“ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்." (ரோமர் 8:18).
இந்த வார்த்தைகளை எழுதியவர் இன்னல்களுக்கு முற்றிலும் அந்நியராகவோ, அல்லது சிறிய துன்பங்களைத் தவிர வேறு எந்த பெரிய சோதனையையும் அனுபவிக்காதவராகவோ இருந்திருக்கலாம் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், இந்த வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலால் எழுதப்பட்டவை. மிகவும் கடினமான சூழ்நிலைகளில் மூழ்கி, பல்வேறு சோதனைகள், கஷ்டங்கள் மற்றும் துன்புறுத்தல்களை ஏராளமாக அனுபவித்த ஒருவரால் எழுதப்பட்ட வரிகள்தான் இவை. அப்போஸ்தலனாகிய பவுலின் சொந்த சாட்சியைக் கேளுங்கள்: “யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்து தரம் அடிபட்டேன். மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன். ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும், பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.” (2 கொரிந்தியர் 11:24-27).
வாழ்க்கைப் பயணத்தில், மகிழ்ச்சியில் திருப்தியடைந்து, ரோஜாப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சொகுசு நடையின் அனுபவத்தில் இருந்து இந்த வார்த்தைகள் வரவில்லை. மாறாக, தன் சொந்த மக்களால் வெறுக்கப்பட்டு, கண்ணீர் வடிக்கும் அளவிற்கு காயப்பட்டு, வாழ்வின் அடிப்படை வசதிகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டவரிடம் இருந்து வரும் வார்த்தைகள்தான் அவை. இப்படிப்பட்ட அனுபவங்களைச் சந்தித்தவர் வெளிப்படுத்தும் இவ்வளவு மகிழ்ச்சியுள்ள எதிர்பார்ப்பை எப்படி விளக்குவது? தனக்கு நேரிட்ட இந்த சோதனைகள், இன்னல்களுக்கு மேலாக அவர் உயர்ந்து நிற்பதன் இரகசியம் என்னவாக இருக்க முடியும்?
மூன்றாவதாக, அப்போஸ்தலன் “இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமை” குறித்து மகிழ்ச்சியடைகிறார். இதன் முழு அர்த்தம் என்னவென்றால், அதைப் புரிந்துகொள்ளும் திறன் இப்போது நமக்கு இல்லை. ஆனால் இதைக்குறித்து வேதம் அதிக விளக்கத்தை நமக்குத் தருகிறது. அந்த நாளில் நாம்:
-
பரிபூரணமான மகிமையுள்ள சரீரத்தை உடையவர்களாக இருப்போம்: அந்நாளிலே இந்த அழிவுக்குரியது அழியாமையைத் தரித்துக்கொள்ளும். மரணத்திற்குரிய சரீரம் சாவாமையைத் தரித்துக்கொள்ளும். கனவீனமாக விதைக்கப்பட்ட சரீரம் கனமானதாக எழுப்பப்படும். பலவீனமானதாக விதைக்கப்பட்ட சரீரம் பலமுள்ளதாக எழுப்பப்படும். “மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம்." (1 கொரிந்தியர் 15:49). இந்த சத்தியங்களின் சுருக்கமும் விவரமுமான வர்ணனை பிலிப்பியர் 3:20-21ல் தரப்பட்டுள்ளது. “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.”
-
மறுரூபமாக்கப்பட்ட மனதின் மகிமையை உடையவர்களாக இருப்போம்: “இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம். இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.” (1 கொரிந்தியர் 13:12). ஆகா! அந்த மகிமையான ஞானம் எவ்வளவு வியப்பாகவும், பிரகாசமாகவும் இருக்கிறது! அது எப்பேர்ப்பட்ட ஒளியை வீசுகிறது! எப்பேர்ப்பட்ட புரிதலை அது அளிக்கிறது! அதன் பின்னர் அனைத்து இரகசியங்களும் வெளிப்படும், எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்படும், எல்லா மேடுபள்ளங்களும் சரி செய்யப்படும். அப்போது, தேவனுடைய வேதத்தில் உள்ள ஒவ்வொரு சத்தியத்தையும், அவருடைய ஏற்பாட்டின் ஒவ்வொரு நிகழ்வையும், அவருடைய அரசாங்கத்தின் ஒவ்வொரு முடிவையும், தெளிவாகவும், பிரகாசமாகவும், சூரியனின் பிரகாசத்தை விட அதிக மகிமையுடன் நாம் காண்போம். இப்போது நீங்கள் உங்கள் ஆவிக்குரிய இருளை நினைத்தும், உங்கள் நினைவாற்றலின் பலவீனத்தைக் குறித்தும், உங்கள் குறைவான அறிவாற்றல் திறன் குறித்தும் கவலைப்படுகிறீர்களா? அப்படியானால் உங்களில் வெளிப்பட இருக்
கும் அந்த மகிமையை எதிர்பார்த்து சந்தோஷப்படுங்கள். அந்நாளில் உங்களின் அனைத்து அறிவுத் திறன்களும் புதுப்பிக்கப்பட்டு, அது வளர்ச்சியடைந்து முழுமையடையும். அதன் விளைவாக நீங்கள் அறியப்பட்டிருக்கிறதுபோல அறிந்துகொள்வீர்கள். -
எல்லாவற்றிலும் மிகச் சிறப்பாக, பரிபூரணமான பரிசுத்தத்தின் மகிமையை உடையவர்களாக இருப்போம்: அதன் பின்னர் நம்மில் உள்ள தேவனுடைய கிருபையின் செயல் முழுமையடையும். கர்த்தர் நமக்காக “யாவையும் செய்து முடிப்பதாக” (சங்கீதம் 138:8) வாக்குப்பண்ணியிருக்கிறார். அதன்பின் பரிசுத்தத்தின் முழுமை உண்டாகும். தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு நாம் முன்குறிக்கப்பட்டிருக்கிறோம் (ரோமர் 8:29). அதன்பின் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், "அவருக்கு ஒப்பாயிருப்போம்" (1 யோவான் 3:2). அப்போது, நம் இருதயங்கள் இனித் தீய எண்ணங்களால் தீட்டுப்படாது. இனி ஒருபோதும் நம் மனசாட்சி குற்ற உணர்வால் மாசுபடாது. தகுதியற்ற பொருள்களால் நமது லட்சியங்கள் இனி ஒருபோதும் சிக்கிக்கொள்ளாது.
என்ன ஒரு அற்புதமான ஆசீர்வாதம் இது! தற்போது எந்த ஒளிக்கதிரையும் காணமுடியாத என்னில் எப்பேர்ப்பட்ட மகிமை வெளிப்படப்போகிறது! மிகவும் வழிதவறிய, மிகவும் தகுதியற்ற, அதிக பாவமுள்ள என்னில் இது வெளிப்படப்போகிறது. ஜோதிகளின் பிதாவுடன் மிகவும் சிறிய அளவில் மட்டுமே ஐக்கியப்பட்டிருக்கிறேன்! இப்படிப்பட்ட என்னில் பிதாவின் இந்த மகிமை வெளிப்படுவது சாத்தியமா? சாத்தியமே என்று தவறில்லாத தேவனுடைய வார்த்தை உறுதிப்படுத்துகிறது. தேவனுடைய மகிமையின் பிரதிபலிப்பான அவரிடம் நான் வசிப்பதன் மூலம் ஒளியின் பிள்ளையாக இருந்தால், நான் இப்போது உலகின் இருண்ட நிழல்களுக்கு மத்தியில் வசித்தாலும், ஒரு நாளில் வானத்தின் ஒளிகளைக் காட்டிலும் நான் பிரகாசிப்பேன். நம்முடைய கர்த்தராகிய இயேசு இந்த பூமிக்குத் திரும்பி வரும்போது, அவர் தம்மை “விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராய்” இருப்பார் (2 தெசலோனிக்கேயர் 1:10).
இறுதியாக, அப்போஸ்தலன் நிகழ்காலப் “பாடுகளை” இனி நம்மில் வெளிப்படும் “மகிமையுடன்" சீர்தூக்கிப் பார்த்து, முதலாவது இரண்டாவதுடன் ஒப்பிடவே தகுதியற்றது என்று உரக்கச் சொல்கிறார். இக்காலப் பாடு நிலையற்றது, இனி வரப்போவது நித்தியமானது. எல்லைக்குட்பட்ட ஒன்றிற்கும் எல்லைக்கு அப்பாற்பட்ட ஒன்றிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல, பூமிக்குரிய துன்பங்களுக்கும் பரலோக மகிமைக்கும் எந்தவித ஒப்பீடும் இல்லை.
மகிமையின் ஒரு இமைப்பொழுது என்பது வாழ்நாள் முழுவதும் படும் பாடுகளை விட அதிக கனமானது. இம்மானுவேலின் தேசத்தின் மகிமையுடன் ஒப்பிடும்போது நம்முடைய வருடக்கணக்கான பிரயாசம், வியாதி, வறுமையின் போராட்டம், அல்லது எல்லாவிதமான துக்கங்களை என்னவென்று சொல்வது! தேவனுடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்ப நதியில் அனுபவிக்கும் ஒரு துளி, பரலோகத்தில் ஒருமுறை சுவாசிக்கும் மூச்சுக்காற்று, இரத்தத்தால் கழுவப்பட்டவர்களுடன் சேர்ந்து சிம்மாசனத்தைச் சூழ்ந்திருக்கும் ஒரு மணிநேரம், உலகின் எல்லாக் கண்ணீருக்கும் துயரங்களுக்கும் மேலான இழப்பீடாக அமைகிறது. “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்." வாசகரும் எழுத்தாளரும் இந்த வார்த்தைகளை விசுவாசத்துடன் ஏற்றுக்கொண்டு, தற்போதைய சூழ்நிலைகளுக்கு அவற்றைப் பயன்படுத்தவும், அதன் விளைவாக தேவனுடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, அவை கொண்டு வரும் மகிழ்ச்சியை அனுபவிக்கவும் பரிசுத்த ஆவியானவர் உதவுவாராக!





