“எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக தாகமாயிருக்கிறேன் என்றார்”. யோவான் 19:28.
"நான் தாகமாயிருக்கிறேன்." இந்த வார்த்தைகள் சிலுவையில் பாடுபட்டுக்கொண்டிருக்கும் இரட்சகர் தம் தலையைச் சாய்த்து தன் ஆவியை ஒப்புக்கொடுப்பதற்கு சற்று முன் கூறிய வார்த்தைகள். இவைகள் சுவிசேஷகனாகிய யோவானால் மாத்திரமே எழுதப்பட்டுள்ளன. மேலும் நாம் காணப்போவதைப் போல இவ்வார்த்தைகள் இயேசுவின் மனுஷீகத்தை குறிப்பதற்கு சான்றாக அமையும் வார்த்தைகளாக மட்டுமின்றி, அவரது தெய்வீக மகிமையை விளங்கச் செய்யும் வார்த்தைகளாக இவைகள் சுவிசேஷத்தில் இடம் பெற்றிருப்பது பொருத்தமானதே.
"நான் தாகமாயிருக்கிறேன்" பிரசங்கிக்க என்ன அருமையான வாக்கியம்! இவ்வாக்கியம் மிகச்சிறியது என்பது உண்மையே. இருப்பினும், எவ்வளவு பரந்த கருத்துடையது! எவ்வளவு சொற்திறமிக்கது! மேலும் எவ்வளவு துயரமிக்கது! வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவர் உலர்ந்த உதடுகளுடன் காணப்படுகிறார்! மகிமையின் கர்த்தருக்கு குடிப்பதற்கு ஒரு பானம் தேவை! பிதாவின் அன்பிற்குரியவர் துயர ஒலி எழுப்புகிறார். "நான் தாகமாயிருக்கிறேன். என்ன காட்சி! என்ன வார்த்தை இது! எளிதாக இவ்வார்த்தை விளங்கக்கூற வேண்டுமாயின், தேவனால் ஞான உணர்வு பெறாத எந்த ஒரு எழுத்தாளனாலும் இத்தகைய ஒரு காட்சியை வர்ணிக்க இயலாது.
முன்னர், பழைய ஏற்பாட்டில் தேவ ஆவியானவரால் ஏவப்பட்ட தாவீது மேசியாவைப்பற்றி, "என் ஆகாரத்தில் கசப்பு கலந்து கொடுத்தார்கள். என் தாகத்துக்கு காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்" என்று கூறுகிறான். (தீர்க்கதரிசியின் பார்வை எவ்வளவு ஆச்சரியப்படத்தக்க விதமாய் முன்னறிவதாக உள்ளது) எவ்வளவு பூர்ணமான தீர்க்கத்தரிசனமாய் கண்ட காட்சி! எந்த முக்கியமான அம்சமும் விடப்படவில்லை. அவரது மிகப்பெரிய துயரத்தின் ஒவ்வொரு முக்கிய விவரங்களும் முன்கூட்டியே எழுதப் பட்டுள்ளன. மிக நெருக்கமான நண்பன் காட்டிக்கொடுத்தல் (சங்.41:9), அவரால் இடறலடைந்த சீடர்களால் கைவிடப்படல் (சங்கீதம் 37:11) பொய்யான குற்றச்சாட்டு (சங்கீதம் 35:11), அவருடைய நியாயாதிபதிகளுக்கு முன்னர் மௌனமாயிருத்தல் (ஏசாயா 53:7), குற்றமற்றவராய் நிரூபிக்கப்படல் (ஏசாயா 53:9), அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்படல் (ஏசாயா 53:12), சிலுவையில் அறையப்படல் (சங்.22:16), காண்பவர்களால் நிந்திக்கப்படல் (சங்கீதம் 109:25), விடுவிப்பாரின்மையால் இகழப்படல் (சங்கீதம் 22:7-8), அவரது உடையின் பேரில் சீட்டுப்போடப்படல் (சங்கீதம் 22:18), சத்ருக்களுக்காக ஜெபித்தல் (ஏசாயா 53:12), தேவனால் கைவிடப்படல் (சங்கீதம் 22:1), தாகமாயிருத்தல் (சங்கீதம் 69:21), பிதாவின் கரங்களில் தம்முடைய ஆவியை ஒப்புக்கொடுத்தல் (சங்கீதம் 31:5), எலும்புகள் முறிக்கப்படாமல் இருந்தல் (சங்கீதம் 34:20), ஒரு ஐசுவரியவானின் கல்லறையில் அடக்கம் பண்ணப்படுதல் (ஏசாயா 53:8) ஆகிய அனைத்துமே, நிறைவேறுவதற்கு முன்னமே மிகத் தெளிவாக முன்னுரைக்கப்பட்டுள்ளன. வேதாகமம் எவ்வளவு நம்பிக்கை யூட்டும் சான்றினைக் கொண்டுள்ளது! ஆம், கர்த்தரின் பரிசுத்தவான்களே, எவ்வளவு திடமான அஸ்திவாரம் உங்கள் விசுவாசத்திற்காக அவரது மிகச்சிறந்த வார்த்தையில் இடப்பட்டுள்ளது!
“நான் தாகமாயிருக்கிறேன்" ஆண்டவர் அருளிய ஏழு வார்த்தைகளில் ஒன்றாக இச்சொற்கள் சுவிசேஷத்தில் எழுதப்பட்டது. விலையேறப்பெற்ற பொருள் பொதிந்ததாகவும், இதயங்களில் பொக்கிஷமாக காக்கத்தக்க தாகவும், நீண்ட தியானத்திற்கு பொருத்தமான விஷயங்களையும் கொண்ட மெய்யான நிகழ்வாய் அமைந்துள்ளது. இதற்கு முன்னர், சிலுவையில் இரட்சகர் அருளிய வார்த்தைகள் அனைத்துமே நமக்கு அதிகமாக போதிக்கத்தக்கதாக அமைந்துள்ளதைப் போன்றே, "நான் தாகமா யிருக்கிறேன்" என்பதும் நிச்சயமாக விதிவிலக்கான ஒன்றல்ல. அப்படியாயின் இதனின்று நாம் எதைப் பெறபோகிறோம்? இந்த சிலுவையில் கூறிய ஐந்தாம் வார்த்தை எப்பாடங்களை நமக்கு கற்றுத்தரப் போகிறது?
நாம் நமது கவனத்தை இவ்வார்த்தையில் பதிக்க முயலும்போது சத்திய ஆவியானவர் நமது புரிந்துகொள்ளும் ஆற்றலை பிரகாசிக்கச் செய்வாராக. "நான் தாகமாயிருக்கிறேன்"
1 கிறிஸ்துவின் மனுஷீகத்திற்கு (அவர் மனிதனாக இருந்தார் என்பதற்கான) சான்றினை இங்கு (இவ்வார்த்தையில்) பெறுகிறோம்.
ஆண்டவர் இயேசு தேவன் எனக்கூறின் அவர் தேவன் என்று சொல்லும் படியாக இருந்தார். ஆனால் மனிதன் எனக்கூறின் மனிதன் எனப்படும்படி யாகவும் இருந்தார். அவரது இத்தகையதன்மை அவசியம் நம்பப்படவும் வேண்டிய ஒன்றாக இருக்கின்றது. அது மனுஷீக பெருமை மிகுந்த காரணகாரியங்களைக் கொண்டு ஊகிக்கக் கூடிய ஒன்றல்ல. நமது ஆராதனைக்குரிய இரட்சகரின் ஆள்தத்துவம் (Person) மனித அறிவு சார்ந்த ஆய்விற்கானதும் புலனால் அறியக்கூடியதானதும் அல்ல. மாறாக வழிபாட்டில் அவர் முன்பாக கட்டாயம் தலைவணங்கியாக வேண்டும் என்பதாக இருக்கிறது. "பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்" " (மத்தேயு 12:27) என்று அவரே நம்மை எச்சரித்துள்ளார். மேலும் அப்போஸ் தலனாகிய பவுல் தேவ ஆவியின் மூலமாக, மீண்டும் ஒருமுறை "தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்." என்று அறிவிக்கின்றார். (1 தீமோத்தேயு 3:16). அதே வேளையில், மேலும் கூறினால் இயேசு என்னும் ஆள்தத்துவத்தில் நம்முடைய சொந்த புரிந்து கொள்ளும் திறனால், ஆழ்ந்தறியக்கூடாத அனேக காரியங்கள் உண்டு. இருப்பினும், அவரைப் பற்றிய ஒவ்வொன்றும் வியந்து பாரட்டக்கூடியதாகவும், போற்றி வழிபடத்தக்கதாகவும் உள்ளது. அவரது தேவதத்துவமும் மனிதத்தன்மையும் மிகவும் முக்கியமான ஒன்றாகவும், ஒரே ஆளில் பூரணமாய் இசைவான ஒன்றாகவும் உள்ளது. ஆண்டவராகிய இயேசு தெய்வீகப் பண்புகளைக் கொண்ட ஒரு மனிதனும் அல்ல மனிதனாக்கப்பட்ட ஒரு தேவனும் அல்ல. அவர் தேவன் மனிதன் என்று காணப்பட்டார். என்னென்றுமாக தேவனாகவும், மேலும், இப்பொழுதும் என்றென்றுமாகவும் மனிதனைப் போன்றும் உள்ளார். பிதாவின் நேசத்திற்குரியவர் மனித உருக்கொண்ட போது அவர் தேவன் எனப்படுவதை முடிவுக்கு கொண்டுவராமலும் அவரது தெய்வீகப் பண்புகளை கைவிடாமலும் இருந்தார். உலக தோற்றத்திற்கு முன் தம்முடைய பிதாவினோடு கொண்டிருந்த மகிமையை தாமே விலக்கிவிட்ட நிலையிலும் அவர் அவ்வாறே காணப்பட்டார். ஆனால் அவரது திருஅவதாரத்தில் வார்த்தை மாமிசமாகி மனிதரிடையே வாசமாய் இருந்தது. தாம் முன்னர் பெற்றிருந்த அனைத்தையும் முடிவுக்கு அவர் கொண்டுவர வில்லை. ஆனால் முன்னர் பெற்றிராத ஒன்றினை பூர்ணமான மனுஷீகத்தை (மனித உருவை, மனிதனுக்குரிய இயல்பை) விருப்பத்தோடு தாமே ஏற்றுக்கொண்டார்.
மேசீயாவை குறித்த முன் அறிவித்தலில் அவரது தேவத்துவமும் மனுஷீகமும் ஒவ்வொன்றாக ஆழ்ந்து ஆராயப்பட்டுள்ளது. தீர்க்கத்தரிசன மானது சில சமயங்களில் பின் வருகிற ஒருவரை (இயேசுவை) தெய்வீகமான வராகவும், சிலசமயங்களில் மனிதனாகவும் குறிக்கின்றது. அவர் கர்த்தரின் கிளை' (ஏசாயா 4:2) அவர் அதிசயமான ஆலோசகர், சர்வ வல்லமையுள்ள தேவன், சதாகாலங்களுக்கும் பிதாவானவர் (The Father of the Ages) சமாதானப்பிரபுமாவார் (ஏசாயா 9:6). இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவரது புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது (மீகா 5:2). ஆலயத்திற்கு வரவிருந்தவர் யேகோவா தேவனுக்கு ஒன்றிலும் குறைவில்லாதவரான அவரே (மல்க்கியா 3:1). இருப்பினும், வேறுவிதமாகக் கூறின் அவர் ஸ்தீரியின் வித்தாக இருந்தார் (ஆதி.3:15). மோசேயைப் போன்ற ஓர் தீர்க்கத்தரிசி (உபாகாமம் 18:18); தாவீதின் வம்சத்தில் வந்தவர் (2 சாமுவேல் 7:12-13); அவர் யேகோவாவின் "தாசர்" (ஏசாயா 42:1); அவர் துக்கமிகுந்தவர் (ஏசாயா 53:3). புதிய ஏற்பாட்டிலே இந்த இரண்டு விதமான தீர்க்கத்தரிசன கருத்துகளின் தொகுப்புகளும் ஒன்றுக்கொன்று பொருள்பட இணைந்துள்ளன.
பெத்லகேமில் பிறந்த அவர் தேவனாயிருந்த வார்த்தை ஆவார். அவரது வருகை தேவன் மனிதனாக தோன்றினார் என்ற பொருள்படாது. வார்த்தை மாமிசமாகியது. அவர் முன்னர் தாம் பெற்றிருந்த அனைத்தையும் விடாதிருந்தும் அவர் தாம் முன்பிராத ஒன்றாக ஆனார். அவர் தேவனுடைய ரூவமாயிருந்தும், தேவனுக்கு சமமாய் இருப்பதைக் கொள்ளையாடின பொருளாய் எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார் (பிலிப்பியர் 2:6-7). பெத்லகேமில் பிறந்த அந்த குழந்தை இம்மானுவேல், தேவன் நம்மோடிருக்கிறார் என்ற பொருள் உடைய பெயரோடு வந்தவராவார் அவர் தேவனின் வெளிப்பாடான ஒருவர் என்பதற்கு மேலாக, மாமிசத்தில் வெளிப்பட்ட தேவனாவார். அவர் தேவகுமாரனும் மனித குமாரனும் ஆவார். இருவேறு ஆள்தத்துவங்களை கொண்டிராமல் ஒரே மனிதரில் இரண்டு சுபாவங்களை தேவனுடையதையும் மனிதனுடையதையும் கொண்டவராவார்.
இங்கு பூமியில் இருக்கின்றபோது அவரது தெய்வீகத்தன்மைக்கு முழு நிரூபணம் அளித்தார். அவர் தேவ ஞானத்தோடு பேசினார். தெய்வீகப் பரிசுத்தத்தோடு நடந்து கொண்டார். தனது தெய்வீக வல்லமையை வெளிப்படுத்தினார், மேலும் தெய்வீக அன்பைக் காட்டினார். அவர் மனிதர்களின் இருதயங்களில் உள்ளவற்றை அறிந்தார், மனிதர்களின் இருதயங்களை அசையச் செய்தார், மேலும் மனிதர்களின் சித்தங்களை கட்டாயப்படுத்தினார். அவர் தமது வல்லமையை வெளிப்படுத்த முயலுகையில், முழு இயற்கையும் அவர் கட்டளைக்குப் பணிந்தது. அவரது ஒரே வார்த்தையில் பிணி பறந்தது, புயல்அமைதியானது, பிசாசு புறப்பட்டுச் சென்றது, மரித்தோரை உயிர்தெழச் செய்தார். அவ்வளவு மெய்யாக அவர் தேவனை மாமிசத்தில் வெளிப்படுத்தினார். "என்னைக் கண்டவன். பிதாவைக் கண்டான்" என அவரால் சொல்ல முடிந்தது.
அதைப்போன்றே அவர் மனிதரிடையே வாசமாயிருக்கையில், தமது மனுஷீகத் தன்மையைக் குறித்து முழு நிரூபணம் அளித்தார். அவர் மனுஷீகத்தில் பாவமென்பதில்லை. அவர் கந்தையில் பொதியப்பட்ட பாலகனாக இப்பூமியில் வந்தார் (லூக்கா 2:7) ஒரு குழந்தையாக அவர் "ஞானத்திலும் வளர்த்தியிலும் அவர் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்" (லூக்கா 2:52) என்று நமக்குச் சொல்லப்பட்டுள்ளது. அவர் சிறுவனாக இருக்கையில் போதகர்களை கேள்விகள் கேட்பவராகக் காண்கிறோம் (லூக்கா 2:46). அவர் ஒரு மனிதனாக இருக்கையில், சரீரத்தில் இளைப் படைந்த வராகக் காண்கிறோம் (யோவான் 4:6). அவர் பசியுற்றவரானார் (மத்தேயு 4:2). அவர் தூங்கினார் (மாற்கு 4:38). அவர் ஆச்சரியப்பட்டார் (மாற்கு 6:6). அவர் கண்ணீர் விட்டார் (யோவான் 11:35). அவர் ஜெபித்தார் (மாற்கு 1:35). அவர் ஆவியிலே களிகூர்ந்தார் (லூக்கா 10:21). அவர் ஆவியில் கலங்கி துயரமடைந்தார் (யோவான் 11:33). மேலும், நாம் தியானிக்கும் வாக்கியத்தில் நான் தாகமாயிருக்கிறேன் என்று துயர ஒலி எழுப்புகிறார். அது அவரது மனுஷீகத்தின் சான்றாக அமைகிறது. தேவன் தாகமாயிருப்பதில்லை. தேவதூதர்களும் தாகமடைவதில்லை. நாம் மகிமையில் பிரவேசித்த பின், "இவர்கள் இனி பசியடைவதில்லை, இனி தாகமடைவதுமில்லை" என்ற வேத வாக்கியத்தின்படி (வெளிப்படுத்தல் 7:16) நாம் தாகமடைய மாட்டோம். நாம் இப்பொழுது மனிதர்களாய் இருப்பதினால் தாகமடைகிறோம். நாம் துக்கமிகுந்த உலகினில் வசித்துக் கொண்டிருக்கிறோம். கிறிஸ்துவும் மனிதனாக உலகில் வசித்தபடியால் தாகமுற்றார்.
“எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக வேண்டுமென்று" அவர் தம்மை தாழ்த்தி தகுதி ஆனார்.
2 இங்கு நாம் கிறிஸ்து அடைந்த கொடுமையான பாடுகளைக் காண்கிறோம்.
முதலில், கிறிஸ்து எழுப்பிய துயர ஒலி (துன்பக்குரல்) அவரின் சரீரபாடுகளின் வெளிப்பாடு என்பதை கருத்தோடு ஆய்வோம். இந்த சொற்களுக்குப் பின்னால் என்ன பொருள் அமைந்துள்ளது என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டுமாயின், இவ்வார்த்தைகளை கூறியதற்கு முன் நடந்தவற்றையும் நாம் கட்டாயமாக மீண்டும் நினைவிற்கு கொண்டு வரவும், அவற்றை ஆராய்ந்து பார்க்கவும் வேண்டும். மேலறையில் பஸ்கா போஜனத்தை துவங்கி வைத்து பஸ்காவைக் குறித்து சீடர்களுக்கு போதித்தபின், இரட்சகர் கெத்சமனேக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு ஒரு மணிநேரம் கடுமையான சொல்லொண்ணா வேதனைக்குள்ளானார். அவரது ஆத்துமா மிகுந்த துக்கத்தால் நிறைந்திருந்தது. அவர் பெறப்போகிற அச்சமூட்டக்கூடிய பாடுகளின் பாத்திரத்தை எண்ணுகையில் அவர் வியர்வை முத்துக்களைச் சிந்தவில்லை. மாறாக இரத்தத் துளிகளையே சிந்தினார். தோட்டத்தில் அவருக்கு நேரிட்ட போராட்டம் அவரை கைது செய்யும்படியாக துரோகி ஒரு கூட்டத்துடன் வந்தபோது முடிவுற்றது. அதன் பின் அவர் காய்பாவின் முன்கொண்டு செல்லப்பட்டார். அந்த நடுநிசி வேளையிலும் அவர் விசாரிக்கப்பட்டார்; குற்றவாளியாகத் தீர்க்கப்பட்டார். இரட்சகர் அதிகாலை வரையில் அவர் காவலில் வைக்கப்பட்டார். சோர்வடையச் செய்யும் அந்த நீண்ட நேரம் காத்திருந்தலைத் தொடர்ந்து. அவர் பிலாத்துவின் முன் கொண்டு வரப்பட்டார். நீண்டநேர விசாரணைக்குப் பின் அவரை சவுக்கால் அடிக்கும் படியாக உத்தரவிட்டனர். பின்னர் ஏரோதின் நியாய ஸ்தலத்திற்கு கொண்டுவரப்பட்டார். ஒருவேளை அவர் நகரத்தின் ஊடே அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம். ஒரு குறுகிய காலம் ரோம மதகுருவுக்கு முன்னர் நின்ற பின்னர், கொடூரமான சேவகர்களின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்ட அவர் மீண்டுமாய் பரிகசிக்கப்பட்டு, சவுக்கால் அடிக்கப்பட்டு மீண்டும் நகர வழியாய் பிலாத்துவிடம் அழைத்துச் செல்லப்பட்டார். மீண்டுமாக ஒரு சோர்வுறச் செய்யும் காத்துக் கிடத்தலுக்குப் பின், கேலிக்கூத்தான ஒரு விசாரணை சடங்கிற்கு பின், மரண ஆக்கினைக் குள்ளாகத் தீர்க்கப்பட்டார். பின்னர் இரத்தம் வடிகின்ற முதுகுடன், நண்பகல் சூரியனின் வெப்பத்தால் தாக்கப்பட்டு, தமது சிலுவையைச் சுமந்து கொண்டு, அந்த கரடுமுரடான கொல்கோதாவின் உச்சிக்குப் பயணம் செய்தார். குறிக்கப்பட்ட ஆக்கினை ஸ்தலத்தை அடைந்த பின்னர், அவரது கரங்களும் பாதங்களும் மரத்தில் அறையப்பட்டன. மூன்று மணிநேரம் சூரியனின் இரக்கமற்ற கதிர்கள், முள் முடி சூடிய தலையில் தாக்கிக்கொண்டிருக்க, அவர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் ஏற்பட்ட மூன்று மணிநேர காரிருள் இப்பொழுது முடிவடைந்தது. அந்த இரவு மற்றும் பகலின் நேரங்கள் (காலங்கள்) நித்தியமே குறுக்கப்பட்டதைப்போன்று தோன்றியது. எனினும் அந்த வேளையில் எந்த ஒரு முணுமுணுப்பின் சொல்லும் பிறக்கவில்லை. அவர் முறையிடவும் இல்லை, இரக்கத்திற்காக வேண்டுதல் செய்யவுமில்லை. அவர் பாடுகள் அனைத்துமே கம்பீரமான மௌனத்தில் நிகழ்ந்தது. மயிர் கத்திரிப்பவனுக்கு முன்பாக சப்தமிடா திருக்கிற ஆட்டுக்குட்டியைப் போன்று, அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். ஆயின் இந்த முடிவு வேளையிலே அவரது சரீரம் வேதனையில் துடித்தது, அவரது உதடுகள் உலர்ந்தன. 'நான் தாகமாய் இருக்கிறேன்' என்று துயரதொனியுடன் கூறினார். இது இரக்கத்தை வேண்டும் முறையிடுதலும் அல்ல, வேதனை பாடுகளிலிருந்து விடுவிக்கும்படியான வேண்டுகோளும் அல்ல. அது அவர் அடைந்த கடும் வேதனையில் வெளிப்பட்ட ஒன்று.
"நான் தாகமாயிருக்கிறேன். இது சாதாரண தாகத்திற்கும் பெரிதான ஒன்று. சரீர பாடுகளைக்காட்டிலும் ஆழமான ஒன்று அதன் பின்னால் உள்ளது.
மத்தேயு 27:48 இல் உள்ள வசனத்துடன் இவ்வாக்கியத்தை கவனத்துடன் ஒப்பிடுகையில், 'நான் தாகமாயிருக்கிறேன்' என்ற சொற்கள் நான்காவது சிலுவை வார்த்தைகளான 'ஏலி, ஏலிலாமா சபக்தானி என்பதை தொடர்ந்து வருவதைக் காட்டுகிறது. கடற்காளானில் காடியைத் தோய்த்து பாடுபடும் நேசரின் உதடுகளில் திணிக்கும் போது, பார்வையாளரில் சிலர், 'பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ பார்ப்போம் என்றார்கள் (மத்தேயு 27:49). அவருக்கு ஏற்பட்ட உள்ளான சோதனைகள் சரீரத்தில் கிரியை செய்வதை "முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்" (நீதிமொழிகள் 17:22) என்ற வசனத்திற்கொப்ப அவரது நரம்புகளை கிழித்து அவரை வலிமை இழக்கச் செய்ததன் மூலம் அறியலாம். “நான் அடக்கி வைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்து போயிற்று. இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால் என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டு போயிற்று.'' (சங்கீதம் 32:3-4). இப்பொழுது அவரது சரீரமும் ஆவியும் ஒன்றின்மேல் பரிவு (இரக்கம்) கொள்கின்றன.
தேவன் இயேசுவைப் பாராது தம் முகத்தைத் திருப்பிக் கொண்டார். அப்போது தேவ கோபாக்கினியின் கொடுங்சீற்றத்தை அவர் தாங்கிக் கொண்டிருந்தார். அநத் அந்தகாரம் சூழ்ந்த மூன்று மணிநேரத்தை இயேசு கடந்து வந்தார். அவரது சரீர பாடுகளினால் உண்டான துயரக்குரல் அவர் இப்பொழுது கடந்து வந்த ஆவிக்குரிய போராட்டத்தின் கொடூரத்தினால் விளைந்த ஒன்று.
இந்த வேளையைக் குறித்து அவர் (இயேசு) கூறுவதாக எரேமியா முன்னுரைத்தாவது: "வழியில் நடந்து போகிற சகல ஜனங்களே, இதைக் குறித்து உங்களுக்கு கவலையில்லையா? கர்த்தர் தம்முடைய உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னை சஞ்சலப்படுத்தினதினால் எனக்கு உண்டான என் துக்கத்துக்கு சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப் பாருங்கள்.
உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார், அது அவைகளில் பற்றியெரிகிறது; என் கால்களுக்கு வலையை வீசினார்; என்னை பின்னிட்டு விழப்பண்ணினார், என்னை பாழாக்கினார். நித்தம் நாள் பலச்சயப்பட்டு போகிறேன்” (புலம்பல் 1:12-13). அவரது தாகம் அவரது ஆத்துமாவில் தேவ கோபாக்கினியால் விளைந்த ஒன்று.
ஜீவ தேவன் வாசம் பண்ணாத பூமியின் வறட்சியை அது எடுத்துரைக் கிறது. மேலும், மூன்று மணிநேரம் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்ட பின்னர் மீண்டுமாய் அவரோடு ஐக்கியம் கொள்ள அவர் கொண்ட பெரும் விருப்பதினை இவ்வார்த்தைகள் தெளிவாய் காட்டுகின்றன. "மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது போல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. என் ஆத்துமா தேவன் மேல், ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?" இவ்வார்த்தைகள் இயேசு தாமே தீர்க்கத் தரிசன ஆவியினால் அவர் காரிருளின்று வெளிவந்த உடன்தனே உரைத் ததைக் குறிக்கிறது. அதைப் பின் தொடர்ந்த வார்த்தைகள் அதை உரைத்தவரின் கதறுதலையும் அவர் இன்னார் இயேசு என்பதையும் அவரது பாடுபட்ட நேரத்தையும் இனம் காட்டவில்லையா? - "என் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று" (சங். 42:1-3). என்று கதறியவர் இயேசுவே என்பதை இவ்வேத வாக்கியம் நிரூபிக்கிறது.
பரிசுத்தமான வேத வார்த்தைகளைக் குறித்து இரட்சகரின் மனம் எவ்வளவு மாறாத நாட்டம் கொண்டிருக்கிறது! மெய்யாகவே தேவனின் வாயிலிருந்து புறப்பட்ட ஒவ்வொரு வார்த்தையின்படியே அவர் வாழ்ந்தார். "கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்" இவ்வாக்கியத்தில் குறிக்கப்பட்டது அவரே. எழுதப்பட்ட வார்த்தையே அவருடைய சிந்தனை களை உருவாக்கியது, இதயத்தை நிரப்பியது அவரது வழிகளை சீர்படுத் தியது. வேதமென்பது பிதாவின் சித்தத்தின் எழுத்துவடிவம். அது அவரது நித்திய மகிழ்ச்சியாய் இருந்தது. சோதனை வேளையில் வேதத்தில் எழுதப் பட்டவை அவரது தற்காப்பாய் இருந்தது. அவரது போதனையில் கர்த்தரின் நியாயவிதிகளே அவரது அதிகாரமாய் அமைந்தது. சதுசேயர் மற்றும் பரிசேயருடன் வாக்குவாதம் ஏற்படுகையில் (Appeal) நியாயப்பிரமாணத் தையும் சாட்சிகளையும் நோக்கியே அவரது வாதம் (Appeal) அமைந்தது. இப்பொழுது சாவுவேளையிலும் சத்திய வார்த்தையைக் குறித்தே அவர் அதிகமாக எண்ணினார்.
ஐந்தாவது சிலுவை வார்த்தையின் முதன்மையான முக்கியவத்தினை அறிய வேண்டுமாயின் அதன் பின்னணியினையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதைக்குறித்து "எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேற தக்கதாக: தாகமாயிருக்கிறேன்" (யோவான் 19:28) என்ற வேதவாக்கியத்தால் அறியலாம். 69 ஆம் சங்கீதம் மேசியாவின் பாடுகளையும் மரணத்தையும் குறித்து சரியான விளக்கம் அளிப்பதான மற்றொரு குறிப்பாக உள்ளது. "என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியை குடிக்கக் கொடுத்தார்கள் (சங்.69:21)."தாகமாயிருக்கிறேன்" என்று அவர் உரைத்த பின்னர் அத்தீர்க்கதரிசனம் துல்லிதமாக நிறைவேறியது. இதற்கு முந்தைய முன்னுரைத்தல் ஏற்கனவே நிறைவேறிய ஒன்றாகும். அவர் ஆழமான உளையிலே' அமிழ்ந்திருந்தார் (வச.2); அவர் நிமித்தமில்லாமல் பகைக்கப்பட்டார் (வச.4). அவர் நிந்தையையும் அவமானத்தையும் சகித்தார் (வசனம் 7). அவர் "தம்முடைய சகோதரருக்கு வேற்றுமனுஷன் ஆனார்" (வசனம் 8). தம்மை “நிந்திப்பவர்களுக்கு பழமொழியானர்; மதுபானம் பண்ணுகிறவர் களின் பாடலானார்" (வசனம் 11-12). தம்முடைய வியாகுலத்திலே அவர் தேவனை நோக்கி கதறினார் (வசனம் 17-20). இப்பொழுது அவருக்கு கசப்பான காடியை குடிக்கக் கொடுப்பதைத் தவிர நிறைவேற வேண்டியது வேறொன்று மில்லை. ஆதலால் அதனை நிறைவேற்றும்படியாக நான் தாகமாயிருக் கிறேன் என்றார்.
“எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறை வேற்றத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்" எவ்வளவு முழுமையாக தம் காரியத்தை நிறைவேற்ற, தன் உணர்வுகளையும் செயல்களையும் கட்டுப்படுத்தி கொள்பவராக அவர் உள்ளார். அவர் அந்த சிலுவையில் ஆறுமணிநேரம் தொங்கிக் கொண்டிருந்தார். இணையற்ற பாடுகளின் வழியாகச் சென்றார். அவ்வாறு இருந்தபோதும் தெளிவான மனதும் பழுதற்ற நினைவாற்றலும் உடையவராய் இருந்தார். அவர் எப்போதும் பூரணமான தெளிவான பார்வையோடு தேவனுடைய சத்தியத்தை தம் முன் வைத்தார். மேசியாவைக் குறித்து முன் உரைக்கப்பட்ட விஷயங்களின் நோக்கத்தை நன்கு ஆய்ந்து அறிந்திருந்தார். ஒரு தீர்க்கதரிசன வாக்கியம் நிறை வேறாததை நினைவு கூர்ந்தார். அவர் எதையும் கவனிக்க தவறவில்லை. அவர் எல்லா சூழ்நிலைகளிலும் நம் தெய்வீகத் தன்மையினால் தம்மை மேம்பட்டவராக நிரூபித்தது எத்தகைய ஆச்சரியம்!
மேலே கடந்து போகும்முன் உங்களுக்கு நீங்களே ஒருவேண்டுகளை (கேள்வியை) வையுங்கள். வேதத்தின் அதிகாரத்திற்கு வாழ்விலும் சாவிலும் நமது இரட்சகர் தலை வணங்கினார் என்பதை நாம் குறிப்பிட்டோம். கிறிஸ்துவ வாசகரே உங்கள் நிலைமை எவ்வாறு உள்ளது? இந்த தெய்வீக புத்தகம் நீங்கள் முறையிடுகின்ற இறுதியான நீதிமன்றமாக உள்ளதா? அது உங்கள் பாதங்களுக்கு தீபமாக உள்ளதா? அதாவது நீங்கள் அதன் வெளிச்சத்தில் நடக்கின்றீர்களா? அதன் கட்டளைகள் உங்களை பிணைத்து வைத்திருக்கிறதா? நீங்கள் மெய்யாகவே அதற்கு கீழ்படிகிறீர்களா? நீங்கள் தாவீதுடன் சேர்ந்து “மெய்வழியை நான் தெரிந்து கொண்டு, உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன்... என் வழிகளை சிந்தித்துக் கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத்திருப் பினேன். உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதி யாமல் தீவிரித்தேன்.” என்று உங்களால் சொல்ல முடியுமா? நமது இரட்சகரைப் போன்று, நீங்கள் வேதவாக்கியங்களை நிறைவேற்ற கவலை கொண்டவர்களாய் இருக்கிறீர்களா? இதை எழுதியவனும் படிப்பவனும் இதயத்தின் ஆழத்திலிருந்து ஜெபிப்பார்களாக!
"உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாய் இருக்கிறேன்; என் இருதயம் உமது சாட்சிகளை சாரும்படி செய்யும்... உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்" (சங்கீதம் 119:35,36,133).
"நான் தாகமாயிருக்கிறேன்.''
இரட்சகர் தாகமாயிருந்தார். தாகமாயிருந்த அவர் வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் படைத்தவர் என்பதை நினைவில் கொள்வோமாக. அவர் தம்முடைய சர்வவல்லமையைப் பயன்படுத்தி இருப்பின் தம்முடைய தேவையை உடனடியாக பூர்த்தி செய்திருக்க முடியும். முன்னர் வனாந்தரத்திலே இஸ்ரவேலின் தாகம் தீர்க்கும்படியாக கன்மலையை அடித்து தண்ணீரை புறப்படச் செய்தவர், தம்முடைய எல்லையற்ற வல்லமையை இப்பொழுதும் தம்மகத்தே கொண்டுள்ளார். தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய அவர் அந்த வல்லமையின் வார்த்தையைச் சொல்லி தம் தேவைகளைப் பூர்த்தி செய்திருக்கக்கூடும்.
ஆனால் ஒருமுறைகூட தன் சொந்த நன்மைக்காகவோ அல்லது வசதிக்காகவோ எந்த அற்புதமும் அவர் செய்ததில்லை. அதைச் செய்யும்படியாகச் சாத்தான் தூண்டியபோது, அவர் செய்ய மறுத்தார். இப்பொழுது தம்மை நெருக்கிக் கொண்டிருந்த தேவையை பூர்த்தி செய்ய ஏன் மறுத்தார்? உலர்ந்த உதடுகளுடன் ஏன் அவர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்? ஏனெனில், தேவசித்தம் வெளிப்படுத்தப்பட்ட புஸ்தகத் தொகுப்பிலே, அவர் தாகமாயிருக்க வேண்டும் என்றும், அத்தாகம் தீர்க்க அவருக்கு காடி தரப்படவேண்டும் என்றும் எழுதியிருக்கிறது. தேவசித்தத்தை நிறைவேற்றவே அவர் இங்கு வந்தார். ஆகவே அதற்கு அவர் கீழ்ப்படிந்தார்.
வாழ்க்கையில் கைக்கொண்டதைப் போலவே சாவினிலும் ஜீவ தேவனுடைய அதிகாரமுள்ள வார்த்தையை அவர் கைக்கொண்டார். அவர் கைக்கொண்ட வார்த்தையின்படியே அன்றி, சோதனைவேளையில் தன் தேவைக்காக செயல்படுவதை மறுத்தார். இப்பொழுது அவர் தம் தேவையை தெரிவிப்பது, அது நிறைவேற்றப்பட வேண்டும் என்று அல்லாமல் வேதவாக்கியம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக மட்டுமே. அவர் தமது தேவையைத் தானே பூர்த்திசெய்து கொள்ளவில்லை என்பதை கவனியுங்கள். அதை கவனித்துக் கொள்ளும்படியாக தேவன் நம்பத்தகுந்த வராய் இருக்கிறார் என்பதை அறிந்திருந்தார். ஆகவே, தம் தேவையை நிறைவேற்றும் படியாக, ஒரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி, தன் துயரத்தினை வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார். வேறொருவர் கூறியதைப்போல "சிலுவையில் அறையப்பட்டதினால் கொடிய துன்பம் அவர் மீது வந்தது. ஆனால், அது அவரது உலர்ந்த உதடுகளை பலவந்தப்படுத்தி பேசவைக்க போதுமானதாக இல்லை. ஆனால் வேதத்தில் “எனது தாகத்திலே எனக்கு குடிப்பதற்கு காடியை கொடுத்தார்கள்" என்ற முன்னுரைக்கப்பட்ட அவ்வேதவாக்கியம் அவர் வாயைத்திறக்கச் செய்தது. பின்னர், எப்பொழுதும் போலவே தேவசித்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற செயல்திறன்மிக்க கீழ்படிதலைக் காண்பிக்கிறார்.
மிக எளிமையாய் நான் தாகமாய் இருக்கிறேன் என்றுரைக்கிறார்.காடி வழங்கப்பட்டது; வேதவாக்கியம் நிறைவேறியது. பிதாவின் சித்தம் செய்வதில்தான் அவருக்கு எத்தகைய ஈடுபாடு!
மீண்டுமாய் நம்மை நாமே சோதித்தறியும் படியாக இரு அர்த்தங்களைக் கொண்ட கேள்வி ஒன்றினை கேட்டுக் கொள்வோம். முதலாவதாக, மிகுந்த தாகம் அடைந்து பாடுறும் போதும் அவர் பிதாவின் சித்தம் செய்வதில் மகிழ்ச்சியாய் இருந்தார். நாம் அத்தகைய எதிர்ப்பற்ற கீழ்படிதல் பிதாவிடம் கொண்டுள்ளோமா? "என் சித்தமல்ல உம் சித்தமே ஆகக்கடவது" எனக்கூறி அவரின் கிருபையை தேடி இருக்கிறோமா? "அவ்வாறாயினும் அது உமது பார்வைக்கு நலமாய் தோன்றுகிறது என வியந்து கூறுகிறோமா? நாம் எந்த நிலையில் இருந்தாலும் மனரம்மியமாய் இருக்கக் கற்றுக் கொண்டோமா? (பிலி.4:11). ஆனால் நாம் இப்பொழுது ஒரு வேற்றுமையை குறிப்பிட்டாகவேண்டும். தேவ குமாரனுக்கு வேதனையைக் குறைக்கும் படியாக ஒருகவளம் நீர்கூட மறுக்கப்பட்டது. நாம் எவ்வளவு வித்தியாசமான நிலையில் காணப்படுகிறோம்? நமது அயர்வை அவர் நீக்கும்படியாக தேவன் நமக்கு நானாவிதமான உணவுவகைகளைத் தந்திருக்கிறார். இருந்த போதிலும் நாம் எவ்வளவு நன்றியற்றவர்களாய் இருக்கிறோம்." நம்மை மகிழ்ச்சியூட்டும்படியாக ஒரு கோப்பை நீரைக்காட்டிலும் மேலானதை நாம் பெற்றிருக்கிறோம். இருந்தபோதிலும் நாம் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோமா? கிறிஸ்துவின் இந்த துயரக்குரலை, கதறலை நாம் விசுவாசத்தோடு யோசித்துப் பார்போமாயின், அது நம் அறியாமையில், நாம் பெற்றவற்றில் இழிவாகக் கருதியவற்றுக்காகக்கூட தேவனை ஸ்தோத்தரிப்ப வர்களாக மாறுவோம். அவரது சாதாரண வழக்கமான நன்மைகளுக்காகவும் திருப்தி அடைகிற விளைவினை (தன்மையினை) அது நம்மில் ஏற்படுத்தும் மகிமையின் ஆண்டவர் தம்முடைய நிர்பந்த நிலையிலே தம்மை தேற்றும் படியாக ஒன்றும் பெறவில்லை. அப்படியிருக்க, ஆயிரம் மடங்கு இம்மைக்குரிய மற்றும் ஆவிக்குரிய இரக்கங்களை பெறும் உரிமையை இழந்தோர் தேவன் முன்பு பொதுவான தயாளமான நன்மைகளை மரியாதைக் குறைவாக கருதக்கூடுமோ? என்ன! ஒரு கோப்பை நீருக்காகக் குறைபட்டவனும் அவரது கோபாக்கினையின் பாத்திரத்திற்கு ஏதுவாக இருக்கிறான். நீங்கள் பெற்றுக் கொண்டவைகள் வாழ்வின் மிகக்குறைவானத் தேவைகளை மட்டுமே பூர்த்திசெய்யக் கூடியதாக இருப்பினும் அதற்காக திருப்தியாகஇருக்க வேண்டும் என்ற கருத்தினை மனதில் பதித்திருங்கள். நீங்கள் வசிக்குமிடம் அருவருக்கத்தக்கதாக இருப்பினும் அதற்காக முறுமுறுக்காதிருங்கள். ஏனெனில் நம் இரட்சகர் தலைசாய்க்க இடமின்றி இருந்தாரே. உங்களுக்கு உண்பதற்கு அப்பம் (ரொட்டி,) தவிர வேறொன்றும் இல்லாதிருப்பினும் முறுமுறுக்காதிருங்கள். ஏனெனில் நம் இரட்சகர் நாற்பது நாட்கள் அதுவுமின்றி இருந்தாரே! நீங்கள் பருகுவதற்கு நீரைத்தவிர வேறொன்றும் இல்லாதிருப்பினும் முறுமுறுக்காதிருங்கள். ஏனெனில் உங்கள் இரட்ச கருக்கு மரணவேளையில் அதுவும் மறுக்கப்பட்டதே!
''நான் தாகமாயிருக்கிறேன்''
'ஏன் உபத்திரவப்படுகிறோம்' என்பது என்றுமே குழப்பம் ஏற்படுத்துகிற ஒரு பிரச்சினையாக உள்ளது. உத்தம தேவனால் ஆளப்படுகின்ற இவ்வுலகில் ஏன் பிரச்சினை அவசியமான ஒன்றாக இருக்கிறது? தீமையைத் தடைசெய்ய வல்ல ஒரு தேவன் இருந்தும், அவர் அன்பானவராய் இருந்தும் ஏன் பாடுகள் அவசியம்? ஏன் வேதனைகளும், பரிதாபங்களும், வியாதிகளும், சாவும் இருக்கின்றன? இவ்வுலகம் எத்தகையது என ஆராய்ந்து பார்க்கும்போது, அதன் எண்ணற்ற துயருறுவோரை பற்றிய அறிவினைப் பெறும்போது நாம் குழப்பமே அடைகிறோம். இந்த உலகம் கண்ணீரின் பள்ளத்தாக்காக உள்ளது. மிக லேசான மகிழ்ச்சி வாழ்வின் சலிப்புண்டாக் கும் உண்மைகளை மறைக்க முயலுவதில் மிக அரிதான வெற்றியையே பெறுகின்றது. பாடுகளால் உண்டாகும் பிரச்சினைகளை வேதாந்தப்படுத்து வது மிகக்குறைந்த அளவு விடுதலையையே தருகின்றது. நாம் பகுத்தாய்ந் தறிய முயன்ற பின்னரும், இவற்றை தேவன் பார்க்கிறாரா? உன்னதமான வரிடத்தில் அறிவுண்டோ? மெய்யாகவே அவர் கவலைப்படுகிறாரா? என்ற கேள்விகள் எழுகின்றன. எல்லா கேள்விகளையும் சிலுவையண்டை எடுத்துச்செல்ல வேண்டும். இவற்றிற்கு முழுமையான விடைபெற இயலவில்லையாயினும், கவலையுற்றோர் இதயம் திருப்தியாகும்படியாக விடைகளை அவர்கள் பெறுவார்கள். பாடுகளின் பிரச்சினைகளை முற்றிலும் தீர்க்க இயலாதெனினும், சிலுவை பாடுகளால் உண்டாகும் மனஇறுக்கத் தினை நீக்க போதுமான வெளிச்சம் அது தரக்கூடியதாய் இருக்கிறது. தேவன் நமது துக்கங்களை அறியாதவர் அல்ல என்பதைக் காட்டுகிறது. ஏனெனில் தம்மகன் (இயேசு) என்ற நபரின் மூலமாக அவரே "நம் பாடுகளை ஏற்றுக்கொண்டு, நமது துக்கங்களைச் சுமந்தார். நமது மனக்கவலை களையும் தாங்கொண்ணா வேதனைகளையும் குறித்து அவர் மனதற்று இருக்கிறார் என எண்ண இயலாது. ஏனெனில், அவதரித்தவரும் அவரே, நமது பாடுகளை சுமந்தவரும் அவரே. வேதனையைக் குறித்து தேவன் உதாசீனமாக உள்ளவர் அல்ல; ஏனெனில் நம் இரட்சகரே அதனை அனுபவித்தார்.
இந்த உண்மைகளின் மதிப்புதான் என்ன? அது : "நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கிருக்கிறார்" (எபி.4:15). நமது மீட்பர் நமது துக்கங்களில் இரக்கத்துடன் பிரவேசிக்கக்கூடாமல் விலகினவராய் இராமல் அவரே துக்கம் மிகுந்த மனிதரானார். இங்கு வேதனையுரும் இதயத்திற்கு ஆறுதல் உண்டு. நீங்கள் எவ்வளவு மனச்சோர்வு உற்றவராய் இருப்பினும், உங்கள் பாதை எவ்வளவு கரடுமுரடானதாக இருப்பினும் உங்களுக்கு தேவன் அமைத்துக்கொடுத்த வாழ்க்கைமுறை எவ்வளவு துன்பமிக்கதாயினும், அவற்றை இயேசுவின் முன்வைக்கும்படியாக அழைக்கப்படுகிறீர்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் "அவர்மீது உங்கள் கவலைகளை வைத்து விடுங்கள். உங்கள் சரீரம் வேதனையினால் வாதிக்கப்படுகிறதா? அவர் அவ்வாறே வாதிக்கப்பட்டார். நீங்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டும் நியாயந்தீர்க்கப்பட்டும், தவறான நபராக காட்டப்பட்டும் இருக்கிறீர்களா? அவருக்கும் அவ்வாறே செய்யப்பட்டது. உங்களுக்கு மிகவும் நெருக்கமான வர்களும் அன்புக்குரியவர்களும் உங்களை விட்டு விலகிச் சென்றனறோ? அவருக்கும் அவ்வாறே செய்யப்பட்டது. நீங்கள் அந்தகாரத்தில் இருக்கிறீர்களோ? அவரும் மூன்று மணிநேரம் அவ்வாறு இருந்தார். "அன்றியும் அவர் ஜனத்தின் பாவங்களை நிவர்த்தி செய்வதற்கேதுவான தேவகாரியங்களைக் குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதாருக்கு ஒப்பாக வேண்டியதாயிருந்தது (எபிரேயர் 2:17).
"நான் தாகமாயிருக்கிறேன்"
உலகெங்குமுள்ள சுபாவமனிதன் தெளிவாக "நான் தாகமாயிருக் கிறேன்" என்று கூறினானோ இல்லையோ, அவ்வார்த்தைகள் அவனது அலறுதலின் ஒலியாக நிச்சயமாக உள்ளது. முயன்று செல்வம் சேர்க்க வேண்டுமென்ற பட்சிக்கின்ற ஆசை எதற்கு? உலக கௌரவங்களுக்காகவும், மற்றவர் மெச்சிக்கொள்ளும் கைதட்டலைப் பெறவேண்டும் என்பதற்காகவும் ஏக்கம் எதற்கு? தொடர்ந்து களைப்பின்றி, தளரா உழைப்புடன், உலக இன்பங்களின் (களியாட்டங்களின்) ஒரு தோற்றத்திலிருந்து மறுதோற்றத் தின் பின்னே பைத்தியமாக பாய்ந்து செல்வது ஏன்?
அறிவியல் சார்ந்த ஆய்வுகள், தத்துவ ஆராய்ச்சிகள், முன்னோர்களின் நூல்களை நுணுக்கமாக ஆராய்தல், இடைவிடாத சோதனைகள் போன்ற நவீன மனிதனின் ஞானம்பெற மேற்கொள்ளும் தேடுதல்கள் எதற்காக? புதுமையானவற்றின் மேல் பித்துப்பிடித்தாற்போல் பைத்தியமாக இருப்பது ஏன்? இவையெல்லாம் ஏன்? ஏனெனில், அவனுக்குள்ளே வேதனையூட்டு கின்ற ஒரு வெறுமை காணப்படுகிறது. ஏனெனில், ஒவ்வொரு சுபாவ மனிதனுக்குள்ளும் திருப்தியாக்கக்கூடாத ஒன்று மீதமிருக்கிறது.
கோடீஸ்வரனுக்கும் பரம ஏழைக்கும் இந்த உண்மை சமஅளவாக தோன்றுகிறது. முன்னர் உரைக்கப்பட்டவனுக்கு (கோடீஸ்வரனுக்கு) அவனது செல்வங்களால் மெய்யான மனநிறைவு இல்லை. இவ்வுண்மை உலகெங்கும் சுற்றித்திரிபவனுக்கும் தன் நாட்டின் எல்லையைத் தாண்டிராத நாட்டுப்புறத் தானுக்கும் பொருந்துவதாக உள்ளது. உலகின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு சென்று வருபவனும் சமாதானத்தை பெறும் இரகசியத்தைக் கண்டறிய தவறிவிடுகிறான்.
“இந்த தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ மறுபடியும் தாகமுண்டாகும் (யோவான் 4:13) என்ற வேதவசனம் உலகின் அனைத்து நீர்த்தொட்டிகளிலும் எழுதிவைக்கப்படுகின்றது. கிறிஸ்துவை தெய்வமாகக் கொண்டிராத பக்தி உள்ள மனுஷனுக்கும் மனுஷிக்கும் இவ்வார்த்தைகள் பொருந்துவதாக உள்ளது. தங்களின் ஆழமான தேவை சந்திக்கப்பட தேவையான ஒன்றை காணாமல், எத்தனை பேர் சோர்வுறச் செய்யும் மதச்சடங்குகளை முழுமையாக முடித்துவிட கடந்து செல்கின்றனர்!
ஒழுங்காக சபைக்கு செல்வோரும், தான் பெற்ற பணத்திலும் வருமானத்திலும் பாஸ்டரைத் தாங்குவோரும், அவ்வப்போது வேதம் வாசிப்போரும், சிலசமயங்களில் ஜெபிப்போரும், ஜெபப்புத்தகம் பயன்படுவ தாயின் ஒவ்வொரு இரவிலும் தம் ஜெபத்தினை சொல்லுகிறதுமான சுவிசேஷ மறிவிக்கின்ற பிரிவினைச் சார்ந்த அங்கத்தினர்களாய் இருப்பினும், அவர்கள் செய்கின்ற எல்லாவற்றிற்குப் பின்னும் அவர் நேர்மையுடையோராய் இருப்பார்கள் என்றால் அவர்களின் கூக்குரல், "நான் தாகமாயிருக்கிறேன்" என்றே இருக்கும். இந்த தாகம் ஆவிக்குரிய ஒன்றாக இருக்கிறது. ஆகவே, இயற்கையில் காணப்படுபவை இதைத் தணிக்க இயலாது. அவர்கள் அறியாமலேயே அவர்களின் ஆத்துமாக்கள் "தேவன் மேல் தாகமாயிருக் கிறது" (சங்கீதம் 42:2). தேவன் நம்மை சிருஷ்டித்தார். அவர் மாத்திரமே நம்மை திருப்தியாக்கக்கூடும். "நான் கொடுக்கும் தண்ணீரை குடிக்கிறவனுக்கோ "ஒருக்காலும் தாகமுண்டாகாது" என்று இயேசு கூறினார் (யோவான் 4:14). கிறிஸ்துவால் மாத்திரமே நம்முடைய தாகத்தை தணிக்க இயலும். அவரால் நம் இதயங்களின் ஆழமான தேவையை சந்திக்க இயலும். அவரால் மாத்திரமே இவ்வுலகம் அறியாத, தரக்கூடாத, நம்மைவிட்டு எடுத்துப் போடமுடியாத சமாதானத்தைத் தரமுடியும். ஓ, வாசகரே! மீண்டும் ஒருமுறை நானே உங்களது மனசாட்சியினை அன்புடன் கேட்கிறேன். அது உங்களிடத்து எவ்வாறு இருக்கிறது? சூரியனின் கீழ் காணப்படுகின்ற ஒவ்வொன்றும் மாயையும் மனசஞ்சலம் அளிக்கக் கூடியது என்பதை நீங்கள் கண்டுபிடித்தீர்களா? இந்த உலகத்தில் உள்ளவை உங்கள் இதயத்தை திருப்திபடுத்தாது என்பதை நீங்கள் கண்டுபிடித்தீர்களா? உங்கள் ஆத்துமாவின் கதறுதல் "நான் தாகமாயிருக்கிறேன்” என்பதாக உள்ளதா? அப்பொழுது, உங்களை திருப்தியாக்க ஒருவரால் கூடும் என்பது நீங்கள் கேட்கவேண்டிய ஓர் நற்செய்தி இல்லையா? அந்த ஒருவர் எந்த மதக்கோட் பாட்டையோ (பிரிவையோ), மத அமைப்புகளையோ சார்ந்திராத ஜீவனுள்ள தெய்வீக நபராக உள்ளார். "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்று அவரே கூறுகிறார் (மத்தேயு 11:28). அந்த இனிய அழைப்பினை உங்கள் சிந்தனையில் இறுத்துங்கள் நீங்கள் இருக்கும்வண்ணமாகவே இப்பொழுது அவரிடத்தில் வாருங்கள். அவர் உங்களை ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையோடு விசுவாசத்தோடு வாருங்கள். அப்பொழுது நீங்கள் பாடும் பாட்டு:
தளர்ந்தேன், களைந்தேன், கவலைமிகக் கொண்டேன்
வந்தேன் இயேசுவிடன் நானிருந்த வண்ணமே
கண்டேன் அவரில் இளைப்பாரும் இடமதை
மகிழ்ச்சி மிகக்கொண்டேன் அவரில் தானே.
கோடிக்கணக்கான ஆண்டுகள் கடந்த போதும், இன்னும் பத்துக்கோடி ஆண்டுகள் முன் உள்ளது என்றால் உங்கள் நிலை எத்துணை பரிதாபத்திற் குரியது. விடுதலையே இல்லாத நரகத்திலே நித்தியமான தாகம் உண்டு. அந்த ஐஸ்வர்யவான் கூறிய அந்த அச்சமூட்டுகின்ற வார்த்தைகளை நினைவு கூறுங்கள்.
"அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவை குளிரப் பண்ணும்படி அவனை அனுப்ப வேண்டும். இந்த அக்கினி ஜூவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்" (லூக்கா 16:24).
வாசகரே! இதனை சிந்தித்துப் பாருங்கள். சில மணிகள் மாத்திரமே உள்ள சரீர தாகம் தன் உச்ச அளவில் இப்பொழுது தாங்க இயலாத ஒன்றாக இருந்தால், என்றுமே தணிக்க முடியாத, அந்த நித்தியதாகம் தற்போதைய தாகத்தைக் காட்டிலும் எவ்வளவு கொடியதாய் இருக்கும். தன்னுடைய தவறு செய்கின்ற படைப்புகளிடத்திலே அது தேவன் செய்யும் குரூரமான கொடுமை என்று சொல்லாதிருங்கள்.
ஓ! வாருங்கள் இயேசுவிடம்! தாமதியாதீர்கள்! நீங்கள் தாகமாயிருக் கிறீர்களோ? அப்பொழுது அவர் தேடுகின்ற நபர் நீங்களாய்தான் இருப்பீர் கள். "நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்” (மத்தேயு 5:6) என்றுரைக்கப்பட்டுள்ளதே.
இரட்சிக்கபடாத வாசகரே. இரட்சகரை வேண்டாமென்று ஒதுக்கி விடாதீர்கள். நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்றால் உங்கள் நித்திய கூக்குரல் "நான் தாகமாயிருக்கிறேன்" என்பதே. இது நித்திய ஆக்கினைக்குள்ளானோரின் வேதனைக்குரல் ஆகும். இரட்சிப்பை இழந்தோர் அக்கினிக்கடலில் தேவனின் கோபாக்கினையின் அக்கினிப் பிழம்பின் நடுவிலே என்னென்றுமாக துன்புறுவீர்கள். கிறிஸ்து “நான் தாகமாயிருக்கிறேன் ” என்று கதறினார் என்றால் அவர் தேவனின் கடுங்கோபத்தால் அவர் துன்புற்ற அந்த மூன்று மணிநேரங்கள் மாத்திரமே. தேவனின் கடுங்கோபத்தை நித்தியமாய் தாங்கிக் கொள்ளப்போவோரின் நிலை எத்தகையதாய் இருக்கும்!
பாவம் சுமத்தப்பட்ட தேவன் சொந்த குமாரன் எவ்வாறு வேதனைக்கு உட்படுத்தப்பட்டார் என்பதை நினைவு கூறுங்கள். நிச்சயமாகவே இயேசுவை அலட்சியம் பண்ணுகிறவனும் நிந்திப்பவனும் மிகவும் கொடிய அனலுள்ள நரகிலே இடம் பெறுவான். நாங்கள் மீண்டுமாய் கூறுகிறோம், “இப்பொழுது அவரை உங்களுக்கு சொந்தமானவராய் ஏற்றுக்கொள்ளுங்கள். அவரை, உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவரை உங்கள் ஆண்டவர் என பணிவுடன் சொல்லுங்கள்.
"நான் தாகமாயிருக்கிறேன் ''
இயேசு இன்னமும் தாகமாயிருக்கிறார் என்ற கூற்று ஒரு ஆழ்ந்த அர்த்தம் கொண்டது. அது உண்மை என ஏற்றுக் கொள்ளத்தக்கது. அவருக்கு சொந்தமானவர்களின் அன்பிற்காகவும் பக்திக்காகவும் அவர் தாகமுள்ள வராய் இருக்கிறார். அவர் தம்முடைய இரத்தத்தினால் கிரயத்திற்கு கொள்ளப்பட்டோரிடம் ஐக்கியம் கொள்ள ஆழ்ந்த விருப்ப முடையவராய் இருக்கிறார். இங்கு கிருபையின் ஒரு வியக்கத்தக்க சிறந்த தன்மையினைக் காண்கிறோம். ஒரு மீட்கப்பட்ட பாவியால் இயேசுவின் இதயத்தை திருப்திப்படுத்துகின்ற ஒன்றைத்தர இயலும்! நான் அவரது அன்பை எவ்வளவாய் மதிக்க வேண்டும் என புரிந்துகொள்கிறேன். ஆனால் எல்லாவற்றிற்கும் போதுமானவராய் உள்ள அவர் என் அன்பை மதித்தாக வேண்டும் என்பது எத்தகைய ஆச்சரியமான ஒன்று. அவரோடு கொண்டுள்ள ஐக்கியம் எனக்கு ஆசீர்வாதமான ஒன்று என நான் கற்றுக்கொண்டிருக்கிறேன். என்னோடு உள்ள ஐக்கியம் கிறிஸ்துவுக்கு ஆசீர்வாதமான ஒன்று என்று எவ்வாறு கருதி இருக்கக்கூடும்! ஆம் அது அவ்வாறே இருக்கிறது. அதற்காக அவர் இன்னமும் தாகமுடையவராக இருக்கிறார். அவரை இளைப்பாரச் செய்யும் ஒன்றைத் தரும்படியாக கிருபை நம்மைத் தகுதிப்படுத்துகின்றது. என்ன ஆச்சரியமான சிந்தனை!
இயேசு பிரயாணத்தினாலும் பகலின் வெப்பத்தினாலும் களைப்புற்ற வராய் யாக்கோபின் கிணற்றருகே வந்தார். அங்கு வந்த சமாரிய ஸ்திரியிடம் “தாகத்துக்குதா" எனக் கேட்டபோதும் அவர் நீரைக் குடிக்கவில்லை என்பதை எப்பொழுதாவது நீங்கள் யோவான் 4 -ம் அதிகாரத்தில் கவனித்தீர்களா? அந்த சமாரியப் பெண்ணின் இரட்சிப்பிலும் விசுவாசத் திலும் தம் இதயத்தை இளைப்பாறச் செய்யும் ஒன்றை அவர் கண்டார். அன்பிற்கு மறுமொழி பதிலுக்கு அன்பு கூறுதல் ஆகும். அது இல்லையாயின் அன்பு என்றுமே திருப்தியாவதில்லை.
வெளிப்படுத்தின சுவிஷேசம் 3:20 க்கான விடை இதுவே -"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தை கேட்டு, கதவை திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்." இது இரட்சிக்கப்படாதவர்களுக்கு, பயன்படுத்தும் வேதவாக்கியமாய் இருந் தாலும், அது முக்கியமாய் குறிப்பது சபையையே. கிறிஸ்து தமக்கு சொந்தமானவர்களின் ஐக்கியத்தை நாடுவதை அது படம் பிடித்துக் காட்டுகிறது. போஜனம் செய்வதைக்குறித்து அவர் பேசுகிறார். போஜனம் என்பது ஐக்கியத்தைக் குறிக்கும் அடையாளமாக உள்ளது. அதைப் போன்றே, கர்த்தரின் பந்தி என்பது இரட்சகருக்கும் இரட்சிக்கப்பட் டோருக்கும் இடையில் உள்ள விசேஷமான ஐக்கியத்தைக் குறிக்கிறது. இந்தப்பகுதியிலே இரட்டிப்பான போஜனத்தைக் குறித்து இயேசு பேசுகிறார் என்பதை உற்று கவனியுங்கள். "அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்." அவருடன் போஜனம் செய்வது சொல்லி முடியாத சிலாக்கியமாகும். அவருடன் ஐக்கியம் கொள்வது நாம் அவரில் மகிழ்வதைக் குறிக்கிறது. ஆனால் அவர் நம்முடன் போஜனம் செய்கிறார். நம்முடைய அன்பிலும், பக்தியிலும், அவருடைய இதயத்தை போஷிக்கக்கூடிய ஒன்றையும், அவர் இளைப்பாறக்கூடிய ஒன்றையும் காண்கிறார். நம்முடைய ஐக்கியத்தில் அதை அவர் காண்கிறார். ஆம், தேவனுடைய கிறிஸ்து இன்னும் தாகமாகவே இருக்கிறார். தமக்கு சொந்தமானவர்களின் நேசத்திற்காக அவர் தாகம் கொண்டிருக்கிறார். அவரை திருப்தியாக்கக் கூடிய அதை நீங்கள் தரமாட்டீர்களா? "நீர் என்னை உமது இருதயத்தின் மேல் முத்திரையைப் போல வைத்துக்கொள்ளும்" என்பது அவரது சொந்த அழைப்பாகும். அதற்கு நீங்கள் பதிலளியுங்கள்.
இயேசு காடியை வாங்கியபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். (யோவான் 19:30).
கடந்த இரண்டு தியானங்களும், சிலுவையின் சோகயியல் நிகழ்வுகளால் நிறைந்திருந்தன; இப்பொழுது நாம் சிலுவையின் வெற்றியை நோக்கித் திரும்புவோம். "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்ற வார்த்தையில் நமது இரட்சகர் கைவிடப்பட்டுக் கதறுவதைக் கேட்கிறோம்; "நான் தாகமாயிருக்கிறேன்" என்ற வார்த்தையில், அவர் அழுது புலம்புவதைக் கேட்கிறோம்; இப்பொழுதோ, "முடிந்தது" என்று அவர் கூறும் வார்த்தையில், அவருடைய வெற்றிக்களிப்பின் குரல் நமது செவிகளிலே விழுகிறது. துயருறுபவராக பேசிய ஆண்டவரின் வார்த்தைகளிலிருந்து, வெற்றி வீரராக அவர் பேசும் வார்த்தைக்கு இப்பொழுது நம்மைத் திரும்புகிறது. 'ஒவ்வொரு மேகத்திற்கும் வெள்ளிக் கோடுகளுண்டு' (Every cloud has its silver lining) என்பது பழமொழி; எல்லாவற்றிற்கும் மேலான இருளாக இருந்த இந்த மேகத்திற்கும் அப்படியிருந்தது. கிறிஸ்துவின் சிலுவைக்கு, இரண்டு பக்கங்களுண்டு; இது ஆண்டவரடைந்த எல்லையற்ற அவமானத்தின் ஆழத்தைக் காட்டுகிறது. என்றாலும் அவர் இவ்வுலகில் அவதரித்ததின் நோக்கத்தை அது குறிப்பதாய் இருக்கிறது; மேலும், அவருடைய பணியின் குறிக்கோள் நிறைவாக நிறைவதையும் இது கூறுகிறது; இவ்வார்த்தைதான் நமது இரட்சிப்பின் அடிப்படையாகவும் அமைகிறது.
"முடிந்தது. "பண்டைய கிரேக்கர்கள், நிறைய செய்திகளைக் குறைவான வார்த்தைகளில் கூறுவதில் பெருமை கொண்டவர்களாக இருந்தார்கள் "கடலத்தனைச் செய்திகளைச் துளியளவு சொல்லில் கொடுப்பது" பேச்சுக் கலையின் சிறப்பாகக் கருதப்பட்டது. அவர்கள் எதிர்பார்த்த சிறப்பு இந்த வார்த்தையில் காணப்படுகிறது. "முடிந்தது” என்ற வார்த்தை, திருமறையின் மூலபாஷையான கிரேக்கமொழியிலும் ஒரே வார்த்தையாகத்தான் காணப் படுகிறது; ஆனாலும் தேவனுடைய நற்செய்தி முழுவதும் இந்த ஒரே வார்த்தையில் அடங்கியிருக்கிறது; இந்த வார்த்தை விசுவாசிகளுக்கு நம்பிக்கையூட்டும் ஆதாரமாக இருக்கிறது; இந்த வார்த்தையின்தான் முழுமையான மகிழ்ச்சியையும், உற்சாகமளிக்கும் தெய்வீக ஆறுதலையும் கண்டடைகிறோம்.
"முடிந்தது" இந்த வார்த்தை, வேறுவழியின்றி மனக்கசப்புடன் உயிர் துறக்கும் தியாகியின் வேதனைக் குரலல்ல; தன்னுடைய வேதனைகள் இத்துடன் முடிவிற்கு வந்துவிட்டது என்ற மனநிறைவை வெளிப்படுத்தும் வார்த்தையுமல்ல; கொடிய வன்முறைத் தாக்குதல்களினால், உயிர்வாழ இயலாது சாகுந்தறுவாயில் கூறிய வார்த்தையுமல்ல. மாறாக, தெய்வீக மீட்பர் பரத்திலிருந்து இப்பொழுது அவர் செவ்வனே முடித்துவிட்டார் என்பதற்கான பிரகடனம்; தேவனின் குணாதியங்களனைத்தையும் வெளிப் படுத்துவதற்காகத் தேவைப்பட்டவைகளையெல்லாம் செய்து முடித்த நிறைவேறுதல்; பாவிகள் மீட்படைவதற்கு முன்னதாக நியாயப்பிரமாணத் தின்படி செய்யத் தேவைப்பட்டதையெல்லாம் செய்துமுடித்த நிறைவேறுதல்: அதாவது, இப்பொழுது நம்முடைய மீட்பிற்கு முழுக்கிரையத்தையும் செலுத்தித்தீர்த்தாயிற்று.
"முடிந்தது" மானுட வரலாற்றிலே, தேவனுடைய மாபெரும் நோக்கம் இப்போது நிறைவேறிற்று - நியாயப்பிரமாணத்தின்படி நிறைவேறியிருக்கிற தேவனின் நோக்கம், இனிமேல்தான் உண்மையாகவே நிறைவேறவேண்டும். ஆரம்பத்திலிருந்தே, தேவனுடைய நோக்கம் எப்பொழுதும் பிரிக்க இயலாததாகவும், ஒன்றாகவுமே இருக்கிறது. அந்த நோக்கம், மானிடர் களுக்கு பல முறைகளிலும் அறிவிக்கப்பட்டிருக்கிறது: அடையாளங்களாகவும், மாதிரிகளாகவும், இரகசிய குறிப்புகளாகவும், தெளிவான அறிவிப்புகளாகவும், மேசியாவைக் குறித்த தீர்க்கதரிசனங்களாகவும், அறநெறி அறிவுரைகளாகவும் கூறப்பட்டுள்ளது. தேவனுடைய நோக்கத்தை இப்படிச் சுருக்கிக் கூறலாம்: தம்முடைய சாயலின்படியும் – மகிமையின்படியும் தம்முடைய பிள்ளைகளாகப் படைப்பதற்காக, தம்முடைய கிருபையையும், தம்முடைய குமாரனுடைய மகிமையையும் வெளிப்படுத்தினார். இந்த நோக்கத்தைச் சாத்தியமாக்குவதற்காகவும், மெய்யாக்குவதற்காகவுமே சிலுவையில் அடிப்படை போடப்பட்டுள்ளது.
"முடிந்தது." என்ன முடிந்தது? இந்தக் கேள்விக்கு நிறையவே பதில்கள் இருக்கின்றன. பல திறமையான திருமறை விரிவுரையாளர்கள், இந்த வார்த்தைக்கான விளக்கத்தைக் குறுகிய எல்லைக்குள் கட்டுப்படுத்தி, ஒரேயொரு பயன்பாட்டில் மட்டுமே பொருத்துகின்றனர். இந்த வார்த்தை மீட்பர் அனுபவித்த வேதனைகளைக்குறித்த தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி முடிந்ததைப்பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது என்று நமக்குச் சொல்லுகிறார் கள். அவர்கள் உடனே இந்த வார்த்தையை, மேசியாவைக் குறித்த முன்னறிவிப்புகளுடன் ஒப்பிட்டுக்கூறுகிறார்கள்.
ஆனால், ஆண்டவருடைய இந்த வார்த்தை அவருடைய வேதனை களைப் பற்றிய தீர்க்கதரிசனங்களோடு சம்பந்தப்பட்டதல்ல என்பதற்குப் போதுமான - சிறந்த காரணங்கள் காணப்படுகின்றன. ஆம், இந்த வார்த்தை கிறிஸ்துவினுடைய தன்னலமற்ற தியாக ஊழியத்தைக் (Sacrifi-cial Work) குறித்தது என்று தான் எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால், அவர் இன்னமும் அனுபவிக்கவிருக்கிற வேதனைகளைக்குறித்தும், அவமானங்களைக் குறித்துமுள்ள தீர்க்கதரிசனங்கள் இனிதான் நிறைவேற வேண்டியவைகளாக இருக்கின்றன. பிதாவின் கரத்தில் தம்முடைய ஆவியை ஒப்புவிப்பதைக்குறித்த தீர்க்கதரிசனம் (சங்கீதம் 31:5) இனிமேல்தான் நிறைவேற வேண்டும்; விலாவிலே ஈட்டியால் குத்தப்படவேண்டியதும் இனிமேல்தான் நடைபெறவேண்டும் (சகரியா 12:10) இந்த வசனமும், சிலுவையில் அறையப் படுகையில் கால்களிலும் கைகளிலும் ஆணிகள் அறையப்படுவதைக் குறித் துக்கூறும் சங். 22:16 வசனமும் வெவ்வேறு சம்பவங்களைக் குறிப்பவைகள்); அவருடைய எலும்புகள் முறிக்கப்படாது என்ற தீர்க்கதரிசனமும் (சங்.34:20), அவருடைய சரீரம் ஒரு ஐசுவரியவான் கல்லறையில் அடக்கம் பண்ணப் படுவதைக் குறித்த தீர்க்கதரிசனமும் (ஏசாயா 53:9) இனிமேல்தான் நிறைவேற வேண்டியதிருந்தது.
"முடிந்தது" என்ன முடிந்தது? நமது பதில்: அவருடைய திருப்தியான ஊழியம். மானுட மீட்பிற்கு அவசியமான அவருடைய மரணம் இனிமேல்தான் நடந்தேற வேண்டியதிருந்தது. நாம் தியானிக்கும் வசனமிருக்கும் யோவான் நற்செய்தி நூலிலே, தன்னுடைய பணியின் நிறைவேறுதலை எதிர்நோக்குதலுடன் பல இடங்களில் பேசியுள்ளார். (எடுத்துக்காட்டுகள்: யோவான் 12:23,31; 13:31; 16:5; 17:4). மேலும் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டிய வைகள் பல உள்ளன. மூன்றுமணிநேர காரிருள் கடந்து போயிற்று; அவரு டைய விலையேறப்பெற்ற இரத்தம் ஏற்கனவே சிந்தப்பட்டுவிட்டது; கர்த்தர் கொட்டிய கோபாக்கினையைச் சகித்தாயிற்று. பாவத்திற்குக் கிருபாதாரபலி (Propitiation) இவைகளெல்லாம் அத்தியாவசியமானவைகள். நம்முடைய மீட்பர் தம்மைப் பலியாக ஈந்த பணி, அதன்பின் உடனே தொடரவிருக்கிற அவருடைய மரணத்தையும் கருத்தில்கொண்டு நிறைவேறியதாக எடுத்துக் கொள்ளலாம். பலிசெலுத்தும் பணி முடிந்த வேளையில், இன்னும் அநேக காரியங்கள் முடிவுற்றன என்பதைப் பார்க்கிறோம். அவைகளைக்குறித்து கவனம் செலுத்துவோம்.
"முடிந்தது"
1 இந்த வார்த்தையில், அவர் மரித்தாகவேண்டும் என்று அவரைப்பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்து தீர்க்கதரிசனங்களும் நிறைவேறி முடிந்ததைக் காண்கிறோம்.
இந்த சந்தர்ப்பத்தில் நமது நினைவிற்கு வருவது இதுதான்: "இயேசு காடியை வாங்கினபின்பு முடிந்தது என்று சொன்னார்" (யோவா 19:30). பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே, மீட்பர் கடந்துசெல்லவேண்டிய அவமானங்களையும், வேதனைகளையும் தேவனுடைய தீர்க்கதரிசிகள் படிப்படியாக விவரித்துள்ளார்கள். இவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறின-அதிசயமாக நிறைவேறின எழுத்தாகிலும் ஒரு எழுத்தின் உருப்பாகிலும் பிறழாமல் நிறைவேறின. தீர்க்கதரிசனத்தில் கூறப்பட்டுள்ளபடி, அவர் ஸ்திரீயின் வித்தாக இருக்க வேண்டுமென்றுள்ளதல்லவா? (ஆதியாகமம் 3:15) எனவே அவர் ஸ்திரீயினிடத்தில் பிறந்தார் (கலாத்தியர் 4:40). தீர்க்கதரிசனத்தில் கூறப்பட்டுள்ளபடி, அவருடைய தாய் "கன்னிகையாக" இருக்கவேண்டு மல்லவா? (ஏசாயா 7:14) அதுவும் சொல்லுக்குச் சொல் துல்லியமாக நிறைவேறியது (மத்தேயு 1:18). அதுவும் சரியாக நிறைவேறியுள்ளதைக் குறித்துகொள்ளுங்கள் (மத்தேயு 1:1). தீர்க்கதரிசனம் அறிவித்துள்ளபடி அவர் தாவீதின் சந்ததியில் வந்தவராக இருக்கவேண்டுமல்லவா? (2 சாமுவேல் 7:12-13) அதுவும் அப்படியே நடந் தேறியது (ரோமர் 1:3). அவர் அவதரிக்குமுன்பே அவருக்குப் பெயரிடப்பட வேண்டும் என்ற தீர்க்கதரிசனம் உள்ளதல்லவா? (ஏசாயா 49:1), அதன்படியே நடந்தேறியது (லூக்கா 1:31). அவர் யூதேயாவிலுள்ள பெத்தலகேமிலே பிறப்பார் என்ற தீர்க்கதரிசனமுள்ளதல்லவா? (மீகா 5:2), அதன்படியே அவர் அந்த கிராமத்திலேயே எப்படிப் பிறந்தார் என்பதையும் ஒப்பிட்டுப்பாருங்கள். அவர் பிறக்குமிடத்தில் மற்றவர்களைச் சோகம் சூழும் என்று தீர்க்கதரிசனமாக முன்னெச்சரிக்கப்பட்டுள்ளதல்லவா? (எரேமியா 31:15), அதுபோலவே துன்ப நிகழ்ச்சி நிறைவேறியதைக் கவனித்துப்பாருங்கள் (மத்தேயு 2:16-18). மேசியா தோன்றுமளவும், செங்கோல் யூதா கோத்திரத்தைவிட்டு நீங்காதிருக்கும் என்று தீர்க்கதரிசனத்தில் முன்னுரைக்கப்பட்டுள்ளதல்லவா? (ஆதியாகமம் 49:10), அதன்படியே இஸ்ரவேலின் பத்துக்கோத்திரங்களும் சிறைப்பட்டுப் போனாலும், அவருடைய வருகையின்பொழுது யூதேயா பூமி பாதுகாக்கப் பட்டிருந்தது. அவர் எகிப்திற்கு ஓடிப்போவதையும், மறுபடி திரும்புவதையும் தீர்க்கதரிசனங்கள் குறிப்பிட்டுள்ளதல்லவா? (ஓசியா 11:1; ஏசாயா 49:3,6). அதன்படியே நடைபெற்றது (மத்தேயு 2:14-15).
கிறிஸ்து வருவதற்கு முன்பு, ஒருவன் பாதையைச் செம்மைபண்ண வருவான் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளதல்லவா? (மல்.3:1), அந்தத் தீர்க்கதரிசனம் யோவான் ஸ்நானகனில் நிறைவேறியதைக் காணலாம். மேசியா தோன்றும்பொழுது, "குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப் போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்" என்று தீர்க்கதரிசனம் அறிவிக்கிறதல்லவா? (ஏசாயா 35:5,6), இந்தக்காரியங்கள் எப்படி மகிமையாக நிறைவேறின என்பதை அறிந்துகொள்ள நான்கு நற்செய்தி நூல்களையும் வாசித்துப்பாருங்கள். அவர் "சிறுமையும் எளிமையுமானவர்" என்று அவரைப்பற்றி தீர்க்கதரிசனம் கூறுகிறதல்லவா? (சங்கீதம் 40:17 - இந்த சங்கீதத்தின் துவக்கத்தையும் பாருங்கள்). அதன்படியே மனுஷகுமாரன் தலைசாய்க்க இடமின்றி அவதியுற்றதைக் கவனித்துப்பாருங்கள். அவர் பேசும் வார்த்தைகள் உவமைகளால் நிறைந்திருக்கும் என்று தீர்க்கதரிசனம் அறிவிக்கிறதல்லவா? (சங்கீதம் 78:2), அதைப்போலவே அவருடைய உபதேசமுறைகள் பெரும்பாலும் இருந்தன. அவர் கொந்தளிப்பை அடக்குகிறவராக இருப்பார் என்று தீர்க்கதரிசனம் சித்தரிக்கிறதல்லவா? (சங்.107:29), இதைத்தான் சரியாக அவர் செய்தார். அவர் வெற்றிப் பவனியாக எருசலேம் நகருக்குள் பிரவேசிப்பதை தீர்க்கதரிசனம் முன்னறிவிக்கிறதல்லவா (சக. 9:9), அதுவும் அப்படியே நடந்தேறியது.
அவர் மனிதர்களால் புறக்கணிக்கப்படுவார் என்றும் (ஏசாயா 53:3), யூதர்களால் வெறுக்கப்படுவார் என்றும் (ஏசா.8:14), அவர் முகாந்திரமின்றி பகைக்கப்படுவார் என்றும் (சங்கீதம் 69:4) தீர்க்கதரிசனங்கள் அறிவிக்கின்றன. வல்லவா? இவைகள்யாவும் அப்படியே நடந்தன என்று வருத்தத்துடன் சொல்லவேண்டியதாக இருக்கிறது. அவர் அவமரியாதையாக நடத்தப் படுவதையும், சிலுவைப்பாடுகளையும் தீர்க்கதரிசிகள் சொல்லோவியங் களாக வரைந்துள்ளார்களல்லவா? அவைகளனைத்தும் சந்தேகத்திற்கிட மின்றி தெள்ளத்தெளிவாகவே நிகழ்ந்து முடிந்தன. நெருங்கிய நண்பன் அவருக்குத் துரோகமிழைத்தது, நெஞ்சார நேசித்த சீடர்கள் அவரைக் கைவிட்டோடியது, கொலைகளத்திற்கு அவரை இழுத்துச் சென்றது, நியாயவிசாரணைக்கு அவரை அழைத்துச்சென்றது. அவருக்கெதிராக பொய்சாட்சிகள் கூறியது, அவர் தன்னைத் தற்காத்துக்கொள்ள சந்தர்ப்பம் மறுக்கப்பட்டது, அவருடைய குற்றமின்மை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டது, அவர் நீதியின்றி குற்றவாளியாகத் தீர்க்கப்பட்டது, அவருடைய கால்களும் கரங்களும் நிஜமாகவே துளைக்கப்பட்டன. அவர் குற்றவாளிகளிலொருவராக எண்ணப்பட்டது, அவருடைய வஸ்திரத்தின்மீது சீட்டுப்போட்டது - யாவும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே முன்னுரைக்கப்பட்டு, எழுத்துக்கெழுத்து அப்படியே நிறைவேறியது. கடைசியாக நிறைவேறவேண்டிய தீர்க்கதரிசனமான, பிதாவின் கரங்களில் தமது ஆவியை ஒப்புவிக்கும் தீர்க்கதரிசனமும் இன்னும் சிறிது நேரத்தில் நிறைவேறவுள்ளது.இந்த சமயத்தில், "நான் தாகமாயிருக்கிறேன்" என்ற உரத்த சத்தமாகக் கூறியபின், எல்லாவற்றையும் நிறைவேற்றினார்; ஆண்டவராகிய இயேசு, கடந்துசென்ற நிகழ்ச்சிகளனைத்தையும் தீர்க்க தரிசன வார்த்தைகளுடன் ஒப்பிட்டு மதிப்பீடு செய்து, அதன் முழுப்பரி மாணத்தையும் உணர்ந்தவராய், "முடிந்தது" என்று பெருஞ்சத்தமிட்டுக் கதறினார்.
ஆண்டவரின் முதலாம் வருகைக்கான (First Advent) முழுமையான தீர்க்கதரிசனத்தொகுப்பைப் போலவே, அவருடைய இரண்டாம் வருகைக்கும் முழுமையான - தீர்க்கதரிசனத்தொகுப்புகள் இருக்கின்றன; முதலாம் தொகுப்புத் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியதுபோலவே, இரண்டாம் தொகுப்புத் தீர்க்கதரிசனங்களும் நிச்சயமாகவும், நிஜமாகவும், முழுமையாகவும் நிறைவேறும் என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். ஆண்டவர் இந்த பூமிக்கு முதலாம்முறை வருவதைக்குறித்தவைகள் உண்மையாகவே நிறைவேறினதைக் கண்டதினால், அவருடைய இரண்டாம் வருகையைக்குறித்த தீர்க்கதரிசனங்களும் அப்படியே நிறைவேறும் என்பதில் நிச்சயமாகவும், உறுதியாகவும் இருக்கிறோம். முதலாம் தொகுப்புத் தீர்க்கதரிசனங்கள் உள்ளபடியே, உண்மையாகவே, எழுத்தின் படியே நிறைவேறியது போலவே, பிந்திய தீர்க்கதரிசனங்களும் நிச்சயமாக நிறைவேறும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதுபோலவே பிந்திய தொகுப்பும் எழுத்தின்படியே நிறைவேறும். அப்படியிருக்க அதற்கு ஆவிக்குரிய வியாக்கியானம் அளிக்க முற்படுவதும் அவற்றை சந்கேதக் குறியீடுகள் என்றுரைப்பதும் முற்றிலும் முரணானதும், வாதத்திற்கு ஒவ்வாதது மட்டுமல்ல, அது நமக்குப் பெரிய ஆபத்தை விளைவிப்பதும், தேவனையும், அவருடைய வார்த்தையையும் அவமதிப்பதுமாகவும் இருக்கும்.
"முடிந்தது"
ஆண்டவருற்ற வேதனைகள் என்னவென்று நாவுகளோ, எழுதுகோல் களோ எடுத்தியம்ப இயலுமோ? உச்சரிக்க இயலாத வேதனையை சரீரத்திலும், மனதிலும், ஆவியிலும் - அவர் சகித்தார்! "துக்கம் நிறைந்தவர்" (The Man of Sorrows) என்ற பட்டப்பெயர் அவருக்குப் பொருத்தமானது தான்; மனிதர்களின் கரங்களிலும், சாத்தானின் கரங்களிலும், தேவனுடைய கரங்களிலும் அவர் துன்புறுத்தப்பட்டார்; பகைவர்களைப்போலவே நண்பர்களும் அவரைக் காயப்படுத்தினார்கள். ஆரம்பகாலம் முதலே, அவர் பாதையில் குறுக்கிட்ட சிலுவையின் நிழலின் பாதையின் மத்தியில் அவர் நடந்துகொண்டிருந்தார். இங்கே அவருடைய அங்கலாய்ப்பைக் கேளுங்கள்: "சிறுவயது முதல் நான் சிறுமைப்பட்டவனும் மாண்டு போகிறவனுமாயிருக்கிறேன்." (சங்கீதம் 88:15). இந்த வசனம், அவருடைய முந்தைய ஆண்டுகள் எப்படிப்பட்டதாயிருந்தது என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது. அந்த வார்த்தைகளில் எவ்வளவு பொருள் பொதிந்துள்ளது என்பதை யாரால் கூறமுடியும்? நம்மைப் பொருத்தவரை, எதிர்காலத்தை ஊடுருவிப் பார்க்க இயலாதவாறு ஒரு திரை மறைத்திருக்கிறது. ஆனால், ஆண்டவர் முடிவை ஆரம்பத்திலிருந்தே அறிந்தவர்! அவருக்கு முன்னால் பயங்கரமான சிலுவை எப்பொழுதும் நின்றுகொண்டிருந்தது என்பதை ஒருவர் அறியவேண்டுமானால் நற்செய்தி நூல்களை வாசிக்கவேண்டும். கானாவூர் கலியாண விருந்தில், மகிழ்ச்சியும் ஆரவாரமும் நிறைந்திருந்த வேளையில்கூட, “அவருடைய வேளை” இன்னமும் வரவில்லை என்ற ஆழ்ந்த கருத்துச்செறிந்த வார்த்தைகளைக் கூறுகிறார். ஆண்டவர், இரவுவேளையில் நிக்கோதேமுவுடன் உரையாடிக்கொண்டிருக்கையில், "மனுஷகுமாரன்" இவ்விதமாக உயர்த்தப்படவேண்டும்" என்று கூறுகிறார். யோவானும், யாக்கோபும், வரவிருக்கும் அவருடைய ராஜ்ஜியத்தில், இருவருக்கும் மகிமையான சிங்காசனங்கள் வேண்டுமென்று வேண்டுகோள்விடுத்தபொழுது, தான் பருகவேண்டிய “பாத்திரத்தைக்” குறித்தும், தான் முழுகவேண்டிய “ஞானஸ் நானத்தைக்" குறித்தும் கூறுகிறார். பேதுரு அவரை ஜீவனுள்ள தேவனு டைய குமாரனாகிய கிறிஸ்து என்று அறிக்கையிட்டவுடன், அவர் தமது சீஷர்களை நோக்கித் திரும்பி, "தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தமது சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார் (மத்தேயு 16:21). மறுரூப மலையில், அவர் மோசேயுடனும் எலியாவுடனும் இருக்கையில், "அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக் குறித்து பேசிக்கொண்டிருந்தார்கள் (லூக்கா 9:31)
இந்த இடத்திலும், கிறிஸ்துவின் சிலுவை இன்னமும் எதிர்நோக்கிய நிகழ்ச்சியாக இருந்ததால், அவர் அனுபவித்த வேதனையின் கொடுமையை நம்மால் அனுமானிக்க இயலவில்லை என்பது உண்மைதான்; அது உண்மையாகவே நிகழ்வுற்றபோதும் அதனுடைய வேதனையை இன்னமும் அளவிட இயலவில்லை. சரீர வேதனை கொடுமையாக இருந்தது; ஆனால் அவருடைய ஆத்தும வேதனையுடன் ஒப்பிட்டால் இந்த வேதனை ஒன்றுமே யில்லை. அவருடைய சரீரவேதனைகளைக் குறித்துக் கருத்தோடு தியானிக்க முந்திய அத்தியாயத்தில் பல பத்திகளை ஒதுக்கினோம், ஆனால் மறுபடியும் அதைப்பற்றியே திரும்பிப் பார்ப்பதற்காக வருந்தப்போவதில்லை. நம்முடைய மீட்பிற்காக நமது ஆண்டவர் என்னென்ன பாடுகளை அனுபவித்தார் என்பது குறித்து நாம் அடிக்கடி தியானிப்பதில்லை. ஆனால், எவ்வளவுக்கெவ்வளவு நாம் நமது ஆண்டவர் அனுபவித்த பாடுகளைப்பற்றி அறிந்துகொள்ளுகிறோமோ, எந்த அளவிற்கு அடிக்கடி அவைகளைத் தியானிக்கிறோமோ, அந்த அளவிற்கு அவரிடம் நெருக்கமான அன்புள்ளவர்களாகவும், ஆழமிகுந்த நன்றியுணர்ச்சி உள்ளவர்களாகவும் இருப்போம்.
இறுதியில் முடிவு நேரம் வந்துவிட்டது. கெத்சமனேயில் சொல் லொண்ணா வேதனையை அனுபவித்தார். அதைத் தொடர்ந்து காய்பா முன்பும், பிலாத்து முன்பும், ஏரோது முன்பும், மறுபடியும் பிலாத்து முன்பும் விசாரிக்கப்பட்டார். கொடுமையான சேவகர்கள் அவரை இழுத்துச் சென்றார்கள். அங்கே கொடூர சிலுவைமரத்தில் அவருடைய கால்களையும் கைகளையும் பிணைத்தார்கள். ஆசாரியர்களும், மக்களும், அவருடன் அடிக்கப்பட்டிருந்த கள்ளர்களும் அவரை நிந்தித்தார்கள். இரக்கமற்ற இழியவர்கள் கூட்டம் அவரை அவமானப்படுத்தியது. ஆண்டவருக்காக இரக்கப்படவும், ஆறுதல் கூறவும் அவர்களிடையே யாருமில்லை (சங்.69:20). அவ்வமயம் திகிலூட்டும் மேகம் பிதாவின் முகத்தை மறைத்ததால்,"என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்ற வேதனை மிகுந்த பரிதாபமான குரலில் கதறினார். அவருடைய நாவரண்டு உதடுகள் வெடித்திருந்ததால், "நான் தாகமாயிருக்கிறேன்" என்ற வார்த்தைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டது. இருளின் அதிபதியோடு நடந்த பயங்கரமான யுத்தத்தில், அவருடைய பாதத்தைச் சாத்தான் நகக்கினான். ஒருவேளை பாடுபடும் ஆண்டவர், "வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவலையில்லையா? கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தினதால் எனக்கு உண்டான என் துக்கத்திற்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப் பாருங்கள்" (புலம்பல் 1:12) என்று கேட்டிருப்பார்.
இப்பொழுது அவருடைய பாடுகள் முடிவிற்கு வந்துவிட்டன. அவருடைய பரிசுத்த ஆத்துமாவை அமிழ்த்தியிருந்த வேதனைகள் முடிந்தன. கர்த்தர் அவரை நொறுக்கிவிட்டார்; மனிதர்களும் சாத்தானும் தங்களால் இயன்ற அளவிற்கு அவரைக் கொடுமைப்படுத்திவிட்டார்கள். பாத்திரம் காலியா யிற்று. கர்த்தருடைய கோபாக்கினையின் புயல் ஓய்ந்து விட்டது. காரிருள் மறைத்துவிட்டது. தெய்வீக நீதியின் வாள் உறைக்குள் சென்றடங்கிவிட்டது. பாவத்திற்கான விலை செலுத்தியாயிற்று. அவருடைய பாடுகளைப்பற்றிக் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்கள் யாவும் நிறைவேறி முடிந்தது. சிலுவையைச் சகித்தாயிற்று. தெய்வீக பரிசுத்தம் முழுமையாக நிறைவுற்று விட்டது. வெற்றி முழக்கத்துடன் - மகா சத்தமாக, அண்டசராசரங் களனைத்தும் எதிரோலிக்கும் குரலில் - நமதாண்டவர், "முடிந்தது" என்று கர்ஜித்தார். அவமதிப்பு, அவமானம், பாடுகள், வேதனை யாவும் கடந்து சென்றுவிட்டது. அந்தப்பாடுகளை அவர் மறுபடியும், அனுபவிக்கத் தேவையில்லை. பாவிகளுடன் தனக்குள்ள முரண்பாடுகளை இனி சகித்துக் கொண்டிருக்கமாட்டார். சாத்தானுடைய ஆதிக்கமிருக்கு மிடத்தில் இனி இருக்கமாட்டார். கர்த்தருடைய முகத்திலிருந்து ஒளிரும் ஒளி இனி அவருக்கு மறைவாக இருக்காது. இவைகளெல்லாம் முடிந்ததற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திமுண்டாவதாக.
முட்கிரீடம் சூடிய சிரசில், இப்போது மகிமையின் மகுடம். – ராஜ பொற்கிரீட அலங்கரிப்பு, வெற்றியுற்ற அவர் நெற்றியைச் சுற்றிலும். விண்ணின் உயர் ஸ்தலங்களின் உரிமை அவர் கையகமானதல்ல, விண்ணக ஒளிக்கு மன்னாதிமன்னனும் கர்த்தாதி கர்த்தாவுமானார் மேலே வசிப்போர் மகிழ, கீழுள்ளோர் எல்லாம் களிப்புற. தமதன்பை உணர்த்தி, தமது நாமத்தை அறியச்செய்கிறார்.
"முடிந்தது."
தனியாளுமையுள்ள தெய்வீக நபர்கள் ஒவ்வொருவருக்கும், பிரத்தி யேகமான பணிகளுண்டு. அவர்களுடைய தனித்தன்மைகளில் வித்தியாசம் காண்பது எப்படிக் கடினமோ, அதைப்போலவே அவர்களுடைய பணிகளிலும் வேறுபடுத்திக்காட்டுவது கடினம். பிதாவாகிய கர்த்தர், இந்த உலகின் ஆளுகையிலே முக்கிய கரிசனையுள்ளவராக இருக்கிறார். அவருடைய கரங்களின் கிரியைகள் அனைத்தின்மேலும் ஆட்சிசெலுத்துகிறார். குமாரனாகிய கர்த்தர், மீட்புப் பணியிலே முக்கிய அக்கறையுள்ளவராக இருக்கிறார்: அவர்தான் பாவிகளை மீட்பதற்காக மரிக்க சித்தம்கொண்டு இவ்வுலகிற்கு வந்தார். பரிசுத்த ஆவியானவரான கர்த்தர் வேதத்திலே அதிகக் கவனஞ் செலுத்துகிறவராக இருக்கிறார்: அவர்தான் தேவனுடைய பரிசுத்தவான்களை ஏவி தேவனுடைய வார்த்தையைப் பேசச்செய்தார், இப்பொழுதும் அவரே ஆவியிலே தெளிவையும், புரிந்து கொள்ளுதலையும் அருளுகிறார், உண்மைக்கு வழிநடத்துகிறார். நாம் இப்போது குறிப்பாகக் குமாரனாகிய கர்த்தரின் பணியில்மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.
நமதாண்டவர் பூலோகத்திற்கு வருமுன்பே அவருக்கென்று குறிப்பிட்ட பணி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இவரைக்குறித்து ஏற்கனவே வேதபுத்தகத் திலே எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு முன்னறிவிக்கப்பட்ட தேவனுடைய சித்தத்தைச் செய்துமுடிக்கவே அவர் வந்தார். அவர் பன்னிரெண்டு வயது சிறுவனாக இருந்தபொழுதே, தமது "பிதாவிற்கடுத்த காரியங்களே'' அவருடைய இருதயத்திற்கு முன்பாக இருந்தன, அவைகளே அவருடைய கவனத்தை முழுவதுமாய் ஆக்கிரமித்திருந்தன. மறுபடியும், யோவான் 5:36-லே அவர், "யோவானுடைய சாட்சியைப் பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்து வருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்து சாட்சி கொடுக்கிறது" என்று கூறுவதைப் பார்க்கிறோம். அவர் மரிப்பதற்கு முந்தைய நாளிரவில், தனது அற்புதமான மகா பிரதான ஆசாரிய ஜெபத்திலே, ''பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்" என்று கூறுவதைக் காண்கிறோம்.
டாக்டர் ஆண்டர்சன் பெரி (Dr. Anderson Berry) தனது, "கிறிஸ்து சிலுவையிலிருந்து கூறிய ஏழு வார்த்தைகள்" (The Seven Saying of Christ on the Cross) என்ற புத்தகத்திலே, கிறிஸ்து நிறைவேற்றிய அவரது பணியின் பொருளையும், மகிமையையும் விளக்குவதற்குப் பொருத்தமாக, வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்ச்சியை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தியிருக்கிறார். மக்களின் போற்றுதலுக்குரியவராகவும், நாகரீகத்தின் தலைவியாகவுமிருந்த இங்கிலாந்து நாட்டு மகாராணியான எலிசபெத் 1, தனது மரணப்படுக்கை யிலிருந்த வேளையில் தனதருகிலிருந்த தாதிப்பெண்ணிடம், "ஓ என் கர்த்தாவே! வாழ்க்கை முடிகிறது. நான் முடிவை நெருங்கிவிட்டேன் -முடிந்தது, முடிந்தது. ஒரேயொரு வாழ்க்கை, அதுவும் முடிந்துபோகிறதே! வாழ்வது, நேசிக்கப்படுவது, வெற்றிபெறுவது; இப்பொழுது எல்லாம் முடிந்தது என்பதைத் தெரிந்துகொள்வது! ஒருவன் எதைவேண்டுமானாலும் எதிர்த்து நிற்கலாம், மரணத்தைத் தவிர" என்று கூறினார்: இதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள், அவரையே பார்த்துகொண்டிருந்தார்கள்; சிறிது நேரம் சென்றவுடன், ராணியின் மெல்லிய புன்னகையைக் கண்டு எழுந்த தாதிப்பெண்கள் ஜடமாக நின்றுவிட்டார்கள்; கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த தாதியர்கள் பக்கம் திரும்பிய ராணியின் பார்வை வெற்றிடத்தை வெறித்து நோக்கி அப்படியே நின்றுபோனது. உலகில் பாதிபேருக்குமேல் பொறாமைப்படும்படியாக, எரிநட்சத்திரம் போன்று ஒளிர்ந்து கொண்டு சென்ற ஒரு மகாராணியின் வாழ்க்கை இப்படித்தான் முடிவிற்கு வந்தது. அவரால் எதையும் “முடிந்தது” என்று கூறமுடியவில்லை. ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை எல்லாமே "மாயையும் மனதிற்கு சஞ்சலமும்” நிறைந்தவைகளாகவே இருந்தன. நமதாண்டவருடைய முடிவு எப்படி மாறுபட்டதாக இருக்கிறது! - "பூமியிலே நான் உம்மை மகிமைப் படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்."
கர்த்தர் எந்தப் பணியை நிறைவேற்றுவதற்காகத் தமது குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினாரோ அந்தப்பணியை முடித்தாயிற்று. அவர் தமது இறுதி மூச்சை விடும்வரைக்கும் முற்றிலுமாக அந்தப்பணி முடிந்துவிட்டதாகக் கூறமுடியாது; ஆனால் மரணம் வெகு அருகில்தான் இருந்தது. அதுவும் சிறிது நேரத்தில் நிறைவுறும் என்பதை எதிர்நோக்கியவராகத்தான் "முடிந்தது" என்று சத்தமிட்டுக் கூறினார். கடினமான பணியைச் செய்து முடித்தாயிற்று. கொடுக்கப்பட்ட தெய்வீக வேலை நிறைவுற்றது. மனிதர்களுக்கோ அல்லது தேவதூதர்களுக்கோ எக்காலத்திலாகிலும் கொடுக்கப் பட்டதைவிட பெருமதிப்பிற்குரியதும், பெருஞ்சிறப்பிற்குரியதுமான பணி முற்றிலுமாக முடிவுற்றது. அவர் எதற்காகப் பரலோகத்தின் மகிமையை துறந்து வந்தாரோ, எதற்காக அவர் அடிமையின் ரூபமெடுத்தாரோ, எதற்காக இந்த பூமியில் முப்பத்தி மூன்றரையாண்டுகள் தரித்திருந்தாரோ அந்தப்பணி நிறைவாய் நிறைவேறி முடிந்தது. இனி முடிக்கவேண்டியது ஒன்றுமில்லை. அவர் அவதரித்துச் சென்றடையவேண்டிய இலக்கை எட்டினார். அவர் நிறைவேற்றும்படியாக ஒப்புவிக்கப்பட்டிருந்த கடினமான, விலைமதிப்பற்ற பணியை முழுவதுமாக நிறைவேற்றியதை எண்ணிப்பார்த்து எப்படி வெற்றிக்களிப்பில் திளைத்திருப்பார்!
"முடிந்தது." எந்தப்பணியை ஆற்றும்படிக்குக் கர்த்தர் தமது குமாரனை அனுப்பினாரோ அந்தப்பணியைச் செய்தாயிற்று. அநாதிகாலத்திலேயே தீட்டியிருந்த தேவனின் திட்டம் நடந்தேறியது. தேவனுடைய திட்டம் முழுமையாக நிறைவேறியது. ஆண்டவர் "அக்கிரமக்காரர்களின் கை களினாலே சிலுவையில் - கொலை செய்யப்பட்டார்" என்பது உண்மைதான், ஆனாலும் அவர், "தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவிப்பின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்டார்" (அப்போஸ்தலர் 2:23), பூலோகத்தின் ராஜாக்கள் எதிர்த்து நின்றதும், ஆட்சியாளர்கள் கர்த்தருக்கு விரோதமாகவும், அவருடைய மேசியாவிற்கு விரோதமாக ஒன்றுகூடியதும் உண்மைதான், இருந்தாலும் அவைகள் யாவும் கர்த்தருடைய "கரமும் அவருடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படிக்கே" (அப்போஸ்தலர் 2:47) அவ்வாறு நடந்தேறியது. ஏனென்றால், அவர் யாவற்றிற்கும்மேல் உயர்ந்தவராக இருக்கும் கர்த்தருடைய இரகசியங் களைத் தகர்ப்பது கூடாதகாரியம். அவர் உன்னதமானவராக இருப்பதால் அவருடைய ஆலோசனையே நிலைநிற்கும். அவர் சர்வ வல்லவராக இருப்பதால், கர்த்தருடைய நோக்கத்தை எடுத்தெறிவது இயலாதகாரியம். கர்த்தராகிய தேவனுடைய விருப்பங்கள் தடுக்க இயலாத வலிமைமிக் கவைகள் என்பதைக் கர்த்தருடைய வேதம் மறுபடியும் மறுபடியும் வலியுறுத்துகிறது. இந்த உண்மை இன்று சர்வசாதாரண கேள்விக்குறியாக இருப்பதால், இதை நிரூபிக்கும் எத்தனமாக ஏழு வேதாகப்பகுதிகளை எடுத்துக்காட்டியிருக்கிறேன்: "அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திரும்பத்தக்கவர் யார்? அவருடைய சித்தத்தின்படியெல்லாம் செய்வார்" (யோபு 23:13). "தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்" (யோபு 42:2). "நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமானவை களையும் செய்கிறார்" (சங்கீதம் 115:3). "கர்த்தருக்கு விரோதமான ஞானமு மில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை" (நீதிமொழிகள் 21:30). "சேனை களின் கர்த்தர் இப்படி நிர்ணயித்திருக்கிறார்: யார் அதை வியர்த்தமாக்கு வான்? அவருடைய கை நீட்டப்பட்டிருக்கிறது, யார் அதைத் திருப்புவான்?" (ஏசாயா 14:27). "முந்தி பூர்வகாலத்தில் தடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன்; எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப் படாதவைகளைப் பூர்வமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன்" (ஏசாயா 46:9-10). "பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனைகளையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி : என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் धानं?" (क्र.4:35).
ஆண்டவரின் இந்த வெற்றிக்குரலில் - "முடிந்தது" - தீர்க்கதரி சனமும், தேவன் அருளியிருந்த உறுதிமொழியும், எந்த இடர்பாடுகளும் தடைசெய்ய வகையின்றி முழுமையாக நிறைவேறியது. இறுதியில், அனைத்தும் முடிவிற்கு வரும்பொழுது, தேவனுடைய குறிக்கோள் முழுமையாக நிறைவுறும் சமயத்தில், தாம் செய்துமுடிக்க வேண்டுமென்று விரும்பியிருந்த காரியங்களையெல்லாம் செய்துமுடித்த பின்னர், மறுபடியுமாக "முடிந்தது" என்று சொல்லப்படும்.
"முடிந்தது"
இதுவரைக்கும், கிறிஸ்து தமது அவதாரத்தின் இலக்கை எட்டியதைக் குறித்தும், இந்த பூலோகத்தில் அவர் வந்த நோக்கத்தை நிறைவேற்றி முடித்ததைக்குறித்தும், அந்த இலக்கும், நோக்கமும் என்னவென்று வேதாகமம் தெளிவாக விளக்குகிறதைக்குறித்தும் தியானித்தோம். மனுஷகுமாரன் இந்த உலகத்திற்கு, "இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே" வந்தார் (லூக்கா 19:10). கிறிஸ்து இயேசு பூலோகத்திற்கு, "பாவிகளை இரட்சிக்கவே" வந்தார் (1தீமோ. 1:15). ஸ்திரீயினிடத்தில் பிறந்த தமது குமாரனை, "நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்பட்டவர்களை மீட்டுக் கொள்ளத்தக்கதாக" அனுப்பிவைத்தார் (கலா.4:4).அவர், "நமது பாவங்களைச் சுமந்து தீர்க்கவே வெளிப்பட்டார்" (1 யோவான் 3:3,5). இவைகள் எல்லாவற்றிலும் சிலுவை சம்பந்தப்பட்டுள்ளது. “இழந்ததைக்" கண்டுபிடிக்க அவர் வந்தாரென்றால் - அது கர்த்தரின் தண்டனையைப்பெற்று மரணமுற்ற இடத்தில்தான் சாத்தியம். பாவிகளை "இரட்சிக்க" வேண்டுமென்றால், அவர்களுடைய இடத்தை வேறு யாராவதொருவர் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய பாவச்செயல்களைத் தம்மேல் ஏற்றுக்கொள்ளவேண்டும். நியாயப்பிரமாணங்களுக்குட்பட்டவர்கள் "மீட்கப்பட" வேண்டுமானால், வேறொருவர் நியாயப்பிரமாணத்தின் நிபந்தனைகளையும், சாபத்தின் வேதனையையும் நிறைவேற்றித் தீர்த்தாகவேண்டும். கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட்டால் மட்டுமே. நம்முடைய பாவங்கள் "நீக்கப்படும்."நீதி நிலைநாட்டத் தேவையானவைகள் பூர்த்தியாகவேண்டும்; தேவனுடைய பரிசுத்தம் காக்கப்படத் தேவையான வைகள் நிறைவேற்றப்படவேண்டும்; நம்மேல் விழுந்த மோசமான கடன் செலுத்தப்பட வேண்டும். இதைச் சிலுவையிலே செய்து முடித்தாயிற்று தேவகுமாரனே இதனை எவ்விதக் குறைவுமின்றி, இனி எக்காலத்திலும் செய்யவேண்டிய அவசியமின்றி, முழுமையாகச் செய்து முடித்தார்.
"முடிந்தது." எந்த ஒரு காரியத்தை ஆசரிப்புக் கூடாரமாகவும், பல நிழலாட்டமான சடங்காச்சாரங்களாலும், தேவனுடைய தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த வார்த்தைகளாலும், இன்னும் பலவிதமான மாதிரிகளைக் (Types) கொண்டும் எதிர்பார்த்தார்களோ, அந்தக் காரியம் இப்பொழுது நிறைவேறியது. பாவத்தையும் வெட்கத்தையும் "மூடும்படிக்கு" இப்பொழுது கொடுக்கப்படுவது, நம்முடைய ஆதிப்பெற்றோர்களுக்கு ஆட்டுத் தோலினால் தேவன் ஆடையணிவித்தது மாதிரியாக (Type) இருக்கிறது. இப்பொழுது கொடுக்கப்பட்டிருக்கிற சிறப்பான பலிக்கு, ஆபேலினுடைய ஆட்டுக்குட்டி மாதிரியாக இருக்கிறது. இப்பொழுது அடித்த தெய்வீக நீதித்தீர்ப்பின் புயலிலிருந்து காக்கப்பட கொடுக்கப்பட்ட பாதுகாப்பிடத் திற்கு, நோவாவின் பேழை மாதிரியாக இருக்கிறது. தாம் மிகவும் நேசிக்கும் தமது ஒரேபேறான குமாரனை, பலிபீடத்தின்மேல் நிறுத்தியிருப்பதற்கு, ஆபிரகாம் தனது மகனான ஈசாக்கைப் பலியிட முற்பட்டது மாதிரியாக இருக்கிறது. தண்டனையளிக்கும் தேவதூதனிலிருந்து தற்காத்துகொள்ள இப்போது அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு, (எகிப்தில்) பஸ்கா ஆட்டின் இரத்தத்தைத் தெளித்தது மாதிரியாக இருக்கிறது. இப்பொழுது பாவிகளுக் காக அளிக்கப்படத் தயாராக இருக்கும் குணம் (Cure), பாம்புகடியிலிருந்து குணமடைய மரத்திலே தூக்கப்பட்ட வெண்கல சர்ப்பம் மாதிரியாக இருக்கிறது. ஜீவனைக் கொடுக்கும் ஜீவஊற்று கொடுக்கப்படவிருப்பதற்கு, மோசே கற்பாறையை அடித்தது மாதிரியாக இருக்கிறது.
"முடிந்தது." இங்கே பயன்படுத்தியிருக்கிற "டெலோ" (Teleo) என்ற கிரேக்க வார்த்தை, புதிய ஏற்பாட்டில் பலவிதமாக மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தையை ஆண்டவர் பயன்படுத்தியுள்ள வேறுசில பகுதிகளை மேலோட்டமாகப் பார்த்தால், இந்த வார்த்தை வெளிப்படுத்துகிற முழுமையான, சரியான செய்தியை அறிந்து கொள்ளப் பயனுள்ளதாக இருக்கும். மத்தேயு 17:24 இல் இந்தச் சொல் இப்படிப் பொருள்படும்படி பயன்படுத்தப்பட்டுள்ளது: "வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து, உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிற தில்லையா என்று கேட்டார்கள்" லூக்கா 2:39 இல் இப்படிப் பொருள் கொள்ளும்படி பயன்படுத்தப்பட்டுள்ளது: "கர்த்தருடைய நியாயப்பிரமாணத் தின்படி சகலத்தையும் அவர்கள் செய்துமுடித்தபின்பு - கலிலேயாவிற்குத் திரும்பிப் போனார்கள்." லூக்கா 18:31 இல் இவ்வாறு பொருள்கொள்ளும்படி சொல்லப்பட்டுள்ளது: "மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும்." இவற்றையெல்லாம் ஒன்றிணைத்துப் பார்த்தால் ஆண்டவர் கூறிய ஆறாம் வார்த்தையின் பாப்பெல்லையை (Scope) அறிந்துகொள்ளலாம். “முடிந்தது” என்று அவர் கூறியதை இப்படியெல்லாம் பொருள்கொள்ளலாம் இது “முடிக்கப்பட்டு விட்டது"; இது "செலுத்தப்பட்டுவிட்டது” ; இது "செய்துமுடிக்கப்பட்டு விட்டது”; இது "நிறைவேற்றப்பட்டுவிட்டது. என்ன முடிக்கப்பட்டது? - நமது பாவங்களும், அவைகளினால் ஏற்பட்ட குற்ற உணர்வுகளும், என்ன செலுத்தப்பட்டது? - நமது மீட்பிற்கான கிரையம். என்ன முடிக்கப்பட்டது? நியாயப்பிரமாணத்தின் உச்சகட்ட நிபந்தனைகள். என்ன நிறைவேற்றப் பட்டது? - அவருடைய பிதா அவர் செய்யும்படிக்குக் கொடுத்த கிரியைகளில் என்ன “முடிந்தது"? - மிட்பிற்கான பரிகாரம்.
கர்த்தர் அவருக்குச் செய்யும்படி கொடுக்கப்பட்டிருந்த பணியைக் குறைவின்றி நிறைவுறச் செய்துவிட்டார் என்பதை நிரூபிக்கக் குறைந்தது நான்கு ஆதாரங்களை எடுத்துக்காட்டலாம். முதலாவது, தேவாலாலயத் திரைச்சீலை கிழிந்தது. தேவனிடத்திற்குச் செல்லும் பாதை திறந்துவிடப் பட்டுவிட்டதைக் காண்பிக்கிறது. இரண்டாவதாக, கிறிஸ்துவை மரணத்தி லிருந்து உயிர்த்தெழச் செய்தது, கர்த்தர் அவருடைய பலியை முற்றிலுமாய் ஏற்றுக்கொண்டுவிட்டதைச் சாட்சி பகருகிறது. கிறிஸ்துவைக் கர்த்தர் தனது வலது பாரிசத்திலே அமரச்செய்து பெருமைப்படுத்தியது, கிறிஸ்து செய்து முடித்த பணியின் விலைமதிப்பையும், பிதா தமது குமாரனின் கிரியையினாலே அடைந்த மகிழ்ச்சியையும் எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.நான்காவதாக, கிறிஸ்து செய்துமுடித்த பிராயச்சித்த பலியினால் நாம் நன்மைகளையும், ஆதாயங்களையும் அடையும்படிக்குப் பரிசுத்த ஆவியைப் பூலோகத்திற்கு அனுப்பினார்.
"முடிந்தது." என்ன முடிந்தது? பிராயசித்தப்பலிக்குறிய கிரியைகள் முடிந்தது. இதனால் நமக்கு என்ன பயன்? இதுதான் : பாவிக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் நற்செய்தி. பரிசுத்த கர்த்தர் செய்யுமாறு கோரியதெல்லாம் செய்தாயிற்று. பாவிகள் இனிமேல் செய்யும்படியாக விடப்பட்டது எதுவுமேயில்லை. நமது இரட்சிப்பின் கிரையமாக, நாம் செய்யும்படியாக எந்த கிரியையும் கேட்கப்படவில்லை. இப்பொழுது பாவிகள் செய்ய வேண்டிய தெல்லாம், கிறிஸ்து என்ன செய்து முடித்துள்ளாரோ அதை விசுவாசத் தினால் பற்றிக்கொள்ளவேண்டும். "தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்" (ரோமர் 6:23). தங்களுடைய பணியில் காணப்படும் குறைகளினாலும், நிறைவின்மையினாலும் சஞ்சலமுள்ள விசுவாசிகளுக்கு, கிறிஸ்து தன்னுடைய பரிகார கிரியையை முற்றிலும் முடித்துவிட்டார் என்று அறியும்பொழுது, அது விரும்பதக்க ஆறுதலாக இருக்கிறது. நாம் செய்வதில் "முடிந்தது" என்பதற்கு எதுவுமேயில்லை; நாம் செய்பவைகளெல்லாம் குறைவுள்ளவைகளே. நாம் முயற்சியெடுத்துச் செய்யக்கூடிய காரியங்களிலே கூட அதிகமான பாவமும், வீண் பெருமையுமே இருக்கிறது; ஆனால் நமக்கு பெரிய ஆறுதல் என்னவென்றால், நாம் கிறிஸ்துவில் "பரிபூரணமாக" இருக்கிறோம் (கொலோசியர் 2:10). நம்முடைய எல்லா நம்பிக்கைக்கும், கிறிஸ்துவும் அவருடைய அவர் செய்து முடித்துள்ள கிரியையுமே அடிப்படையாக இருக்கிறது.
ஒரு வாழ்க்கையின்மீது நான் வாழவில்லை, ஒரு மரணத்தின்மீது நான் மரிக்கவில்லை, வேறொருவரின் மரணம் - வேறொருவரின் வாழ்க்கை. அதிபயங்கரமான சாபத்திலிருந்தும், குற்றத்திலிருந்தும். நித்தியமாக என் ஆத்துமாவை ஒப்படைத்தேன்.
அந்த பெரிய நாளில் நான் நிற்பதைக் காணுங்கள், யார்மீது என்னுடைய குற்றங்களை வைப்பேன்? கிறிஸ்துவினால் நான் முற்றிலும் விடுவிக்கப்பட்டேன்,
"முடிந்தது"
விசுவாசியின் பாவங்கள் எல்லாப் பாவங்களும் - ஆண்டவரிடம் மாற்றப்பட்டுவிட்டது. வேதம் சொல்லுகிறபடி, "கர்த்தாரோ நம்மெல்லா ருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்" (ஏசா.53:6). என்னுடைய குற்றங்களை கிறிஸ்துவின்மேல் வைத்துவிட்டா ரென்றால், அந்த குற்றங்கள் இப்போது என்னிடமில்லை. ஆனாலும் பாவம் இன்னமும் இருக்கிறது, ஏனென்றால் விசுவாசியின் மரணம் வரைக்குமோ, அல்லது நாம் மரிக்கும்முன் அவர் வந்தால், கிறிஸ்துவின் வருகை வரைக்குமோ, பழைய ஆதாமின் சுபாவம் இருந்துகொண்டேதான் இருக்கும். "மனுஷனிலுள்ள பாவத்திற்கும்" (Sin in), “மனுஷனின் மேலுள்ள பாவத்திற்கும்" (Sin on) மிக முக்கியமான வித்தியாசமுண்டு; இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது சிறிது கடினமாக இருக்கலாம். 'குற்றவாளியின் மேல் நீதிபதி தீர்ப்பு வழங்கினார் என்றோ' அல்லது 'அவன் இப்பொழுது மரணதண்டனை யின்கீழ் இருக்கிறான் என்றோ' நான் கூறினால், அதன் பொருளை எல்லோருமே புரிந்து கொள்வீர்கள். அவ்வாறே, கிறிஸ்துவிற்கு வெளியிலே இருப்பவர்கள் அனைவர் மேலும் கர்த்தரின் தண்டனை இருக்கிறது. ஆனால், ஒரு பாவி ஆண்டவராகிய இயேசுவை விசுவாசித்து, அவரைத் தன் ஆண்டவராகவும், எஜமானாகவும் ஏற்றுக்கொண்டால் அவன் இனிமேல் “தண்டனைக்குள்ளாக" இருப்பதில்லை - இனி அவன்மேல் பாவமில்லை, அதாவது, பாவத்தின் குற்றவுணர்வோ, தண்டனையோ, அபாரதமோ அவன்மேல் இனி இருப்பதில்லை. எதனால்? ஏனென்றால், "கிறிஸ்து தமது சொந்த சரீரத்திலே. நம்முடைய பாவங்களைச் சிலுவை மரத்தின்மேல் சுமந்தார்" (1 பேதுரு 2:24) - நம்முடைய பாவங்களின் குற்றவுணர்வும், தண்டனையும், அபராதமும், நம்முடைய பிணையாளியின்மேல் மாற்றப்பட்டு விட்டன. என்னுடைய பாவங்கள் கிறிஸ்துவின்மேல் மாற்றப்பட்டுவிட்ட தாகையால், அவைகள் என் மேல் இல்லாதுபோயிற்று.
இந்த அரிய உண்மை. பழைய ஏற்பாட்டில், இஸ்ரவேலர்கள் அனுசரித்த வருடாந்திர பாவ நிவிர்த்தி நாள் முறைமைகளில் தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. அந்த நாளில், பிரதான ஆசாரியனாகிய ஆரோன் (கிறிஸ்துவின் மாதிரி - Type), கடந்த ஆண்டில் இஸ்ரவேல் மக்கள் புரிந்த பாவங்களுக்காக கர்த்தருக்குப் பரிகாரம் செய்தான். இந்த முறைமைகள் எவ்வாறு நடைபெற்றது என்பதைக்குறித்து லேவியராகமம் 16 ஆம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. இரண்டு வெள்ளாடுகள் தெரிந்து கொள்ளப்பட்டு, அவைகள் இரண்டும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் கர்த்தருக்கு அர்பணிக்கப்படும்; அந்த வெள்ளாடுகளுக்கு எதுவும் செய்வதற்கு முன்னால் இது நடைபெறும்; இந்தக் காரியம், கிறிஸ்து, இந்த உலகத்திற்கு வருவதற்கு தன்னைக் கர்த்தரிடம் அர்ப்பணித்தலையும், அவர் பாவிகளின் மீட்பராகச் சம்மதித்ததையும் எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. இரண்டில் ஒரு வெள்ளாடு கொல்லப்படும்; அதனுடைய இரத்தம் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் எடுத்துச்செல்லப்பட்டு, திரைச்சீலைகளுக்குள்ளே, மகா பரிசுத்த ஸ்தலத்தில், கிருபாசனத்தின் முன்னேயும், மேலேயும் தெளிக்கப்படும் இந்த சடங்கு, கர்த்தரின் நீதியை பூர்த்திசெய்யவும், அவருடைய பரிசுத்தத்தை நிறைவுசெய்யவும், கிறிஸ்து தம்மை கர்த்தரின் பலியாகத் தம்மை ஒப்புவித்தமைக்கு நிழலாட்டமாக இருக்கிறது. ஆரோன், ஆசரிப்புக் கூடாரத்தைவிட்டு வெளியே வந்தபின்பு, உயிரோடேயிருக்கிற மற்றொரு வெள்ளாட்டின் தலையின்மீது தனது இருகரங்களையும் வைப்பான் என்று வாசிக்கிறோம் - இந்த செயல் எதைக்காட்டுகிறதென்றால், நாட்டுமக்களின் பாவங்கள் தண்டிக்கப்படவே தகுதியுள்ளது என்பதை இஸ்ரவேல் நாட்டின் பிரதிநிதியாக ஆரோன் ஒப்புக்கொள்வதற்கு அடையாளமாக இருக்கிறது. இந்தச்செயல் இன்றைக்கு விசுவாச கரத்தினால் கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டு, அவருடைய மரணத்துடன் நம்மை இணைத்துக் கொள்வதற்கு ஒத்திருக்கிறது. ஆரோன், உயிருடனிருக்கும் வெள்ளாட்டின் தலைமீது தன் கரங்களை வைத்து, "இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும், அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டானவர்களுடைய சகல மீறுதல்களையும்" (லேவி. 16:21) அந்த வெள்ளாட்டின்மேல் சுமத்தி அறிக்கையிட்டான். இப்படியாக, இஸ்ரவேலர் களின் பாவங்கள் பிணையாளியாகிய வெள்ளாட்டின் மேல் மாற்றப்பட்டது. இறுதியில், “அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களை யெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு குடியில்லாத தேசத்திற்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்தரத்திலே போகவிடக்கடவன்" (லேவி.16:22) என்று சொல்லப்பட்டிருக்கிறது. இஸ்ரவேலர்களுடைய பாவங்களைச் சுமந்துகொண்டிருக்கும் அந்த வெள்ளாட்டுக்கடா, குடியில்லாத வனாந்தரத்திற்குக் கொண்டுசென்று விரட்டிவிடப்பட்டது; கர்த்தருடைய ஜனங்கள் அதைப் பார்த்தார்கள்; அவர்களுடைய பாவங்களும் இல்லாதுபோயிற்று! இதற்கு மாதிரியாக இருக்கிற கிறிஸ்துவும், நமது பாவங்களை, கர்த்தர் இல்லாத பாழான இடத்திற்கு எடுத்துச்சென்று, அவைகளை அங்கேயே சங்கரித்தார். எனவே, கிறிஸ்துவின் சிலுவை, நமது பாவங்களுக்குக் கல்லறையாக இருக்கிறது.
''முடிந்தது.'"
“நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ள துதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது" (ரோம.7:12). யெகோவா, தாமே உருவாக்கிக் கொடுத்தவைகள் எப்படிக் குறைச்சலாக இருக்கமுடியும்! குற்றங்கள் சட்டத்திலில்லை; சீர்கெட்ட, பாவம் நிறைந்த, கடைப்பிடிக்க இயலாத மனிதனிடமே குறைகளுள்ளது. என்றபோதிலும், சட்டங்கள் கடைபிடிக்கப்பட வேண்டும்; ஒரு மனிதன் கடைப்பிடித்தால்தான், சட்டங்களின் அருமை மதிக்கப்படும், புகழப்படும்; அதைக் கொடுத்தவரின் நேர்மையும் வெளிப்படும். ஆகையால்தான், "மாம்சத்தினாலே பலவீனமா யிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். மாம்சத்தின்படி நடவாமல், ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்" (ரோம.8:3-4). இந்த இடத்தில் “பலவீனம்” என்பது வீழ்ந்த மனிதனைக் (Fallen man) குறிப்பிடுகிறது. தேவனுடைய குமாரனை பாவமாம்சத்தின் சாயலாக அனுப்பினார் என்பது, கிரேக்க மொழியில் அவதாரத்தைக் (In-carnation) குறிக்கிறது. இது சம்பந்தப்பட்ட வேறொரு வசனத்தை வாசிப்போம்: "நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக் கொள்ளத்தக்கதாக - ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும், நியாயப்பிரமாணத் திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்” (கலாத்தியர் 4:4-5). ஆம், ஆண்டவர் "நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்பட்டவராக" பிறந்தார்; தமது நினைவாலும், வார்த்தையாலும், செயலாலும் பூரணமாகக் கடைப்பிடிக்கும்படிக்கே நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவராகப் பிறந்தார். "நியாயப்பிரமாணத்தையானாலும், தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள். அழிக்கிற தற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்" (மத்தேயு 5:17). இதுதான் கிறிஸ்துவின் தன்னைக்குறித்த வலியுறுத்தல் (Claim). ஆண்டவர் நியாயப்பிரமாணத்தின் விதிகளைக் கடைப்பிடித்த தோடல்லாமல், அதன்படி அவர் கொடுக்கப்பட்ட தண்டனையை ஏற்றார், சாபத்தைச் சகித்தார். நாம் நியாயப்பிரமாணத்தை முறித்தோம்; ஆனால் அவர் நம்முடைய இடத்தை ஏற்று, சாபத்தைச் சகித்தார், நியாயப் பிரமாணத்தின் நிபந்தனைகளைக் கடைப்பிடித்தார், நீதியை நிறைவேற் றினார். ஆகையால்தான் விசுவாசிகளைப் பற்றி, "கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்" (கலா.3:13) என்று எழுதப்பட்டுள்ளது. மறுபடியும், "விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாய பிரமாணத்தின் முடிவாக இருக்கிறார்." (ரோம. 10:4) மேலும் மறுபடியும், "நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்பட்டிருக்காமல், கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறீர்கள்" (கலாத்தியர் 6:14).
சட்டத்திற்கு விடுதலை, ஓ பெற்றோம் இனிய சூழலை!
ஈட்டினார் இயேசு, மீட்பைக் குருசினில் உதிரங்கொட்டி.
சட்டத்தால் சாபமுற்று, பாவவீழ்ச்சியில் மரணமுற்றோம்
மீட்பைப் பெற்றோம் கிருபையால், என்றென்றமாய்.
"முடிந்தது."
இந்த வார்த்தையில், சாத்தானின் சக்தி அழிந்ததைக் காண்கிறோம். சாத்தானின் சக்தி அழிந்ததை விசுவாசத்தினால் காணுங்கள். சிலுவையில், சாத்தானுக்கு விழுந்த மரண அடியின் சத்தம் கேட்கிறது. மனிதர்களின் பார்வையில் அவன் ஏதோ வெற்றிபெற்றுவிட்டது போலத் தோன்றுகிறது; ஆனால் உண்மையில், அது அவன் தழுவிய மிகப்பெரிய தோல்வியின் நேரம். சிலுவையை எதிர்நோக்கியவராக நமது ஆண்டவர் கூறுகிறார்: “இப்பொழுதே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்" (யோவான் 12:31). இன்னமும் சாத்தான் சங்கிலியால் கட்டப்பட்டு, சுகாதரமான பாதாளக்குழிக்குள் தள்ளப்படவில்லை என்பது உண்மைதான், ஆனாலும் அவன் மீது இப்பொழுதே (இன்னமும் நிறைவேற்றப்படா விட்டாலும்) தண்டனை விதித்தாயிற்று. அவனுடைய அழிவு நிச்சயம்; விசுவாசிகளைப் பொருத்தமட்டில் அவனுடைய அதிகாரம் முறிக்கப்பட்டு விட்டது.
கிறிஸ்தவனுக்கு, பிசாசு தோற்கடிக்கப்பட்டுவிட்ட ஒரு எதிரியாக இருக்கிறான். அவன் கிறிஸ்துவால் சிலுவையில் தோற்கடிக்கப்பட்டு விட்டான் - "மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழித்தார்" (எபிரேயர் 2:14). விசுவாசிகளனைவரையும், "இருளின் அந்தகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கித்" தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்குள் இடம்பெயரச் செய்தார் (கொலோ.1:13). ஆகவே, சாத்தான் தோற்கடிக்கப்பட்ட எதிரியாகக் கருதப்படவேண்டும். இனிமேல் சாத்தானுக்கு நம்மேல் சட்டரீதியான எந்த உரிமையுமில்லை. ஒருகாலத்தில் நாம் சட்டப்படி அவனால் "சிறைப்படுத்தப்பட்டவர்களாக" இருந்தோம், ஆனால் கிறிஸ்து நம்மை விடுதலை செய்துவிட்டார். ஒருகாலத்தில் நாம், 'ஆகாயத்துப் பிரபுவாகிய" சாத்தானின் வழிகளிலே நடந்தோம், ஆனால் இப்பொழுதோ நாம், கிறிஸ்து விட்டுச்சென்றுள்ள மாதிரியைப் பின்பற்றி நடக்கிறவர்களாக இருக்கிறோம். ஒருகாலத்தில் "சாத்தான் நம்மிலே கிரியை நடப்பித்தான்" ஆனால் இப்பொழுதோ தேவன் தமது சித்தத்தின்படியேயும் விருப்பத்தின்படியேயும், நம்மிலே கிரியை செய்கிறார். நாம் இப்போது செய்யவேண்டியதெல்லாம் "பிசாசை எதிர்த்து நிற்பதுதான்" ஏனென்றால், “அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்" என்று வாக்குறுதியளிக்கப்பட்டிருக்கிறது (யாக்கோப்பு 4:7).
"முடிந்தது” இதுதான் மனிதனின் வெறிக்கும், சாத்தானின் பகைக்கும் வெற்றி ஆரவாரத்துடன் அளிக்கப்பட்ட பதில். இந்த வார்த்தை,நீதி ஸ்தலத்தில் கிறிஸ்துவின் பூரணகிரியை பாவத்தை மேற்கொண்டதைக் கூறுகிறது. தேவன் எதிர்பார்த்தபடியும், தீர்க்கதரிசிகள் முன்னறிவித்த படியும், பழைய ஏற்பாட்டுச் சடங்காச்சரிய நிழலாட்டமானவைகளின்படியும், தெய்வீக பரிசுத்த நிபந்தனைகளின்படியும், பாவிகளுக்குத் தேவையுள்ள படியும் எல்லாம் பரிபூரணமாக நிறைவேறின. நமதாண்டவரின் ஆறாம் வார்த்தை, கவரும்விதத்தில் மிகச்சரியாக யோவான் நற்செய்தி நூலிலிருப் பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது -இந்த நற்செய்திநூல்தான் கிறிஸ்துவின் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அவர், இந்த இடத்தில் தம்முடைய கிரியைகளுக்குத் தேவனிடத்தில் ஒப்புதல் வாங்குவ தற்கு முற்படவில்லை; ஆனால் தம்முடைய கிரியைக்குத் தாமே முத்திரை யிட்டு உறுதிப்படுத்தி, அது பரிபூரணமானது என்று சான்றளித்து, அதற்குப் போதுமான எல்லா ஒப்புதலையும் தாமே அளிக்கிறார். வேறு யாருமல்ல, தேவனுடைய குமாரனே, "முடிந்தது" என்று சொல்லுகிறார் - பிறகு யாருக்கு இதைச் சந்தேகிப்பதற்கோ அல்லது கேள்வி கேட்பதற்கோ தைரியமுண்டு.
"முடிந்தது." வாசகரே, நீர் இதை நம்புகிறீரா? அல்லது தேவனுடைய சலுகையைப் பெறுவதற்கு, கிறிஸ்து செய்து முடித்துவிட்ட கிரியையுடன் வேறு ஏதையாவது சேர்த்துச் செய்யவேண்டுமென்று முயன்று கொண்டிருக் கிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், கிறிஸ்து பெற்றுத் தந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்வதுதான். கிறிஸ்துவின் கிரியையில் தேவன் திருப்தியடைந்துவிட்டார் நீங்கள் ஏன் திருப்தியுறக்கூடாது? பாவியே, தேவன் தமது மகனைக் குறித்து அளிக்கும் சாட்சியை எந்த வினாடியில் நீங்கள் விசுவாசிக்கிறீர்களோ, அந்த வினாடியே நீங்கள் புரிந்த எல்லா பாவங்களும் உங்களை விட்டு அகன்று போய்விடும்; நீங்களும் கிறிஸ்துவில் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாக இருப்பீர்கள்! தேவனுக்கும், உங்களுடைய ஆத்துமாவிற்குமிடையே ஒன்றுமில்லை என்ற உறுதியை உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளமாட்டீர்களா? ஒவ்வொரு பாவத்திற்கும் பரிகாரம் செய்தாயிற்று, பாவம் அகற்றப்பட்டுவிட்டது என்பதை அறிந்துகொள்ள மாட்டீர்களா? அப்படியானால் கிறிஸ்துவின் மரணத்தைக்குறித்து, தேவனுடைய வார்த்தை என்ன கூறுகிறதோ அதை நம்புங்கள். உங்களுடைய உணர்வுகளையும், அனுபவத்தையும் சார்ந்திருக்காதீர்கள், எழுதப்பட்டுள்ள கர்த்தருடைய வேதத்திலேயே சார்ந்திருங்கள். சமாதானத்தைப் பெற்றுக் கொள்ள ஒரேயொரு வழிதானுண்டு, அந்த வழி, தேவனுடைய ஆட்டுக் குட்டியானவர் சிந்திய இரத்தத்தை விசுவாசிப்பதேயாகும்.
“முடிந்தது” இதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அல்லது தேவனிடம் நன்மை பெறும்படி தகுதியடையும்படிக்கு, உங்களிஷ்டப்படி ஏதாவதொன்றை இத்துடன் இணைப்பதற்கு நீங்கள் முயற்சி செய்துகொண்டிருக்கிறீர்களா? சில ஆண்டுகளுக்கு முன்னதாக, ஒரு விவசாயி இரட்சிக்கப்படாத ஒரு தச்சனுக்காக (Carpenter) மிகவும் கவலைப்பட்டான். அந்த விவசாயி தன்னுடைய அயலகத்தானிடம், தேவனுடைய கிருபையின் நற்செய்தியை விவரித்துக் கூறினான்; அவனுடைய ஆத்துமா பயமின்றி இளைப்பாறு வதற்குக் கிறிஸ்து செய்துமுடித்த கிரியை போதுமானது என்று எடுத்துரைத் தான். ஆனால் அந்த தச்சன், இரட்சிக்கப்படுவதற்கு தான் ஏதாவது செய்தேயாகவேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்தான். ஒருநாள் அந்த விவசாயி, தச்சனிடம் தனக்கு ஒரு வெளிக்கதவு (Gate) செய்துதரும்படி கூறினான்; அந்த வெளிக்கதவு தயாரானவுடன், அதை வண்டியில் எடுத்துச் சென்றான். ஏற்பாடு செய்திருந்தபடி மறுநாள் காலையில் விவசாயியைத் தச்சன் சந்திக்கச் சென்றான். அந்த கதவு வயல்வெளிக்குச் செல்லும் வாசலில் தொங்கியது. குறிப்பிட்ட நேரத்தில் தச்சன் அங்கு சென்றடைந்த பொழுது, அந்த விவசாயி தன்னுடைய கைகளிலே கூர்மையான கோடாரியைப் பிடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து வியப்படைந்தான். “நீ என்ன செய்யப் போகிறாய்?" என்று தச்சன் கேட்டான். அதற்கு, “நீ செய்த இந்தக் கதவில் அங்குமிங்குமாகச் சில வெட்டுகளையும் கோடுகளையும் போடவேண்டும்" என்று பதிலளித்தான். உடனே அந்த தச்சன், “அதற்கு எந்த அவசியமுமில்லை, இப்போதுள்ளபடியே கதவு சரியாகத்தான் இருக்கிறது, செய்யவேண்டிய எல்லாவற்றையும் நானே செய்துவிட்டேன்" என்றான். விவசாயி அதைச் சட்டை செய்யாமல், கோடாரியால் ஓங்கி அந்தக் கதவு முற்றிலும் பாழாகும் வரைக்கும் வெட்டி நாசம் செய்து பயனற்றதாக்கி விட்டான். தச்சன், "என்ன செய்துவிட்டாய் பார், நான் முடித்துவைத்திருந்த என்னுடைய வேலையை பாழ்பண்ணிவிட்டாயே" என்று அலறினான். அதற்கு விவசாயி, “ஆம், நீ செய்துகொண்டிருப்பதும் இதற்கு ஒப்பாகத்தான் இருக்கிறது. கிறிஸ்து முற்றிலும் முடித்து வைத்துவிட்ட கிரியையில், உன்னுடைய இஷ்டத்திற்கு எதையாவது இணைத்து பயனற்றதாக்குகிறார்" என்று கூறினான். இந்தக் கடினமான கண்டுணரும் படிப்பினையினால் (Object Lesson) அந்தத் தச்சன், தன்னுடைய தவறைக் கண்டுகொள்ள கர்த்தர் பயன்படுத்தினார்; கிறிஸ்து பாவிகளுக்காகச் செய்துமுடித்துவிட்ட கிரியையில் விசுவாசம் கொள்ளும்படிக்கு அந்த தச்சன் வழிநடத்தப்பட்டான். வாசகரே, நீங்களும் அவ்வாறே வழிநடத்தப்பட சித்தமாக இருக்கிறீர்களா?
இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார். இப்படிச் சொல்லி ஜீவனை விட்டார் லூக்கா 23:46.
"இயேசு: பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சென்னார். இப்படிச் சொல்லி ஜீவனை விட்டார்." லூக்கா 23:46. இரட்சகர் இயேசு கிறிஸ்து மரிக்கும் முன்னதாகச் செய்த கடைசிச் செயலை, இந்த வார்த்தைகள் நம் முன் கொண்டு வருகின்றன. இந்தக் கடைசிச் செயலானது. மனநிறைவின் செயல், விசுவாசத்தின் செயல், நம்பிக்கையின் செயல், அன்பின் செயல், விலைமதிப்பற்ற பொக்கிஷமாகிய தன்னுடைய ஆவியை, சொந்தப் பிதாவின் கைகளிலே ஒப்புவிக்கிறார். பிதா என்ற உறவு, ஊக்கமும், உறுதியான நம்பிக்கையும் தரும் உறவு. தனக்கு அருமையான எதையும் பிதாவின் கைகளிலே குமாரன் ஒப்புக்கொடுப்பார் என்றால், சிறப்பான இந்தத் தெய்வ மைந்தன், தன் பிதாவின் கைகளில் ஒப்புக்கொடுக்கிறார். எதைக் கொடுக்கிறார்? தன்னுடைய சரீரத்திலிருந்து பிரிந்து கொண்டிருக்கும் தன்னுடைய ‘ஆவியை' பிதாவின் கைகளில் ஒப்புக்கொடுக்கிறார். மனிதன், ஆவி, ஆத்துமா, சரீரம் என்ற மூன்று தன்மைகளை அல்லது திருத்து வத்தைக் கொண்டவன் (1 தெசலோனிக்கேயர் 5:23) என்று வேதம் வெளிப்படுத்துகிறது. ஆத்துமாவுக்கும் ஆவிக்கும் வித்தியாசம் உண்டு. ஆனால் அவை எப்படி வேறுபட்டவை என்பதை விளக்குவது கடினமான காரியம். மனிதனின் மூன்று தன்மைகளிலே, சிறந்ததாகக் தோன்றுவது ஆவியே. மிருகங்களிலிருந்து மனிதனை வேறுபடுத்தி, தேவனோடு அவனை இணைப்பது இந்த ஆவிதான். 'மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர்' (சகரியா 12:1) என்றும், 'மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவன் (எண்ணாகமம் 16:22) என்றும், ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு போகும் (பிரசங்கி 12:7) என்றும், வேதம் திட்டமாகச் சொல்கிறது. இரட்சகர் இயேசு தன்னுடைய ஆவியை 'நான் ஒப்புவிக்கிறேன்' என்று சொல்லி பிதாவின் கைகளில் ஒப்புவித்தது, ஒரு விசுவாசத்தின் செயல் ஆகும். தன்னுடைய மக்களுக்கு முன்மாதிரியாகச் செய்யப்பட்ட ஓர் ஆசீர்வாதமான செயல். கிறிஸ்து இந்தச் செயலைச் செய்த போது, நாம் கவனிக்க வேண்டிய கடைசிக் குறிப்பு, அவர் இதைச் செய்தவிதம், இந்த வார்த்தைகளை அவர் 'மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்' கூடியிருந்த எல்லோரும் கேட்கும்படியாகச் சொன்னார். கடவுளால் தள்ளப்பட்டு, புறக்கணிக்கப் பட்டவர் என்று நினைத்து, இவரை நியாயந்தீர்த்த, இவருடைய பகைவர் எல்லாரும் இதைக் கேட்கும்படியாகவும், கடவுளால் இவர் இப்போது கைவிடப்படவில்லை, மாறாக, இவருடைய பிதாவுக்கு இன்னும் அருமையான குமாரனாக இருக்கிறார்; பிதாவினுடைய கைகளிலே தன்னுடைய ஆவியை நம்பிக்கையோடே ஒப்புவிக்க முடிந்தது என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும்படியாகவும் சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்.
'பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.' மரிக்கும் முன்னதாக, இரட்சகர் இயேசு பேசிய கடைசி வார்த்தைகள் இவை. சிலுவையில் தொங்கும்பொழுது, ஏழுதடவை அவர் வாயைத் திறந்து பேசினார். ஏழு என்ற எண்ணானது, முழுமையை அல்லது பூரணத்தை குறிக்கும். எல்லா இடங்களிலேயும் இயேசு பூரணராயிருந்தது போல, கல்வாரிச் சிலுவையிலும் அவரது பூரணத்துவம் வெளிப்பட்டது மட்டுமல்ல, ஏழு என்பது வேலையை முடித்து விட்டு, ஓய்வெடுப்பதைக் குறிக்கும் எண்ணாகும். தேவன் ஆறுநாட்களிலே வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்து, தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்து, மிகவும் நன்றாயி ருந்தது என்று கண்டு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். அதைப்போலவே கிறிஸ்துவும், தனக்குக் கொடுக்ககப்பட்ட வேலையை முடித்துவிட்டார். ஆறாவது நாள் படைப்பின் வேலையையும், புத்தமைப்பின் வேலையையும் முடிந்ததைப்போல், இரட்சகரின் ஆறாவது வார்த்தை 'எல்லாம் முடிந்தது' என்று இருந்தது. ஏழாவது நாள் ஓய்வும், மனநிறைவும், நிறைந்த நாளாய் இருந்தது போல, இரட்சகரின் ஏழாவது வார்த்தையும், அவரை இளைப்பாறும் இடத்துக்கு, அதாவது பிதாவின் கைகளில் கொண்டு சேர்ப்பதாய் இருக்கிறது.
மரித்துக்கொண்டிருந்த இரட்சகர் இயேசு, ஏழு தடவை பேசினார். மூன்று வார்த்தைகள், மனிதன் மேல் அவருக்கிருந்த கரிசனையைக் காட்டுவதாக உள்ளன; மரித்துக் கொண்டிருந்த கள்ளனுக்கு, அன்றைக்கு அவன் அவருடனே பரதீசில் இருப்பான் என்று உறுதியளித்தார்; அவருடைய தாயாரை இன்னொரு சீஷனிடம் ஒப்படைத்தார். கூடிநின்று வேடிக்கை பார்த்த மக்கள் கூட்டத்தினரிடம் தன்னுடைய தாகத்தை வெளிப்படுத்தினார். மூன்று வார்த்தைகள் தேவனை நோக்கிக் கூப்பிடுவதாக இருந்தன. தன்னைச் சிலுவையில் அறைந்த கொலையாளிகளுக்காக பிதாவிடம் ஜெபித்தார். துக்கம் நிறைந்தவராய், "ஏன் என்னைக் கைவிட்டீர்" என்று தேவனிடம் கதறினார்; இப்போது தன்னுடைய ஆவியை பிதாவின் கைகளில் ஒப்புக்கொடுக்கிறார். தேவனுக்கும், எல்லா மனிதருக்கும், தேவதூதர் களுக்கும் பிசாசுக்கும் கேட்கும்படியாக 'எல்லாம் முடிந்தது' என்று வெற்றி முழக்கமிட்டார்.
'பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.' இரட்சகர் இயேசுவின் இந்தக் கடைசி முழக்கம், தேவன் மனித சாயலாய் அவதரிப்பதற்கு அநேக நூற்றாண்டுகள் முன்னதாகவே தீர்க்கதரிசனமாகச் சொல்லப்பட்டது. சங்கீதக்காரனாகிய தாவீது, முப்பத்தி ஒன்றாம் சங்கீதத்திலே தீர்க்கதரிசனமாகச் சொல்கிறான். 'கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன். நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும். உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும். உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாய் என்னைத் தப்புவியும் நீர் எனக்குப் பலத்த துருகமும் எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும். என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும். அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கி விடும். தேவரீரே எனக்கு அரண் உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன். சத்திய பரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்' (சங்கீதம் 31:1-5).
நம் இரட்சகர் சிலுவையில் மொழிந்த ஒவ்வொரு வார்த்தையிலும், ஒரு தீர்க்கதரிசனம் நிறைவேறியது. முதல் வார்த்தையான 'பிதாவே இவர்களுக்கு மன்னியும்' தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே' என்ற வசனம் ‘அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம்' என்று ஏசாயா 53:12 இல் சொல்லப்பட்டதை நிறைவேற்றியது. இரண்டாவ தாக கள்ளனுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியான 'இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய்' என்ற வார்த்தையில் மத்தேயு 1:21 இல் தேவதூதன் யோசேப்பிடம் சொன்ன 'அவருக்கு இயேசு என்று பேரிடுவா யாக. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்' என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறிற்று. மூன்றாவது தனது தாயாரிடம் அவர் சொன்ன "ஸ்திரீயே அதோ உன் மகன்”என்ற வார்த்தை யின் மூலம் சிமியோனின், 'உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் ஊடுருவிப் போகும்' (லூக்கா 2:35) என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறிற்று."என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?' என்ற நான்காவது வார்த்தை, சங்கீதம் 22:1 இல் கூறப்பட்டுள்ளது. ஐந்தாவதாகச் சொல்லப்பட்ட 'தாகமாயிருக்கிறேன்' என்ற வார்த்தை, 'என் தாகத்துக்கு காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள் என்று சங்கீதம் 69:21 இல் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. ஆறாவதாக 'முடிந்தது' என்று வெற்றி முழக்கமிட்டார். சங்கீதம் 22 இல் கடைசி வசனம் சொல்கிறபடி, அவரே இவைகளைச் செய்தார்' அல்லது அவர் தனது வேலையை, மனுக்குலத்தின் பாவத்தினை நீக்கும் பணியை முடித்துவிட்டார் என்பதைக் குறிக்கும் வகையில் முடிந்தது என்றார். கடைசியாக, 'பிதாவே உம்முடைய கைகளில், என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்ற அவருடைய ஜெபம், சங்கீதம் 31:5 இல் அவரைக்குறித்து எழுதப்பட்டிருப் பதையே குறிப்பிடுகிறது. என்னே சிலுவையின் அற்புதங்கள்! அவற்றின் முடிவின் எல்லையை நாம் இன்னும் எட்டவில்லை.
பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்''
1 பிதாவோடு உள்ள உறவை மீண்டும் பெற்றுக்கொண்ட இரட்சகர்.
இது மிகவும் அருமையான அனுபவம், தேவனின் பரிசுத்தமான முகத்தின் ஒளியானது, உலகத்தின் பாவங்களைச் சுமந்து கொண்ட இரட்சகரிடமிருந்து, மறைக்கப்பட்ட பொழுது, மிகக்குறுகிய நேரத்திற்கு, பிதா-குமாரன் என்ற உறவு மேலோட்டமாக முறிக்கப்பட்டது. ஆனால், இப்போது பாவ அகோரம் என்ற இருள் அகன்றது மட்டுமல்ல, முற்றிலுமாய் முடிந்து போனது. முழுமையான, முறியாத உறவு, பிதா, குமாரன் இடையிலே சிலுவையிலே காணப்பட்டது. யோவான் 18:11 இல் சொல்லப்பட்ட "பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனா?" வசனத்தின்படி, துக்கம் நிறைந்த அந்தப்பாத்திரத்தை, பிதாவின் கைகளில் இருந்து பெற்றுக்கொண்டது எத்தனை அருமையான அனுபவம். சிலுவை, மரணத்தின் ஆரம்பத்திலே, இயேசு பிதாவாகிய தேவனோடு உறவாடினதாலேயே பிதாவே இவர்களுக்கு மன்னியும் என்ற முதல் வார்த்தையும், பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்ற கடைசி வார்த்தையும் சொல்ல முடிந்தது, ஆனால் இந்த இரண்டு வார்த்தைகளுக்கிடையே ஆறு மணி நேரம் இயேசு சிலுவையிலே தொங்கினார்; மூன்று மணி நேரம் மனிதனின் கைகளிலும் பிசாசின் கைகளிலும் பாடுபட்டார்; யெகோவாவுக்குச் சமமான மனுஷகுமாரனுக்கு எதிராக தேவனுடைய நீதி செயல்பட்டதால், தேவனுடைய கைகளில் மூன்று மணி நேரம் பாடனுபவித்தார். அந்தக் கடைசி மூன்று மணி நேரத்தில், தேவன் இரட்சகரைத் தனியே விட்டுவிட்டதால், "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று கதறினார்.ஆனால் இப்பொழுதோ,எல்லாம் முடிந்துவிட்டது பிதா கொடுத்த பாத்திரத்தில் பானம் பண்ணி முடிந்தது; தேவ கோபம் என்னும் புயல் ஓய்ந்து விட்டது; இருள் கடந்து சென்று விட்டது. மீண்டும் ஒருமுறை, பிதாவோடு உள்ள உறவுக்குள் வந்துவிட்ட இரட்சகர், இனி அவரிடமிருந்து பிரிக்கப்படுவ தேயில்லை.
பிதா என்ற இந்த வார்த்தையை எத்தனை முறை இரட்சகர் சொல்லி யிருக்கிறார்! முதன்முதலாக அவர் சொன்னது, 'என் பிதாவுக்கடுத்தவை களில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா?' ஒருவேளை அவருடைய முதலாவது பிரசங்கமான மலைப்பிரசங்கத்தில், தன்னுடைய பிதாவைக் குறித்து பதினேழு முறை குறிப்பிடுகிறார். கடைசியாக அவர் தம்முடைய சீஷர்களுடன் பஸ்காவை ஆசரித்தபோது அவர்களிடம், யோவான் 14:16 இல் காணப்படுவது போல, பேசிய அநேக காரியங்களில் 'பிதா' என்ற வார்த்தையை நாற்பத்தைந்து முறை பயன்படுத்தியுள்ளார். யோவான் 17 ஆம் அதிகாரத்திலே இயேசுகிறிஸ்து ஒரு பிரதான ஆசாரியனைப் போலத் தன்னுடைய ஜெபத்தை ஏறெடுத்த போது, அதில் பிதாவிடமும், பிதாவைக்குறித்தும் மேலும் ஆறுமுறை பேசியுள்ளார். கடைசியாக, தன்னுடைய ஜீவனை விடுவதற்கு முன்பாக, பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்' என்று திரும்பவும் பிதாவிடம் பேசுகிறார்.
அவருடைய பிதாவே நம்முடைய பிதா என்பது எவ்வளவு பெரிய பாக்கியம்! அவருடையவர்களாக நாம் இருப்பதால், பிதா நம்முடையவர் என்ன அதிசயமான உறவு! என்றும் ஜீவிக்கிற மிகப்பெரிய தேவனை நான் நோக்கிப் பார்த்து, 'பிதாவே! என்னுடைய பிதாவே! என்று கூப்பிடுவது, சொல்ல முடியாத அற்புதம். பிதாவே என்று கூப்பிடுவதிலே எத்தனை ஆறுதல்! அது எனக்கு எத்தனை நிச்சயமான உறவு! தேவன் என்னுடைய பிதா; அவர் என்னை நேசிக்கிறார். அவர் கிறிஸ்துவில் அன்பாயிருக்கிறது. போல, என்னிலும் அன்பாய் இருக்கிறார் (யோவான் 17:23). தேவன் என்னுடைய பிதா, என்னை நேசிக்கிறார்; என்னை விசாரிக்கிறார். தேவன் என் பிதாவாயிருந்து, என்னை விசாரிப்பதோடு, என் குறைவையெல்லாம் முற்றிலும் மாற்றி நிறைவாக்குவார் (பிலிப்பியர் 4:19). தேவன் என் பிதா எந்தத் தீங்கும் என்னை அணுகாதபடி பார்த்துக் கொள்வார்; சகலமும் நன்மைக்கேதுவாக நடக்க உதவி செய்வார். தேவனுடைய பிள்ளைகளாகிய நாம், இன்னும் அதிகமாய் அந்த உறவுக்குள் கடந்து சென்று, அந்த உறவின் பாக்கியத்தை அனுபவித்தால், அப்போஸ்தலனாகிய யோவானோடு சேர்ந்து நாமும், “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே, பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்" (யோவான் 3:1) என்று மகிழ்ச்சியோடு சொல்லலாமே!
2 முன்குறிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட வேறுபாடு.
பன்னிரண்டு மணிநேரத்துக்கும் மேலாக, கிறிஸ்து, மனிதர்களின் கைகளிலே பாடனுபவித்தார். இதைக் குறித்து முன்னதாகவே தன்னுடைய சீஷர்களுக்கு முன்எச்சரிக்கையாக, "மனுஷகுமாரன், மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார். அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள்" (மத்தேயு 17:22,23) என்று சொன்னார். கெத்சமனே தோட்டத்திலே துக்கம் நிறைந்தவராய் சொன்னார். 'பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து, இனி நித்திரை பண்ணி இளைப்பாறுங்கள். இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய, கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற வேளை வந்தது (மத்.26:45) என்றார். இதையே, இயேசுகிறிஸ்து உயிர்தெழுந்த காலை வேளையிலே, தேவதூதர்கள், ஸ்திரீகளிடம், அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்; மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம் நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக, அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்கு சொன்னதை நினைவு கூறுங்கள் என்றார்கள் (லூக்கா 24:6-7). இது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து கெத்சமனே தோட்டத்தில் தன்னைப் பிடிக்க வந்தவர்களிடம், தன்னைத்தானே ஒப்புக்கொடுத்த பொழுது, நிறைவேறிற்று. நாம் முந்தைய அதிகாரங்களில் பார்த்தது போல, கிறிஸ்து தன்னைப் பிடிக்க வந்தவர்களிடருந்து தப்பியிருக்கலாம். தன்னைப் பிடிக்க வந்த ஆசாரியனின் அதிகாரிகளைத் தரையிலே தள்ளி விட்டு, அமைதியாக நடந்து சென்றிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை.
குறிக்கப்பட்ட வேளை வந்தது. கொலையுண்ணப்போகிற ஆட்டுக்குட்டியைப் போலத் தன்னை ஒப்புக் கொடுக்க வேண்டிய வேளை வந்தது. பாவிகளுடைய கைகளில் தன்னை ஒப்புக்கொடுத்தார். அவரை அவர்கள் எப்படி நடத்தினார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே. தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்கள். தேவன் மேல் தங்களுக்கிருந்த மனுஷீக வெறுப்பு முழுவதையும் அவர்மேல் காட்டினார்கள் அப்போஸ்தலர் 2:23 இல் கூறப்பட்டபடி அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித் துக்கொலை செய்தீர்கள். ஆனால், இப்போது, எல்லாம் முடிந்தது. மனிதர்கள் கொடூரமாய் அவரைக் கொன்றுவிட்டனர்; சிலுவை சுமக்கப்பட்டு முடிந்தது. குறிக்கப்பட்ட வேலையும் செய்து முடிக்கப்பட்டது.
பாவிகளுடைய கைகளிலே தானாகவே, தன்னை ஒப்புக்கொடுத்த இரட்சகர், இப்போது தானாகவே தன்னுடைய ஆவியைப் பிதாவின் கைகளில் ஒப்புவிக்கிறார். என்ன ஒரு வேறுபாடு! இனி ஒருபோதும் அவர் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை; இனி ஒருபோதும் அவர் நிந்தையடைவதில்லை. தன்னைத்தானே பிதாவின் கைகளில் ஒப்புவித்து விட்டார்; இனி இவருடைய விருப்பங்கள் எல்லாவற்றையும் பிதா பார்த்துக் கொள்வார். இந்த ஆசீர்வாதமான விளைவுகளைக் குறித்து நாம் நீண்ட விளக்கமளிக்கத் தேவையில்லை.
மூன்று நாட்களுக்குப் பிறகு, பிதா அவரை மரித்தோரிடத்திலிருந்து எழுப்பினார். அதற்குப்பின் நாற்பது நாட்கள் கழித்து, பிதா அவரை எல்லாத் துரைத்தனங்களுக்கும், அதிகாரங்களுக்கும் மேலாக உயர்த்தி, எல்லா நாமங்களுக்கும் மேலாக அவருடைய நாமத்தை உயர்த்தி, பரலோகத்திலே தன்னுடைய வலது பாரிசத்தில் அமர்த்தினார். அவருடைய பகைவர்களை அவருக்குப் பாதபடியாக்கும் வரை, பிதாவினுடைய சிங்காசனத்திலே உட்கார்ந்திருக்கிறார் (வெளிப்படுத்தல் 3:21). சீக்கிரத்திலே, எல்லாம் தலைகீழாய் மாறும். உலகத்தால் புறக்கணிக்கப்பட்ட அவரை பிதாவானவர் வல்லமை யோடும் மகிமையோடும் திரும்ப அனுப்பி இரும்புக் கோலால் பூமி முழுவதையும் ஆட்சி செய்யும்படி அனுப்பி வைப்பார். அப்பொழுது, சூழ்நிலைகள் முற்றிலும் மாறும். அவர் பூமியிலிருந்த பொழுது, அவரை நியாயந்தீர்க்கத் துணிந்தவர்களை, அவர் நியாயாதிபதியாக அமர்ந்து, நியாயந்தீர்ப்பார். முன்பு அவர் அவர்கள் கைகளில் விடப்பட்டார்; இப்போது அவர்கள் அவர் கைகளில் விடப்பட்டிருப்பார்கள். முன்பு 'இவனை அகற்றும்' என்று அவர்கள் கூக்குரலிட்டார்கள்; அவர் அவர்களைப் பார்த்து, 'என்னை விட்டு அகன்று போங்கள்' என்று சொல்லுவார். இடைப்பட்ட காலத்தில், அவர் பிதாவின் கைகளில், பிதாவின் சிங்காசனத்தில் அமர்ந்து, தன்னுடைய மகிழ்ச்சியை எதிர்பார்த்திருப்பார்.
'பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று சொல்லித் தன் ஜீவனை விட்டார்.
தன்னுடைய வாழ்க்கை முழுவதிலும், பிதாவிற்குத் தம்மை சமர்ப்பிக்கும் தன்மையை எவ்வளவாய்க் கடைப்பிடித்தார் என்பது ஆதாரங்களோடுள்ள வைகள். அவைகள் எவ்வளவு பெரிய ஆசீர்வாதங்கள். அவர் பன்னிரெண்டு வயதுப் பையனாய் எருசலேமிலே இருந்துவிட்டபோது, அவரது தாயார் அவரைத் தேடினார்கள். அதற்கு அவர், என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா? என்றார். வனாந்தரத்திலே,நாற்பது நாட்கள் உபவாசமாயிருந்த பின்பு பிசாசு அவரிடம் கல்லுகளை அப்பமாக் கும்படி சொன்னான். ஆனால் அவர் அப்படிச் செய்யாமல் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையின்படியும் ஜீவித்தார். அவரது பலத்த செய்கைகளும் அவருடைய உபதேசங்களும் அந்த மக்களிலே கிரியை செய்யாதபோது, அவர் தம்மை அனுப்பின பிதாவிடம் தன்னை சமர்ப்பித்துச் சொன்னார். பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானி களுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தின படியால், உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்' (மத்தேயு 11:25). லாசருவின் சகோதரிகள், லாசரு வியாதியாயிருக்கிறான் என்று அவருக்கு செய்தி அனுப்பியபோது, அவர் விரைந்து பெத்தானியாவுக்கு வராமல், அவர் இருந்த இடத்திலேயே இரண்டு நாட்கள் தங்கினார். 'இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல், தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது' என்றார் (யோவான் 11:4). லாசரு மேல்வைத்த அன்பினால் அவர் செயல்படவில்லை; தேவனுடைய மகிமை விளங்குவதற்காக அவர் செயல்பட்டார். தன்னை அனுப்பினவருடைய சித்தம் செய்வதே அவரது போஜனம். எல்லாவற்றிலும் அவர் தன்னைப் பிதாவுக்கு சமர்ப்பித்தார். அவர் அதிகாலையில் இருட்டோடே எழுந்து, பிதாவின் சமுகத்தைத் தேடி ஜெபித்ததைப் பாருங்கள். தான் படப்போகும் எல்லாப் பாடுகளையும் அறிந்து, அதை எதிர்பார்த்து தன்னுடைய இருதயத்தை ஜெபத்தில் ஊற்றி, தன்னை ஆயத்தம் செய்து கொண்டதைப் பாருங்கள். தன்னைப் பிடிப்பதற்கு முன்பாக கடைசி நேரத்தைத் தேவனோடு செலவிட்டதைப் பாருங்கள். 'என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் சாந்தமும், மனத்தாழ்மையு மாயிருக்கிறேன்' என்று எவ்வளவு பொருத்தமாகச் சொல்கிறார். பிதாவின் கைகளிலே, தன்னைக் கொடுத்து, எப்படி வாழ்ந்தாரோ, அப்படியே மரித்தார். மரித்துக் கொண்டிருக்கும் இரட்சகரின் கடைசி செயல் இது. இச்செயல் எவ்வளவு அழகானது! தன்னுடைய வாழ்க்கை முழுவதிலும், முற்றிலுமாய் கடைப்பிடித்த சமர்ப்பணம். அது, பிதாவின்மேல் அவர் வைத்த பூரண நம்பிக்கையின் வெளிப்பாடு, அவருக்கும் பிதாவுக்கும் இருந்த நெருங்கிய உறவினை வெளிப்படுத்துகிறது. தேவன் மேல் அவர் எவ்வளவாய் முற்றிலும் சார்ந்திருந்தார் என்பதை காட்டுகிறது.
உண்மையிலேயே, எல்லாவற்றிலும் அவர் நமக்கு முன்மாதிரியை விட்டுச் சென்றுள்ளார். அவருடைய வாழ்க்கை முழுவதிலுமே, பிதாவின் கைகளில் அவருடைய ஆவி இருந்தபடியால், மரணத்திலும், பிதாவின் கைகளில் ஆவியை ஒப்புவிக்கிறார். இதை வாசிக்கிற உங்கள் வாழ்க்கையில், இது உண்மையா? ஒரு பாவியாக, உங்கள் ஆவியை தேவன் கைகளில் ஒப்புவித் திருக்கிறீர்களா? அப்படியானால், ஆவி பத்திரமாயிருக்கும். அப்போஸ்த லனாகிய பவுலோடுகூட, நீங்களும் 'நான் விசுவாசித் திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன். நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை, அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள, வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்' (2 தீமோத்தேயு 1:12) என்று சொல்ல முடியுமா? ஒரு கிறிஸ்தவனாக, உங்களை முற்றிலும் தேவனுக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறீர்களா? 'சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக் கொள்ளுகிறேன். இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை' ரோமர் 12:1 என்ற வார்த்தைக்கு செவிகொடுத்திருக்கிறீர்களா? உங்களை நேசித்து, உங்களுக்காகத் தன்னைக் கொடுத்தவருடைய மகிமைக்காக நீங்கள் வாழ்கிறீர்களா? "என்னையல்லாமல், உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது" (யோவான் 15:5) என்பதையும் 'என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு' (பிலிபியர் 4:13) என்பதையும் அறிந்து, தேவனைச் சார்ந்து, அனுதினமும் நடக்கிறீர்களா? உங்களுடைய முழுவாழ்க்கையும் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்தால், இரட்சகர் தன்னுடைய மக்களைச் சேர்த்துக்கொள்ள திரும்ப வருவதற்கு முன்னாக, உங்கள் மரணம் இருந்தாலும் 'பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்' என்று சொல்வது எளிதாக இருக்கும். பாலாக், 'நீதிமான் மரிப்பது போல் நான் மரிப்பேனாக' (எண்ணாகமம் 23:10) என்று சொன்னான். நீதிமானைப்போல மரிக்க வேண்டுமானால், நீதிமானைப் போல, வாழ வேண்டும்; தேவனைச் சார்ந்தும், தேவனுக்கு முற்றிலும் சமர்ப்பித்தும் வாழவேண்டும்.
பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்'
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மரணம் மற்ற யாருடைய மரணத்தைப் போலல்ல; அவரது ஜீவன் அவரிடமிருந்து எடுக்கப்படவில்லை; அவர்தாமே ஜீவனைக் கொடுத்தார். 'நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்து கொள்ளும்படிக்கு, அதைக் கொடுக்கிறபடியால், பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக் கொள்ள மாட்டான். நானே அதைக் கொடுக்கிறேன். அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும், எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு' யோவான் 10:17,18 என்கிறார். கிறிஸ்துவின் ஜீவன் அவரிடமிருந்து எடுக்கப்படவில்லை என்பதற்கான பல்வேறு காரணங்கள் இப்புத்தகத்தின் முன்னுரையில் தரப்பட்டுள்ளன. அவர் தம்முடைய ஆவியைப் பிதாவின் கரங்களில் ஒப்புவித்தத் தன்மை அவரது பூரண சமர்ப்பணத்திற்கு மிகச்சிறந்த ஆதாரமாகும். ஆண்டவராகிய இயேசு தாமே "பிதாவே உம்முடைய கரங்களில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் " என்றார். ஆனால் பரிசுத்த ஆவியானவர் இயேசு தமது ஜீவனை ஒப்புவித்த இதே கருத்தை வலியுறுத்தும் வகையில் சுவிசேஷங்களில் பயன்படுத்திருக்கும் சொற்களின் ஆழங்களைக் கொண்டு முன்று வெவ்வேறு வகைகளில் வெளிப்படுத்துகிறார்.
மத்தேயு 27:50 இல், இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்' என்று வாசிக்கிறோம். இந்த மொழிபெயர்ப்பிலே மூலபாஷை யிலுள்ள அதே ஆழத்தை வெளிப்படுத்தவில்லை. கிரேக்க மொழியிலே "அவர் ஆவியை விட்டார்" என்றிருக்கிறது. கர்த்தரை, தாவீதின் குமாரன் என்றும் யூதரின் ராஜா என்றும் குறிப்பிடுகிற மத்தேயு சுவிசேஷம், அவரை ராஜாவின் நிலையில் வைத்துப் பார்க்கும் ராஜரீக சுவிசேஷம். இதிலே "ஜீவனை விட்டார்" என்ற வார்த்தைகள் ஓர் ராஜா தன் ஊழியக்காரனை வேலையிலிருந்து நீக்கி அனுப்பும் அதிகார தோரணையில் குறிப்பிடப் பட்டுள்ளன.
மாற்கு சுவிசேஷம் நம்முடைய கர்த்தரை ஊழியக்காரனாகப் பார்க்கும் சுவிசேஷம். லூக்கா, கிறிஸ்துவின் பூரண மனுஷீகத்தன்மையைக் குறிக்கும். சுவிசேஷம். இவற்றில் தன்னுடைய "ஜீவனை விட்டார்" என்பது மரணத்தை ஏற்றுக்கொண்டதாகக் குறிக்கிறது.
கிறிஸ்துவின் தெய்வீக மகிமையைக் கூறும் யோவான் சுவிசேஷத்திலே, பரிசுத்த ஆவியானவர், 'தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். (யோவான் 19:30) என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். ஆவியை தாமாகக் கொடுத்தார் என்பது மிகச்சரியானது. மனுஷீகத்தை குறிக்கும் லூக்கா சுவிசேஷத்திலே பிதாவின் கைகளில் ஆவியை ஒப்புக்கொடுத்தார் என்றிருக்கிறது. ஆனால் தெய்வீக மகிமையைக் குறிக்கும் சுவிசேஷம், அவர் எல்லா வல்லமையும் உடையவராய், தன் ஆவியைத் தானே கொடுத்ததாகக் குறிப்பிடுகிறது.
பாவநிவிர்த்திக்காக பலியிடும் பொழுது, இரண்டு காரியங்கள் தேவை. முதலாவது தேவனின் பரிசுத்தத்திற்கும், நீதிக்கும் திருப்தியளிக்கத் தக்கதாக பலி இருக்கவேண்டும். நமக்காகப் பலியான இயேசு, ஊற்றப்பட்ட தேவ கோபத்தினை அனுபவித்தார்; பாடுகளைச் சகித்துவிட்டார். இரண்டாவது, இரட்சகர் மரணத்தை ருசிபார்க்க வேண்டும். ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷருக்கு நியமிக்கப் பட்டிருக்கிறது (எபிரேயர் 9:27). பாவியைப் பொறுத்தமட்டில், மரணம் முதலாவது; அதன்பின் நியாயத்தீர்ப்பு இரட்சகரைப் பொறுத்தமட்டில், இந்த நிலை தலைகீழாகியது. நமது பாவங்களுக்கான தேவனின் நியாயத்தீர்ப்பை முதலில் அனுபவித்தார்; பின்பு மரணத்தை சந்தித்தார்.
இப்போது முடிவு வந்துவிட்டது மரணத்தால் மேற்கொள்ள முடியாத, மிகச்சிறந்த எஜமானாகிய அவர், தன்னுடைய வற்றாத வல்லமையுடன், மகாசத்தமாய்க் கூப்பிட்டு, தன் ஆவியை பிதாவின் கைகளில் ஒப்படைப் பதில், அவருடைய இணையற்றத் தனித்தன்மை வெளிப்படுத்துகிறது. வேறு எவரும் இதைப்போல செய்தது இல்லை; மரணமடைந்ததுமில்லை. அவரது பிறப்பு, வாழ்க்கை, ஏன் மரணமும்கூட தனித்தன்மை உடையது. தன்னுடைய ஜீவனை ஒப்புக்கொடுத்ததில், மற்றவர்களுடைய மரணத்தைவிட, இவரது மரணம் வித்தியாசமானது. தன்னுடைய சொந்த விருப்பத்தின் பேரிலேயே அவர் மரித்தார். ஒரு தெய்வீக மனிதரைத் தவிர, வேறு யார் இதை செய்யக் கூடும்? சாதாரண மனிதனாக இருந்தால், இச்செயல் தற்கொலையாகும். ஆனால், இயேசுவிலே அவருடைய முழுமைக்கும், தனித்தன்மைக்கும் இது அடையாளமாகும். ஜீவாதிபதியாக அவர் மரணமடைந்தார்.
'பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்'
திரும்பத்திரும்ப, இரட்சகர் தனக்குப் கொடுக்கப்பட்ட மக்களைப் பற்றியே பேசுகிறார் (யோவான் 6:37). அவரைப் பிடிக்க வந்தபோது, நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்து போகவில்லை (யோவான் 18:9). தம்முடைய மரணத்தின் போது, இரட்சகர், அவர்களை பிதாவின் கைகளில் பத்திரமாக ஒப்புக்கொடுப்பது அருமையான செயலல் லவா? தம்முடைய மக்களின் பிரதிநிதியாக, கிறிஸ்து சிலுவையில் தொங்கினார்; எனவே அவருடைய கடைசிச் செயலையும் நமக்காகச் செய்த செயலாகப் பார்க்கிறோம். கர்த்தராகிய இயேசு தம்முடைய ஆவியை பிதாவின் கைகளில், ஒப்புக்கொடுத்த போது, தம்முடைய ஆவியோடுகூட நம் எல்லோருடைய ஆவியையும் பிதாவிடத்தில் ஒப்புக்கொடுத்தார். இயேசுகிறிஸ்து தமக்காக வாழவோ, சாகவோ இல்லை. அவர் தம்மை விசுவாசிக்கிறவர்களுக்காகவே வாழ்ந்தார்; மரித்தார். கடைசியில் அவர் செய்த செயல் அவருக்கும் விசுவாசிகளுக்கும் உரியது. கிறிஸ்து, தெரிந்து கொள்ளப்பட்ட எல்லா ஆத்துமாக்களையும் ஒன்று சேர்த்து, தன்னுடைய ஆவியோடுகூட, அவர்களையும் அமைதியாக ஒப்புக்கொடுக்கிறார்.
பிதாவின் கைகள் நித்தியமான பாதுகாப்பின் இடம். அந்தக் கைகளில், தம்முடைய மக்களை, எப்போதும் பாதுகாப்பாக இருக்கும்படி ஒப்புக் கொடுத்தார். தெரிந்தெடுக்கப்பட்டவர்களைக் குறித்து, கிறிஸ்து, அவை களை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள, ஒருவனாலும் கூடாது' (யோவான் 10:29) என்று சொல்கிறார். விசுவாசிகளின் நம்பிக்கையின் அடிப்படை இதுதான். நம்முடைய உறுதியின் அடிப்படையும் இதுவே. யெகோவாவின் கைகள் பேழையின் கதவைப் பாதுகாத்தபோது, நோவாவுக்கு எந்த சேதமும் வரவில்லை. எனவே சர்வவல்லவரின் கைகளில் இருக்கும் நம்முடைய ஆவியை எதுவும் தொடமுடியாது. அங்கிருந்து யாரும் நம்மைப் பறிக்கமுடியாது. நம்மில் நாம் பலவீனர்; ஆனால் தேவனின் வல்லமையால் காக்கப்படும்போது, வேத வார்த்தை சொல்கிறது, 'தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு, அந்தச் சுதந்திரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது (1 பேதுரு 1:5). பந்தயத்தில் நன்றாக ஓடுவதைப் போல காணப்படும் உலகப்பிரகாரமான மக்கள். கொஞ்ச நாட்களில் சோர்வடைந்து, ஒட்டத்தினின்று விலகி விடுகிறார்கள். எழுப்புதல் கூட்டங்களில், சரீரப்பிரகாரமாக உணர்ச்சிவசப்படுகிறவர்கள், அவர்களுக்குள்ளே வேர் கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலம் மாத்திரம் நிலைத்திருப்பார்கள். தங்கள் சுயசித்தத்தையும், சொந்தத் தீர்மானங்களையும் நம்புபவர்கள், தாமாகவே மாறி இன்னும் சிறப்பாக செயல்பட உறுதிமொழி எடுப்பவர்கள், அதில் தவறி விடுவர். அவர்களுடைய பின்னிலைமை, முன்னிலைமையைப் பார்க்கிலும் மோசமாகி விடும். தேவாலயத்துக்கு வரச்சொல்லியோ, கிறிஸ்தவ வாழ்க்கை வாழும்படி சொல்லியோ வழிநடத்தும், நல்லெண்ணம் கொண்ட, ஆனால் அறியாமை நிறைந்த ஆலோசகர்களின் ஆலோசனையைக் கேட்பவர்கள் அடிக்கடி உண்மையை விட்டு வழிவிலகிச் செல்வார்கள். மறுபடியும் பிறந்த ஒவ்வொரு ஆவியும், பிதாவின் கைகளில் நித்தியமாக பத்திரமாயிருக்கும்.
பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்'
நாம் குறிப்பிடுவதெல்லாம், தேவனோடு உறவு என்பது இடத்தையோ சூழ்நிலையையோ பற்றி கவலைப்படாமல், சுதந்திரமாக அனுபவிக்கின்ற ஒன்று. சிலுவையில் தொங்கிய இரட்சகரைச் சுற்றிலும் தாக்குகின்ற மக்கள் கூட்டமும் தாங்கொண்ணா வேதனையே சகித்த சரீரமும் இருந்தும் அவர் பிதாவோடு ஐக்கியம் கொள்ள முடிந்தது. நம்முடைய வேதம், கற்றுத்தரும் இனிமையான உண்மைகளில் இதுவும் ஒன்று. வெளியிலுள்ள சூழ்நிலைகள், நிபந்தனைகள், மத்தியில்,எல்லா நேரத்திலும் தேவ பிரசன்னத்தை அனுபவிப்பது நமக்குக் கிடைத்த பெரிய சிலாக்கியம். தேவனோடு உள்ள உறவு, விசுவாசத்தினாலே வருவது; விசுவாசம், காண்கிற பொருள் களினாலே பாதிக்கப்படுவதில்லை. வெளியிலுள்ள சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும், வாசகரே, அதன் மத்தியிலும் தேவனோடு உறவு கொள்வது சொல்லமுடியாத சிலாக்கியம். எரிகிற அக்கினிச் சூளையின் நடுவிலே, தேவனுடைய உறவை அனுபவித்த மூன்று எபிரெய வாலிபர்களைப் போல, சிங்கக்கெபியிலே தானியேலைப் போல, பிலிப்பியச் சிறையிலே பவுலும் சீலாவும் போல சிலுவையில் இரட்சகரைப்போல நாமும் எங்கிருந்தாலும் தேவனோடு உறவுகொள்ள முடியும். கிறிஸ்துவின் தலை முள்முடியில் சாய்ந்திருந்தாலும், அதனடியில் பிதாவின் கைகள் இருந்தன.
மரிக்கும் வேளையிலே தேவனோடு கொள்ளும் உறவு பற்றிய உண்மை யையும், அந்த பாக்கியமான சத்தியத்தையும் வேதம் குறிப்பாக நமக்குக் கற்பிக்கவில்லையா? கிறிஸ்தவ சகோதரரே, பின் ஏன் அதைக்குறித்து பயப்பட வேண்டும்? பழைய ஏற்பாட்டுக் காலத்திலே தாவீது 'நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்' (சங்.23:4) என்றும் சொல்லும்போது, கிறிஸ்து சாவின் கூரை ஒடித்த பிறகும், விசுவாசிகளான நாம் ஏன் பயப்படவேண்டும்? இரட்சிக்கப்படாதவர்களுக்கு மரணம் என்பது பயங்கரத்தின் ராஜாவாயிருக்கலாம். ஆனால் கிறிஸ்தவர்களுக்கு, மரணம் என்பது நம்மை நேசித்தவர்களின் சமுகத்திற்கு நம்மை வழிநடத்தும் வாசலாகும். உயிரோடிருந்தபோது போலவே, மரணமடையும்போது, ஆத்துமாவின் அசைவுகள் அனைத்தும் தேவனிடம் திரும்புகின்றன. நாம் உணர்வுள்ளவர்களாய் இருந்தால், நாமும் 'பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று உரக்கக் கூறுவோம். இங்கே இந்தக் கூடாரத்திலே வசிக்கும்போது, தேவனின் கரங்களினாலன்றி நமக்கு இளைப்பாறுதல் இல்லை. நாம் அங்கே செல்லும்போது, நம்முடைய எதிர்பார்ப்பும், உண்மையான ஆவலும் அவருடன் இருக்கவேண்டும் என்பதே. நாம் பரலோகத்தை நோக்கி ஏக்கப் பார்வையுடன் இருக்கிறோம். இரட்சிக்கப்பட்டவர்களின் ஆத்துமா பிரியும் வேளை வரும்போது, தன்னைத்தானே தேவனின் அன்புக்கரங்களில் ஒப்படைக்கிறது.பல திருப்பங்களையும் வளைவுகளையும் கடந்து கடலில் சங்கமிக்கும் ஆறுபோல, ஆத்துமாவும் தேவனைச் சந்திக்கிறது. இந்த உலகத்தில் தேவனைத்தவிர எதுவும் நம் ஆத்துமாவை திருப்தி செய்ய முடியாது; அங்கு செல்லும்போதும் அவரைத்தவிர யாரும் நம்மை திருப்திப்படுத்து முடியாது.
ஆனால், வாசகரே, விசுவாசிகள் மட்டுமே தங்கள் மரணநேரத்தில், ஆவியை பிதாவின் கைகளில் ஒப்புக்கொடுக்க உரிமையும் அதிகாரமும் பெற்றவர்கள் அப்படியானால், மரணமடையும் அவிசுவாசிகளின் நிலைமை எவ்வளவு பரிதாபமானது. அவர்கள் ஆவிகளும் பிதாவின் கைகளிலே, பாக்கியத்திற்கல்ல பரிதாபமான முடிவுக்கேதுவாக சென்று சேரும். ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே (எபி.10:31). ஆம், அன்புள்ள கரங்களில் விழுவதற்கு பதிலாக, நியாயத் தீர்ப்பின் கரங்களில் விழவேண்டியிருக்குமே.
"பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்'
இரட்சகரின் கடைசி வார்த்தைகள் மரிக்கும் கிறிஸ்தவர்களின் ஜெபமாயிருக்குமானால், எவ்வளவாய் அவர்கள் தங்கள் ஆவிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. ஆவி என்பது விலைமதிப்பற்ற பொக்கிஷம், அது பாதுகாப்பான கரங்களில் பத்திரமாகச் சேரவேண்டும் என்பதே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் இந்த வார்த்தைகள், ஒரு விசுவாசி தன் சரீரத்துக்கு என்ன நேர்ந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல், தன் ஆத்துமா பாதுகாக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறான் என்பதை தெரிவிக்கிறது. தேவனின் பரிசுத்தவான்கள், சாவுக்கு அருகாமையில் வரும்போது தன்னுடைய சரீரத்தை குறித்து, அதை எங்கே வைக்கவேண்டும், எப்படி அடக்கம் பண்ணவேண்டும். என்பதற்கெல்லாம், தன்னுடைய நண்பர்களை நம்புகிறார்கள். ஆனால் தன்னுடைய ஆத்துமாவைக் குறித்தோ அவன் கரிசனையுடன் கடைசி மூச்சு தேவனின் பாதுகாப்பில் சேர வேண்டும் என்பதில் கவனமாயிருக்கிறார்கள். இயேசு தாமே கர்த்தாவே, என் சரீரத்தைப் பெற்றுக் கொள்ளும்; என்றோ "மண்ணான என் சரீரத்தைப் பொறுப்பெடுத்துக் கொள்ளும்" என்றோ சொல்லாமல், கர்த்தாவே என் ஆவியை ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே, ஆவி என்னும் ஆபரணம் வைத்திருந்த ஆபரணப்பெட்டி உடைக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது ஆபரணத்தைப் பாதுகாப்பாக ஏற்றுக்கொள்ளும்' என்று சொல்லுகிறார்.
கடைசியாக, ஒரு சுருக்கமான வேண்டுகோள். என்னுடைய நண்பரே, துன்பங்கள் நிறைந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். வாழ்க்கையில் உங்களை கவனித்துக்கொள்ள உங்களால் முடியாது. அதைப்போலவே மரணத்திலும் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது. வாழ்க்கையில் அநேக கஷ்டங்களும் சோதனைகளும் உண்டு. உங்கள் ஆத்துமா எல்லாப் பக்கங்களிலும் நெருக்கப்படுகிறது. ஒவ்வொரு இடத்திலும் ஆபத்தும் சோதனைகளும் உண்டு. உலகம், மாமிசம், பிசாசு மூன்றும் உங்களுக்கு எதிராக கூட்டாக நிற்கும். அவை உங்கள் பெலத்திற்கு மிஞ்சியவை. இதோ, இங்கே இருளுக்கிடையே ஒரு வெளிச்சம். எல்லாப் புயலுக்கும் அடைக்கலமாக ஒரு துறைமுகம். பிசாசின் எல்லா தந்திரங்களுக்கும் உங்களை மறைத்து பாதுகாக்கும் அடைக்கலக்கோட்டை வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளுக்கும், சாவின் பயங்கரங்களுக்கும் விலக்கிக் காக்கும் அடைக்கலமாகிய பிதாவின் கைகள் இருதயத்தின் உண்மையான இளைப்பாறுதல்.
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.