இப்போது இரண்டாம் பகுதிக்கு வருகிறோம். அந்நியபாஷை வரத்தின் நோக்கம், அது ஓர் அடையாளமாகக் கொடுக்கப்பட்டது என்பதாகும். இது இந்த ஆராய்ச்சியின் மிக முக்கியமான பகுதியாகும். இந்த வரம் கொடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன என்பதில் தெளிவு பெற்றுவிட்டால், இந்த வரத்தைப் பொறுத்தவரையில் ஆதித்திருச்சபையில் என்ன நடந்தது என்பதையும், வரலாற்றில் என்ன நிகழ்ந்தது என்பதையும், இன்று திருச்சபையில் என்ன நடந்தேறிக்கொண்டிருக்கிறது என்பதையும் எளிதில் அறிந்துகொள்ளலாம். அது வேதாகம நோக்கத்துடன் பொருந்துகிறதா இல்லையா என்பதைத் தீர்மானித்துவிடலாம். அதைத் தொடர்ந்து, இன்றைய திருச்சபைகளில் செயல்படுத்தப்படும் இந்த வரமானது உண்மையா, பொய்யா என்பதையும் தீர்மானித்துவிடலாம். வேதாகமத்தில் அதன் நோக்கம் என்னவென்பதைப் பார்ப்பதற்கு முன்பாக, பெந்தேகோஸ்தே போதனையாளர்கள் அதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை நாம் சிந்தித்துவிட்டுத் தொடரலாம் என நினைக்கிறேன்.
பெந்தேகோஸ்தே போதனையாளர்களின் விளக்கம்
பெந்தேகோஸ்தே போதனையாளர்கள் அந்நியபாஷையின் பிரதான நோக்கமாகக் குறிப்பிடுவது என்னவென்றால், அது ஒரு விசுவாசிக்கும் தேவனுக்கும் இடையில் பேசப்படும் இரகசியமான, தனிப்பட்ட மொழி என்பதாகும். திருச்சபையில் பேசுவதைவிட, தனி ஜெபத்தில் அவர்கள் தேவனோடு அந்நியபாஷையில் பேசி ஆவியில் நிறைய வேண்டும் என்று சொல்கிறார்கள். சற்று முன்னர்தான், இந்தப்பரவச உளறல் பாஷையானது புறஜாதியாரின் வழக்கம் என்றும், இதற்கும் வேதாகமத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் பார்த்தோம். மேலும், முதல் 19 வசனங்களில், அப்போஸ்தலனாகிய பவுல் அந்நியபாஷையை தேவனுக்கும் தனக்கும் இடையில் ஓர் இரகசியப் பாஷையாகப் பயன்படுத்துவது தவறு என்பதைச் சுட்டிக்காட்டியதையும் நாம் பார்த்தோம். ஆகவே, அந்நியபாஷையைத் தனி ஜெபத்தில் பயன்படுத்த வேண்டும் என்று பெந்தேகோஸ்தே போதனையாளர்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.
இன்னும் சிலர் சொல்லும்போது, அந்நியபாஷையானது தேவனைத் துதிப்பதற்கான மொழி என்று சொல்கிறார்கள். இது ஒரு புதிய விடுதலையோடு, உன்னதமாக தேவனைத் துதிப்பதற்கான வழி என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்களிடம் நான் பின்வரும் கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்: தேவனைத் துதிப்பதற்கான மிகச் சிறந்த இடமும் நேரமும், உன்னதமான துதி ஏறெடுக்கப்படும் இடமும் பரலோகமே ஆகும். அப்படியானால், 1 கொரிந்தியர் 13:8-ல், “அந்நியபாஷைகளானாலும் ஓய்ந்துபோகும்” என்று ஏன் சொல்லப்பட்டிருக்கிறது? அந்நியபாஷையானது தேவனைத் துதிப்பதற்கான உன்னதமான வழி என்றால், தேவனைத் துதித்தல் என்பது பரலோகத்தின் மிக முக்கியமான அம்சமாய் இருக்கையில், அது ஏன் ஓய்ந்துபோக வேண்டும்? ஆகவே, திருவசனத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, பரவச உளறலாகிய இந்த அந்நியபாஷையானது தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சிக்கானது என்றோ, தேவனுடனான இரகசிய பாஷை என்றோ ஏற்றுக்கொள்ள முடியாது.
இரண்டாவதாக, வேறு சிலர் பரிந்துரைக்கும் காரணம் என்னவென்றால், இது ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அல்ல, நற்செய்தி அறிவிப்பதற்காகவே கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதாகும். அதாவது, புதிய ஏற்பாட்டில் அந்நியபாஷை என்பது ஒருவர் தான் முன்னரே அறிந்திராத மொழியில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட வரம் என்று கூறுகிறார்கள். இது ஒரு சிறந்த கருத்தாகத் தோன்றலாம். மிஷனரி பணித்தளத்தில் எங்கோ ஓரிடத்தில் தேவன் ஒருவருக்கு இந்த வரத்தைக் கொடுத்து, தான் அறியாத மொழியைப் பேசும் மக்களிடம் நற்செய்தியைப் பிரசங்கிக்கப் பரிசுத்த ஆவியானவர் உதவி செய்திருக்கலாம்; நான் அதை நிச்சயமாக மறுக்கவில்லை. ஆனாலும், இதற்காகத்தான் இந்த வரம் கொடுக்கப்பட்டது என்று நாம் உறுதிபடக் கூற முடியாது. ஏனென்றால், புதிய ஏற்பாட்டில் எந்தவொரு இடத்திலும் அப்படி ஒரு சம்பவத்தை நாம் காண்பதில்லை.
அப்போஸ்தலர் 2-ஆம் அதிகாரத்தில் அவர்கள் எல்லாரும் அந்நியபாஷையில் பேசியபோது, அங்கிருந்தவர்கள் தத்தமது சொந்த மொழியில் அவர்கள் பேசுவதைக் கேட்டார்கள் என்று நீங்கள் கூறலாம். ஆம், அவர்கள் எல்லாரும் என்ன பேசக் கேட்டார்கள் என்பதைக் கவனியுங்கள்: “தேவனுடைய மகத்துவங்களை” பேசக் கேட்டார்கள். யூதப் பின்னணியில் இருந்து வரும் அந்த எளிய சொற்றொடர், 'பழைய ஏற்பாட்டில் நடந்த வரலாற்றுப்பூர்வமான தேவனுடைய உன்னத செயல்பாடுகளைப் பேசுவதைக்' குறிக்கிறது. இது ஏன் நடந்தது? யூத மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே! அதன் பிறகே, பேதுரு எழுந்து நின்று அவர்களின் சொந்த மொழியில் நற்செய்தியைப் பிரசங்கித்தார். இங்கும் அந்நியபாஷையானது நற்செய்தியைப் பிரசங்கிக்கப் பயன்படுத்தப்படவில்லை; மாறாக, யூத மக்களின் கவனத்தை ஈர்த்து, கூட்டத்தைக் கூட்டுவதற்காகவே பயன்படுத்தப்பட்டது. பெந்தேகோஸ்தே போதனையாளர்களில் பலர் பலவிதமான விளக்கங்களை அளிக்கிறார்கள். சிலர் இது தேவனுடனான இரகசிய பாஷை என்றும், சிலர் இது தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவுகிறது என்றும், வேறு சிலர் இது நற்செய்தி அறிவிக்கப் பயன்படுகிறது என்றும், மற்றும் சிலர் இது தேவனைத் துதிக்கப் பயன்படுகிறது என்றும் சொல்கிறார்கள். ஆனாலும், இவர்களுடைய எந்தவொரு விளக்கமும் வேதாகம நோக்கங்களுடன் பொருந்தவில்லை.
மூன்றாவதாக, அந்நியபாஷையானது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்கான அடையாளம் என்று வாதிடப்படுகிறது; அதை ஏற்றுக்கொண்டால் அதில் பல சிக்கல்கள் எழுகின்றன. 1 கொரிந்தியர் 12:13-ல், “எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு” என்று வாசிக்கிறோம். எத்தனை பேர் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்? 'எல்லோரும்'. இப்போது வசனம் 30-ஐக் கவனியுங்கள்: “எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம்பண்ணுகிறார்களா?” இதற்கான பதில், ‘இல்லை’ என்பதே ஆகும். இப்போது சிந்தித்துப் பாருங்கள்: ‘எல்லோரும் ஞானஸ்நானம் பெற்றார்கள், ஆனால் எல்லோரும் அந்நியபாஷை பேசவில்லை’. இந்த இரண்டு கருத்துகளையும் உங்களால் ஒருபோதும் இணைத்துப் பார்க்க முடியாது.
மேலும், அப்போஸ்தலர் 2:38-ல் பேதுரு தன் பிரசங்கத்தில், “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” என்று கூறினார். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் மனந்திரும்பினார்கள்; அவர்களில் எத்தனை பேர் அந்நியபாஷை பேசினார்கள் என்று தெரியுமா? வேதாகமம் அதைச் சொல்லவில்லை. அப்போஸ்தலர் 4:31-ல், “அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு...” என்று பார்க்கிறோம். இங்கே எல்லாரும் அந்நியபாஷையில் பேசினார்களா? இல்லை, அவர்கள் “தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்”. அப்போஸ்தலர் 2 மற்றும் 4 ஆகிய அதிகாரங்களில் உள்ளவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள்; ஆனால், 4-ஆம் அதிகாரத்தில் அவர்கள் யாரும் அந்நியபாஷையில் பேசவில்லை. ஆகவே, ஒன்றோடொன்று பொருந்தாத இந்த இரு சூழல்களையும் நீங்கள் ஒப்பிடவே முடியாது.
அப்படியானால், இது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்கான அடையாளம் அல்ல, நற்செய்தி அறிவிப்பதற்கும் அல்ல, சுய பக்திவிருத்திக்கும் பயன்படவில்லை, தேவனுடனான தனிப்பட்ட இரகசிய பாஷை என்றும் அல்ல என்றால், அந்நியபாஷை கொடுக்கப்பட்டதன் நோக்கம் தான் என்ன? அதைத்தான் நாம் இப்போது சிந்திக்கப்போகிறோம்.
சிறுபிள்ளைத்தனமாகிய பரவச உளறல் பாஷை
இருபதாம் வசனத்தைக் கவனியுங்கள்: “சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள் (இங்குள்ள கிரேக்க வார்த்தை 5-10 வயதுள்ள 'சிறு பிள்ளைகளைக்' குறிக்கிறது)” – அதாவது, 'உங்கள் சிறுபிள்ளைத்தனத்தை நிறுத்துங்கள்' என்கிறார். மேலும், “துர்க்குணத்திலே குழந்தைகளாயும் (இங்குள்ள கிரேக்க வார்த்தை ஒரு வயதுக்கும் குறைவான 'குழந்தைகளைக்' குறிக்கிறது)” என்று கூறுகிறார். துர்க்குணம் என்பதற்கு ‘kakia’ என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது; அது பொதுவாக ‘தீமை’ என்பதைக் குறிக்கும். “சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்”.
இங்கே பவுல் அவர்களை மிகவும் கடிந்துகொள்கிறார்; அதற்கு முன்னதாக, அவர்களைச் சற்று சாந்தப்படுத்தும் விதமாக “சகோதரரே” என்று அழைக்கிறார். அவருடைய இந்த எச்சரிப்பு, கொரிந்தியர்கள் உண்மையில் அந்நியபாஷையைத் தவறான முறையில், தீமைக்கென்று பயன்படுத்தியதைச் சுட்டிக்காட்டுகிறது. அதாவது, அவர்கள் புத்தியிலே குழந்தைகளைப் போன்று (புத்தியில்லாமல்) நடந்துகொண்டார்கள். வேறுவகையில் சொல்லவேண்டுமென்றால், சத்தியத்தைச் சீரிய முறையில் அறிந்துகொள்ளும் அளவிற்கு அவர்கள் இன்னும் வளரவில்லை. அவர்கள் எபேசியர் 4:14-ல் சொல்லப்பட்டுள்ளது போல, “தந்திரமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிருந்தார்கள்”.
அவர்கள் தங்கள் அறிவைப் பயன்படுத்தவில்லை. 1 கொரிந்தியர் 14:14 சொல்கிறபடி, அவர்களது சிந்தனை பயனற்றதாகவே இருந்தது. அவர்கள் சரியானதைச் சிந்திக்கவில்லை, வேதத்திற்கு அடுத்தவைகளைச் சிந்திக்கவில்லை, தேவனிடமிருந்து பெற்ற வெளிப்பாடுகளைக் குறித்துக்கூட அவர்கள் சிந்திக்கவில்லை. ஆகவே, புத்தியில் தேறினவர்களைப் போல இருப்பதற்குப் பதிலாகக் குழந்தைகளைப் போல் இருந்தார்கள். அவர்கள் முதிர்ச்சியடைந்தவர்களாக, தேவனுடைய சத்தியத்தைத் தங்கள் மனதில் பதித்தவர்களாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் தீமையிலும் துர்க்குணத்திலும் குழந்தைகளாய் இராமல், புத்தியில் தேறினவர்களாய் இருக்க வேண்டும் என்பதே பவுலின் நோக்கம்.
“இதன்மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்?” என்று நீங்கள் கேட்கலாம். பிறந்த குழந்தையானது யாருக்கும் எதிராக எந்தவொரு துர்க்குணத்தையும் தீமையையும் கொண்டிருப்பதில்லை. பிறந்த குழந்தை அன்பானது, அழகானது, மிருதுவானது, மென்மையானது. “நீங்களும் ஏன் ஒருவரையொருவர் அப்படி நடத்தக் கூடாது? நீங்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து செயல்படும்போது, தீமையில் குழந்தைகளைப் போலவும், புத்தியிலோ குழந்தைகளைப் போல் இராமல் தேறினவர்களைப் போலவும் ஏன் செயல்படக் கூடாது?” என்று அப்போஸ்தலன் கேட்கிறார்.
ஏசாயாவின் எச்சரிப்பு
அவர்களின் கவனத்தை ஈர்த்த பிறகு, பவுல் அந்நியபாஷையின் நோக்கத்தைக் குறிப்பிடுகிறார். வசனங்கள் 21, 22: “மறுபாஷைக்காரராலும், மறுவுதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே. அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல்் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். அந்நியபாஷை யாருக்கு அடையாளமாக இருக்கவில்லை? 'விசுவாசிகளுக்கு'. அந்நியபாஷையானது விசுவாசிகளுக்கு அடையாளமாக இருக்கவில்லை என்பதை வேத வசனத்தில் இருந்து தெளிவாகவும் உறுதியாகவும் அறிந்து கொள்ளுங்கள். இந்தக் கருத்தே 14-ஆம் அதிகாரத்தின் மையக்கருத்து என்று கூடச் சொல்லலாம். இந்த ஒரு கருத்து மட்டுமே, இன்று பரவச உளறலாக அந்நியபாஷை பேசும் எந்தவொரு விசுவாசியையும், தான் பேசும் அந்நியபாஷையின் உண்மைத் தன்மையைக் கேள்வி கேட்க வைக்க வேண்டும். ‘அந்நியபாஷையானது அவிசுவாசிகளுக்கு அடையாளமாக இருக்கிறது’ என்பதையும் உறுதியாக உங்கள் உள்ளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்.
அந்நியபாஷை எதற்கு அடையாளமாக இருக்கிறது என்பதற்கு மூன்று காரியங்களைக் குறித்துக் கொள்ளுங்கள்:
- அது சாபத்தின் அடையாளம்.
- அது ஆசீர்வாதத்தின் அடையாளம்.
- அது அதிகாரத்தின் அடையாளம்.
இவைதான் உண்மையான அந்நியபாஷை வரத்தின் முக்கிய நோக்கங்கள். முதலில், அது ஏன் சாபத்தின் அடையாளம் என்று பார்ப்போம். நான் இப்படிச் சொல்வது உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம்; ஆனால், அப்படித்தான் அது இங்கு எழுதப்பட்டுள்ளது.
வசனம் 21-ஐக் கவனியுங்கள். இது ஏசாயா 28: 11, 12-ஆம் வசனங்களில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. “பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்” —இந்த வேத பகுதியில் ‘ஜனத்தார்’ என்பது இஸ்ரவேல் ஜனத்தைக் குறிக்கிறது— “இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்”. பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஏசாயா சொன்ன வார்த்தைகளைச் சுட்டிக்காட்டிவிட்டு அவர் சொல்லுகிறார் (வச 22): “அப்படியிருக்க” —அதாவது, ஏசாயாவின் வார்த்தைகள் உண்மையெனில், ஏசாயாவின் நாட்களில் அந்நியபாஷை அதற்குப் பயன்படுத்தப்பட்டது எனில், அந்நியபாஷையானது— அப்போது மட்டுமல்ல, இப்போதும் —“விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது” என்று பழைய ஏற்பாட்டின் வார்த்தைகளில் இருந்து தனது முடிவைத் தெரிவிக்கிறார்.
இப்போது மற்றுமொரு சுவாரசியமான காரியத்தை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். 22-ஆம் வசனத்தில் அந்நியபாஷை ‘அடையாளமாக’ (அடையாளம் + ஆக) இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு கிரேக்கத்தில் ‘eis’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது; அதற்கு ‘நோக்கம்’ என்று பொருள். ஆகவே, ‘அடையாளமாக’ என்பதை குறிக்கும் கிரேக்க வார்த்த்தோடு பொருத்திப் பார்க்கும்போது, இங்கே அந்த வார்த்தை தற்செயலாகப் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, அதன் ‘நோக்கமே அடையாளம்’ என்று பொருள்படும் விதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தைப் பயன்பாடு தற்செயலானது அல்ல.
உண்மையில், ‘அடையாளமாக’ என்ற பதம் கிரேக்க பழைய ஏற்பாட்டில் (Septuagint) பத்து முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் அது ‘நோக்கம்’ என்பதையே அர்த்தப்படுத்துகிறது. அதாவது, அந்நியபாஷையின் நோக்கம், அது அவிசுவாசிகளுக்கு அடையாளமாகக் கொடுக்கப்பட்டது என்பதாகும். எந்த அவிசுவாசிகள்? 21-ஆம் வசனத்தில் ‘இந்த ஜனம்’ என்னும் பதம் ‘இஸ்ரவேல் ஜனங்களை’ மட்டுமே குறிக்கிறது. ஆகவே, இது இஸ்ரவேலிலுள்ள அவிசுவாசிகளுக்கு ஒரு அடையாளமாகக் கொடுக்கப்பட்டது. இதை அப்படியே கொரிந்து சபையிலுள்ள விசுவாசிகளுக்குப் பவுல் பிரயோகிக்கிறார்.
சரி, இப்போது ஏசாயாவில் என்ன அர்த்தத்தில் இந்த வசனம் சொல்லப்பட்டுள்ளது என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். ஏசாயா 28-ஆம் அதிகாரத்திற்கு நீங்கள் சென்றால், அங்கே யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா தெற்கு ராஜ்யத்தை அரசாண்டு கொண்டிருக்கிறார். இது தோராயமாகஆம் ஆண்டு. இதற்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் (கி.மு. 722-ல்), இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யம் தங்களுடைய அவிசுவாசம் மற்றும் விசுவாசத் துரோகத்தால் அசீரியர்களால் அழிக்கப்பட்டது. கி.மு. 722-ல், தேவன் மிகப் பயங்கரமான நியாயத்தீர்ப்பை வடக்கு ராஜ்யத்தின் மேல் அனுப்பினார்.
இப்போது கி.மு. 705-ல், தெற்கு ராஜ்யமும் மிக மோசமாகத் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தது. "அவிசுவாசம் மற்றும் விசுவாசத் துரோகத்தினால் வடக்கு ராஜ்யத்திற்கு என்ன நடந்ததோ, அதே கதிதான் உங்களுக்கும்" என்று தெற்கு ராஜ்யத்தைத் தன்னுடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் மூலம் தேவன் எச்சரிக்கிறார். ஏசாயா 28-ஆம் அதிகாரத்தின் முதல் 15 வசனங்களில் சொல்லப்பட்டுள்ள செய்தி இதுதான். வடக்கு ராஜ்யம் பெற்றுக்கொண்ட அதே தண்டனை உங்களுக்கும் வரும் என்று தெற்கு ராஜ்யமாகிய யூதாவுக்குத் தீர்க்கதரிசி மூலம் வந்த எச்சரிப்பு இது.
இப்போது ஏசாயா இந்தப் பிரச்சினையை எப்படி அணுகுகிறார் என்று பார்க்கலாம். அவர் இஸ்ரவேலின் தலைவர்களும், தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும் குடியில் வெறித்திருக்கக் காண்கிறார். வசனம் 7-ல்: “இவர்களும் திராட்சரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழிதப்பிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட
8-ஆம் வசனத்தில் காணப்படும் அருவருப்பைப் பாருங்கள்: “போஜனபீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை”. உண்மையில், அவர் அவர்களைக் குடிவெறியில் மயங்கி வாந்தி எடுத்தவர்களாகக் காண்கிறார். அவர்கள் களியாட்டத்தில் இருக்கையில், அவர்களை மிகக் கடுமையாகக் கடிந்துகொண்டு, வரப்போகிற நியாயத்தீர்ப்பைக் குறித்து எச்சரிக்கை கொடுக்கிறார். அவர்கள் அதற்கு எப்படி எதிர்வினையாற்றினார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்களோ ஏசாயாவைப் பரியாசம் செய்து, திட்டி, வசைபாடி, கேவலப்படுத்தினார்கள்.
ஒன்பதாம் வசனத்தில் அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று கவனியுங்கள்: “அவர் (ஏசாயா) யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே” —ஏஅப்படிச் சொல்கிறார்கள்? அவர் எப்போதும்— “கற்பனையின்மேல் கற்பனையும் கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள்”. அதாவது, "அவர் சொன்னதையே மீண்டும் மீண்டும் பலமுறை நம்மிடம் சொல்கிறார்; ஒருவேளை அவர் நம்மைப் பிள்ளைகள் என்று நினைத்திருக்க வேண்டும்" என்று கூறி அவரைப் பரியாசம் செய்கிறார்கள். அவர்கள் ஏசாயாவின் மென்மையான மனப்போக்கை மதிக்காமல், அவரது போதனைகள் குழந்தைத்தனமானது என்று சொல்லி அவரை ஏளனம் செய்தார்கள். "ஒரே செய்தியை மீண்டும் மீண்டும் சொல்வதற்கு நாங்கள் என்ன குழந்தைகளா?" என்று கேட்டார்கள்.
ஏசாயாவின் இந்தச் செய்தியை அவர்கள் காது கொடுத்துக் கேட்கவில்லை. அதனால்தான் வசனம் 11-ல் அவர் தேவனுக்காகப் பேசுகிறார்: “பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்”.
இப்போது தேவன் சொல்கிறார்: ‘ஏசாயாவின் குழந்தையைப் போன்ற, திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட எளிமையான செய்தியை நீங்கள் இனி கேட்க மாட்டீர்கள். நீங்கள் இனி புரிந்துகொள்ள முடியாத அந்நிய மொழியில் உங்களுடன் பேசப் போகிறேன்’. தேவன் என்ன சொன்னார் என்றால், உளறும் பாஷை பேசும் பாபிலோனியர்கள் வந்து உங்கள் பட்டணத்தைச் சூழ்ந்து, உங்கள் தேசத்திலிருந்து உங்களை வெளியேற்றி, உங்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டி, அழித்து, தீக்கிரையாக்குவார்கள். அவர்களுக்குத் தெரியாத, புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமான பாபிலோனியர்களின் அந்த அந்நிய மொழியை அவர்கள் கேட்கும்போது, தேவனுடைய நியாயத்தீர்ப்பு அவர்கள் மீது வந்திருக்கிறது என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். அவர்களது அவிசுவாசத்தினாலும் விசுவாசத் துரோகத்தினாலும் தேவனுடைய இந்த பயங்கரமான நியாயத்தீர்ப்பு கி.மு. 588-ல் நிறைவேறியது.
இது தேவனிடத்திலிருந்து வந்த முதல் எச்சரிக்கை அல்ல. இதற்கு முன்னரே கி.மு. 15-ஆம் நூற்றாண்டில், உபாகமம் 28:49, 50-ல், “உனக்குத் தெரியாத பாஷையைப் பேசுகிறதுமான ஜாதியை வெகுதூரத்திலுள்ள பூமியின் கடையாந்தரத்திலிருந்து கர்த்தர் உன்மேல் கழுகு பறக்கும் வேகமாய் வரப்பண்ணுவார்” என்று எழுதப்பட்டுள்ளது. இஸ்ரவேலர் தாங்கள் அறிந்திராத மொழியைக் கேட்கும்போது, தேவனுடைய நியாயத்தீர்ப்பு வந்திருக்கிறதை அறிந்துகொள்ளுங்கள் என்று கி.மு. 15-ஆம் நூற்றாண்டிலேயே தேவன் அவர்களை எச்சரித்திருந்தார்.
கி.மு. 8-ஆம் நூற்றாண்டிலும், நீங்கள் அறிந்திராத மொழியைக் கேட்கும்போது அது தேவனுடைய நியாயத்தீர்ப்பு என்று ஏசாயாவின் மூலம் தேவன் எச்சரித்தார். எரேமியா தீர்க்கதரிசியின் மூலமும், “இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, தூரத்திலிருந்து நான் உங்கள்மேல் ஒரு ஜாதியைக் கொண்டுவருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பலத்த ஜாதி, அது எரே 5:15) என்று எச்சரித்திருந்தார். இஸ்ரவேலர் நியாயந்தீர்க்கப்படும்போது அங்கே அவர்களுக்கு ஒரு அடையாளம் இருக்கும்; அவர்கள் அறிந்திராத, புரிந்துகொள்ள முடியாத ஒரு மொழியைக் கேட்பார்கள் என்பதே அந்த அடையாளம் என்று அவர்களுக்குத் தேவன் மிகத் தெளிவாகவே உணர்த்தியிருந்தார்.
அந்நியபாஷை: அவிசுவாசிகளுக்கு ஒரு அடையாளம்
இப்போது மீண்டும் நாம் 1 கொரிந்தியர் நிருபத்திற்கு வருகிறோம். இங்கே அப்போஸ்தலனாகிய பவுல் பழைய ஏற்பாட்டு வசனத்தை மேற்கோள் காட்டிப் பேசும்போது, ‘ஏசாயா சொன்னது போல, மோசே சொன்னது போல, எரேமியா சொன்னது போல, அந்நியபாஷையை நீங்கள் பேசக் கேட்கும்போது, அவிசுவாசிகள் மீது தேவன் நியாயத்தீர்ப்பைக் கொண்டு வரப்போகிறார் என்பதற்கான அடையாளமாக அதை அறிந்துகொள்ளுங்கள்’ என்று கூறுகிறார்.
‘அப்போஸ்தலனாகிய பவுல் வாழ்ந்த காலத்தில் இந்த அடையாளம் எதை அர்த்தப்படுத்தியது?’ என்று நீங்கள் கேட்கலாம். பெந்தெகோஸ்தே நாளில் அவர்கள் பற்பல பாஷைகளில் பேசத் தொடங்கியபோது, தேவனுடைய நியாயத்தீர்ப்பு சமீபத்திருக்கிறது என்பதை அங்கே கூடியிருந்த ஒவ்வொரு யூதரும் அறிந்திருப்பார்கள். உங்களுக்குத் தெரியுமா? அதற்குப் பிறகு வெறும் 30 ஆண்டுகளுக்குள் ரோமப் பேரரசு உள்ளே புகுந்து எருசலேமைத் தரைமட்டமாக்கி, யூத மத அமைப்பையும் அழித்தது. அன்று ஒழிந்துபோன பலி செலுத்தும் முறைமை, அதன் பிறகு மீண்டும் தொடங்கப்படவே இல்லை. தேவனுடைய நியாயத்தீர்ப்பு தங்கள் மீது வந்திருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள்.
கி.மு. 722-ல், வடக்கு ராஜ்யத்தின் அவிசுவாசத்தினாலும் விசுவாசத் துரோகத்தினாலும் தேவனுடைய நியாயத்தீர்ப்பு அவர்கள் மீது வந்தது உண்மையானால்; கி.மு. 588-ல், தெற்கு ராஜ்யத்தின் அவிசுவாசத்தினாலும் விசுவாசத் துரோகத்தினாலும் தேவனுடைய நியாயத்தீர்ப்பு அவர்கள் மீது வந்தது உண்மையானால்; தேவனுக்கு முதுகைக் காட்டி, தங்கள் மேசியாவைச் சிலுவையில் அறைந்த அந்தத் தேசத்தின் மீதும் முதல் நூற்றாண்டில் தேவனுடைய நியாயத்தீர்ப்பு வரும் என்பதை நம்புங்கள்; அது அப்படியே வந்தது. கி.பி. 70-ல் எருசலேம் அழிக்கப்பட்டபோது, அந்நியபாஷை கொடுக்கப்பட்டதன் ஒட்டுமொத்த நோக்கமும் நிறைவேறி, அது திருச்சபையின் பயன்பாட்டிலிருந்து மறைந்து போனது. விசுவாசிக்கும் கிறிஸ்தவனுக்காக அந்நியபாஷையை தேவன் ஒருநாளும் கொடுக்கவில்லை. அது யாருக்குக் கொடுக்கப்பட்டது? தேவனுடைய நியாயத்தீர்ப்பை நம்பாத ‘அவிசுவாசிகளான யூதர்களுக்கு’, தேவன் பேசுகிறார் என்பதன் அடையாளமாகவே அது கொடுக்கப்பட்டது.
(லூக்கா 13:35)-ல் இயேசு, “இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்” என்றார். இன்னும் ஒருபடி மேலே சென்று, (லூக்கா 21:20)-ல், “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்” என்றும், வசனம் 24-ல், “பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்” என்றும் கூறினார்.
நியாயத்தீர்ப்பு வருகிறது என்பதை இயேசு மீண்டும் மீண்டும் தம்மடைய போதனைகளில் எச்சரித்தார். அப்போஸ்தலர்களின் ஊழியக் காலத்திலேயே அந்த நியாயத்தீர்ப்பு எருசலேமின் மேல் வந்துகொண்டிருந்தது. இயேசு நியாயத்தீர்ப்பைப் பிரசங்கித்தார், அப்போஸ்தலர் 2-ஆம் அதிகாரத்தில் அது ஓர் அடையாளமாக வெளிப்படுத்தப்பட்டது. அதனால்தான், அப்போஸ்தலனாகிய பவுல் ஏசாயா 28-ஆம் அதிகாரத்தை மேற்கோள்காட்டி, ‘நீங்கள் செவிகொடுக்க மாட்டீர்கள்’ என்று கூறுகிறார்.
அந்நியபாஷையின் இந்த நோக்கமானது அப்போஸ்தலர் நடபடிகள் புஸ்தகம் முழுவதும் செயல்படுவதை நாம் காணலாம். அப்போஸ்தலர் 2-ஆம் அதிகாரத்தில் அவிசுவாசிகளான யூதர்கள் பலர் அங்கே இருந்தார்கள். பின்னர், அந்நியபாஷை பேசப்பட்ட மற்ற தருணங்களான 8, 10, 19 ஆகிய அதிகாரங்களில், அவிசுவாசிகளான யூதர்கள் விசுவாசிகளாக மாறினாலும், மீண்டும் மீண்டும் இதே நிகழ்வு நடைபெறுவதைக் கண்ட மற்ற யூதர்கள், தாங்கள் கண்டவற்றையும் நடந்தவற்றையும் தங்களின் சக யூதர்களிடம் நிச்சயம் சொல்லியிருப்பார்கள். அப்போஸ்தலர் 8, 10, 19 ஆகிய அதிகாரங்களில் எங்கெல்லாம் அந்நியபாஷை பேசப்பட்டதோ, அங்கெல்லாம் விசுவாசிக்கும் யூதர்களும் இருந்தார்கள். அவர்கள் திரும்பிச் சென்று, தாங்கள் கண்டதை நிச்சயமாக மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டிருப்பார்கள். ஆகவே, இது சபையின் புதிய அனுபவங்களைப் பெந்தெகோஸ்தே நிகழ்வோடும் யூதர்களோடும் சம்பந்தப்படுத்துவது மட்டுமல்லாமல், தேவன் உண்மையாகவே நியாயந்தீர்க்கப் போகிறார் என்பதை உறுதிப்படுத்தவும் நடைபெற்றது.
ஆகவே, முதலாவதாக இது சாபத்தின் அடையாளம்; அதே நேரத்தில், இது ஓர் ஆசீர்வாதத்தின் அடையாளமும்கூட. பெந்தெகோஸ்தே நாளில் காணப்பட்ட அந்நியபாஷை நமக்கு உணர்த்துவது என்னவென்றால்: தேவன் இனி ஒரே ஒரு தேசத்தின் மூலமாக மட்டும் செயல்படப் போவதில்லை; தேவன் இனி ஒரே ஒரு மொழியின் மூலமாக மட்டும் பேசப்போவதில்லை. தேவனுடைய நாமம் உலகமெங்கும் செல்லப்போகிறது; அதன் மூலமாக உலகெங்கிலும் அவர் தம்முடைய சபையை ஏற்படுத்தப்போகிறார்.
அந்நியபாஷை - சாபத்தின் அடையாளம்
அவர்கள் அன்று பற்பல பாஷைகளில் பேசியது, இஸ்ரவேலின் தனித்துவம் முடிந்துவிட்டது என்பதையும், உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் நான் பேசப் போகிறேன் என்பதையும், பழைய ஏற்பாட்டில் மறைபொருளாக இருந்த திருச்சபையை இப்போது ஏற்படுத்தப் போகிறேன் என்பதையும் அறிவிக்கவே தேவன் அதை ஏற்படுத்தினார். எனவே, அந்நியபாஷையானது பிரதானமாக இஸ்ரவேலின் மீதான தேவனுடைய சாபத்தின் அடையாளமாகும்.
அந்நியபாஷை - ஆசீர்வாதத்தின் அடையாளம்
அந்நியபாஷையின் மூலமாக அகில உலகத்திற்கும் வரும் ஆசீர்வாதத்தையும் நாம் கவனிக்க வேண்டும். முரட்டாட்டமுள்ள மக்கள் கூட்டத்தினரால் கிறிஸ்து நிராகரிக்கப்பட்டதால், கிறிஸ்து தம்முடைய கரங்களை முழு உலகத்திற்கும் நீட்டினார். இஸ்ரவேல் மக்கள் மீதான சாபத்தின் மறுபக்கமாக, உலக மக்களுக்கான ஆசீர்வாதத்தின் அடையாளமாக இது மாறியது. ரோமர் 11-ல் சொல்லப்பட்டுள்ளதைப் போல, ‘இஸ்ரவேல் மக்களின் தள்ளிவிடப்படுதல், உலகத்தின் ஐஸ்வரியமாக மாறியது’. எருசலேம் அழிக்கப்பட்டது, இஸ்ரவேல் தள்ளிவிடப்பட்டது; தேவன் நம்மைத் தெரிந்துகொண்டதால் நாம் அதன் பயனாளிகளாக மாறினோம்.
அந்நியபாஷை - அதிகாரத்தின் அடையாளம்
மூன்றாவதாக, இதோடு பின்னிப்பிணைந்திருக்கிறபடி, இது தேவன் கொடுத்த ஓர் அதிகாரம். வரலாற்றின் இந்த மாபெரும் மாற்றத்தைப் பிரசங்கித்த தூதுவர்கள் யார்? சாபத்தையும் ஆசீர்வாதத்தையும் பிரசங்கித்த தேவனுடைய மனிதர்கள் யார்? இந்த ஆசீர்வாதம் உலகம் முழுவதற்கும் வந்ததை அறிவித்தவர்கள் யார்? அவர்கள் அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளுமே அன்றி வேறு யாரும் அல்ல. அவர்கள் தேவனுடைய சத்தியத்தைத் தான் பேசுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தி அங்கீகரிக்கும் விதமாக, இந்த அந்நியபாஷைகளைப் பேசும் வரத்தைத் தேவன் அவர்களுக்குக் கொடுத்தார். தேவன் கொண்டுவந்த இந்த மாற்றங்களைப் பார்த்த யூதர்களுக்கு, இது பேரதிர்ச்சியாகவும், இடியாகவும், புரிந்துகொள்ள முடியாததாகவும், அதே நேரத்தில் ஆச்சரியமளிக்கக் கூடியதாகவும் இருந்திருக்கும். எனவே, தேவனே இதைச் செய்தார் என்பதை மீண்டும் உறுதிப்படுத்த ஓர் அடையாளம் தேவைப்பட்டது; அதனால்தான் இப்படிப்பட்ட பாஷைகளில் பேசும் வரத்தைத் தேவன் அவர்களுக்கு அருளினார்.
(1 கொரிந்தியர் 14:18)-ல் அப்போஸ்தலனாகிய பவுல், “உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன்” என்கிறார். பவுலுக்கு இருந்த மற்ற வரங்களைப் போல, இதுவும் அவர் ஓர் அப்போஸ்தலர் என்பதை உறுதிப்படுத்தும் அடையாளமாக இருந்தது. மேலும் அவர், (2 கொரிந்தியர் 12:12)-ல் “அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள், எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே” என்றும் கூறுகிறார். அந்த குறிப்பிட்ட காலத்தில், தேவன் கொண்டுவந்த மாற்றத்தைப் பிரசங்கித்தவர்களுக்குத் தேவன் கொடுத்த அதிகாரத்தின் அடையாளமாகவும் அது விளங்கியது.
சுருங்கக்கூறின், அந்நியபாஷையின் நோக்கம்: ‘சாபம், ஆசீர்வாதம், அதிகாரம்’ ஆகியவற்றுடன் நிறைவடைகிறது. இங்கே தனிப்பட்ட ஜெப மொழியாகவோ அல்லது நற்செய்தி அறிவிக்கும் ஒரு பொதுவான வழியாகவோ இதை நாம் பார்ப்பதில்லை. எருசலேம் அழிக்கப்பட்ட ஒரு நாள் வந்தது; புதுயுகத்திற்கான மாற்றம் வந்தது; திருச்சபை பிறந்தது; அதன் பிறகு இந்த வரம் தேவைப்படவில்லை.
உதாரணமாக, நான் சாலையில் திருச்சிக்குச் சென்றுகொண்டிருக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். ஒரு இடத்தில் 'திருச்சி 300 கி.மீ' என்ற அறிவிப்புப் பலகையை (அடையாளத்தை) காண்கிறேன். பிறகு '200 கி.மீ', அதன் பின் '100 கி.மீ' என்ற அறிவிப்பைக் காண்கிறேன். ஆனால், திருச்சிக்கு வந்து சேர்ந்த பிறகு நான் எந்தவொரு அறிவிப்புப் பலகையையும் காண்பதில்லை. ஏனென்றால், நான் திருச்சிக்கு வந்துவிட்டேன்; இனி அந்த அடையாளம் எனக்குத் தேவையில்லை.
தீர்க்கதரிசனம் விசுவாசிகளுக்கு அடையாளம்
வசனம் 22-ல், “தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது” என்று பவுல் குறிப்பிடுகிறார். தீர்க்கதரிசனமானது, திருச்சபை யுகத்தில் விசுவாசிகளுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்குப் பயன்படக்கூடியது.
மூன்றாம் வசனத்தில், “தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ, மனுஷருக்குப் பக்திவிருத்தியும் புத்தியும் ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்” என்றும், நான்காம் வசனத்தில், “தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்” என்றும் காண்கிறோம். மேலும், முதல் வசனத்தில் “விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் என்ன? தேவனுடைய வார்த்தையை மட்டும் பிரசங்கியுங்கள் என்பதுதான்.
நீங்கள் கொரிந்து சபைக்குச் சென்றிருந்தீர்கள் என்றால், நாம் முன்னரே பார்த்தபடி, அங்கே எல்லா வகையான சுயநலமான, சுய மதிப்பை உயர்த்திக் காட்டும் மாயலோக பாஷைகளைக் கேட்டிருப்பீர்கள். அதைத்தான் பவுல், "அவை எல்லாவற்றையும் நிறுத்துங்கள்" என்று கூறுகிறார். அது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, குறிப்பிட்ட காலகட்டத்தில், குறிப்பிட்ட இலக்கை நிறைவேற்றுவதற்காகக் கொடுக்கப்பட்டது. எனவே, நீங்கள் கூடிவரும்போது தேவனுடைய சத்தியத்தைப் பிரசங்கிக்கும் தீர்க்கதரிசனத்தை நாடுங்கள்; முக்கியமாக, தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கியுங்கள் என்று பவுல் கூறுகிறார்.
அந்நியபாஷையின் இன்றைய நிலை
சரி, "இன்று அந்நியபாஷையின் வரத்தால் எந்தப் பயனும் இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்களா?" என்று கேட்டால், ஆம், அந்நியபாஷை வரம் இன்று நமக்குத் தேவையில்லை. ஒருவேளை இந்த வரம் இன்று நம்முடைய திருச்சபைகளில் காணப்படும் என்றால், அது அன்று கொண்டிருந்த அதே நோக்கத்தையே இன்றும் கொண்டிருக்க வேண்டும். அதாவது, தேவன் இஸ்ரவேல் தேசத்திற்கு மாத்திரமல்ல, உலகம் முழுவதற்கும் நற்செய்தியை அனுப்பி, எந்தப் பேதமும் இன்றி எல்லோரையும் இரட்சிக்கிறார் என்ற செய்தியைச் சொல்ல வேண்டும். ஆனால், இந்தச் செய்தியைத் தேவன் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லி முடித்துவிட்டார். அதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். இதைத் தவிர, நமக்கு வேறெந்த விளக்கமும் தகவலும் தேவையில்லை; அது முடிந்துவிட்டது.
சபையில் அந்நியபாஷையின் நோக்கம்
இப்போது சபையாகக் கூடிவரும்போது அதன் நோக்கம் என்ன என்பதைப் பவுல் விளக்குகிறார். வசனம் 23: “ஆகையால்” – கவனித்துப் பாருங்கள், அந்நியபாஷையின் நோக்கம் இப்படி இருக்க – “சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது” (இங்கே உண்மையான அந்நியபாஷையின் வரத்தைக் குறிப்பிடுகிறார்) - என்ன நடக்கும் என்று தெரியுமா? - “கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?”
ஏன் அப்படிச் சொல்வார்கள்? அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன:
- முதலாவது காரணம், அவன் ஒரு புறஜாதியான்; மேலே நாம் குறிப்பிட்டபடி, இது ஒரு அடையாளம் என்பதை அவன் அறியமாட்டான்.
- இரண்டாவது காரணம், அந்த விசுவாசி ஒரு யூதனாக இருந்தாலும், கொரிந்து சபையில் எல்லாரும் அந்நியபாஷை பேசி கூச்சலும் குழப்பமும் விளைவிப்பதால், அது அவனுக்கும் எந்த அர்த்தத்தையும் தராது.
ஆகவே, ஓர் அவிசுவாசியான புறஜாதியான் கொரிந்து சபைக்குள் நுழையும்போது, "இந்த மக்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டும்" என்றே சொல்லுவான். இதற்கு ‘mainomai’ என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் அர்த்தம் ‘வெறிகொண்டவன்’ என்பதாகும். பிளாட்டோ இதைக் குறிப்பிடும்போது, "புறஜாதியார் தங்கள் தேவர்களுடன் ஐக்கியம்கொண்டு பரவச நிலை அடைந்து, உளறிப் பேசுவதைக் குறிக்கப் பயன்படும் வார்த்தை இது" என்கிறார். எனவே, அவிசுவாசியான புறஜாதியானோ அல்லது யூதனோ உங்கள் சபைக்குள் நுழையும்போது, இதற்கும் தியானாள் கோயிலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றுதான் சொல்வார்கள்.
"இது அவர்களுக்கு ஓர் அடையாளமாகச் செயல்பட வேண்டுமே?" என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாகச் செயல்பட வேண்டும்; ஆனால், உண்மையான அந்நியபாஷை வரம்கூடத் தவறாகப் பயன்படுத்தப்படும்போது, அது எந்த அர்த்தத்தையும் கொடுப்பதில்லை. கவனித்தீர்களா? இந்த குறிப்பிட்ட வரமானது ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட முறையில், சம்பந்தப்பட்ட நபர் அருகில் இருக்கும்போது, அந்தத் தனித்துவமான நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால், அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.
வசனங்கள் 24, 25-ல், “எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான். அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப் பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்கு
இங்கே உள்ள வரிசையைக் கவனியுங்கள்:
- முதலில், அவன் பாவி என்று ‘உணர்த்தப்பட்டு’, தான் குற்றவாளி என்பதை ஒப்புக்கொள்வான்.
- அதன்பிறகு, அவன் ‘நிதானிக்கப்படுவான்’; அதாவது, தன் இருதயத்தில் தான் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப் படுவதை உணர்வான்.
- அதன் தொடர்ச்சியாக, உடனடியாக அவனுடைய இருதயத்தின் ரகசியங்கள் வெளியரங்கமாகும்.
- தன்னுடைய உண்மையான நிலைமையை அறிந்துகொண்ட அவன், தன் சுயத்தை வெறுத்து, முகங்குப்புற விழுந்து, "உங்கள் மத்தியில் உள்ள உண்மையான தேவனை நான் கண்டுகொண்டேன்" என்று அறிக்கையிடுவான்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கித்தால், அதன் விளைவாக உண்டாகும் உண்மையான மனந்திரும்புதலைக் காண்பீர்கள் என்று பவுல் கூறுகிறார்.





