ஆசிரியர் பூன்-சிங் போ மலேசியாவில் 1954 ஆம் ஆண்டு பிறந்தவர். இரட்சிக்கப்படாத பின்னணியத்தில் பிறந்த இவர், இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்தபோது தேவகிருபையால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டார். அவருடைய படிப்பை முடித்தபின் ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். 1983-ஆம் ஆண்டு முதலாவது சீர்திருத்த பாப்டிஸ்ட் சபையை நிறுவினார். அவருடைய விசுவாசத்திற்காக 1987 முதல் 1988 வரை சுமார் 325 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். அவர் தமான்சாரா ரிஃபார்ம்டு பேப்டிஸ்ட் (DRBC) திருச்சபையின் தலைமைப் போதகராக இருந்து ஓய்வு பெற்றவர். திருமணமான இவருக்கு நான்கு குமாரர்கள் உள்ளனர். பேரக் குழந்தைகளும் உள்ளனர். தனது டாக்டர் பட்டத்தை எலக்ட்ரானிக்ஸ் இஞ்ஜினியரிங் துறையில், லிவர்பூல் (Liverpool) பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மதங்கள் குறித்த பட்டப்படிப்பையும், நார்த்-வெஸ்ட் பல்கலைக்கழகத்தில் இறையியலில் டாக்டர் பட்டமும் பெற்றவர்.
1988-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போர்ட் டிக்ஸன் என்னும் இடத்தில் நடைபெற்ற முதலாவது சீர்திருத்த ஊழியர்கள் கருத்தரங்கில் பகிரப்பட்ட துவக்க செய்தியே இந்தச் சிறு புத்தக வடிவில் வெளிவந்துள்ளது. கமுண்ட்டிங் என்னும் இடத்தில் நான் மலேசிய அரசால் கைது செய்து அடைக்கப்பட்டிருந்த காலத்தில் இது எழுதப்பட்டது. நான் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் (1960) கீழ் மலாய் மக்களைக் கிறிஸ்தவர்களாக்கிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டிருந்தேன். மேற்கண்ட கருத்தரங்கிற்கு வர இயலாத சூழல் இந்தக் கைதினிமித்தம் வந்ததால் இந்தச் செய்தி வேறொரு போதகரால் வாசிக்கப்பட்டது.
எங்கள் சபையில் உள்ள போதகரில் ஒருவரான மூப்பர் மார்டின் வாங் அவர்கள் அளித்த ஊக்கத்தால் இந்தச் சிறுபுத்தகம் மறுபடியும் வெளியிடப்படுகிறது. அவர் இனி நடத்தப்போகும் சீர்திருத்த ஊழியர்கள் கருத்தரங்கிற்கு இது உதவியாக இருக்கும் என்று அவர் நினைக்கிறார். வருடந்தோறும் நடத்தப்படும் இந்தக் கருத்தரங்கிற்கு மலேசியாவில் இருந்தும் அருகில் உள்ள நாடுகளிலும் இருந்தும் அநேகர் வந்து கலந்து கொள்கின்றனர். இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களும் இதில் போதித்தவர்களும் நல்ல ஐக்கியத்தையும் பரஸ்பரம் கற்றுக்கொள்ளும் அனுபவத்தையும் பெற்றுக்கொள்ள நேர்ந்தது. கருத்தரங்கில் பகிரப்பட்ட ஊழிய அறிக்கைகள் நல்ல தகவல் தருவனவாகவும், தூண்டி எழுப்புகிறவைகளாகவும் இருந்தன.
எரேமியா 6:16ல் “வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்று நாம் வாசிக்கிறோம். நல்ல வழி வேதாகம சத்தியங்களில் உள்ள பூர்வ பாதைகளில் கண்டுபிடிக்கக்கூடியதும், தேவனுடைய வார்த்தைக்கு அர்ப்பணிக்கிறவர்களால் தேடப்படுகிறதாகவும் இருக்கிறது. அது மனித பாரம்பரியங்களிலும், தனிப்பட்ட விருப்பங்களிலும் அல்லது வேதத்தின் அதிகாரத்தைப் புறக்கணிக்கும் நூதனங்களிலும் காணப்படுவதில்லை.
இந்தச் சிறு புத்தகத் தலைப்பு பாதகக் கண்ணோட்டம் உடையதாகவும், கடந்த காலத்தை மேன்மைப்படுத்தி முன்னேற்றத்தைத் தடுக்கிறது என்று சில வாதங்களை ஏற்படுத்தலாம். ஆனால், அர்த்தமுள்ள முன்னேற்றத்தை அடைய, பூர்வமானதும், நிரூபிக்கப்பட்டதுமான வேதபாதைக்குத் திரும்ப வேண்டிய அவசியம் இருக்கிறது என்று கருதுகிறோம். இந்தப் புத்தகத்தின் துணைத் தலைப்பு அதன் செய்தியுடைய அழுத்தத்தைக் குறிக்கிறது. ஸ்தல சபையே தேவனுடைய சித்தங்களில் மையமாகவும் தனித்துவமானதாவும் இருக்கிறது.
ஈசாக்கின் வாழ்க்கை உள்ளூர் சபையின் சீர்திருத்தத்திற்கு உதவிகரமான பாடங்களைத் தருகிறது. தேவனுடைய வார்த்தை மையமாகவும், சபை வரலாற்றில் இருந்தும் பாடங்களைக் கற்கவும் வேண்டியதுமல்லாமல், தேவனுக்காக பெரிய தரிசனங்களை உடையவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். தன் தகப்பன் வகுத்த பாதையை ஈசாக்கு திரும்பிப் பார்த்து அதில் தொடர்ந்தான். எதிர்ப்புக்கு மத்தியிலும் விடாமல் தொடர்ந்து, தேவனால் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டான். ஆகவே தான் நாமும் பூர்வ பாதைக்குத் திரும்ப அழைப்பு விடுக்கப்படுகிறது.
முழுமையான ஊழியத்தில் இருந்து அக்டோபர் 2024-ல் ஓய்வு பெற்றாலும், இந்தக் கருத்தரங்கின் வளர்ச்சியை அதிக ஆர்வமுடன் பின்தொடர்வேன். சுற்றி உள்ள தேசங்களில் சுவிசேஷம் பரவும்படி தொடர்ந்து ஜெபிப்பேன். அறுப்பு உண்மையில் மிகுதியானது தான். வேலையாட்களோ கொஞ்சம். தேவன் தாமே இன்னும் அதிக வேலையாட்களை எழுப்பி அனுப்புவாராக! நமது விருப்பம் ஆத்துமாக்கள் ஆதாயம் செய்யப்பட்டு, திருச்சபைகள் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதே. அந்த திருச்சபைகள் கர்த்தருடைய வார்த்தைக்கு உண்மையாகவும் அவருடைய சேவையில் கனிநிறைந்ததாகவும் காணப்பட வேண்டும். தேவனுடைய வார்த்தை முழுமையான விதத்தில் போதிக்கப்பட்டு, அதன் விளைவாக பரிசுத்தவான்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாய் நமதாண்டவரின் வருகையின் மகா நாளுக்காக எதிர்பார்ப்புடன் இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்! ஆமென்.
பூன்-சிங் போ, கோலலம்பூர், ஏப்ரல் 2025
1 கொரிந்தியர் 14:20-ல், “சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயும் இருங்கள்” என்று வாசிக்கிறோம். அப்போஸ்தலனாகிய பவுல் இந்த வார்த்தைகளை எழுதிய காலத்தில், கொரிந்து சபை பல்வேறு பிரச்சனைகளால் நிறைந்திருந்தது. அவர்கள் மத்தியில் பிரவினைகளும், ஒழுக்கக்கேடும், சபையின் அங்கத்தினர் ஒருவருக்கு விரோதமாய் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தும், சபை ஒழுங்கில் ஸ்திரமில்லாமலும், திருமணம் மற்றும் விக்கிரக ஆராதனை போன்ற காரியங்களில் தெளிவற்றவர்களாகவும் காணப்பட்டனர். பவுலுக்கு விரோதமான முறுமுறுப்பும், ஆராதனையில் ஒழுங்கற்ற நிலையும், ஆவிக்குரிய வரங்கள் மற்றும் மரித்தோரின் உயிர்த்தெழுதல் போன்ற காரியங்களில் வாக்குவாதங்களும் இருந்தன.
கொரிந்து சபை இன்று உலகத்தில் காணப்படும் சபையின் ஒரு சிறிய பதிப்புத்தான். கிறிஸ்தவர்கள் இன்று பலவேறுபட்ட சபைப் பிரிவுகளிலும், விதவிதமான குழுக்களிலும், பலதரப்பட்ட இறையியல் கருத்துக்களாலும் பிரிந்து கிடக்கின்றனர். கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய வரங்கள், ஆராதனை முறை, சபையில் பிரசங்கத்திற்கான இடம், வேதாகமத்தின் அதிகாரம் மற்றும் போதுமான தன்மை, சமுக அக்கறை போன்றவை குறித்து வழக்காடுகின்றனர்.
குழப்பமும் சண்டையும் நிறைந்த கொரிந்திய சபையைப் பார்த்துப் பவுல், “சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள் துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயும் இருங்கள்” அறிவுறுத்துகிறார். நமது புரிதலை இழந்து போகும் அளவிற்கு நாம் பிரச்னைகளில் சிக்கிக்கொள்ளக்கூடாது. பிரச்சனைகளின் இடியாப்பச் சிக்கல்களில் சிக்காதபடி நம்மை நாமே விடுவித்துக் கொண்டு, குழப்பமான காரியங்களுக்கும் மேலாக நிற்க வேண்டும். பிரச்சனைகளை முற்றிலும் அகற்ற முடியவில்லை என்றாலும் அவைகளைத் தவிர்க்கும்படியான முதிர்ச்சியான வழிகளை யோசிக்க வேண்டும். சபையில் பிரச்சனையே இருக்காது என்று பவுல் வாக்குப்பண்ணவில்லை. ஆனால் சிந்திக்கும் நபர்களைப்போல, நம்மால் குறைந்தபட்சம் பாறை சூழ்ந்த கடலைக் கடந்து முன்னேற முடியும்.
சபைத் தலைவர்கள் ஒருபோதும் குழப்பமான நிலைகளைக் குறித்து சோர்ந்து போகக்கூடாது. நமது மக்கள் தங்கள் கிறிஸ்தவ வாழ்விற்கு வழிகாட்டும்படி நம்மை எதிர்பார்க்கிறார்கள். ஆகவே நாம் முதிர்ச்சி உள்ளவர்களைப் போல பக்குவமாய் சிந்திக்க வேண்டும். நாம் என்ன செய்ய வேண்டியது என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். நமது தண்ணீர் தொட்டிகளில் உருவாகும் ஓட்டைகளை அடைக்க இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருக்க விரும்புவதில்லை. மாறாக அந்தப் பிரச்சனையின் அடிப்படை எங்கே இருக்கிறது என்று கண்டறிந்து அதைச் சரி செய்ய வேண்டும். இன்று திருச்சபையில் இருக்கும் குழப்பமான நிலைக்கு அடிப்படைக் காரணமாக சில பலவீனங்கள் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அடிப்படையிலேயே பிரச்சனை காணப்படுவதால் அங்கே தான் நாமும் துவங்க வேண்டும். நாம் செய்ய வேண்டிய மூன்று ஆலோசனைகளை முன் மொழிய விரும்புகிறேன். இந்த மூன்று காரியங்கள் ஆதியாகமம் 26-ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கும் ஈசாக்கின் வாழ்க்கையில் இருந்து கற்றுகொண்ட பாடங்கள்.
ஆதியாகமம் 26 நமக்குத் தரும் முதல் ஆலோசனை, வேதம் நம் கிறிஸ்தவ வாழ்வின் மைய்யமாக இருக்க வேண்டும். இரண்டாம் வசனத்தில் இவ்வாறு வாசிக்கிறோம்: “கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு. நான் உன்னோடு இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன்.” தேவன் ஆபிரகாமுக்கு அளித்த உடன்படிக்கையின் ஆசீர்வாதத்தால் ஈசாக்கை ஆசீர்வதிப்பேன் என்று வாக்களிக்கிறார். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலம் கேராரில் தங்க வேண்டும் என்பதுதான் அவனுக்கான நிபந்தனையாக இருந்தது. பஞ்சகாலத்தில் பசுமையான எகிப்தியப் புல்வெளியைக் கண்டு எவ்வளவாய் அவன் சோதிக்கப்பட்டிருப்பான் என்பதை நம்மால் கற்பனை செய்ய முடிகிறது. சூழ்நிலைகளால் அவன் நெருக்கப்படுகிறான். அவன் தன் சொந்த புரிதலைச் சார்ந்து கொள்ள சோதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் தேவனுடைய வார்த்தை வந்து விட்டது. ஈசாக்கு தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதைத் தெரிந்து கொண்டான். ஆகவே ஆறாவது வசனத்தில் காண்கிறபடி ஈசாக்கு கேராரில் குடியிருந்தான்.
அ. வேதம் மட்டுமே (Sola Scriptura)
குழப்பமான சமயத்தில் எதைக் குறித்த நிச்சயமும் இல்லாதபோது, தேவனுடைய வார்த்தை மிகுந்த நம்பிக்கை உடையதாக நம்மிடம் வருகிறது. “மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது. கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல். புல் உலர்ந்து, பூ உதிரும் நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்” (ஏசாயா 40:6 – 8). நம்முடைய கரங்களில் அதிக உறுதியான தேவனுடைய வார்த்தை இருக்கிறது. நாம் அதை விசுவாசிக்க வேண்டும். அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். அது நம் வாழ்வின் மையப்பகுதியை எடுத்துக்கொள்ள வேண்டும். வேதம் மட்டுமே என்ற முழக்கத்தை வெறும் வாய்ப் பேச்சாக மட்டும் பயன்படுத்தக் கூடாது! நமது விசுவாசம் மற்றும் செயல்களின் அனைத்துப் பகுதிகளிலும் வேதாகமம் முழுமையான அதிகாரம் உடையதாக வேண்டும். வெளிப்படையான காரணத்தை நாம் வலியுறுத்துவது போலத் தோன்றினாலும், இன்றைய காலத்தில் அநேகர் தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கு அல்லது நடைமுறைக்கு இலகுவான அணுகுமுறைகளுக்கு இடமளிப்பதால் இதை நாம் அதிகம் வலியுறுத்த வேண்டிய தேவை இருக்கிறது. வேதம் உங்கள் வாழ்வின் மையமாக இருக்கிறதா என்பதை அறிய உதவும் சரியான பரீட்சை உங்கள் திருச்சபை மக்களின் வாழ்வைப் பார்ப்பதே ஆகும். அடுத்த முறை வேறொரு சபை உறுப்பினர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைக்கும்போது, அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்று கவனியுங்கள். ஒரு குழப்பமான தருணத்தில், வேதம் என்ன சொல்கிறது என்கிற கேள்வியைக் கேட்பார்களானால், அவர்களுடைய மேய்ப்பர் உண்மையில் வேதத்தின் மனிதர் தான்! மக்கள் கேட்பதால் மட்டுமல்ல, பின்பற்றுவதாலும் கற்றுக்கொள்கிறார்கள் (இங்குள்ள உங்களில் யாருக்காவது உங்கள் திருச்சபை அங்கத்தவரை இந்தப் பரீட்சைக்கு உட்படுத்த தைரியம் உள்ளதா?) வேதம் மட்டுமே என்கிற கோட்பாடுடன் வேறு சில முக்கிய தொடர்புகளும் உள்ளன. முதலாவது, வேதாகமத்தைப் படிக்க முயற்சி எடுக்கப்பட வேண்டியது. இரண்டாவது, நாம் உணரும் சத்தியங்களுக்கு கீழ்ப்படிதல் உண்டாகும். மூன்றாவதாக, வேதாகமத்தின் அடிப்படையிலான கிறிஸ்தவத்தை அங்கிகரிக்க ஏதுவான சத்தியங்கள் கொண்ட அமைப்பு இதன் வழியாக உருவாகும். முதல் இரண்டு தொடர்பு கோட்பாடுகளை விளக்க வேண்டியதில்லை. மூன்றாவது கருத்திற்கு சில விளக்கம் தேவைப்படுகிறது.
ஆ. சீர்திருத்த விசுவாசம்
வேதாகமம் மனிதனுக்கு அளிக்கப்பட்ட முழுமையான தேவனுடைய வெளிப்பாடு. வேதம் முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பின்னர் தேவனிடம் இருந்து தீர்க்கதரிசனம் வருவதில்லை. நமக்கு அதிகம் தெரிந்த வேதபகுதியாகிய 2தீமோத்தேயு 3:16-17-ஐப் பாருங்கள். “வேதவாக்கியங்களெல்லாம் தேவனுடைய ஆவியினால் அருளப்பட்டிருக்கிறதுளூ தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” நமது கிறிஸ்தவ வாழ்வுக்குத் தேவையான அனைத்தும் வேதத்தில் காணப்படுகிறது. அதே வேளையில் வேதம் நாம் அறிய வேண்டியவைகளை ஒரு கிரமமான வகையில் தொகுத்துத் தரவில்லை. உதாரணத்திற்கு தேவனுடைய சுபாவத்தை நாம் அறிய வேண்டுமானால், இந்தக் கருக்கொண்ட வேதபகுதிகளை வேதத்தில் தேடி ஒருங்கிணைத்துப் பார்க்க வேண்டும். நாம் எந்த அளவு முழுமையாக வசனங்களின் தொகுப்பைப் பெற்று இருக்கிறோமோ, எந்த அளவு நமது சூழல்களைச் சரியாகப் புரிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு தேவனுடைய சுபாவத்தைக் குறித்த சரியான புரிதல் நமக்கு இருக்கும். பலவிதமான சத்தியங்களையும் படித்து ஒருங்கிணைக்கும்போது சத்தியங்கள் அடங்கிய ஒரு அமைப்பு எழும்புகிறது. இதைத் தான் ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் முறைப்படுத்தப்பட்ட இறையியல் (systematic theology) என்று அழைக்கிறோம். பல வேத உபதேசங்களைக் குறித்தும் முழுமையான ஒற்றுமை கிறிஸ்தவர்கள் மத்தியில் இருப்பதில்லை. ஆனால் கால்வினியம் (Calvinism) என்று அழைக்கப்படுகிற விசுவாச உபதேசப் புரிதல் வேதத்தின் படியான கிறிஸ்தவ விசுவாசத்திற்கு மிகவும் அருகில் இருக்கிறதாக நான் நம்புகிறேன். ஏனைய கிறிஸ்த இறையியல் கோட்பாடுகள் சத்தியத்தை தோராயமாக குறிப்பிடும் முயற்சிகளே. சீர்திருத்த விசுவாசத்தைப் பின்பற்றுகிறவர்களின் வாழ்வில் கால்வினின் தத்துவ சிந்தனை அதிகம் வெளிப்படுகிறது. நாம் ஏனைய தோராயமான விசுவாசத்தில் சந்தோஷப்படுகிறோம். நம் சில கருத்துக்களுக்கு மாறுபட்டு நிற்கும் நமது கிறிஸ்தவ சகோதரர்களின் உண்மையான வேதப் புரிதலை நாம் பாராட்டுகிறோம். ஆனாலும் என் வாதம் என்னவெனில் வேதம் மட்டுமே என்கிற தத்துவத்தை அதிகம் பிடித்துக்கொள்கிறவர்கள், ஏற்ற காலத்தில் சீர்திருத்த விசுவாசத்தைப் பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள் என்பது தான். பல நூற்றாண்டுகளாக சீர்திருத்த சத்தியம் வேறு புரிதல்களுக்கு எதிராக நிறுத்தப்பட்டது. அகஸ்டினின் காலத்தில் பெலேஜியன் (Pelagianism) கொள்கைக்கு எதிராக முன்னிறுத்தப்பட்டது. சீர்திருத்த காலத்தில் ரோமன் கத்தோலிக்கத்திற்கு எதிராக நிற்க வேண்டியதாய் இருந்தது. பதினேழாம் நூற்றாண்டில் அர்மீனியன் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டது. 18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டில் உட்சபட்ச (hyper) கால்வினிய கொள்கைக்கு எதிராக நிற்க வேண்டியதாய் இருந்தது. 19-வது நூற்றாண்டில் பெந்தெகோஸ்தே உபதேசங்களுக்கும் எதிர்பேச வேண்டிய நிலை. 19-வது நூற்றாண்டின் இறுதியிலும் 20-வது நூற்றாண்டின் துவக்கத்திலும் நவீனவாதங்களுக்கு (Mordenism) எதிராகக் குரல் எழுப்ப வேண்டியதாய் இருந்தது. நிகழ்காலத்தில் புதிய பெந்தெகோஸ்தே (Charismatic) கொள்கைக்கு எதிராய் நிற்க வேண்டிய தேவை இருக்கிறது. ஏனைய அமைப்புகளுக்கு மாற்றாக கால்வினிஸம் இருப்பதன் காரணம் என்னவென்றால் ஏனைய கொள்கைகள் வட்டத்தின் வெளிப்பகுதியைச் சுற்றியிருக்கும்போது, கால்வினிஸம் அதன் மையப்பகுதியாக வேதத்தின் இடத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. மிகவும் குறைந்தபட்சம் வேதம் மட்டுமே என்கிற கொள்கையினைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் கால்வினிஸத்தின் ஐந்து புள்ளிகளையாவது (கிருபையின் உபதேசம் எனவும் அழைக்கப்படுகிறது) நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.