சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் (லூக்கா 18-1)
நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்; (1 திமோத்தேயு 2:1)
நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா?
நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா? என்று நான் உங்களை கேட்கிறேன். ஏனென்றால் ஜெபமே மனிதனின் இரட்சிப்புக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. நான் உங்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். அது மூன்று வார்த்தைகளில் அடங்கியது. நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா? இந்தக் கேள்விக்கு நீங்கள் மட்டுமே பதிலளிக்க முடியும். நீங்கள் பொது ஆராதனையில் கலந்துகொள்கிறீர்களா இல்லையா என்பது உங்கள் போதகருக்கு தெரியும். உங்கள் வீட்டில் குடும்ப ஜெபம் நடத்துகிறீர்களா இல்லையா என்பது உங்கள் குடும்பத்தாருக்கு தெரியும். ஆனால், நீங்கள் தனிப்பட்ட முறையில் ஜெபிக்கிறீர்களா இல்லையா என்பது உங்களுக்கும் தேவனுக்கும் மட்டுமே தெரியும்.
நான் உங்களுக்கு சொல்லப்போகிற இந்த காரியத்தை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுகிறேன். இந்த கேள்வியை குறித்து, இது எங்களின் தனிப்பட்ட விஷயம் என்று சொல்லாதீர்கள். உங்கள் இருதயம் தேவனுடைய பார்வைக்கு முன்பாக சுத்தமாக இருக்கும் போது நீங்கள் எதைப்பற்றியும் பயப்பட தேவையில்லை!
நாங்கள் ஜெபிக்கிறோம் என்று சொல்லி என்னுடைய கேள்வியை அலட்சியப்படுத்திவிடாதீர்கள்! இந்த கேள்வி மிகவும் அவசியமானாதா என்றும் என்னிடம் கேட்காதீர்கள். ஒருசில நிமிடங்கள் நான் சொல்லப் போகிற காரியங்களை பொறுமையுடன் கேளுங்கள். அப்போது தான் நான் இந்த கேள்வியை கேட்டதற்கான காரணத்தை புரிந்துக்கொள்வீர்கள்.
இரட்சிப்பிற்கு தேவை
நான் இதை ஒரு ஆலோசனையாக சொல்லாமல், மிக முக்கியமான தேவை என்று சொல்லுகிறேன். நான் இப்போது ஒரு குழந்தையிடமோ அல்லது ஒரு முட்டாளிடமோ பேசவில்லை. அதேபோல நான் ஒரு அவிசுவாசியிடமும் பேசவில்லை. எங்கே கொஞ்சம் கொடுக்கப்படுகிறதோ, அங்கே கொஞ்சம் கேட்கப்படும். தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளும் மக்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். அப்படி தங்களை அழைத்துக்கொள்ளுகிற மக்களைப் பார்த்து நான்சொல்வது என்னவென்றால், ஜெபிக்காத எந்த ஒரு ஆணோ அல்லது பெண்ணோ இரட்சிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது.
இரட்சிப்பு கிருபையினால் மாத்திரமே கிடைக்கிறது என்று ஆணித் தரமாக சொல்லுகிறேன். மிகப்பெரிய பாவிக்கும் அது முழுமையாய் இலவசமாக கிடைக்கிறதாய் இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்ளுகிறேன். இன்றும் மரணப்படுக்கையில் இருப்பவர்களை பார்த்து "இப்போதே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள், அப்போது நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்" (அப் 16:31) என்று சொல்ல தயங்கமாட்டேன். ஆனால், ஒருவர் இந்த வார்த்தைகளைக் கேட்காமலேயே இரட்சிக்கப்பட்டதாக நான் வேதத்தில் பார்க்கவில்லை. மனிதர்கள் தங்கள் இருதயத்திலிருந்து "கர்த்தராகிய இயேசுவே, எனக்கு அதைத் தாரும்" என்று கேட்காமல் தங்கள் பாவத்திற்கான மன்னிப்பை பெற்றுகொண்டதாக நான் பார்க்கவில்லை. தங்கள் ஜெபங்களின்மூலமாக மட்டுமே இரட்சிப்பை யாரும் பெறுகிறதில்ல. ஆனால், ஜெபிக்காமல் இரட்சிப்பை பெற்று கொண்ட ஒருவரையும் நான் கண்டதுமில்லை!
ஒருவர் வேதத்தை வாசிப்பது இரட்சிப்புக்கு முற்றிலும் அவசியமானது அல்ல! ஏனென்றால் மனிதர்கள் படிப்பறிவு அற்றவர்களாகவோ அல்லது குருடராகவோ இருந்தாலும் கூட கிறிஸ்து அவர்கள் இருதயத்தில் இருக்க முடியும்! அதேபோல் மனிதர்கள் சுவிசேஷ பிரசங்கத்ததை கேட்பதும் இரட்சிப்பை பெற்றுக் கொள்வதற்கு அத்தியாவசிய தேவை யில்லை. ஏனெனில் மக்கள் சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களிலே கூட வாழலாம் அல்லது வாழ்நாள் முழுவதும் படுக்கையிலே இருக்கும் வியாதியுள்ளவராய் இருக்கலாம் அல்லது செவிடராய் இருக்கலாம். ஆனால் ஜெபத்தைப் பற்றி அதையே சொல்லமுடியாது. ஜெபமானது மனிதன் இரட்சிப்பை பெற்றுக்கொள்வதற்கு அத்தியாவசிய தேவையாய் இருக்கிறது.
தனிப்பட்ட பொறுப்பு
மனிதர்கள் கற்றுகொள்வதற்கும், சுகாதாரத்தை பெற்று கொள்வதற்கும் வித்தியாசமான பாதையென ஒன்றுமில்லை. பிரதம மந்திரிகள், அரசர்கள், ஏழை மற்றும் விவசாயிகள் என அனைவரும் ஒரே மாதிரி தான் தங்கள் சரீரத் தேவைகளையும், இருதயத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளுகிறார்கள். எந்த மனிதனும் மற்றவர்களுக்கு பதிலாக உண்ணவோ, குடிக்கவோ அல்லது தூங்கவோ முடியாது. அதேபோல் எந்த ஒரு மனிதனும் மற்றவர்களுக்காக கல்விக் கற்க முடியாது. இவை அனைத்தும் ஒவ்வொருவரும் தாங்களே செய்ய வேண்டியவை, இல்லையெனில் அவை நிறைவேறாது.
எப்படி நமது மனதுக்கும் உடலுக்கும் தேவைகள் இருக்கிறதோ அதேபோல் நமது ஆத்துமாவிற்கும் தேவைகள் இருக்கிறது. நமது ஆத்துமா நன்றாக இருப்பதற்கு ஒருசில தேவைகள் மிகவும் அத்தியாவசியமாய் இருக்கிறது. அந்த தேவைகளை ஒவ்வொருவரும் தங்களுக்கென்றே செய்யவேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கென்றே மனந்திரும்பவேண்டும். ஒவ்வொருவரும் கிறிஸ்துவிடம் தங்களுக்கென்றே செல்லவேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கென்றே தேவனிடம் ஜெபிக்க வேண்டும். இந்த காரியங்களை உங்களுக்காக நீங்கள் மட்டுமே செய்யமுடியும். உங்களுக்கு பதிலாக வேறு யாராவது இவைகளை செய்யமுடியாது. ஜெபிக்காமல் இருப்பது தேவனுக்குள் இல்லாமல் இருப்பதாகும், கிறிஸ்துவுக்குள் இல்லாமல் இருப்பது, கிருபை இல்லாமல் இருப்பதாகும், நம்பிக்கை இல்லாமல் இருப்பது, பரலோகம் இல்லாமல் இருப்பதாகும். அது நரகத்தின் சாலையில் போய்க்கொண்டிருப்பது போல் ஆகும். இப்போது, நான் கேட்கும் கேள்வியான நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா? என்று கேட்பதில் ஆச்சரியமில்லையே?
ஜெபிப்பவர்கள்
மறுபடியும் நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா? என்று கேட்கிறேன். ஏனெனில் ஜெபம் செய்வதின் பழக்கமே மெய்யான கிறிஸ்தவனின் ஒரு உறுதியான அடையாளமாய் இருக்கிறது.
பூமியில் வாழ்கின்ற ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையும் ஜெபத்திற்கு மரியாதை கொடுக்கிறார்கள். எப்போது ஜீவனைபெற்று, கிறிஸ்தவ சத்தியத்தை அறிந்துகொள்ள ஆரம்பிக்கிறார்களோ அந்த நிமிடமே அவர்கள் ஜெபிக்கிறார்கள். ஒரு குழந்தை இந்த உலகத்தில் பிறக்கும்போது அது உயிரோடுயிருப்பதற்கான முதல் அறிகுறி சுவாசிப்பது. அதுபோல் மறுபிறப்படைந்தவர்களின் முதல் செய்கை ஜெபமாய் இருக்கிறது.
கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒவ்வொரு மனிதனிலும் காணப்படும் பொதுவான அம்சம் ஜெபம். "அவர்கள் இரவும் பகலும் அவரை நோக்கி கூப்பிடுகிறார்கள்" (லூக் 18:1). பரிசுத்த ஆவியானவர் அவர்களை புதுசிருஷ்டியாக மாற்றி, தத்தெடுக்கப்பட்டவர்கள் என்ற உணர்வை அவர்களுக்கு தந்து, அவர்களை 'அப்பா பிதாவே' என்று கூப்பிட வைக்கிறார். (ரோம 8:15) கர்த்தராகிய இயேசு அவர்களை எழுப்பி, அவர்களுக்கு நாவையும் பேச்சையும் கொடுத்து, இனி ஊமையாய் இருக்கமாட்டாய் என்கிறார். தேவனுக்கு ஊமையான பிள்ளைகள் கிடையாது. எப்படி பிறந்த குழந்தை அழுகிறதோ அதேபோல், ஜெபிப்பது புது சிருஷ்டியின் ஒரு பகுதியாய் இருக்கிறது. அவர்கள் அவர்களுக்கு தேவையான கிருபையின் அவசியத்தை பார்க்கிறார்கள். அவர்களுடைய வெறுமையையும், பெலவீனத்தையும் உணர்கிறார்கள். இதைக்காட்டிலும் ஞானமான காரியத்தை அவர்கள் அவர்களுக்கு செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் ஜெபிக்க வேண்டும்.
நான் வேதத்தில் உள்ள பரிசுத்தர்களின் வாழ்க்கையை கவனித்து பார்க்கிறேன். ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை உள்ள முழு வரலாற்றிலும் எந்த ஒரு மனிதனையும் ஜெபம் செய்யாதவனாக நான் பார்க்கவில்லை. இரட்சிக்கப்பட்டவர்களைக் குறித்து, அவர்கள் கர்த்தரை நோக்கி கூப்பிட்டார்கள் (1பேது 1:17) அல்லது அவர்கள் இயேசு கிறிஸ்துவை நோக்கி கூப்பிட்டார்கள் (1கொரி 1:2) என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் கெட்டுப்போகிறவர்களைக் குறித்து, ‘அவர்கள் கர்த்தரை நோக்கி தொழுகிறதில்லை’ (சங் 14:4) வேதம் சொல்லுகிறது.
வேதத்தின் நாட்களிலிருந்து வரலாற்றில் மேம்பட்ட வாழ்க்கை வாழ்ந்த அநேக கிறிஸ்தவர்களின் வாழ்க்கையை நான் படித்திருக்கிறேன். அவர்களில் சிலர் செல்வந்தர்கள், சிலர் ஏழைகள், சிலர் நன்கு படித்திருப்பார்கள், ஒரு சிலர் படிப்பறிவு இல்லாதவர்களாய் இருந்திருக்கிறார்கள். சிலர் எப்பிஸ்கோப்பியர் (Episcopalians), சிலர் கிறிஸ்தவ பெயர்களை கொண்டவர்கள், சிலர் கல்வினிச போதனையை பின்பற்றுபவர்கள், சிலர் ஆர்மினீச போதனையை பின்பற்றுபவர்கள், சிலர் கர்த்தருடைய திருபந்தியை விருப்பத்துடன் அனுசரிப்பார்கள். ஆனால் இவர்கள் அனைவரிடமும் காணப்பட்ட ஒரு பொதுவான பண்பு அனைவரும் ஜெபிக்கிற மக்களாய் இருந்திருக்கிறார்கள்.
நம்முடைய காலத்தில் மிஷனரி சங்கங்களின் அறிக்கைகளை நான் வாசித்திருக்கிறேன். உலகத்தில் உள்ள அநேக ஆண்களும் பெண்களும் சுவிசேஷத்தை பெற்றுக்கொள்ளுகிறதை நான் சந்தோஷத்தோடு பார்க்கிறேன். ஆப்பிரிக்காவிலும், நியூசிலாந்திலும், இந்தியாவிலும், சீனாவிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மனந்திரும்புகிற ஒவ்வொரு மக்களும் மற்றவர்களுடன் எல்லா காரியத்திலும் வித்தியாசப்படுகிறார்கள். ஆனால் எல்லா மிஷனரி இயக்கங்களின் மூலமாக நான் அறிந்து கொண்ட வியக்கத்தக்க விஷயம்: மனந்திரும்புகிற மக்கள் ஜெபிக்கிறார்கள் என்பதே!
ஜெபிக்காமல் இருப்பது
ஒரு நபர் ஜெபத்திலே கருத்தின்றி, நேர்மையின்றி ஜெபிக்கலாம் என்பதை நான் மறுக்கவில்லை. ஒரு மனிதன் ஜெபிப்பதை பொறுத்தே அவனுடைய ஆத்தும நிலை இருக்கிறது என்று நான் சொல்லவில்லை. ஏனென்றால் எப்படி கிறிஸ்தவத்தின் அனைத்து காரியங்களிலும் மாய்மாலமும், பாசாங்குதனமும் இருக்கிறதோ அதேபோல் ஜெபத்திலும் இருக்கிறது. ஆனால், நான் சொல்லவருவது என்னவென்றால்: ஜெபிக்காமல் இருப்பது, ஒரு மனிதன் இன்னும் உண்மையான கிறிஸ்தவன் அல்ல என்பதின் தெளிவான அடையாளம். அவர்கள் உண்மையாகவே பாவத்தை இன்னும் உணரவில்லை. அவர்கள் தேவனை நேசிக்கவில்லை. அவர்கள் கிறிஸ்துவுக்கு கடன்பட்டிருக்கிறார்கள் என்பதை உணரவில்லை. அவர்கள் பரிசுத்தமாகுதலின் பாதையில் ஓடவில்லை. அவர்கள் பரலோகத்தை விரும்பவில்லை. அவர்கள் இன்னும் மறுபிறப்பை அடையவில்லை. அவர்கள் இன்னும் புது சிருஷ்டியாக மாற்றம் அடையவில்லை. ஒருவேளை அவர்கள் தெரிந்துகொள்ளுதலை பற்றியும், கிருபையை பற்றியும், விசுவாசத்தை பற்றியும், கிறிஸ்தவனுக்கு இருக்க வேண்டிய நம்பிக்கையை பற்றியும், வேதத்தை பற்றியும் பெருமையாக பேசி மக்களை ஏமாற்றலாம். ஆனால் அவர்கள் ஜெபிக்கவில்லை என்றால் இவை எல்லாமே வீண்தான்.
உண்மையான ஆதாரம்
நான் இன்னும் ஒருசில காரியங்களை சொல்லுகிறேன். பரிசுத்த ஆவியானவர் ஒரு மனிதனில் உண்மையாகவே செயல்படுகிறார் என்பதற்கு போதுமான சாட்சி ஒருமனிதன் தன்னுடைய இருதயத்திலிருந்து ஏறெடுக்கும் ஜெபமாகும். ஒரு மனிதன் நன்றாக பிரசங்கிகலாம், புத்தகம் எழுதலாம், அழகாக பேசலாம், நல்ல காரியங்களை செய்வதில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளலாம். ஆனால் இது எல்லாம் செய்தாலும் அவன் யூதாசை போலவும் இருக்கமுடியும். ஒரு மனிதனுக்கு அக்கறை வரும்போது அவன் தனியறைக்கு சென்று தன்னுடைய ஆத்துமாவை தேவனுக்கு முன்பாக ஜெபத்தில் ஊற்றிவிடுகிறான். ஜெபிப்பதை தேவன் மனந்திரும்புகிற மனிதனுக்கு அடையாளமாக சொல்லுகிறார். தேவன் அனனியாவை தமஸ்குவில் உள்ள யூதாவின் வீட்டிற்கு அனுப்பும்போது சவுல் மனந்திரும்பியதற்கான ஒரே ஒரு அடையாளத்தை மட்டுமே சொல்லி அனுப்புகிறார் "அவன் இப்போது ஜெபிக்கிறான்." (அப் 9:11).
ஒரு மனிதன் ஜெபத்தில் வருவதற்கு முன்பாக அநேக எண்ணங்கள் அவனுடைய சிந்தையில் ஓடும் என்பது எனக்கு தெரியும். அவர்களுக்கு அநேக பிரச்சனைகள், விருப்பங்கள், உணர்ச்சிவசமான காரியங்கள், வாழ்த்துக்கள், நம்பிக்கைகள், தீர்மானங்கள், பயங்கள் என பல விஷயங்கள் அவர்கள் சிந்தனையில் ஓடும். இந்த பிரச்சனைகள் எல்லாருக்கும் வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இதே மனதோடு ஜெபிப்பவர்கள் முடிவில் தேவனை தேடாத மக்களோடுதான் இருக்கப்போகிறார்கள். அநேக நேரங்களில் மனிதர்களின் ஜெபங்கள் காலையில் பெய்யும் பனி சூரியன் உதித்தவுடன் மறைவது போல இருக்கிறது. உண்மையான இருதயத்தில் இருந்தும், நொறுங்குண்ட ஆவியில் இருந்தும் ஆரம்பமாகும் ஜெபத்தின் மதிப்போ எல்லாவற்றைக்காட்டிலும் மிகவும் உயர்ந்தது.
பரிசுத்த ஆவியானவர் ஒரு பாவியை அவனுடைய பாவ வழியில் இருந்து அழைக்கிறதற்கு அநேக சந்தர்பங்களை பயன்படுத்தி மெதுவாக அவனை கிறிஸ்துவை பின்பற்ற செய்கிறார் என்பதை அறிவேன். ஆனால் என்னுடைய கண்கள் எதை காண்கிறதோ அதை வைத்துதான் என்னால் தீர்ப்பு செய்யமுடியும். நான் எந்த ஒரு மனிதனையும் அவன் விசுவாசிக்க ஆரம்பிக்காத வரை நீதிமான் என்று சொல்லமாட்டேன். அதேபோல் எந்த ஒரு மனிதனையும் அவன் ஜெபிக்க ஆரம்பிக்காதவரை விசுவாசி என்று சொல்ல மாட்டேன். ஊமையான விசுவாசத்தை பற்றி என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. விசுவாசத்தின் முதல் செய்கை தேவனுடன் பேசுவது. எப்படி சரீரத்திற்கு உயிர் முக்கியமாக இருக்கிறதோ அதேபோல் ஆத்துமாவிற்கு விசுவாசம் முக்கியமாக இருக்கிறது. எப்படி நம் சரீரத்திற்கு மூச்சு அவசியமாய் இருக்கிறதோ அதேபோல் நமது விசுவாசத்திற்கு ஜெபம் அவசியமாய் இருக்கிறது. எப்படி ஒரு மனிதன் மூச்சு விடாமல் உயிர் வாழமுடியும் என்பது என் அறிவுக்கு எட்டவில்லையோ அதேபோல் ஒரு மனிதன் விசுவாசிக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஜெபிக்காமல் இருப்பதும் என் அறிவுக்கு எட்டாத காரியமாயிருக்கிறது.
ஒரு சுவிசேஷ பிரசங்கி ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரசங்கிக்கும் போது அதை பார்த்து ஆச்சரியப்படாதீர்கள். ஏனென்றால் இந்த காரியத்தை உங்களுக்கு விளக்கப்படுத்துவதே அவர்கள் நோக்கமாய் இருக்கிறது. நீங்கள் ஜெபிக்க வேண்டும் என்பதே அவர்கள் விருப்பமாய் இருக்கிறது. கிறிஸ்தவ கோட்பாடுகளை குறித்த உங்கள் பார்வை சரியானதாக இருக்கலாம். புராட்டஸ்டன்டு சீர்திருத்தத்தின் மீது உங்கள் அன்பு சரியானதாக இருக்கலாம். ஆனாலும் இவையெல்லாம் உங்கள் தலை அறிவுடனும், உங்களின் திருச்சபையுடனும் நின்று விடலாம். ஆனால், பிரசங்கியாகிய எங்களுக்கு உண்மையாகவே நீங்கள் தேவ கிருபையின் சிங்காசனத்தின் முன்பு போகிறீர்களா என்பதும், எப்படி தேவனைப் பற்றி மற்றவர்களுடன் பேசுகிறீரகளோ அதேபோல் நீங்களும் தேவனுடன் பேசுகிறீர்களா என்பதை அறிவதும் தான் முக்கியமாய் இருக்கிறது.
நீங்கள் உண்மையான விசுவாசி என்பதை அறிய விரும்புகிறீர்களா? அப்படியானால் என் கேள்வி மிக முக்கியமானது என்பதை உறுதியாக நினைவில் வையுங்கள் - நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா?
சிலர் ஒருபோது ஜெபிக்கிறதில்லை
நீங்கள் ஜெபிக்கிறீர்களா? என்று நான் கேட்கிறேன், ஏனெனில் கிறிஸ்தவத்தில் தனிப்பட்ட ஜெபத்தைப் போல புறக்கணிக்கப்படும் கடமை வேறு எதுவும் இல்லை.
கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வதற்கு அருமையான சூழ்நிலைகள் நிறைந்த காலப்பகுதியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முன் எப்போதும் இருந்ததைவிட இப்போது அநேக இடங்களில் பொது ஆராதனை ஸ்தலங்கள் இருக்கின்றன. முன் எப்போதும் இருந்ததைவிட இப்போது அநேக மக்கள் ஆராதனைக்கு செல்லுகிறார்கள். இப்படி மக்கள் அனைத்து பொதுவான கிறிஸ்தவ ஜெபகூட்டங்களை நடத்தினாலும், அநேகர் தனிஜெபம் செய்வது இல்லை என்று முழுமையாக நம்புகிறேன். தேவனுக்கும் நமது ஆத்துமாவுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்களை எந்த கண்ணும் காண்பதில்லை. அதினால் அநேகர் தனிஜெபத்தை செய்யாமல் போகிறார்கள்.
ஆயிரக்கணக்கானோர் ஒருபோதும் ஜெபம் என்று ஒரு வார்த்தையும் உச்சரிப்பதில்லை என்று நான் நம்புகிறேன். அவர்கள் சாப்பிடுகிறார்கள், குடிக்கிறார்கள், தூங்குகிறார்கள், வேலைக்கு செல்லுகிறார்கள், மறுபடியும் வீட்டுக்கு திரும்புகிறார்கள். அவர்கள் கர்த்தர் கொடுத்த காற்றை சுவாசிக்கிறார்கள், தேவனுடைய உலகத்திலே சுற்றி திரிகிறார்கள், கர்த்தருடைய இரக்கங்களினால் சந்தோஷமடைகிறார்கள். அவர்கள் மரிக்கும் சரீரத்தை பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்பாக நியாயதீர்ப்பும் நித்தியமும் இருக்கிறது. ஆனாலும் அவர்கள் தேவனிடம் ஜெபிப்பதில்லை. அழிந்து போகிற மிருகத்தை போல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆத்துமா இல்லாத உயிரினங்களை போல வாழ்ந்து, உயிரினங்களை போல நடந்து கொள்ளுகிறார்கள். அவர்களுக்கு சுவாசத்தையும் ஜீவனையும் எல்லாவற்றையும் கொடுத்த தேவனிடம் ஒரு வார்த்தை கூட பேசியிருக்கமாட்டார்கள். முடிவிலே தேவனின் வாயிலிருந்து அவர்களுக்கு நித்தியத்திற்கு தண்டனை வரப்போகிறது. இது எவ்வளவு கொடூரமானது. ஆனால் இது ஒரு இரகசியமாக நடக்கப் போகிற காரியமல்ல. எல்லா மக்களும் அறிந்து கொள்ளுகிற விதத்தில்தான் இருக்கப்போகிறது.
சிலர் ஜெப வடிவங்களை மட்டும் பயன்படுத்துகிறார்கள்
அநேக ஆயிரகணக்கான மக்களின் ஜெபங்கள் வெறும் வாயின் வார்த்தைகளாகவும், மனப்பாடம் செய்த ஜெபத்தை திரும்ப திரும்ப சொல்வதாகவும் தான் இருக்கிறது. மனப்பாடம் செய்த ஜெபத்தின் அர்த்தத்தை கூட அறியாமல் ஜெபிக்கிறார்கள். ஒரு சிலர் சிறிய வயதில் தங்கள் பள்ளியில் சொல்லிகொடுத்த ஜெபத்தை அவசர அவசரமாக சொல்லி விடுவார்கள். ஒரு சிலர் தாங்கள் பின்பற்றுகிற விசுவாச அறிக்கையில் இருந்து ஜெபிப்பார்கள். ஆனால் அவர்கள் விசுவாச அறிக்கை என்ன எதிர்பார்க்கிறது என்பதை மறந்துபோய் ஜெபிப்பார்கள். ஒரு சிலர் ஜெபத்தில் இயேசு சொல்லிக் கொடுத்த ஜெபத்தை செய்வார்கள். ஆனால் அந்த ஜெபத்தை மனப்பூர்வமாகவோ அல்லது அதின் ஆசிர்வாதங்களை அறிந்தவர்களாகவோ ஜெபிக்கமாட்டார்கள்.
நன்றாக இறையியலை தெரிந்துவைத்திருக்கிறவர்கள் கூட தங்கள் ஜெபங்களை குறித்து மிகவும் அலட்சியமாகவே இருக்கிறார்கள். படுக்கைக்கு சென்ற பிறகு வாயில் முனுமுனுவென்று ஜெபிப்பது அல்லது துணி துவைக்கும் போது ஜெபிப்பது அல்லது காலையில் உடை உடுத்தும் போது ஜெபிப்பது என அலட்சியமாக இருக்கிறார்கள். ஆனால் இப்படி ஜெபித்துவிட்டு தேவனிடம் தங்கள் ஜெபம் கேட்கப் பட்டுவிட்டது என்று தவறாக நினைத்து கொள்ளுகிறார்கள். தேவனின் பார்வையில் இப்படி செய்கிற ஜெபம் ஜெபமாக ஏற்றுகொள்ளப்படாது. நம்முடைய இருதயத்திலிருந்து வராத வார்த்தைகள் நமது ஆத்துமாவிற்கு ஒரு நாளும் பயனை தராது. அது நரகலான விக்கிரகங்களுக்கு முன்பாக கொட்டுகிற முழக்கம் போல் இருக்கிறது. இருதயத்திலிருந்து வராமல் நமது வாயிலிருந்தும் உதடுகளிலிருந்தும் வருகிற ஜெபம் ஜெபமல்ல.
தமஸ்கு வீதியில் கர்த்தர் சவுலை சந்திப்பதற்கு முன்பு சவுல் அநேக நீண்ட ஜெபங்களை செய்திருப்பார் என நிச்சயம் நம்புகிறேன். ஆனால் இயேசுவை சந்தித்த அந்த நிகழ்ச்சிக்கு பிறகு நொறுங்குண்ட இருதயத்திலிருந்து சவுல் ஜெபிக்கும்போது "அவன் இப்போது ஜெபிக்கிறான்" என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறதா? நான் சொல்வதை கேளுங்கள். நான் காரணமின்றி இவ்வாறு பேசவில்லை என்பதைக் காட்டுகிறேன். எனது அறிக்கைகள் மிகைப்படுத்தப்பட்டவை என்றும் உத்தரவாதமற்றவை என்றும் நினைக்கிறீர்களா? கவனமாகக் கேளுங்கள், நான் உங்களுக்கு உண்மையை மட்டுமே சொல்கிறேன் என்பதை விரைவில் காட்டுகிறேன்.
மனிதன் ஏன் ஜெபிக்கிறதில்லை
ஜெபிப்பது என்பது எந்த ஒரு மனிதனின் இயற்கையான குணநலன் அல்ல. "மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை" (ரோமர் 8:7). மனிதனின் இருதயம் தேவனை விட்டு பிரிந்து தூரமாக போவதைத்தான் மிகவும் விரும்புகிறது. கர்த்தருக்கு முன்பாக மனிதர்களுக்கு பய உணர்வு மட்டுமே எஞ்சி இருக்கிறது.
தன்னுடைய பாவத்தைப்பற்றி உணராமல், தன்னுடைய ஆவிக்குரிய நிலையை உணராமல், காணப்படாத காரியங்களில் விசுவாசம் இல்லாமல், பரலோகத்தின் மீதும் பரிசுத்தத்தின் மீதும் விருப்பமில்லாமல் ஜெபிக்கும் ஜெபத்தினால் என்ன பிரயோஜனம்? இவை எல்லாவற்றையும் மக்கள் அறிவில் அறிந்திருக்கிறார்கள். ஆனால் உணர்வுகளில் அறிந்து வைத்திருக்கவில்லை. அநேக மக்கள் அகலமான பாதையில் பயணிக் கிறார்கள். காரியம் இப்படி இருப்பதால்தான், ஒருசிலர் மட்டுமே உண்மையாக ஜெபிக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.
ஜெபிப்பது என்பது நாகரிகமாக இருக்காது என்று சொல்லுகிறவர்களை பற்றி சிந்தித்து பாருங்கள். ஜெபிக்க அநேக மக்கள் வெட்கப்படுகிறார்கள். நூற்றுகணக்கான மக்கள் தாங்கள் ஜெபிப்பதை வெளிப்படையாக சொல்வதற்கு மறுக்கிறார்கள். ஆயிரக் கணக்கான மக்கள் புறஜாதி மக்களுடன் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஜெபிக்காமலே படுக்கைக்கு செல்கிறார்கள். நன்றாக உடுத்துகிறார்கள், திரையரங்ககளுக்கு செல்கிறார்கள், நன்றாக சிந்தித்து செயல்படுகிறார்கள், நல்ல நாகரீகத்துடன் இருக்கிறார்கள். ஆனால் ஜெபிக்க மறுக்கிறார்கள். நான் இதை மறுக்க முடியாது. ஏனெனில் அநேக மக்கள் ஜெபிக்க வெட்கப்படுகிறார்கள் என்பது சமுதாயத்தில் நான் பொதுவாக பார்க்க கூடியதாயிருக்கிறது. இதினால் தான் ஒருசிலர் மட்டுமே உண்மையாக ஜெபிக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.
அநேக மக்கள் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி சிந்தித்து பாருங்கள். இரவும் பகலும் அவர்கள் பாவத்தோடு விளையாடி கொண்டு இருந்ததையும், பாவத்தோடு கொஞ்சி கொளாவி கொண்டு இருந்ததையும் நீங்கள் சிந்தித்துபாருங்கள். உலகத்துக்காகவும் அதில் உள்ளவை களுக்காகவும் அவர்கள் வாழ்ந்தபோது, அவர்கள் உலகத்திற்கு எதிராக ஜெபித்தார்கள் என்று நாம் எப்படி சொல்லமுடியும்? தேவனுக்காக சேவை செய்ய ஒரு சிறிய அக்கறை கூட காட்டாத அவர்களை பார்த்து, தேவனுக்காக சேவை செய்ய கர்த்தரிடம் கிருபையை கேட்பார்கள் என்று எப்படி சொல்லமுடியும்? முடியவே முடியாது. அநேக மக்கள் தேவனிடம் எதையும் கேட்கவில்லை. அப்படி கேட்டாலும் எதை கேட்கிறோம் என்பதை அறிந்து கேட்கவில்லை என்பது மிகவும் தெளிவாய் தெரிகிறது. ஜெபமும் பாவமும் ஒருசேர ஒரே இருதயத்தில் வாழமுடியாது. ஜெபம் பாவத்தை இல்லாமலாக்கும் அல்லது பாவம் ஜெபத்தை இல்லாமலாக்கும். நான் அநேக மக்களின் வாழ்க்கையை பார்ப்பதால் இந்த உண்மையை மறுக்கமுடியாது. இதினால் தான் ஒருசிலர் மட்டுமே ஜெபிக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.
அநேக மக்களின் மரணங்களை பற்றி சிந்தித்து பாருங்கள். எத்தனை மக்கள் மரணத்திற்கு அருகில் செல்லும்போது தாங்கள் தேவனுக்கு அந்நியர்களாக இருப்பதைப் பார்த்திருப்பார்கள். அவர்கள் அப்போது சுவிசேஷத்தை அறியாமல் இருந்ததற்காக மட்டும் வருத்தப்படுகிறதில்லை. கர்த்தரிடம் பேசுவதற்கான வல்லமை அற்றவர்களாக இருப்பதை நினைத்து வருத்தப்படுகிறார்கள். அந்த தருணத்தில் தேவனிடம் செல்வதற்கு அவர்கள் எடுத்த முயற்சிகளில் தடுமாற்றமும் கூச்சமும் காணப்படுகிறது. அவர்கள் ஏதோ ஒரு புதிதான காரியத்தை கையில் எடுத்தது போல் காணப்படுகிறார்கள். அவர்கள் கர்த்தரிடம் இதற்கு முன்பாக பேசினதில்லை. யாரோ ஒருவர் அவர்களுக்கு அறிமுகம் தரவேண்டும் என நினைக்கிறார்கள். ஒரு போதகர் ஒரு பெண்ணின் வியாதியின் கடைசி தருணத்தில் சென்றபோது அந்த பெண் கவலையோடு போதகரிடம் கேட்ட காரியம் எனக்கு ஞாபகம் வருகிறது. அந்த வியாதி நிறைந்த பெண், போதகரை பார்த்து தனக்காக ஜெபிக்கும்படி மிகவும் ஆசையாக கேட்டாள். அதற்கு அந்த போதகர் நான் உங்களுக்காக என்ன ஜெபிக்கவேண்டும் என்று கேட்டார். ஆனால் அவளிடமிருந்து அவளுடைய ஆத்துமாவிற்கு பிரயோஜனமாக தேவனிடம் கேட்ககூடிய ஒரு வார்த்தைகூட பதிலாக வரவில்லை. அவள் எதிர்பார்த்ததெல்லாம் ஒரு சராசரி போதகரின் ஜெபத்தை மட்டுமே. நான் இதை தெளிவாக புரிந்துகொண்டேன். மரணப்படுக்கை பல இரகசியங்களை வெளிப்படுத்தும். வியாதி மற்றும் மரணப்படுக்கையில் உள்ள மக்களிடம் நான் கண்டதை என்னால் மறக்க முடியாது. இதுவும் சிலரே ஜெபிக்கிறார்கள் என்று நம்புவதற்கு என்னை வழி நடத்துகிறது.
உங்கள் இருதயத்தை என்னால் பார்க்க முடியாது. உங்களின் தனிப்பட்ட ஆவிக்குரிய காரியங்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் வேதத்தையும் உலகத்தையும் நான் பார்க்கிறபோது நிச்சயமாக இதைக் காட்டிலும் ஒரு முக்கியமான தேவையான கேள்வியை நான் கேட்டுவிட முடியாது. அது “நீங்கள் ஜெபிக்கிறீர்களா?” என்பதே.
தேவன் ஆயத்தமாயிருக்கிறார்
நீங்கள் ஜெபிக்கிறீர்களா? என்று கேட்கிறேன். ஏனெனில் ஜெபம் என்பது கிறிஸ்தவத்தின் மிகுந்த ஊக்கமளிக்கும் ஒரு செயல்.
மனிதன் ஜெபிக்க முயற்சிப்பான் என்றால் மட்டும் போதும், அதை எளிமையாக்குவதற்கு தேவனையான எல்லாம் தேவனிடம் இருக்கிறது. எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்கப்படும். கோணலான பாதைகள் செவ்வையாக்கப்படும். கரடுமுரடான பாதைகள் சமமாக்கப்படும். ஆனால் ஒரு மனிதன் ஜெபிக்காமல் இருப்பதற்கு எந்த சாக்குப்போக்கும் சொல்லமுடியாது.
எந்த மனிதனாக இருந்தாலும், அவன் எவ்வளவு பெரிய பாவங்களை செய்திருந்தாலும், உதவியற்ற நிலையில் இருந்தாலும் தேவனை பிதாவாக அழைக்க கூடிய வழி இருக்கிறது. இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையில் செய்த தியாக பலியின் மூலமாக ஒரு தீர்வை ஏற்படுத்தியிருக்கிறார். இனி தேவனுடைய பரிசுத்தமும் நீதியும் பாவிகளை பயமுறுத்தி அவர்களை பின்னுக்கு தள்ளப்போவதில்லை. ஆனால் இக்காரியங்கள் இயேசு கிறிஸ்துவின் மூலமாக தேவனிடம் சேருபவர்களுக்கும் கர்த்தருடைய கிருபையை தேடுபவர்களுக்கும் அவருடைய வார்த்தையை கேட்பவர்களுக்கும் மட்டுமே பொருந்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஏறெடுக்கப்பட்ட ஜெபம் ஒருபோதும் ஏமாற்றம் அடைந்ததில்லை. அந்த நாமத்தினாலே மனிதன் தைரியமாக தேவனிடத்தில் கிட்டிசேர்ந்து நம்பிக்கையோடு தேவனிடம் கேட்க முடியும். தேவனும் அந்த ஜெபத்தை கேட்பதற்கு ஆயத்தமாக இருக்கிறார். இந்த காரியங்களை சற்று சிந்தித்துப்பாருங்கள். இது உங்களை உற்சாகப் படுத்தவில்லையா?
எப்போதுமே ஒரு வழக்கறிஞர் உங்களுக்காக பரிந்து பேசுகிறவராக, அவர் மூலமாய் தேவனிடம் சேருகிறவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அந்த வழக்கறிஞர் இயேசு கிறிஸ்துவே. அவர் நமது ஜெபத்தை தம்முடைய சர்வ வல்லமையுள்ள பரிந்து பேசுதலின் மூலமாக தேவனிடம் சேர்க்கிறார். நமது ஜெபம் இயேசுவின் வல்லமையோடு கலக்கும்போது மிகவும் இனிமையாக கர்த்தருடைய சமூகம் நோக்கி செல்கிறது. அந்த ஜெபம், நம்மில் இருந்து பிறக்கும்போது எத்தனை பெலவீனமானதாக இருந்தாலும் நம்முடைய பிரதான ஆசாரியனும் மூத்த சகோதரனுமாகிய இயேசு கிறிஸ்துவின் பக்கத்தில் மிகவும் பலமுள்ளதாகவும் வல்லமையுள்ளதாகவும் இருக்கிறது. ஒரு வங்கி காசோலை காகிதம் கையொப்பம் இல்லாமல் இருந்தால் அது வெறும் வெற்று காகிதமே. ஒரு எழுதுகோலின் முனைப்பகுதியே அதற்கு மதிப்பை அளிக்கிறது. ஆதாமின் ஒரு ஏழைக்குழந்தை ஏறெடுக்கும் ஜெபம் மிகவும் பலவீனமானதுதான். ஆனால் இயேசுவின் கையினால் அதற்கு ஒப்புதல் கொடுக்கப்படும் போது அது மிகவும் பெலமுள்ளதாய் மாறுகிறது. ரோம சாம்ராஜ்யத்தில் ரோம குடியுரிமை பெற்ற ஜனங்களு க்கு உதவி செய்வதற்கு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு இருப்பார். அவரின் வாசற்படி எப்போதும் திறந்திருக்கும். அதேபோல் அவரிடம் இரக்கத்திற்காக, கிருபைக்காகக் கெஞ்சுகின்ற அனைத்து மக்களின் ஜெபத்தையும் கேட்பதற்கு இயேசு கிறிஸ்துவின் காதும் திறந்தே இருக்கிறது. அதுவே இயேசுவின் பணி. அவர்களின் ஜெபத்தை கேட்பதே இயேசுவுக்கு சந்தோஷமானது. இந்த காரியங்களை சற்று யோசித்து பாருங்கள். இது உங்களுக்கு உற்சாகம் அளிக்கவில்லையா?
ஜெபத்தில் நமது பலவீனங்களுக்கு உதவ பரிசுத்த ஆவியானவர் எப்போதும் தயாராக இருக்கிறார். நாம் தேவனிடம் பேசுவதற்கு செய்கிற முயற்சிகளில் உதவுவதே பரிசுத்த ஆவியானவரின் வேலையில் சிறப்பான வேலையாய் இருக்கிறது. எனக்கு ஒன்றும் சொல்ல தெரியவில்லையே என்று கவலை படத்தேவையில்லை. நாம் ஆவியானவரிடம் உதவியை கேட்கும்போது அவர் உதவ தயாராயிருக்கிறார். கர்த்தருடைய மக்கள் ஏறெடுக்கிற ஜெபமானது ஆவியானவரின் வார்த்தைகளே. அவர்களுக்குள் வாசம் செய்கிற பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு கிருபையின் ஆவியை கொடுத்து ஜெபிக்கும்படி செய்கிறார். நிச்சயமாக கர்த்தருடைய பிள்ளைகளின் ஜெபங்கள் கேட்கப்படும் என நம்பலாம். இது வெறுமனே வாயின் வார்த்தைகளில் முனுமுனுப்பவர்களுக்கு அல்ல, பரிசுத்த ஆவியின் உதவியோடு மன்றாடுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த காரியங்களை சற்று யோசித்து பாருங்கள். இவை உங்களுக்கு உற்சாகம் அளிக்கவில்லையா?
வாக்குத்தத்தங்கள்
ஜெபிக்கிறவர்களுக்கு மிகவும் பெரியதும் விலையேறப்பெற்றதுமான வாக்குறுதிகள் உள்ளன. இயேசுகிறிஸ்து பின்வரும் வசனங்களின் மூலமாக அதை சொல்லுகிறார் “கேளுங்கள் அப்பொழுது கொடுக்கப்படும். தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள். தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்கு திறக்கப்படும். ஏனெனில் கேட்கிறவன் எவனும் பெற்று கொள்ளுகிறான். தேடுகிறவன் கண்டடைகிறான். தட்டுகிறவனுக்கு திறக்கப்படுகிறது" (மத்தேயு 7:7,8). மேலும் "நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளை கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்" (மத்தேயு 21:22). "நீங்கள் என் நாமத்தினாலே எதை கேட்பீர்களோ குமாரனில் பிதா மகிமைபடும் படியாக அதை செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான்செய்வேன்." (யோவான் 14:13,14). இரவில் சென்று தன்னுடைய நண்பனிடம் உணவு வருந்திகேட்ட உவமை யிலிருந்தும், கைவிடப்பட்ட விதவையின் உவமையிலிருந்தும் இயேசு எதை சுட்டிகாட்டுகிறார்? (லூக்கா 11:5,18:1). இந்தப் பகுதிகளைச் சிந்தித்துப்பாருங்கள். இது உங்களை ஜெபிப்பதற்கு உற்சாகப்படுத்த வில்லையா?
உதாரணங்கள்
ஜெபத்தின் வல்லமையை விளக்கும் அருமையான உதாரணங்கள் வேதத்தில் இருக்கிறது. ஜெபத்தால் செய்ய முடியாத அளவுக்கு எதுவும் பெரியதாகவோ, கடினமானதாகவோ இல்லை. ஜெபம் நெருப்புக்கு எதிராகவும், காற்றுக்கு எதிராகவும், பூமிக்கு எதிராகவும், நீருக்கு எதிராகவும் ஜெயங்களை பெற்றிருக்கிறது. ஜெபம் செங்கடலை பிரித்தது. ஜெபம் கன்மலையில் இருந்து நீரையும், வானத்திலிருந்து அப்பத்தையும் கொண்டுவந்தது. ஜெபம் சூரியனை ஒரே நிலையிலே நிற்க வைத்தது. ஜெபத்தால் வானத்திலிருந்து அக்கினி இறங்கிவந்து எலியாவின் பலியை பட்சித்தது. ஜெபம் அகிதோப்பேலின் ஆலோசனையை பைத்தியமாக்கி விட்டது. ஜெபம் சனகெரிப் ராஜாவின் இராணுவாட்களை தூக்கியெறிந்தது. ஸ்கொட்லாந்து ராணியான மேரி ஜெபத்தை பற்றி சொன்ன வார்த்தைகள் மிகவும் மேன்மையானது. அவள் சொன்னது "பத்தாயிரம் போர்வீரர் கொண்ட படையை பார்க்கிலும் ஜான் நோக்ஸ் (John Knox) ஜெபத்திற்கு நான் பயப்படுகிறேன்." ஜெபம் வியாதி நிறைந்தவர்க்கு சுகம் கொடுத்தது. மரித்தவர்களை உயிரோடு எழுப்பியது. ஜெபம் அநேக ஆத்துமாக்களுக்கு மனந்திரும்புதலை கொண்டுவந்துள்ளது. ஆகஸ்தீனின் தாயாருக்கு ஒரு வயதான கிறிஸ்தவர் சொன்னது "அநேக வேண்டுதல்களுக்கு சொந்தகாரனாகிய உன் மகன் அழிந்துபோகப் போவதில்லை." ஜெபமும், வலிகளும், விசுவாசமும் எதை வேண்டுமானாலும் செய்யும். தேவனால் தத்தெடுக்கப்பட்டவனுக்கு எந்த ஒரு காரியமும் சாத்திய மற்றது இல்லை. இந்த ஜனங்களை அழிக்கப் போகிறேன் என்று தேவன் சொன்னபோது மோசே இஸ்ரவேல் ஜனங்களுக்காக தேவனிடம் மன்றாடினார் (யாத் 32:10). எவ்வளவு தூரம் ஆபிரகாம் சோதோமின் இரக்கத்திற்காக மன்றாடினாரோ அவ்வளவு தூரம் தேவனும் இரக்கம் காட்டினார். ஆபிரகாம் ஜெபத்தை நிறுத்தும் வரைக்கும் தேவன் இரக்கத்தை குறைக்கவே இல்லை. சற்று இதை சிந்தித்து பாருங்கள். இது உங்களை உற்சாகப்படுத்தவில்லையா?
ஆவிக்குரிய காரியங்களில் வெற்றிகளை பெறுவதற்கும், முன்னோக்கி செல்வதற்கும் நான் மேலே விளக்கிய ஜெபத்தை தவிர வேறு எந்த காரியத்தால் நமக்கு உதவி செய்ய முடியும்? தேவனின் இரக்கத்தை பெறவும், நம்முடைய வழிகளில் தடைபோடுகிற பாவத்தை மேற்கொள்ளுவதற்கு பெலத்தைப் பெறவும் ஜெபத்தைத் தவிர வேறு எந்த காரியம் நமக்கு உதவும்? ஒருவேளை நரகத்தில் இருக்கும் சாத்தான்களுக்கு அப்படியொரு வழி இருந்திருந்தால், அவர்கள் எத்தனை ஆவலுடனும் சந்தோஷத்துடனும் அதை செய்திருப்பார்கள்.
ஆனால், இத்தனை மகிமையான ஜெபத்தை அசட்டை செய்கிற மனிதன் முடிவில் எங்கே போகப்போகிறான் தெரியுமா? ஜெபமே செய்யாமல் மரணத்தை சந்திக்கிற மனிதனுக்கு கிடைக்ககூடிய பங்கு என்ன தெரியுமா? நிச்சயமாக இதை வாசிக்கிற நீங்கள் அந்த கூட்டத்தில் இருக்ககூடாது என விரும்புகிறேன். மறுபடியும் கேட்கிறேன் நீங்கள் ஜெபிக்கிறீர்களா?
மிகப்பெரிய வித்தியாசம்
நீங்கள் ஜெபிக்கிறீர்களா? என்று நான் கேட்கிறேன். ஏனெனில் ஜெபத்தில் விடாமுயற்சியுடன் இருப்பதே சிறப்பான பரிசுத்த வாழ்க்கையின் இரகசியமாகும்.
உண்மையாகவே கிறிஸ்தவர்களிடையே ஒருவருக்கொருவர் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. கர்த்தருடைய இராணுவத்தில் முதலில் நிற்பவர்களுக்கும் பின்னால் நிற்பவர்களுக்கும் இடையில் ஒரு பெரும் வேறுபாடு இருக்கிறது. அவர்கள் அனைவரும் ஒரே இராணுவத்தில் இருந்து போர் புரிகிறார்கள். ஆனால் ஒருசிலர் மிகவும் துணிவுடன் நல்ல போர் புரிகிறவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கர்த்தருடைய பணியை செய்கிறார்கள். ஆனால் ஒருசிலர் மற்றவர்களை காட்டிலும் சிறப்பாக செய்கிறார்கள். தேவன் கொடுத்த வெளிச்சம் அனைவரிடமும் இருக்கிறது. ஆனால் ஒருசிலர் மற்றவர்களை காட்டிலும் அதிகமாய் பிரகாசிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே ஓட்டத்தை தான் ஓடுகிறார்கள். ஆனால் ஒருசிலர் மற்றவர்களை காட்டிலும் வேகமாக ஓடுகிறார்கள். அவர்கள் எல்லாரும் ஒரே தேவனையும் இரட்சகரையும்தான் நேசிக்கிறார்கள். ஆனால் எப்படி ஒரு சிலரின் நேசம் மற்றவர்களின் நேசத்தை பார்க்கிலும் அதிகமாயிருக்கிறது. நம் மத்தியில் காரியம் இப்படி இல்லையா என நான் ஒவ்வொரு உண்மையான கிறிஸ்தவர்களை பார்த்தும் கேட்கிறேன்.
ஒரு சில கர்த்தருடைய பிள்ளைகள் மனம்திரும்புதலின் போது எப்படி இருந்தார்களோ அப்படியேதான் இருக்கிறார்கள். அவர்கள் மறுபிறப்பை அடைந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இன்னும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பழைய கிறிஸ்தவ அனுபவங்களையே சொல்லிக்கொண்டிருப்பார்கள். பத்து வருடத்திற்கு முன்பாக மனந்திரும்பியபோது எப்படி இருந்தார்களோ அப்படியே தான் இருப்பார்கள். அவர்களின் ஆவிக்குரிய தாகமும், கிறிஸ்தவத்தில் கொண்ட ஆர்வமும் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் இருக்கும். நிச்சயமாக அவர்கள் மோட்சப் பிரயாணிகள்தான். ஆனால் பழைய கிபியோனியர்களை போல காணப்படுகிறார்கள். அவர்களின் அப்பம் உலர்ந்து பூசணம் பிடித்திருக்கிறது. அவர்களின் பாதரட்சைகள் பழசாய் போயிருக்கிறது. அவர்கள் துணிகள் கிழிந்திருக்கிறது. நான் மிகுந்த துக்கத்துடனும் துயரத்துடனும் இதை சொல்கிறேன். நான் சொல்வது உண்மையில்லையா? என ஒவ்வொரு உண்மையான கிறிஸ்தவனையும் பார்த்து கேட்கிறேன்.
எப்போதும் முன்னேறிச் செல்கிற கர்த்தருடைய பிள்ளைகளும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் மழைக்கு பிறகு முளைக்கிற புல்லுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். அவர்கள் இஸ்ரவேல் மக்கள் விருத்தியடைந்ததுபோல வாழ்க்கையில் விருத்தியடைவார்கள். அவர்கள் கிதியோனைப் போல பின்தொடர்வார்கள். அவர்கள் ஒருசில நேரம் விழுந்து போகலாம், ஆனால் எப்போதும் இயேசுவை பின்பற்றுவதை நிறுத்தமாட்டார்கள். அவர்கள் எப்போதும் கிருபையின் மேல் கிருபையையும் விசுவாசத்தின் மேல் விசுவாசத்தையும் பலத்தின்மேல் பலத்தையும் சேர்த்துக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் அவர்களை சந்திக்கும்போதும் அவர்கள் இருதயம் விஸ்தாரமாக வளர்கிறது. அவர்களின் ஆவிக்குரிய நிலைமையும் உயரமாகவும் பலமாகவும் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் வளர்ச்சியடைந்து கிறிஸ்தவத்தில் அநேக காரியங்களை உணர்ந்து கொள்வார்கள். அவர்களின் விசுவாசத்தை செய்கைகளின் மூலம் மட்டுமல்ல. அவர்களின் செயல்களின் மூலமாகவும் காட்டு வார்கள். அவர்கள் நன்மை செய்வது மட்டுமல்ல, தாங்கள் செய்கிற நற்செயல்களை சொல்லிக் காட்டவோ அல்லது அதில் தோய்வு பெறவோமாட்டார்கள். அவர்கள் பெரிதான காரியத்திற்கு முயற்சி செய்து, பெரிதான காரியங்களை சாதிப்பார்கள். ஒருவேளை அவர்கள் தோற்று போனால் மறுபடியும் முயற்சி செய்வார்கள். அவர்கள் விழுந்துபோனால் மறுபடியும் எழுந்திருப்பார்கள். ஆனால் இவை எல்லாவற்றிலும் அவர்கள் தங்களை அப்பிரயோஜனமான ஊழியக்காரர்கள் என்றும், ஏழ்மையானவர்கள் என்றும் நினைத்து கொள்வார்கள். அவர்களிடம் ஆடம்பரத்தை பார்க்க முடியாது. அவர்களே எல்லாரின் கண்களுக்கு முன்பாகவும் கிறிஸ்தவத்தை அழகானதாகவும் அன்பானதாகவும் காட்டுகிறவர்கள். மனந்திரும்பாத மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையை பாராட்டுவார்கள். சுயநலம் கொண்ட உலக மனிதர்கள் கூட அவர்கள் மீது நல்ல கருத்துகளை கூறுவார்கள். அவர்களோடு இருப்பதும், அவர்கள் பேசுவதை கேட்பதும் எவ்வளவு சிறப்பானது. அவர்களை நீங்கள் சந்திக்கிறபோது மோசே கர்த்தருடைய சமூகத்தில் இருந்து வெளிவரும்போது எப்படி காணப்பட்டாரோ அப்படி காணப்படுவார்கள். நீங்கள் அவர்களோடு இணையும்போது அவர்கள் கூட இருப்பதால் அனலூட்டப்படுவீர்கள். உங்கள் ஆத்துமாவும் நெருப்பிற்கு அருகில் இருப்பது போல இருக்கும். அத்தகைய மனிதர்கள் ஒருசிலரே என்பது எனக்கு தெரியும். ஏன் இப்படிபட்ட மக்கள் பல பேர் இல்லை? என்பதே நான் உங்களை பார்த்து கேட்கும் கேள்வி.
வேறுபாட்டின் காரணம்
நான் மேலே விளக்கிய வேறுபாட்டை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறீர்கள்? என்ன காரணத்தினால் ஒருசில விசுவாசிகள் மற்றவர்களை காட்டிலும் பிரகாசமுள்ளவர்களாகவும் பரிசுத்தமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்? 20 பேர்களில் 19 பேர் இது அவர்களின் தனிப்பட்ட ஜெபப்பழக்கத்தினால் ஏற்பட்ட வித்தியாசம் என்றே நிச்சயம் சொல்வார்கள். குறைவாக ஜெபிப்பவர்களால் சிறப்பான பரிசுத்த வாழ்க்கையை வாழமுடியாது. சிறப்பான பரிசுத்த வாழ்க்கையை வாழுகிறவர்கள் நிச்சயமாக அதிகமாக ஜெபம் செய்கிறவர்களாக இருப்பார்கள் என நம்புகிறேன்.
இந்த செய்தியை கேட்கிற ஒரு சிலருக்கு இந்த காரியங்கள் ஒரு எச்சரிக்கையின் ஒலியாக இருக்கும் என நிச்சயமாக சொல்லுகிறேன். நேர்த்தியான பரிசுத்த வாழ்க்கை ஒரு வரம் என்றும், அதை ஒரு சிலர் மட்டுமே வாழமுடியும் என்றும் அநேகர் தவறான எண்ணம் கொண்டிருப்பதாக எனக்கு தெரிகிறது. புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் வாழ்க்கை வரலாறை பார்த்து தூரத்தில் நின்று இரசிக்கிறார்கள். அவர்களுக்கு அருகில் வாழ்கிற பரிசுத்தமான மனிதர்களை அழகானவர்களாக நினைக் கிறார்கள். இந்த வாழ்க்கை ஒவ்வொரு விசுவாசிக்கும் எட்டக்கூடிய தாகவே இருந்தாலும் ஒருசிலர் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் என்கிற அவர்களின் தவறான எண்ணமே அவர்களை பெற்றுக்கொள்ள முடியாமல் செய்கிறது. இது மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் தவறான எண்ணம்.
மிகச்சிறந்த கிறிஸ்தவ வாழக்கை என்பது விசுவாசத்தோடே கிருபையின் சாதனங்களை பயன்படுத்துவதில் தான் தங்கியிருக்கிறது என நம்புகிறேன். நாம் அசாதாரண முறையில் ஆவிக்குரிய தாலந்துகளை பெற்றுக் கொள்ளுகிறோம் என்று நான் சொல்ல வரவில்லை. ஒரு மனிதன் தேவனிடம் மனந்திரும்பிய பிறகு, தேவன் அவனுக்கு கொடுத்திருக்கின்ற கிருபையின் சாதனங்களை முழு முயற்சியோடு பயன்படுத்தும்போதே அத்தகைய பரிசுத்தமான வாழ்க்கையை வாழ முடியும் என நான் சொல்லுகிறேன். இயேசுகிறிஸ்துவின் திருச்சபையில் மிகவும் சிறப்பாக செயல்படுகிற விசுவாசிகள், கர்த்தர் கொடுத்த வழிமுறையான தனிஜெபத்தை சிறப்பான முறையில் பயன்படுத்துவதாலே வளர்ந்திருக்கிறார்கள் என முழு நிச்சயத்துடன் அறிக்கையிடுகிறேன்.
ஜெபம் வல்லமையுள்ளது
வேதத்துக்கு உள்ளும் புறம்பும் மிகவும் பிரகாசமான சிறந்த வாழ்க்கையை வாழ்ந்த தேவனுடைய ஊழியக்காரரின் வாழ்க்கையை பாருங்கள். மோசேயை பற்றியும் பவுலைப் பற்றியும் என்ன எழுதியிருக்கிறது என்று பாருங்கள். சீர்திருத்தவாதிகளான லூத்தரை (Luther) பற்றியும் பிராட்போர்டை (Bradford) பற்றியும் வரலாற்றில் என்ன பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பாருங்கள். வைட்ஃபீல்ட் (Whitefield), செசில் (Cecil), வென் (Venn), பிக்கர்ஸ்டெத் (Bickersteth) மற்றும் மெச்சிகன் (M’Cheyne) போன்றோரின் தனிப்பட்ட தெய்வீக வாழ்க்கையில் எது தொடர்புபட்டிருக்கிறது என்று கவனியுங்கள். தனிஜெபம் செய்யமால் வெற்றியடைந்த ஏதேனும் பரிசுத்தவான்களையோ அல்லது இரத்த சாட்சிகளையோ என்னிடம் காண்பியுங்கள் பார்க்கலாம். அது முடியாது, ஏனெனில் அவர்கள் ஜெபிக்கிற மனிதர்களாய் இருந்திருக்கிறார்கள். ஜெபத்தை சார்ந்து இருங்கள். ஏனென்றால் ஜெபமே சக்தி வாய்ந்தது.
ஜெபமே பரிசுத்த ஆவியின் தொடர்ச்சியான வழிநடத்துதலை பெற்று தருகிறது. இவரே ஒரு மனிதனின் இருதயத்தில் கிருபையின் கிரியையை தொடக்குவிக்கிறார். அவர் மட்டுமே ஒரு மனிதனை முன்னேற்ற பாதையில் வழிநடத்தி வாழ்க்கையை ஆசிர்வாதமாக மாற்றுகிறார். நாம் ஜெபிப்பதை ஆவியானவர் விரும்புகிறார். யாரெல்லாம் அதிகமாக அவரின் உதவியை கேட்கிறார்களோ அவர்கள் அதிகமாக ஆவியானவரின் உதவியை பெற்றுகொள்கிறார்கள்.
பிசாசுக்கு எதிராக போராடவும், நமக்குள் தொடர்ச்சியாக இருக்கும் பாவங்களை மேற்கொள்வதற்கும் ஜெபமே ஒரு உறுதியான தீர்வாய் இருக்கிறது. இருதயத்திலிருந்து ஏறெடுக்கும் ஜெபத்திற்கு முன்பாக பாவம் உறுதியாக நிற்க முடியாது. தேவனுக்கு முன்பாக உதவியை நாடி நிற்கிறவர்களிடம் பாவம் மேலும் தன் ஆளுமையை தொடராது. நம்முடைய பரலோக மருத்துவர் நம்முடைய அனுதின பிரச்சனையை தீர்க்கிறவராய் இருக்கிறபடியால் நம்முடைய மெய்யான நிலையை அவரிடம் விரிவாக தெரியப்படுத்த வேண்டும்.
நீங்கள் கிருபையில் வளர்ச்சியடைந்த தெய்வீகமானவர்களாக விரும்புகிறீர்களா? உண்மையாக நீங்கள் அப்படி இருக்க விரும்பினால் நீங்கள் ஜெபிக்கிறீர்களா? என்பதே உங்கள் முன் இருக்கும் மிக முக்கியமான கேள்வி.
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.