(எண்ணாகமம் 30:3-16): இந்தப் பகுதியில், "ஒரு பெண் தன் கணவன் அனுமதிக்காதவரை ஒரு பொருத்தனையைச் செய்ய முடியாது" என்று சொல்லப்பட்டிருப்பது பாலினப் பாகுபாடு அல்லவா?
நாம் மீண்டும் ஒரு முக்கியமான பகுதியைச் சிந்திக்கப் போகிறோம். இதுவே பெரும்பாலான மக்களால் அடிக்கடி தவறாக விளக்கப்படுகிற பகுதியாகும். அந்தப் பெண்ணியவாதி குறிப்பிடுவது போல, இப்பகுதி கர்த்தருக்குப் பொருத்தனை செய்வது பற்றியதுதான். நாம் ஏற்கனவே சிந்தித்தபடி, பொருத்தனை செய்வது ஒரு தீவிரமான விஷயமாகும்; அதை ஒருவரும் எளிதாகக் கருதிவிட முடியாது. எவரொருவர் பொருத்தனை செய்தாலும், அது எந்தக் காரியமாக இருந்தாலும், அதை அவர்கள் நிறைவேற்றியே ஆக வேண்டும். ஒருவேளை ஒரு பெண் தன் தந்தையின் அனுமதியில்லாமலோ அல்லது கணவனின் அனுமதியில்லாமலோ ஒரு பொருத்தனை செய்திருந்து, அதை அவள் நிறைவேற்றாமல் போனால், அவள் அதைச் செலுத்தியே தீர வேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து விடுபடுகிறாள். தேவன் அவளை மன்னிப்பார்; அது அவளுக்குப் பாவமாகக் கருதப்படமாட்டாது. மேலும், கணவனோ அல்லது தந்தையோ அதற்கு உடன்படவில்லை என்றாலும் அவள் அந்தப் பொருத்தனையிலிருந்து விடுபடுகிறாள். என்னைப் பொறுத்தவரை, இது பெண்களைப் பற்றிய காரியத்தில் பதற்றத்தைக் காட்டிலும் பெரிய ஆறுதலையே தருகிறது. ஒரு குடும்பத்தில், தந்தை (திருமணமாகாத பெண்ணின் விஷயத்தில்) அல்லது கணவன் (திருமணமான பெண்ணின் விஷயத்தில்) தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்பதே குடும்பத்தைக் குறித்த தெய்வீக வடிவமைப்பாகும்.
எனவே, "ஒரு பெண் பொருத்தனை செய்ய முடியாது" என்ற பெண்ணியவாதியின் அனுமானம் மிகவும் தவறானது. ஆனால், இந்தப் பொருத்தனைகள் குடும்பத்தின் தேவைகளைச் சந்திக்கவும், அதைப் பாதுகாக்கவும் தேவன் நியமித்த நபர்களாகிய தந்தை அல்லது கணவருடன் தொடர்புடையதாய் இருப்பது ஏற்புடையதா என்பதே இங்கு கேள்வியாகும். ஒரு இளம் பெண் தனது திருமணத்திற்கு முன் தன் தந்தையின் அதிகாரத்தின் கீழ் இருக்கிறபடியால், அவள் வீட்டில் உள்ள விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்; அவளுடைய தந்தைக்குக் கீழ்ப்படியவும் வேண்டும் (நாம் நம் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று கற்பிப்பது போலத்தான் இதுவும்). ஆதியாகமம் 1-2 அதிகாரங்களில் நாம் முன்பு சிந்தித்தபடி, படைப்பில் தேவன் மனிதனை (ஆணை) வீட்டின் தலைவராக உருவாக்கியிருக்கிறார். எனவே, குடும்பத் தலைவரின் வழிநடத்துதலுக்கு அடிபணிந்து நடக்க வேண்டிய பொறுப்பு மனைவிக்கு உள்ளது.
தேவனை மையமாகக் கொண்ட ஒரு அன்பான இல்லத்தில், தந்தையாக இருந்தாலும் சரி, கணவனாக இருந்தாலும் சரி, அவர்கள் அப்பெண் செய்த பொருத்தனையைப் புரிந்துகொண்டு, அதை நிறைவேற்றவே அனுமதிப்பார்கள் என நான் நம்புகிறேன். ஒரு அன்பான குடும்பத்தில், ஒரு பெண் சுயாதீனமாக தேவனுக்குப் பொருத்தனை செய்கிற சுதந்திரம் உள்ள சிறந்த சூழ்நிலையே நிலவும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எனினும், இப்பகுதி சுட்டிக்காட்டுகிறபடி, பெண்கள் பொருத்தனை செய்வதை ஏதோவொரு காரணத்திற்காக ஏற்றுக்கொள்ளாத தந்தைகளும் கணவர்களும் இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், தேவன் பொருத்தனை செய்த அந்தப் பெண்களைக் காப்பாற்றவே விரும்புகிறார். அவர்களுடைய பொருத்தனையின்மீது கவனம் வைக்காமல், அவர்களுக்கு மன்னிப்பையும், பொருத்தனையை நிறைவேற்றாத குற்றத்திலிருந்து விடுதலையையும் தருகிறார்.
சில சமயங்களில், பெண்களின் கடினமான சூழ்நிலைகளைத் தேவன் புரிந்துகொள்கிறார். மேலும், அவருடைய இருதயம் பெண்களுக்கு ஆதரவாக இருக்கிறது. அவரது இரக்கமும் கருணையும் பெண்கள்மீது கரிசனை கொண்டுள்ளது. இது, இந்த தேவனைப் பின்பற்றுவதற்கு எனக்கு அதிக நம்பிக்கையைத் தருகிறது. எனவே, ஒரு பெண் பொருத்தனையை நிறைவேற்றாவிட்டால் அவள் அதற்குப் பொறுப்பாளியாவதில்லை; மாறாக, அவள் பொருத்தனையை நிறைவேற்றவில்லை என்னும் குற்றச்சாட்டிலிருந்து முற்றிலுமாக விடுவிக்கப்படுகிறாள். அப்படியிருக்க, பெண்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டப்படுகிறது என்று எப்படிக் கூறமுடியும்?





