"ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது" (மத்தேயு 5:3).
இந்த மலைப்பிரசங்கம் எவ்வாறு தொடங்குகிறது என்பதை நாம் கவனிப்பதே மெய்யான ஆசீர்வாதமாகும். துன்மார்க்கர் மீது சாபங்களை உச்சரிப்பதன் மூலம் அல்ல, மாறாகத் தமது ஜனங்கள் மீது ஆசீர்வாதங்களை உச்சரிப்பதன் மூலமாகவே கிறிஸ்து இதனைத் தொடங்கினார். நியாயத்தீர்ப்புத் தீர்ப்பதை ஒரு அந்நிய காரியமாகக் கொண்டிருக்கும் அவருக்கு இது எவ்வளவு நேர்த்தியாய் பொருந்துகிறது! (ஏசாயா 28:21,22; ஒப்பிடுக: யோவான் 1:17). ஆனால் அடுத்த வார்த்தை எவ்வளவு விசித்திரமானது: "பாக்கியவான்கள்" அல்லது "மகிழ்ச்சியுள்ளவர்கள்" என்பவர்கள் எளிமையானவர்கள் "ஆவியில் எளிமையுள்ளவர்கள்". இதற்கு முன்பு, இவர்களைப் பூமியில் பாக்கியவான்களாகக் கருதியவர்கள் எவரேனும் உண்டோ? விசுவாசிகளைத் தவிர்த்து, இன்று அப்படி நினைப்பவர் யார்? இந்த ஆரம்ப வார்த்தைகள், தொடர்ந்து வரும் கிறிஸ்துவின் உபதேசங்களுக்கெல்லாம் எவ்வாறு ஒரு முக்கிய சுருதியாக (ஆரம்ப வார்த்தையாக) அமைகின்றன என்பதைப் பாருங்கள்: ஒரு மனிதன் என்ன செய்கிறான் என்பதல்ல, அவன் எப்படி இருக்கிறான் என்பதே மிகவும் முக்கியமானது.
"ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்." ஆவியின் எளிமை என்றால் என்ன? உலகம் வெகுவாய்ப் புகழ்ந்து பாராட்டுகிற மேட்டிமை, தற்பெருமை, மற்றும் தன்னிறைவு கொண்ட மனப்பான்மைக்கு இது நேர்மாறானதாகும். தேவனுக்கு முன்பாகத் தலைவணங்க மறுத்து, எதையும் துணிகரமாய் எதிர்கொள்ளத் தீர்மானித்து, "நான் அவர் வார்த்தையைக் கேட்க... கர்த்தர் யார்?" (யாத்திராகமம் 5:2) என்று பார்வோனோடு சேர்ந்து சொல்லும் தன்னிச்சையான மற்றும் எதிர்ப்பான மனப்பான்மைக்கு இது முற்றிலும் எதிரானதாகும்.
ஆவியில் எளிமையாய் இருப்பது என்பது, என்னிடம் ஒன்றுமில்லை, நான் ஒன்றுமில்லை, என்னால் எதுவும் இயலாது, அதே வேளையில் எனக்கு எல்லாமே தேவைப்படுகிறது என்பதை உணருவதாகும். ஒரு மனிதன் தன் முழுமையான உதவியற்ற நிலைமையை அறிக்கையிட்டு, தேவனுடைய சந்நிதியில் புழுதிமட்டும் தன்னைத் தாழ்த்தும் நிலைக்கு வரும்போது அவனில் ஆவியின் எளிமை தெளிவாக விளங்கும். ஒரு ஆத்துமாவிற்குள் நடைபெறும் கிருபையின் தெய்வீகக் கிரியைக்கான முதலாவது அனுபவ அடையாளம் இதுவே ஆகும்; தூர தேசத்தில் கெட்ட குமாரன் "குறைவுபடத் தொடங்கினபோது" அவனில் ஏற்பட்ட ஆரம்ப விழிப்புணர்வுக்கு இது ஒப்பாயிருக்கிறது (லூக்கா 15:14).





