வேதப்புத்தகத்தில் உள்ள, புரிந்துகொள்வதற்குக் கடினமான பகுதிகளில் 1 கொரிந்தியர் 14-ஆம் அதிகாரமும் ஒன்று. அந்நியபாஷை (வேற்றுமொழி) பேசுவதைக் குறித்து விளக்கும் இந்த வேதப்பகுதியையும், அதைக் குறித்த மற்ற வேதப்பகுதிகளில் சொல்லப்பட்டவைகளையும், கொரிந்து திருச்சபையின் பின்னணியத்தையும் ஒன்றாகப் பொருத்திப் பார்க்காமல் புரிந்துகொள்ள முடியாது. பாபேலில் தங்களுக்குப் பெயர் உண்டாகக் கோபுரம் கட்ட முயன்ற மக்களின் பாஷையைத் தேவன் தாறுமாறாக்கினார் என்று வாசிக்கிறோம் (ஆதி 11). அதற்கு இணையாகப் பாஷைகள் தாறுமாறாக, குழப்பமாகப் பேசப்பட்ட இடம் கொரிந்து திருச்சபையாகும். கொரிந்து திருச்சபையில் நிலவிய அந்நியபாஷைக் குழப்பத்தைச் சரிசெய்ய, ஒரு முழு அதிகாரத்தையே அப்போஸ்தலனாகிய பவுல் எழுதவேண்டியிருந்தது!
ஆதித் திருச்சபையில் இருந்த விசுவாசிகளுக்குத் தேவன் வரங்களைக் கொடுத்தபோது, புது யுகத்துக்கான தனது செய்தியின் உண்மையை உறுதிப்படுத்தப் பல அற்புதமான வரங்களையும் தேவன் கொடுத்தார். அவற்றில் ஒன்றுதான் இந்த அந்நியபாஷையில் (வேற்றுமொழி) பேசும் வரமாகும். “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்.” (எபிரேயர் 1:1,2). இது ஒரு புதிய செய்தி, புதிய காலம் மற்றும் புதிய வெளிப்பாடு என்பதையும், தேவன் மீண்டும் அவர்களுடன் பேசுகிறார் என்பதையும், குறிப்பாக யூதர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதே தேவனுடைய நோக்கம். தேவனுடைய இந்த நோக்கம் நிறைவேற, சில சிறப்பு அற்புத அடையாளங்களைச் செய்யும் வரங்களை அப்போஸ்தலர்களுக்கும், உடன் ஊழியர்களுக்கும் தேவன் கொடுத்தார். அவைகளில் ஒன்றுதான் 'அந்நியபாஷையின் வரம்' என்று அழைக்கப்படும், பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலால் தாங்கள் முன்னர் அறிந்திராத வேறொரு உலகப் பாஷையைப் பேசும் வரமாகும்.
கொரிந்திய கலாச்சாரமும், பரவச பாஷைகளும்...
வேதத்தில் காணப்படும் அந்நியபாஷையானது, எப்போதும் மனிதர்கள் பேசும் ஒரு பாஷையாகவே இருந்தது. அப்போஸ்தலர் 2:11-இல், மேல் வீட்டு அறையில் கூடியிருந்த மக்கள் அனைவரும் தங்களுடைய சொந்தப் பாஷையிலே தேவனுடைய மகத்துவங்களைப் பேசக் கேட்டார்கள் என்றுதான் நாம் வாசிக்கிறோம். அங்கே பேசிய மக்களுக்கு அந்தப் பாஷை புரியாவிட்டாலும், அதைக் கேட்ட மக்களுக்கு அவர்கள் பேசியது புரிந்தது. அந்நியபாஷை வரத்தைப் பயன்படுத்துவதில் கொரிந்து திருச்சபையில் குழப்பமும், கூச்சலும் நிலவியதால், அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்திற்குப் பிறகு அந்த வரத்தைக் குறித்து நேரடியாக நாம் 1 கொரிந்தியர் நிருபத்தில் மட்டுமே வாசிக்கிறோம். கொரிந்து திருச்சபையில், புறஜாதியாரின் போலியான பரவச (Ecstasy) அந்நியபாஷையை, உண்மையான அந்நியபாஷையின் வரத்திற்குப் பதிலாக மாற்றியிருந்தனர். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், உண்மையான அந்நியபாஷையின் வரமானது, போலியான பரவச பாஷையுடன் கலக்கப்பட்டிருந்தது.
இந்தப் பரவசப் பேச்சுகளும் பாஷைகளும் புறஜாதியாரின் சமயத்தில் மிகவும் வழக்கமானவை. உதாரணமாக, ஆப்பிரிக்காவின் சூளு (Zulus) என்ற இன மக்களிடையே இதுபோன்ற பரவச உளறல் பேச்சுகள் இன்றும் காணப்படுகின்றன. நம்மூரிலும் மற்ற மதத்தினர் சாமியாடுதல் எனும் பெயரில் செய்யும் பரவச உளறல்களைக் கேட்டிருப்பீர்கள்.
தற்போது, கொரிந்து திருச்சபையின் பின்னணியை நாம் பார்ப்போம். பொதுவாகவே, கொரிந்தியர்கள் தங்களைச் சுற்றிக் காணப்பட்ட எல்லா உலகப் பழக்கவழக்கங்களையும் தங்களுடைய திருச்சபையில் அனுமதித்திருந்தனர். 1 கொரிந்தியரின் முதல் நான்கு அதிகாரங்களில் நாம் பார்க்கிறபடி, மனிதரின் தத்துவங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தார்கள். தங்கள் சமூகத்தில் காணப்பட்டபடியே, 3-ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறபடி, திருச்சபைக்குள்ளும் மனிதத் தலைவர்களைத் தூக்கிப்பிடித்துக் கொண்டாடினார்கள். மிக மோசமான அருவருக்கத்தக்க பாலியல் பாவங்களில் ஈடுபட்டதை 5 மற்றும் 6-ஆம் அதிகாரங்களில் வாசிக்கிறோம். 6-ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறபடி, ஒருவர் மேல் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துக்கொண்டார்கள். திருமண உறவை அசுத்தப்படுத்தி, ஒட்டுமொத்த குடும்ப அமைப்பையே சீரழித்து வைத்திருந்தார்கள்; 7-ஆம் அதிகாரத்தில் இதைப் பற்றி வாசிக்கிறோம்.
8, 9 மற்றும் 10-ஆம் அதிகாரங்களில் வாசிக்கிறபடி, புறஜாதியாரின் திருவிழாக் கொண்டாட்டங்களிலும், விக்கிரகங்களுக்குப் படைத்ததைச் சாப்பிடுதலிலும் மிகப்பெரிய குழப்பம் திருச்சபையில் காணப்பட்டது. திருச்சபையில் பெண்களுக்குத் தரப்பட வேண்டிய இடத்திலும் அவர்களுக்குத் தெளிவில்லை; அதைக் குறித்து 11-ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். திருச்சபையில் ஆவிக்குரிய வரங்களை மிகத் தவறாகப் பயன்படுத்தியதைக் குறித்து 12-ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். கிறிஸ்தவ குணாதிசயங்களில் மிக முக்கியமான அன்பை அவர்கள் இழந்துவிட்டதைக் குறித்து 13-ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்.
அன்று அவர்கள் சமுதாயக் கலாச்சாரத்தில் காணப்பட்ட சாத்தானிய மற்றும் அருவருக்கத்தக்கப் பழக்கவழக்கங்கள் எல்லாவற்றையும் முழுமையாகத் தங்களுடைய திருச்சபையிலே அனுமதித்திருந்தனர். எல்லாவிதமான பரவச உளறல்கள், அதனுடன் இணைந்த ஆபாசங்கள், சிற்றின்பங்கள் மற்றும் களியாட்டுகள் என எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகத் தங்கள் திருச்சபையில் இறக்குமதி செய்திருந்தனர். இது ஒரு புறஜாதி மதத்தை அங்கே தோற்றுவித்திருந்தது. உண்மையும் பொய்யும் கலந்த ஒரு குழப்பமான நிலையே அங்கு காணப்பட்டது. இன்று அதற்கு இணையாகக் கிறிஸ்தவம் என்று சொல்லப்படுகிற ரோம கத்தோலிக்கத்தைச் சொல்லலாம்; அது வேதத்திலுள்ள கிறிஸ்தவமும், பாகால் வழிபாடும், அஸ்தரோத் - தாமூஸ் வழிபாடாகிய தாய் - குழந்தை வழிபாட்டையும் உள்ளடக்கியதாகும். இதேபோன்றதொரு நிலையே கொரிந்து திருச்சபையிலும் காணப்பட்டது; கிறிஸ்தவமும் புறஜாதி மதமும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருந்தன.
கொரிந்து திருச்சபையின் காலத்திலிருந்த கிரேக்க - ரோம கலாச்சாரத்தை நீங்கள் பார்த்தீர்களானால், அவர்கள் பலதரப்பட்ட ஆண் மற்றும் பெண் பூசாரிகளைத் தங்கள் கோயில்களில் கொண்டிருந்தார்கள்; கிரேக்கக் கடவுள்களின் பக்தர்கள் இந்தக் கோயில்களுக்குச் சென்று அதில் இருந்த ஆண் மற்றும் பெண் பூசாரிகளை வழிபடுவார்கள். அப்போது அந்த பக்தர்கள் பரவச (உளறல்) பேச்சுகளில் (Ecstasy) தங்களை ஈடுபடுத்திக்கொள்வது வழக்கம். பரவசநிலை (Ecstasy) என்றால் ஒருவர் தன்னுடைய உடலை விட்டு வெளியே செல்லுதல் என்று பொருள்படும். உண்மையிலேயே அவர்கள் உருண்டு புரண்டு சுயநினைவிழந்து, ஆட்டம்போட்டு, பைத்தியம் பிடித்தவர்களைப் போல் நடந்துகொள்வார்கள். உண்மையிலேயே அவர்கள் தங்கள் உடலைவிட்டு வெளியேறி, வானத்துக்கு ஏறி, அவர்கள் எந்தத் தேவதையை வணங்கினார்களோ அந்தத் தேவதையுடன் ஐக்கியம் கொள்வதாக நம்பினார்கள்; அந்தத் தேவதையுடன் ஐக்கியம் கொண்ட பிறகு, அவர்கள் தேவ பாஷையைப் பேசுவதாக நம்பினார்கள்.
இது அவர்கள் கலாச்சாரத்தில் வழக்கமான ஒன்றாகும். அந்நியபாஷையைக் குறிக்கக் கொரிந்தியர் நிருபத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘glōssais lalein’ என்ற வார்த்தையானது, வேதாகம ஆசிரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதல்ல; மாறாக, புறஜாதியாரின் பரவசப் பேச்சுகளைக் குறிக்கக் கிரேக்க - ரோம கலாச்சாரத்தில் வழக்கமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தையாகும். அது உடலிலிருந்து வெளியே சென்று, தேவதையுடன் கலந்து, மாய வழியில் அவர்களுடைய மொழியாகிய முட்டாள்தனமான, எந்தப் பொருளையும் தராத, புரிந்துகொள்ள முடியாத அர்த்தமற்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டும் பேசி உளறுவதாகும்.
கிரேக்கர்கள் இந்தப் பரவச சமய வழிபாட்டு முறைக்கு ஈரோஸ் (eros) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். கிரேக்க வேதாகமத்தில் காணப்படும் அந்த வார்த்தையானது, பாலியல் சார்ந்த அன்பைக் குறிக்கும் விதமாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த வார்த்தையின் அர்த்தம் அதையும் தாண்டிச் செல்கிறது. ஈரோஸ் என்பதன் அர்த்தம், ஆபாசத்தின் மீதான நாட்டம், சிற்றின்ப நாட்டம், பரவச நாட்டம், உச்சகட்ட அனுபவம் அல்லது உணர்ச்சியின் மீதான நாட்டம் என்பதையும் குறிக்கும். மேலும் அவர்கள் பின்பற்றிய சமய வழக்கமானது ஆபாசத்தை உள்ளடக்கியதாகும். அவர்களின் சமயம், சிற்றின்பம், ஆபாசம் மற்றும் பரவசநிலையை உள்ளடக்கிய உணர்ச்சிபூர்வமானதாகும். அந்தச் சமயங்களைப் பற்றி நீங்கள் படிப்பீர்கள் என்றால், அந்தக் கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள் அங்குள்ள ஆண் மற்றும் பெண் பூசாரிகளுடன் கூட்டுப் பாலியல் உறவில் ஈடுபட்டதையும் நீங்கள் அறிந்துகொள்ள முடியும். ஆபாசம், பாலியல், சிற்றின்பம் மற்றும் தேவர்களின் பரவசப் பேச்சுகளை ஒருசேர மூட்டைகட்டிய, பாபிலோனில் தோன்றிய அந்த மாய சமய வழக்கமானது, கொரிந்திய கலாச்சாரத்திலும் இறக்குமதி செய்யப்பட்டது. இதைப் பற்றிய மேலதிக வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன; உங்களுக்கு ஆர்வம் இருப்பின் இணையதளத்திலோ அல்லது அதைச் சார்ந்த புத்தகங்களிலோ படித்து அறிந்துகொள்ளுங்கள்.
கொரிந்துவில் அன்று என்ன நடந்ததோ, அதுவே இன்றைய பெந்தேகோஸ்தே திருச்சபைகளிலும் (Charismatic movements) நடந்துகொண்டிருக்கிறது. பெந்தேகோஸ்தே அமைப்புகள் மற்றும் திருச்சபைகள் தங்களது மந்த நிலையினாலும், பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடுகளைப் பன்னெடுங்காலமாக உதாசீனப்படுத்தியதாலும், மிகச்சிறந்த நுணுக்கமான வேத போதனை இல்லாததாலும், எந்தவிதமான குறிப்பிடத்தக்க ஆவிக்குரிய விழிப்பு மற்றும் எழுப்புதல் இல்லாததாலும், திருச்சபை மக்கள் தேவனைத் தொட்டு உணர விரும்பினார்கள்; பரவச உணர்ச்சியை விரும்பினார்கள். அதுவே சாத்தானின் போலியான உணர்ச்சியின் நுழைவாயிலாக மாறியது. இன்று பெந்தேகோஸ்தே திருச்சபையில் நடப்பது என்னவென்றால், ‘வெறுமனே கொரிந்து திரும்பிப் பார்க்கப்படுகிறது’ (ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால், ‘Simply Corinth revisited’). சபையானது புறஜாதி மதப் பழக்கவழக்கங்களுடன் கைகோர்த்திருக்கிறது. சிற்றின்ப, உணர்ச்சிபூர்வமான, அனுபவம் சார்ந்த, ஆபாச சமய வழிபாட்டு முறையை அவர்கள் உருவாக்கி, அதைப் பரிசுத்த ஆவியானவரின் செயல் என்று அழைக்கிறார்கள். ஆனால், உண்மையில் அது சாத்தானின் ஏமாற்றாகவே இருக்கிறது. பெந்தேகோஸ்தே அனுபவத்துக்குள் சென்றவர்களுடன் நீங்கள் பேசினால், அவர்களின் அனுபவம் முழுவதும் உணர்வு மற்றும் உணர்ச்சிபூர்வமான அனுபவம் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
தாங்கள் அந்நியபாஷை வரத்தைப் பெற்றுக்கொண்டதாகச் சொல்லும் பலரது அனுபவங்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் ஜெபித்துக்கொண்டிருந்தபோது பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மீது இறங்கியதால் அவர்கள் பெலனின்றி கீழே விழுந்ததாகவும், பிறகு அவர்களுக்குப் புரியாத வார்த்தைகளைப் பரிசுத்த ஆவியானவர் அவர்கள் வாயிலே கொடுத்ததாகவும், அதை மீண்டும் மீண்டும் சொல்கையில் தங்களுக்கு ஒரு பரவச அனுபவம் ஏற்பட்டதாகவும், தேவன் தங்களைத் தொட்டதுபோல் உணர்ந்ததாகவும் குறிப்பிடுவார்கள். ஆவியில் நிறைந்து தாங்கள் கீழே விழுந்தபோது தங்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை என்றும், ஒரு மணி நேரம் கழித்துத்தான் சுயநினைவுக்கு வந்ததாகவும் சிலர் குறிப்பிடுவார்கள். இன்னும் சிலர், ஒரு குறிப்பிட்ட ஊழியர் வந்து தங்கள் தலையில் கைவைத்து ஜெபித்தபோது உடனடியாக அந்நியபாஷை வரத்தைப் பெற்றுக்கொண்டதாகக் கூறுவார்கள்.
ஒருமுறை அந்நியபாஷை பேசும் ஊழியர் ஒருவர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அவர், நானும் அந்நியபாஷை பேச வேண்டும் என்றும், அப்படிப் பேசினால்தான் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டதற்கான அடையாளம் என்றும் சொன்னார். மேலும், நான் எப்படி அந்நியபாஷை பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எனக்குச் சொன்னார். அதாவது, நான் காலை 4 மணிக்கு எழுந்து முழங்கால்படியிட்டு (ஜெபிக்கக் கூடாதாம்!) வெறும் ஸ்தோத்திரம் மட்டுமே சொல்ல வேண்டுமாம். அப்படி நான் திரும்பத் திரும்ப ஸ்தோத்திரம் சொன்ன பிறகு, அது அந்நியபாஷையாக மாறுமாம். அவரது இந்தப் புரிதலை நினைத்து நான் பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை. அங்கே நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்? எல்லா வகையான உணர்வுபூர்வமான அனுபவங்கள், உணர்ச்சி மேலோங்கிய அனுபவங்கள் மற்றும் சிற்றின்ப அனுபவங்கள் ஆகியவை மனதினால் ஆட்கொள்ளப்படுவதைவிட, உணர்ச்சியினால் ஆட்கொள்ளப்பட்டதன் வெளிப்பாடுகளாகவே இருக்கின்றன. இது புறஜாதி மதத்தில் காணப்படும் வழக்கம். கிறிஸ்துவுக்கு முன் (கி.மு.) 429 முதல் 347 வரை வாழ்ந்த பிளாட்டோ, தன்னுடைய குறிப்புகளில் இதுபோன்ற புறஜாதி மதத்தின் பரவச அனுபவங்களைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதியுள்ளார்.
இந்த உணர்வுகளில் எதுவும் உண்மையான கிறிஸ்தவத்திற்குச் சொந்தமானதல்ல. கிறிஸ்தவத்தில் உண்மையான அந்நியபாஷையின் வரமானது, தேவன் அங்கே இருப்பதையும் தேவனுடைய மக்கள் தேவனின் சத்தியத்தைப் பேசுகிறார்கள் என்பதைக் குறிக்கவும், அந்தப் பாஷை தெரிந்த யாராவது அங்கே இருக்கும்போது மட்டுமே ஒரு அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது. புறஜாதி சமயப் பழக்கங்களுடன் குழப்பிக்கொள்ளும்படி அது ஒருபோதும் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால், தேவன் ஒன்றைச் செய்யும்போது சாத்தான் அதேபோன்ற போலியான ஒன்றை அறிமுகப்படுத்துகிறான், இல்லையா? அதுவே பிரச்சினையை இன்னும் அதிகரிக்கிறது.
ஆதித் திருச்சபையில் பரிசுத்த ஆவியானவரின் உண்மையான வெளிப்பாடுகளை மறைக்க, சாத்தான் போலியான வெளிப்பாடுகளையும் தரிசனங்களையும் அந்நியபாஷைகளையும் ஒரு புகைமண்டலமாகப் பயன்படுத்தினான். அதனால்தான் (1 யோவான் 4:1)-ல், “உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்” என்று யோவான் எழுதுகிறார். போலிகளுக்கு வீழ்ந்துபோவது மிகவும் எளிதானது. கொரிந்தியர்கள் அந்த யுகத்தின் மதங்களோடு கைகோர்க்க முடிவு செய்ததால் பாதிக்கப்பட்டார்கள்.
சாத்தான் இக்காலத்தின் அதிபதி என்றும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளுக்கு வலுவூட்டுகிறவன் என்றும் அழைக்கப்படுகிறான். ஒளியின் தூதனைப்போல் பிரகாசித்து, தேவனைப்போல் இருக்க விரும்புகிறான். திருச்சபை போலியை நம்பவும், உண்மையைப் பொய்யாக்கவும் அவன் விரும்புகிறான்; இதுவே அவனது வேலை! ஆகவேதான் புறஜாதி மதத்தில் நாம் காணும் எல்லாப் போலிகளிலும் கொரிந்து திருச்சபையும் மூழ்கியிருந்தது.
இதேபோன்றதொரு நிலைதான் இன்றைய பெந்தேகோஸ்தே திருச்சபைகளிலும் காணப்படுகிறது. எந்த ஒரு பரவசநிலையும், உணர்ச்சி மேலோட்டமும், ஆபாசமும், சரீரத்திலிருந்து வெளியே செல்லுதல் போன்றவையும் எந்த வகையிலும் புதிய ஏற்பாட்டுப் பரிசுத்த ஆவியானவரின் செயலுடன் சம்பந்தப்பட்டவை அல்ல. உண்மையில் (1 கொரிந்தியர் 14:32) சொல்கிறது: “தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே”. இதன் அர்த்தம், தன்னைத் தேவனுடைய வார்த்தையைப் போதிப்பவன் என்று சொல்லுகிறவன், தன்னுடைய ஆவியை அடக்க வல்லவனாய் இருக்கிறான் என்பதே! ஒருவனும் தன் ஆவியை விடுவதில்லை; ஒருவனும் கட்டுப்பாட்டை இழக்கிறதில்லை; தேவன் நியமித்தபடியே அன்றி ஒருவனும் தன் உடலை விட்டு வெளியே செல்கிறதுமில்லை! அதனால்தான் பதினான்காம் அதிகாரத்தின் இறுதியில், "சகலமும் நல்ஒழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது" என்று அப். பவுல் சொல்லுகிறார். சபை கூடி வந்திருக்கும்போது எல்லோரும் குதித்து, “உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம் பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம் பண்ணுகிறான்" (1 கொரி 14:26) என்று இருப்பது பரிசுத்த ஆவியானவரின் வழி அல்ல! இப்படியாகப் புறஜாதி சமயத்தில் காணப்பட்ட குழப்பம் திருச்சபையையும் விழுங்கியிருந்தது!
பாபிலோனில் காணப்பட்ட இந்த மாய மத வழிபாட்டு முறைகள் கொரிந்திய கலாச்சாரத்தையும் ஆட்டுவித்தன. அவர்கள் எல்லாவிதமான சடங்காச்சாரங்களையும், பாரம்பரியங்களையும், நேர்த்திக்கடன்களையும், ஞானஸ்நானங்களையும், மிருக பலிகளையும், திருவிழாக்களையும், உபவாசங்களையும், பாவத்தைக் கழுவ உறைந்த நதியில் முங்குதல், முழங்காலில் பல மைல்கள் நடத்தல் போன்றவைகளையும் தோற்றுவித்திருந்தார்கள். போலியான சமய முறைகள், பரவசப் பேச்சுகள் மற்றும் தரிசனங்கள் எல்லாம் அவர்களின் வழிபாட்டு முறையின் அங்கமாக இருந்தன. இவையெல்லாம் கொரிந்தியரின் கலாச்சாரத்திலும் காணப்பட்டதால், இப்போது கொரிந்திய மக்கள் ஒரு சபையாகக் கூடி வரும்போது இதே கூச்சலும் குழப்பமும் சபையிலும் நிலவின. நம்முடைய கலாச்சாரத்தோடு ஒப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், இன்று எப்படிப் புறஜாதியார் வழக்கமான சாதி, பிசாசு, நல்ல நேரம் பார்த்தல், முகூர்த்த நேரம் பார்த்தல், ஜாதகம் பார்த்தல் போன்றவை திருச்சபை மற்றும் விசுவாசிகளின் வாழ்க்கையிலும் காணப்படுகின்றனவோ, அதேபோல அன்று மேற்சொன்ன காரியங்கள் கொரிந்து திருச்சபையில் ஊடுருவியிருந்தன.
12-ஆம் அதிகாரத்தில், உங்களுக்குத் தெரியுமா? அங்கே கூடியிருந்த மக்கள் எழுந்து நின்று அந்நியபாஷை என்ற பெயரில் இயேசுவைச் சபித்துக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்த மக்களில் சிலர், "இது பரிசுத்த ஆவியா?" என்று கேட்டதால்தான், “தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவன் என்று சொல்ல மாட்டான்” என்று அப். பவுல் எழுதுகிறார். கிரேக்க மத வழிபாட்டு முறைகளின் காட்டுமிராண்டித்தனம், கொரிந்து திருச்சபையின் பைத்தியக்காரப் போக்கிற்குக் காரணமாயிற்று.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, இன்றைய பெந்தேகோஸ்தே திருச்சபையும் புறஜாதி மதத்தின் வழக்கங்களில் மூழ்கியிருப்பதை நம்மால் காண முடியும். தங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டுவராத ஒரு திருச்சபையில் நீண்ட நாட்கள் இருந்த மக்களின் உணர்ச்சியை, பரவச வழிபாட்டு முறை தூண்டிவிடுவதால் இந்தப் போலியானது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதைச் சரிசெய்யவே 14-ஆம் அதிகாரத்தைப் பவுல் எழுதுகிறார்.





