“இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்” (மத்தேயு 5:7)
இதுகாறும் நாம் தியானித்துக்கொண்டிருந்த முதல் நான்கு பாக்கியங்களிலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய போதனையின் முக்கிய அம்சங்களில் ஒன்றான ஆவிக்குரிய விழிப்புணர்வு மற்றும் மறுரூபமாகுதல் ஆகியவற்றில் ஒரு தெளிவான வளர்ச்சி இருப்பதை நாம் கவனித்தோம். முதலாவது, நான் ஒன்றுமில்லை, என்னிடத்தில் ஒன்றுமில்லை, என்னால் ஒன்றும் கூடும் என்கிற ஆவிக்குரிய வறுமையாகிய மெய்ந்நிலையை (ஆவியில் எளிமை) உணருகிறோம். இரண்டாவதாக, பாவ உணர்வு; அதாவது, தேவனுக்கேற்ற துக்கத்தை உண்டாக்குகிற ஒரு வகையான குற்ற உணர்வு ஏற்படுகிறது (துயரப்படுதல்). மூன்றாவதாக, நம்மையே சார்ந்திருப்பதை விடுத்து, தேவனுடைய சமுகத்தில் தூளிலும் சாம்பலிலும் அமரத்தக்கதான மனத்தாழ்வு உண்டாகிறது (சாந்தகுணம்). நான்காவதாக, கிறிஸ்துவையும் அவருடைய இரட்சிப்பையும் வாஞ்சிக்கிற ஒரு மாபெருந் தேட்டம்—அதாவது நீதியின்மேலுள்ள பசியும் தாகமும் தொடர்கிறது. ஆயினும் இவையெல்லாம், ஒருவகையில், எதிர்மறையானவைகளே; ஏனெனில், விசுவாசிக்கிற ஒரு பாவி தனக்குள்ளே காணும் குறைபாடுகளைக் குறித்த உணர்வும், நன்மையானவைகளை நாடித்தேடுகிற அவனது பேரார்வமுமாகவே இவை இருக்கின்றன. ஆனால், அடுத்து வருகிற நான்கு பாக்கியங்களில் விசுவாசியிடம் காணப்படும் நன்மையான காரியங்களின் வெளிப்பாடு, புதிய சிருஷ்டிப்பின் கனிகள், மற்றும் மறுரூபமாக்கப்பட்ட குணநலன்களின் ஆசீர்வாதங்களை நாம் காண்கிறோம். தேவனுடைய சத்தியம் நமக்கு எத்தகைய சிறப்பான ஒழுங்குமுறையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை இது மீண்டும் ஒருமுறை எவ்வளவு நன்றாய் நமக்குக் காண்பிக்கிறது!
"இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்: அவர்கள் இரக்கம் பெறுவார்கள்." சுயநீதியில் மேன்மைபாராட்டுகிறவர்களால் இந்த வேத வாக்கியம் எவ்வளவு மோசமாகத் திரிக்கப்பட்டுள்ளது! கிரியைகளினால் உண்டாகும் இரட்சிப்பைக் குறித்து வேதாகமம் போதிக்கிறதென்று வற்புறுத்துகிறவர்கள், தங்களுடைய அழிவுக்கேதுவான தவறான கொள்கைக்கு இந்த வேத வாக்கியத்தையே ஆதாரமாய்ப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இது அவர்களுடைய நோக்கத்திற்குச் சிறிதும் துணைபோகாது. நம்முடைய கர்த்தரின் நோக்கமானது, பாவியானவன் தேவனிடமிருந்து இரக்கத்தைப் பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதல்ல; மாறாக, தம்முடைய உண்மையான சீடர்களின் குணநலன்களை விவரிப்பதே ஆகும். இரக்கம் பாராட்டுதல் என்பது இந்த நற்குணத்தின் முதன்மையான ஒரு பண்பாகும். நம்முடைய கர்த்தருடைய உபதேசத்தின்படி, தேவனுடைய உன்னத கிருபையை அனுபவிப்பதோடு பிரிக்கமுடியாதபடி இணைக்கப்பட்டுள்ள அந்தப் பரிசுத்த குணத்தின் இன்றியமையாத அம்சமே இந்த இரக்கமாகும். எனவே, ரோமன் கத்தோலிக்க சபையின் தவறான போதனைகளுக்குச் சாதகமாக இந்த வசனத்தில் எதுவுமே இல்லை.
மத்தேயு 5 ஆம் அதிகாரத்தில், இந்தப் பாக்கியம் இடம்பெற்றுள்ள சூழல் இதை விளக்குவதற்கான மற்றொரு திறவுகோலாயிருக்கிறது. முதல் நான்கு பாக்கியங்களும் பரிசுத்த ஆவியானவரால் உயிர்ப்பிக்கப்பட்ட ஒருவனுடைய இருதயத்தில் நிகழும் ஆவிக்குரிய அடிப்படைப் பயிற்சிகளை விவரிக்கின்றன. முந்தின வசனத்தில், ஒரு ஆத்துமா கிறிஸ்துவின்மேல் பசிதாகமாயிருப்பதையும், பின்னர் அவரால் நிரப்பப்படுவதையும் நாம் காண்கிறோம். இவ்வாறு நிரப்பப்படும்போது ஏற்படுகிற முதல் விளைவுகளையும் அதற்கான சான்றுகளையும் இங்கு நாம் காண்கிறோம். கர்த்தரின் இரக்கத்தைப் பெற்றுக்கொண்ட, இரட்சிக்கப்பட்ட பாவியாகிய ஒருவன் இப்பொழுது இரக்கம் பாராட்டுகின்றான். அவருடைய இரக்கத்தைப் பெறுவதற்குத் தகுதியடையும்படி நாம் இரக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று தேவன் கோருவதில்லை; அப்படி இருந்தால் அது தேவ கிருபையின் முழுத் திட்டத்தையே கவிழ்த்துப்போடுவதாகிவிடும்! மாறாக, அவருடைய அதிசயமான இரக்கத்தைப் பெற்று மகிழ்கிற நான், மற்றவர்கள்பால் இரங்கி செயல்படாமல் இருக்க முடியாது.
இரக்கம் பாராட்டுதல் என்றால் என்ன? அது சக மனிதர்களிடமும், சக கிறிஸ்தவர்களிடமும் காண்பிக்கும் கிருபையான மனப்பான்மையாகும். அது மற்றவர்களுடைய துயரங்களைக் கண்டு உருகுகிற அன்பும் அறமுமாகும். அது சிறுமைப்படுகிற மக்களின் பாடுகளை மனவுருக்கத்தோடு நோக்கும் ஓர் ஆவியாகும். குற்றம் செய்தவனிடம் கடுமை காட்டாமல் கிருபையாக நடந்துகொள்வதும், பழிவாங்கும் எண்ணத்தை வெறுப்பதுமே அதுவாகும். அது மன்னிக்கிற ஆவி; பதிலுக்குப் பதில் செய்யாத ஆவி. தன்னுடைய நியாயத்தை நிலைநாட்ட முற்படுகிற எல்லா முயற்சிகளையும் கைவிட்டு, தீமைக்குத் தீமை செய்யாமல் தீமைக்கு நன்மையும், பகைமைக்கு அன்பும் செலுத்தும் ஆவியாகும். இதுவே இரக்கம் பாராட்டுதல். மன்னிக்கப்படும்போது இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளும் ஆத்துமா, இரக்கத்தின் எழிலை உணர்ந்துகொள்கிறது; மேலும், தனக்குக் காண்பிக்கப்பட்ட அதே கிருபையைத் தனக்குத் தீமை செய்தவர்களிடமும் காண்பிக்கும்படி பேரார்வங்கொள்கிறது (Dr. A. T. Pierson).
இப்படி இரக்கம் பாராட்டுகிற சுபாவத்தின் ஊற்றுக்கண்ணை, வீழ்ச்சியுற்ற நம்முடைய மானிட சுபாவத்தின் உடைமையாகக் கருத முடியாது. கிறிஸ்தவர்கள் அல்லாத வேறு சில மனிதர்களிடமும் மற்றவர்கள் படும் பாடுகளைக் கண்டு பரிதாபப்படுகிற, தங்களுக்குத் தீங்கு செய்தவர்களை மன்னிக்கத் தயாராக இருக்கிற இரக்கச் சிந்தையை நாம் காண முடிவது உண்மைதான். மனிதப் பார்வையிலிருந்து நோக்கும்போது இது பாராட்டுதற்குரிய ஒன்றுதான் என்றாலும், கிறிஸ்து இங்கே எந்த இரக்கத்தின் மீது தமது ஆசீர்வாதத்தை வழங்குகிறாரோ, அதற்கு இது மிகவும் குறைவுடையதேயாகும். மாம்சத்தினால் உண்டாகும் இந்த அன்பிற்கு எவ்வித ஆவிக்குரிய மதிப்பும் இல்லை; ஏனெனில், அதனுடைய செயல்பாடுகள் வேதாகமத்தினால் நெறிப்படுத்தப்படுவதோ அல்லது தெய்வீக அதிகாரத்தின்படி செயல்படுவதோ இல்லை. ஐந்தாவது பாக்கியம் கூறும் இந்த இரக்கம் பாராட்டுதல் என்பது, தேவனுடைய இரக்கத்தினால் ஆட்கொள்ளப்பட்டு, அந்த இரக்கத்தின் மீது அன்புகூரும் ஒரு இருதயத்திலிருந்து தன்னிச்சையாகப் புறப்பட்டு வரும் ஒரு நீரூற்றாகும்.
இந்தப் பகுதியிலுள்ள இரக்கம் என்பது, தேவனுடைய பிள்ளைக்குள் பரிசுத்த ஆவியானவரால் பதிக்கப்பட்ட புதிய சுபாவத்தின் விளைவாகும். எவ்வகையிலும் தகுதியற்ற, நம்மைப் போன்ற துர்ப்பாக்கியவான்களிடத்தில் தேவன் பாராட்டுகிற கிருபை, பரிதாபம் மற்றும் நீடிய பொறுமை ஆகிய அவருடைய அதிசயமான குணங்களைத் தியானிக்கும்பொழுதுதான், இந்த இரக்கம் நம்முள் செயல்படத் தொடங்கும். என்மேலுள்ள தேவனுடைய இறையாண்மைமிக்க இரக்கத்தை நான் எவ்வளவு அதிகமாய்த் தியானிக்கிறேனோ, அவ்வளவு அதிகமாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் வாயிலாக அவியாத அக்கினியினின்றும் நான் பெற்றுக்கொண்ட விடுதலையை நினைவுகூருவேன். தேவ கிருபைக்கு நான் எவ்வளவு அதிகமாய்க் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை உணரும்பொழுது, எனக்குத் தீமை செய்து, என்னைப் பகைத்து வெறுக்கிறவர்கள் மீதும் நான் அவ்வளவு அதிகமாக இரக்கம் காட்டுவேன்.
புதிதாய்ப் பிறக்கும்போது ஒருவன் பெற்றுக்கொள்கிற ஆவிக்குரிய சுபாவத்தின் பண்பு நலன்களில் ஒன்று இரக்கம் பாராட்டுதலாகும். தேவனுடைய பிள்ளையிடம் காணப்படும் இந்த இரக்கம், அவனுடைய பரம பிதாவிடமுள்ள அபரிமிதமான இரக்கத்தின் பிரதிபலிப்பேயாகும். இரக்கம் பாராட்டுதல் என்பது நம்முள் வாசமாயிருக்கிற இரக்கமுள்ள கிறிஸ்துவினாலுண்டாகும் இயல்பானதும் அவசியமானதுமான விளைவுகளில் ஒன்றாயிருக்கிறது. இது எப்பொழுதும் வெளிப்படாமல் போகலாம்; சில வேளைகளில் மாம்ச இச்சைகளினால் இது தடைசெய்யப்படலாம் அல்லது அமுக்கப்படலாம். ஆயினும், ஒரு கிறிஸ்தவனுடைய பொதுவான குணநலனையும் அவனுடைய வாழ்க்கையின் முக்கியப் போக்கையும் கருத்தில் கொண்டு நோக்கும்போது, இரக்கம் பாராட்டுதல் என்பது புதிய மனிதனின் மறுக்கமுடியாத ஒரு அடையாளம் என்பது தெளிவாகும்.
"துன்மார்க்கனோ கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறான்; நீதிமானோ இரங்கிக் கொடுக்கிறான்" (சங் 37:21). தன்னுடைய மருமகனால் தீமை செய்யப்பட்டபோதிலும், அவனைப் பின்தொடர்ந்து சென்று லோத்தையும் அவனுடைய உடைமைகளையும் விடுவித்துக்கொண்டு வந்தது ஆபிரகாமின் இரக்கமேயாகும் (ஆதி 14:1-16). யோசேப்பு தன்னுடைய சகோதரர்களால் மிகவும் கொடூரமாக நடத்தப்பட்டபோதிலும், அவர்களைத் தாராளமாய் மன்னிக்கும்படி செய்தது யோசேப்பிடமிருந்த இரக்கமேயாகும் (ஆதி 50:15-21). மீரியாம் தனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, கர்த்தரால் குஷ்டரோகத்தினால் வாதிக்கப்பட்டபொழுது, "என் தேவனே, அவளைக் குணமாக்கும்" என்று மோசே கெஞ்சி மன்றாடியது அவனிடமிருந்த இரக்கமேயாகும் (எண் 12:13). கொடுங்கோலனாகிய சவுல் தன் கையில் அகப்பட்டபோது பகைவனாகிய அவனுடைய உயிரைத் தப்புவித்தது தாவீதின் இரக்கமேயாகும் (1 சாமு 24:1-22; 26:1-25). ஆனால் இதற்கு முற்றிலும் நேர்மாறாக, மிகவும் துக்ககரமான விதத்தில் யூதாசைக் குறித்து, "அவன் தயைசெய்ய நினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினான்" (சங் 109:16) என்று சொல்லப்படுகிறது.
ரோமர் 12:8 ஆம் வசனத்தில், அப்போஸ்தலனாகிய பவுல், இரக்கம் எத்தகைய ஆவியுடன் செய்யப்பட வேண்டும் என்பதைக் குறித்த ஒரு முக்கிய அறிவுரையை நமக்கு வழங்குகிறார்: "இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்". இது ஏழைச் சகோதரர்களை ஆதரிக்கும் வகையில் நாம் வழங்கும் பண உதவியை நேரடியாகக் குறித்தாலும், அல்லற்படும் மக்களிடம் காண்பிக்கப்படும் எல்லா வகையான காருணியச் செயல்களுக்கும் இந்த அன்பின் கொள்கை பொருந்தும். இரக்கம் என்பது வெறும் கடமைக்காக மட்டுமின்றி, மகிழ்ச்சியாகவும் செய்யப்படுகிறது என்பதை வெளிப்படுத்த அது உற்சாகத்துடன் செய்யப்பட வேண்டும். இது உதவியைப் பெற்றுக்கொள்ளும் நபரின் உணர்வுகளைப் பாதுகாக்கிறது; துன்பப்படுகிறவர்களின் துயரத்தை ஆற்றுகிறது. இந்த உற்சாகம் என்ற குணமே செய்யப்படும் உதவிக்கு மிகுந்த மதிப்பளிக்கிறது. இதற்கான கிரேக்கச் சொல்லானது, இரக்கஞ்செய்கிறவனுடைய மகிழ்ச்சியான ஆர்வத்தையும், அவனது வருகையை ஒரு சூரியக் கதிரைப்போல ஆக்கி, துயரப்படுகிறவர்களின் இருதயத்தை வெப்பமூட்டும் இன்முகத்தையும் வெளிப்படுத்தும் ஒரு எழில்மிகு சொல்லாயிருக்கிறது. "உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" (2 கொரி 9:7) என்று வேதாகமம் நமக்கு அறிவிக்கிறபடியால், அவருடைய அறிவுரைகளுக்கு நாம் எத்தகைய ஆவியோடு செவிகொடுக்கிறோம் என்பதைக் கர்த்தர் கவனிப்பார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.
"அவர்கள் இரக்கம் பெறுவார்கள்." இம்மண்ணுலகில் வாழ்கிற நம்முடைய வாழ்க்கையின் மீது தேவன் தாமே தம்முடைய அரசாங்கத்தில் நியமித்துள்ள ஒரு கொள்கையை அல்லது பிரமாணத்தை இந்த வார்த்தைகள் விவரிக்கின்றன. "மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்" (கலா 6:7) என்னும் நன்கு அறியப்பட்ட வேத வாக்கியம் இதனைச் சுருங்கச் சொல்கிறது. மற்றவர்களிடத்தில் இரக்கம் பாராட்டுகிற கிறிஸ்தவன், தன் சக மனிதர்களிடமிருந்து இரக்கத்தைப் பெறுவான்; ஏனெனில், "நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்" (மத் 7:2). ஆகையால்தான் "நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்" (நீதி 21:21) என்று எழுதப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இரக்கம் காட்டுகிறவன் அதனாலேயே தனிப்பட்ட நன்மையடைகிறான்: "தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மைசெய்துகொள்ளுகிறான்" (நீதி 11:17a). இரக்கம் பாராட்டுவதிலும் பரிதாபம் காட்டுவதிலும் உண்டாகும் ஒரு உள்மன நிறைவோடு, சுயநலவாதி அடையும் எவ்வித உயர்ந்த சந்தோஷமும் ஒப்பிடத்தக்கதன்று. "தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்" (நீதி 14:21b). இரக்கம் பாராட்டுதல் என்பது தேவனுக்கே மனநிறைவைத் தரும் ஒரு ஆதாரமாக இருக்கிறது: "அவர் கிருபைசெய்ய விரும்புகிறார்" (மீகா 7:18). அப்படியென்றால், நமக்கும் அது அவ்வாறே இருக்க வேண்டும்.
"அவர்கள் இரக்கம் பெறுவார்கள்." இரக்கம் பாராட்டுகிற கிறிஸ்தவன், இந்தக் கிருபையின் வாயிலாகத் தன் சொந்த ஆத்துமா அடையும் சந்தோஷத்தினால் நன்மையடைவதோடு மட்டுமன்றி, கர்த்தரும் தம்முடைய ஆளுகைக்குட்பட்ட பராமரிப்பின் மூலம் அவனுடைய இரக்கத்தின் பலனை அவனோடு வாழும் சக மனிதர்களின் கரங்களினாலேயே அவனுக்குத் திரும்பக் கிடைக்கச் செய்வார்; அதுமட்டுமல்ல, அந்தக் கிறிஸ்தவன் தேவனிடமிருந்தும் இரக்கத்தைப் பெற்றுக்கொள்வான். "தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவர்" (சங் 18:25) என்று தாவீது இந்த உண்மையை அறிவிக்கிறான். மறுபுறம், "மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னிக்கமாட்டார்" (மத் 6:15) என்று இரட்சகர் தம்முடைய சீடர்களுக்குக் கண்டித்துணர்த்துகிறார்.
"அவர்கள் இரக்கம் பெறுவார்கள்." முந்தைய பாக்கியங்களோடு இணைந்து வரும் வாக்குத்தத்தங்களைப் போலவே, இந்த வாக்குத்தத்தமும் இதனுடைய இறுதி நிறைவேறுதலுக்காக எதிர்காலத்தை நோக்கியிருக்கிறது. 2 தீமோத்தேயு 1:16, 18 ஆகிய வசனங்களில், "ஓநேசிப்போருவின் வீட்டாருக்குக் கர்த்தர் இரக்கங்கட்டளையிடுவாராக... அந்த நாளிலே அவன் இரக்கத்தைக் கண்டடையும்படிக்குக் கர்த்தர் அவனுக்கு அனுக்கிரகஞ்செய்வாராக" என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியிருப்பதை நாம் காண்கிறோம். யூதா 21 ஆம் வசனத்திலும், "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக் காத்திருங்கள்" என்று பரிசுத்தவான்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்; இது மகிமையுள்ள கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது, அவரால் மீட்கப்பட்ட சொந்த மக்களாக நம்மை அவர் இறுதியாக ஏற்றுக்கொள்வதையே குறிக்கிறது.





