மை.
ஒரு மனிதன் ஒரு பெண்ணைப் பார்க்கும்போது, அவன் அவளுடைய ஆடையைப் பார்க்க வேண்டுமே தவிர, அந்த ஆடைகளுக்குள் இருக்கும் உருவத்தையும் வடிவத்தையும் பார்க்கக்கூடாது. ஸ்வெட்டர்கள், பனியன்கள் மற்றும் பின்னலாடைகள் ஆகியவற்றின் இயல்பான தன்மையே உங்கள் உடலோடு ஒட்டிக்கொண்டு, உங்களது வடிவத்தையும் உருவத்தையும் வெளிப்படுத்திக் காண்பிப்பதுதான். ஒரு பெண்ணுடைய உடலின் வடிவமும் அமைப்பும் ஆடையால் மூடப்பட்டிருந்தாலும்கூட, அவை ஓர் ஆணின் கண்களை ஈர்க்கக்கூடியவை. மேலும், ஒரு பெண் ஆடையின்றி இருக்கும்போது எவ்விதமான உணர்வுகளைத் தூண்டுகிறாளோ, அவ்விதமான இயல்புக்கு மாறான உணர்வுகளையே இறுக்கமான ஆடை அணிந்திருக்கும்போதும் தூண்டிவிடுகிறாள் என்று ஆண்களே கூறுகிறார்கள். ஒரு பெண்ணானவள் ஸ்வெட்டரோ அல்லது பனியனோ அல்லது பின்னலாடையோ அணிவது கூடவே கூடாது என்று நான் கூறவில்லை. அவை இறுக்கமாகவும் உடலமைப்பை வெளிப்படுத்தும் விதமாகவும் இல்லாவிட்டால், இவ்விதமான ஆடைகளை அணிவதில் தவறில்லை.
நான் சொல்ல வருவது என்னவென்றால், பெரும்பாலான அமெரிக்கப் பெண்கள் (இன்றைய நாட்களில் உலகம் முழுவதும் உள்ள பெண்கள்) வழக்கமாக அணியக்கூடிய ஸ்வெட்டர்கள் மற்றும் பின்னலாடையால் ஆன மேல் சட்டைகள் எப்போதும் மிகவும் இறுக்கமாகவே இருக்கின்றன. அவர்கள் தற்போது அணிகிற அல்லது வழக்கமாக அணிகிற ஆடையின் அளவைக் காட்டிலும் சற்றுப் பெரிய அளவுகளில் தங்கள் ஸ்வெட்டரை அணிந்தால் அது அவர்களுக்குச் சிறப்பாக அமையும். மிகவும் சிறிய மார்பகங்களைக் கொண்டிருக்கிற பெண்கள் தங்கள் உருவத்தை மறைக்கும் அளவுக்குத் தளர்வான ஸ்வெட்டர்களை அணிந்தால் நன்றாக இருக்கும். ஆனால் மார்பகங்கள் பெரிதாக இருந்தால் இது பார்ப்பதற்குச் சற்றுச் சங்கடத்தை உருவாக்கிவிடும். பெரிய அளவிலான மார்பகங்களைக் கொண்டிருக்கிற பெண்கள், துளைகள் கொண்ட அல்லது பின்னல் துணிகளால் ஆன மேலாடைகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இத்தகைய பெண்கள் ஸ்வெட்டர்களை அணியாமல் தங்கள் உருவத்தை மறைத்துக்கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆகவே இந்தக் காரியங்களைக் குறித்து நான் இன்னும் கடினமாக வலியுறுத்த விரும்பவில்லை. இதைக் குறித்த காரியங்களில் அவர்களே விவேகத்துடன் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
பெண்கள், குறிப்பாக பெரிய மார்பகங்களைக் கொண்டிருக்கிற பெண்கள், ஓர் ஆணின் பார்வையிலிருந்து அல்லது ஓர் ஆணின் விமர்சனப் பார்வையோடு தங்களை உற்றுநோக்க வேண்டும். பெண்களின் பெரிய மார்பகங்கள் ஒரு சிறிய கணப்பொழுதில் ஆண்களின் சிந்தையைக் கவர்ந்துவிடும். பாவத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு பெண் தேவனைப் பிரியப்படுத்தி, ஆண்களிடம் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டுமென்றால், அவள் தனது உருவத்தையும் வடிவத்தையும் மறைக்கும் விதத்தில் ஆடை அணிந்துகொள்ள வேண்டும். எனவே, பெண்கள் நெசவுத் துணியால் ஆன, சற்று தடிமனான பொருத்தமான மேலாடைகளை அணிய வேண்டும். குளிர்காலங்களில் ஸ்வெட்டரை அணிய விரும்பினால், அதற்கு மேலாகப் பருத்தி ஆடைகளை அணிந்து கொள்ளலாம். இது உடலுக்குச் சற்று கதகதப்பைக் கொடுக்கும். இது பகட்டாகவோ அல்லது ஆடம்பரமாகவோ இராது என்பது உண்மைதான்; ஆயினும், இவை நமக்கு முக்கியமல்ல, கண்ணியமாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். நான் இந்த ஆலோசனைகளை தேவனைப் பிரியப்படுத்த விரும்புகிற தேவபக்தியுள்ள பெண்களுக்காக எழுதுகிறேன்; மாறாக உலகத்தைப் பிரியப்படுத்த விரும்புகிற பெண்களுக்காக எழுதவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
இறுக்கமான ஸ்வெட்டர்களுக்குப் பதிலாக இறுக்கமான ரவிக்கைகளைப் போட்டுக் கொள்வதன் மூலமாக, உங்கள் உடலின் வடிவமைப்பை மறைக்க வேண்டும் என்ற நோக்கத்தை நீங்கள் சிறிதளவே அடைகிறீர்கள் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். பின்னலாடைகளைக் காட்டிலும் தறியில் நெய்யப்பட்ட துணியால் ஆன ரவிக்கைகள் உங்கள் வடிவத்தைச் சிறப்பாக மறைக்கும் என்பது உண்மைதான். ஆனால், துணியால் ஆன ரவிக்கைகளும் மிகவும் இறுக்கமாக இருந்தால், அது இன்னும் மோசமான வகையில் உணர்வைத் தூண்டக்கூடியதாக இருக்கும் என்பதையும் நினைத்துக்கொள்ளுங்கள். அதிக எடை கொண்ட குண்டான பெண்கள், தங்களது எடைக்கு அல்லது உருவத்துக்கு ஏற்ற உடையை அணியாமல், தங்களது எடையைக் காட்டிலும் பத்து அல்லது பதினைந்து கிலோ குறைவாக இருப்போர் அணிகிற உடையை அணியும்போதும் இதே விதமான பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். இவர்கள் தங்களை மெலிதான உடல் வாகுடையவர்களாகக் கருதிக்கொள்வது, பெரிய அளவிலான பொருத்தமான ஆடைகளை அணிவதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. இது முட்டாள்தனமான ஒரு பெருமையைத் தவிர வேறொன்றுமில்லை. பெண்களுடைய ரவிக்கை அல்லது மேலாடையின் கீழ்ப்பக்கம் இடுப்பு வரையிலும் இறுக்கமாக இருக்கக்கூடாது. அது போதுமான அளவுக்குத் தளர்வாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும். ஓர் ஆண் உங்களைப் பார்க்கும்போது, உங்களுடைய ஆடையைப் பார்க்க வேண்டுமே தவிர, ஆடைக்குள் இருக்கிற உடலின் வடிவமைப்பைப் பார்க்கக் கூடாது. ஆகவே நீங்கள் சரியான அளவிலான ஆடையை அணிவதன் மூலமாக, உணர்ச்சிகளைத் தூண்டுகிற வண்ணமாக உங்களது உடலின் அங்க அசைவுகளையும் தோரணையையும் பிறர் காணாதவாறு தவிர்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் நான் கூறுவது என்னவென்றால், உங்களது மார்பகங்கள் பிரத்யேகமாகத் தெரியும்படியான தோரணையில் நீங்கள் நிற்க வேண்டாம். அதாவது, மார்பகங்கள் மீது உடைகளை இறுக்கமாக ஆக்குவது, இரு கரங்களையும் இடுப்பில் வைத்து நிற்பது, இரு கரங்களையும் மேலே தூக்குவது, அல்லது கொட்டாவி விடும்போது பின்பக்கமாக வளைவது போன்ற காரியங்களைச் செய்ய வேண்டாம். இது மட்டுமின்றி, அந்தக் காலத்து அரசிகள் அணிகிற ஆடைகளின் பாணியிலான, அதாவது மார்பு முதல் இடுப்பு வரையிலும் மிகவும் இறுக்கமாகவும் அதற்குக் கீழே மிகவும் அகலமாகவும் இருக்கிற ஆடைகளை அணிவதையும் நீங்கள் தவிர்த்துவிட வேண்டும்.
இவ்விதமான ஆடைகள் பெண்களின் பிற அழகைக் காட்டிலும் மார்பழகையே அதிகமாகக் காட்டும்படியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பெண்ணின் எத்தகைய காட்சிகளால் ஒரு மனிதன் கவர்ந்திழுக்கப்படுகிறான் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். மேலும் இத்தகைய காட்சிகளால் அவனது இதயமோ அல்லது கற்பனையோ தவறான வழியில் கொண்டு செல்லப்படுவதற்குச் சில விநாடிகள் மட்டுமே போதுமானது என்பதை நான் மீண்டும் உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.





