மிகப்பெரிய வித்தியாசம்
"நீங்கள் ஜெபிக்கிறீர்களா?" என்று நான் கேட்கிறேன். ஏனெனில், ஜெபத்தில் விடாமுயற்சியுடன் இருப்பதே சிறப்பான பரிசுத்த வாழ்க்கையின் இரகசியமாகும்.
உண்மையாகவே, கிறிஸ்தவர்களிடையே மிகப்பெரிய வித்தியாசம் காணப்படுகிறது. கர்த்தருடைய இராணுவத்தில் முன்வரிசையில் நிற்பவர்களுக்கும் பின்னால் நிற்பவர்களுக்கும் இடையில் ஒரு பெரும் வேறுபாடு இருக்கிறது. அவர்கள் அனைவரும் ஒரே இராணுவத்தில்தான் போர் புரிகிறார்கள்; ஆனால், ஒருசிலர் மிகவும் துணிவுடன் நல்ல போர் புரிகிறவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கர்த்தருடைய பணியைத்தான் செய்கிறார்கள்; ஆனால், ஒருசிலர் மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாகச் செய்கிறார்கள். தேவன் கொடுத்த வெளிச்சம் அனைவரிடமும் இருக்கிறது; ஆனால், ஒருசிலர் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாய்ப் பிரகாசிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே ஓட்டத்தைத்தான் ஓடுகிறார்கள்; ஆனால், ஒருசிலர் மற்றவர்களைக் காட்டிலும் வேகமாக ஓடுகிறார்கள். அவர்கள் எல்லாரும் ஒரே தேவனையும் இரட்சகரையும்தான் நேசிக்கிறார்கள். ஆனால், ஒருசிலரின் நேசம் மட்டும் மற்றவர்களின் நேசத்தைப் பார்க்கிலும் எப்படி அதிகமாயிருக்கிறது? நம் மத்தியில் காரியம் இப்படி இல்லையா என நான் ஒவ்வொரு உண்மையான கிறிஸ்தவனைப் பார்த்தும் கேட்கிறேன்.
ஒருசில கர்த்தருடைய பிள்ளைகள் மனந்திரும்புதலின்போது எப்படி இருந்தார்களோ அப்படியேதான் இருக்கிறார்கள். அவர்கள் மறுபிறப்பை அடைந்திருந்தாலும், இன்னும் ஆவிக்குரிய குழந்தைகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பழைய கிறிஸ்தவ அனுபவங்களையே சொல்லிக்கொண்டிருப்பார்கள். பத்து வருடத்திற்கு முன்பாக மனந்திரும்பியபோது எப்படி இருந்தார்களோ அப்படியேதான் இன்றும் இருப்பார்கள். அவர்களின் ஆவிக்குரிய தாகமும், கிறிஸ்தவத்தில் கொண்ட ஆர்வமும் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே இருக்கும். நிச்சயமாக அவர்கள் மோட்சப் பிரயாணிகள்தான்; ஆனால், பழைய கிபியோனியர்களைப் போலக் காணப்படுகிறார்கள். அவர்களுடைய அப்பம் உலர்ந்து பூசணம் பிடித்திருக்கிறது; பாதரட்சைகள் பழசாய்ப் போயிருக்கின்றன; ஆடைகள் கிழிந்திருக்கின்றன. நான் மிகுந்த துக்கத்துடனும் துயரத்துடனும் இதைக் கூறுகிறேன். நான் சொல்வது உண்மையில்லையா என ஒவ்வொரு உண்மையான கிறிஸ்தவனையும் பார்த்துக் கேட்கிறேன்.
எப்போதும் முன்னேறிச் செல்கிற கர்த்தருடைய பிள்ளைகளும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் மழைக்குப் பிறகு முளைக்கிற புல்லுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். இஸ்ரவேல் மக்கள் விருத்தியடைந்ததுபோல அவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் விருத்தியடைவார்கள். அவர்கள் கிதியோனைப் போலத் தொடர்ந்து முன்னேறுவார்கள். அவர்கள் ஒருசில நேரம் விழுந்துபோகலாம், ஆனால் எப்போதும் இயேசுவைப் பின்பற்றுவதை நிறுத்தமாட்டார்கள். அவர்கள் எப்போதும் கிருபையின்மேல் கிருபையையும், விசுவாசத்தின்மேல் விசுவாசத்தையும், பலத்தின்மேல் பலத்தையும் சேர்த்துக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் அவர்களைச் சந்திக்கும்போதும் அவர்களுடைய இருதயம் விஸ்தாரமாக வளர்ந்திருப்பதைக் காணலாம். அவர்களின் ஆவிக்குரிய நிலைமை உயர்ந்தும் பலப்பட்டும் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் வளர்ச்சியடைந்து கிறிஸ்தவத்தில் அநேக காரியங்களை உணர்ந்துகொள்வார்கள். தங்கள் விசுவாசத்தை வார்த்தைகளின் மூலம் மட்டுமல்ல, செயல்களின் மூலமாகவும் காட்டுவார்கள். அவர்கள் நன்மை செய்வது மட்டுமல்ல, தாங்கள் செய்கிற நற்செயல்களைச் சொல்லிக் காட்டவோ அல்லது அதில் திருப்தியடைந்து தேங்கிவிடவோ மாட்டார்கள். அவர்கள் பெரிய காரியங்களுக்கு முயற்சி செய்து, பெரிய காரியங்களைச் சாதிப்பார்கள். ஒருவேளை அவர்கள் தோற்றுப் போனால் மறுபடியும் முயற்சி செய்வார்கள். விழுந்துபோனால் மறுபடியும் எழுந்திருப்பார்கள். ஆனால் இவை எல்லாவற்றிலும் அவர்கள் தங்களை அப்பிரயோஜனமான ஊழியக்காரர்கள் என்றும், ஏழ்மையானவர்கள் என்றும் நினைத்துக்கொள்வார்கள். அவர்களிடம் ஆடம்பரத்தைப் பார்க்க முடியாது. அவர்களே எல்லார் கண்களுக்கு முன்பாகவும் கிறிஸ்தவத்தை அழகானதாகவும் அன்பான மார்க்கமாகவும் காட்டுகிறவர்கள். மனந்திரும்பாத மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையைப் பாராட்டுவார்கள். சுயநலம் கொண்ட உலக மனிதர்கள்கூட அவர்கள்மீது நல்ல கருத்துகளைக் கூறுவார்கள். அவர்களோடு இருப்பதும், அவர்கள் பேசுவதைக் கேட்பதும் எவ்வளவு சிறப்பானது! அவர்களை நீங்கள் சந்திக்கும்போது, மோசே கர்த்தருடைய சமூகத்திலிருந்து வெளிவந்தபோது எப்படிக் காணப்பட்டாரோ, அப்படிக் காணப்படுவார்கள். நீங்கள் அவர்களோடு இணையும்போது அவர்கள் கூட இருப்பதால் அனலூட்டப்படுவீர்கள். நெருப்பிற்கு அருகில் இருப்பதுபோல உங்கள் ஆத்துமாவும் அனலடையும். அத்தகைய மனிதர்கள் ஒருசிலரே என்பது எனக்குத் தெரியும். ஏன் இப்படிப்பட்ட மக்கள் பலபேர் இல்லை? என்பதே நான் உங்களைப் பார்த்துக் கேட்கும் கேள்வி.
வேறுபாட்டின் காரணம்
நான் மேலே விளக்கிய வேறுபாட்டை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறீர்கள்? என்ன காரணத்தினால் ஒருசில விசுவாசிகள் மற்றவர்களைக் காட்டிலும் பிரகாசமுள்ளவர்களாகவும் பரிசுத்தமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்? 20 பேரில் 19 பேர், "இது அவர்களின் தனிப்பட்ட ஜெபப் பழக்கத்தினால் ஏற்பட்ட வித்தியாசம்" என்றே நிச்சயம் சொல்வார்கள். குறைவாக ஜெபிப்பவர்களால் சிறப்பான பரிசுத்த வாழ்க்கையை வாழமுடியாது. சிறப்பான பரிசுத்த வாழ்க்கையை வாழுகிறவர்கள் நிச்சயமாக அதிகமாக ஜெபிக்கிறவர்களாகவே இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
இந்தச் செய்தியைக் கேட்கிற ஒருசிலருக்கு, இக்காரியங்கள் ஒரு எச்சரிக்கையின் ஒலியாக இருக்கும் என்று நிச்சயமாகச் சொல்லுகிறேன். நேர்த்தியான பரிசுத்த வாழ்க்கை ஒரு வரம் என்றும், அதை ஒருசிலர் மட்டுமே வாழமுடியும் என்றும் அநேகர் தவறான எண்ணம் கொண்டிருப்பதாக எனக்குத் தெரிகிறது. புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் வாழ்க்கை வரலாற்றைப் பார்த்துத் தூரத்தில் நின்று இரசிக்கிறார்கள். தங்களுக்கு அருகில் வாழ்கிற பரிசுத்தமான மனிதர்களை அழகானவர்களாக நினைக்கிறார்கள். இந்த வாழ்க்கை ஒவ்வொரு விசுவாசிக்கும் எட்டக்கூடியதாகவே இருந்தாலும், 'ஒருசிலர் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்' என்கிற அவர்களின் தவறான எண்ணமே அதைப் பெற்றுக்கொள்ள முடியாமல் செய்கிறது. இது மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் தவறான எண்ணமாகும்.
மிகச்சிறந்த கிறிஸ்தவ வாழ்க்கை என்பது விசுவாசத்தோடே கிருபையின் சாதனங்களைப் பயன்படுத்துவதில்தான் தங்கியிருக்கிறது என்று நம்புகிறேன். நாம் அசாதாரண முறையில் ஆவிக்குரிய தாலந்துகளைப் பெற்றுக்கொள்ளுகிறோம் என்று நான் சொல்ல வரவில்லை. ஒரு மனிதன் தேவனிடம் மனந்திரும்பிய பிறகு, தேவன் அவனுக்குக் கொடுத்திருக்கும் கிருபையின் சாதனங்களை முழு முயற்சியோடு பயன்படுத்தும்போதே அத்தகைய பரிசுத்தமான வாழ்க்கையை வாழ முடியும் என்று நான் சொல்லுகிறேன். இயேசுகிறிஸ்துவின் திருச்சபையில் மிகவும் சிறப்பாகச் செயல்படும் விசுவாசிகள், கர்த்தர் கொடுத்த வழிமுறையான தனிஜெபத்தைச் சிறப்பான முறையில் பயன்படுத்துவதாலேயே வளர்ந்திருக்கிறார்கள் என்று முழு நிச்சயத்துடன் அறிக்கையிடுகிறேன்.
ஜெபம் வல்லமையுள்ளது
வேதத்துக்கு உள்ளும் புறம்பும் மிகவும் பிரகாசமான சிறந்த வாழ்க்கையை வாழ்ந்த தேவனுடைய ஊழியக்காரர்களின் வாழ்க்கையைப் பாருங்கள். மோசேயைப் பற்றியும் பவுலைப் பற்றியும் என்ன எழுதியிருக்கிறது என்று பாருங்கள். சீர்திருத்தவாதிகளான லூத்தரை (Luther) பற்றியும் பிராட்போர்டை (Bradford) பற்றியும் வரலாற்றில் என்ன பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பாருங்கள். வைட்ஃபீல்ட் (Whitefield), செசில் (Cecil), வென் (Venn), பிக்கர்ஸ்டெத் (Bickersteth) மற்றும் மெக்செய்ன் (M’Cheyne) போன்றோரின் தனிப்பட்ட தெய்வீக வாழ்க்கையில் எது தொடர்புபட்டிருக்கிறது என்று கவனியுங்கள். தனிஜெபம் செய்யாமல் வெற்றியடைந்த ஏதேனும் பரிசுத்தவான்களையோ அல்லது இரத்த சாட்சிகளையோ என்னிடம் காண்பியுங்கள் பார்க்கலாம். அது முடியாது; ஏனெனில் அவர்கள் ஜெபிக்கிற மனிதர்களாய் இருந்திருக்கிறார்கள். ஜெபத்தைச் சார்ந்திருங்கள்; ஏனென்றால் ஜெபமே சக்தி வாய்ந்தது.
ஜெபமே பரிசுத்த ஆவியின் தொடர்ச்சியான வழிநடத்துதலைப் பெற்றுத் தருகிறது. இவரே ஒரு மனிதனின் இருதயத்தில் கிருபையின் கிரியையைத் தொடங்குகிறார். அவர் மட்டுமே ஒரு மனிதனை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தி வாழ்க்கையை ஆசீர்வாதமாக மாற்றுகிறார். நாம் ஜெபிப்பதை ஆவியானவர் விரும்புகிறார். யாரெல்லாம் அதிகமாக அவரின் உதவியைக் கேட்கிறார்களோ, அவர்கள் அதிகமாக ஆவியானவரின் உதவியைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
பிசாசுக்கு எதிராகப் போராடவும், நமக்குள் தொடர்ச்சியாக இருக்கும் பாவங்களை மேற்கொள்வதற்கும் ஜெபமே ஒரு உறுதியான தீர்வாய் இருக்கிறது. இருதயத்திலிருந்து ஏறெடுக்கும் ஜெபத்திற்கு முன்பாகப் பாவம் உறுதியாக நிற்க முடியாது. தேவனுக்கு முன்பாக உதவியை நாடி நிற்கிறவர்களிடம் பாவம் மேலும் தன் ஆளுமையைத் தொடராது. நம்முடைய பரலோக மருத்துவர் நம்முடைய அனுதின பிரச்சனைகளைத் தீர்க்கிறவராய் இருக்கிறபடியால், நம்முடைய மெய்யான நிலையை அவரிடம் விரிவாகத் தெரியப்படுத்த வேண்டும்.
நீங்கள் கிருபையில் வளர்ச்சியடைந்து தெய்வீகமானவர்களாக மாற விரும்புகிறீர்களா? உண்மையாக நீங்கள் அப்படி இருக்க விரும்பினால், "நீங்கள் ஜெபிக்கிறீர்களா?" என்பதே உங்கள் முன் இருக்கும் மிக முக்கியமான கேள்வி.





