அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து, ஜெபஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான். (அப் 17:16,17)
ஒருவேளை இந்தச் செய்தியைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஒரு நகரத்தில் வசிக்கலாம்; ஆகவே பசுமையான புல்வெளிகளைவிட, செங்கற்களையும் கட்டுமானப் பொருட்களையும் அதிகம் பார்க்கலாம். அல்லது நீங்கள் ஆழமாக நேசிக்கும் உங்கள் உறவினரோ நண்பரோ ஒரு பட்டணத்தில் வசிக்கலாம். இவற்றில் உங்கள் நிலை எதுவாக இருந்தாலும், இக்கட்டுரையின் முகப்பில் உள்ள வேதவாக்கியங்கள் உங்கள் கவனத்தை நாடுகின்றன. இந்த வேதப்பகுதி கற்றுக்கொடுக்கும் பாடங்களை நான் உங்களுக்குக் காண்பிக்கும்படியாக, சில நிமிடங்களுக்கு உங்கள் கவனத்தை இங்கே திருப்புங்கள்.
இது மிகவும் பிரபலமான அத்தேனே பட்டணம். அந்நாட்களில் இப்பட்டணமானது அதன் நிபுணத்துவத்துக்கும், தத்துவஞானிகளுக்கும், புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்களுக்கும், கவிஞர்களுக்கும், ஓவியர்களுக்கும், கட்டிடக் கலைஞர்களுக்கும் பிரசித்திபெற்ற நகரமாக விளங்கியது. உலகத்தாருக்குப் பண்டைய கிரேக்க நாடு கண்களாக இருந்ததுபோல, அத்தேனே பட்டணம் கிரேக்க நாட்டின் கண்களாயிருந்தது.
பவுல் புறஜாதியாருக்கு அப்போஸ்தலனாயிருந்தார். உலகம் இதுவரைக் கண்டதிலேயே கடின உழைப்பிலும் ஊழியத்திலும் வெற்றிகண்டவர் பவுல். தன்னுடைய ஆவிக்குரிய போதகரைத் தவிர, ஸ்திரீயினிடத்தில் பிறந்தவர்களில், தன்னுடைய எழுதுகோலாலும் பேச்சாலும் மனுக்குலத்தின் மீது மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் பவுல் மட்டுமே.





