"இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" (மத்தேயு 5:8).
கர்த்தருடைய சத்துருக்களால் கடுமையாகத் திரித்துக்கூறப்படும் பாக்கியங்களில் இதுவும் ஒன்றாகும். இவர்கள், தங்களுக்கு முன்னோடிகளான பரிசேயர்களைப் போலவே, தங்களைச் சத்தியத்தின் பாதுகாவலர்களாகக் காட்டிக்கொண்டு, மெய்யான தேவனுடைய மக்கள் உரிமைபாராட்டத் துணியும் பரிசுத்த வாழ்க்கையை விடத் தங்களது வாழ்க்கை அதிக மேன்மையானது என்று பெருமையடித்துக்கொள்கிறார்கள். மேலும், மறுபிறப்பின் அனுபவமில்லாத பழைய மனிதனின் முழுமையான பரிசுத்தத்தை உரிமைபாராட்டும் பரிதாபத்திற்குரிய, வஞ்சிக்கப்பட்ட ஆத்துமாக்கள் இக்கிறிஸ்தவ யுகம் முழுவதும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மற்றவர்களோ, தங்களுடைய மாம்ச சுபாவம் முற்றிலுமாக வேரறுக்கப்படும் அளவுக்குத் தேவன்தாமே தங்களைப் புதிப்பித்துவிட்டார் என்றும், ஆகையால் தாங்கள் பாவங்களைச் செய்வதில்லை என்பது மட்டுமன்றி, தங்களுக்குப் பாவ இச்சைகளோ சிந்தனைகளோ இல்லை என்றும் வற்புறுத்திக் கூறுகின்றனர்.
ஆயினும், பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்ட அப்போஸ்தலனாகிய யோவான், "நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மைநாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது" (1 யோவான் 1:8) என்று அறிவிக்கிறார். நிச்சயமாகவே, இத்தகையவர்கள் தங்களுடைய வீணான வஞ்சகத்திற்குச் சாதகமாக, பாவப்பரிகாரத்தின் சட்டபூர்வமான (legal benefits of the Atonement) நன்மைகளை விளக்குகிற வேதவாக்கியங்களைத் தங்கள் சொந்த அனுபவத்திற்குத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். "அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்" (1 யோவான் 1:7) என்னும் வார்த்தைகள், தீமையின் கறைபடுத்தும் அசுத்தங்கள் அனைத்திலிருந்தும் நமது இருதயங்கள் கழுவப்பட்டுவிட்டன என்ற பொருளைத் தருவதில்லை; மாறாக, கிறிஸ்துவின் தியாகப் பலியானது, நீதிவிசாரணையின்படி (judicial) நமது பாவங்களைத் துடைத்துப்போடப் போதுமானதாயிருக்கிறது என்பதையே முதன்மையாகப் போதிக்கிறது.
கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டியாக இருக்கிற மனிதனை விவரிக்கும் அப்போஸ்தலனாகிய பவுல், "பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின" (2 கொரிந்தியர் 5:17) என்று கூறும்போது, கிறிஸ்தவனுடைய இருதயத்தின் புதிய மனப்பான்மையைக் குறித்தே பேசுகிறார். இது பரிசுத்த ஆவியானவரின் மறுபிறப்பின் கிரியைக்கு முன்னிருந்த அவனுடைய உள்ளான மனப்பான்மைக்கு முற்றிலும் மாறானதாகும்.
இருதயத்தின் பரிசுத்தம் என்பது வாழ்வில் பாவமே இல்லாத நிலை (sinlessness of life) அல்ல என்பது, தேவனுடைய பரிசுத்தவான்களின் வாழ்க்கை குறித்து ஆவியானவரால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வேதப் பதிவுகளிலிருந்து (inspired record) தெளிவாகிறது. நோவா குடித்து வெறித்திருந்தான்; ஆபிரகாம் உண்மையை மறைத்துப் பேசினான்; மோசே தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை; யோபு தன் பிறந்த நாளைச் சபித்தான்; எலியா யேசபேலுக்குப் பயந்து ஓடினான்; பேதுரு கிறிஸ்துவை மறுதலித்தான். "ஆம், ஆனால் இவையெல்லாம் கிறிஸ்தவம் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்பு நடந்தவை அல்லவா!" என்று யாராவது ஆச்சரியத்துடன் கேட்கலாம். உண்மைதான், ஆனால் அதன் பின்னரும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுலை விட மேன்மையான ஆவிக்குரிய நிலையை அடைந்த ஒரு கிறிஸ்தவனைக் கண்டுபிடிக்க நாம் எங்கே செல்வது? அவருடைய அனுபவம் என்ன? ரோமர் 7-ஆம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள்.
அவர் நன்மை செய்ய விரும்பியபோது, அவரிடம் தீமை இருந்தது (வச. 21). அவருடைய மனதின் பிரமாணத்திற்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தைத் தம்முடைய அவயவங்களில் அவர் கண்டார்; அது அவரைப் பாவப்பிரமாணத்திற்குச் சிறையாக்கிற்று (வச. 23). அவர் தம்முடைய மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்தார் (வச. 25). சத்தியம் என்னவென்றால், நாம் சுத்தமான இருதயத்தைக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான மிக உறுதியான சான்றுகளில் ஒன்று, நமது இருதயங்களைத் தொடர்ந்து அலைக்கழிக்கும் எஞ்சியுள்ள அசுத்தத்தைக் குறித்த விழிப்புணர்வும் உணர்வுமே ஆகும். ஆனால், நமது வேதப்பகுதிக்கு நாம் இன்னும் நெருங்கி வருவோம்: "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்."
மலைப்பொழிவின் (Sermon on the Mount) எந்தப் பகுதிக்குப் பொருள்விளக்கம் தேடும்போதும், முதலாவது நாம் நினைவில்கொள்ள வேண்டியது என்னவென்றால், நமது கர்த்தர் யாருக்குப் போதித்தாரோ அவர்கள் யூத மார்க்கத்தில் வளர்க்கப்பட்டவர்கள் என்பதே. ஆவியானவரால் மிகவும் ஆழமாய்ப் போதிக்கப்பட்ட ஒருவர் (Dr. John Brown) இவ்வாறு கூறுகிறார்:
"நமது கர்த்தர் இங்கு பயன்படுத்தும் வார்த்தைகளில், யூத மக்களுக்குரிய புறம்பான பரிசுத்தம் அல்லது தூய்மையின் தன்மையையும், அந்தத் தன்மையோடு இணைக்கப்பட்டிருந்த தேவனோடுள்ள ஐக்கியத்தின் சிறப்புரிமையையும் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார் என்றே நான் நினைக்கிறேன். அவர்கள் விக்கிரகாராதனையால் தீட்டுப்பட்டிருந்த ஜாதிகளிலிருந்து பிரிக்கப்பட்டவர்கள்; யேகோவாவுக்குப் பரிசுத்தமானவர்களாகப் பிரித்தெடுக்கப்பட்டவர்கள். மேலும், ஒரு பரிசுத்த ஜனமாக, ஜீவனுள்ள மெய்த் தேவனாகிய தங்கள் தேவனை அவருடைய ஆராதனை முறைமைகளில் அணுகுவதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இந்தத் தன்மையைக் கொண்டிருப்பதிலும், இந்தச் சிறப்புரிமையை அனுபவிப்பதிலும் யூத மக்கள் பெருமிதம் கொண்டார்கள்."
"ஆனால், மேசியாவின் ஆட்சியின்கீழ் உள்ள குடிமக்களுக்கு இதைவிட மேன்மையான ஒரு தன்மையும், மேன்மையான ஒரு சிறப்புரிமையும் உரியதாய் இருந்தது. அவர்கள் புறம்பாக மட்டும் பரிசுத்தமாய் இல்லாமல், 'இருதயத்தில் சுத்தமுள்ளவர்களாக' இருக்க வேண்டும். மேலும், அவர்கள் தேவனுடைய மகிமை வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தை அணுகுவதற்கு மட்டும் அனுமதிக்கப்படாமல், 'தேவனைத் தரிசிக்கவும்', அவரோடு மிக நெருக்கமான ஐக்கியத்திற்குள் வழிநடத்தப்படவும் வேண்டும். இவ்விதமாக, யூத மக்களின் புறம்பான தன்மை மற்றும் சிறப்புரிமைகளுக்கு முரணாக, மேசியாவின் குடிமக்களுடைய ஆவிக்குரிய தன்மை மற்றும் சிறப்புரிமைகளின் விவரிப்பாகப் பார்க்கும்போது, நம்முன் உள்ள இந்தப் பகுதி மிக முக்கியமான, சுவாரஸ்யமான சத்தியத்தால் நிறைந்துள்ளது."
"இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்." கிறிஸ்துவின் இந்த வார்த்தைகள், மறுபிறப்பின்போது பெற்றுக்கொள்ளும் புதிய இருதயத்தைக் குறிக்கிறதா அல்லது ஆத்துமாவில் நடைபெறும் தேவ கிருபையின் செயலின் விளைவாக ஏற்படும் நற்குணத்தின் தார்மீக மறுரூபத்தைக் குறிக்கிறதா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. அநேகமாக இந்த இரண்டு சத்தியங்களும் இங்கு இணைந்திருக்கலாம். வரிசையின் பிற்பகுதியில் இந்த ஆசீர்வாதம் இடம்பெறுவதைக் கருத்தில் கொண்டால், நமது இரட்சகர் எந்த இருதயத்தின் சுத்தத்தின் மீது ஆசீர்வாதத்தைக் கூறுகிறாரோ, அது புதிய பிறப்போடு இணைந்தும் அதைத் தொடர்ந்தும் வருகிற ஒரு உள்ளான சுத்திகரிப்பு (internal cleansing) ஆகும். இயற்கையான மனிதனிடம் எவ்வித உள்ளான சுத்தமும் இல்லாதபடியால், தேவபக்தியுள்ள மனிதனிடம் கிறிஸ்து காணும் இந்தச் சுத்தம், அதன் ஆரம்பக் கட்டமான பரிசுத்த ஆவியானவரின் இறையாண்மையுள்ள மறுபிறப்பின் கிரியைக்கே கொண்டுசெல்லப்பட வேண்டும்.
சங்கீதக்காரன், "இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்" (சங்கீதம் 51:6) என்று கூறுகிறார். தேவன் எதிர்பார்க்கும் இந்த ஆவிக்குரிய சுத்தமானது, இன்று கிறிஸ்தவ உலகத்தில் பெருமளவு முயற்சிகளாகச் செய்யப்படும் வெறும் புறம்பான சீர்திருத்தங்களையும் புதுப்பித்தல்களையும் தாண்டி மிக ஆழமாகச் செல்கிறது! இன்று நம்மைச் சுற்றி நாம் காண்பதில் பெரும்பாலானவை, கிரியைகளின் மூலமாக இரட்சிப்பைத் தேடும் மார்க்கமாகவோ, அல்லது ஒரு மரபுவழி கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு திருப்தியடையும் மூளையறிவுக்குரிய மார்க்கமாகவோ இருக்கின்றன. ஆனால் தேவனோ "இருதயத்தைப் பார்க்கிறார்" (1 சாமுவேல் 16:7); அதாவது, அவர் மனிதனின் புரிதல், வாஞ்சைகள், சித்தம் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான உள்ளான மனிதனை நோக்குகிறார். தேவன் உள்ளான மனிதனை நோக்குவதால்தான், அவர் தம்முடைய மக்களுக்கு ஒரு "புதிய இருதயத்தை" (எசேக்கியேல் 36:26) கொடுக்க வேண்டியதாய் இருக்கிறது. அப்படிப்பட்ட புதிய இருதயத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் மெய்யாகவே பாக்கியவான்கள்; ஏனெனில் சுத்தமான இருதயமே அதைக் கொடுப்பவருக்குப் பிரியமானது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளதுபோல, இந்த ஆறாம் பாக்கியம் மறுபிறப்பின்போது பெற்றுக்கொள்ளும் புதிய இருதயத்தையும், அதைத் தொடர்ந்து ஆத்துமாவில் நடைபெறும் தேவ கிருபையின் செயலினாலான மறுரூபமாக்கப்படுதலையும் உள்ளடக்கியது என்று நாம் நம்புகிறோம். முதலாவதாக, "மறுபிறப்பின் முழுக்கு" (தீத்து 3:5) நடைபெறுகிறது. இதன்மூலம் நாம் புரிந்துகொள்வது என்னவென்றால், இது வாஞ்சைகளின் (affections) சுத்திகரிப்பாகும்; இப்போது அவை கீழானவைகளை அல்ல, மேலானவைகளையே நாடுகின்றன. இது, மறுபிறப்பைத் தொடர்ந்து உடனடியாக வரும் மாற்றத்தோடு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. இதில் விசுவாசிகள் அனைவரும் "விசுவாசத்தினாலே தங்கள் இருதயங்களைச் சுத்தமாக்கும்" (அப்போஸ்தலர் 15:9) அனுபவத்தைப் பெறுகிறார்கள். இதோடு கூடவே மனச்சாட்சியின் சுத்திகரிப்பும் (எபிரெயர் 10:22) நடைபெறுகிறது; இது உணர்வுபூர்வமான குற்றவுணர்ச்சியின் பாரம் நீக்கப்படுவதைக் குறிக்கிறது. இதன் விளைவாக, "நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்" (ரோமர் 5:1) என்ற உள்ளான உணர்வு ஏற்படுகிறது.
ஆனால் கிறிஸ்து இங்கே பாராட்டும் இருதயத்தின் சுத்தம் இதைவிட ஆழமானது. சுத்தம் அல்லது தூய்மை என்றால் என்ன? அது தீட்டு மற்றும் பிரிந்த வாஞ்சைகளிலிருந்து (divided affections) விடுதலையாகும்; அது நேர்மை, உண்மை, மற்றும் இருதயத்தின் ஒருமைப்பாட்டைக் குறிக்கிறது. கிறிஸ்தவ நற்குணத்தின் ஒரு பண்பாக, இதை 'தேவபக்தியின் எளிமை' (godly simplicity) என்று நாம் வரையறுக்கலாம். இது வஞ்சனை மற்றும் போலித்தனத்திற்கு நேர் எதிரானது. மெய்யான கிறிஸ்தவம் துர்க்குணத்தை மட்டுமல்ல, கபடத்தையும் வஞ்சகத்தையும் அகற்றிவிடுகிறது. வார்த்தைகளிலும் புறம்பான நடத்தையிலும் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது. வாஞ்சைகள், நோக்கங்கள், மற்றும் சிந்தனைகளின் தூய்மையே தேவனுடைய பிள்ளையை அடையாளப்படுத்த வேண்டும் (பெரும்பாலும் அடையாளப்படுத்துகிறது). எனவே, தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரும் தங்களைத்தாமே சோதித்துப் பார்க்க வேண்டிய மிக முக்கியமான அளவுகோல் இதுவே: என் வாஞ்சைகள் மேலானவைகளை நாடுகின்றனவா? என் நோக்கங்கள் தூய்மையானவையா? நான் ஏன் கர்த்தருடைய பிள்ளைகளுடன் கூடிவருகிறேன்? மனுஷர் காண வேண்டும் என்பதற்காகவா, அல்லது கர்த்தரைச் சந்தித்து அவரோடும் அவருடைய பிள்ளைகளோடும் இனிமையான ஐக்கியத்தை அனுபவிப்பதற்காகவா?
"அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்." இந்த ஆசீர்வாதங்களோடு இணைக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தங்களுக்கு நிகழ்கால மற்றும் எதிர்கால நிறைவேற்றங்கள் உண்டு என்பதை மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் ஆவிக்குரிய பகுத்தறியும் திறனைக் கொண்டுள்ளார்கள்; தங்கள் மனக்கண்களால் தேவனுடைய குணாதிசயங்களைத் தெளிவாகப் பார்க்கிறார்கள், அவருடைய பண்புகளின் மேன்மையை உணருகிறார்கள். கண் தெளிவாயிருந்தால் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.
இருதயத்தைச் சுத்தமாக்கும் விசுவாசத்தின் சத்தியத்தில் அவர்கள் "தேவனைத் தரிசிக்கிறார்கள்"; அந்தச் சத்தியம் வேறென்ன? அது இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தேவனுடைய மகிமையின் வெளிப்பாடு (2 கொரிந்தியர் 4:6) - அதாவது தெய்வீகப் பரிசுத்தமும், தெய்வீகக் கிருபையும் இணைந்து ஒளிரும் ஒரு பிரகாசமான வெளிப்பாடு! இருதயத்தில் சுத்தமுள்ளவன் தேவனுடைய குணாதிசயங்களைத் தெளிவாகவும் திருப்தியாகவும் தரிசிப்பது மட்டுமல்லாமல், தேவனோடு நெருக்கமான, இனிமையான ஐக்கியத்தையும் அனுபவிக்கிறான். அவன் தேவனிடம் மிகவும் நெருக்கமாகக் கொண்டுவரப்படுகிறான்; தேவனுடைய சிந்தை அவனுடைய சிந்தையாகிறது; தேவனுடைய சித்தம் அவனுடைய சித்தமாகிறது. அவனுடைய ஐக்கியம் மெய்யாகவே பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.
இவ்விதமாக, இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் இந்த உலகத்திலேயே "தேவனைத் தரிசிக்கிறார்கள்". இனிவரும் உலகத்திலோ தேவனைப் பற்றிய அவர்களின் அறிவு இன்னும் மிக விரிவானதாக மாறும்; அவரோடுள்ள அவர்களின் ஐக்கியம் இன்னும் மிக நெருக்கமானதாக மாறும். ஏனெனில், முந்தைய ஏற்பாட்டின் சிறப்புரிமைகளோடு ஒப்பிடும்போது, நாம் இப்போது திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் காண்கிறோம் (2 கொரிந்தியர் 3:18) என்றாலும், வரப்போகும் மேன்மையான ஏற்பாட்டின் சிறப்புரிமைகளோடு ஒப்பிடும்போது, நாம் இன்னும் கண்ணாடியிலே நிழலாட்டமாய்க் காண்கிறோம்; நாம் அறிவது குறைவு, நாம் அனுபவிப்பது குறைவு. ஆனால் நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். அப்பொழுது நாம் முகமுகமாய்த் தரிசிப்போம்; நாம் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்வோம் (1 கொரிந்தியர் 13:9-12). அல்லது சங்கீதக்காரனின் வார்த்தைகளை இரவல் வாங்கினால், நாம் நீதியில் அவருடைய முகத்தைத் தரிசிப்போம்; நாம் விழிக்கும்போது அவருடைய சாயலால் திருப்தியாவோம் (சங்கீதம் 17:15). அந்நாள்வரை, இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் என்ற வார்த்தைகளின் முழுமையான அர்த்தம் புரிந்துகொள்ளப்படமாட்டாது (Dr. John Brown).





