பாடல்: எத்தனை நாவால் பாடுவேன்
ஆசிரியர்: சார்லெஸ் வெஸ்லி
"எனக்கு மட்டும் ஆயிரம் நாவுகள் இருந்தால், அத்தனை நாவுகளையும் கொண்டு என் இயேசுவைப் போற்றுவேன்!"
மொரோவியர் குழுத்தலைவர் பீட்டர் போலர் பிரசங்க மேடையில் இவ்வாறு உற்சாகமாய் முழங்கியதைக் கேட்டுக் கொண்டிருந்தார் சார்லெஸ் வெஸ்லி. தனது ஆல்டெர்கேட் இரட்சிப்பு அனுபவத்தின் 11-வது நினைவு நாளைக் கொண்டாட, வெஸ்லி எழுத நினைத்த பாடலின் தலைப்பாய் இவ்வாஞ்சை மாறியது.
எனவே, 1749-ல் 19 சரணங்களுடன் வெஸ்லி எழுதிய இப்பாடலுக்கு, அவர் கொடுத்த தலைப்பு "ரட்சிப்பின் அனுபவ நினைவு நாள் பாடல்" என்பதே. நன்றிப் பெருக்குடன் தன் சொந்த ரட்சிப்பின் அனுபவத்தைப் பற்றி பல சரணங்களை இதில் எழுதினார். இதைப் பார்த்த அவரது சகோதரர் ஜான் வெஸ்லி, இதில் பல சரணங்களை எடுத்துவிட்டு, இதை ஒரு 7 சரணப் பாடலாக மாற்றினார்.
இப்பாடல் ஆயிரம் மொழிகளில் ஆண்டவரைத் துதிக்க விரும்புவதாகவும் அர்த்தம் கொள்கிறது. இதனால் இப்பாடல் வேதாகம மொழிபெயர்ப்பில் ஈடுபட, பல மிஷனரிகளை உற்சாகப்படுத்தியிருக்கிறது. தற்போது வேதாகமம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
50 ஆண்டுகளுக்கு மேல், ஆண்டவருக்காக உற்சாகமாய் உண்மையோடு ஊழியம் செய்த சார்லெஸ், 29-3-1788 அன்று மரித்தார். அவர் மரணப்படுக்கையில் இருந்தபோது கூட, ஆண்டவரைத் துதித்து தன் கடைசிப் பாடலை அவரது மனைவியின் உதவியுடன் எழுதினார். இது, ஆண்டவர் மீது அவருக்கிருந்த அன்பையும், பாடல் எழுதுவதில் அவருக்குள் இருந்த தணியாத ஆவலையும் காட்டுகிறது.
இப்பாடலுக்கு கார்ல் G. கிளேசர், "அஸ்மோன்" என்ற ராகத்தை அமைத்தார்.