"துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்" (மத்தேயு 5:4).
பரிதாபகரமான மனித சுபாவத்திற்குத் துயரமானது அருவருப்பும் தொந்தரவு நிறைந்ததாகும். பாடு மற்றும் துக்கத்திலிருந்து நமது ஆவியானது இயல்பாகவே பின்வாங்குகிறது. சுபாவத்தின்படி நாம் சந்தோஷமும் மகிழ்ச்சியுமுடைய மக்களின் ஐக்கியத்தையே நாடுகிறோம். மறுபிறப்படையாதவர்களுக்கு நமது இந்த வேதப்பகுதி ஒரு முரண்பாடாகத் தோன்றுகிறது, ஆயினும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் செவிகளுக்கு இது இன்னிசையாகும். அவர்கள் "பாக்கியவான்கள்" (மகிழ்ச்சியானவர்கள்) என்றால், ஏன் "துயரப்படுகிறார்கள்"? அவர்கள் "துயரப்படுகிறார்கள்" என்றால், எப்படி "பாக்கியவான்களாக" இருக்க முடியும்? இந்த முரண்பாட்டிற்கான திறவுகோல் தேவனுடைய பிள்ளையிடம் மட்டுமே உள்ளது. இந்த வேதப்பகுதியை நாம் எவ்வளவு ஆழமாகத் சிந்திக்கிறோமோ, அவ்வளவாக "இந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை!" என்று வியந்துரைக்க நெருக்கப்படுகிறோம்.
'துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்' என்பது உலகத்தின் தர்க்கத்திற்கு முற்றிலும் முரண்படும் ஒரு பொன்மொழியாகும். எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் செல்வச் செழிப்பும் மகிழ்ச்சியும் உடையவர்களையே உலகம் பாக்கியவான்களாகக் கருதுகிறது. ஆனால் கிறிஸ்துவோ, ஆவியில் எளிமையுள்ளவர்களையும் துயரப்படுகிறவர்களையுமே பாக்கியவான்கள் என்று அறிவிக்கிறார். இங்கு எல்லா வகையான துயரங்களும் குறிப்பிடப்படவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. "மரணத்தை உண்டாக்குகிற லௌகீக துக்கம்" ஒன்றும் உண்டு (2கொரிந்தியர் 7:10). கிறிஸ்து வாக்களிக்கும் ஆறுதலைப் பெறுவதற்கான துயரம் ஆவிக்குரிய துயரமாக மட்டுமே இருக்க வேண்டும். பாக்கியமுள்ள அந்தத் துயரமானது, தேவனுடைய பரிசுத்தத்தையும் நன்மையையும் குறித்த தெளிவுணர்வின் விளைவாகப் பிறப்பதாகும்; இது நமது சுபாவத்தின் சீர்கேட்டையும், நமது நடக்கையின் மாபெரும் குற்றத்தையும் உணர்த்துகிறது. கிறிஸ்து தெய்வீக ஆறுதலை வாக்குப்பண்ணும் அந்தத் துயரம் என்பது, தேவனுக்கேற்ற துக்கத்தோடே நம்முடைய பாவங்களைக் குறித்துத் துயரப்படுவதாகும்.
எட்டு பாக்கியங்களும் நான்கு இணைகளாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பாடத்தைத் தொடர்ந்து சிந்திக்கும்போது இதற்கான சான்று தெளிவுபடுத்தப்படும். இந்த வரிசையில் முதலாவது, ஆவியில் எளிமையுள்ளவர்களுக்குக் கிறிஸ்து அறிவிக்கும் பாக்கியமாகும். தங்களுடைய சொந்த வெறுமையையும் ஒன்றுமில்லாமையையும் உணரும்படி விழிப்புணர்வு பெற்றவர்களையே இது விவரிக்கிறது என்பதை நாம் கண்டோம். இத்தகைய ஆவிக்குரிய ஏழ்மையிலிருந்து துயரத்திற்குச் செல்லும் மாறுதலைப் புரிந்துகொள்வது எளிது. உண்மையில், துயரமானது ஆவியின் எளிமையை மிகவும் நெருக்கமாகப் பின்தொடர்வதால், அது ஆவியில் எளிமையின் உற்ற துணையாகவே விளங்குகிறது.
இங்கு குறிப்பிடப்படும் துயரமானது, உற்றார் உறவினர்களின் மரணம், இன்னல்கள் அல்லது இழப்புகளினால் ஏற்படும் துயரத்திற்கும் மேம்பட்டதாகும். இது பாவத்தைக் குறித்த துயரமாகும். இது நமது ஆவிக்குரிய நிலையின் வறுமையை உணர்ந்து நாம் படும் துயரமும், தேவனுக்கும் நமக்குமிடையே பிரிவினையை உண்டாக்கிய அக்கிரமங்களைக் குறித்த துயரமுமாகும்; நாம் பெருமை பாராட்டிய நமது சொந்த நன்னெறிகளையும், நாம் நம்பிக்கொண்டிருந்த சுயநீதியையும் குறித்த துயரமாகும்; தேவனுக்கு விரோதமான கலகத்தையும், அவருடைய சித்தத்திற்கு எதிரான பகைமையையும் குறித்த துயரமாகும். இத்தகைய துயரமானது எப்பொழுதும் விழிப்படைந்த ஆவியின் எளிமையுடன் இணைந்தே செல்கிறது (டாக்டர் பியர்சன்).
இரட்சகர் தமது ஆசீர்வாதத்தை அறிவிக்கும் இந்த ஆவிக்குரிய நிலைக்கான ஒரு தெளிவான எடுத்துக்காட்டும் விளக்கமும் லூக்கா 18:9-14 வசனங்களில் காணப்படுகின்றன. அங்கே முற்றிலும் மாறுபட்ட இரு நிலைகள் நம் கண்முன் வைக்கப்படுகின்றன. முதலாவதாக, சுயநீதியுள்ள ஒரு பரிசேயன் தேவனை நோக்கி, "தேவனே, நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன்" என்று சொல்வதைக் காண்கிறோம். அவன் பார்வையில் இவையெல்லாம் உண்மையாகவே இருந்திருக்கலாம்; ஆயினும் இந்த மனிதன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்ட நிலையில்தான் தன் வீட்டுக்குத் திரும்பினான். அவனுடைய அழகான உடுப்புகள் கந்தையாகவும், அவனுடைய வெண்மையான ஆடைகள் அழுக்காகவும் இருந்தன, ஆனால் பெருமை பாராட்டின அவனோ அதை அறியவில்லை. பின்னர் ஒரு ஆயக்காரனைக் காண்கிறோம்; அவன் தூரத்திலே நின்று, சங்கீதக்காரனுடைய வார்த்தைகளின்படி தன் அக்கிரமங்களினால் கலக்கமடைந்து தேவனை நோக்கி நிமிர்ந்து பார்க்கவும் கூடாதிருந்தான் (சங்கீதம் 40:12). அவன் தன் கண்களை வானத்துக்கு ஏறெடுக்கவும் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு, "தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்" என்றான். அவனுக்குள் இருந்த பாவ ஊற்றை உணர்ந்தவனாக அவன் இவ்வாறு கதறினான். அந்த மனிதன் ஆவியில் எளிமையுள்ளவனாகவும் தன் பாவங்களுக்காகத் துயரப்படுகிறவனாகவும் இருந்தபடியால், நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப் போனான்.
ஆகவே, தேவனுடைய பிள்ளைகளின் மறுபிறப்பு அடைந்ததின் முதலாவது அடையாளங்கள் இவைகளே. ஆவியில் எளிமையுள்ளவனாக மாறாமலும், தன் பாவங்களுக்காக மெய்யாகவே துயரப்படுவது என்னவென்று அறியாமலும் இருக்கும் ஒருவன், ஒரு திருச்சபையின் உறுப்பினராகவோ அல்லது அதில் பொறுப்பிலிருப்பவனாகவோ இருந்தாலும், அவன் தேவனுடைய ராஜ்யத்தைக் காணவும் மாட்டான், அதில் பிரவேசிக்கவும் மாட்டான். மகத்துவமுள்ள தேவன் சிறுமைப்பட்டு நொறுங்குண்ட இருதயத்தில் வாசம்பண்ண இறங்கிவருகிறார் என்பது கிறிஸ்தவர்களுக்கு எவ்வளவு பெரிய நன்றியுணர்வைத் தரவேண்டும்! இது பழைய ஏற்பாட்டிலும் தேவனால் அருளப்பட்ட அற்புதமான வாக்குத்தத்தமாகும் (வானங்களும் கூட எவருடைய பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்லவோ, அந்த தேவன், மனிதன் கட்டும் எந்தவொரு பிரம்மாண்டமான ஆலயத்தையும் தமக்குரிய வாசஸ்தலமாகக் கொள்ளாமல், நொறுங்குண்ட இருதயத்தையே நாடுகிறார் - ஏசாயா 57:15 மற்றும் 66:2-ஐப் பார்க்கவும்)!
"துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்." பாவ உணர்வடைதல் என்று பொதுவாக அழைக்கப்படும் ஆரம்பக்கட்டத் துயரமே இங்கு முதன்மையாகக் குறிப்பிடப்பட்டாலும், துயரப்படுதல் அத்துடன் முடிந்துவிடுவதில்லை. துயரப்படுதல் என்பது சாதாரண கிறிஸ்தவ வாழ்க்கையின் நிரந்தரமான பண்பாகும். விசுவாசி துயரப்படுவதற்கு அநேக காரியங்கள் உள்ளன. அவனுடைய சொந்த இருதயத்தின் வாதையானது அவனை, "நிர்ப்பந்தமான மனுஷன் நான்" (ரோமர் 7:24) என்று கதறச் செய்கிறது. நம்மை "எளிதாய் நெருக்குகிற" (எபிரெயர் 12:1) அவிசுவாசமும், நமது தலையின் மயிரிலும் அதிகமாக நாம் செய்யும் பாவங்களும் நமக்குத் தொடர்ச்சியான துக்கத்தைத் தருகின்றன. நமது ஆவிக்குரிய வாழ்க்கையின் வறட்சியும், பயனற்ற நிலையும் நம்மைப் பெருமூச்சுவிட்டு அழச் செய்கின்றன. கிறிஸ்துவை விட்டு வழிவிலகும் நமது மனச்சாய்வு, அவரோடு நமக்குள்ள ஐக்கியத்தின் குறைபாடு, அவர்மீது நாம் கொண்டுள்ள அன்பின் ஆழமின்மை ஆகியவை நமது வீணைகளை அலரிச்செடிகளின்மேல் தூக்கிவைக்கச் செய்கின்றன.
கிறிஸ்தவர்களின் இருதயங்களைத் தாக்கும் துயரத்திற்கான வேறு பல காரணங்களும் உண்டு: தேவபக்தியின் வேஷத்தைத் தரித்துக்கொண்டு அதின் பெலனை மறுதலிக்கும் மாயமாலமான மார்க்கம் எங்கும் பரவியிருப்பது (2தீமோத்தேயு 3:5); எண்ணற்ற பிரசங்க பீடங்களில் போதிக்கப்படும் தவறான உபதேசங்களால் தேவனுடைய சத்தியத்திற்கு ஏற்படும் கொடிய கனவீனம்; கர்த்தருடைய பிள்ளைகளிடையே நிலவும் பிரிவினைகள்; மற்றும் சகோதரர்களுக்கிடையேயான வாக்குவாதங்கள் ஆகியவை. இவைகளின் கலவையானது இருதயத்தில் தொடர்ச்சியான துக்கத்தை ஏற்படுத்துகிறது. உலகில் காணப்படும் கொடிய சீர்கேடு, கிறிஸ்து அசட்டைப் பண்ணப்படுதல், மற்றும் சொல்ல முடியாத மனித துயரங்கள் ஆகியவை நமக்குள்ளே பெருமூச்சு விடச் செய்கின்றன. ஒரு கிறிஸ்தவன் தேவனோடு எவ்வளவு நெருக்கமாக வாழ்கிறானோ, அவ்வளவு அதிகமாக அவர் கனவீனப்படுத்தப்படுவதைக் கண்டு துயரப்படுவான். உண்மையான தேவப்பிள்ளைகளின் பொதுவான அனுபவம் இதுவே (சங்கீதம் 119:53; எரேமியா 13:17; 14:17; எசேக்கியேல் 9:4).
"அவர்கள் ஆறுதலடைவார்கள்." மனசாட்சியைப் பாரப்படுத்தும் குற்ற உணர்வு நீக்கப்படுவதையே கிறிஸ்து இந்த வார்த்தைகளின் மூலம் முதன்மையாகக் குறிப்பிடுகிறார். நமது இரட்சகரின் அவசரத் தேவை தமக்கு உணர்த்தப்பட்ட ஒருவருக்கு, தேவ கிருபையின் சுவிசேஷத்தைப் பரிசுத்த ஆவியானவர் தாமே பயன்படுத்துவதன் மூலம் இது நிறைவேற்றப்படுகிறது. இதன் விளைவு, கிறிஸ்துவின் பாவப்பரிகார இரத்தத்தின் புண்ணியத்தினால் உண்டாகும் இலவசமான மற்றும் முழுமையான பாவமன்னிப்பின் உணர்வாகும். இந்தத் தெய்வீக ஆறுதல் என்பது "எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானமாகும்" (பிலிப்பியர் 4:7); இது, தான் இப்போது "பிரியமானவருக்குள் அங்கீகரிக்கப்பட்டுள்ளோம்" (எபேசியர் 1:6) என்ற நிச்சயத்தைக் கொண்டிருப்பவனின் இருதயத்தை நிரப்புகிறது. தேவன் குணமாக்கும் முன் காயப்படுத்துகிறார்; உயர்த்தும் முன் தாழ்த்துகிறார். முதலாவது அவருடைய நீதியும் பரிசுத்தமும் வெளிப்படுத்தப்படுகிறது, பின்னரே அவருடைய இரக்கமும் கிருபையும் அறியப்படுகிறது.
"அவர்கள் ஆறுதலடைவார்கள்" என்ற வார்த்தைகள் கிறிஸ்தவனின் அனுபவத்தில் தொடர்ந்து நிறைவேறுகின்றன. அவன் சாக்குப்போக்குச் சொல்ல முடியாத தன் தோல்விகளைக் குறித்துத் துயரப்பட்டு, அவற்றை தேவனிடம் அறிக்கை செய்தாலும், தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி அவனைச் சுத்திகரிக்கிறது (1யோவான் 1:7) என்ற நிச்சயத்தால் அவன் ஆறுதலடைகிறான். எங்கும் தேவனுக்கு நேரிடும் கனவீனத்தைக் கண்டு அவன் பெருமூச்சு விட்டாலும், சாத்தான் என்றென்றைக்குமாக நரகத்தில் தள்ளப்படும் நாளும், "நீதி வாசமாயிருக்கும் புதிய வானமும் புதிய பூமியும்" (2பேதுரு 3:13) உண்டாகி, கர்த்தராகிய இயேசுவோடு பரிசுத்தவான்கள் ஆளுகை செய்யும் நாளும் அதிவேகமாக நெருங்கி வருகிறது என்ற அறிவினால் அவன் ஆறுதலடைகிறான். கர்த்தருடைய சிட்சிக்கும் கரம் அடிக்கடி அவன்மீது வைக்கப்படுவதாலும், "எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணப்பட்டாலும்" (எபிரெயர் 12:11), இது தனக்காக "மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது" (2கொரிந்தியர் 4:17) என்பதை உணருவதால் அவன் தேற்றப்படுகிறான்.
தேவனோடு ஐக்கியத்திலிருக்கும் விசுவாசி, அப்போஸ்தலனாகிய பவுலைப்போல, "துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாக" (2கொரிந்தியர் 6:10) இருக்க முடியும். மாராவின் கசப்பான தண்ணீரை குடிக்க அவன் அடிக்கடி அழைக்கப்பட்டாலும், அந்தத் தண்ணீர மதுரமாக்க தேவன் அருகிலேயே ஒரு மரத்தை நாட்டியுள்ளார். ஆம், துயரப்படும் கிறிஸ்தவர்கள் தெய்வீகத் தேற்றரவாளனால் இப்போதே ஆறுதலடைகிறார்கள்: தேவ ஊழியர்களின் பணிவிடையினாலும், சக கிறிஸ்தவர்களின் உற்சாகமூட்டும் வார்த்தைகளினாலும், (இவை கிடைக்காதபோது) ஆவியானவர் அவர்களின் நினைவுக் களஞ்சியத்திலிருந்து வார்த்தையின் விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்களை வல்லமையோடு அவர்கள் இருதயத்திற்குக் கொண்டுவருவதன் மூலமும் ஆறுதலடைகிறார்கள்.
"அவர்கள் ஆறுதலடைவார்கள்." சிறந்த திராட்சரசம் இறுதிக்காக வைக்கப்பட்டுள்ளது. "சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்" (சங்கீதம் 30:5). அவர் இல்லாத இந்த நீண்ட இரவு வேளையில், பாடுகளின் நாயகனாய் இருந்த அவரோடு ஐக்கியப்பட விசுவாசிகள் அழைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், "அவருடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு... அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்" (ரோமர் 8:17) என்று எழுதப்பட்டுள்ளது. மேகமில்லாத காலை வேளை உதிக்கும்போது நமக்குக் கிடைக்கும் ஆறுதலும் மகிழ்ச்சியும் எத்தகையதாயிருக்கும்! அப்போது "சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்" (ஏசாயா 35:10). அப்போது வெளிப்படுத்தல் 21:3,4-ல் உள்ள பரலோகத்தின் பெருஞ்சத்தத்தின் வார்த்தைகள் நிறைவேறும்:
"இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின."





