சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் (லூக்கா 18-1)
நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்; (1 திமோத்தேயு 2:1)
நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா?
நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா? என்று நான் உங்களை கேட்கிறேன். ஏனென்றால் ஜெபமே மனிதனின் இரட்சிப்புக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. நான் உங்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். அது மூன்று வார்த்தைகளில் அடங்கியது. நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா? இந்தக் கேள்விக்கு நீங்கள் மட்டுமே பதிலளிக்க முடியும். நீங்கள் பொது ஆராதனையில் கலந்துகொள்கிறீர்களா இல்லையா என்பது உங்கள் போதகருக்கு தெரியும். உங்கள் வீட்டில் குடும்ப ஜெபம் நடத்துகிறீர்களா இல்லையா என்பது உங்கள் குடும்பத்தாருக்கு தெரியும். ஆனால், நீங்கள் தனிப்பட்ட முறையில் ஜெபிக்கிறீர்களா இல்லையா என்பது உங்களுக்கும் தேவனுக்கும் மட்டுமே தெரியும்.
நான் உங்களுக்கு சொல்லப்போகிற இந்த காரியத்தை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுகிறேன். இந்த கேள்வியை குறித்து, இது எங்களின் தனிப்பட்ட விஷயம் என்று சொல்லாதீர்கள். உங்கள் இருதயம் தேவனுடைய பார்வைக்கு முன்பாக சுத்தமாக இருக்கும் போது நீங்கள் எதைப்பற்றியும் பயப்பட தேவையில்லை!
நாங்கள் ஜெபிக்கிறோம் என்று சொல்லி என்னுடைய கேள்வியை அலட்சியப்படுத்திவிடாதீர்கள்! இந்த கேள்வி மிகவும் அவசியமானாதா என்றும் என்னிடம் கேட்காதீர்கள். ஒருசில நிமிடங்கள் நான் சொல்லப் போகிற காரியங்களை பொறுமையுடன் கேளுங்கள். அப்போது தான் நான் இந்த கேள்வியை கேட்டதற்கான காரணத்தை புரிந்துக்கொள்வீர்கள்.
இரட்சிப்பிற்கு தேவை
நான் இதை ஒரு ஆலோசனையாக சொல்லாமல், மிக முக்கியமான தேவை என்று சொல்லுகிறேன். நான் இப்போது ஒரு குழந்தையிடமோ அல்லது ஒரு முட்டாளிடமோ பேசவில்லை. அதேபோல நான் ஒரு அவிசுவாசியிடமும் பேசவில்லை. எங்கே கொஞ்சம் கொடுக்கப்படுகிறதோ, அங்கே கொஞ்சம் கேட்கப்படும். தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளும் மக்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். அப்படி தங்களை அழைத்துக்கொள்ளுகிற மக்களைப் பார்த்து நான்சொல்வது என்னவென்றால், ஜெபிக்காத எந்த ஒரு ஆணோ அல்லது பெண்ணோ இரட்சிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது.
இரட்சிப்பு கிருபையினால் மாத்திரமே கிடைக்கிறது என்று ஆணித் தரமாக சொல்லுகிறேன். மிகப்பெரிய பாவிக்கும் அது முழுமையாய் இலவசமாக கிடைக்கிறதாய் இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்ளுகிறேன். இன்றும் மரணப்படுக்கையில் இருப்பவர்களை பார்த்து "இப்போதே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள், அப்போது நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்" (அப் 16:31) என்று சொல்ல தயங்கமாட்டேன். ஆனால், ஒருவர் இந்த வார்த்தைகளைக் கேட்காமலேயே இரட்சிக்கப்பட்டதாக நான் வேதத்தில் பார்க்கவில்லை. மனிதர்கள் தங்கள் இருதயத்திலிருந்து "கர்த்தராகிய இயேசுவே, எனக்கு அதைத் தாரும்" என்று கேட்காமல் தங்கள் பாவத்திற்கான மன்னிப்பை பெற்றுகொண்டதாக நான் பார்க்கவில்லை. தங்கள் ஜெபங்களின்மூலமாக மட்டுமே இரட்சிப்பை யாரும் பெறுகிறதில்ல. ஆனால், ஜெபிக்காமல் இரட்சிப்பை பெற்று கொண்ட ஒருவரையும் நான் கண்டதுமில்லை!
ஒருவர் வேதத்தை வாசிப்பது இரட்சிப்புக்கு முற்றிலும் அவசியமானது அல்ல! ஏனென்றால் மனிதர்கள் படிப்பறிவு அற்றவர்களாகவோ அல்லது குருடராகவோ இருந்தாலும் கூட கிறிஸ்து அவர்கள் இருதயத்தில் இருக்க முடியும்! அதேபோல் மனிதர்கள் சுவிசேஷ பிரசங்கத்ததை கேட்பதும் இரட்சிப்பை பெற்றுக் கொள்வதற்கு அத்தியாவசிய தேவை யில்லை. ஏனெனில் மக்கள் சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களிலே கூட வாழலாம் அல்லது வாழ்நாள் முழுவதும் படுக்கையிலே இருக்கும் வியாதியுள்ளவராய் இருக்கலாம் அல்லது செவிடராய் இருக்கலாம். ஆனால் ஜெபத்தைப் பற்றி அதையே சொல்லமுடியாது. ஜெபமானது மனிதன் இரட்சிப்பை பெற்றுக்கொள்வதற்கு அத்தியாவசிய தேவையாய் இருக்கிறது.
தனிப்பட்ட பொறுப்பு
மனிதர்கள் கற்றுகொள்வதற்கும், சுகாதாரத்தை பெற்று கொள்வதற்கும் வித்தியாசமான பாதையென ஒன்றுமில்லை. பிரதம மந்திரிகள், அரசர்கள், ஏழை மற்றும் விவசாயிகள் என அனைவரும் ஒரே மாதிரி தான் தங்கள் சரீரத் தேவைகளையும், இருதயத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளுகிறார்கள். எந்த மனிதனும் மற்றவர்களுக்கு பதிலாக உண்ணவோ, குடிக்கவோ அல்லது தூங்கவோ முடியாது. அதேபோல் எந்த ஒரு மனிதனும் மற்றவர்களுக்காக கல்விக் கற்க முடியாது. இவை அனைத்தும் ஒவ்வொருவரும் தாங்களே செய்ய வேண்டியவை, இல்லையெனில் அவை நிறைவேறாது.
எப்படி நமது மனதுக்கும் உடலுக்கும் தேவைகள் இருக்கிறதோ அதேபோல் நமது ஆத்துமாவிற்கும் தேவைகள் இருக்கிறது. நமது ஆத்துமா நன்றாக இருப்பதற்கு ஒருசில தேவைகள் மிகவும் அத்தியாவசியமாய் இருக்கிறது. அந்த தேவைகளை ஒவ்வொருவரும் தங்களுக்கென்றே செய்யவேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கென்றே மனந்திரும்பவேண்டும். ஒவ்வொருவரும் கிறிஸ்துவிடம் தங்களுக்கென்றே செல்லவேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கென்றே தேவனிடம் ஜெபிக்க வேண்டும். இந்த காரியங்களை உங்களுக்காக நீங்கள் மட்டுமே செய்யமுடியும். உங்களுக்கு பதிலாக வேறு யாராவது இவைகளை செய்யமுடியாது. ஜெபிக்காமல் இருப்பது தேவனுக்குள் இல்லாமல் இருப்பதாகும், கிறிஸ்துவுக்குள் இல்லாமல் இருப்பது, கிருபை இல்லாமல் இருப்பதாகும், நம்பிக்கை இல்லாமல் இருப்பது, பரலோகம் இல்லாமல் இருப்பதாகும். அது நரகத்தின் சாலையில் போய்க்கொண்டிருப்பது போல் ஆகும். இப்போது, நான் கேட்கும் கேள்வியான நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா? என்று கேட்பதில் ஆச்சரியமில்லையே?





