images/new_theme/Promotion banner-4-2-min.jpg

ஆதியாகமம் 3:16, ஏவாள் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை உண்டதால், எல்லாப் பெண்களும் குழந்தை பிறக்கும்போது மிகுந்த வேதனையை அனுபவிக்க வேண்டும் என்று கூறுகிறது. (இறந்து போன மூதாதையர்களுக்குச் சற்றும் தொடர்பில்லாத அவர்களுடைய உறவினர்கள் பாவப் பரிகாரத்திற்காகப் பணத்தைச் செலவழிப்பது எப்படியோ, அப்படியே ஏவாளின் பாவத்திற்குச் சற்றும் தொடர்பில்லாத, அவளுடைய தலைமுறையில் வருகிற பிற்காலப் பெண்கள் பிரசவ காலத்தில் வேதனையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இது பெண்களுக்குக் காட்டப்படும் பாகுபாடு அல்லவா?)

ஆதியாகமம் மூன்றாம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள மனிதகுலத்திற்கு ஏற்பட்ட பாவவீழ்ச்சியைப் பற்றிச் சிந்திக்கும் முன்னர், ஒன்று மற்றும் இரண்டாம் அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ள படைப்பின் விவரங்களைச் சற்று உற்றுக் கவனிக்க வேண்டியது அவசியம். ஆண், பெண் இருவருமே தேவனுடைய சாயலிலும், தேவனுடைய ரூபத்திலும் படைக்கப்பட்டார்கள். “பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக!... தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்” (ஆதியாகமம் 1:26,27). இருவருமே தேவ சாயலில் படைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் இருவருடைய குணத்திலும் மதிப்பிலும் எவ்வித வேறுபாடும் இல்லை. மேலும் ஆதியாகமம் 1:28-30-இல் “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்று சொல்லப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் ஆண், பெண் இருவருக்கும் சேர்ந்தே வழங்கப்பட்டுள்ளன. எனவே, படைப்பின் செயல்பாட்டிலிருந்தும், ஆசீர்வாதங்களை வழங்கியதிலிருந்தும், எல்லா ஆணும் பெண்ணும் தேவனுக்கு முன்பாகச் சமமாக இருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கிடையே எவ்வித வேறுபாடுகளும் இல்லை எனவும் தெளிவாகத் தெரிகிறது.

அடுத்ததாக அவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைக்கப்பட்டபோது, ஆதியாகமம் 2:18-25 வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி, தேவனானவர் கணவனுக்கும் மனைவிக்கும் வெவ்வேறு வகையான பாத்திரங்களைக் (பங்களிப்புகளைக்) கொடுத்தார். (அவர்களுடைய மதிப்பில் அல்லது பெறுமதியில் வேறுபாடு அல்ல, பங்களிப்பில்தான் வேறுபாடுகள் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறோம்). தேவன் பெண்ணை ஆதாமுக்கு ஏற்ற துணையாகப் படைத்தார். இதிலிருந்து ஓர் ஆணுக்குச் சம அளவிலுள்ள ஓர் உதவியாளர் அல்லது ஒரு துணையாளர் தேவை என்னும் உண்மையைக் கண்டுகொள்கிறோம்.

ஆதியாகமம் 2:18-20-இல் பயன்படுத்தப்பட்டுள்ள, “ஏற்றதுணை” என்ற வார்த்தைக்கு எபிரெய மொழியில் 'அய்ஸர்' (ezer) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வார்த்தை பழைய ஏற்பாட்டில் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம், மிக இன்றியமையாததும் முக்கியமானதுமான, ஆற்றல்மிக்க மீட்பின் நடவடிக்கைகளுக்கு உதவிசெய்யக்கூடிய செயலின் பின்னணியில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. 'ஏஸர்' (ezer) என்னும் இந்தப் பெயர்ச்சொல் பழைய ஏற்பாட்டில் இருபத்தி ஒரு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் இரண்டு முறை முதல் பெண்ணாகிய ஏவாளின் தொடர்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூன்று முறை உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் உதவி செய்கிற (அல்லது ஆபத்தில் உதவி செய்யத் தவறிய) நபர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பதினாறு முறை தேவன் நமக்கு உதவியாளராக இருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஏவாளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள, “ஏற்றதுணை” என்ற வார்த்தையானது வேறு பகுதிகளில், “தேவன் நமக்கு உதவிசெய்கிறவர்” என்று சொல்லப்பட்டுள்ளதைக் காண்கிறோம். எனவே தோராவில் பெண்ணின் பங்கு என்பது குறைந்த மதிப்புடையது அல்ல; மேலும் முக்கியத்துவம் குறைந்ததும் அல்ல. ஆகவே பெண்ணின் மதிப்பும் தகுதியும் ஆணுக்குக் கொடுக்கப்பட்டதைப் போலவே இருக்கிறது. ஆயினும் அவர்கள் ஆற்ற வேண்டிய பங்களிப்பில் வேறுபாடுகள் இருக்கின்றன.

இப்பொழுது மூன்றாம் அதிகாரத்துக்கு வருவோம். ஆணும் பெண்ணும் தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் பாவத்தில் விழுந்தனர். நீதியும் பரிசுத்தமுமான தேவனால் பாவம் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். ஆகவே தேவன் அவர்களுக்குத் தண்டனை வழங்கினார். இதில் ஏவாளுக்கு வழங்கப்பட்ட தண்டனையே, அவள் பிரசவ வேதனைப்படும்போது வலி உண்டாகும் என்பது. ஆயினும் ஏவாளுக்குத் தண்டனை வழங்கிய விதத்திலும் தேவன் எவ்விதப் பாலினப் பாகுபாடும் காட்டவில்லை என்பதை மூன்று கருத்துகளை முன்வைத்து நிரூபிக்க விரும்புகிறேன்:

முதலாவதாக, ஏவாள் முதலாவது பாவம் செய்தாள், பிறகு ஆதாம் பாவம் செய்தான் என்பது உண்மையாயினும், தேவனுக்கு எதிராகக் கலகம் செய்ததற்காக நியாயந்தீர்க்கப்பட்டு தண்டிக்கப்பட்டது ஏவாள் மட்டுமின்றி, ஆதாமும் இதற்குக் காரணமாயிருந்த சர்ப்பமுமே ஆவர். தேவன் ஒருபோதும் ஏவாளை மட்டுமே பாவத்திற்குப் பொறுப்பாக்கவில்லை. ஆதாமின் மீதும் சமமாகக் குற்றம் சாட்டப்பட்டிருப்பதை வேதாகமம் முழுவதிலும் காண்கிறோம். உண்மையில், அவர்கள் கீழ்ப்படியாமல் பாவம் செய்துவிட்டார்கள் என்று தெரிந்தவுடன் தேவன் ஆதாமிடமே முதலாவது விளக்கம் கேட்டதை ஆதியாகமம் 3:9-11-இல் காண்கிறோம். அதன் பிறகுதான் அவர் ஏவாளிடம் வினவினார். வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள பகுதிகளில் ஆதாமே பாவத்தின் மூல காரணராகக் குற்றம் சாட்டப்பட்டிருப்பதை அடிக்கடிப் பார்க்கிறோம் (ரோமர் 5, 1 தீமோத்தேயு 2 முதலிய பகுதிகள்). இந்தப் பகுதிகளில் ஆதாமே முழு மனிதகுலத்தின் தலைவராகக் குறிப்பிடப்படுகிறார். மேலும் ஆதாமின் மூலமாகவே பாவம் இந்த உலகில் பிரவேசித்தது என்று குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அதுமட்டுமின்றி, தேவன் தண்டனை வழங்கும்போது அதை முதலில் சர்ப்பத்துக்கும், பின்னரே ஏவாளுக்கும் வழங்கினார்.

இரண்டாவதாக, தேவன் ஆதாமுக்கும் சர்ப்பத்திற்கும் வெவ்வேறு வகையிலான தண்டனைகளை வழங்கினார். ஆனால் ஏவாளுக்கோ பிரசவத்தின்போது ஏற்படுகிற வலி மட்டுமே தண்டனையாகக் கொடுக்கப்பட்டது. ஏதேன் தோட்டத்தில், உழைப்பும் விவசாயமும் இல்லாமலேயே அவர்களுக்குத் தேவையான உணவு ஏராளமாகக் கிடைத்தது. ஆனால் பாவத்திற்குப் பிறகு, ஏதேனிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்பு, ஆதாம் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் வாழ்நாள் முழுவதும் கடினமாக உழைக்க வேண்டியதாயிற்று. ஆதாம் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஒவ்வொரு நாளும் வியர்வை சிந்தி உழைப்பதன் மூலமாக அனுபவித்தான். மாறாக, ஏவாளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்போ குழந்தை பெற்றெடுக்கும் சமயத்தில் ஏற்படுகிற வலியாகிய தண்டனை மட்டுமே ஆகும்.

மூன்றாவதாக, உடனடியாக ஓர் ஆசீர்வாதத்தையும் சேர்த்து வழங்கிய ஒரே தண்டனை ஏவாளுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டதாகும். அவள் பிரசவ வலியால் அவதிப்பட்டாலும், அவள் ஒரு குழந்தையைப் பெறுவாள்; அது மனித குலத்திற்குக் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்றாகும். அவளுக்குப் பிரசவ வலி உண்டாகும் என்று சொல்லப்பட்ட தண்டனையின் ஊடாக, மேலும் ஒரு வாக்குறுதி அவளுக்கு வழங்கப்பட்டதைக் காண்கிறோம். இந்த வாக்குறுதி சர்ப்பத்திற்கு வழங்கப்பட்ட சாபத்தின் ஊடாகக் காணப்படுகிறது: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” (ஆதியாகமம் 3:15). இது மேசியாவைப் பற்றிய ஒரு முக்கியமான தீர்க்கதரிசனம். பெண்ணின் வித்திலிருந்து ஒரு மீட்பர் இந்த உலகில் தோன்றுவார் என்னும் வாக்குறுதி ஏவாளுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதங்களில் மிகவும் பெரியதாகும்.

 

கட்டுரைகள்
More articles ...
More articles ...
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
ஏப்ரல் 13, 2026
பிரசங்கித்தல் என்பது தேவன் நமக்கு அளித்துள்ள ஒரு புனிதமான பொறுப்பாகும். தேவனுடைய வார்த்தையைப்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
கலாத்தியர் 2:11-14 வரையிலான வேதப்பகுதியை மையமாக வைத்து, "பெரிய ஊழியர்கள் செய்யும் பெரிய தவறுகள்"...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
இந்து வேதங்களான ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களில் உள்ள முப்பத்திமூன்று தெய்வங்களில் ஒருவரான...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
எங்களின் தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், கிறிஸ்தவர்களாகிய நீங்கள் "சிந்தியுங்கள்" என்று...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
லூக்கா சுவிசேஷம் 15-ம் அதிகாரத்தில், நம் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான மூன்று உவமைகளைக் குறித்து...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
உண்மையான கிறிஸ்தவன் என்பதற்கான ஒரே அடையாளம் (விதைக்கிறவன் உவமை) மத்தேயு 13:1-9 (வசனம்...

தெடர்ந்து வாசிக்க ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.