கிறிஸ்துவின் ஊழியத்திற்கு அழைக்கப்பட்ட ஒரு ஊழியனின் ஊழியத்தில் பல்வேறு பரிமாணங்கள் உள்ளன. அவர் மீட்கப்படாத மக்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதும், தேவனுடைய மக்களை ஞானத்தோடும் அறிவோடும் போஷித்து வளர்ப்பதும் (எரேமியா 3:15), ஜனத்தின் வழியிலிருந்து இடறல்களை எடுத்துப்போடுவதும் (ஏசாயா 57:14) மட்டுமல்லாமல்; “சத்தமிட்டுக் கூப்பிடு, அடக்கிக்கொள்ளாதே, எக்காளத்தைப்போல் உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி” (ஏசாயா 58:1, 1 தீமோத்தேயு 4:2) என்ற கட்டளைக்கும் கீழ்ப்படிய வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக, மற்றொரு முக்கியமான கடமையாக, “என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்” (ஏசாயா 40:1) என்ற தேவனுடைய வார்த்தைக்கும் அவர் கீழ்ப்படிய வேண்டியிருக்கிறது.
“என் மக்கள்!” என்பது எவ்வளவு சிறந்ததொரு அழைப்பு! “உன் தேவன்!” என்பது எத்தகைய உறுதியளிக்கும் இணைப்பு! “என் மக்களுக்கு ஆறுதல்!” என்பது எப்பேர்ப்பட்ட பாக்கியமான பொறுப்பு! “ஆற்றுங்கள், தேற்றுங்கள்” என்ற கட்டளையை இரண்டு முறை வலியுறுத்துவதற்கு மூன்று காரணங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். முதலாவது, சில சமயங்களில் விசுவாசிகளின் ஆத்துமாக்கள் ஆறுதலடைய மறுக்கின்றன (சங்கீதம் 77:2). எனவே, இதுபோன்ற நேரங்களில்தான் ஆத்துமாவுக்கு அதிக ஆறுதல் கொடுப்பது அவசியமாகிறது. இரண்டாவதாக, விசுவாசிகளை ஊக்குவிக்கும் காரியத்தை அலட்சியப்படுத்தக் கூடாது என்பதைப் போதகரின் மனதில் ஆழமாகப் பதியவைப்பதற்காகவே இந்தப் பொறுப்பு வலியுறுத்தப்படுகிறது. மூன்றாவதாக, தேவன் தாமே தம்முடைய மக்களின் மகிழ்ச்சியைக் குறித்து எவ்வளவாய் வாஞ்சிக்கிறார் என்பதை நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும்தான் (பிலிப்பியர் 4:4).
தேவனுக்கென்று அவருடைய விசேஷித்த தயவுக்கு உரிய ஒரு மக்கள் இருக்கிறார்கள். தம்முடன் நெருங்கிய உறவில் இருக்கும்படி இந்தக் கூட்டத்தாரை அழைத்திருப்பதன் மூலம் அவர்களை “என்னுடைய ஜனங்கள்” என்று அநேக நேரங்களில் அழைக்கிறார். அவர்கள் பலமுறை ஆறுதலடையாமல் உள்ளனர். அவர்களின் பாவ சுபாவம், சாத்தானால் உண்டாகும் சோதனைகள், உலகத்தார் மூலம் உண்டாகும் துன்பங்கள், மேலும் கிறிஸ்துவின் காரியங்களில் உலகத்தின் மோசமான அணுகுமுறை எனத் தொடர்ச்சியான காரணங்களினால் அவர்கள் ஆறுதலடையாமல் இருக்கிறார்கள். “சகலவிதமான ஆறுதல்களின்” தேவன் அவர்கள்மேல் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் (2 கொரிந்தியர் 1:3). மேலும், அவருடைய ஊழியக்காரர்கள் இருதயம் உடைந்தவர்களுடைய காயங்களைக் கட்டி, அதில் கீலேயாத்தின் பிசின் தைலம் இடவேண்டும் என்பது அவருடைய வெளிப்படையான சித்தமாய் இருக்கிறது. தேவனுடைய கட்டளைகளுக்கும் அவரது அதிகாரத்திற்கும் எதிராகக் கலகம் செய்தவர்களுக்கும் ஆறுதல் கொடுக்கும் அவரைப்போல வேறொரு தேவன் உள்ளாரா என்கிற கேள்வியை எழுப்புவதன் வழியாகவே, “தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்?” என்று நாம் சொல்வதற்கு முகாந்திரம் இருக்கிறது (மீகா 7:18).
இந்தச் சிறிய புத்தகத்தின் உள்ளடக்கங்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக அவ்வப்போது நமது மாதாந்திரப் பத்திரிகைகளில் தோன்றியவை. அவை அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் வெகுகாலத்திற்கு முன்பே போதிக்கப்பட்டவை. இப்போது வழக்கத்தில் இல்லாத சில கருத்துக்களை நாம் தவிர்த்திருக்கிறோம் (குறிப்பாகத் தீர்க்கதரிசனம் பற்றிய காரியங்களை). எனினும், தேவனுடைய அநேக துன்புற்ற மக்களுக்கு இந்தப் புத்தகத்தின் செய்திகள் மிகுந்த ஆறுதலைத் தந்திருப்பதால், அவற்றை அதிகம் திருத்தியமைக்கவில்லை. இந்தப் புத்தகத்தில் உள்ள வேத வசன விளக்கங்கள் வழியாகத் தேவன் துன்பப்பட்டவர்களுக்குச் சமாதானம் தருவாராக. சகல மகிமையும் தேவனுக்கே உரியது.
— ஆர்தர் W. பிங்க், 1952
“ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை." (ரோமர் 8:1).
“இனித் தண்டனைத்தீர்ப்பே கிடையாது” என்பது இந்த அற்புதமான ரோமர் நிருபத்தின் முதல் பாதியின் முடிவாக வருகிறது. அதனால்தான் இந்த அதிகாரம் “ஆனபடியால்” என்ற வார்த்தையுடன் தொடங்குகிறது. இதை இரண்டு விதங்களில் காணலாம். முதலில், இந்த வசனம் ரோமர் 3:21-ம் வசனத்திலிருந்து சொல்லப்படும் அனைத்தோடும் தொடர்புடையதாய் இருக்கிறது. முந்தைய பகுதியிலிருந்து பெறப்பட்ட அனுமானம் இங்கே தரப்பட்டுள்ளது. அப்போஸ்தலனாகிய பவுல் ஆரம்பித்த வாதத்தின் முடிவாகவே இந்த அனுமானம் வருகிறது. ஏனெனில் இந்தப் பகுதி முழுவதிலும் உள்ள வாதத்தின் துவக்கத்திலிருந்தே அவர் இந்த முடிவை நோக்கித் தன் வாதத்தைக் கட்டமைத்தார்.
கிறிஸ்து இயேசு “தம்முடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக” ஏற்படுத்தப்பட்டதாலும் (ரோமர் 3:26), “அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும்” இருப்பதாலும் (ரோமர் 4:25), ஒருவருடைய (கிறிஸ்து) கீழ்ப்படிதலினாலே அநேகர் (எல்லாக் காலத்து விசுவாசிகளும் சட்டப்பூர்வமாக) நீதிமான்களாக்கப்படுவதாலும் (ரோமர் 5:19), விசுவாசிகள் (சட்டப்படி) பாவத்துக்கு மரித்ததாலும் (ரோமர் 6:2), அவர்கள் நியாயப்பிரமாணத்தின் ஆக்கினைத்தீர்ப்பின் வல்லமைக்கு மரித்தவர்கள் ஆனபடியாலும் (ரோமர் 7:4) “இனித் தண்டனைத்தீர்ப்பே கிடையாது”.
“ஆனபடியால்" என்ற வார்த்தை முந்தைய வாதங்களுக்கு ஒரு முடிவு என்று மட்டும் பார்க்காமல், இது முந்தைய அதிகாரத்தின் கடைசிப் பகுதியுடன் தொடர்புடையது என்பதையும் நம் கவனத்தில் கொள்ள வேண்டும். ரோமர் 7-ம் அதிகாரத்தின் இரண்டாம் பாகத்தில், மறுபிறப்படைந்த ஒரு நபருக்குள் எதிர்மறையான சுபாவங்களால் வரும் வலிமிகுந்த மற்றும் இடைவிடாத போராட்டத்தை, அப்போஸ்தலன் தனது சொந்த கிறிஸ்தவ அனுபவத்தைப் பயன்படுத்தி விவரிக்கிறார். ஒரு தேர்ந்த ஆசிரியரின் பேனாமூலம் தன்னையே அச்சித்திரத்தில் இணைத்து, தேவனுடைய பிள்ளை எதிர்கொள்ளும் ஆவிக்குரிய போராட்டங்களை விவரித்த பவுல், இப்போது அத்தகைய வேதனையான மற்றும் பரிதாபகரமான நிலைக்குத் தேவைப்படும் தெய்வீகக் கிருபையின் மீது தன் கவனத்தைத் திருப்புகிறார்.
ரோமர் 7-ம் அதிகாரம் புலம்பலுடன் முடிந்து, 8-ம் அதிகாரம் வெற்றியின் தொனியுடன் தொடங்குவது ஆச்சரியமாகவும் வியப்பாகவும் தோன்றலாம்; ஆனால் அது தர்க்கரீதியான மற்றும் இயல்பான ஒன்றுதான். ஒருவேளை விசுவாசிகள் பாவத்தின் மரணத்துடன் போராடுவதும் அதன் விளைவுகளால் புலம்புவதும் உண்மையாக இருந்தால், அவர்கள் சாபத்திலிருந்தும் தண்டனையிலிருந்தும் விடுதலையடைந்து வெற்றியின் மகிழ்ச்சியைக் காண்கிறார்கள் என்பதும் உண்மை. இந்த இரண்டு வெவ்வேறு அனுபவங்களை நாம் இங்கு விளக்கப்பட்டிருப்பதைக் காணலாம். 7-ம் அதிகாரத்தின் இரண்டாவது பாதியில், இந்த உலகில் தங்கள் வாழ்நாள் முழுவதும் விசுவாசிகள் மீது பாவத்தின் விளைவைக் குறித்து அப்போஸ்தலன் விவரிக்கிறார். ஆனால் 8-ம் அதிகாரத்தின் தொடக்க வசனத்தில், கிறிஸ்துவுடன் ஐக்கியப்பட்டபோது பாவ தோஷத்திலிருந்து அவர்கள் பெறும் முழுமையான விடுதலையைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார். எனவே 7:24-ல் அப்போஸ்தலன் கேட்கிறார், “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?”. ஆனால் 8:2-ல் "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே" என்று அப்போஸ்தலனாகிய பவுல் அறிவிக்கிறார்.
அதனால் இப்போது ஆக்கினைத்தீர்ப்பில்லை. இங்கே (1 யோவான் 3:21-ல் வருவது போல) நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்கிறதைப்பற்றிய கேள்வி இல்லை; அல்லது நம்மில் தண்டனைக்குரியது எதுவுமில்லை என்று நாம் உணர்வதையும் இங்கே குறிப்பிடவில்லை. மாறாகத் தங்கள் இரட்சிப்பிற்காகக் கிறிஸ்துவில் விசுவாசமுள்ளவர்களைத் தேவன் தண்டிக்க மாட்டார் என்ற ஆசீர்வதிக்கப்பட்ட சத்தியத்தை இது வெளிப்படுத்துகிறது. நாம் நமது அனுபவத்தின் அடிப்படையில் பார்க்கும் சத்தியத்திற்கும், புறநிலையில் உள்ள உண்மையான சத்தியத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்துகொள்வது மிக அவசியம். இல்லையெனில், இப்போது நமக்கு முன் உள்ள வசனம் தருகிற ஆதரவையும், சமாதானத்தையும் பெறத் தவறிவிடுவோம்.
“கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்பவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை". இது கிறிஸ்து இயேசுவில் தேவனுக்கு முன்பாக இருக்கும் ஒரு விசுவாசியின் ஸ்தானத்தைக் குறிக்கிறது. இது அவரது மாம்சத்தின் நிலையைக் குறிக்கவில்லை. ஆதாமில் நான் தண்டனைக்கு உள்ளானேன் (ரோமர் 5:21). ஆனால் கிறிஸ்துவில் நான் எப்போதும் எல்லா ஆக்கினைகளிலிருந்தும் முற்றிலும் விடுவிக்கப்பட்டேன்.
“ஆனபடியால் இப்போது எந்தவித ஆக்கினைத்தீர்ப்பும் இல்லை". “இப்போது" என்ற வார்த்தை, கிறிஸ்தவர்கள் விசுவாசிகளாக மாறுவதற்கு முன்பு ஒரு காலத்தில் ஆக்கினைத்தீர்ப்புக்குக் கீழாக இருந்ததைக் குறிக்கிறது. இது அவர்கள் கிறிஸ்துவுடன் மரிப்பதற்கு முன்னால் (கலாத்தியர் 2:20) இருந்த நிலையைக் குறிக்கிறது. கிறிஸ்துவின் மரணத்திற்குள்ளாகும்போது அவர்கள் சட்டப்பூர்வமான நீதியுள்ள பிரமாணத்தின் தண்டனைக்கு மரித்தார்கள். எனவே இந்த “இப்பொழுது” என்கிற பதம் அவர்களுடைய இரண்டு நிலைகளை அல்லது சூழல்களைக் காண்பிக்கிறது. சுபாவத்தின்படி நாம் பிரமாணத்தின் தண்டனைக்கு உட்பட்டவர்களாய் இருந்தோம், இப்போது கிருபைக்குக் கீழ்ப்பட்டவர்களாய் இருக்கிறோம் (ரோமர் 6:14). சுபாவத்தினாலே நாம் “மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்” (எபேசியர் 2:3). ஆனால் இப்போது தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, அவருக்குச் சொந்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்டோம் (எபேசியர் 1:6). முதல் உடன்படிக்கையின்படி நாம் ஆதாமுக்குள் இருந்தோம் (1 கொரிந்தியர் 15:22). ஆனால் இப்போது நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கிறோம் (ரோமர் 8:1). கிறிஸ்துவின் விசுவாசிகளான நம் அனைவருக்கும் நித்திய ஜீவன் உள்ளது. மேலும் இந்தக் காரணத்தினால் நாம் தண்டனைத்தீர்ப்புக்கு உள்ளாவதில்லை (யோவான் 5:24).
“தண்டனை" என்பது ஒரு தீவிரமான காரியம். அதை எந்த அளவு புரிந்துகொள்கிறோமோ அவ்வளவு சிறப்பாய் அதன் வல்லமையிலிருந்து நம்மை விடுவித்த ஆச்சரியமான கிருபையை நாம் போற்றுவோம். மனித நீதிமன்ற வளாகங்களில் ‘ஆக்கினைத்தீர்ப்பு’ என்ற வார்த்தை ஒரு குற்றவாளியின் மீது பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது; பார்ப்பவர்களுக்கு அது துக்கத்தையும், பயத்தையும் உண்டாக்குகிறது. ஆனால் தேவனுடைய நியாயாசனத்தில் அந்த வார்த்தை விவரிக்க முடியாத அளவிற்குத் தீவிரமானதும் பிரமிக்கத்தக்கதுமாக இருக்கும். அந்த நியாயாசனத்திற்கு முன் விழுந்துபோன ஆதாமின் சந்ததியினர் அனைவரும் நிற்க வேண்டும். அனைவரும் “பாவத்தில் கருத்தரிக்கப்பட்டு” பாவத்தில் உருவானவர்களாக, குற்றவாளிகள் என்று முத்திரை குத்தப்பட்டு, அவமதிப்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, பாவத்தால் சிறைபிடிக்கப்பட்ட கைதிகளாக இந்த உலகில் பிரவேசிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க ஒரே வழி, இந்தப் பயங்கரமான தண்டனையை ஏற்படுத்திய பாவத்தைத் தவிர்ப்பதுதான். குற்றம் ஒழிக்கப்படட்டும், அதற்குப் பின்னர் தண்டனைத்தீர்ப்பு இல்லை.
ஆனால் பாவம் நீக்கப்பட்டதா? அதாவது விசுவாசிக்கும் பாவியிடம் இருந்து பாவம் நீக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம் கொள்கிறோமா? இதற்கான பதிலை வேதவசனங்களே நமக்குத் தரட்டும்: “மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்." (சங்கீதம் 103:12). “நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்" (ஏசாயா 43:25). “இதோ, என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்” (ஏசாயா 38:17). “அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார்” (எபிரெயர் 10:17).
ஆனால் பாவம் எப்படி நீக்கப்படுகிறது? பாவத்தை இடமாற்றம் செய்வதன் மூலம் மட்டுமே இது சாத்தியம். தேவனுடைய பரிசுத்தம் பாவத்தைப் புறக்கணிக்க முடியாது; ஆனால் அவருடைய கிருபை அவ்வாறு செய்து, பாவத்தை இடமாற்றம் செய்தது. விசுவாசிகளின் பாவங்கள் கிறிஸ்துவின் மீது சுமத்தப்பட்டன. “கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார்." (ஏசாயா 53:6). “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை (கிறிஸ்துவை) நமக்காகப் பாவமாக்கினார்." (2 கொரிந்தியர் 5:21).
எனவே, இப்போது ஆக்கினைத்தீர்ப்பில்லை. இங்கே ‘இல்லை’ என்ற வார்த்தை வலியுறுத்திச் சொல்லப்பட்டுள்ளது. அதற்கு மேல் ஆக்கினைத்தீர்ப்பில்லை என்பது உறுதியானது. நியாயப்பிரமாண சட்டத்திலிருந்தோ, உள்ளார்ந்த அக்கிரமத்திலிருந்தோ, சாத்தானின் குற்றச்சாட்டிலிருந்தோ அல்லது வேறு எந்த காரணத்திலிருந்தோ இனி ஒருபோதும் ஆக்கினைத்தீர்ப்பு இருந்ததில்லை, இருக்கப்போவதுமில்லை. ஏனெனில் இனி ஆக்கினைத்தீர்ப்பில்லை. “இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” (ரோமர் 8:33). இனி எந்தத் தண்டனையும் இல்லை; கர்த்தரால் விடுவிக்கப்பட்டதால் “எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்.” (ரோமர் 4:8). இதற்கு மேல் எந்தக் கண்டனமும் இருக்க முடியாது.
“ஆகையால் இப்போது கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்பவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை". ஒரு விசுவாசி தனது பழைய சுபாவத்துக்கும் புதிய சுபாவத்துக்கும் இடையே உள்ள போராட்டத்தை விவரிக்கும்போது, முந்தைய அதிகாரத்தில் தனது சொந்த அனுபவத்தால் எடுத்துக்காட்டப்பட்டபடி, அவர் கிருபையில் வளர்ந்திருந்தாலும், அத்தகைய ஆவிக்குரியப் போராட்டத்திலிருந்து யாருக்கும் விதிவிலக்கில்லை என்பதை அப்போஸ்தலன் தெளிவுபடுத்துகிறார். ஆனால் ரோமர் 8:1-ம் வசனத்தில் ‘எனக்கு’ என்ற ஒருமைப் பயன்பாட்டிற்குப் பதிலாக, அப்போஸ்தலன் அந்த விளக்கம் முழுவதும் பன்மையைப் பயன்படுத்துகிறார் என்பது கவனிக்கத்தக்கது. அதாவது “கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிற எனக்கு" என்று சொல்லாமல் "கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிறவர்களுக்கு" என்று சொல்லுகிறார். இப்படி எழுதுவதுகூடப் பரிசுத்த ஆவியானவரின் கிருபையே. அப்போஸ்தலனாகிய பவுல் இங்கும் ஒருமையான வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தால், பவுலைப் போன்ற மாபெரும் தேவ மனிதருக்கு மட்டுமே இவ்வளவு பெரிய ஆசீர்வாதம் கிடைக்கும் என்றும், அது நமக்குப் பொருந்தாது என்றும் நினைக்க வாய்ப்பு இருந்திருக்கும். அதனால்தான், இந்த மாபெரும் ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் என்பதைத் தெளிவுபடுத்துவதற்காக, பரிசுத்த ஆவியானவர் பவுலை இங்குப் பன்மையான வார்த்தையைப் பயன்படுத்துவதற்குத் தூண்டினார்.
“ஆகையால் இப்போது கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்பவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை". “கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்பது” என்பது, தேவனுடைய அனைத்து நீதியான பார்வையிலும் நடவடிக்கைகளிலும் நாம் விசுவாசத்தினால் கிறிஸ்துவுடனேகூட ஒன்றாக அடையாளப்படுத்தப்படுகிறோம் என்று பொருளாகும். தண்டனைத்தீர்ப்பிலிருந்து விடுதலையைப் பெறுவது நமது நடக்கையை எவ்வளவும் சார்ந்திருக்கவில்லை; மாறாகக் கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்பதையே சார்ந்துள்ளது.
“கிறிஸ்து இயேசுவை விசுவாசிக்கிறவன், பேழைக்குள் நோவாவைப் போலப் பாதுகாப்பாக இருப்பான். மேலே கறுத்த மேகத்தில் மழை பொழிந்தாலும், தண்ணீரால் பேழை தத்தளித்தாலும், அவன் பேழைக்குள் ஒரு துளி தண்ணீர்கூட நுழையாமல், புறம்பே கொந்தளிக்கும் புயல் அவனுடைய ஆவியின் சமாதானத்தைக் குலைப்பதில்லை. ஈசாக்கு யாக்கோபை முத்தமிட்டு ஆசீர்வதித்தபோது அவன் தன் மூத்த சகோதரனுடைய உடையை அணிந்துகொண்டிருந்ததுபோல, விசுவாசியும் கிறிஸ்துவில் இருக்கிறான். இரத்தப்பழி வாங்குகிறவன் அடைக்கலப்பட்டணத்தில் இருக்கும் கொலைகாரனைப் பின்தொடர்ந்து அவனைக் கொல்லக்கூடாதபடி இருப்பதுபோலக் கிறிஸ்துவில் இருக்கும் விசுவாசியும் இருக்கிறார்” (மறைதிரு. வின்ஸ்லோ, 1857). ஆம், அவன் கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிறான் என்பதால், இனி அவனுக்குத் தண்டனைத்தீர்ப்பில்லை. அல்லேலூயா!
“அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்." (ரோமர் 8:28).
பல நூற்றாண்டுகளாக தேவனை நேசிக்கின்ற அனைவரும் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வார்த்தையால் ஆறுதல் அடைந்து பலப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடைய உபத்திரவத்திலும், சோதனைகளிலும், குழப்பங்களிலும், இந்த வசனம் அவர்களின் காலடியில் பலமான பாறையைப் போல இருந்திருக்கிறது. வெளிப்புறச் சூழ்நிலைகள் அவர்களுக்கு எதிராகத் தோன்றினாலும், அவர்களின் இயல்பான சிந்தனை எல்லாமே அவர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகத் தோன்றினாலும், அவர்களுடைய விசுவாசம் அதற்கு எதிராகச் செயல்பட்டது. மேலும், இந்த தெய்வீக வாக்குத்தத்தத்தில் நம்பிக்கை வைக்கத் தவறியவர்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி தேவையற்ற பயத்திற்கு உள்ளானார்கள்.
“சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது." இங்கே முதலில் நம்முடைய சிந்தனைக்கு வருவது சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாக நடப்பிக்கும் தேவன் எவ்வளவு பெரியவர் என்பதுதான்! இடைவிடாமல் செயல்படும் அக்கிரமம் எவ்வளவு பயங்கரமானது? இந்தப் படைப்பில் எண்ணிலடங்காத உயிரினங்கள் எத்தனை உள்ளன? தடைகளை ஏற்படுத்தும் சுயநல ஆசைகள் எவ்வளவு அதிகமாக உள்ளன? தேவனோடு போரிடும் எதிரிகளின் எண்ணிக்கை எத்தனை? தேவனின் செயல்களைத் தொடர்ந்து எதிர்க்கும் எத்தனையோ வான மண்டல சேனைகள் உள்ளன. ஆயினும், எல்லாவற்றின் மீதும் சர்வ வல்லமை கொண்ட தேவன், எல்லாச் சூழ்நிலைகளிலும் அசைக்க முடியாதவராகவும் ஆளுகை உடையவராகவும் இருக்கிறார். அவருடைய மகிமையான சிங்காசனத்திலிருந்து எல்லாவற்றையும் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே செய்கிறார் (எபேசியர் 1:11). இந்தத் தேவனுக்கு முன்பாக பயபக்தியுடன் நிற்போம். ஏனெனில் "சகல ஜாதிகளும் அவருக்கு முன்பாக ஒன்றுமில்லை, அவர்கள் சூனியத்தில் சூனியமாகவும், மாயையாகவும் எண்ணப்படுகிறார்கள்” (ஏசாயா 40:17). நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் முன்பாக பயபக்தியுடன் வணங்குவோம் (ஏசாயா 57:15). உங்கள் சத்தத்தை உயர்த்தி அவருக்குத் துதியைச் செலுத்துங்கள். ஏனெனில் நேரடியான தீமையிலிருந்தும் அவர் மிகப்பெரிய நன்மையை வெளிக்கொண்டு வர வல்லவர்.
“சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது." படைப்பில் வெற்றிடம் என்று எதுவும் இல்லை. மேலும் படைக்கப்பட்டவைகள் கூட தங்களுக்கு நியமிக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதில் தோல்வி அடைவதில்லை. எதுவும் வெறுமையாய் இருப்பதில்லை. ஒவ்வொன்றும் அதற்கு நியமிக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்ற தேவனால் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொன்றும் அதன் படைப்பாளியான தேவனின் பார்வைக்கு விருப்பமான ஒரு முடிவை நோக்கி நிரந்தரமாக உழைக்கின்றன. அவருடைய கட்டளையின்படியே அனைத்தும் நடக்கின்றன.
“சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது.” அவை அவ்வாறு நடப்பது மட்டுமல்ல, அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. அனைத்தும் நேர்த்தியாய் ஒருங்கிணைந்து செயல்படுவதால், அவைகளில் இருக்கும் அழுத்தங்களை அபிஷேகம் பெற்ற காதுகளால் மட்டுமே பிரித்தறிய முடியும். எல்லாம் நன்மைக்கு ஏதுவாக நடப்பது என்பது வெறுமனே அல்ல, அவை துணைக் காரணிகளாகவும் பரஸ்பர சகாயகர்களாகவும் இணைந்தே அனைத்தும் ஒன்றாக வேலை செய்கின்றன. அதனால்தான் துன்பங்கள் அரிதாகவே தனியாக வரும். மேகத்திற்கு மேல் மேகம், புயலுக்கு மேல் புயல் என அவை எழும்புகின்றன. யோபுவுக்கு நடந்தது போலவே, துர்செய்திகளைத் தொடர்ந்து மிகவும் வேதனையான கெட்ட செய்திகள் வரும். ஆயினும் இங்கேயும் விசுவாசம் தேவனுடைய ஞானத்தையும் அவருடைய அன்பையும் கண்டறியத் துடிக்கும். ஒரு உணவின் மதிப்பு அதில் சேர்க்கப்படும் பொருட்களின் கலவையால் தீர்மானிக்கப்படுகிறது. தேவனின் செயல்கள் இவ்விதமாகவே இருக்கும். அவரது திட்டத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் வெறுமனே நடக்காமல், ஒன்றாக இணைந்து நடக்கின்றன. இதை உணர்ந்த இஸ்ரவேலின் மெல்லிசைப் பாடகர், “உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்” (சங்கீதம் 18:16) என்று தேவனைப் புகழ்கிறார்.
“சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது.” விசுவாசிகள் எத்தனை அல்லது எப்பேர்ப்பட்ட துன்பங்களில் இருந்தாலும், அவை எல்லாம் அவர்களின் நன்மைக்காகப் பணிசெய்கின்றன என்றும், அவைகள் நாம் பரலோகத்தில் நித்திய சுதந்தரத்தைப் பெறுவதற்கு ஏதுவாகப் பங்களிப்பு செய்கின்றன என்றும் இந்த வசனங்கள் நமக்குக் கற்பிக்கின்றன. மிகவும் ஆபத்தான காரியங்களிலிருந்தும் மிகப் பெரிய நன்மையை நமக்குக் கொண்டு வரும் தேவனின் ஏற்பாடு எவ்வளவு அற்புதமானது என்று பாருங்கள்! வானத்தின் கோள்களை தங்களின் சுற்றுவட்டப்பாதையில் கட்டுப்படுத்தும் அவருடைய மாபெரும் சக்தியைக் கண்டு நாம் வியப்படையலாம். தொடர்ந்து வரும் பருவங்களும், பூமி புதுப்பிக்கப்படுகிறதும் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. ஆனால் இவைகளிலும் மேலான ஆச்சரியம் என்னவென்றால், மனித வாழ்வின் குழப்பமான நிகழ்வுகளின் தீமையிலிருந்து நன்மையை வெளிக்கொண்டு வந்து, சாத்தானின் வல்லமை, வெறுப்பு மற்றும் அவனது அழிக்கும் சூழ்ச்சிகளிலிருந்து அவருடைய பிள்ளைகளுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும் தேவனின் செயல்தான் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும்.
“சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது.” இவ்விதமாக நடப்பதற்கு மூன்று காரணங்கள் உள்ளன: முதலாவதாக, படைப்பில் உள்ள அனைத்தும் அதன் நிர்வாகியின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால்; இரண்டாவதாக, தேவன் நம்முடைய நன்மையை நாடுவதால், மேலும் நமது நன்மையை மட்டுமே நாடுவதால்; மூன்றாவதாக, சாத்தான் தேவனின் அனுமதியின்றி நம்முடைய தலையில் ஒரு முடியைக் கூட தொட முடியாது, ஒருவேளை சாத்தானுக்கு தேவன் அனுமதித்தால் அதையும் நம் நன்மைக்காகவே அவர் அனுமதித்திருப்பார். அவை அனைத்தும் இயல்பாகவே நல்லவை அல்ல, ஆனால் அவை அனைத்தையும் நம் நன்மைக்கு ஏதுவாக தேவன் மாற்றுகிறார். நம்முடைய வாழ்வில் எதுவும் நோக்கமில்லாமல் நடப்பதில்லை, ஒவ்வொன்றும் நமது நன்மைக்காக தேவனின் நோக்கத்தின்படியே நடக்கின்றன. அனைத்தும் தேவனின் நித்திய நோக்கத்திற்கான ஒரு வழிமுறையாகும், மேலும் அவை தேவனுடைய குமாரனின் சாயலுக்குள் நாம் வருவதற்கென குறிக்கப்பட்ட ஆசீர்வாதம்தான். நம்முடைய பரலோக பிதா தாம் தெரிந்துகொண்டவர்களின் நன்மைக்காக கிறிஸ்துவின் துன்பம், இழப்பு மற்றும் பாடுகள் அனைத்தையும் பயன்படுத்துகிறார்.
“தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு” – இது ஒரு உண்மையான கிறிஸ்தவனின் தனித்துவமான அடையாளம். அதற்கு எதிரிடையான அடையாளம் மறுபிறப்பு அடையாதவரின் வாழ்க்கை. ஆனால் எல்லாப் பரிசுத்தவான்களும் தேவனை நேசிப்பார்கள். அவர்களின் விசுவாச அறிக்கைகளில் சிறிய வேறுபாடுகள் இருக்கலாம். அவர்களின் திருச்சபைகளின் ஒழுங்கு முறைகளில் சில வேறுபாடுகள் இருக்கலாம், அவர்களின் ஆவிக்குரிய நலன்கள் சமமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த ஒரு விஷயத்தில் அவர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள்: அவர்கள் அனைவரும் கிறிஸ்துவை விசுவாசிக்கிறார்கள் மற்றும் அவர்கள் தேவனை நேசிக்கிறார்கள். நமக்கு மீட்பரை ஈவாகக் கொடுத்தமைக்காக அவர்கள் தேவனை நேசிக்கிறார்கள். தேவனைத் தங்களைப் பாதுகாக்கும் பிதாவாக உரிமையுடன் நேசிக்கிறார்கள். அவருடைய மகத்துவத்தினாலும், பரிசுத்தத்தினாலும், ஞானத்தினாலும், விசுவாசத்தினாலும் அவர்கள் அவரை நேசிக்கிறார்கள். இவர்களை அவர் நடத்தும் விதத்திற்காக அவரை நேசிக்கிறார்கள். அவர் எதைக் கொடுக்கிறார், எதைக் கொடுக்க மறுக்கிறார், எதை அங்கீகரிக்கிறார், எதைக் கண்டிக்கிறார் என்பதைப் பொறுத்து அவர்கள் அவரை நேசிக்கிறார்கள். அவர் எல்லாவற்றையும் நன்றாகச் செய்கிறார் என்று தெரிந்திருப்பதுடன், ஒழுக்கத்திற்காக அவர் பயன்படுத்தும் சிட்சைக்காகவும்கூட அவரை நேசிக்கிறார்கள். அவரில் உள்ள எதுவும், அவரிடமிருந்து வரும் எதுவும், அவரை நேசிக்காதபடி தடைசெய்ய முடியாது. “அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்." (1 யோவான் 4:19) – இது தேவனைப் பற்றி அவர்களுக்கு இருக்கும் உறுதி.
“தேவனை நேசிப்பவர்களுக்கு”. ஐயோ! என் தேவனை நான் எவ்வளவு குறைவாக நேசிக்கிறேன். என் அன்பின்மையால் நான் வருந்துகிறேன். என் அன்பு குறைந்ததினால் என்னை நானே துன்புறுத்திக் கொண்டிருக்கிறேன். ஆம், நான் என்னையும், என் சுயத்தையும், உலகையும் மிகவும் நேசிக்கிறேன். ஆனால் “நான் உண்மையில் என் தேவனை நேசிக்கிறேனா?” என்ற கேள்வி என்னை ஆட்டிப்படைக்கிறது. அப்படியானால், தேவனை நேசிக்க ஆசைப்படுவது ஒரு நல்ல அறிகுறி அல்லவா? தேவனை நான் எவ்வளவு குறைவாக நேசிக்கிறேன் என்பதே நான் அவரை வெறுக்கவில்லை என்பதற்கு நிச்சயமான சான்றாக உள்ளது. அவர்களின் இதயத்தின் கடினத்தன்மையின் காரணமாக, அவர்களின் நன்றியின்மை காரணமாக, ஒவ்வொரு தலைமுறையிலும் பரிசுத்தவான்கள் இவ்வாறு புலம்பியிருக்கிறார்கள். “தேவனை நேசிப்பது என்பது பரலோகத்தின் மீது நமக்கு இருக்கும் அன்பு.” ஆனால் பூமிக்குரிய ஈர்ப்புகளும் அழுத்தங்களும் இதற்குத் தடையாக நிற்கின்றன. ஆத்துமா இந்தப் பலவீனமான உடலின் நிர்பந்தத்திலிருந்து தப்பித்து அந்தப் பிரகாசமான மற்றும் சுதந்திரமான பரலோகத்தை அடையும் வரை அந்த நிலையிலிருந்து நாம் விடுபட முடியாது” (டாக்டர் சால்மர்ஸ்).
"அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கு". புதிய ஏற்பாட்டில் அழைக்கப்பட்டவர்கள் என்ற வார்த்தை வெறும் சுவிசேஷத்தை விசுவாசிப்பதற்கு வெளிப்புறமாக “அழைக்கப்பட்டவர்" என்று எங்கும் பயன்படுத்தப்படவில்லை. இந்த வார்த்தை எப்போதும் இரட்சிப்புக்கு ஏதுவான, உள்ளான அழைப்பையே குறிக்கும். இந்த அழைப்பை உருவாக்குவதா அல்லது அவமதிப்பதா என்பதில் நமக்கு எந்தவிதமான அதிகாரமுமில்லை. ரோமர் மற்றும் பல வேதபகுதிகளிலும் சொல்லப்படுவதுபோல, “அவர் சகல ஜாதிகளையும், அவர்களுக்குள் இயேசு கிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும், தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்துக்குக் கீழ்ப்படியப்பண்ணும்பொருட்டு, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் அருளிச்செய்திருக்கிறார்” (ரோமர் 1:6,7).
அன்புள்ள வாசகரே! இந்த அழைப்பு உங்களிடம் வந்தடைந்திருக்கிறதா? நீங்கள் ஊழியர்களின் அழைப்பைக் கேட்டிருக்கலாம், சுவிசேஷத்தின் அழைப்பைக் கேட்டிருக்கலாம், மனசாட்சியின் அழைப்பைக் கேட்டிருக்கலாம், ஆனால் உள்ளான நிலையிலும் மறுக்கவும் முடியாததுமான பரிசுத்த ஆவியானவரின் அழைப்பைக் கேட்டிருக்கிறீர்களா? நீங்கள் இருளிலிருந்து வெளிச்சத்திற்கும், மரணத்திலிருந்து ஜீவனுக்கும், உலகத்திலிருந்து கிறிஸ்துவுக்கும், சுயத்திலிருந்து தேவனிடத்திற்கும் அழைக்கப்பட்டிருக்கிறீர்களா? நீங்கள் தேவனால் அழைக்கப்பட்டிருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்துவதே உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். அந்த அழைப்பின் மகிழ்ச்சியான, ஜீவனைக் கொடுக்கும் இன்னிசை உங்கள் இதயத்தில் எதிரொலித்ததா? ஆனால் எனக்கு அத்தகைய அனுபவம் இருப்பதை நான் எப்படி உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்? இதை உறுதி செய்வதற்கான ஒரு திட்டவட்டமான அளவுகோல் நாம் வாசிக்கும் இத்தலைப்பின் உரையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. யார் இரட்சிக்கப்படுவதற்கு ஏற்ற அழைப்பினை தேவனால் பெற்றுக்கொண்டார்களோ அவர்கள் தேவனை அதிகமாக நேசிக்கிறார்கள். தேவனை வெறுப்பதற்குப் பதிலாக, அவரை மகிமைப்படுத்துவார்கள். அவருடைய சந்நிதியிலிருந்து பயந்து ஓடுவதற்குப் பதிலாக, அவர்கள் தேவனைத் தேடுவார்கள். அவருடைய மகத்துவத்தைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, அவர்கள் தேவனைத் திருப்திப்படுத்தவும், மகிமைப்படுத்தவும் மட்டுமே விரும்புவார்கள்.
"அவருடைய தீர்மானத்தின்படி". இந்த அழைப்பு மனிதத் தகுதிகள் அடிப்படையிலானது அல்ல. மாறாக இது தேவனின் சித்தத்தின்படி உண்டான ஒரு அழைப்பு. “அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்” (2 தீமோத்தேயு 1:9). அந்த வசனத்தில் “அவருடைய தீர்மானத்தின்படியும்" என்ற சொற்றொடரைச் சேர்ப்பதன் மூலம், சிலர் தேவனை நேசிப்பதற்கும் மற்றவர்கள் விரும்பாததற்கும் தேவனின் இறையாண்மைதான் காரணம் என்பதை பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்துகிறார். அவர்களில் இருக்கும் எந்த ஒரு மகத்துவத்தாலும் அல்ல, மாறாக அவரது விலையேறப்பெற்ற கிருபையின் காரணமாகவே இது நிகழ்கிறது.
இந்த வார்த்தையில் நடைமுறை மதிப்பும் உள்ளது. கிருபையின் கோட்பாடுகள் வெறும் ஒரு விசுவாசப்பிரமாணத்தை உருவாக்குவதற்காக மட்டும் கொடுக்கப்படவில்லை. அவை அருளப்பட்டதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று பயத்தால் நசுக்கப்பட்ட இதயங்களை தேவனின் அன்பினால் தேற்றுவதே! இந்த அன்பு நம் இதயங்களில் எப்போதும் தொடர்ச்சியாகப் பாய்வதுடன், அதில் வளர்க்கக்கூடிய வகையில் நாம் இடைவிடாமல் அந்த அன்பினால் ஊக்கம் பெறுகிறவர்களாகவும் இருக்க வேண்டும். ஒரு அழகான காட்சி அல்லது படத்தைப் பற்றிய நமது இரசனையைப்போலவே, நீங்கள் மறுபடியும் அந்த அன்பின் அழகைப் பார்க்கத் திரும்புவீர்கள். இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் நாம் நம்பியிருக்கும் சத்தியத்தை நம் மனதில் கொண்டுவரும்படியாக வேத வசனத்தின் மீது அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. “நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்” (1 கொரிந்தியர் 15:2). “நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால் உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன்" (2 பேதுரு 3:1,2) என்கிறார் அப்போஸ்தலன். “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்று ஆண்டவர் சொன்னார் (லூக்கா 22:19). ஆகவே, நாம் பொல்லாதவர்களாகவும், அயோக்கியர்களாகவும் இருக்கும்போது, அவருடைய கிருபையால் அவர் நம்மை அழைத்த அந்த மணிப்பொழுதை நாம் நினைவுகூரும்போது, அவருடைய அன்பு நம் இருதயங்களில் புதுப்பிக்கப்படுகிறது. நரக நெருப்பிலிருந்து உங்களை வெளியே கொண்டு வந்த கிருபையை நினைத்து உங்கள் இதயம் நன்றியுணர்வுடன் பொங்குகிறது. மேலும் மற்ற அநேகர் புறந்தள்ளப்பட்டபோதும் உங்களைத் தமது சர்வவல்லமையுள்ள மற்றும் நித்தியமான சித்தத்தின் வழியாக மட்டுமே அவர் அழைத்தார் என்பதைக் கண்டுபிடிப்பதால் தேவன் மீதான உங்கள் அன்பு இன்னமும
நமது வேதபகுதிக்கு மிகவும் நெருக்கமான வாழ்வியல் உதாரணமாக, யாக்கோபின் வாழ்க்கைச் சம்பவம் திகழ்கிறது. இது பல வழிகளில் நம் அனைவரின் வாழ்க்கைக்கும் ஏற்ற ஒரு உதாரணம்தான். ஒரு இருண்டதும், கனத்ததுமான மேகம் அவரைச் சூழ்ந்தது. கடுமையான சோதனை அவரது விசுவாசத்தை உலுக்கியது. அவரது பாதங்கள் நழுவியது என்றே சொல்லும் அளவிற்குச் சென்றது. அவரது புலம்பலின் வார்த்தைகளைக் கேளுங்கள். “அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: ‘என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள். யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை, பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள். இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது" (ஆதியாகமம் 42:36) என்றார். ஆனாலும் அந்த சந்தர்ப்பச் சூழல்கள் அவருடைய மங்கிய விசுவாசப் பார்வையில் இருள் போலத் தோன்றினாலும் அதே வேளையில் இந்தச் சூழல்கள்தான் அவருடைய வாழ்வின் இறுதிப்பகுதியை மகிமை நிறைந்த இருளற்ற அஸ்தமனத்திற்கு நேராக வழிநடத்தியது. சகலமும் அவருடைய நன்மைக்காக நடந்தேறியது! ஆகவே, கலங்கி நிற்கும் ஆத்துமாவே, அதிக இக்கட்டான சூழ்நிலைகள் சீக்கிரமாக முடிந்துவிடும். மேலும் நீங்கள் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்கையில் நீங்கள் இப்போது கண்ணாடியில் பார்ப்பதுபோலல்லாமல், எந்தவித நிழலும் இல்லாத தெய்வீகப் பிரசன்னத்தின் பிரகாசத்தைக் கண்டு, சகலமும் உங்களுடைய தனிப்பட்ட மற்றும் நித்திய நன்மைக்கே நடந்தது என்று உணர்வீர்கள்.
“ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்." (ரோமர் 8:18).
இந்த வார்த்தைகளை எழுதியவர் இன்னல்களுக்கு முற்றிலும் அந்நியராகவோ, அல்லது சிறிய துன்பங்களைத் தவிர வேறு எந்த பெரிய சோதனையையும் அனுபவிக்காதவராகவோ இருந்திருக்கலாம் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், இந்த வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலால் எழுதப்பட்டவை. மிகவும் கடினமான சூழ்நிலைகளில் மூழ்கி, பல்வேறு சோதனைகள், கஷ்டங்கள் மற்றும் துன்புறுத்தல்களை ஏராளமாக அனுபவித்த ஒருவரால் எழுதப்பட்ட வரிகள்தான் இவை. அப்போஸ்தலனாகிய பவுலின் சொந்த சாட்சியைக் கேளுங்கள்: “யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்து தரம் அடிபட்டேன். மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன். ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும், பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.” (2 கொரிந்தியர் 11:24-27).
வாழ்க்கைப் பயணத்தில், மகிழ்ச்சியில் திருப்தியடைந்து, ரோஜாப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சொகுசு நடையின் அனுபவத்தில் இருந்து இந்த வார்த்தைகள் வரவில்லை. மாறாக, தன் சொந்த மக்களால் வெறுக்கப்பட்டு, கண்ணீர் வடிக்கும் அளவிற்கு காயப்பட்டு, வாழ்வின் அடிப்படை வசதிகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டவரிடம் இருந்து வரும் வார்த்தைகள்தான் அவை. இப்படிப்பட்ட அனுபவங்களைச் சந்தித்தவர் வெளிப்படுத்தும் இவ்வளவு மகிழ்ச்சியுள்ள எதிர்பார்ப்பை எப்படி விளக்குவது? தனக்கு நேரிட்ட இந்த சோதனைகள், இன்னல்களுக்கு மேலாக அவர் உயர்ந்து நிற்பதன் இரகசியம் என்னவாக இருக்க முடியும்?
மூன்றாவதாக, அப்போஸ்தலன் “இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமை” குறித்து மகிழ்ச்சியடைகிறார். இதன் முழு அர்த்தம் என்னவென்றால், அதைப் புரிந்துகொள்ளும் திறன் இப்போது நமக்கு இல்லை. ஆனால் இதைக்குறித்து வேதம் அதிக விளக்கத்தை நமக்குத் தருகிறது. அந்த நாளில் நாம்:
பரிபூரணமான மகிமையுள்ள சரீரத்தை உடையவர்களாக இருப்போம்: அந்நாளிலே இந்த அழிவுக்குரியது அழியாமையைத் தரித்துக்கொள்ளும். மரணத்திற்குரிய சரீரம் சாவாமையைத் தரித்துக்கொள்ளும். கனவீனமாக விதைக்கப்பட்ட சரீரம் கனமானதாக எழுப்பப்படும். பலவீனமானதாக விதைக்கப்பட்ட சரீரம் பலமுள்ளதாக எழுப்பப்படும். “மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம்." (1 கொரிந்தியர் 15:49). இந்த சத்தியங்களின் சுருக்கமும் விவரமுமான வர்ணனை பிலிப்பியர் 3:20-21ல் தரப்பட்டுள்ளது. “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.”
மறுரூபமாக்கப்பட்ட மனதின் மகிமையை உடையவர்களாக இருப்போம்: “இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம். இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.” (1 கொரிந்தியர் 13:12). ஆகா! அந்த மகிமையான ஞானம் எவ்வளவு வியப்பாகவும், பிரகாசமாகவும் இருக்கிறது! அது எப்பேர்ப்பட்ட ஒளியை வீசுகிறது! எப்பேர்ப்பட்ட புரிதலை அது அளிக்கிறது! அதன் பின்னர் அனைத்து இரகசியங்களும் வெளிப்படும், எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்படும், எல்லா மேடுபள்ளங்களும் சரி செய்யப்படும். அப்போது, தேவனுடைய வேதத்தில் உள்ள ஒவ்வொரு சத்தியத்தையும், அவருடைய ஏற்பாட்டின் ஒவ்வொரு நிகழ்வையும், அவருடைய அரசாங்கத்தின் ஒவ்வொரு முடிவையும், தெளிவாகவும், பிரகாசமாகவும், சூரியனின் பிரகாசத்தை விட அதிக மகிமையுடன் நாம் காண்போம். இப்போது நீங்கள் உங்கள் ஆவிக்குரிய இருளை நினைத்தும், உங்கள் நினைவாற்றலின் பலவீனத்தைக் குறித்தும், உங்கள் குறைவான அறிவாற்றல் திறன் குறித்தும் கவலைப்படுகிறீர்களா? அப்படியானால் உங்களில் வெளிப்பட இருக்
எல்லாவற்றிலும் மிகச் சிறப்பாக, பரிபூரணமான பரிசுத்தத்தின் மகிமையை உடையவர்களாக இருப்போம்: அதன் பின்னர் நம்மில் உள்ள தேவனுடைய கிருபையின் செயல் முழுமையடையும். கர்த்தர் நமக்காக “யாவையும் செய்து முடிப்பதாக” (சங்கீதம் 138:8) வாக்குப்பண்ணியிருக்கிறார். அதன்பின் பரிசுத்தத்தின் முழுமை உண்டாகும். தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு நாம் முன்குறிக்கப்பட்டிருக்கிறோம் (ரோமர் 8:29). அதன்பின் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், "அவருக்கு ஒப்பாயிருப்போம்" (1 யோவான் 3:2). அப்போது, நம் இருதயங்கள் இனித் தீய எண்ணங்களால் தீட்டுப்படாது. இனி ஒருபோதும் நம் மனசாட்சி குற்ற உணர்வால் மாசுபடாது. தகுதியற்ற பொருள்களால் நமது லட்சியங்கள் இனி ஒருபோதும் சிக்கிக்கொள்ளாது.
என்ன ஒரு அற்புதமான ஆசீர்வாதம் இது! தற்போது எந்த ஒளிக்கதிரையும் காணமுடியாத என்னில் எப்பேர்ப்பட்ட மகிமை வெளிப்படப்போகிறது! மிகவும் வழிதவறிய, மிகவும் தகுதியற்ற, அதிக பாவமுள்ள என்னில் இது வெளிப்படப்போகிறது. ஜோதிகளின் பிதாவுடன் மிகவும் சிறிய அளவில் மட்டுமே ஐக்கியப்பட்டிருக்கிறேன்! இப்படிப்பட்ட என்னில் பிதாவின் இந்த மகிமை வெளிப்படுவது சாத்தியமா? சாத்தியமே என்று தவறில்லாத தேவனுடைய வார்த்தை உறுதிப்படுத்துகிறது. தேவனுடைய மகிமையின் பிரதிபலிப்பான அவரிடம் நான் வசிப்பதன் மூலம் ஒளியின் பிள்ளையாக இருந்தால், நான் இப்போது உலகின் இருண்ட நிழல்களுக்கு மத்தியில் வசித்தாலும், ஒரு நாளில் வானத்தின் ஒளிகளைக் காட்டிலும் நான் பிரகாசிப்பேன். நம்முடைய கர்த்தராகிய இயேசு இந்த பூமிக்குத் திரும்பி வரும்போது, அவர் தம்மை “விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராய்” இருப்பார் (2 தெசலோனிக்கேயர் 1:10).
இறுதியாக, அப்போஸ்தலன் நிகழ்காலப் “பாடுகளை” இனி நம்மில் வெளிப்படும் “மகிமையுடன்" சீர்தூக்கிப் பார்த்து, முதலாவது இரண்டாவதுடன் ஒப்பிடவே தகுதியற்றது என்று உரக்கச் சொல்கிறார். இக்காலப் பாடு நிலையற்றது, இனி வரப்போவது நித்தியமானது. எல்லைக்குட்பட்ட ஒன்றிற்கும் எல்லைக்கு அப்பாற்பட்ட ஒன்றிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல, பூமிக்குரிய துன்பங்களுக்கும் பரலோக மகிமைக்கும் எந்தவித ஒப்பீடும் இல்லை.
மகிமையின் ஒரு இமைப்பொழுது என்பது வாழ்நாள் முழுவதும் படும் பாடுகளை விட அதிக கனமானது. இம்மானுவேலின் தேசத்தின் மகிமையுடன் ஒப்பிடும்போது நம்முடைய வருடக்கணக்கான பிரயாசம், வியாதி, வறுமையின் போராட்டம், அல்லது எல்லாவிதமான துக்கங்களை என்னவென்று சொல்வது! தேவனுடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்ப நதியில் அனுபவிக்கும் ஒரு துளி, பரலோகத்தில் ஒருமுறை சுவாசிக்கும் மூச்சுக்காற்று, இரத்தத்தால் கழுவப்பட்டவர்களுடன் சேர்ந்து சிம்மாசனத்தைச் சூழ்ந்திருக்கும் ஒரு மணிநேரம், உலகின் எல்லாக் கண்ணீருக்கும் துயரங்களுக்கும் மேலான இழப்பீடாக அமைகிறது. “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்." வாசகரும் எழுத்தாளரும் இந்த வார்த்தைகளை விசுவாசத்துடன் ஏற்றுக்கொண்டு, தற்போதைய சூழ்நிலைகளுக்கு அவற்றைப் பயன்படுத்தவும், அதன் விளைவாக தேவனுடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, அவை கொண்டு வரும் மகிழ்ச்சியை அனுபவிக்கவும் பரிசுத்த ஆவியானவர் உதவுவாராக!
“தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?" (ரோமர் 8:32).
மேலே குறிப்பிட்ட வசனம் தெய்வீக தர்க்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இது ஒரு முன்னாதாரத்திலிருந்து ஒரு முடிவை உள்ளடக்கியுள்ளது. அந்த முன்னாதாரம் என்னவென்றால், "தேவன் தம் மக்களுக்காகக் கிறிஸ்துவை ஒப்புக்கொடுத்தார்" என்பதே. ஆகவே, அவர்களுக்கு வேண்டிய அனைத்தும் நிச்சயம் அவர்களுக்குத் தரப்படும் என்பது அதன் முடிவாகும். இதுபோன்ற உறுதியான சத்தியத்திற்கு வேதத்தில் பல எடுத்துக்காட்டுகள் இருப்பதைக் காண்கிறோம். “இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?" (மத்தேயு 6:30). “நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே" (ரோமர் 5:10). “ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?" (மத்தேயு 7:11). ஆகவே, இங்கே நமது வசனப்பகுதியில் வரும் இந்த சத்திய சிந்தனை எதிர்பேச முடியாததாகவும், நேரடியாக நம் மனதிலும் உள்ளத்திலும் ஊடுருவுகிறதாகவும் இருக்கிறது.
நம்முடைய அன்பான தேவன் தம்முடைய குமாரனை நமக்குக் கொடுப்பதில் எவ்வளவு கிருபையாக இருக்கிறார் என்பதை இந்த வசனம் நமக்கு வெளிப்படுத்துகிறது. இது நம் மனதிற்கு அறிவுறுத்துவதற்காக மட்டுமல்ல, நம் இதயங்களை ஆறுதலடையச் செய்யவும், பாதுகாப்பைக் கொடுக்கவும் எழுதப்பட்டது. தம்முடைய குமாரனை நமக்குப் பரிசாகக் கொடுத்த தேவனுடைய செயல், தம்முடைய மக்களுக்குத் தேவையான அனைத்து ஆசீர்வாதங்களையும் பெறுவதற்கான தேவனுடைய உறுதிமொழியாக இருக்கிறது. பெரிதான ஒன்று சிறிதானதை உள்ளடக்கியுள்ளது. அவருடைய சொல்லிமுடியாத ஆவிக்குரிய வரம், நமக்கு வேண்டிய அனைத்துவித இம்மைக்குரிய இரக்கங்களுக்குமான உத்தரவாதமாகும். நமது வேதப்பகுதியில் உள்ள நான்கு காரியங்களைக் கவனியுங்கள்:
பிதாவின் விலையேறப்பெற்ற தியாகம்
இந்த வசனத்தில் உள்ள வாக்குறுதி மொழியின் அடிப்படையிலான கம்பீரமான உண்மையை கவனமாகச் சிந்தியுங்கள். தேவன் தமது சொந்த குமாரனைக் கொடுப்பதற்குத் தயங்கவில்லை. இந்த வார்த்தைகள் புனிதமானவை, தெளிவானவை மற்றும் உருகச் செய்பவை. மனிதனை மீட்பதற்கு என்ன விலை தேவை என்பது தேவனுக்கு மட்டுமே தெளிவாகத் தெரியும், வேறு யாருக்கும் தெரியாது. நியாயப்பிரமாணம் கடுமையானதும், வளைந்துகொடுக்காததும் மட்டுமல்லாமல், பரிபூரணமான கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறது. நியாயம் கண்டிப்பானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருந்து, குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல் முழுமையான திருப்தியைத் தரும் தீர்ப்பை எதிர்பார்க்கிறது. ஆனாலும் மீட்பிற்கான ஒரே வழியாகத் தேவன் தமது குமாரனை இந்தப் பூமிக்கு அனுப்பத் தயங்கவில்லை.
பெத்லகேமின் மாட்டுத் தொழுவத்தின் தாழ்ச்சியையும், இழிநிலையையும், மனிதர்களின் நன்றியின்மையையும், தலை சாய்க்க இடமில்லாத அவலத்தையும், தேவபக்தி இல்லாதவர்களின் வெறுப்பையும், எதிர்ப்பையும், சாத்தானின் பகையையும் மற்றும் அவன் இழைக்கும் துன்பங்கள் ஆகிய அனைத்தையும் அவர் சந்திக்க நேரிடும் என்பதைத் தெரிந்தும் தேவன் “தம்முடைய சொந்த குமாரன் என்றும் பாராமல்” அவரைத் தந்தருளினார். தேவன் தமது பரிசுத்த நீதியை நிறைவேற்றுவதற்கு எந்தவித சமரசமும் செய்யாமல், பாவத்திற்கான தண்டனையை நிறைவேற்றினார். தமது நேச குமாரனை அனுப்புவதற்கு எந்தவிதத் தயக்கமும் அவர் காட்டவில்லை. துன்மார்க்கரின் கைகள் அவரைச் சிலுவையில் அறைந்தபோதும், அவரின் இரத்தம் கடைசித் துளிவரை சிந்தப்பட வேண்டியதாய் இருந்தது. தேவகோபாக்கினையின் பாத்திரத்தின் கடைசிச் சொட்டுவரை உறிஞ்சப்பட வேண்டியதாய் இருந்தது. "பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது" என்று இயேசு கெத்செமனே தோட்டத்தில் கதறினாலும், தேவன் அவரை ஒப்புக்கொடுக்கத் தயங்கவில்லை. துன்மார்க்கமான கரங்கள் அவரை மரத்தில் ஆணியடித்தபோதும், “பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்” (சகரியா 13:7) என்று தேவன் அனுமதித்தார்.
பிதாவின் கிருபையுள்ள திட்டம் "நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர்." இங்கே பிதாவானவர் ஏன் இவ்வளவு விலைமதிப்புமிக்க தியாகத்தைச் செய்தார் என்று நமக்குச் சொல்லப்படுகிறது. நம் அனைவரையும் தப்புவிக்கும்படியாகவே அவர் கிறிஸ்துவை ஒப்புக்கொடுத்தார். கிறிஸ்துவின் மீது அவருக்கு அன்பு இல்லை என்பதால் இதை அவர் செய்யவில்லை, மாறாக அவர் நம்மீது கொண்ட அற்புதமான, ஒப்பற்ற, விவரிக்க முடியாத அன்பினால் இதைச் செய்தார்! மகா உன்னதரின் அற்புதமான இந்தத் திட்டத்தைக் கண்டு ஆச்சரியப்படுங்கள். “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16). உண்மையாகவே இந்த அன்பு கற்பனைக்கு எட்டாதது. அவர் செய்த இந்த விலைமதிப்பற்ற தியாகத்தை, முணுமுணுப்பு இல்லாமல், தயக்கமின்றி, தமது மிகுந்த அன்பினால் அவர் இலவசமாகச் செய்தார்.
ஒருமுறை கலகம் செய்த இஸ்ரவேல் மக்களிடம் தேவன், “எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? (ஓசியா 11:8) என்று கேட்டார். நிச்சயமாக அவர் தமது பரிசுத்த நேச குமாரனைப் பற்றி இதைச் சொல்வதற்கு இன்னும் எண்ணில்லாத காரணங்கள் இருக்கின்றன. இருப்பினும், அவமானம் மற்றும் வெட்கம், வெறுப்பு மற்றும் துன்பங்களைச் சகிக்க அவர் தமது குமாரனை ஒப்புக்கொடுக்கத் தயங்கவில்லை. ஆதாமின் கீழ்ப்படியாமையால், சீரழிந்து தீட்டுப்பட்டுப்போனதும், பொல்லாததும் பாவிகளுமான, தீயதும் பயனற்றதுமான சந்ததியாராகிய நமக்காகவே அதைச் செய்தார். தேவனிடம் இருந்து விலகி “தூர தேசத்திற்குப் புறப்பட்டுப் போய்” துன்மார்க்கமான வாழ்க்கைமுறையால் ஆஸ்திகளை அழித்துப்போட்ட நமக்காக அவரை ஒப்புக்கொடுத்தார் (லூக்கா 15:13). ஆம், “ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து அவனவன் தன்தன் வழியிலே” போனவர்களான நமக்காகவே அதைச் செய்தார் (ஏசாயா 53:6). பிறரைப் போலவே நாமும் சுபாவமாகவே தேவ கோபத்திற்கு உரியவர்களாய் இருந்த நமக்காகவும் (எபேசியர் 2:3), நன்மையான எதுவும் வாசம்பண்ணாத நமக்காகவும் தேவன் இந்தத் தியாகத்தைச் செய்தார் (ரோமர் 7:18). அவருடைய பரிசுத்தத்தை வெறுத்து, அவருடைய வார்த்தையைப் புறக்கணித்து, அவருடைய கட்டளைகளை மீறி, அவருடைய பரிசுத்த ஆவியை எதிர்த்த நமக்காக தேவன் அவரை ஒப்புக்கொடுத்தார். நித்திய நரக நெருப்புக்கு விதிக்கப்பட்டவர்களும், நம்முடைய பாவங்களின் முழு ஊதியத்திற்கும் தகுதியானவர்களுமாகிய நமக்காக அவரைத் தந்தருளினார்.
ஆம்! சக விசுவாசியே, சில சமயங்களில் நீங்கள் துன்பங்களைச் சந்திக்க நேரிடும்போது, தேவனைக் கடுமையானவராகச் சித்தரிக்கச் சோதிக்கப்படும் உங்களுக்காகத்தான் தேவன் இதைச் செய்தார். உங்கள் வறுமையைத் தேவனுடைய அலட்சியம் என்றும், இருண்ட சூழ்நிலையில் நடக்கும்போது கர்த்தர் உங்களைக் கைவிட்டுவிட்டார் என்றும் நினைக்கிற உங்களுக்காகவே அவர் ஒப்புக்கொடுக்கப்பட்டார். ஓ, தேவனை அவமதிக்கும் இத்தகைய சந்தேகங்களின் குற்றத்தை உடனடியாக அவரிடம் அறிக்கை செய்யுங்கள், மேலும் தம் சொந்த குமாரன் என்றும் பாராமல் அவரைத் தந்தருளின தேவனின் அன்பை இனி மீண்டும் ஒருபோதும் கேள்வி கேட்காதீர்கள் (ரோமர் 8:32).
இந்த வசனப்பகுதியில் உள்ள 'எல்லாருக்காகவும்' என்ற சொல்லை நான் விளக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை உணர்கிறேன். தேவன் உலகில் உள்ள ஒவ்வொருவருக்காகவும் (எல்லாருக்காகவும்) தம்மை ஒப்புக்கொடுத்தார் என்பதல்ல, மாறாக 'நம்' எல்லாருக்காகவும் ஒப்புக்கொடுத்தார். இது இந்த வேதப்பகுதிக்கு முந்தைய வசனங்களில் நிச்சயமாக வரையறை செய்யப்பட்டுள்ளது. 31வது வசனத்தில் ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது, “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” 30வது வசனத்தில் வரும் “நம்” என்ற வார்த்தை தேவன் முன்குறித்து, அழைத்து, நீதிமானாக்கி, மற்றும் மகிமைப்படுத்தியவர்களைக் குறிக்கிறது என்பது நமக்குத் தெளிவாகிறது. எனவே 'நம்' என்பவர்கள் பரலோகத்தின் விருப்பத்திற்கு உரியவர்கள், தேவனுடைய சர்வவல்ல கிருபையின் பாத்திரங்கள் மற்றும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் ஆவர். ஆனால் அவர்கள் தங்களில் தாங்களே அவர்களுடைய செயல் மற்றும் இயல்பில் கோபாக்கினையைத் தவிர வேறெதற்கும் தகுதியானவர்கள் இல்லை. ஆனால் தேவனுக்கு ஸ்தோத்திரம். நம் எல்லாருக்காகவும் - நம்மில் மோசமானவர்கள் மற்றும் சிறப்பானவர்கள் அனைவருக்காகவும், ஐந்து கோடி கடனாளிக்கும், ஐந்து ரூபாய் கடனாளிக்கும் இந்த வாக்குறுதி சமமாகப் பொருந்தக்கூடியதாக இருக்கிறது.
பரிசுத்த ஆவியானவர் தரும் ஆசீர்வாதமான முடிவு இந்தத் தியானத்தின் முதல் பகுதியின் அடிப்படையில், பரிசுத்த ஆவியானவர் இங்கு ஏற்படுத்துகின்ற “முடிவுரை”யைக் கவனமாகச் சிந்தியுங்கள். “தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” தேவ ஆவியானவரால் எழுதப்பட்ட அப்போஸ்தலனின் இந்த வார்த்தை நமக்கு எவ்வளவு ஆறுதலான வார்த்தை! உயர்வில் இருந்து சிறியதைப் பற்றிய தர்க்கத்தைப் பின்பற்றி தேவன் விசுவாசிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாராக இருக்கிறார் என்று உறுதியளிக்கிறார். தேவன் விருப்பத்தோடும் தாராளமாகவும் தம்முடைய சொந்த குமாரனை நமக்குக் கொடுத்தார் என்பது மற்ற அனைத்து அவசியமான இரக்கங்களையும் பெற்றுக்கொள்வதற்கான உத்தரவாதமாகும்.
பல துன்பங்களினால் சோர்ந்துபோயிருக்கும் ஒரு விசுவாசிக்கு, இந்தச் செய்தி தேவனின் நித்திய அன்பின் மாறாத கண்காணிப்பைக் காட்டுகிறது. பெரிதானவற்றைச் செய்த தேவன், சிறியவற்றைச் செய்யாமல் விட்டுவிடுவாரோ? நித்திய அன்பு என்றும் மாறாது. கிறிஸ்துவையே அருளிய அன்பு மற்ற ஆசீர்வாதங்களை வழங்கத் தயங்காத அன்பு. கிறிஸ்துவை ஒப்புக்கொடுக்கத் தயங்காத அன்பு, தன் நோக்கங்களைத் தரத் தவறுவதும் இல்லை; தேவையான ஆசீர்வாதங்களைத் தர வருத்தப்படுவதும் இல்லை. வருத்தமான விஷயம் என்னவென்றால், நம்மிடம் இருப்பதை விட நம்மிடம் இல்லாததைப் பற்றியே நம் இதயம் அதிகம் கவலைப்படுகிறது. ஆகவே, கடவுளின் அன்பையும், அதிலிருந்து வரும் ஆசீர்வாதங்களையும் தொடர்ந்து நினைவுகூருவதன் மூலம், தேவனின் ஆவி நம் சோர்வுற்ற இதயங்களின் எண்ணங்களைத் தணித்து, நம்முடைய அதிருப்தியுள்ள ஆத்துமாக்களைச் சத்தியத்தின் அறிவால் திருப்திப்படுத்துகிறது.
இந்த வசனத்தில் உள்ள எண்ண ஓட்டத்தைக் கவனமாக ஆராயுங்கள். முதலாவதாக, மிகப் பெரிய பரிசு கேட்காமலேயே கொடுக்கப்பட்டது. அப்படியிருக்க, கேட்டால் மற்ற ஈவுகளைத் தராதிருப்பாரோ? நம்மில் யாரும் தேவனுடைய அன்புக் குமாரனைக் கொடுக்குமாறு கேட்கவில்லை. ஆனாலும் தேவன் அவரை அனுப்பினார்! இப்போது, நாம் கிருபாசனத்திற்கு வந்து நம்முடைய விண்ணப்பங்களை ஏறெடுப்பதற்கான சிறந்த வாய்ப்பு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தினாலே நமக்குக் கிடைத்துள்ளது.
இரண்டாவதாக, அந்த ஒரு மாபெரும் பரிசு (கிறிஸ்து) அவருக்கு மிகப்பெரிய விலைகொடுக்க வேண்டியதாய் இருந்தது. அதைவிடச் சிறிய பரிசுகளை அவர் தராமல் போவாரோ? அது அவருக்குப் பெரிய இழப்பைத் தரப்போவதில்லை, மாறாகக் கொடுப்பதின் சந்தோஷத்தையே தரப்போகிறது. ஒரு நண்பர் எனக்கு ஒரு வரைபடத்தைப் பரிசாகக் கொடுத்தால், அதை வர்ணத் தாளால் போர்த்திக் கொடுப்பதற்கான செலவைச் செய்ய வருத்தப்படுவாரோ? அல்லது அன்பான ஒருவர் எனக்கு ஒரு நகையைப் பரிசாகக் கொடுத்தால், அதை வைக்க உதவும் சிறிய பெட்டியைத் தரமாட்டாரா? அப்படியானால், தன் சொந்த குமாரனைக் கொடுக்கத் தயங்காத பரலோகப் பிதா, உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு எந்த நன்மையையும் எப்படி நிறுத்தி வைப்பார் என்று சிந்தித்துப்பாருங்கள் (சங்கீதம் 84:11).
மூன்றாவதாக, தேவன் இந்த மகிமையான வரத்தை (கிறிஸ்துவை) நாம் தேவனுக்கு எதிரிகளாக இருக்கும்போதே வழங்கினார். இப்போது, நாம் அவருடன் சமாதானம் செய்து, அவருடைய கிருபைக்குள் வந்து அவருடையவர்களாக இருக்கிற நமக்கு மற்ற காரியங்களைக் கொடுக்காமல் இருப்பது எப்படி? நாம் பாவத்தில் இருந்தபோதே நம்மீது சிறந்த அன்பைக் கொண்டிருந்த தேவன், இப்போது அவருடைய குமாரனின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் கழுவப்பட்ட நமக்கு இன்னும் பெரிய நன்மையைச் செய்யவே அவர் விரும்புவார் என்பதைப் பாருங்கள்!
பாதுகாப்பான வாக்குறுதி இந்த வேதப்பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ள காலத்தைக் கவனியுங்கள். “அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்குத் தாராளமாக அருளாதிருந்ததெப்படி?” என்று கடந்த காலத்தைக் குறிக்கவில்லை. அருளாதிருப்பதெப்படி? என்ற இந்த வார்த்தைக்கு எந்தவிதக் கால அளவும் இல்லை. நிகழ்காலத்திலும் இனி வருங்காலத்திலும் எப்போதும் தேவன் தம்மை மிகப்பெரிய கொடையாளராகவே வெளிப்படுத்துகிறார். நம் எல்லாருக்காகவும் கிறிஸ்துவை ஒப்புக்கொடுத்த தேவனிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலும் இல்லை (யாக்கோபு 1:17).
தேவன் கொடுக்கும் முறையைக் கவனியுங்கள். “அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” நாம் தேவனிடம் தேனொழுகப் பேசி அவரிடம் நன்மைகளைப் பெற வேண்டியதில்லை. அவரிடம் கொடுக்க விருப்பம் இல்லாத நிலையைக் கண்டு அதை நாம் வற்புறுத்திப் பெற வேண்டும் என்பதில்லை. நாம் பெற்றுக்கொள்வதைவிட இன்னும் அதிகமாக நமக்குத் தர மேன்மேலும் அவர் ஆவலாய் இருக்கிறார். உண்மையில், அவர் நமக்கு நன்மை செய்வதற்கு எதுவும் கடன்பட்டிருக்கவில்லை. அப்படி இருந்தால், தாராளமாகத் தராமல், கொடுக்க வேண்டுமே என்கிற கட்டாயத்தில் இருந்து தந்திருப்பார். தம்முடையவர்களுக்குத் தம் விருப்பப்படிச் செய்ய அவருக்குப் பூரண அதிகாரம் இருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். அவர் விரும்பியபடி யாருக்கும் கொடுக்கும் சுதந்திரம் அவருக்கு இருக்கிறது.
'இலவசம்' என்ற சொல் தேவன் எந்தவிதத் தடையுமின்றி இலவசமாகத் தருகிறார் என்ற கருத்தைத் தருவது மட்டுமின்றி, தான் கொடுக்கும் ஈவுகளுக்கு எந்த விலையும் வைப்பதில்லை, அவருடைய ஆசீர்வாதங்களுக்கு அவர் எந்த நிபந்தனையும் நிர்ணயிப்பதில்லை என்ற அர்த்தத்தையும் தருகிறது. அவர் இரக்கங்களை விற்கும் வியாபாரியோ, நல்ல ஈவுகளைப் பண்டமாற்று செய்கிறவரோ அல்லர். அவ்வாறு இருந்திருந்தால் அவர் அருளும் ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்கும் சரியான விலை கொடுக்க வேண்டியதாய் இருந்திருக்கும். அப்படி இருந்திருந்தால் ஆதாமின் சந்ததியில் யாருக்கு அந்த விலையைக் கொடுக்கும் தகுதி இருந்திருக்கும்? இல்லை, கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம், தேவனுடைய பரிசுகள் “பணமுமின்றி, விலையுமின்றி” (ஏசாயா 55:1) நமக்குக் கிடைக்கின்றன – அவை நமது தகுதியின் அடிப்படையிலோ அல்லது சம்பாத்தியத்தின் அடிப்படையிலோ வருவதில்லை.
இறுதியாக, இந்த வாக்குறுதியின் பரந்த தன்மையில் மகிழ்ச்சி அடையுங்கள்: “அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” என்ற அந்த வார்த்தையில் தேவனின் வாக்குறுதி எவ்வளவு பெரியது என்பதைப் பரிசுத்த ஆவியானவர் இங்கே நமக்கு வெளிப்படுத்துகிறார். சக கிறிஸ்தவனே! உனக்கு என்ன வேண்டும்? மன்னிப்பு வேண்டுமா? “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" (1 யோவான் 1:9) என்று தேவன் சொல்லவில்லையா? உங்களுக்குக் கிருபை வேண்டுமா? “நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாகி, சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகத்தக்கவர்களாய் இருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராய் இருக்கிறார்" என்று அவர் வாக்குக் கொடுக்கவில்லையா? (2 கொரிந்தியர் 9:8). ஒருவேளை உங்கள் சரீரத்தில் முள் உள்ளதா? அதற்கும் கிருபை வழங்கப்படுகிறது. “என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது... என் கிருபை உனக்குப் போதும்" (2 கொரிந்தியர் 12:7,9). உங்களுக்கு ஓய்வு வேண்டுமா? அப்படியானால் நம்முடைய இரட்சகரின் அழைப்புக்குச் செவிகொடுங்கள்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்தேயு 11:28). உங்களுக்கு ஆறுதல் வேண்டுமா? அவர் “சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவர்" அல்லவா? (2 கொரிந்தியர் 1:3).
“அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” அன்பானவர்களே! நீங்கள் விரும்புவது பூமிக்குரிய தேவை என்றால்? உன்னுடைய பாத்திரத்தில் உணவும், பானையில் எண்ணெயும் சீக்கிரமே தீர்ந்துவிடும், எதுவும் இல்லாமல் போய்விடுமோ என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா? அப்படியானால், உங்கள் தேவையை தேவனுக்கு முன் வைத்து, ஒரு சிறுபிள்ளையைப் போல அவர்மேல் விசுவாசத்தை வையுங்கள். தேவன் உங்களுக்கு மேன்மையான ஆசீர்வாதங்களைத் தந்துவிட்டு, வாழ்வுக்கான சிறிய தேவைகளைப் புறக்கணிப்பார் என்று நினைக்கிறீர்களா? அப்படியல்ல. “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்" (பிலிப்பியர் 4:19).
நிச்சயமாக, நீங்கள் கேட்கும் அனைத்தையும் தருவதாக அவர் வாக்குறுதி அளிக்கவில்லை. ஏனென்றால், நாம் அநேக வேளைகளில் தகாதவிதமாய் விண்ணப்பம் செய்கிறோம் (யாக்கோபு 4:3). நம் வசனப்பகுதியில் உள்ள வாக்குறுதியின் வரம்பைக் கவனமாகப் பாருங்கள், “அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” நாம் பல நேரங்களில் விரும்பும் விண்ணப்பத்திற்கான பதில் கிடைத்துவிடுமானால் அது நமக்கும் கிறிஸ்துவுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தும். ஆகவே இதுபோன்ற நேரங்களில், தேவன் தம்முடைய உத்தமத்தின் நிலையில் அவற்றை நமக்குக் கொடுக்காமல் நிறுத்தி விடுகிறார்.
புதுப்பிக்கப்பட்ட ஒவ்வொரு இதயத்திற்கும் ஆறுதலைத் தரும் நான்கு காரியங்களை நாம் இதுவரை சிந்தித்துள்ளோம்.
பிதாவின் விலையேறப்பெற்ற தியாகம்: நம்முடைய தேவன் மாபெரும் ஈவுகளைத் தரும் தேவன். உண்மையோடும், உத்தமத்தோடும் நடந்துகொள்பவர்களுக்கு அவர் எந்த நன்மையும் செய்யாமல் இருப்பதில்லை.
பிதாவின் கிருபையுள்ள திட்டம்: நமக்காகவே கிறிஸ்து கைவிடப்பட்டார். நம்முடைய மேன்மையான, நித்தியமான நலனே அவருடைய உள்ளத்தில் நிறைந்திருந்தது.
பரிசுத்த ஆவியின் மூலமாக ஆசீர்வதிக்கப்பட்ட விளைவு: விலையுயர்ந்ததைக் கொடுக்கத் தயங்காத தேவன், சிறிதானதைக் கொடுப்பதற்கும் தயாராகவே இருக்கிறார். அவர் தம்முடைய சொந்த குமாரனை நமக்காகக் கொடுத்தார் என்ற சத்தியமே நமது மற்ற தேவைகளைப் பூர்த்தி செய்வார் என்பதற்கான முழு உத்தரவாதம். 4) ஆறுதல் தரும் வாக்குறுதி: இந்த வாக்குறுதி நிகழ்காலத்திற்கும், வரப்போகும் காலத்திற்கும், நம் இதயங்களுக்கு நம்பிக்கையையும், நம் மனதில் அமைதியையும் கொண்டுவரும் ஒரு ஆசீர்வாதமாகும்.
இந்தச் சிறிய தியானத்தின் மேல் தேவன் தமது ஆசீர்வாதத்தை அருளுவாராக!
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2026. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.