ஞாயிறு காலை ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நாட்களின் வழக்கப்படி, சங்கீதங்களை, போதகர் முதலில் மெதுவாகப் பாட, சபையோர் அவற்றைக் கிளிப்பிள்ளைகள் போல, மீண்டும் பரிதாபமாகப் பாடினார்கள். ஆராதனையில் போதகரின் மகன் ஐசக் வாட்ஸ் பொறுமை இழந்து காணப்பட்டான். ஆராதனை முடிந்தவுடன், போதகரின் வீட்டில் சலசலப்பு!
"தேவனைத் துதித்துப் பாடுவது, பரலோகத்தின் பரவசத்தை நினைப்பூட்டும் முக்கிய ஆராதனைப் பகுதியாகும். ஆனால், பூமியில் நாம் அதைப் பாடும் முறையோ, சகிக்க முடியாத நிலையில் இருக்கிறது!" என வார்த்தைகளைக் கொட்டினான் வாட்ஸ். வெகுண்ட அவன் தந்தை, "வாலிபனே, உன்னால் முடிந்தால், இதைவிட மேலான பாடல்களை எழுதிக் கொடு." என்று சவால் விட்டார்.
இச்சவாலை ஏற்ற ஐசக் வாட்ஸ், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, ஞாயிறுதோறும் ஒரு புதுப்பாடலை எழுதினார். அதைத் தொடர்ந்து, வேதாகமத்தின் அனைத்து சங்கீதங்களிலும், பன்னிரென்டைத் தவிர மற்றெல்லாவற்றையும், புத்தெழுச்சிப் பாடல்களாக எழுதினார்.
"புதிய ஏற்பாட்டுத் திருச்சபையின் அனுபவ நடையில், புதிய கருத்துச் செறிவுடன், சங்கீதங்களை, யூதருடைய எபிரெய பாணியிலிருந்து வேறுபடுத்தி, கிறிஸ்தவ முறையில் பாடவேண்டும்." என்பது வாட்ஸின் கருத்து. எனவே, இம்முறையில், முற்றும் புதிய கோணத்தில், சங்கீதங்களை உற்சாகத்துடன் பாடுவதற்கு, அவர் வழிவகுத்தார்.
தேவன், ராஜாதி ராஜனாக, நீதியோடும், நியாயத்தோடும் பூமியை அரசாளுவார், என்பதையும், அவர் தமது கிருபையையும், இரட்சிப்பையும் விளங்கச் செய்கிறார் என்பதையும் குறித்துப் பாடப்படும் மகிழ்ச்சிக் கீதமாக, சங்கீதம் 98 விளங்குகிறது. ஐசக் வாட்ஸ் இப்பாடலின் மூலம், இச்சங்கீதத்திற்கு புதியதொரு விளக்கத்தைக் கொடுக்கிறார். பூமியும், அதின் குடிகளும், சமுத்திரமும், அதின் நிறைவும், முழங்கிக் கெம்பீரித்து பெத்லெகேம் பாலகனைப் போற்றுவதாக, வாட்ஸ் தெளிவுபடுத்துகிறார். அத்துடன், பிலிப்பியர் 4:4 ல், பவுல் எழுப்பும் மகிழ்ச்சி மணி ஓசையை, இந்தக் கருத்துடன் இணைத்து, இப்பாடலை 1719-ம் ஆண்டு எழுதினார்.
இந்த இனிய கிறிஸ்மஸ் பாடலுக்கு, ஜார்ஜ் பிரடெரிக் ஹாண்டல் ராகம் அமைத்தார்.
சென்னை மாநகரின் கிண்டிப்பகுதியிலுள்ள, "ராஜ்பவன்" என்னும் பிரம்மாண்டமான கவர்னர் மாளிகையைப் பார்த்திருக்கிறீர்களா? இத்தகைய உயர்ந்த பதவியில் இருப்பவர்களும் கூட, ராஜாதி ராஜனாம், இயேசு ராஜனைப் புகழ்ந்து பாடியதைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா?
சிறந்த கிறிஸ்தவ ஆராதனைப் பாடலாகிய, இப்பாடலை எழுதிய சர் ராபர்ட் கிரான்ட், 1779-ம் ஆண்டு இந்திய மண்ணில், வங்காளப் பகுதியில் பிறந்தார். இவரது தந்தை சார்லெசும் கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குனராக, இந்தியாவில் பணியாற்றியவர். அவர் இங்கிலாந்து தேசப் பாராளுமன்ற உறுப்பினராயிருந்தாலும், திருச்சபையின் நற்செய்திப் பணியிலும் உற்சாகமாக ஈடுப்பட்டார். எனவே, அவரது மகன் சார்லெசும், 1834-ம் ஆண்டு, பம்பாயின் கவர்னராக உயர் பதவி வகித்தாலும், தன் வாழ்நாள் முழுவதும், ஆண்டவரின் ஊழியத்தில் ஈடுபாடு கொண்ட, உண்மைக் கிறிஸ்தவராக விளங்கினார். தன் அன்புச் செயல்களால் இந்தியர்களைக் கவர்ந்தார். எனவே, அவர் நினைவுச் சின்னமாக, இன்றும் அவர் பெயரில், ஒரு மருத்துவக் கல்லூரி இருக்கிறது.
இப்பாடல், சர்வ வல்லவரை ராஜாவாகவும், கேடகமாகவும், பாதுகாப்பவராகவும், அநாதியானவராகவும், சிருஷ்டிகராகவும், மீட்பராகவும், நண்பராகவும், பல தலைப்புகளில் உருவகப்படுத்தி ஆராதிக்கிறது. மற்றும், இறைவனின் வல்லமை, சத்துவம், கிருபை, பராமரிப்பு, தெய்வீக அன்பு, முதலான குணாதிசயங்களையும் உயர்த்திக் கூறுகிறது. எனவே, தேவனை முழுமையாக ஆராதிக்க உதவும் சிறந்த பாடலாக, இன்றும் விளங்குகிறது.
இப்பாடல், ராபர்ட்டின் மரணத்துக்குப்பின் மறு ஆண்டே, "பக்திக் கவிதைகள்" என்று, 1839-ம் ஆண்டு வெளியிடப்பட்ட, ராபர்ட்டின் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றது. இப்பாடலின் "லியான்ஸ்" என்ற ராகத்தை, ஹேடன் என்பவர் அமைத்ததாகக் கருதப்படுகிறது. இந்த ராகம் வில்லியம் கார்டினரின் "பக்திக் கீதங்கள்," என்ற புத்தகத்தின் இரண்டாம் தொகுப்பில், 1815-ம் ஆண்டு வெளியானது.
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.