இதுவரை நாம் வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய சித்தத்தைக் குறித்து ஐந்து காரியங்களைப் பார்த்திருக்கிறோம். அவையாவன: இரட்சிக்கப்படுதல், ஆவியில் நிறைந்திருத்தல், பரிசுத்தமுள்ள வாழ்க்கை, சாட்சியுள்ள வாழ்க்கை மற்றும் உங்கள் இருதயத்தின் மனப்போக்கு. இவை வேதவசனத்தின் அடிப்படையில் சரியாக இருக்குமென்றால், நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். இதெல்லாம் சரிதான்; இவையெல்லாம் மற்றவர்கள் சொன்னதுதான். ஆனால், என்னைப் பற்றி நீங்கள் பேசவே இல்லையே. 'நான் யாரைத் திருமணம் செய்வது?', 'எந்தக் கல்லூரியில் என்ன படிப்பைப் படிப்பது?', 'எந்த நிறுவனத்தில், எந்த வேலையில் சேருவது?' போன்ற என்னுடைய தனிப்பட்ட கேள்விகளுக்கு இது பதில் தரவில்லையே என்று நீங்கள் கேட்கலாம். அதைத்தான் இப்பொழுது நாம் பார்க்கப்போகிறோம். இதை நீங்கள் நிச்சயம் விரும்புவீர்கள்.
நீங்கள் 'உண்மையாகவே' இரட்சிக்கப்பட்டிருந்தால், 'உண்மையாகவே' ஆவியில் நிறைந்திருந்தால், 'உண்மையாகவே' பரிசுத்தமாய் வாழ்ந்தால், 'உண்மையாகவே' சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்தால், தேவனைக் குறித்த உங்கள் இருதயத்தின் மனப்போக்கு 'உண்மையாகவே' சரியாக இருந்தால் (இவற்றில் 'உண்மையாகவே' என்ற வார்த்தையை அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள்), இப்போது உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துபவர் பரிசுத்த ஆவியானவரே. இனி வாழ்வது நீங்களல்ல, கிறிஸ்துவே உங்களில் வாழ்கிறார். அப்படியானால், உங்கள் விருப்பங்களும் தெரிந்துகொள்ளுதல்களும் பரிசுத்த ஆவியானவரால் கட்டுப்படுத்தப்படும். ஏனென்றால், தேவனுடைய வார்த்தைக்கு விரோதமான எந்த ஒன்றையும் நீங்கள் விரும்பப்போவதில்லை! அப்புறம் என்ன? நீங்கள் தேவனுடைய சித்தத்தை அறிந்துவிட்டீர்கள்! இந்த ஐந்து காரியங்களும் உங்கள் வாழ்க்கையில் உண்மையாகவே செயல்படுமானால், நீங்கள் எதையெல்லாம் விரும்புகிறீர்களோ அவைகளே தேவனுடைய சித்தமாக இருக்கும்!
இங்கே உங்களை எச்சரிக்க விரும்புகிறேன்: எதை யார் விரும்பினாலும் அதுவே தேவனுடைய சித்தம் என்று நான் சொல்லவில்லை. வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த ஐந்து தேவனுடைய சித்தத்தின் மீதும் உங்கள் கண்களை வையுங்கள். அவை உங்கள் வாழ்க்கையில் செயல்பாட்டில் இருக்கும்போதும், உங்கள் விருப்பங்கள் உண்மையாகவே இந்த ஐந்து காரியங்களின் அடிப்படையில் அமைந்திருக்கும்போதும், உங்களுடைய அந்த மனதின் விருப்பங்களே தேவனுடைய சித்தமாக மாறும். இது என்னுடைய சொந்த வேத விளக்கமா? இல்லை. சங்கீதம் 37:4, 5-ஐ வாசித்துப் பாருங்கள்: "கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்." கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருத்தல் என்றால் என்ன? நாம் குறிப்பிட்ட இந்த ஐந்து காரியங்களுமே கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருத்தல் என்பதற்கான விளக்கமாகும். இந்த ஐந்து காரியங்களிலும் நீங்கள் உறுதியாயும் உண்மையாயும் இருப்பீர்கள் என்றால், உங்களுக்கான தேவனுடைய வாக்குத்தத்தம் இதுவே: அவர் உங்கள் இருதயத்தின் வேண்டுதல்களை அருளிச்செய்வார்! தேவன் தம்முடைய விருப்பத்தை நிச்சயம் நிறைவேற்றுவார். இந்த தேவனுடைய வார்த்தையின்படி நீங்கள் கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருப்பீர்கள் என்றால், அவர் தம்முடைய விருப்பத்தையே உங்கள் மனதில் வைக்கிறார். அதையே அவர் நிறைவேற்றியும் முடிக்கிறார். தேவனுடைய சித்தத்தை அறிய இதுவே உறுதியான மற்றும் சரியான வழியாகும்.
இப்போது சில உதாரணங்களை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்:
-
உதாரணம் 1: ஒரு மனிதன் தன்னைக் கிறிஸ்தவன் என்று சொல்லுகிறார். நாம் குறிப்பிட்ட அந்த ஐந்து அம்சங்களும் தன்னிடம் உண்மையாகவே இருப்பதாகச் சொல்கிறார். ஆனால், தான் ஒரு அவிசுவாசியை நேசிப்பதாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறுகிறார். இந்த நபரைக் குறித்து நாம் என்ன சொல்லலாம்? கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கத் தேவையான அந்த ஐந்து அம்சங்களும் உண்மையாகவே அவரிடத்தில் இல்லை. 'அந்நிய நுகத்தில் பிணைக்கப்படாதிருங்கள்' என்றும், ஒரு விசுவாசி அவிசுவாசியை எந்தச் சூழ்நிலையிலும் திருமணம் செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ள தேவனுடைய நியமத்திற்கு அவர் கீழ்ப்படியவில்லை. எனவே, அவருடைய இந்த விருப்பம் தேவனுடைய சித்தத்தின்படி அமைந்ததல்ல.
-
உதாரணம் 2: ஒருவர் தன்னைக் கிறிஸ்தவன் என்று சொல்லுகிறார்; அந்த ஐந்து அம்சங்களும் தன்னிடம் உண்மையாகவே இருப்பதாகச் சொல்கிறார். தனக்கு அமெரிக்க தேசத்தில் ஒரு நல்ல வேலை கிடைத்திருப்பதாகவும், அதற்காகத் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டுவிட்டு அமெரிக்காவிற்கு ஐந்து ஆண்டுகள் செல்ல வேண்டும் என்றும் கூறுகிறார். இதுவும் தேவனுடைய சித்தமல்ல. தேவன் குடும்பம் என்ற அமைப்பை ஏற்படுத்தியது, கணவனும் மனைவியும் இணைந்து பிள்ளைகளைக் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தில் வளர்த்தெடுத்து, சாட்சியுள்ள குடும்ப வாழ்க்கை வாழ்வதற்காகவே. கணவன் மட்டும் தனியாக வெளிநாட்டிற்குச் சென்று பணம் சம்பாதிப்பதற்காக அல்ல. 1 கொரிந்தியர் 7-ஆம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள்; கணவனும் மனைவியும் எத்தனை நாட்கள் அதிகபட்சம் பிரிந்திருக்கலாம் என்பதைக் கண்டுகொள்வீர்கள்.
-
உதாரணம் 3: நீங்கள் ஒரு நல்ல வேலையில் இருக்கிறீர்கள், உங்களுக்குச் சொந்தமாக ஒரு வீடும் இருக்கிறது. இப்போது, இன்னுமொரு வீடோ அல்லது இடமோ குறைந்த விலைக்கு வருகிறது என்று வைத்துக்கொள்வோம். இன்னும் சில ஆண்டுகளில் அது நல்ல விலைக்குப் போகும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், இப்போது அந்த வீட்டையோ அல்லது இடத்தையோ வாங்குவது தேவனுடைய சித்தமாக இருக்காது. ஏனென்றால், உங்கள் அடிப்படைத் தேவைகள் சந்திக்கப்பட்ட பிறகு, நீங்கள் உங்கள் சக கிறிஸ்தவ சகோதரனின் தேவையைச் சந்திக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். உங்கள் எதிர்காலத்திற்காக எதையுமே சேர்த்து வைக்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. மாறாக, பூமியிலே உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்பது (அளவுக்கு மீறி சொத்துக்களைச் சேர்ப்பது) தேவனுடைய சித்தமல்ல என்றே சொல்லுகிறேன். அந்தப் பணத்தை ஆத்தும ஆதாயம் செய்யவும், சக விசுவாசியின் தேவைகளைச் சந்திக்கவும் செலவிடுங்கள். ஆதித் திருச்சபை விசுவாசிகள் எப்படித் தங்களுடையதைப் பகிர்ந்துகொண்டார்கள் என்பதை நினைவில் வையுங்கள்.
இதேபோன்று, உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் எடுக்கும் முடிவுகள் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தத்தை மீறாமல் இருக்கிறதா, அது தேவனைப் பிரியப்படுத்துகிறதாக இருக்கிறதா என்பதில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்காக ஜெபம்பண்ணி தேவனுடைய சித்தத்தை அறிய வேறொரு (கள்ளத்) தீர்க்கதரிசியை நாடி ஓட அவசியமில்லை. உங்கள் தெரிந்துகொள்ளுதல்களைக் குறித்துச் சீட்டுப்போட வேண்டிய அவசியமில்லை. வேதப்புத்தகத்தைக் குலுக்கல் சீட்டுபோலப் பயன்படுத்த வேண்டிய அவசியமுமில்லை. நீங்கள் வலதுபுறமோ இடதுபுறமோ சாயும்போது, "வழி இதுவே, இதிலே நடவுங்கள்" என்று சொல்லும் தேவனுடைய சத்தத்தை உங்கள் காதுகள் கேட்கும். "நீ நடக்கவேண்டிய வழியில் உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே" என்று அவர் சொல்லியிருக்கிறார். மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; அவற்றை அவர் ஏற்ற நேரத்தில் சரியாகச் செயல்படுத்துவார்.
பிரியமானவர்களே, இந்த உண்மையை நான் தெரிந்துகொண்டபோது ஒரு மிகப்பெரும் விடுதலையை அடைந்தேன். வேதவாக்கியம் சொல்லுகிறது: "சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்." "குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்." தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்வதில் இதுவே சத்தியமாகும். உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய சித்தத்தைச் செய்ய, கர்த்தர்தாமே உங்களுக்குக் கிருபையளிப்பாராக.





