இணை வசன வேதாகமம்

Click to Subscribe

யோவேல் 2

                   
புத்தகங்களைக் காட்டு
1சீயோனிலே எக்காளம் ஊதி எச்சரியுங்கள்: என்னுடைய திரு மலைமேலிருந்து கூக்குரலிடுங்கள்: நாட்டில் குடியிருப்பவர்கள் அனைவரும் நடுங்குவார்களாக! ஏனெனில், ஆண்டவரின் நாள் வருகின்றது, ஆம்: அது வந்து விட்டது.யோவே 2:15 எண் 10:3 எண் 10:8 எரே 4:5 ஓசி 8:1
2அதுவோ இருளும் காரிருளும் கவிந்த நாள்: மப்பும் மந்தாரமும் சூழ்ந்த நாள்: விடியற்காலை ஒளி மலைகள்மேல் பரவுவதுபோல் ஆற்றல்மிகு, வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டம் வருகின்றது: இதுபோன்று என்றுமே நிகழ்ந்ததில்லை: இனிமேல் தலைமுறை தலைமுறைக்கும் நிகழப்போவதுமில்லை.யோவே 2:10 யோவே 2:31 யோவே 3:14 யோவே 3:15 யாத் 20:21 சங் 97:2 ஏசா 5:30 ஏசா 8:22 எரே 13:16 ஆமோ 5:18-20 செப் 1:14 செப் 1:15 எபிரெ 12:18 யூதா 1:13
3அவை வரும்பொழுது தீயும் தணலும் கூட்டெரிக்கும். அவற்றின் வருகைக்குமுன் நாடு ஏதேன் தோட்டம் போலிருக்கும்: அவை போனபின்போ பாலைநிலம்போல் ஆகிவிடும்: அவற்றுக்கு எதுவுமே தப்பமுடியாது.யோவே 1:19 யோவே 1:20 சங் 50:3 ஆமோ 7:4
4பார்வைக்கு அவை குதிரைகள் போலிருக்கின்றன: போர்க் குதிரைகள்போல் அவை விரைந்தோடுகின்றன.வெளிப் 9:7
5அவை தேர்ப்படைகளின் கிறீச்சொலிபோல் இரைந்து கொண்டு, சருகுகளைச் சுட்டெரிக்கும் நெருப்புத் தணல்போல் ஒலியெழுப்பி, போருக்கு அணிவகுத்த ஆற்றல் மிக்க படைகள்போல் மலையுச்சிகளின்மேல் குதித்துச் செல்லும்.நாகூ 2:3 நாகூ 2:4 நாகூ 3:2 நாகூ 3:3 வெளிப் 9:9
6அவற்றின்முன் மக்களினத்தார் நடுங்குவர்: அச்சத்தால் எல்லாரின் முகமும் வெளிறிப் போகும்.சங் 119:83 ஏசா 13:8 எரே 8:21 எரே 30:6 புலம் 4:8 நாகூ 2:10
7அவை போர் வீரர்களைப்போல் தாவி ஓடுகின்றன: படை வீரர்களைப்போல் சுவர்மேல் ஏறுகின்றன: ஒவ்வொன்றும் தனக்குரிய பாதையில் போகின்றது: தங்கள் இலக்கைவிட்டு அவை பிறழ்வதில்லை.2சாமு 1:23 2சாமு 2:18 2சாமு 2:19 சங் 19:5 ஏசா 5:26-29
8ஒன்றை ஒன்று நெருக்குவதில்லை: ஒவ்வொன்றும் தன் வழி தவறாது செல்கின்றது: போர்க் கருவிகளுக்கிடையே சிக்கிக் கொண்டாலும் அவை வரிசை கலையாமல் முன்னேறுகின்றன.2நாளா 23:10 2நாளா 32:5 நெகே 4:17 நெகே 4:23 யோபு 33:18 யோபு 36:12 உன்ன 4:13
9நகருக்குள் பாய்ந்து செல்கின்றன: மதில்மேல் ஓடுகின்றன: வீடுகள்மேல் ஏறி, பலகணி வழியாய்த் திருடனைப்போல் உள்ளே நுழைகின்றன.யாத் 10:6 எரே 9:21 யோவா 10:1
10அவற்றுக்கு முன்பாக நிலம் நடுங்குகின்றது: வானம் அசைகின்றது: கதிரவனும் நிலவும் இருண்டு போகின்றன: விண்மீன்களும் ஒளி இழந்து போகின்றன.சங் 18:7 சங் 114:7 நாகூ 1:5 மத் 27:51 வெளிப் 6:12 வெளிப் 20:11
11ஆண்டவர் தம் படைகள்முன் முழக்கம் செய்கின்றார்: அவரது பாளையம் மிக மிகப் பெரிது: அவர் தம் வாக்கை நிறைவேற்ற ஆற்றல் உடையவர். ஏனெனில் ஆண்டவரின் நாள் மிகக் கொடியது: அச்சம் தர வல்லது, அதைக் தாங்கிக் கொள்ளக் கூடியவர் எவர்?யோவே 3:16 2சாமு 22:14 2சாமு 22:15 சங் 46:6 ஏசா 7:18 ஏசா 13:4 ஏசா 42:13 எரே 25:30 ஆமோ 1:2
12“இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்” என்கிறார் ஆண்டவர்.உபா 4:29 உபா 4:30 1சாமு 7:3 1இரா 8:47-49 2நாளா 6:38 2நாளா 6:39 2நாளா 7:13 2நாளா 7:14 ஏசா 55:6 ஏசா 55:7 எரே 4:1 எரே 29:12 எரே 29:13 புலம் 3:40 புலம் 3:41 ஓசி 6:1 ஓசி 12:6 ஓசி 14:1 சகரி 1:3 சகரி 1:4 அப் 26:20
13“நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்.” அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்: நீடிய பொறுமையுள்ளவர், பேரன்புமிக்கவர்: செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர்.2இரா 22:19 சங் 34:18 சங் 51:17 ஏசா 57:15 ஏசா 66:2 எசே 9:4 மத் 5:3 மத் 5:4
14ஒருவேளை அவர் தம் மனத்தை மாற்றிக்கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு தானியப் படையலையும் நீர்மப் படையலையும் நீங்கள் அளிக்குமாறு உங்களுக்கு ஆசி வழங்குவார். இதை யார் அறிவார்?யாத் 32:30 யோசு 14:12 1சாமு 6:5 2சாமு 12:22 2இரா 19:4 ஆமோ 5:15 யோனா 1:6 யோனா 3:9 செப் 2:3 2தீமோ 2:25
15சீயோனில் எக்காளம் ஊதி எச்சரியுங்கள்: புனிதமான உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்: வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள்.யோவே 2:1 எண் 10:3
16மக்களைத் திரண்டு வரச்செய்யுங்கள்: புனித கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்: முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள், பிள்ளைகளையும் பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒருசேரக் கூட்டுங்கள்: மணமகன் தன் அறையை விட்டு வெளியேறட்டும்: மணமகள் தன் மஞ்சத்தைவிட்டுப் புறப்படட்டும்.யாத் 19:10 யாத் 19:15 யாத் 19:22 யோசு 7:13 1சாமு 16:5 2நாளா 29:5 2நாளா 29:23 2நாளா 29:24 2நாளா 30:17 2நாளா 30:19 2நாளா 35:6 யோபு 1:5
17ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள் கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழுதவண்ணம், “ஆண்டவரே, உம் மக்கள்மீது இரக்கம் கொள்ளும்: உமது உரிமைச்சொத்தை வேற்றினத்தார் நடுவில் நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதீர்” எனச் சொல்வார்களாக! “அவர்களுடைய கடவுள் எங்கே?” என வேற்றினத்தார் கூறவும் வேண்டுமோ?யோவே 1:9 யோவே 1:13
18அப்பொழுது ஆண்டவர் தம் நாட்டின்மேல் பேரார்வம் கொண்டு தம் மக்கள் மீது கருணை காட்டினார்.ஏசா 42:13 சகரி 1:14 சகரி 8:2
19ஆண்டவர் தம் மக்களுக்கு மறுமொழியாகக் கூறியது இதுவே: “நான் உங்களுக்குக் கோதுமையும், திராட்சை இரசமும், எண்ணெயும் தருவேன்: நீங்களும் நிறைவு பெறுவீர்கள்: இனிமேல் வேற்றினத்தார் நடுவில் உங்களை நிந்தைக்கு ஆளாக்கமாட்டேன்.”யோவே 2:24 யோவே 1:10 ஏசா 62:8 ஏசா 62:9 ஏசா 65:21-24 ஓசி 2:15 ஆமோ 9:13 ஆமோ 9:14 ஆகா 2:16-19 மல்கி 3:10-12 மத் 6:33
20வடக்கிலிருந்து வந்த படையை உங்களிடமிருந்து வெகு தொலைவிற்கு விரட்டியடிப்பேன்: அதனை வறட்சியுற்றதும் பாழடைந்ததுமான நிலத்திற்குத் துரத்திவிடுவேன். அதன் முற்பகுதியைக் கீழைக் கடலுக்குள்ளும், பிற்பகுதியை மேலைக் கடலுக்குள்ளும் ஆழ்த்துவேன். பிண நாற்றமும் தீய வாடையும் அங்கே எழும்பும்: ஏனெனில் அது பெரும் தீச்செயல்களைப் புரிந்தது.யோவே 2:2-11 யோவே 1:4-6 யாத் 10:19
21நிலமே நீ அஞ்சாதே: மகிழ்ந்து களிகூரு: ஏனெனில், ஆண்டவர் பெரிய காரியங்களைச் செய்தார்.ஆதி 15:1 ஏசா 41:10 ஏசா 54:4 எரே 30:9 எரே 30:10 செப் 3:16 செப் 3:17 சகரி 8:15
22காட்டு விலங்குகளே, அஞ்சாதிருங்கள்: ஏனெனில், பாலைநிலப் புல்வெளிகள் பசுமையாய் இருக்கின்றன: மரங்கள் கனி தருகின்றன: அத்திமரமும் திராட்சைக் கொடியும் மிகுந்த கனி கொடுக்கின்றன.யோவே 1:18-20 சங் 36:6 சங் 104:11-14 சங் 104:27-29 சங் 145:15 சங் 145:16 சங் 147:8 சங் 147:9 ஏசா 30:23 ஏசா 30:24 யோனா 4:11
23சீயோனின் பிள்ளைகளே, அகமகிழுங்கள்: உங்கள் கடவுளாகிய ஆண்டவரை முன்னிட்டுக் களிப்படையுங்கள்: ஏனெனில், அவர் தமது நீதியை நிலைநாட்ட உங்களுக்கு முன்மாரியைத் தந்தார்: முன்போலவே உங்களுக்கு முன் மாரியையும் பின்மாரியையும் நிறைவாகத் தந்தருளினார்.சங் 149:2 புலம் 4:2 சகரி 9:13 கலா 4:26 கலா 4:27
24போரடிக்கும் களங்களில் கோதுமை நிறைந்திருக்கும்: ஆலைகளில் திராட்சை இரசமும் எண்ணெயும் வழிந்தோடும்.யோவே 3:13 யோவே 3:18 லேவி 26:10 நீதி 3:9 நீதி 3:10 ஆமோ 9:13 மல்கி 3:10
25நான் உங்களுக்கு எதிராக அனுப்பிய என் பெரும் படையாகிய வெட்டுப் புழுக்கள், இளம் வெட்டுக்கிளிகள், துள்ளும் வெட்டுக்கிளிகள், வளர்ந்த வெட்டுக்கிளிகள் ஆகியவை அழித்துவிட்ட பருவப் பலன்களை உங்களுக்கு மீண்டும் தருவேன்.யோவே 2:2-11 யோவே 1:4-7 சகரி 10:6
26நீங்கள் வேண்டியமட்டும் உண்டு நிறைவடைவீர்கள்: உங்களை வியத்தகு முறையில் நடத்தி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைப் போற்றுவீர்கள்: இனிமேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாகமாட்டார்கள்.லேவி 26:5 லேவி 26:26 உபா 6:11 உபா 6:12 உபா 8:10 நெகே 9:25 சங் 22:26 சங் 103:5 நீதி 13:25 உன்ன 5:1 ஏசா 55:2 ஏசா 62:8 ஏசா 62:9 மீகா 6:14 சகரி 9:15 சகரி 9:17 1தீமோ 6:17
27இஸ்ரயேல் நடுவில் நான் இருக்கிறேன் என்றும், ஆண்டவராகிய நானே உங்கள் கடவுள் என்றும், என்னையன்றி எவரும் இல்லையென்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்: இனிமேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள்.யோவே 3:17 லேவி 26:11 லேவி 26:12 உபா 23:14 சங் 46:5 சங் 68:18 ஏசா 12:6 எசே 37:26-28 செப் 3:17 2கொரி 6:16 வெளிப் 21:3
28அதற்குப்பின்பு, நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்: உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்: உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்.நீதி 1:23 ஏசா 32:15 ஏசா 44:3 எசே 39:29 யோவா 7:39 அப் 2:16-18
29அந்நாள்களில், உங்கள் பணியாளர், பணிப்பெண்கள் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்.1கொரி 12:13 கலா 3:28 கொலோ 3:11
30இன்னும் விண்ணிலும் மண்ணிலும் வியத்தகு செயல்களைச் செய்து காட்டுவேன்: எங்குமே, இரத்த ஆறாகவும் நெருப்பு மண்டலமாகவும், புகைப்படலமாகவும் இருக்கும்.மத் 24:29 மாற் 13:24 லூக் 21:11 லூக் 21:25 லூக் 21:26 அப் 2:19 அப் 2:20 வெளிப் 6:12-17
31அச்சம் தரும் பெருநாளாகிய ஆண்டவரின் நாள் வருமுன்னே, கதிரவன் இருண்டு போகும்: நிலவோ இரத்தமாக மாறும்.யோவே 2:10 யோவே 3:1 யோவே 3:15 ஏசா 13:9 ஏசா 13:10 ஏசா 34:4 ஏசா 34:5 மத் 24:29 மத் 27:45 மாற் 13:24 மாற் 13:25 லூக் 21:25 வெளிப் 6:12 வெளிப் 6:13
32அப்பொழுது ஆண்டவரின் திருப்பெயரைச்சொல்லி வேண்டுவோர் யாவரும் தப்பிப்பிழைப்பர்: ஏனெனில், ஆண்டவர் கூறிய வண்ணமே, சீயோன் மலையிலும் எருசலேமிலும் எஞ்சியிருப்போர் வாழ்வு அடைவர்: ஆண்டவரால் அழைக்கப்பட்டவர்களே தப்பிப் பிழைப்பார்கள்.சங் 50:15 எரே 33:3 சகரி 13:9 அப் 2:21 ரோம 10:11-14 1கொரி 1:2
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.