பின்மாற்றம் உண்மையாகவே நிகழ்கிறது
நீங்கள் ஜெபிக்கிறீர்களா? என்று கேட்கிறேன். ஏனெனில் ஜெபத்தை புறக்கணிப்பதே கிறிஸ்தவத்தில் பின்வாங்கிபோவதற்கு மிகப் பெரிய காரணமாக இருக்கிறது.
நல்ல போராட்டம் செய்து பின்பு பின்வாங்கி போகுதல் என்ற ஒரு காரியம் கிறிஸ்தவத்தில் இருக்கிறது. மக்கள் கலாத்தியர்கள் போல சிறிது காலம் நன்றாக வாழ்ந்துவிட்டு பிறகு தவறான உபதேசத்திற்கு தங்களை உட்படுத்தி கொள்ளலாம். அவர்களின் உணர்ச்சிகள் அனலாக இருக்கும் போது பேதுருவைப் போல சத்தமாக கிறிஸ்துவை அறிக்கை செய்வார்கள். ஆனால், சோதனை நேரம் வரும்போது மறுதலித்து விடுவார்கள். மக்கள் சில வேளைகளில் பவுடன் இருந்த மாற்குவைப்போல, வைராக்கியத்தில் குறைந்து காணப்படுவார்கள். சிலவேளைகளில் மக்கள் தேமாவைப் போல, அப்போஸ்தலர்களைப் பின்பற்றி உலக ஆதாயத்தை சார்ந்து கொள்ளுகிறார்கள்.
பின்வாங்கி போகுதல் என்பது மிகவும் பரிதாபமான காரியம். மனிதனுக்கு நேரிடுகிற அனைத்து கஷ்டத்தை பார்க்கிலும் இது மிகவும் அதிக கஷ்டத்தைத் தரக்கூடியது. ஒரு உடைந்த கப்பல், சிறகொடிந்த கழுகு, முழுவதும் களைகள் நிரம்பிய தோட்டம், ஸ்வரங்கள் இல்லாத வீணை, இடிக்கப்பட்ட சபைக்கட்டிடம் போன்ற காட்சிகள் நமக்கு சோகத்தை தரக்கூடியவை. ஆனால் அதைக்காட்டிலும் பின்வாங்கி போகுதலே மிகவும் வேதனையானது. காயப்பட்ட மனசாட்சியின் குற்ற உணர்வுகள், கர்த்தருடைய எச்சரிப்பின் அம்பினால் துளைக்கப்பட்ட இருதயம், உள்ளான குற்ற உணர்வினால் உடைந்த ஆவி என இவை அனைத்தும் நரகத்தின் ருசியை தரவல்ல காரியங்கள். இவை இந்த பூமியில் நரகமாயிருக்கிறது. உண்மையாகவே ஞானியாகிய சாலோமோன் சொன்னது சரியான விஷயமே. "பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலே திருப்தியடைவான்'' (நீதி 14:14).
பின்மாற்றத்தின் காரணம்
அநேகர் பின்வாங்கி போவதற்கு என்ன காரணமாயிருக்கிறது? பொதுவான விதியாக தனிஜெபத்தை செய்யாமலிருப்பதே முதலாவது முக்கிய காரணமாயிருக்கிறது என நம்புகிறேன். சந்தேகமில்லாமல் பின்வாங்கிபோகுதலைப் பற்றிய இந்த இரகசிய உண்மை இறுதி நாள்வரை தெரியாது. ஆனால் கிறிஸ்துவின் ஊழியக்காரனாக என்னுடைய மனசாட்சியில் இருந்து நான் இந்த கருத்துகளை சொல்லுகிறேன். நான் மறுபடியும் தெளிவாக சொல்லுகிற என்னுடைய கருத்து என்னவெனில் பின்வாங்கி போகுதல் பொதுவாக ஆரம்பமாவது தனிஜெபத்தை செய்யாமல் இருப்பதாலேயே.
ஜெபம் செய்யாமல் வேதம் வாசிப்பது, ஜெபம் செய்யாமல் பிரசங்கம் கேட்பது, ஜெபம் செய்யாமல் திருமண ஒப்பந்தம் செய்வது, ஜெபம் செய்யாமல் பயணங்களை மேற்கொள்வது, ஜெபம் செய்யாமல் வசிப்பிடங்களை தேர்வுசெய்வது, ஜெபம் செய்யாமல் நண்பர்கள் உருவாக்கப்படுவது, அனுதின ஜெபத்தை அவசர அவசரமாகவும், முழு இருதயம் இல்லாமலும் செய்வது என இவையனைத்தும் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துகொள்ளுகிற அநேக மக்களை ஆவிக்குரிய இயலாமைக்கு வழிநடத்தும் படிகட்டுகளாகவும், தேவன் அவர்களுக்கு நியமித்திருக்கும் பயங்கரமான அழிவிற்கு வழிநடத்தும் காரியங்களாய் இருக்கின்றன.
இயேசு கிறிஸ்துவின் சபையில் காணப்பட்ட பின்வாங்கிபோன லோத்து, நிலையற்ற சிம்சோன், மனைவியை வணங்கும் சாலமோன், முரண்பாடான ஆசா, வளைந்துகொடுக்கும் யோசபாத், உலக காரியத்தின் மேல் அக்கறை காட்டின மார்த்தாள் போன்றோரிடம் ஜெபம் செய்யாமல் காரியங்களை செய்கிற நிலை இருந்தது. இந்த வரலாறுகளிலிருந்து தெரிகிற ஒரு உண்மை: அவர்கள் அனைவரும் தனி ஜெபத்தை குறித்த அக்கறை இல்லாமல் இருந்ததே அவர்களின் இந்த நிலைமைக்கு காரணமாயிருந்தது.
முதலில் மறைந்திருக்கும்
மக்கள் வெளிப்படையான பாவத்தில் வீழ்ச்சியுறுவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பே அவர்கள் உள்ளான தோல்வியை அடைந்திருக்கிறார்கள் என முழு நிச்சயமாய் நம்பலாம். அவர்கள் உலகத்தின் கண்களுக்கு முன்பாக பின்வாங்கிப் போன நிலைமையை அடைவதற்கு முன்பே அவர்கள் முழங்காலில் நின்று ஜெபிப்பதில் பின்வாங்கி போயிருக்கிறார்கள். அவர்கள் “இரவும் பகலும் விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” என்கிற ஆண்டவரின் கட்டளையை கைகொள்ளாமல், பேதுருவை போல தங்கள் பெலனையெல்லாம் இழந்துவிட்டு சோதனை நேரத்தில் பேதுருவை போல இயேசுவை மறுதலித்து விடுவார்கள்.
உலகம் அப்படிபட்ட மக்களின் வீழ்ந்துபோன நிலைமையை பார்த்து சத்தமாக சிரிக்கும். ஆனால் அந்த உலக மக்களுக்கு உண்மையான காரணம் எதுவும் தெரியாது. அனுதினமும் காலையில் கர்த்தருடன் தொடர்பு கொள்ளாத மனிதன் ஆவிக்குரிய நிலையில் மிகவும் பெலவீனமாக இருக்கிறான். உலக மனிதர்கள் அவனை பயப்படுத்தும்போது தேவனை விட்டுவிட்டு பேய்களுக்கு தூபம் காட்ட சென்று விடுவான்.
நீங்கள் உண்மையிலேயே ஒரு கிறிஸ்தவனாக இருந்தால், ஒருநாளும் பின்வாங்கமாட்டீர்கள் என நிச்சயமாய் நம்புகிறேன். நீங்கள் பின்வாங்கும் கிறிஸ்தவராக இருக்க விரும்பவில்லை என்றால், நான் உங்களிடம் கேட்கும் கேள்வியை நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் ஜெபிக்கிறீர்களா?





