இவைகளெல்லாம் உண்மைதானா?
நான் இப்போது முடிவுரையாகக் கூறப் போகிறேன். நான் கூறிய காரியங்களை ஒருவேளை அநேகர் விரும்பாமல் இருக்கலாம்; அவைகளை ஏற்றுக் கொள்ளாமலும் இருக்கலாம். ஆனால் நான் உங்கள் மனசாட்சியை நோக்கிக் கேட்கிறேன், நான் கூறியவைகள் யாவும் உண்மையில்லையா?
இளைஞர்களே, உங்கள் அனைவருக்கும் மனசாட்சி இருக்கிறது. பாவத்தினால் கறைபட்டு, அழிந்த நிலையில் இருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு மனசாட்சி இருக்கிறது. ஒவ்வொருவரின் இருதயத்தின் மூலையிலும் அமர்ந்து கொண்டிருக்கும் தேவனின் சாட்சியாக அது செயல்படுகிறது. நாம் தவறு செய்யும்போது அது கடிந்து கொள்ளுகிறது; நாம் சரியாக நடக்கும்போது பாராட்டுகிறது. அந்த மனசாட்சியை நோக்கித்தான் நான் இன்று கேட்கிறேன், நான் கூறிய காரியங்கள் யாவும் உண்மையில்லையா?
ஆகவே இளைஞர்களே, இன்றைக்கு ஒரு பொருத்தனை செய்து கொள்ளுங்கள். வாலிபப் பிராயத்திலே சிருஷ்டிகரை நினைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பொருத்தனைதான் அது. கிருபையின் நாட்கள் முடிவதற்கு முன்பாகவும், மனசாட்சியை கால்களின் கீழே தள்ளி அடிக்கடி மிதித்துப் போட்டதினால் அது செத்து போவதற்கு முன்னதாகவும், காலதாமதம் செய்வதினால் வயது சென்று விருப்பம் அற்றுப்போவதற்கு முன்னதாகவும், உங்களுக்கு நேரமும் பெலனும் சந்தர்ப்பங்களும் இருக்கும்போதே கர்த்தருடனே நித்திய உடன்படிக்கை செய்து கொள்ளுங்கள். ஆவியானவர் என்றென்றைக்கும் உங்களுடனே போராடிக் கொண்டேயிருக்க மாட்டார். மனசாட்சியின் சத்தத்தை நீங்கள் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டேயிருந்தால், அந்த சத்தம் மங்கி மறைந்து போய்விடும். அத்தேனே பட்டணத்தார் பவுலிடம், ”நீ சொல்லுகிறதை இன்னொரு வேளை கேட்போம்” என்றார்கள் (அப்போஸ்தலர் 17:32). ஆனால், அப்போஸ்தலனாகிய பவுல் பேசுவதைக் கேட்க இன்னொரு சந்தர்ப்பம் அவர்களுக்கு ஏற்படவேயில்லை. துரிதமாக செயல்படுங்கள், தாமதிக்காதிருங்கள். இனிமேலும் தயங்காதிருங்கள்.
மற்றவர்களுக்கு ஆறுதல் அளியுங்கள்
எனது ஆலோசனையின்படி நீங்கள் நடந்தால் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நீங்கள் அளிக்கக் கூடிய சொல்லமுடியாத ஆறுதலைக் குறித்து எண்ணிப் பாருங்கள். அவர்கள் தங்களுடைய நேரத்தையும், பணத்தையும், சரீர பெலனையும் உங்களுக்காகச் செலவிட்டு உங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கியிருப்பதை நினைத்துப் பாருங்கள். உங்களிடமிருந்து பிரதிபலனை எதிர்பார்க்கும் உரிமை அவர்களுக்கு இருப்பது உண்மைதான். வாலிபர்கள் தேவனுடைய சந்தர்ப்பங்களுக்குத் தங்களைக் கீழ்ப்படுத்துவதால் ஏற்படக்கூடிய சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் யாரால் கணக்கிடக்கூடும்? ஏசா (ஆதியாகமம் 26:34-35), ஓப்னி, பினெகாஸ் (1 சாமுவேல் 4), அப்சலோம் (2 சாமுவேல் 13-18) இவர்களைப் போன்ற வாலிபர்கள் மற்றவர்களுக்கு விளைவிக்கும் துயரத்தையும் வருத்தத்தையும் குறித்து யாரால் விளக்க முடியும்? ஞானியாகிய சாலமோன் மிகவும் சரியாகச் சொல்லியிருக்கிறார்: 'ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான், மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான்' (நீதிமொழிகள் 10:1). ஓ! வாலிபர்களே, இவைகளையெல்லாம் நினைத்துப் பார்த்து, உங்கள் இருதயத்தைக் கடவுளுக்கு ஒப்புக் கொடுங்கள். "உனது வாலிப நாட்கள் முட்டாள்தனமானவை, உனது வாழ்க்கையானது போராட்டம் நிறைந்தது, உன் முதிர்வயது வருந்தத்தக்கது" என்று அநேகரைக் குறித்துச் சொல்லப்பட்டது போல உங்களைக் குறித்தும் சொல்லப்படாமல் இருப்பதாக.
நன்மை செய்யக்கூடிய ஆயுதங்களாயிருங்கள்
உலகத்திற்கு நன்மை செய்யக்கூடிய கருவிகளாக நீங்கள் செயல்பட முடியும் என்பதை நினைத்துப் பாருங்கள். கடவுளின் பரிசுத்தவான்களில் ஏறக்குறைய எல்லாருமே கர்த்தரைத் தங்களுடைய வாலிப நாட்களில் தேடிக் கண்டடைந்தவர்கள்தான். மோசே, சாமுவேல், தாவீது, தானியேல் போன்றவர்கள் தங்களுடைய வாலிப நாட்கள் முதலே கர்த்தருக்குச் சேவை செய்தவர்கள். நமது தேசத்தின் இளம் ராஜாவாகிய ஆறாம் எட்வர்டை தேவன் எவ்வ
அழியாத ஆத்துமாவைப் பெற்றுக் கொள்கிறவர்கள் போகின்ற பாதை இதுதான் என்பதைக் குறித்து யாருக்காவது சந்தேகம் ஏற்படக் கூடுமா? இந்த உலகத்தை விட்டுப் போகையிலே யோசியா ராஜாவைப் போல நற்பெயரோடு போக விரும்பாதவர்கள் யாரும் இருக்கக் கூடுமோ? அவனுடைய பிரிவைக் குறித்து மகா பெரிய புலம்பல் இஸ்ரவேலிலே காணப்பட்டதை 2 நாளாகமம் 35:24-27-ல் வாசிக்கிறோம். இதற்கு நேர்மாறானவனாக இவ்வுலகத்தை விட்டுப் போனவன் யோராம் என்கிற ராஜா; அவன் "விரும்புவாரில்லாமல் இறந்து போனான்" (2 நாளாகமம் 21:20). நீங்கள் உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்ந்து முடிக்க விரும்புகிறீர்கள்? சோம்பேறியாகவும், அற்பத்தனமாகவும், இம்மண்ணில் உபயோகமற்றவர்களாகவும், உங்கள் சரீரத்துக்காகவும், சுயநலத்துக்காகவும், ஆசை இச்சைகளுக்காகவும், பெருமைக்காகவும் வாழ்ந்து முடிப்பது மேலானதா? அல்லது சக மனிதர்களுக்காக உங்களுடைய சகலமும் செலவிடப்படத்தக்க வகையில் வாழ்ந்து முடிப்பது சிறப்பானதா?
-
வில்பர் ஃபோர்ஸ் (1759-1833): சமூக சேவை செய்த ஆங்கிலேய அரசியல்வாதி. அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடியவர். நாடாளுமன்றத்தில் அடிமைத்தனம் கூடாது என்கிற சட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக இறந்து போனார்.
-
ஷாப்டஸ்பரி பிரபு (1801-1885): தேவபக்தி நிறைந்த மனிதர். இங்கிலாந்தில் நடைமுறையில் இருந்த மனிதாபிமானமற்ற பழக்கவழக்கங்களை மாற்றுவதற்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.
இவர்கள் நமது தேசத்திற்கும் உலகத்திற்கும் பிரயோஜனமாக வாழ்ந்ததுபோல வாழ விரும்புங்கள்.
-
ஜான் ஹோவர்ட் (1728-1790): சிறைச்சாலைகளில் இருக்கிறவர்களின் மத்தியிலே நண்பராக ஊழியம் செய்த ஆங்கிலேய அரசியல்வாதியும் வழக்கறிஞரும் ஆவார். சிறைச்சாலைகளில் நடந்த மனிதாபிமானமற்ற கொடுமைகளை பகிரங்கமாக வெளிப்படுத்தி, சிறைச்சாலை முறைகளைச் சீர்திருத்தியவர். அவரைப் போல வாழ விரும்புங்கள்.
-
கிறிஸ்டியன் ஃபிரடெரிக் ஸ்வார்ட்ஸ் (1726-
1798): விக்கிர வழிபாடுகள் நடக்கும் ஸ்தலங்களில் சென்று, ஒரு தகப்பனைப் போல வழிநடத்தி, அநேகர் அழியாத ஆத்துமாவைப் பெற்றுக் கொள்ள உதவின ஜெர்மன் தேசத்து ஊழியர். இவர் இந்தியாவின் தென்பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர்; இவர் மூலமாக அநேக பள்ளிகளும் சபைகளும் உருவாயின. இவரை மாதிரியாக நோக்குங்கள். -
ராபர்ட் மெர்ரே மெக்செய்ன் (1813-1843): ஸ்காட்லாந்து தேசத்தைச் சேர்ந்த பாதிரியார். 19-ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தேவபக்தியுள்ள மனிதர்.
இந்த தேவபக்தி நிறைந்த மனிதர்கள் கிறிஸ்துவுக்காக வெளிச்சமாகவும், கிறிஸ்துவின் நிருபமாக எல்லாராலும் அறியப்படத்தக்க வகையிலும் வாழ்ந்ததை முன்மாதிரியாகக் கொள்ளுங்கள். நீங்கள் சந்திக்கிற மனிதர்களின் மத்தியிலே நீங்கள் இப்படிப்பட்டவர்களாக வாழ்ந்தால் யார் உங்களை ஒரு நொடியாவது சந்தேகிப்பார்கள்?
இளைஞர்களே, உங்கள் பொறுப்புகளை எண்ணிப் பாருங்கள். நன்மை செய்வதால் விளையக்கூடிய ஆசீர்வாதங்களையும் எண்ணிப் பாருங்கள். இந்த நாளில் உபயோகமாக செயல்பட வேண்டும் எனத் தீர்மானித்துக் கொள்ளுங்கள். உங்கள் இருதயத்தை உடனடியாக கிறிஸ்துவிடம் ஒப்புவியுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் ஆத்துமத்தில் ஏற்படக்கூடிய சந்தோஷம்
நீங்கள் தேவனுக்குத் தொண்டாற்றுவதால் ஆத்துமாவுக்கே வரக்கூடிய சந்தோஷங்களை எண்ணிப் பாருங்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கைப் பாதையிலே பயணிக்கையில் ஏற்படுகிற சந்தோஷங்கள், பயணம் முடிவு பெறுகையில் ஏற்படக்கூடிய சந்தோஷங்கள் யாவும் தேவனுக்கு ஊழியம் செய்வதால் கிடைக்கிறது. நீங்கள் பலவிதமான வீணான கருத்துக்களைக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் நான் கூறுவதை நம்புங்கள்; நீதிமானுக்கான வெகுமதிகள் இந்த உலகத்திலும் கிடைக்கிறது. தேவபக்தியுள்ள வாழ்க்கைக்குரிய ஆசீர்வாதங்கள் இந்த உலகத்திற்கும் பரலோகத்திற்கும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது. தேவன் உனது நண்பராயிருக்கிறார் என்கிற உணர்வு மெய்யான சமாதானத்தைத் தருகிறது. நீ எவ்வளவோ தகுதியற்றவனாக இருந்தாலும், கிறிஸ்துவுக்குள் நீ பூரணமாயிருக்கிறாய் என்பதை அறியும்போது அது உனக்கு மிகுந்த திருப்தியைத் தருகிறது. நிரந்தரமான ஒரு பங்கை நீ பெற்றிருக்கிறாய், உன்னிடத்திலிருந்து எடுபட முடியாத பங்கை நீ அடைந்திருக்கிறாய் என்பது மிகுந்த திருப்தியை அளிக்கிறது.





