நமது விவாதத்திற்கு முடிவாகச் சில காரியங்களைக் குறிப்பிட்டு விடைபெறுகிறேன்.
1) கர்த்தருடைய இராபோஜனத்தை ஏன் அனுசரிக்க வேண்டும்? அ) அவரை நினைவுகூர்ந்துகொள்ளக் கர்த்தருடைய இராபோஜனம் அனுசரிக்க வேண்டும் (1 கொரிந்தியர் 11:24-25). ஆ) அவருடைய மரணத்தின் மூலம் கிடைத்த சுவிசேஷத்தை உலகத்திற்குத் தெரிவிக்கக் கர்த்தருடைய இராபோஜனம் அனுசரிக்க வேண்டும் (1 கொரிந்தியர் 11:26). இ) சுயபரிசோதனை செய்துகொண்டு கர்த்தருடைய சந்நிதியில் நம்மை நாம் பரிசுத்தப்படுத்திக்கொள்ள உதவும் ஒரு வாய்ப்பாகக் கர்த்தருடைய இராபோஜனம் அனுசரிக்க வேண்டும் (1 கொரிந்தியர் 11:27-28). அதாவது ஓபிர் அவர்கள் சொன்னது போல, வாரமெல்லாம் செய்த பாவங்களைக் கழுவிக்கொள்ளும் ஆவிக்குரிய குளியலாகப் பந்தி உதவுகிறது என்பது என் கருத்தல்ல. இன்று நான் பாவம் செய்தால், இன்றே கர்த்தருடைய கிருபாசனத்தைத் தைரியமாகக் கிட்டிச்சேர்ந்து மன்னிப்பைப் பெறும் பாக்கியம் இருக்கும்போது, பந்தி நிகழ்ச்சி வரை காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் தேவன் மன்னிப்பார் (1 யோவான் 1:9), பந்தி எடுத்தால் அல்ல. இருப்பினும், பந்தியை உண்மையில் மதிப்பவர்கள் அனைவரும் பாத்திரமாக அதில் கை வைப்பார்கள் என்பதால், சுத்திகரிப்புக்கும் மற்றும் அர்ப்பணிப்புக்கும் (Re-dedication) அது கண்டிப்பாக ஒரு சிறப்பு வாய்ப்பே. ஈ) கிறிஸ்துவுக்குள் சபை ஒரே சரீரமாக இருக்கிற உண்மையை நடைமுறைப்படுத்தும்படி ஒருவரையொருவர் தூண்டுவதற்குக் கர்த்தருடைய இராபோஜனம் அனுசரிக்க வேண்டும் (1 கொரிந்தியர் 10:17).
இவையே பந்தியில் பங்குபெற வேதம் போதிக்கும் காரணங்கள். ஆனால், பந்தியில் பங்கு பெறுவது நித்திய ஜீவன் பெறுவதற்கு, கடைசி நாளில் உயிர்த்தெழுவதற்கு, இன்னபிற எல்லாவற்றிற்கும் போன்றவையெல்லாம் முழுமையற்ற வேதப் புரிதலில் இருந்து பிறந்த கருத்துக்களே என்று இந்த விவாதத்தில் நாம் உறுதிப்படுத்திக்கொண்டோம். எனவே சரியான வேதப் புரிதலோடு இந்தப் பரிசுத்த நியமத்தை அனுசரிக்கும்படி வாசகர்களுக்கு அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.
2) ஓபிர் அவர்களுக்குச் சில ஆலோசனைகள்: அ) "வேதபூர்வமான இரட்சிப்பின் அனுபவம் பெற்றும் கர்த்தருடைய இராபோஜனத்தின் முக்கியத்துவத்தை, மகிமையின் பிரபாவங்களை கிரகிக்க முடியாமல் இருப்பவர்களுக்காக மட்டுமே நான் இந்த நூலைப் பரிசுத்த ஆவியின் ஏவுதலால் எழுதுகிறேன்" (ஓபிர், கர்த்தருடைய இராபோஜன இரகசியம், பக்கம் 39). ஓபிர் அவர்கள் இப்படிச் சொல்லிக்கொள்ளாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறான போதனைகளுக்குப் பரிசுத்த ஆவியானவரைப் பொறுப்பாளியாக்குவது பயங்கரமான குற்றம் என்று தனியாகச் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
ஆ) "தேவன் அனுப்பிய சீர்திருத்தவாதியைப் பின்பற்றாமல் ஒவ்வொருவனும் அகங்கரித்துத் தான் ஒரு சீர்திருத்தவாதி ஆகிவிட வேண்டும் என்று துடித்து, தன் புத்திக்குத் தோன்றிய விதமாகத் திருத்தங்களை முன்மொழிந்தால் நிலைமை அப்படியே மோசமாகும்" (ஓபிர், கர்த்தருடைய இராபோஜன இரகசியம், பக்கம் 54). ஓபிர் அவர்கள் இந்த விமர்சனம் அவருக்கே ஏன் பொருந்தாது என்று தன்னைத் தான் சோதித்துப் பார்ப்பது நல்லது.
இ) "கர்த்தருடைய இராபோஜன நிகழ்ச்சி சபை பக்திவிருத்திக்காக மிகவும் முக்கியமான கட்டளை என்பதால், சபை விரோதியாகிய சாத்தான் இந்த நிகழ்ச்சிக்கு எதிராகப் பகை கொண்டான். கர்த்தருடைய பந்தி விஷயத்தில் அவன் விரிவான குழப்பத்தை உண்டாக்கினான். இந்த ஒரு விஷயத்தில் உள்ள அளவுக்குப் பிரிவினைகள், கருத்து வேறுபாடுகள் அனேகமாக வேறெந்த விஷயத்திலும் இல்லையோ என்னவோ" (ஓபிர், கர்த்தருடைய இராபோஜன இரகசியம், பக்கம் 50). இப்படிக் குழப்பத்தை உண்டாக்கும் கருத்து வேறுபாடுகளை இரட்டிப்பாக்குவதில் சாத்தானுக்கு உதவும் வகையில் ஓபிர் அவர்கள் அஜாக்கிரதையாகப் புத்தகங்கள் எழுதுவதை நிறுத்தினால் அவருக்கு நல்லது. அவர் வேண்டுமென்றே அப்படிச் செய்கிறார் என்று நான் குற்றஞ்சாட்டவில்லை; ஆனால், தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் அதன் விளைவு மட்டும் மாறாது என்று பணிவுடன் நினைப்பூட்டுகிறேன்.
இந்தப் புத்தகம் ஓபிர் அவர்களை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டதல்ல. இருப்பினும், திரவிய மாற்று வாதத்தை ஆதரிக்கும் வாதங்களை அவர் புத்தகத்தில் தயாராகச் சேகரிக்க முடிந்தது என்பதால், அந்தக் கருத்து வேதத்தின் முழுமையான போதனைக்கு எப்படி, ஏன் பொருந்தாது என்று காண்பிக்க அவருடைய வார்த்தைகளைப் பயன்படுத்திக்கொண்டேன். ஓபிர் அவர்களுக்கும், வாசகர் அனைவருக்கும், ஆசிரியருக்கும் கூட, தேவன் ஆயத்தப்படுத்தின வேதப் பாதையில் இணைந்து நடக்கும் பாக்கியத்தைக் கர்த்தர் அருளுவாராக. ஆமென்.





