ஆசிரியர் பூன்-சிங் போ 1954-ஆம் ஆண்டு மலேசியாவில் பிறந்தார். இரட்சிப்பறியாத பின்னணியில் பிறந்த இவர், இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்தபோது தேவகிருபையினால் விசுவாசத்தின் மூலம் இரட்சிக்கப்பட்டார். தமது படிப்பை முடித்த பின்பு, ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். 1983-ஆம் ஆண்டு முதலாவது சீர்திருத்தப்பட்ட பாப்டிஸ்ட் (Reformed Baptist) சபையை நிறுவினார். தமது விசுவாசத்தினிமித்தம் 1987 முதல் 1988 வரை சுமார் 325 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். டமான்சாரா சீர்திருத்தப்பட்ட பாப்டிஸ்ட் திருச்சபையில் (DRBC) தலைமைப் போதகராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். திருமணமான இவருக்கு நான்கு குமாரர்களும் பேரக்குழந்தைகளும் உள்ளனர். லிவர்பூல் (Liverpool) பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் பொறியியல் (Electronics Engineering) துறையில் முனைவர் பட்டத்தை நிறைவு செய்த இவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சமயவியல் குறித்த பட்டப்படிப்பையும், நார்த்-வெஸ்ட் பல்கலைக்கழகத்தில் இறையியலில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
1988-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போர்ட் டிக்ஸன் என்னும் இடத்தில் நடைபெற்ற முதலாவது சீர்திருத்த ஊழியர்கள் கருத்தரங்கில் பகிரப்பட்ட துவக்கச் செய்தியே இந்தச் சிறுபுத்தக வடிவில் வெளிவந்துள்ளது. கமுண்ட்டிங் என்னும் இடத்தில் நான் மலேசிய அரசால் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டிருந்த காலத்தில் இது எழுதப்பட்டது. நான் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (1960) கீழ் மலாய் மக்களைக் கிறிஸ்தவர்களாக்கிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டிருந்தேன். மேற்கண்ட கருத்தரங்கிற்கு வர இயலாத சூழல் இந்தக் கைதினிமித்தம் ஏற்பட்டதால், இந்தச் செய்தி வேறொரு போதகரால் வாசிக்கப்பட்டது.
எங்கள் சபையில் உள்ள போதகர்களில் ஒருவரான மூப்பர் மார்டின் வாங் அவர்கள் அளித்த ஊக்கத்தால் இந்தச் சிறுபுத்தகம் மறுபடியும் வெளியிடப்படுகிறது. இனி நடைபெறவுள்ள சீர்திருத்த ஊழியர்கள் கருத்தரங்கிற்கு இது உதவியாக இருக்கும் என்று அவர் கருதுகிறார். வருடந்தோறும் நடத்தப்படும் இந்தக் கருத்தரங்கிற்கு மலேசியாவிலிருந்தும், அருகிலுள்ள நாடுகளிலிருந்தும் அநேகர் வந்து கலந்துகொள்கின்றனர். இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களும், இதில் போதித்தவர்களும் நல்ல ஐக்கியத்தையும், பரஸ்பரம் கற்றுக்கொள்ளும் அனுபவத்தையும் பெற்றுக்கொண்டனர். கருத்தரங்கில் பகிரப்பட்ட ஊழிய அறிக்கைகள் நல்ல தகவல்களைத் தருபவையாகவும், ஆவிக்குரிய உற்சாகமூட்டுபவையாகவும் இருந்தன.
எரேமியா 6:16-ல் “வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்று நாம் வாசிக்கிறோம். நல்ல வழி வேதாகம சத்தியங்களில் உள்ள பூர்வ பாதைகளில் கண்டுபிடிக்கக்கூடியதும், தேவனுடைய வார்த்தைக்குத் தங்களை அர்ப்பணித்துள்ளவர்களால் தேடப்படுவதாகவும் இருக்கிறது. அது மனிதப் பாரம்பரியங்களிலும், தனிப்பட்ட விருப்பங்களிலும் அல்லது வேதத்தின் அதிகாரத்தைப் புறக்கணிக்கும் நூதனங்களிலும் காணப்படுவதில்லை.
இந்தச் சிறுபுத்தகத்தின் தலைப்பு பிற்போக்கான கண்ணோட்டத்தை உடையதாகவும், கடந்த காலத்தை மேன்மைப்படுத்தி முன்னேற்றத்தைத் தடுக்கிறது என்றும் சில வாதங்களை ஏற்படுத்தலாம். ஆனால், அர்த்தமுள்ள முன்னேற்றத்தை அடைய, பூர்வமானதும், நிரூபிக்கப்பட்டதுமான வேதப் பாதைக்குத் திரும்ப வேண்டிய அவசியம் இருக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம். இந்தப் புத்தகத்தின் துணைத்தலைப்பு அதன் செய்தியின் மையக்கருத்தைக் குறிக்கிறது. ஸ்தல சபையே தேவனுடைய சித்தத்தில் மையமாகவும் தனித்துவமானதாகவும் இருக்கிறது.
ஈசாக்கின் வாழ்க்கை ஸ்தல சபையின் சீர்திருத்தத்திற்கு உதவிகரமான பாடங்களைத் தருகிறது. நாம் தேவனுடைய வார்த்தையை மையமாகக் கொண்டும், சபை வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியது மட்டுமல்லாமல், தேவனுக்காகப் பெரிய தரிசனங்களை உடையவர்களாகவும் இருக்க வேண்டும். தன் தகப்பன் வகுத்த பழைய பாதையை ஈசாக்கு கண்டறிந்து, அதிலேயே தன் பயணத்தைத் தொடர்ந்தான். எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தளராமல் முன்னேறி, தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான். ஆகவேதான் நாமும் பூர்வ பாதைக்குத் திரும்பும்படி அழைக்கப்படுகிறோம்.
முழுநேர ஊழியத்திலிருந்து அக்டோபர் 2024-ல் நான் ஓய்வு பெற்றிருந்தாலும், இந்தக் கருத்தரங்கின் வளர்ச்சியை அதிக ஆர்வமுடன் தொடர்ந்து கவனித்து வருவேன். சுற்றியுள்ள தேசங்களில் சுவிசேஷம் பரவுவதற்காகத் தொடர்ந்து ஜெபிப்பேன். அறுப்பு உண்மையிலேயே மிகுதிதான்; வேலையாட்களோ குறைவு. தேவன் தாமே இன்னும் அதிக வேலையாட்களை எழுப்பி அனுப்புவாராக!
நமது விருப்பம் ஆத்துமாக்கள் ஆதாயப்படுத்தப்பட்டு, திருச்சபைகள் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதே. அந்தத் திருச்சபைகள் கர்த்தருடைய வார்த்தைக்கு உண்மையாகவும், அவருடைய சேவையில் கனிநிறைந்தவையாகவும் காணப்பட வேண்டும். தேவனுடைய வார்த்தை முழுமையான விதத்தில் போதிக்கப்பட்டு, அதன் விளைவாகப் பரிசுத்தவான்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாய், நமது ஆண்டவரின் வருகையின் மகா நாளுக்காக எதிர்பார்ப்புடன் இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்! ஆமென்.
பூன்-சிங் போ, கோலலம்பூர், ஏப்ரல் 2025.
1கொரிந்தியர் 14:20-ல், “சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயும் இருங்கள்” என்று வாசிக்கிறோம். அப்போஸ்தலனாகிய பவுல் இந்த வார்த்தைகளை எழுதிய காலத்தில், கொரிந்து சபை பல்வேறு பிரச்சனைகளால் நிறைந்திருந்தது. அவர்கள் மத்தியில் பிரிவினைகளும், ஒழுக்கக்கேடும், சபையின் அங்கத்தினர் ஒருவருக்கு விரோதமாய் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதும், சபை ஒழுங்கில் ஸ்திரத்தன்மை இல்லாமலும், திருமணம் மற்றும் விக்கிரக ஆராதனை போன்ற காரியங்களில் தெளிவற்றவர்களாகவும் காணப்பட்டனர். பவுலுக்கு விரோதமான முறுமுறுப்பும், ஆராதனையில் ஒழுங்கற்ற நிலையும், ஆவிக்குரிய வரங்கள் மற்றும் மரித்தோரின் உயிர்த்தெழுதல் போன்ற காரியங்களில் வாக்குவாதங்களும் இருந்தன.
கொரிந்து சபை இன்று உலகத்தில் காணப்படும் சபையின் ஒரு சிறிய பதிப்புத்தான். கிறிஸ்தவர்கள் இன்று பல்வேறு சபைப் பிரிவுகளிலும், விதவிதமான குழுக்களிலும், பலதரப்பட்ட இறையியல் கருத்துக்களாலும் பிரிந்து கிடக்கின்றனர். கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய வரங்கள், ஆராதனை முறை, சபையில் பிரசங்கத்திற்கான இடம், வேதாகமத்தின் அதிகாரம் மற்றும் போதுமான தன்மை, சமூக அக்கறை போன்றவை குறித்து விவாதிக்கின்றனர்.
குழப்பமும் சண்டையும் நிறைந்த கொரிந்திய சபையைப் பார்த்துப் பவுல், “சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயும் இருங்கள்” என்று அறிவுறுத்துகிறார். நமது புரிதலை இழந்துபோகும் அளவிற்கு நாம் பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ளக்கூடாது. பிரச்சனைகளின் இடியாப்பச் சிக்கல்களில் சிக்காதபடி நம்மை நாமே விடுவித்துக்கொண்டு, குழப்பமான காரியங்களுக்கும் மேலாக நிற்க வேண்டும். பிரச்சனைகளை முற்றிலும் அகற்ற முடியவில்லை என்றாலும், அவற்றைத் தவிர்ப்பதற்கான முதிர்ச்சியான வழிகளை யோசிக்க வேண்டும். சபையில் பிரச்சனையே இருக்காது என்று பவுல் வாக்குப்பண்ணவில்லை. ஆனால் நிதானமாகச் சிந்திப்பவர்களைப் போல, நம்மால் குறைந்தபட்சம் பாறைகள் நிறைந்த கடலையாவது சுலபமாகக் கடந்து முன்னேற முடியும்.
சபைத் தலைவர்கள் ஒருபோதும் குழப்பமான நிலைகளைக் குறித்துச் சோர்ந்துபோகக் கூடாது. நமது மக்கள் தங்கள் கிறிஸ்தவ வாழ்விற்கு வழிகாட்டும்படி நம்மை எதிர்பார்க்கிறார்கள். ஆகவே நாம் முதிர்ச்சியுள்ளவர்களைப் போலப் பக்குவமாய்ச் சிந்திக்க வேண்டும். நாம் என்ன செய்ய வேண்டும் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். நமது தண்ணீர் தொட்டிகளில் உருவாகும் ஓட்டைகளை அடைக்க இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருக்க நாம் விரும்புவதில்லை. மாறாக, அந்தப் பிரச்சனையின் அடிப்படை எங்கே இருக்கிறது என்று கண்டறிந்து அதைச் சரிசெய்ய வேண்டும். இன்று திருச்சபையில் இருக்கும் குழப்பமான நிலைக்கு அடிப்படைக் காரணமாகச் சில பலவீனங்கள் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அடிப்படையிலேயே பிரச்சனை காணப்படுவதால் அங்கேதான் நாமும் துவங்க வேண்டும். நாம் செய்ய வேண்டிய காரியங்களைக் குறித்து மூன்று ஆலோசனைகளை முன்மொழிய விரும்புகிறேன். இந்த மூன்று காரியங்களும் ஆதியாகமம் 26-ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கும் ஈசாக்கின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களாகும்.
ஆதியாகமம் 26 நமக்குத் தரும் முதல் ஆலோசனை, 'வேதம் நம் கிறிஸ்தவ வாழ்வின் மையமாக இருக்க வேண்டும்' என்பதே. இரண்டாம் வசனத்தில் இவ்வாறு வாசிக்கிறோம்: “கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு”. நான் உன்னோடு இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன் என்று தேவன் ஆபிரகாமுக்கு அளித்த உடன்படிக்கையின் ஆசீர்வாதத்தால் ஈசாக்கையும் ஆசீர்வதிப்பதாக வாக்களிக்கிறார். ஆனால், ஒரு குறிப்பிட்ட காலம் கேராரில் தங்க வேண்டும் என்பதுதான் அவனுக்கான நிபந்தனையாக இருந்தது. பஞ்சகாலத்தில் பசுமையான எகிப்தியப் புல்வெளியைக் கண்டு எவ்வளவாய் அவன் சோதிக்கப்பட்டிருப்பான் என்பதை நம்மால் கற்பனை செய்ய முடிகிறது. சூழ்நிலைகளால் அவன் நெருக்கப்படுகிறான். அவன் தன் சொந்த புரிதலைச் சார்ந்துகொள்ள சோதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், தேவனுடைய வார்த்தை வந்துவிட்டது. ஈசாக்கு தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதைத் தெரிந்துகொண்டான். ஆகவே, ஆறாவது வசனத்தில் காண்கிறபடி ஈசாக்கு கேராரில் குடியிருந்தான்.
அ. வேதம் மட்டுமே (Sola Scriptura)
குழப்பமான சமயத்தில், எதைக் குறித்த நிச்சயமும் இல்லாதபோது, தேவனுடைய வார்த்தை மிகுந்த நம்பிக்கையுடையதாக நம்மிடம் வருகிறது. “மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது. கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல். புல் உலர்ந்து, பூ உதிரும், நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்” (ஏசாயா 40:6 – 8). நம்முடைய கரங்களில் அதிக உறுதியான தேவனுடைய வார்த்தை இருக்கிறது. நாம் அதை விசுவாசிக்க வேண்டும்; அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். அது நம் வாழ்வின் மையப்பகுதியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
'வேதம் மட்டுமே' என்ற முழக்கத்தை வெறும் வாய்ப்பேச்சாக மட்டும் பயன்படுத்தக் கூடாது! நமது விசுவாசம் மற்றும் செயல்களின் அனைத்துப் பகுதிகளிலும் வேதாகமம் முழுமையான அதிகாரமுடையதாக இருக்க வேண்டும். வெளிப்படையான காரணத்தை நாம் வலியுறுத்துவது போலத் தோன்றினாலும், இன்றைய காலத்தில் அநேகர் தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கு அல்லது நடைமுறைக்கு இலகுவான அணுகுமுறைகளுக்கு இடமளிப்பதால் இதை நாம் அதிகம் வலியுறுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
வேதம் உங்கள் வாழ்வின் மையமாக இருக்கிறதா என்பதை அறிய உதவும் சரியான பரீட்சை, உங்கள் திருச்சபை மக்களின் வாழ்வைப் பார்ப்பதே ஆகும். அடுத்த முறை மற்ற சபை உறுப்பினர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைக்கும்போது, அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்று கவனியுங்கள். ஒரு குழப்பமான தருணத்தில், "வேதம் என்ன சொல்கிறது?" என்கிற கேள்வியைக் கேட்பார்களானால், அவர்களுடைய மேய்ப்பர் உண்மையில் வேதத்தின் மனிதர்தான்! மக்கள் கேட்பதால் மட்டுமல்ல, பின்பற்றுவதாலும் கற்றுக்கொள்கிறார்கள் (இங்குள்ள உங்களில் யாருக்காவது உங்கள் திருச்சபை அங்கத்தினரை இந்தப் பரீட்சைக்கு உட்படுத்த தைரியம் உள்ளதா?).
'வேதம் மட்டுமே' என்கிற கோட்பாட்டுடன் வேறு சில முக்கிய தொடர்புகளும் உள்ளன:
வேதாகமத்தைப் படிக்க முயற்சி எடுக்கப்பட வேண்டும்.
நாம் உணரும் சத்தியத்திற்குக் கீழ்ப்படிதல் உண்டாகும்.
வேதாகமத்தின் அடிப்படையிலான கிறிஸ்தவத்தை அங்கீகரிக்க ஏதுவான, சத்தியங்கள் அடங்கிய ஒரு அமைப்பு இதன் வழியாக உருவாகும்.
முதல் இரண்டு அடிப்படைக் கோட்பாடுகளை விளக்க வேண்டியதில்லை. மூன்றாவது கருத்திற்குச் சற்று விளக்கம் தேவைப்படுகிறது.
ஆ. சீர்திருத்த விசுவாசம் (Reformed Faith)
வேதாகமம் என்பது மனிதனுக்கு அளிக்கப்பட்ட தேவனுடைய முழுமையான வெளிப்பாடு. வேதம் முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பின்னர், தேவனிடமிருந்து புதிய தீர்க்கதரிசனங்கள் வருவதில்லை. நமக்கு அதிகம் தெரிந்த வேதபகுதியாகிய 2 தீமோத்தேயு 3:16-17-ஐப் பாருங்கள்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவனுடைய ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” நமது கிறிஸ்தவ வாழ்வுக்குத் தேவையான அனைத்தும் வேதத்தில் காணப்படுகின்றன.
அதே வேளையில், வேதம் நாம் அறிய வேண்டியவைகளை ஒரு கிரமமான வகையில் ஒரே இடத்தில் தொகுத்துத் தரவில்லை. உதாரணமாக, தேவனுடைய சுபாவத்தை நாம் அறிய வேண்டுமானால், இந்தக் கருத்தைக் கொண்ட வேதபகுதிகளை வேதத்தில் தேடி ஒருங்கிணைத்துப் பார்க்க வேண்டும். நாம் எந்த அளவு முழுமையாக வசனங்களின் தொகுப்பைப் பெற்றிருக்கிறோமோ, எந்த அளவு நமது சூழல்களைச் சரியாகப் புரிந்துகொள்கிறோமோ, அந்த அளவுக்கு தேவனுடைய சுபாவத்தைக் குறித்த சரியான புரிதல் நமக்கு இருக்கும். பலவிதமான சத்தியங்களையும் படித்து ஒருங்கிணைக்கும்போது, சத்தியங்கள் அடங்கிய ஒரு அமைப்பு எழும்புகிறது. இதைத்தான் 'ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் முறைப்படுத்தப்பட்ட இறையியல்' (Systematic Theology) என்று அழைக்கிறோம்.
பல வேத உபதேசங்களைக் குறித்து முழுமையான ஒற்றுமை கிறிஸ்தவர்கள் மத்தியில் இருப்பதில்லை. ஆனால், கால்வினியம் (Calvinism) என்று அழைக்கப்படுகிற விசுவாச உபதேசப் புரிதல், வேதத்தின்படியான கிறிஸ்தவ விசுவாசத்திற்கு மிகவும் அருகில் இருப்பதாக நான் நம்புகிறேன். ஏனைய கிறிஸ்தவ இறையியல் கோட்பாடுகள் சத்தியத்தைத் தோராயமாகக் குறிப்பிடும் முயற்சிகளே. சீர்திருத்த விசுவாசத்தைப் பின்பற்றுகிறவர்களின் வாழ்வில் கால்வினின் தத்துவ சிந்தனை அதிகம் வெளிப்படுகிறது. நாம் ஏனைய தோராயமான விசுவாசத்தைக் கொண்டவர்களோடும் சந்தோஷப்படுகிறோம். நம் சில கருத்துகளுக்கு மாறுபட்டு நிற்கும் நமது கிறிஸ்தவ சகோதரர்களின் உண்மையான வேதப் புரிதலை நாம் பாராட்டுகிறோம். ஆனாலும் என் வாதம் என்னவென்றால், 'வேதம் மட்டுமே' என்கிற தத்துவத்தை அதிகம் பிடித்துக்கொள்கிறவர்கள், ஏற்ற காலத்தில் சீர்திருத்த விசுவாசத்தைப் பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள் என்பதுதான்.
பல நூற்றாண்டுகளாகச் சீர்திருத்த சத்தியம் வேறு புரிதல்களுக்கு எதிராக நிறுத்தப்பட்டது:
அகஸ்டினின் காலத்தில்: பெலேஜியன் (Pelagianism) கொள்கைக்கு எதிராக முன்னிறுத்தப்பட்டது.
சீர்திருத்த காலத்தில்: ரோமன் கத்தோலிக்கத்திற்கு எதிராக நிற்க வேண்டியதாயிருந்தது.
1
18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளில்: உச்சபட்ச (Hyper) கால்வினிய கொள்கைக்கு எதிராக நிற்க வேண்டியதாயிருந்தது.
19-வது நூற்றாண்டில்: பெந்தெகோஸ்தே உபதேசங்களையும் எதிர்த்துப் பேச வேண்டிய நிலை உருவானது.
19-வது நூற்றாண்டின் இறுதியிலும் 20-வது நூற்றாண்டின் துவக்கத்திலும்: நவீனவாதங்களுக்கு (Modernism) எதிராகக் குரல் எழுப்ப வேண்டியதாயிருந்தது.
நிகழ்காலத்தில்: புதிய பெந்தெகோஸ்தே (Charismatic) கொள்கைக்கு எதிராக நிற்க வேண்டிய தேவை இருக்கிறது.
ஏனைய அமைப்புகளுக்கு மாற்றாகக் கால்வினியம் இருப்பதன் காரணம் என்னவென்றால், ஏனைய கொள்கைகள் வட்டத்தின் வெளிப்பகுதியைச் சுற்றியிருக்கும்போது, கால்வினியம் அதன் மையப்பகுதியில் வேதத்தை வைத்துள்ளது. மிகவும் குறைந்தபட்சம், 'வேதம் மட்டுமே' என்கிற கொள்கையினைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் கால்வினியத்தின் ஐந்து புள்ளிகளையாவது (Five Points of Calvinism - கிருபையின் உபதேசங்கள் எனவும் அழைக்கப்படுகிறது) நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2026. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.