(எண்ணாகமம் 31:14-18): இந்த வேதப்பகுதியில், மீதியானிய இனத்தைச் சேர்ந்த ஆண்களையும், பெண்களையும், முதியவர்களையும், சிறுபிள்ளைகளையும் கொல்லும்படி மோசே தனது ஆட்களிடம் உத்தரவிடுகிறார். ஆனால், திருமணமாகாத கன்னிப்பெண்களை மட்டும் உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார். அப்பெண்களைக் கற்பழிப்பதற்காகத்தானே உயிரோடு காப்பாற்றச் சொல்கிறார்? இது பெண்களுக்கு எதிரான பாகுபாடு அல்லவா?
மீதியானியர் ஒரு நாடோடிக் கூட்டத்தினர் ஆவர். இவர்கள் மோவாப் மக்களுடன் நெருக்கமான தொடர்புடையவர்கள். பாலியல் மற்றும் ஒழுக்கக்கேடான நடத்தையின் மூலமாக இஸ்ரவேலரைக் கவர்ந்து, அவர்களை விக்கிரக வழிபாட்டிற்குள் தள்ளியவர்கள் இவர்களே. எனவே, இவர்களைப் பழிவாங்கும் பொருட்டு அவர்களைக் கொல்ல வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார் (எண்ணாகமம் 25). இஸ்ரவேலர்கள் மோவாபியர்களின் பலிகளில் கலந்துகொண்டு, அவர்கள் மத்தியில் அவர்களுடைய பலியின் உணவைச் சாப்பிட்டு, பாகால் உட்பட மோவாபியர்களின் பல தெய்வங்களை வணங்கினர் (எண் 25:2,3). இதனிமித்தமாக, தேவன் ஒரு கொள்ளைநோயை அனுப்பி இஸ்ரவேல் மக்களில் 24,000 பேரைக் கொன்றார். இந்தக் கொள்ளை நோயானது, இஸ்ரவேலர் மீதியானியர்களுடன் உடலுறவு கொண்டு தங்களைத் தீட்டுப்படுத்தியதன் விளைவாக நேரிட்டது (எண் 25:9). ஆகவே, மீதியானியர்களின் தவறான சூழ்ச்சியின் காரணமாகவும் அவர்களுடைய பாவத்தின் காரணமாகவும் தேவன் அவர்களை நியாயமான முறையில் தண்டித்தார். இஸ்ரவேலர்களுக்கு மேலும் இவர்களால் எவ்விதப் பிரச்சினையும் வராதபடிக்கு, ஒரு தற்காப்பு நடவடிக்கையாக அவர்களை அழித்து நியாயந்தீர்க்கும்படி கட்டளையிட்டார்.
எண்ணாகமம் 31:14-18 ஆகிய வசனங்களைக் கொண்ட இந்த வேதப்பகுதி, திருமணமாகாத கன்னிப்பெண்கள் தவிர மற்ற அனைத்துப் பெண்களும் இஸ்ரவேலர்களை மயக்கிப் பாவம் செய்யத் தூண்டியதன் தண்டனையாகக் கொல்லப்பட வேண்டும் என்று கூறுகிறது. மேலும், கன்னிப்பெண்களை விட்டுவிட வேண்டும் என்றும் கூறுகிறது. ஒருவேளை, இந்த இளம் கன்னிப்பெண்கள் பாகால் வழிபாட்டுடன் தொடர்புடைய ஒழுக்கக்கேடான செயல்களில் வெளிப்படையாக ஈடுபடாமல் இருந்திருக்கலாம். எனவேதான், அவர்கள் திருமணமான பெண்கள் மற்றும் ஆண்களுடன் சேர்க்கப்படவில்லை. இந்த இளம் பெண்கள் இஸ்ரவேலர்களால் சிறைபிடிக்கப்பட வேண்டும் என்றுதான் வேத வசனம் கூறுகிறது. இவர்கள் இஸ்ரவேலர்களால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே, எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் இஸ்ரவேலின் ஆண்கள் அவர்களைக் கற்பழித்தார்கள் என்று கூறுவதை ஏற்க முடியாது. அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறான கருத்தாகும். அவர்கள் போரின்போது கைதியாக்கப்பட்டதால், போர் விதிகளின்படி அவர்கள் இஸ்ரவேலர்களுக்கு அடிமைகளாக மாறியிருப்பார்கள் என்று மட்டுமே கூறமுடியும். மேலும், அவர்கள் அடிமைகளாகிவிட்டால், இஸ்ரவேலில் வழக்கத்திலிருக்கும் அடிமைகள் தொடர்பான அனைத்துச் சட்டங்களும் அவர்களுக்கும் பொருந்தும். எனவே, அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர் என்று எந்த எழுதப்பட்ட ஆதாரமுமில்லாமல் யூகத்தின் அடிப்படையில் கருதுவது தவறானது. இன்றைய காலகட்டத்தில் இளம் பெண்கள் கடத்தப்பட்டால் என்ன நிகழுமோ, அதைக் குறித்த அச்சத்தின் அடிப்படையில் எழுகின்ற கருத்தே இதுவாகும்.
மேலும், எண்ணாகமம் 25:7,8-இல் ஒரு சம்பவம் சொல்லப்பட்டுள்ளது. ஒரு இஸ்ரவேல் ஆணும் ஒரு மீதியானியப் பெண்ணும் பாலுறவில் ஈடுபட்டதால், அவர்கள் இருவரும் பினெகாஸால் கொல்லப்பட்டதைக் காண்கிறோம். இஸ்ரவேலர்களுக்கு தேவன் வழங்கிய நியாயப்பிரமாணம் பாலியல் வன்கொடுமையைக் கண்டிக்கிறது மட்டுமின்றி, சில சந்தர்ப்பங்களில் அதற்கு மரண தண்டனையையும் விதிக்கிறது (உபாகமம் 22:25-27). மேலும், கன்னிப்பெண்களை உயிரோடு வைப்பதற்கான கட்டளையைத் தொடர்ந்து, வீரர்கள் உடனடியாகத் தங்களையும், தாங்கள் சிறைபிடித்துக் கொண்டுவந்தவர்களையும் சுத்திகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டனர் (எண்ணாகமம் 31:19). பாலியல் வன்கொடுமையோ அல்லது ஒருமித்த மனதுடன் உடலுறவு கொள்வதோ லேவியராகமம் 15:16-18 வசனங்களில் கூறப்பட்டிருக்கும் கட்டளையை மீறும் செயலாகும். எனவே, உடலுறவு குறித்த காரியத்தில் நியாயப்பிரமாணச் சட்டங்களில் இவ்வளவு கெடுபிடிகள் கொடுக்கப்பட்டுள்ளதால், மீதியானிய இனத்தைச் சேர்ந்த கன்னிப்பெண்களை இஸ்ரவேலர்கள் பலாத்காரம் செய்தார்கள் என்று கூறுவது, வேத வாக்கியங்களின் வெளிச்சத்தில் எந்த வகையிலும் பொருளற்ற வாதமாகும்.
நீங்கள் தொடர்ந்து தோராவைப் படிப்பீர்களாயின், மோசேயைத் தவிர வேறு எந்த யூதரும் ஒரு மீதியானியப் பெண்ணைத் திருமணம் செய்ய முடியாது என்று தேவன் கூறியிருப்பதைக் காண்பீர்கள். இது முரண்பாடான காரியம் அல்லவா?
இஸ்ரவேலர்கள் எவரும் மீதியானியப் பெண்களை மணக்க முடியாது என்றும், மோசே மட்டுமே திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறுகிற வேதவசனங்களை இந்தப் பெண்ணியவாதி ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. ஏனெனில், எந்த இடத்திலும், பிற்காலத்தில் எழுதப்பட்ட வேதவாக்கியங்களிலும் அவ்வாறு எழுதப்படவில்லை. இது அந்தப் பெண்ணியவாதியின் அறியாமையா அல்லது வேண்டுமென்றே கூறப்பட்ட சதியா என்று எனக்குத் தெரியவில்லை. மோசே ஒரு மீதியானியப் பெண்ணை மணந்தார் என்பது உண்மைதான். ஆனால், இது நியாயப்பிரமாணம் வழங்கப்படுவதற்கு முன்னரே நடந்த காரியம்.
சில குறிப்பிட்ட இன மக்களுடன் இஸ்ரவேலர்கள் சம்பந்தம் கலக்கக்கூடாது (திருமணம் செய்யக்கூடாது) என்று தேவன் சொல்வதற்கான காரணம், அவர்கள் வேறு இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அல்ல; மாறாக, அவர்கள் விக்கிரக ஆராதனை செய்கிற மக்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே ஆகும். கானானியப் பெண்ணான ராகாப், மோவாபியப் பெண்ணான ரூத் ஆகியோர் யூதர்களைத் திருமணம் செய்திருக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய முந்தைய மத வழிபாட்டை விட்டுவிட்டு, மெய்யான தேவனாகிய யெகோவாவைப் பின்பற்றினால், இஸ்ரவேல் வம்சத்தின் ஆண்களைத் திருமணம் செய்ய உரிமை பெற்றிருந்தார்கள். மேலும், இவர்களுடைய பெயர்கள் இயேசுவின் வம்சவரலாற்றுப் பட்டியலிலும் இடம்பெற்றிருப்பதன் மூலமாகத் தேவன் அவர்களைக் கனப்படுத்தியிருக்கிறார்.
"போரில் பிடிபட்ட பெண்கள் பலமுறை கற்பழிக்கப்பட்டு கருவுற வைக்கப்பட்டனர்; ஆயினும் அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, மனைவி என்ற அந்தஸ்துகூட அவர்களுக்குத் தரப்படவில்லை" என்று அவர்கள் கூறுகிறார்கள். இது முற்றிலும் ஒரு தவறான குற்றச்சாட்டு என்றே கூற வேண்டும். இது வேண்டுமென்றே தவறான அனுமானத்தின் அடிப்படையில் வைக்கப்படுகிற குற்றச்சாட்டாகும். பெண்கள் மீண்டும் மீண்டும் கற்பழிக்கப்பட்டுக் கருவுற்றனர் என்று கூறுவதற்கு எந்த ஒரு வரலாற்று மேற்கோளையும் இந்தப் பெண்ணியவாதியால் வழங்க முடியாது. ஏனெனில், அப்படியான ஆதாரங்கள் எதுவும் அறவே இல்லை!
ஆயினும், அவர்களுடைய குற்றச்சாட்டுகளுக்கு நாம் பதிலளிப்போம். போரில் சிறைபிடிக்கப்பட்ட பெண்களுக்கு என்ன நேரிட்டது? அந்தரத்தில் சிலம்பம் சுற்றுவதைப் போலப் பேசாமல், பிற வேதவசனங்களின் துணையோடு, எவ்வித அனுமானத்திற்கும் இடம் கொடாமல் நேர்மையான முறையில் நாம் பதிலளிக்க முயலுவோம். சிறைபிடிக்கப்பட்ட பெண்களை இஸ்ரவேலர்கள் திருமணம் செய்துகொள்ளத் தேவன் அனுமதி அளித்தார். இதுமட்டுமின்றி, அவர்களை மனைவிகள் என்ற முறையில் கண்ணியத்துடன் நடத்தவும் கட்டளை வழங்கியிருந்தார் (உபாகமம் 21:10-14 -ஐ வாசிக்கவும்). அடிமையாகப் பிடித்து வரப்பட்டப் பெண்கள் திருமணம் செய்யப்படாதவர்களாக இருந்தால், அவர்களை வேலைக்காரிகளாக வைத்திருந்தார்கள். ஆயினும், இத்தகையோரையும் தவறாக நடத்துவதற்கு எதிரான விதிகளே வேதத்தில் இருந்தன (யாத்திராகமம் 21:26-27, உபாகமம் 23:15-16). இக்கட்டளைகள் அனைத்தும் பழங்காலப் போர்களின் வழக்கமான நடைமுறைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் காலக் கலாச்சாரத்தில், இவ்வாறு போரில் பிடிக்கப்படுகிற பெண்கள் தகாதவிதமாய் நடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்; அல்லது அவர்களை அடிமைகளாக விற்றனர். ஆனால் இதற்கு நேர்மாறாக, இஸ்ரவேலர்கள் ஒரு மாதம் காத்திருந்து, அந்தப் பெண்ணை மணந்துகொள்ள வேண்டும் என்ற கட்டளை இருந்தது. இது மனிதர்கள் என்ற முறையில் பெண்களுடைய ஆளுமையை மதிக்க அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது.
குற்றச்சாட்டு: உபாகமம் 20:13-15 வசனங்களில், கர்த்தர் ஒரு பட்டணத்தை உங்கள் கைகளில் ஒப்படைக்கும்போது, அங்குள்ள ஆண்களையும் சிறுவர்களையும் கொன்றுவிடுங்கள்; ஆனால் கற்பழிப்பதற்காகப் பெண்களை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இது பெண்களுக்கு எதிரான ஒரு மோசமான காரியம் அல்லவா?
பதில்: உபாகமம் 20:13-15 ஆகிய வசனங்களில் உண்மையிலேயே என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று நாம் காண்போம்:
“உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி, ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக. இந்த ஜாதிகளைச் சேர்ந்த பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே செய்வாயாக”.
எண்ணாகமம் 31-ஆம் அதிகாரத்தில் உள்ளதைப் போலவே, இந்த வேதப்பகுதியிலும் கற்பழிப்பு பற்றியோ அல்லது பாலியல் வன்செயல் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, வேதவசனங்களிலுள்ள உண்மையைப் பார்க்காமல், தன்னை ஒரு பெண்ணியவாதி என்று அழைத்துக்கொள்பவர், தன் கருத்துக்கு ஏற்றவாறு அனுமானங்களை இட்டுக்கட்டுகிறார். உண்மையில், இஸ்ரவேலர்கள் சிறைபிடிக்கப்பட்ட பெண்களைத் திருமணம் செய்துகொள்ளத் தேவன் அனுமதித்தார். மேலும், அவர்கள் தங்கள் மனைவிகளை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பெண்கள் முதலாவது தங்கள் குடும்பங்களை நினைத்துத் துக்கம் கொண்டாட வேண்டும். ஒருத்தியை மனைவியாக்கிய பிறகு அவளைத் தவறாக நடத்தக் கூடாது (உபாகமம் 21:10-14). திருமணம் செய்யப்படாதவர்களை வேலைக்காரிகளாக ஆக்கியிருந்தார்கள். ஆயினும் நாம் முன்னரே சிந்தித்ததுபோல, அவர்களைத் தவறாக நடத்துவதற்கு எதிரான விதிகளும் இருந்தன.
மேலும், இந்த வேதப்பகுதியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய காரியம் என்னவெனில், இந்தப் பெண்ணியவாதி கூறுவதுபோலச் சிறுவர்கள் கொல்லப்படவில்லை; ஆண்கள் மட்டுமே கொல்லப்பட்டனர். ஆகவே, இந்த வகையில் சிறுவர்களும் பெண்களும் தேவனுடைய அன்பான கரிசனைக்கு உட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.
கேள்வி: உபாகமம் 21:11-14: சிறைபிடிக்கப்பட்டவர்களில் ஓர் அழகான பெண்ணைக் கண்டால், அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்று அவளுடன் உறவுகொள்ளுங்கள் என்று இந்த வேதப்பகுதி கூறுகிறதே?
வேதவசனம் (உபாகமம் 21:10-14):
“நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தத்திற்குப் புறப்பட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து, சிறைகளில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக்கண்டு, அவளை விவாகம்பண்ண விரும்பி, அவளை உன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோவாயானால், அவள் தன் தலையைச் சிரைத்து, தன் நகங்களைக் களைந்து, தன் சிறையிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதமட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கங்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்குப் புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள். அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் இஷ்டப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினபடியினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம்”.
விளக்கம்: ஒருவன் சிறைப்பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை விரும்பினால், அவன் அவளைக் கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்ய அனுமதியில்லை. மாறாக, அவன் விரும்பினால் அவளை முறைப்படி மனைவியாக்கிக் கொள்ளலாம். சிறைபிடிக்கப்பட்ட முகாமிலிருந்து அவளை அவன் வீட்டிற்கு அழைத்து வர வேண்டும்; பிறகு அவள் சிறைபிடிக்கப்பட்டவள் என்று அடையாளம் காட்டும் அவளுடைய வெளிப்புற அடையாளங்களையும் முத்திரைகளையும் அகற்ற வேண்டும். மேலும், அவளுடைய பெற்றோரை நினைத
இது பண்டைய போர்க்கால வழக்கங்களிலிருந்து மிகவும் முன்னேறிய ஒரு நெறிமுறையாகும். அன்றைய காலகட்டத்தில், போரில் அடிமைகளாகப் பிடிக்கப்பட்ட பெண
ஒரு மாத காலத்திற்குப் பிறகும், அந்த ஆண் அவளை மனைவியாக ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றால் (ஆரம்ப காலத்தில் வெறும் மோகம் மட்டுமே சிலருக்கு இருந்திருக்கலாம்), அந்தப் பெண் விடுவிக்கப்பட வேண்டும். அவள் சிறைப்பிடிக்கப்பட்டவளாக இருந்தாலும்கூட, அவள் முழுமையான விடுதலையை அடைவாள். இது அந்த காலகட்டத்தில் மற்ற நாடுகளில் பரவலாகப் பின்பற்றப்பட்டு வந்த கலாச்சார நடைமுறைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதும், மேன்மையானதுமான ஒன்றாகும். அந்தப் பெண்ணைப் பணத்திற்காக எந்தக் காரணத்தைக் கொண்டும் தவறாக நடத்தவோ அல்லது விற்கவோ முடியாது என வேதம் மிகத் தெளிவாகப் பாதுகாக்கிறது.
கேள்வி: உபாகமம் 22:5 வசனத்தில் ஆண்களின் ஆடைகளை அணியும் பெண்கள் “கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்” என்று கூறப்பட்டுள்ளதே?
விளக்கம்: விமர்சகர்கள் (அல்லது பெண்ணியவாதிகள்) இங்கே மீண்டும் பாதி வசனத்தை மட்டுமே மேற்கோள் காட்டி, தேவன் ஒரு பாலினப் பாகுபாடு காட்டுகிறவர் என்பது போன்ற தோற்றத்தை உண்டுபண்ண முயற்சிக்கிறார்கள்.
முழு வசனமும் பின்வருமாறு:
உபாகமம் 22:5: “புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்”.
ஆணின் ஆடையை அணியும் பெண் மட்டுமல்ல, ஒரு பெண்ணின் ஆடையை அணியும் ஆணும் கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானவனாகவே கருதப்படுகிறான் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இங்கே எந்தவிதப் பாலினப் பாகுபாடும் காட்டப்படவில்லை என்பதை நாம் தெளிவாகக் கவனிக்க வேண்டும்.
இப்போது, இந்த வசனத்தின் உண்மையான பொருளைக் காண்போம்.
இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு முக்கியமான எபிரெய வார்த்தைகளைக் கவனிக்க வேண்டும். ஒன்று கெலி (Keli), மற்றொன்று சிம்லா (Simlah). இவை தமிழ் வேதாகமத்தில் வெவ்வேறு வழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பழைய ஏற்பாட்டில் பொதுவாக ஆடைகளைக் குறிக்க 'சிம்லா' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு “வெளியே அணியும் ஆடை” அல்லது “அங்கியைக்” குறிக்கிறது. எனவே, எந்தவொரு ஆடையையும் குறிக்க இவ்வார்த்தையைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கது.
ஆனால் 'கெலி' என்ற சொல்லானது: கவசம், பை, வண்டி, தளவாடங்கள், கருவி, நகை, சாக்கு, பொருள், பாத்திரம், ஆயுதம், சாமான்கள், படகு, இருக்கை போன்ற பல்வேறு பொருட்களைக் குறிக்கப் பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வார்த்தை பழைய ஏற்பாட்டில் 319 தடவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சொல் மனிதர்கள் வைத்திருக்கும் அல்லது அணியும் எந்தவொரு பொருளையும் குறிப்பதற்காகவும் பயன்படுத்தப்படலாம்.
பொதுவாக, பெண்கள் ஆண்களின் போர் ஆயுதங்கள்/அணிகலன்களையும், ஆண்கள் பெண்களின் பிரத்தியேக அணிகலன்களையும் அணிவதையே இது சுட்டிக்காட்டுகிறது என்று பெரும்பாலான வேத பண்டிதர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக, இது புறஜாதிகளின் உருவ வழிபாட்டு வழக்கத்தைக் குறிக்கிறது என்று பல அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆண்களின் உடையைப் பெண்களும், பெண்களின் உடையை ஆண்களும் அணிவது என்பது இஸ்ரவேலர் அல்லாத பிற மதங்களின் சில சடங்குகளைக் கடைப்பிடிப்பதைக் காண்பிக்கிறது. எனவேதான், இது தடைசெய்யப்பட்ட ஒன்றாக வேதம் கூறுகிறது.
வேதாகம காலங்களில் ஆண்களும் பெண்களும் ஏறத்தாழ ஒரே மாதிரியான ஆடைகளையே அணிந்திருந்தனர்; எனவே, இது சாதாரணமாக வீட்டிற்குள் பயன்படுத்தப்படும் ஆடைகளை மட்டுமே குறிக்கிறது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. பழைய ஏற்பாட்டுக் காலங்களில், ஆண்களும் பெண்களும் மேலோட்டமாக ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்தனர். நீண்ட அங்கி போன்ற ஆடைகளும், அதற்கு மேலாகப் போர்த்திக்கொள்ளும் ஆடைகளும் இருபாலருக்கும் பொதுவானதாகவே இருந்தன. இருப்பினும், அவர்கள் அதை அணிந்திருந்த விதம் அல்லது அதனுடைய வடிவமைப்பு பாலினங்களுக்கு இடையே தெளிவான வேறுபாட்டைக் காண்பிக்கக்கூடியதாக இருந்தது. தேவனுடைய மக்கள் அந்த வேறுபாடுகளை மதித்து நடக்கும்படியே இந்தக் கட்டளை அறிவுறுத்துகிறது.
எனவே, இது பாலினங்களுக்கு இடையே உள்ள இயற்கையான வேறுபாடுகளை வேண்டுமென்றே நீர்த்துப்போகச் செய்யும் வகையிலான ஆடைகளை அணிவதற்கு எதிரான கட்டளையாகும். இது அன்றாடம் வீடுகளில் அணியும் சாதாரண ஆடைகளைக் குறிப்பதாக இருக்க முடியாது; மாறாக, சில குறிப்பிட்ட, அசாதாரணமான ஆடைகள், ஆயுதங்கள் அல்லது நகைகளை ஓர் ஆண் அணிந்து தன்னை ஒரு பெண்ணைப் போலவே தோற்றமளிக்கச் செய்வதைக் குறிக்கிறது. இது பண்டைய உலகில் இஸ்ரவேலர் அல்லாத புறஜாதிகளிடையே வழக்கத்திலிருந்த ஒன்றாகும். மேலும், இது ஓரினச்சேர்க்கை மற்றும் வேசித்தனத்துடனும் தொடர்புடையதாக இருந்தது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இஸ்ரவேலர்கள் அந்நிய தேசங்களின் அருவருப்பான வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவதைத் தடுக்கும் விதிமுறைகளில் இதுவும் ஒன்றாகும். இத்தகைய சமயப் பின்னணியில் இதைப் பார்க்கும்போது, ஆண்களின் ஆடையைப் பெண்களும், பெண்களின் ஆடையை ஆண்களும் அணிவதற்கான தடை என்பது, வெறுமனே ஆடை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; அது புறமத வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவதைத் தடுப்பதற்கானதாகும். இஸ்ரவேலர்கள் பிற மதத்தினருடன் இணைந்து விக்கிரக வழிபாட்டின் அருவருப்பான பழக்கங்களுக்குள் சென்றுவிடக் கூடாது என்பதே இச்சட்டம் கொண்டுவரப்பட்டதன் பிரதான நோக்கமாகும் என நாம் தைரியமாகக் கூறலாம்.
கேள்வி: உபாகமம் 22:13-22: பெண்களே, உங்கள் கன்னித்தன்மையின் அடையாளங்களைக் கண்டிப்பாகக் காப்பாற்றிக்கொள்ளுங்கள். இல்லையெனில், உங்கள் ஊரைச் சேர்ந்த மனிதர்கள் உங்களைக் கல்லெறிந்து கொல்வார்கள். ஆனால், இது ஆண்களுக்குப் பொருந்தாது. ஒரு ஆண் தன் மனைவியைக் கைவிட நினைத்தால், அவள் கன்னித்தன்மையின் அடையாளங்களை இழந்துவிட்டாள் என்று கூறி அவளை விலக்கிவிடலாம். திருமணமான ஒரு பெண், தான் கன்னித்தன்மையுடன் இருக்கிறேன் என்பதை நிரூபிக்க எந்த வழியும் அவளுக்கு இல்லை என்பதாலும், அதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அவளுடைய கணவனுக்கே இருப்பதாலும், இது பெண்களுக்கு எதிரான சட்டமாகத் தோன்றுகிறதே?
விளக்கம்: இந்த வேதப்பகுதியிலிருந்து நாம் முதலாவதாகப் புரிந்துகொள்ள வேண்டிய காரியம் என்னவெனில், இது புதிதாகத் திருமணமான ஒரு மனிதன், தனது மனைவி கன்னித்தன்மையுடன் இருக்கிறாளா இல்லையா என்பது எழுப்பும் சந்தேகத்துடன் தொடர்புடையது. இங்கே வேறு எந்தக் காரணத்திற்காகவும் அவன் அவளை வேண்டாமென்று தள்ளிவிடவில்லை. அவள் தனது கன்னித்தன்மையை இழந்துவிட்டாள் என்ற காரணத்திற்காக மட்டுமே அவள்மீது குற்றம் சாட்டுகிறான். திருமணத்திற்கு முன்னரே அவள் தன்னுடைய தூய்மையைக் காத்துக்கொள்ளவில்லை என்ற காரணத்தினாலேயே அவன் அவள்மீது குற்றம் சாட்டி அவளை வெறுக்கிறான்.
பண்டைய கலாச்சாரங்களில் கன்னித்தன்மை மிகவும் உயர்வாக மதிக்கப்பட்டது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஒரு பெண் தனது கன்னித்தன்மையைப் பற்றிக் கணவனிடம் பொய் சொன்னால், அவன் தான் ஏமாற்றப்பட்டதாக உணருகிறான்.
இத்தகைய சிக்கலைத் தீர்ப்பதற்கு வேதம் கூறும் தீர்வு என்ன?
பழங்கால யூத வழக்கப்படி, ஒரு பெண் தனது கணவருடன் முதலாவது முறையாக உடலுறவு கொள்ளும்போது ஒரு வெள்ளைத் துணியை விரித்து அதன்மேல் நெருக்கமாக இருப்பாள். அவள் கன்னித்தன்மையுடன் இருந்தால், உடலுறவின்போது ஏற்படும் சிறிய காயம் காரணமாகச் சில துளி இரத்தம் அந்தத் துணியில் படும். இது அந்த இளம் பெண்ணின் கன்னித்தன்மைக்குச் சான்றாக அமையும். இந்த இரத்தக்கறை படிந்த துணி, திருமணமான பெண்ணின் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்படும். இதை அவர்கள் தங்களது மகளின் கன்னித்தன்மைக்குச் சான்றாக வைத்துக்கொள்வார்கள்.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கன்னித்தன்மை குறித்த பிரச்சினை உருவானால், அந்தப் பெண்ணின் பெற்றோர் தங்கள் மகள் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்க, தங்கள் வசம் இருக்கும் அந்தத் துணியை நகரத்தின் மூப்பர்களிடம் ஆதாரமாகக் கொண்டு வருவார்கள். ஒருவேளை அந்த ஆண் தவறான குற்றச்சாட்டைத் தன் மனைவியின்மீது சுமத்தியது கண்டறியப்பட்டால், அவன் அந்தப் பெண்ணின் தந்தைக்குப் பெரும் அபராதம் செலுத்த வேண்டும். மேலும், எந்தக் காரணத்தைக் கொண்டும், எக்காலத்திலும் தனது மனைவியை விவாகரத்து செய்யும் உரிமையை அவன் முற்றிலுமாக இழக்க நேரிடும்.
ஆனால், அதேசமயம் அந்தப் பெண் திருமணத்திற்கு முன்பே கன்னித்தன்மையை இழந்தவள் என்பது நிரூபிக்கப்பட்டால், அவள் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, கல்லெறிந்து கொல்லப்படுவாள். இது அவளுக்கு வழங்கப்படுகிற நியாயமான தண்டனையாகவே கருதப்பட்டது. இத்தண்டனை அவள் திருமணத்திற்கு முன்னரே பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதற்காக மட்டுமல்ல (திருமணத்திற்கு முந்தைய பாலுறவில் ஈடுபடுகிறவள் வேசி எனப்படுவாள்), தன்னுடைய கணவனைத் திட்டமிட்டு ஏமாற்றியதற்காகவும் ஆகும்.
எனவே, இச்சட்டம் உண்மையிலேயே தூய்மையான கன்னியாக இருக்கும் பெண்ணுக்கு எந்த விதத்திலும் பாதகமானதல்ல. ஆதாரத்தின் அடிப்படையில் அவள் இயல்பாகவே குற்றமற்றவளாகிவிடுவாள்; அவளுக்கு எந்தவிதத் தண்டனையும் கிடையாது. தன் மனைவியின்மீது வீண்பழி சுமத்தும் ஆணே இங்கு கடுமையாகத் தண்டிக்கப்படுகிறான். ஒருவேளை அவள்மீது சாட்டப்பட்ட குற்றம் ஆதாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்டால் மட்டுமே அவள் தன் குற்றத்துக்கான தண்டனையைப் பெறுவாள்.
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2026. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.