நான் தற்பொழுது முடிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறேன். அத்தேனேயில் பவுல் எதைப் பார்த்தார், உணர்ந்தார், செய்தார் என்பவைகளை விட்டு, நடைமுறைக்கு தேவையான கருத்துக்கு நான் வருகிறேன். நாம் எதை பார்க்க வேண்டும், உணர வேண்டும், செய்ய வேண்டும் என்று இதைப்படித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு வாசகரையும் நான் கேட்கிறேன்.
(அ) நாம் எதைப் பார்க்க வேண்டியவர்களாயிருக்கிறோம்? நாம் வேடிக்கைப் பார்த்தும் உல்லாசமாகவும் காலத்தை கழிக்கும் நாட்களில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். “காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை” (பிர. 1:8). அங்கும் இங்கும் ஓடவும், அறிவைப் பெருக்கிக்கொள்ளவும் உலகம் பைத்தியமாயிருக்கிறது. வளமையும், கலைகளும், புதிய கண்டுபிடிப்புகளும் தொடர்ச்சியாக பெருங்கூட்ட மக்களை கண்காட்சிகளுக்கு அழைக்கின்றன. ஆயிரம் பல்லாயிரமான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மனிதக் கைவேலைகளைக் காண விரைந்தோடுகிறார்கள்.
ஆனால், ஒரு கிறிஸ்தவன் உலக வரைபடத்தைக் காண வேண்டியதில்லையா? வேதத்தை விசுவாசிக்கும் ஒரு மனிதன், அந்த வரைபட த்தில் ஆவிக்குறிய விதத்தில் இருளடைந்திருக்கும், மரணமடைந்திருக்கும், மற்றும் நற்செய்தி சென்று சேராமலிருக்கும் பரந்து விரிந்த பகுதிகளை ஒருமித்த கருத்துடன் காணவேண்டாமா? கிறிஸ்தவர்கள் ஒன்றும் செய்யாததினால், உலக மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கிறிஸ்துவையும் தேவனையும் அறியாமல், பாவத்திலும் விக்கிரக ஆராதனையிலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற உண்மையை காண வேண்டாமா?
தேவனுடைய கண்கள் இவைகளைக் காணுகின்றன, நம்முடைய கண்களும் இவைகளையே காணவேண்டியதாயிருக்கின்றன.
(ஆ) நாம் எதை உணர வேண்டியவர்களாயிருக்கிறோம்? நம்முடைய இருதயம், தேவனுடைய பார்வையில் சரியாக இருக்குமென்றால், தவறான சமயம் மற்றும் விக்கிரக ஆராதனையை பார்ப்பதினால் பாதிக்கப்பட்டிருக்கும். இத்தகைய உலகப்போக்குகள் நம்முடைய இருதயத்தில் உணர்த்த்த வேண்டிய உணர்வுகள் அதிகம் உள்ளன.
நமக்கு கொடுக்கப்பட்டுள்ள எண்ணிலடங்கா வாய்ப்புகளுக்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருக்க வேண்டும். கிறிஸ்தவ உலகிற்கு, கிறிஸ்துவை அறிந்தவர்கள் ஆற்ற வேண்டிய கடமையைக் குறித்து அறிந்தவர்கள் வெகுச்சிலரே! ஒவ்வொரு வருடமும் சில வாரங்களாவது அவர்கள் கிறிஸ்துவை அறியாதவர்களின் பகுதியில் வாழ நிர்பந்திக்கப்பட்டால் நலமாயிருக்கும்.
நம்முடைய கிறிஸ்தவ திருச்சபைகள், கிறிஸ்துவை அறிவிக்க இதுவரை எடுத்துக்கொண்ட முயற்சிகளை ஆராய்ந்தால், வெட்கமும் அவமானமுமே மிஞ்சும். பிஷப் ஹீபர், அதோனிராம் ஜட்சன், ஸ்வார்ட்ஸ், சீகன் பால்க் போன்றவகள் தங்கள் உயிரைப் பனையம் வைத்து நம்மிடையே வந்து ஊழியம் செய்ததன் மூலம் தேவன் நம்மிடையே பெரிய காரியங்களை செய்திருக்கிறார், பலவிதமான உபத்திரவங்களின் மத்தியில் நம்மை பாதுகாத்து, அபரிவிதமாய் ஆசீர்வதித்திருக்கிறார். ஆனால் எந்த அளவிற்கு குறைவாக நாம் அவருக்கு திருப்பி செலுத்தியிருக்கிறோம்! நம்மிடையே இருக்கும் ஆயிரக்கணக்கான திருச்சபைகளில், எத்தனை குறைவான திருச்சபைகள் ஊழியர்களைத் தாங்குகின்றன! ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக எத்தனை குறைவான வைராக்கியத்தை திருச்சபை மக்கள் காட்டுகிறார்கள்! இவைகள் இப்படி இருக்கலாகாது!
மாற்றமடையா ஆத்துமாக்களின் பரிதாபமான நிலையையும், கிறிஸ்து இல்லாமல் வாழ்ந்து மடியும் மக்களின் நிலைமையையும் நாம் நினைக்கும்பொழுது மனதுருக்கம் கொள்ளவேண்டும். இந்த வறுமையைப்போல வேறொரு வறுமை இல்லை! இந்த வியாதியைப்போல வேறொரு வியாதி இல்லை! இந்த அடிமைத்தனத்தைவிட, வேறொரு அடிமைத்தனம் இல்லை! விக்கிரக ஆராதனை, தவறான சமயம் மற்றும் பாவத்தின் மரணத்தைவிட, வோறொரு மரணம் இல்லை! இழந்துபோனவர்களுக்காக நாம் மனதுருக்கம் கொள்ளவில்லை என்றால், நம்மில் கிறிஸ்துவின் சிந்தை எங்கே? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். மாற்றமடையா ஆத்துமாவின் நிலைக்காக, ஒருவனை வருத்தமடையச் செய்யாத கிறிஸ்தவம், 2000 ஆண்டுகளுக்கு முன் பரத்திலிருந்து வந்த, புதிய ஏற்பாட்டில் பரிமளமிடப்பட்டிருக்கும் கிறிஸ்தவம் அல்ல, என்பதை உறுதியான பிரதான கொள்கையாக முன்வைக்கிறேன். அது வெறும் பெயர். அது பவுல் கூறும் கிறிஸ்தவம் அல்ல.
இ) இறுதியாக, நாம் என்ன செய்ய வேண்டும்? உங்கள் மனதுக்கு நான் கொண்டுவர விரும்புகிற கருத்து இதுதான். பார்ப்பதும், உணர்வதும் நல்லது. ஆனால், செய்வதுதான் சமயத்தின் உயிர் நாடி. நம்மை செயல்பாட்டுக்கு நேராக வழிநடத்தாத, செயலற்ற கவர்ச்சி, நம்முடைய உள்ளுணர்வுகளை கடினப்படுத்தும் தன்மையுடையது, நிச்சயமாக தீங்கிழைக்கக் கூடியது. நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் இதுவரை செய்தவைகளைவிட இன்னும் அதிகமாக செய்ய வேண்டும். நாம் அனைவரும் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும். வட இந்தியாவில் உள்ள ஊழிய ஸ்தலங்கள், நம் அருகில் உள்ள மாபெரும் நகரங்கள், உன்னத சுவிசேஷத்தை அறிவிக்க நம்மை அழைக்கின்றன.
நம்முடைய போராயுங்களைக் குறித்து நாம் வெட்கப்பட்டு, நாம் அசையாமல் அல்லது தயங்கி நிற்க வேண்டுமா? பழைய நல் விசுவாசமாகிய நற்செய்தி, தற்காலத்து தேவைகளுக்கு நிகரில்லையா? நாம் நற்செய்தியைக்குறித்து வெட்கப்பட ஒரு காரணமும் இல்லை என்பதை உறுதியாகக் கூறுகிறேன். அது பழையதாகவில்லை. அது வழக்கொழிந்து போகவில்லை. அது காலத்தினால் பிற்போக்கானதில்லை. நமக்கு புதிய நற்செய்தியோ, அதில் சேர்க்கப்படவோ அல்லது நீக்கப்படவோ ஒன்றுமில்லை. பழைய வழிகளும், பழைய உண்மைகளும், முழுமையாக, உறுதியாக, பாசத்துடன் அறிவிக்கப்பட வேண்டியதே நமது தேவை. பவுல் பிரசங்கித்த அதே நற்செய்தியை, முழுமையாக பிரசங்கியுங்கள், “விசுவாசிக்கிறவர்களுக்கு அதுவே இரட்சிப்புக்கேதுவான தேவ பலனாயிருக்கிறது” (ரோம 1:16).
நற்செய்தியைப் பிரசங்கித்தப்பின் அதன் விளைவுகளைக்குறித்து வெட்கப்பட்டு, நாம் அசையாமல் அல்லது தயங்கி நிற்க வேண்டுமா? நாம் நம்முடைய தலையை தொங்கப்போட்டுக்கொண்டு, பரிசுத்தர்களுக்கு அன்று கொடுக்கப்பட்டிருந்த விசுவாசம் தன்னுடைய வல்லமையை இழந்துவிட்டது, இன்று அது ஒன்றும் செய்கிறதில்லை என்று முறுமுறுக்க வேண்டுமா? நாம் வெட்கப்படுவதற்கென்று ஒரு காரணமும் இல்லை. கிறிஸ்துவின் சத்திய போதனை தந்த விளைவுகளைவிட, இந்த உலகத்திலுள்ள எந்த ஒரு சமய போதனையும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற இயலும். கிறிஸ்துவின் போதனையை இழிவுபடுத்தும் இன்றைய நவீன கல்விக்கூடங்கள், எத்தகைய விடுதலையைக் கொடுத்திருக்கின்றன? மாநகரங்களில், கடற்கறைகளில், மலை உச்சிகளில் உள்ள மக்கள் கூட்டம் நிறைந்த புறஜாதி வழிபாட்டுத்தலங்கள், எந்த அளவிற்கு மக்களுக்கு நற்செய்தி அறிவித்து நாகரிம் அடைய வைத்துள்ளன?
இல்லை! என்பதே பதில். சத்தியம் என்பது என்ன? என்ற கேள்வி அதன் விளைவுகள் மற்றும் கனிகளை சுட்டிக்காட்டி பதிலளிக்கப்பட வேண்டுமெனில், நம்முடைய ஜெப புத்தகங்களிலும், விசுவாசப்பிரமாணங்களிலும் தெளிவாக வரையறுக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக சொல்லப்பட்டு, பரிமளமிடப்பட்ட தத்துவமான, புதிய ஏற்பாட்டு சமயம் வெட்கப்பட எந்த ஒரு காரணமும் இல்லை.
கடந்த காலங்களுக்காக நம்மைத் தாழ்த்தி, வரும் நாட்களில் தேவனுடைய உதவியுடன் இன்னும் முயற்சி செய்ய, நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் நம்முடைய கண்களை இன்னும் விரிவாகத் திறந்து, அதிகமாக உணர வேண்டும். தன்னை மறுத்து கொடுக்கும் காணிக்கைகளாலும், வைராக்கியத்துடன் இணைந்து செயல்படுவதாலும், உறுதியான பேச்சுடன், இடைவிடாத ஜெபத்துடன் நம்மை நாமே உந்தி அதிகமாக செயல்படலாம். இயேசு பரலோகத்தைவிட்டு பூமிக்கு வந்த காரணமானது, நாம் செய்யும் சிறப்பான செயலுக்கு மிகவும் தகுதியுள்ளது.
எந்த எண்ண அலைகளுடன் இந்த கட்டுரை ஆரம்பித்ததோ அதே நினைவலைகளுடன் இதை முடிக்க இருக்கிறேன். நம்முடைய கிராமங்களில் மக்கள்தொகை ஆண்டுக்காண்டு குறைந்துக்கொண்டே வருகிறது. நகரவாசிகளின் எண்ணிக்கை கிராமவாசிகளின் எண்ணிக்கையைவிட பன்மடங்கு அதிகம். நீங்கள் ஒரு நகரவாசியாயிருந்தால், முடிவாக இப்பொழுது நான் கொடுக்கப்போகும் அறிவுரையை கவனமுடன் கேளுங்கள். உங்கள் ஆத்துமாவைக்குறித்து நான் பேசும்பொழுது உங்கள் முழு கவனத்தையும் என்னிடம் செலுத்துங்கள்.
1. நீங்கள் ஒரு வித்தியாசமான ஆவிக்குறிய ஆபத்தான நிலையிலே இருக்கிறீகள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் சீட்டு நகரத்திலோ அல்லது கிராமத்திலோ விழுந்திருக்கலாம். பாபேலின் நாட்கள் முதல், எங்கெல்லாம் ஆதாமின் பிள்ளைகள் அதிக எண்ணிக்கையில் கூடியிருக்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் ஒருவரை ஒருவர் உச்சகட்ட பாவத்தையும் துன்மார்க்கத்தையும் நோக்கி இழுக்கிறார்கள். மாபெரும் நகரங்கள் எப்பொழுதும் சாத்தானின் ஆசனமாக இருந்திருக்கின்றன. இந்த நகரங்களில் இளம் வாலிபன் தேவனற்ற தன்மையின் மேலதிக உதாரங்களைக் காண்கிறான்; அவன் பாவத்திலே வாழ முடிவுசெய்துவிட்டால், அவனுக்கு உதவ பல நண்பர்கள் தயாராயிருப்பார்கள். இந்த நகரங்களில் தான் திரையரங்குகளும், சூதாட்டவிடுதிகளும், நடன விடுதிகளும், மதுபான விடுதிகளும் எப்பொழுதும் கூட்டமாயிருக்கும். இந்த நகரங்களில் தான் பண ஆசையும், பொழுதுபோக்குகளும், ஆபாச ஆசைகளும், திரளானவர்களை அடிமையாக்குகின்றன. இந்த நகரத்தில் ஒரு மனிதன் ஓய்வு நாளை உதாசீனப்படுத்த, கிருபையை அவமதிகும், வேதத்தை அலட்சியப்படுத்த, ஜெபப் பழக்கத்தை விட்டுவிட உற்சாகப்படுத்தும் நூற்றுக்கணக்கானவைகளைக் காணலாம். நீங்கள் ஒரு நகரத்தில் வாழ்ந்தால் உங்களைப் பாதுகாத்துக்கொளுங்கள். உங்களுக்கு வரும் ஆபத்தைக்குறிந்து அறிந்திருங்கள். உங்கள் பெலவீனத்தையும் பாவத்தன்மையையும் அறிந்திருங்கள். கிறிஸ்துவண்டை ஓடி, உங்கள் ஆத்துமாவை அவர் பாதுகாத்துக்கொள்ளும்படி அவரிடம் ஒப்புக்கொடுங்கள். அவர் உங்களைப் பிடித்துக்கொளும்படிக் கேளுங்கள், அவர் உங்களைப் பாதுகாப்பாக நடத்துவார். உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். பிசாசுக்கு எதிர்த்து நின்று விழிப்புடன் ஜெபம்பண்ணுங்கள்.
2. மற்றொருவிதத்தில், நீங்கள் ஒரு நகரத்தில் வாழ்ந்தால், கிராமப்பகுதிகளில் உங்களுக்குக் கிடைகாத மற்றொரு சிறப்பான உதவி உங்களுக்கு கிடைக்கலாம். பரலோகத்திற்கு நேரான உங்கள் பயணத்தில் உங்களுக்கு மகிழ்வுடன் உதவிசெய்யும் உண்மையான கிறிஸ்துவின் ஊழியர்கள் இல்லாத இந்திய நகரங்கள் இல்லை! தங்கள் சிறு எண்ணிக்கையுடன் மேலும் ஒருவரைக் கூட்டிக்கொள்ள ஆயத்தமாயிருக்கும் குறுகலான வழியில் செல்லும் மோட்ட பிரயாணிகள் இல்லாத, நற்செய்தியை பிரசங்கிக்கும் ஊழியர் இல்லாத இந்தியப் பட்டணங்கள் சொற்பமே!
வாசகரே, திடன் கொள்ளுங்கள், ஒரு நகரத்தில் கிறிஸ்துவுக்காக வாழ்தல் என்பது முடியாத காரியம் என்ற எண்ணத்தை விட்டொழியுங்கள். தேவனால் எல்லாம் கூடும் என்பதை நினைவில் வையுங்கள். மாபெரும் சோதனைகளின் மத்தியிலும், சிலுவை சுமந்து, மரணம்வரை உண்மையாயிருந்த மிகப்பெரிய சாட்சிகளின் வரிசையை நினைத்துக்கொள்ளுங்கள். பாபிலோனில் தானியேலையும் மற்ற மூன்று பிள்ளைகளையும் நினைத்துக்கொள்ளுங்கள். ரோம் நகரில் நீரோவின் வீட்டில் இருந்த பரிசுத்தர்களை நினைத்துக்கொள்ளுங்கள். அப்போஸ்தலர்களில் நாட்களில், கொரிந்துவில், எபேசுவில், அந்தியோகியாவில் இருந்த திரளான விசுவாசிகளை நினைத்துக்கொள்ளுங்கள். வாழும் இடமல்ல, கிருபையே ஒருவனை கிறிஸ்தவனாக்குகிறது. பூமியில் வாழ்ந்ததிலேயே மிகவும் பரிசுத்தமான, மிகவும் உபயோகமான தேவனுடைய பரிசுத்தர்கள், வனாந்திரத்தில் வாழ்ந்த சன்யாசிகளல்ல, அவர்களும் நகரவாசிகளே.
இவைகளை நினைவில் வைத்து, உற்சாகத்துடன் இருங்கள். “முழுவதும் விக்கிரக ஆராதனையால் நிறைந்திருந்த” அத்தேனேயைப் போன்ற ஒரு நகரத்தில் உங்கள் சீட்டு விழுந்திருக்கலாம். வங்கியிலோ, வியாபார ஸ்தலத்திலோ அல்லது ஒரு கடையிலோ நீங்கள் மட்டும் தனியாக நிற்க வேண்டியிருக்கலாம். கிறிஸ்து உங்களுடன் இருந்தால் நீங்கள் தனி ஒருவன் அல்ல. தேவனிலும் அவருடைய வல்லமையிலும் பலப்படுங்கள். தைரியமாகவும், உறுதியாகவும், பொறுமையாகவும் இருங்கள். மாபெரும் நகரத்திலும் ஒரு மனிதன் மகிழ்ச்சியாகவும், உபயோகமான கிறிஸ்தவனாகவும், வாழும்பொழுது மதிக்கப்படுபவனாகவும், மரிக்கும்பொழுது கனப்படுத்தவும்படுவான் என்பதை நீங்கள் கண்டுக்கொளும் நாள் வரும்.
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.