(எண்ணாகம் 31:14-18): இந்த வேதபகுதியில், மீதியானிய இனத்தைச் சேர்ந்த ஆண்களையும், பெண்களையும், முதியவர்களையும், குழந்தைகளையும் கொல்லும்படி மோசே தனது ஆட்களிடம் உத்தரவிடுகிறார். ஆனால் திருமணமாகாத கன்னிப் பெண்களை உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார். இது அப்பெண்களைக் கற்பழிப்பதற்குத்தானே உயிரோடு காப்பாற்றச் சொல்லுகிறார். இது பெண்களுக்கு எதிரான பாகுபாடு தானே?
மீதியானியர் ஒரு நாடோடிக் கூட்டத்தார் ஆவர். இவர்கள் மோவாப் மக்களுடன் நெருக்கமான தொடர்புடையவர்கள். பாலியல் மற்றும் ஒழுக்கக்கேடான நடத்தையின் மூலமாக இஸ்ரவேலரைக் கவர்ந்து, அவர்களை உருவ வழிபாட்டிற்குள் தள்ளியவர்கள் இவர்கள். எனவே இவர்களைப் பழிவாங்கும் வகையில் அவர்களைக் கொல்ல வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார் (எண். 25). இஸ்ரவேலர்கள் மோவாபியர்களின் பலிகளில் கலந்துகொண்டார்கள், அவர்கள் மத்தியில் அவர்களுடைய பலியின் உணவைச் சாப்பிட்டு, பாகால் உட்பட மோவாபியர்களின் பல தெய்வங்களை வணங்கினர் (எண் 25:2,3). இதனிமித்தமாக இஸ்ரவேல் மக்களில் 24,000 பேர்களை ஒரு கொள்ளை நோய்யை அனுப்பிக் கொலை செய்தார். இந்த கொள்ளை நோயானது இஸ்ரலேர்கள் மீதியானியர்களுடன் உடலுறவு கொண்டு தங்களைத் தீட்டுப்படுத்தியதன் விளைவாக நேரிட்டது. (எண் 25:9). ஆகவே, மிதியானியர்களின் தவறான சூழ்ழ்ச்சியின் காரணமாகவும் அவர்களுடைய பாவத்தின் காரணமாகவும் தேவன் அவர்களை நியாயமான முறையில் தண்டித்தார். இஸ்ரவேலர்களுக்கு மேலும் இவர்களுக்குப் பிரச்சினை வராதபடிக்கு ஒரு தற்காப்பு நடவடிக்கையாக அவர்களை அழித்து நியாயம் தீர்க்கும்படி கட்டளையிட்டார்.
எண்ணாகமம் 31:14-18. இந்த வேதபகுதி திருமணமாகாத கன்னிப் பெண்கள் தவிர அனைத்துப் பெண்களும் இஸ்ரவேலர்களை மயக்கிப் பாவம் செய்யத் தூண்டியதன் தண்டனையாக அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று கூறுகிறது. கன்னிப் பெண்களை விட்டுவிட வேண்டும் என்றும் அது கூறுகிறது, ஒருவேளை இந்த இளம் கன்னிப் பெண்கள் பாகால் வழிபாட்டுடன் தொடர்புடைய ஒழுக்கக்கேடான செயல்களில் வெளிப்படையாக ஈடுபடாமல் இருந்திருக்கலாம். எனவேதான் அவர்கள் திருமணமான ஆண்கள் மற்றும் பெண்களுடன் அவர்கள் சேர்க்கப்படவில்லை. இந்த இளம் பெண்கள் இஸ்ரவேலர்கள் சிறைபிடிக்கப்பட வேண்டும் என்றுதான் வேத வசனம் கூறுகிறது. இவர்கள் இஸ்ரவேலர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார்கள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. எனவே எந்தபொரு ஆதாரமும் இல்லாமல் இஸ்ரவேலின் ஆண்கள் அவர்களை கற்பழித்தார்கள் என்று கூறுவதை ஏற்க முடியாது. அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்கள் என்று கூறுவது தவறான கருத்தாகும். அவர்கள் போரின்போது கைதியாக்கப்பட்டதால் போர் நிபந்தனைகளின்படி அவர்கள் இஸ்ரவேலர்களுக்கு அடிமைகளாக மாறியிருப்பார்கள் என்று கூறமுடியும். மேலும் அவர்கள் அடிமைகளாகிவிட்டால், இஸ்ரவேலில் வழங்கி வருகிற அடிமை தொடர்பான அனைத்துச் சட்டங்களும் அவர்களுக்குப் பொருந்தும். எனவே, அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்று எந்த எழுதப்பட்ட ஆதாரமும் இல்லாமல் யூகத்தின் அடிப்படையில் கருதுவது தவறானது. இன்றைய நாட்களில் இளம் பெண்கள் கடத்தப்பட்டால் என்ன நிகழுகிறதோ அதைக் குறித்த அச்சத்தால் எழுகிற கருத்தாகும் இது.
மேலும், எண்ணாகமம் 25:7,8 -இல் ஒரு சம்பவம் சொல்லப்பட்டுள்ளது. ஒரு இஸ்ரவேல் ஆணும் ஒரு மீதியானிய பெண்ணும் பாலுறவில் ஈடுபட்டதால், இருவரும் பினெகாஸால் கொல்லப்பட்டதைக் காண்கிறோம். இஸ்ரவேலர்களுக்கு தேவன் வழங்கிய சட்டம் கற்பழிப்பைக் கண்டனம் செய்கிறது மட்டுமின்றி, சில சந்தர்ப்பங்களில் அது மரண தண்டனையும் வழங்குகிறது (உபாகமம் 22:25-27). மேலும், கன்னிப் பெண்களைத் தப்பவிடுவதற்கான கட்டளையைத் தொடர்ந்து, வீரர்கள் உடனடியாகத் தங்களையும், தாங்கள் சிறைபிடித்துக் கொண்டுவந்தவர்களையும் சுத்திகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டனர் (எண்ணாகமம் 31:19). கற்பழிப்போ அல்லது ஒருமித்த மனதுடன் உடலுறவு கொள்வதோ லேவியராகமம் 15:16-18 வசனங்களில் கூறப்பட்டிருக்கும் கட்டளையை மீறும் செயலாகும். எனவே உடலுறவு குறித்த காரியத்தில் இவ்வளவு கெடுபிடிகள் சட்டங்களால் கொடுக்கப்பட்டுள்ளதால், அமலேக்கிய இனத்தைச் சேர்ந்த கன்னிப் பெண்களை பலாத்காரம் இஸ்ரவேலர்கள் பலாத்காரம் செய்தார்கள் என்று கூறுவது, வேத வாக்கியங்களின் வெளிச்சத்தில் எந்த வகையாலும் பொருளற்ற வாதம் ஆகும்.
நீங்கள் தொடர்ந்து தோராவைப் படிப்பீர்களாயின், மோசேயைத் தவிர வேறு எந்த யூதர்களும் ஒரு மீதியானியப் பெண்ணை திருமணம் செய்ய முடியாது என்று தேவன் கூறியிருக்கிறதைக் காண்பீர்கள். இது முரண்பாடான காரரியம் அல்லவா?
இஸ்ரவேலர்கள் எவரும் மீதியானியப் பெண்களை மணக்க முடியாது என்றும், மோசே மட்டும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறுகிற வேத வசனங்களை இந்தப் பெண்ணியவாதி ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. எந்த இடத்திலும் பிற்காலத்தில் எழுதப்பட்ட வேத வாக்கியங்களிலும் இவ்வாறு எழுதப்படவில்லை. இது அந்தப் பெண்ணியவாதியின் அறியாமையா அல்லது வேண்டுமென்றே கூறப்பட்ட சதியா என்று எனக்குத் தெரியவில்லை. மோசே ஒரு மீதியானியப் பெண்ணை மணந்தார் என்பது உண்மைதான். ஆனால் இது நியாயப்பிரமாணம் வழங்கப்படுவதற்கு முன்னரே நடந்த காரியம். சில குறிப்பிட இன மக்களுடன் இஸ்ரவேலர்கள் திருமண உறவு செய்யக்கூடாது என்று சொல்வதற்கான காரணம், அவர்கள் வேறு இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அல்ல, அவர்கள் விக்கிரக ஆராதனை செய்கிற மக்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே ஆகும். கானானியப் பெண்ணான ராகாப், மோவாபிய பெண்ணான ரூத் ஆகியோர் யூதர்களைத் திருமணம் செய்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய மத வழிபாட்டை விட்டுவிட்டு, மெய்யான கடவுளாகிய யெகோவாவைப் பின்பற்றினால் இஸ்ரவேல் வம்சத்தின் ஆண்களைத் திருமணம் செய்ய உரிமை பெற்றிருக்கிறார்கள். மேலும் இவர்களுடைய பெயர்கள் இயேசுவின் வம்சவழிப் பட்டியலிலும் இடம்பெற்றிருக்கிறதன் மூலமாக தேவன் அவர்களைக் கனப்படுத்தியிருக்கிறார்.
போரில் பிடிபட்ட பெண்கள் பலமுறை கற்பழிக்கப்பட்டு கருவுற வைக்கப்பட்டனர். ஆயினும் அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, திருமணம் ஆனவர்கள் என்ற அந்தஸ்துகூட அவர்களுக்குத் தரப்படவில்லை.
இது முற்றிலும் ஒரு தவறான குற்றச்சாட்டு என்றே கூற வேண்டும். வேண்டுமென்ற அனுமானத்தின் அடிப்படையில் வைக்கப்படுகிற குற்றச்சாட்டாகும். பெண்கள் மீண்டும் மீண்டும் கற்பழிக்கப்பட்டு கருவுற்றனர் என்று கூறுவதற்கு எந்த ஒரு வரலாற்று மேற்கோளையும் இந்தப் பெண்ணியவாதியால் வழங்க முடியாது. ஏனெனில் அப்படியான ஆதாரங்கள் எதுவும் அறவே இல்லை!
ஆயினும் அவர்களுடைய குற்றச்சாட்டுகளுக்கு நாம் பதில் அளிப்போம். போரில் சிறைபிடிக்கப்பட்ட பெண்களுக்கு என்ன நேரிட்டது? ஆகாயத்தில் சிலம்பம் செய்வதைப் போலில்லாமல், பிற வேதவசனங்களின் துணையோடு, எவ்வித அனுமானத்திற்கும் இடம் கொடாமல் நேர்மையான முறையில் நாம் பதிலளிக்க முயலுவோம். சிறைபிடிக்கப்பட்ட பெண்களை இஸ்ரவேலர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு தேவன் அனுமதி அளித்தார். இதுமட்டுமின்றி, அவர்களை மனைவிகள் என்ற முறையில் கண்ணியத்துடன் நடத்தவும் கட்டளை வழங்கியிருந்தார் (வாசிக்கவும் உபாகமம் 21:10-14). அடிமையாகப் பிடித்து வரப்பட்டு, திருமணம் செய்யாதவர்களாக இருந்தால் அவர்களை வேலைக்காரிகளாக வைத்திருப்பார்கள். ஆயினும் இத்தகையோரையும் தவறாக நடத்துவதற்கு எதிரான விதிகளே இருந்தன (யாத்திராகமம் 21:26-27, உபாகமம் 23:15-16). இக்கட்டளைகள் அனைத்தும் வழக்கமான பழங்காலப் போர்களில் இருந்து வேறுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் கால கலாச்சாரத்தில் இவ்வாறு போரில் பிடிக்கப்படுகிற பெண்கள் தகாதவிதமாய் நடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். மேலும் அவர்களை அடிமைகளாக விற்றனர். ஆனால் இதற்கு நேர்மாறாக, இஸ்ரவேலர்கள் ஒரு மாதம் காத்திருந்து, அந்தப் பெண்ணை மணந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை இருந்தது. இது மனிதர்கள் என்ற முறையில் பெண்களுடைய ஆளுமையை மதிக்கக் கற்றுக்கொடுத்திருந்தது.
உபாகமம் 20:13-15: இந்த வசனத்தில், கர்த்தர் ஒரு பட்டணத்தை உங்கள் கைகளில் ஒப்படைக்கும்போது, அங்குள்ள உள்ள ஆண்களையும், சிறுவர்களையும், கொன்றுவிடுங்கள். ஆனால் கற்பழிப்பதற்காக பெண்களை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள் என்று உள்ளது. இது ஒரு பெண்களுக்கு எதிரான ஒரு மோசமான காரியம் அல்லவா?
உபாகமம் 20:13-15: நாம் இந்த பகுதியிலுள்ள வசனங்களில் உண்மையிலேயே என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று காண்போம்: “உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி, ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக. இந்த ஜாதிகளைச் சேர்ந்த பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே செய்வாயாக”.
எண்ணாகமம் 31 -ஆம் அதிகாரத்தில் உள்ளதைப் போலவே, இந்த வேதபகுதியிலும் கற்பழிப்பு பற்றியோ அல்லது பாலியல் வன்செயல் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, வேதவசனங்களிலுள்ள உண்மையைப் பார்க்காமல், தன் கருத்துக்கு ஏற்றவாறு அனுமானங்களை இட்டுக்கட்டுகிறார் இந்தப் பெண்ணியவாதி என்று தன்னை அழைத்துக்கொள்பவர். உண்மையில், இஸ்ரவேலர்கள் சிறைபிடிக்கப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ள தேவன் அனுமதித்தார். மேலும் அவர்கள் தங்கள் மனைவிகளை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பெண்கள் முதலாவது தங்கள் குடும்பங்களை நினைத்து துக்கங்ககொண்டாட வேண்டும். அவளை மனைவியாக்கிய பிறகு அவளைத் தவறாக நடத்தக் கூடாது (உபாகமம் 21:10-14). திருமணம் செய்யாதவர்களை அவர்கள் வேலைக்காரர்களாக ஆக்கியிருந்தார்கள். ஆயினும் நாம் முன்னரே சிந்தித்ததுபோல அவர்களை தவறாக நடத்துவதற்கு எதிரான விதிகள் இருந்தன.
மேலும் இந்த வேதபகுதியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய காரியம் என்னவெனில், இந்தப் பெண்ணிவாதி கூறுவதுபோல சிறுவர்கள் கொல்லப்படவில்லை. ஆண்கள் மட்டுமே கொல்லப்பட்டனர். ஆகவே இந்த வகையில் சிறுவர்களும் பெண்களும் தேவனுடைய அன்பான கரிசனைக்கு உட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.
(உபாகமம் 21:11-14): சிறைபிடிக்கப்பட்டவர்களில் ஓர் அழகான பெண்ணைக் கண்டால், அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்று அவளிடம் பிரவேசியுங்கள் என்று இந்த வேத பகுதி கூறுகிறதே?
(உபாகமம் 21:10-14): “நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தத்திற்குப் புறப்பட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து, சிறைகளில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக்கண்டு, அவளை விவாகம்பண்ண விரும்பி, அவளை உன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோவாயானால், அவள் தன் தலையைச் சிரைத்து, தன் நகங்களைக் களைந்து, தன் சிறையிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதமட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கங்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்குப் புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள். அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் இஷ்டப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினபடியினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம்”.
ஒருவனுக்கு சிறைப்பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பிடித்திருந்தால், அவன் அவளைக் கற்பழிக்க அனுமதியில்லை. ஆனால் அவன் விரும்பினால் அவளை மனைவியாக்கிக் கொள்ளலாம். சிறைபிடிக்கப்பட்ட முகாமில் இருந்து அவளை அவன் வீட்டிற்கு அழைத்து வர வேண்டும், பிறகு சிறைபிடிக்கப்பட்டவள் என்று அடையாளம் காட்டுகிற அவளுடைய ஒவ்வொரு வெளிப்புற அடையாளத்தையும் முத்திரையையும் அகற்ற வேண்டும். மேலும் அவளுடைய பெற்றோரை நினைத்து துக்கங்ககொண்டாடுவதற்குப் போதுமான கால அவகாசம் (ஒரு முழு மாதம்) வழங்க வேண்டும். அதன் பிறகுதான் அந்த மனிதன் அவளை மனைவியாக அழைத்துக் கொண்டு போய் அவளுடன் உடலுறவு கொள்ள வேண்டும். இது பண்டைய போர்க்கால வழக்கமான நடைமுறையிலிருந்து மிகவும் முன்னேறிய ஒரு முறையாகும். அன்றைய காலகட்டத்தில் போரில் அடிமையாகப் பிடிக்கப்பட்ட பெண்கள் அந்த இடத்திலேயே கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர் அல்லது அடிமையாக விற்கப்பட்டனர். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் முற்றிலும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்தனர். அதாவது எவ்விதச் சுயாதீனமும் இராமல் எஜமானர்களின் முழுக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தனர். இத்தகைய சூழ்நிலையிலேயே அடிமைப் பெண்களுக்கு மரியாதையும் மதிப்பும் அளித்து, மனைவியின் ஸ்தானத்தை வழங்கி உயர்ந்த தராதரங்களை அவர்களுக்கு வேதாகமத்தின் தேவன் அமைத்துக்கொடுக்கிறார். ஒரு மாத காலத்திற்குப் பிறகும், அந்த ஆண் அவளை மனைவியாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்றால் (ஆரம்ப காலத்தில் வெறும் மோகம் மட்டுமே சிலருக்கு இருக்கும் ), அந்தப் பெண் விடுவிக்கப்பட வேண்டும். அவள் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தாலும்கூட அவள் விடுதலை அடைவாள். இது அந்த காலகட்டத்தில் இருந்த நாடுகளில் மிகவும் பரவலாகப் பின்பற்றி வந்த நடைமுறையிலிருநதும், கலாச்சாரத்திலிருந்தும் முற்றிலும் வேறுபட்டதும், மாறுபட்டதுமான ஒன்றாகும். அந்த பெண்னை பணத்திற்காக எந்தக் காரணம் கொண்டு தவறாக நடத்தவோ அல்லது விற்கவோ முடியாது.
உபாகமம் 22:5: வசனத்தில் ஆண்களின் ஆடைகளை அணியும் பெண்கள் “கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்” என்று கூறப்பட்டுள்ளதே.
இந்தப் பெண்ணியவாதி இங்கே மீண்டும் பாதி வசனத்தை மேற்கோள் காட்டி, தேவனை ஒரு பாலினப் பாகுபாடு காட்டுகிறவர் என்பது போன்ற தோற்றத்தை உண்டுபண்ண முயற்சிக்கிறார்.
முழு வசனமும் பின்வருமாறு:
உபாகமம் 22:5: “புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்”.
ஆணின் ஆடையை அணிகிற பெண் மட்டுமல்ல, ஒரு பெண்ணின் ஆடையை அணிகிற ஆணும் கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானவனாகக் கருதப்படுகிறான் என்பதை நினைவில் கொள்க. இங்கே எந்தவிதப் பாலினப் பாகுபாடும் இல்லை என்பதை நாம் தெளிவாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்போது, நாம் இந்த வசனத்தின் உண்மையான பொருளைக் காண்போம்.
இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு முக்கியமான கருப்பொருள் வார்த்தைகளைக் (எபிரெய வார்த்தைகளைக்) கவனிக்க வேண்டும். ஒன்று கெலி (மநட) மற்றொன்று சிம்லட் (அடநவ). இவை தமிழ் வேதாகமத்தில் வெவ்வேறு வழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பழைய ஏற்பாட்டில் பொதுவாக ஆடைகளைக் குறிக்க சிம்லட் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு “வெளியே அணியும் ஆடை,” அல்லது“அங்கியைக்” குறிக்கிறது. எனவே, எந்தவொரு ஆடையையும் குறிக்க இவ்வார்த்தையைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் கெலி என்ற சொல்லானது, கவசம், பை, வண்டி, தளவாடங்கள், கருவி, நகை, சாக்கு, பொருள், பாத்திரம், ஆயுதம், கருவி, சாமான்கள், படகு, இருக்கை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறிக்க பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வார்த்தை பழைய ஏற்பாட்டில் 319 தடவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இதன் பெயர்ச் சொல் வார்த்தையான மனிதர்கள் வைத்திருக்கிற அல்லது அணிகிற எந்தவொரு பொருட்களையும் குறிப்பதற்காகவும் பயன்படுத்தலாம். பொதுவாக, பெண்கள் ஆண்களின் அணிகலன்களையும், ஆண்கள் பெண்களின் அணிகலன்களையும் அணிவதைச் சுட்டிக்காட்டுகிறது என்று பெரும்பாலான வேத பண்டிதர்கள் கூறுகிறார்கள். அதுவும் முக்கியமான புறஜாதிகளின் உருவ வழிபாட்டு வழக்கத்தை இது குறிக்கிறது என்று பல அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆகவே ஆண்களையும் உடையை பெண்களும், பெண்களின் உடைகளை ஆண்களும் அணிவது என்பது இஸ்ரவேலர் அல்லாத மதங்களின் சில சடங்குகளைக் கடைப்பிடிக்கிறதைக் காண்பிக்கிறது. எனவே இது தடைசெய்யப்பட்ட ஒன்றாக வேதம் கூறுகிறது.
வேதாகம காலங்களில் ஆண்களும் பெண்களும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக ஆடை அணிந்திருப்பதால் அதை சாதாரணமாக வீட்டிற்குள் பயன்படுத்தப்படும் ஆடைகளையே குறிக்கிறது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. பழைய ஏற்பாட்டு காலங்களில், ஆண்களும் பெண்களும் மேலோட்டமாக ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்தனர். நீண்ட அங்கி போன்ற ஆடைகளும், அதற்கு மேலாகப் போர்த்துகிற ஆடைகளும் இருபாலருக்கும் பொதுவானதாக இருந்தது. இருப்பினும், அவர்கள் அணிந்திருந்த விதம் அல்லது வடிவடைப்பு பாலினங்களுக்கு இடையே தெளிவான வேறுபாட்டை காண்பிக்கக்கூடியதாக இருந்தது. மேலும் தேவனுடைய மக்கள் அந்த வேறுபாடுகளை மதித்து நடக்கும்படியே இந்த கட்டளை அறிவுறுத்துகிறது. எனவே இது பாலினங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை வேண்டுமென்றே நீர்த்துப்போகச் செய்யும் வகையிலான ஆடை அணிவதற்கு எதிரான கட்டளையாகும். எனவே இது அன்றாடம் வீடுகளில் அணியும் ஆடைகளைப் போன்றதை குறிப்பதாக இருக்க முடியாது, ஆனால் சில குறிப்பிட்ட, அசாதாரணமான ஆடைகள், ஆயுதங்கள், நகைகள் ஆகியவற்றை ஓர் ஆண் அணிந்தால் அது பார்ப்பதற்கு பெண்களைப் போலவே தோற்றமளிக்கும். இது பண்டைய உலகில் இஸ்ரவேல் அல்லாத புறஜாதிகளிடையே பொதுவாக வழக்கத்தில் இருந்த ஒன்றாகும். மேலும் இது ஓரினச்சேர்க்கையுடன் தொடர்புடையதாகவும் இருந்தது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இஸ்ரவேலர்கள் அந்நிய தேசங்களின் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவதைத் தடுக்கும் விதிமுறைகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். இத்தகைய சமயப் பின்னணியில் இதைப் பார்க்கும்போது, ஆண்கள் ஆடையை பெண்களும், பெண்கள் ஆடையை ஆண்களும் அணிவதற்கான தடை என்பது, வெறுமனே ஆடையில் மட்டுமின்றி, அது புறமத வழிபாட்டு முறைகளைப் நடைமுறைப்படுத்துவதன் தொடர்பில் ஆகும். ஆகவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதன் நோக்கம் என்பது, இஸ்ரவேலர்கள் பிற மதத்தினருடன் சேர்ந்து விக்கிரக வழிபாட்டின் பழக்கங்களைக் கொண்டுவருவதை தடுப்பதற்கே என நாம் தைரியமாகக் கூறலாம்.
உபாகமம் 22:13-22: பெண்களே, உங்கள் கன்னித்தன்மையின் அடையாளங்களை கண்டிப்பாக கடைப்பிடியுங்கள். இல்லையெனில், உங்கள் ஊரைச் சேர்ந்த மனிதர்கள் உங்களைக் கல்லெறிந்து கொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த நிச்சயமாக ஆண்களுக்குப் பொருந்தாது. இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால் “ஒரு ஆண் தன் மனைவியைக் கைவிட்டுவிட வேண்டுமென்று நினைத்தால் அவள் கன்னித்தன்மையின் அடையாளங்களை இழந்துவிட்டாள்என்று கூறி அவளை விலக்கிவிடலாம். திருமணமான ஒரு பெண் தான் கன்னி கழியாதவளாக இருக்கிறேன் என்பதை நிரூபிக்க எந்த வழியும் அவளுக்கு இல்லை என்பதாலும், அதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அவளுடைய கணவனுக்கே இருக்கிறதாலும், இது அவன் அவள்மீது வெறுப்புக்கொள்ளும்போது, அவளுடை கன்னித் தன்மையின்மீது சந்தேகம் உள்ளது என்று கூறி அவளை விலக்கி வைத்துவிடலாம்.
இந்த வேதபகுதியிலிருந்து நாம் முதலாவதாகத் தெரிந்துகொள்ள வேண்டிய காரியம் என்னவெனில், புதிதாக திருமணமான ஒரு மனிதன் தனது மனைவி கன்னித் தன்மையுடன் இருக்கிறாளா இல்லையா என்பதுடன் தொடர்புடையது. இங்கே வேறு எந்த காரணத்திற்காகவும் அவன் அவளை வேண்டாமென்று தள்ளிவிடவில்லை. அவள் தனது கன்னித் தன்மையை இழந்துவிட்டாள் என்ற காரணத்திற்காக மட்டுமே அவள் மீது குற்றம் சாட்டுகிறான். ஏனெனில் அவள் திருமணத்திற்கு முன்னரே தன்னுடைய தூய்மையைக் காத்துக் கொள்ளாததினாலேயே அவள் மீது குற்றம் சாட்டி அவன் அவளை வெறுக்கிறான். பண்டைய கலாச்சாரங்களில் கன்னித்தன்மை மிகவும் மதிக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஒரு பெண் தனது கன்னித் தன்மையைப் பற்றி கணவனிடம் பொய் சொன்னால், அவன் தான் ஏமாற்றப்பட்டதாக உணருகிறான்.
இத்தகைய சிக்கலைத் தீர்ப்பதற்கான முயற்சி என்ன?
பழங்கால வழக்கப்படி, ஒரு யூதப் பெண் தனது கணவருடன் முதலாவது முறையாக உடலுறவு கொள்ளும்போது ஒரு வெள்ளைத் துணியை விரித்து அதன் மேல் நெருக்கமாக இருப்பாள். அவள் கன்னித் தன்மையுடன் இருப்பாளேயாகில், உடலுறவின்போது சில துளி இரத்தம் அந்தத் துணியில் படும். இது இளம் பெண்ணின் கன்னித்தன்மைக்கு சான்றாக அமையும். இந்த இரத்தக்கறை படிந்த துணி, திருமணமான பெண்ணின் பெற்றோரின் சொத்தாகக் கொடுக்கப்படும். இதை அவர்கள் தங்களது மகளின் (இளம் பெண்ணின்) கன்னித்தன்மைக்கு சான்றாக வைத்துக்கொள்வார்கள்.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கன்னித் தன்மை பற்றிய பிரச்சினை உருவானால், அந்த பெண்ணின் பெற்றோர் தங்கள் மகள் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க, தங்கள் வசம் இருக்கிற அந்த துணியை நகரத்தின் மூப்பர்களிடம் கொண்டு வருவர். ஒருவேளை அந்த ஆண் தவறான குற்றச்சாட்டை தன் மனைவியின் மீது சுமத்தியது கண்டறியப்பட்டால், அவன் அந்தப் பெண்ணின் தந்தைக்கு பெரும் அபராதம் செலுத்த வேண்டும். மேலும் எந்தக் காரணம் கொண்டும், எக்காலத்திலும் தனது மனைவியை விவாகரத்து செய்யும் உரிமையை அவன் இழக்க நேரிடும். ஆனால் அந்த பெண் ஏற்கனவே கன்னித் தன்மையை இழந்தவள் என்று நிரூபிக்கப்பட்டாள், அவள் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, அந்த பெண் கல்லெறிந்து கொல்லப்படுவாள். இதுவே அவளுக்கு வழங்கப்படுகிற சரியான தண்டனையாக இருக்கும். இத்தண்டனை அவள் திருமணத்திற்கு முன்னரே பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதற்காக மட்டுமின்றி ( திருமணத்திற்கு முந்தைய பாலுறவு செய்கிறவள் வேசி எனப்படுவாள் ), தன் கணவனை ஏமாற்றியதற்காகவும் ஆகும். எனவே, இச்சட்டம் உண்மையிலேயே கன்னிப் பெண்ணாக இருக்கிறவளுக்கு எந்த விதத்திலும் பாதகமானதல்ல. இயல்பாகவே அவள் குற்றமற்றவாளிவிடுவாள். அவளுக்கு எந்தவிதத் தண்டனையும் கிடையாது. ஆனால் அவள் மீது சாட்டப்பட்ட குற்றம் ஊர்சிதமானால் அவள் தன் குற்றத்தைச் சுமந்துகொண்டு சாவைப் பெற வேண்டும்.
-முற்றும்-
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.