கிறிஸ்துவின் ஊழியத்திற்கு அழைக்கப்பட்ட ஒரு ஊழியனின் ஊழியத்தில் பல்வேறு பரிமாணங்கள் உள்ளன. அவர் மீட்கப்படாத மக்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கிப்பதும், தேவனுடைய மக்களுக்களை ஞானத்தோடும், புரிந்துக்கொள்ளுதலோடும் அவர்களை வளர்ப்பதும் (எரேமியா 3:15), இடறல்களை ஜனத்தின் வழியிலிருந்து எடுத்துப்போடுவதும் (ஏசாயா 57:14) மட்டுமல்லாமல், அவர் சென்று, “சத்தமிட்டுக் கூப்பிடு. அடக்கிக்கொள்ளாதே. எக்காளத்தைப்போல் உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி.” (ஏசாயா 58:1, 1 தீமோத்தேயு 4:2) என்ற கட்டளைக்கும் கீழ்ப்படிய வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக, மற்றொரு முக்கியமான கடமையாக, “என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்;" (ஏசாயா 40:1) என்ற தேவனுடைய வார்த்தைக்கும் அவர் கீழ்ப்படிய வேண்டியிருக்கிறது.
“என் மக்கள்!" என்பது எவ்வளவு ஒரு சிறந்த அழைப்பு! “உன் தேவன்!" என்ன ஒரு உறுதியளிக்கும் இணைப்பு “என் மக்களுக்கு ஆறுதல்!" என்ன ஒரு பாக்கியமான பொறுப்பு! “ஆற்றுங்கள், தேற்றுங்கள்" என்ற கட்டளையை இரண்டு முறை வலியுறுத்துவதற்கு மூன்று காரணங்களாகக் குறிப்பிட்டு சொல்லலாம். முதலாவது, சில சமயங்களில் விசுவாசிகளின் ஆத்துமாக்கள் ஆறுதலடைய மறுக்கின்றன (சங்கீதம் 77:2). எனவே இதுபோன்ற நேரங்களில் தான் ஆத்துமாவுக்கு அதிக ஆறுதல் கொடுப்பது அவசியம். இரண்டாவதாக, விசுவாசிகளை ஊக்குவிக்கும் காரியத்தை அலட்சியப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று போதகருக்குத் தெரிவிப்பது அவசியம் என்கிற பொறுப்பை அவர் மனதில் ஆழமாகப் பிரதிபலிக்க. மூன்றாவதாக, தேவன் தாமே தம்முடைய மக்களின் மகிழ்ச்சியைக் குறித்து எவ்வளவாய் வாஞ்சிக்கிறார் என்பதை நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தான் (பிலிப்பியர் 4:4).
தேவனுக்கு அவருடைய மக்கள் இருக்கிறார்கள், அவருடைய விசேஷித்த தயவுக்கு உரிய மக்கள்: தம்முடன் நெருங்கிய உறவில் இருக்கும்படி இந்தக் கூட்டத்தாரை அழைத்திருப்பதன் மூலம் அவாகளை “என்னுடைய ஜனங்கள்” என்று அநேக நேரங்களில் அழைக்கிறார். அவர்கள் பலமுறை அறுதல் அடையமால் உள்ளனர். அவர்களின் பாவ சுபாவம், சாத்தானால் உண்டாகும் சோதனைகள், உலகத்தார் மூலம் உண்டாகும் துன்பங்கள் மேலும், கிறிஸ்துவின் விஷயங்களில் உலகின் மோசமான அணுகுமுறை, இப்படியாக தொடர்ச்சியான காரணங்களினால் அவர்கள் அறுதல் அடையாமல் உள்ளனர். “சகலவித ஆறுதல்களின்” தேவன் அவர்கள் மேல் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் (2 கொரிந்தியர் 1:3). மேலும் அவருடைய ஊழியக்காரர்கள் இருதயம் உடைந்தவர்களுடைய காயங்களைக் கட்டி அதில் கீலேயாத்தின் பிசின் தைலம் இடவேண்டும் என்பது அவருடைய வெளிப்படையான சித்தமாய் இருக்கிறது. தேவனுடைய கட்டளைகள் மற்றும் அவரது அதிகாரத்திற்கு எதிராகக் கலகம் செய்தவர்களுக்கும் ஆறுதல் கொடுக்கும் இந்த அவரைப்போல வேறொரு தேவன் உள்ளாரா என்கிற கேள்வியை எழுப்புவதின் வழியாகவே “தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்?” என்று நாம் சொல்வதற்கு முகாந்திரம் இருக்கிறது (மீகா 7:18).
இந்த சிறிய புத்தகத்தின் உள்ளடக்கங்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக அவ்வப்போது நமது மாதாந்தரப் பத்திரிக்கைகளில் தோன்றிவை. அவைகள் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் வெகு காலத்திற்கு முன்பே போதிக்கப்பட்டவை. இப்போது நாம் உபயோகம் செய்யாத சில கருத்துக்களை நாம் தவிர்த்திருக்கிறோம் (குறிப்பாக தீர்க்கதரிசனம் பற்றி காரியங்கள்). எனினும் தேவனுடைய அநேகம் துன்புற்ற மக்களுக்கு இந்தப் புத்தகத்தின் செய்திகள் மிகுந்த ஆறுதலைத் தந்திருப்பதால், அவைகளை அதிகம் மறுதிருத்தம் செய்யவில்லை. இது புத்தகத்தில் உள்ள வேத வசன விளக்கங்கள் வழியாக தேவன் துன்பப்பட்டவர்களுக்கு சமாதானம் தருவாராக. அனைத்து மகிமையும் தேவனுக்கே உரியது.
-ஆர்தர் W. பிங்க், 1952
“ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை." (ரோமர் 8:1).
“இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது”. இந்த அற்புதமான ரோமர் நிருபத்தின் முதல் பாதியின் முடிவாக வருகிறது. அதனால்தான் இந்த அதிகாரம் “ஆனபடியால்” என்ற வார்த்தையுடன் தொடங்குகிறது. இதை இரண்டு விதங்களில் காணலாம். முதலில் இந்த வசனம் ரோமர் 3:21–ம் வசனத்தில் இருந்து சொல்லப்படும் அனைத்துடனும் தொடர்பு உடையதாய் இருக்கிறது. முந்தைய பகுதியில் இருந்து பெறப்பட்ட அனுமானம் இங்கே தரப்பட்டுள்ளது. அப்போஸ்தலனாகிய பவுல் ஆரம்பித்த வாதத்தின் முடிவாகவே இந்த அனுமானம் வருகிறது. ஏனெனில் இந்தப் பகுதி முழுவதிலும் உள்ள வாதத்தின் துவக்கத்திலிருந்தே அவர் இந்த முடிவை நோக்கி தனது வாதத்தைக் கட்டமைத்தார். கிறிஸ்து இயேசு “தம்முடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக” ஏற்படுத்தப்பட்டதாலும் (ரோமர் 3:26), “அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும்” இருப்பதாலும் (ரோமர் 4:25), ஒருவருடைய (கிறிஸ்து) கீழ்ப்படிதலினாலே அநேகர் (எல்லாக் காலத்து விசுவாசிகளும் சட்டப்பூர்வமாக) நீதிமான்களாக்கப்படுவதாலும் (ரோமர் 5:19), விசுவாசிகள் (சட்டப்படி) பாவத்துக்கு மரித்ததாலும் (ரோமர் 6:2), அவர்கள் நியாயப்பிரமாணத்தின் ஆக்கினைத்தீர்ப்பின் வல்லமைக்கு மரித்தவர்கள் ஆனதாலும் (ரோமர் 7:4) “இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது”.
“ஆனபடியால்" என்ற வார்த்தை முந்தைய வாதங்களுக்கு ஒரு முடிவு என்று மட்டும் பார்க்காமல், இது முந்தைய அதிகாரத்தின் கடைசிப் பகுதியுடன் தொடர்புடையது என்பதையும் நம் கவனித்தில் கொள்ள வேண்டியது. ரோமர் 7-ம் அதிகாரத்தின் இரண்டாம் பாகத்தில், மறுபிறப்பு அடைந்த ஒரு நபருக்குள் எதிர்மறையான சுபாவங்களால் வரும்; வலிமிகுந்த மற்றும் இடைவிடாத போராட்டத்தை அப்போஸ்தலன் தனது சொந்த கிறிஸ்தவ அனுபவத்தைப் பயன்படுத்தி விவரிக்கிறார். ஒரு தேறிய குருவின் பேனா முனை கொண்டு தன்னையே சித்திரத்தில் சேர்த்த பவுல் தேவனுடைய பிள்ளை எதிர்கொள்ளும் ஆவிக்குரிய போராட்டங்களை விவரித்த அவர், இப்போது அத்தகைய வேதனையான மற்றும் பரிதாபகரமான நிலைக்குத் தேவைப்படும் தெய்வீக தயவின் மீது தனது கவனத்தைத் திருப்புகிறார். ரோமர் 7–ம் அதிகாரம் புலம்பலுடன் முடித்து, 8–ம் அதிகாரம் வெற்றி தொனியுடன் தொடங்குவது ஆச்சரியமாகவும் வியப்பாகவும் தோன்றலாம், ஆனால் அது தர்க்கரீதியான மற்றும் இயல்பான ஒன்று தான். ஒருவேளை விசுவாசிகள் பாவத்தின் மரணத்துடன் போராடுவதும் அதன் விளைவுகளால் புலம்புவதும் உண்மையாக இருந்தால், அவர்கள் சாபத்திலிருந்தும் தண்டனையிலிருந்தும் விடுதலை அடைந்து வெற்றியின் மகிழ்ச்சி காண்கிறார்கள் என்பதும் உண்மை. இந்த இரண்டு வெவ்வேறு அனுபவங்களை நாம் இங்கு விளக்குவதைக் காணலாம். 7–ம் அதிகராத்தின் இரண்டாவது பாதியில், இந்த உலகில் தங்கள் வாழ்நாள் முழுவதும் விசுவாசிகள் மீது பாவத்தின் விளைவை குறித்து அப்போஸ்தலன் விவரிக்கிறார். ஆனால் 8–ம் அதிகராத்தின் தொடக்க வசனத்தில், கிறிஸ்துவுடன் ஐக்கியப்பட்டபோது பாவ தோஷத்திலிருந்து அவர்கள் பெறும் முழுமையான விடுதலையைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார். எனவே 7:24-ல் அப்போஸ்தலன் கேட்கிறார், “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” ஆனால் 8:2-ல் "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." என்று அப்போஸ்தலானகிய பவுல் அறிவிக்கிறார்.
அதனால் இப்போது ஆக்கினைத் தீர்ப்புமில்லை. இங்கே (1 யோவான் 3:21ல் வருவது போல) நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்கிறதைப்பற்றிய கேள்வி இல்லை. அல்லது நம்மில் தண்டனைக்குரியது எதுவுமில்லை என்றும் நாம் உணர்வதையும் இங்கே குறிப்பிடவில்லை. மாறாக தங்கள் இரட்சிப்பிற்காகக் கிறிஸ்துவில் விசுவாசமுள்ளவர்களை தேவன் தண்டிக்க மாட்டார் என்ற ஆசீர்வதிக்கப்பட்ட சத்தியத்தை இது வெளிப்படுத்துகிறது. நாம் நமது அனுபவத்தின் அடிப்படையில் பார்க்கும் சத்தியத்திற்கும் புறநிலையில் உள்ள உண்மையான சத்தியத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்வது மிக அவசியம். இல்லையெனில், இப்போது நமக்கு முன் உள்ள வசனம் தருகிற ஆதரவையும், சமாதானத்தையும் பெறத் தவறி விடுவோம். “கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்பவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை". இது கிறிஸ்து இயேசுவில் தேவனுக்கு முன்பாக இருக்கும் ஒரு விசுவாசியின் ஸ்தானத்தை இது குறிக்கிறது. இது அவரது மாம்சீகத்தின் நிலையைக் குறிக்கவில்லை. ஆதாமில் நான் தண்டனைக்கு உள்ளானேன் (ரோமர் 5:21). ஆனால் கிறிஸ்துவில் நான் எப்போதும் எல்லா ஆக்கினைகளிலிருந்தும் முற்றிலும் விடுவிக்கப்பட்டேன்.
“ஆனபடியால் இப்போது எந்தவித ஆக்கினைத் தீர்ப்பில்லை" “இப்போது" என்ற வார்த்தை, கிறிஸ்தவர்கள் ஒரு காலத்தில், அவர்கள் விசுவாசிகளாக மாறுவதற்கு முன்பு, ஆக்கினைத் தீர்ப்புக்குக் கீழாக இருந்ததைக் குறிக்கிறது. இது அவர்கள் கிறிஸ்துவுடன் மரிப்பதற்கு முன்னாக (கலாத்தியர் 2:20) இருந்த நிலையைக் குறிக்கிறது. கிறிஸ்துவின் மரணத்திற்குள்ளாகும்போது அவர்கள் சட்டப்பூர்வமான நீதியுள்ள பிரமாணத்தின் தண்டனைக்கு மரித்தார்கள். எனவே இந்த “இப்பொழுது” என்கிற பதம் அவர்களுடைய இரண்டு நிலைகளை அல்லது சூழல்களைக் காண்பிக்கிறது. சுபாவத்தின்படி நாம் பிரமாணத்தின் தண்டனைக்கு உட்பட்டவர்களாய் இருந்தோம், இப்போது கிருபைக்குக் கீழ்ப்பட்டவர்களாய் இருக்கிறோம். (ரோமர் 6:14). சுபாவத்தினாலே நாம் “மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்” (எபேசியர் 2:3). ஆனால் இப்போது தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, அவருக்குச் சொந்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்டோம் (எபேசியர் 1:6). முதல் உடன்படிக்கையின்படி நாம் ஆதாமுக்குள் இருந்தோம் (1 கொரிந்தியர் 15:22). ஆனால் இப்போது நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கிறோம் (ரோமர் 8:1). கிறிஸ்துவின் விசுவாசிகளான நம் அனைவருக்கும் நித்திய ஜீவன் உள்ளது. மேலும் இந்தக் காரணத்தினால் நாம் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாவதில்லை (யோவான் 5:24).
“தண்டனை" என்பது ஒரு தீவிரமான விடயம். அதை எந்த அளவு புரிந்து கொள்கிறோமோ அவ்வளவு சிறப்பாய் அதன் வல்லமையில் இருந்து நம்மை விடுவித்த ஆச்சரியமான கிருபையை நாம் மெச்சிக்கொள்வோம். மனித நீதிமன்ற வளாகங்களில் ‘ஆக்கினைத்தீர்ப்பு’ என்ற வார்த்தை ஒரு குற்றவாளியின் மீது பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, பார்ப்பவர்களுக்கு அது துக்கத்தையும், பயத்தையும் உண்டாக்குகிறது. ஆனால் தேவனுடைய நியாயசனத்தில் அந்த வார்த்தை விவரிக்க முடியாத அளவிற்கு தீவரமானதும் பிரமிக்கத்தக்குதுமாக இருக்கும். அந்த நியாயசனத்திற்கு முன் விழுந்துபோன ஆதாமின் சந்ததியினர் அனைவரும் நிற்க வேண்டும். அனைவரும் “பாவத்தில் கருத்தரிக்கப்பட்டு” பாவத்தில் உருவானவர்களாக, குற்றவாளிகள் என்று முத்திரை குத்தப்பட்டு, அவமதிப்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, பாவத்தால் சிறைபிடிக்கப்பட்ட கைதிகளாக இந்த உலகில் பிரவேசிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க ஒரே வழி பயங்கரமான தண்டனையை ஏற்படுத்திய பாவத்தைத் தவிர்ப்பதுதான். குற்றம் ஒழிக்கப்படட்டும், அதற்குப் பின்னர் தண்டனைத் தீர்ப்பு இல்லை.
ஆனால் பாவம் நீக்கப்பட்டதா? அதாவது விசுவாசிக்கும் பாவியிடம் இருந்து பாவம் நீங்கிவிடப்பட்டது என்று அர்த்தம் கொள்கிறோமா? இதற்கான பதிலை வேதவசனங்களே நமக்குத் தரட்டும்: “மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்." (சங்கீதம் 103:12). “நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்" (ஏசாயா 43:25). “இதோ, என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்” (ஏசாயா 38:17). “அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார்” (எபிசியர் 10:17).
ஆனால் பாவம் எப்படி நீக்கப்படுகிறது? பாவத்தை இடமாற்றம் செய்யப்படுவதன் மூலம் மட்டுமே சாத்தியம். தேவனின் பரிசுத்தம் பாவத்தை புறக்கணிக்க முடியாது, ஆனால் அவருடைய கிருபை அவ்வாறு செய்து, பாவத்தை இடமாற்றம் செய்தது. விசுவாசிகளின் பாவங்கள் கிறிஸ்துவின் மீது சுமத்தப்பட்டது. “கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார்." (ஏசாயா 53:6). “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை (கிறிஸ்துவை) நமக்காகப் பாவமாக்கினார்." (2 கொரிந்தியர் 5:21).
எனவே, இப்போது ஆக்கினைத் தீர்ப்பில்லை. இங்கே ‘இல்லை’ என்ற வார்த்தை வலியுறுத்திச் சொல்லப்பட்டது. அதற்கு மேல் ஆக்கினைத் தீர்ப்பில்லை என்பது உறுதியானது. நியாயப்பிரமாண சட்டத்திலிருந்தோ, உள்ளார்ந்த அக்கிரமத்திலிருந்தோ, சாத்தானின் குற்றச்சாட்டிலிருந்தோ அல்லது வேறு எந்த காரணத்திலிருந்தோ இனி ஒருபோதும் இருந்ததில்லை, இருக்கப்போவதுமில்லை. ஏனெனில் இனி ஆக்கினை தீர்ப்பில்லை. “இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” (ரோமர் 8:33) இனி எந்த தண்டனையும் இல்லை; கர்த்தரால் விடுவிக்கப்பட்டதால் “எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்.” (ரோமர் 4:8) இதற்கு மேல் எந்தக் கண்டனமும் இருக்க முடியாது.
“ஆகையால் இப்போது கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்பவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை". ஒரு விசுவாசி தனது பழைய சுபாவத்துக்கும் மற்றும் புதிய சுபாவத்துக்கும் இடையே உள்ள போராட்டத்தை விவரிக்கும் போது, முந்தைய அதிகாரத்தில் தனது சொந்த அனுபவத்தால் எடுத்துக்காட்டப்பட்டபடி, அவர் கிருபையில் வளர்ந்திருந்தாலும், அத்தகைய ஆவிக்குரியப் போராட்டத்திலிருந்து யாருக்கும் விதிவிலக்கல்ல என்பதை அப்போஸ்தலன் தெளிவுபடுத்துகிறார். ஆனால் ரோமர் 8:1 –ம் வசனத்தில் ‘எனக்கு’ என்ற ஒருமைப் பயன்பாட்டிற்குப் பதிலாக அப்போஸ்தலன் அந்த விளக்கம் முழுவதும் பன்மையாகப் பயன்படுத்துகிறார் என்பது கவனிக்கத்தக்கது. அதாவது “கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிற எனக்கு" என்று சொல்லாமல் "கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிறவர்களுக்கு" என்று சொல்லுகிறார். இப்படி எழுதுவது கூட பரிசுத்த ஆவியின் கிருபையே. அப்போஸ்தலனாகிய பவுல் இங்கும் ஒருமையான வார்த்தையை பயன்படுத்தி இருந்தால், பவுலைப் போன்ற மாபெரும் தேவ மனிதருக்கு மட்டுமே இவ்வளவு பெரிய ஆசீர்வாதம் கிடைக்கும் என்றும், அது நமக்குப் பொருந்தாது என்றும் நினைக்க வாய்ப்பு இருந்திருக்கும். அதனால் தான், இந்த மாபெரும் ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் என்பதை தெளிவுபடுத்துவதற்காக, பரிசுத்த ஆவியானவர் பவுலை இங்கு பன்மையான வார்த்தையை பயன்படுத்துவதற்கு தூண்டுதல் செய்தார்.
“ஆகையால் இப்போது கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்பவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை". “கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்பது” என்பது, தேவனின் அனைத்து நீதியான பார்வையிலும் நடவடிக்கைகளிலும் நாம் விசுவாசத்தினால் கிறிஸ்துவுடனேகூட ஒன்றாக அடையாளப்படுத்தப்படுகிறோம் என்று பொருளாகும். தண்டனைத் தீர்ப்பில் இருந்து விடுதலையைப் பெறுவது நமது நடக்கையில் எவ்வளவு சார்ந்து இருக்கவில்லை, மாறாக கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்பதையே சார்ந்துள்ளது. “கிறிஸ்து இயேசுவை விசுவாசிக்கிறவன், பேழைக்குள் நோவாவைப் போல, பாதுகாப்பாக இருப்பான். மேலே கருத்த மேகத்தில் மழை பொழிந்தாலும், தண்ணீரால் பேழை தத்தளித்தாலும் அவன் பேழைக்குள் ஒரு துளி தண்ணீர் கூட நுழையாமல், புறம்பே கொந்தளிக்கும் புயலால் அவனுடைய ஆவியின் சமாதானத்தைக் குலைப்பதில்லை. ஈசாக்கு யாக்கோபை முத்தமிட்டு ஆசீர்வதித்தபோது அவன் தன் மூத்த சகோதரனுடைய உடையை அணிந்து கொண்டு இருந்ததுபோல விசுவாசியும் கிறிஸ்துவில் இருக்கிறான். இரத்தப்பழி வாங்குகிறவன் அடைக்கலப்பட்டணத்தில் இருக்கும் கொலைகாரனைப் பின்தொடர்ந்து அவனைக் கொல்லக்கூடாதபடி இருப்பதுபோல கிறிஸ்துவில் இருக்கும் விசுவாசியும் இருக்கிறார்” (மறைதிரு. வின்ஸ்லோ, 1857). ஆம், அவன் கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிறான் என்பதால், இனி அவனுக்குத் தண்டனைத் தீர்ப்பு இல்லை. அல்லேலூயா!
“அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்." (ரோமர் 8:28).
பல நூற்றாண்டுகளாக தேவனை நேசிக்கின்ற அனைவரும் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வார்த்தையால் ஆறுதல் அடைந்து பலப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்களுடைய உபத்திரவத்திலும், சோதனைகளிலும் மற்றும் குழப்பங்களிலும், இந்த வசனம் அவர்களின் காலடியில் பலமான பாறையைப் போல இருந்திருக்கிறது. வெளிப்புறச் சூழ்நிலைகள் அவர்களுக்கு எதிராகத் தோன்றினாலும், அவர்களின் இயல்பான சிந்தனை எல்லாமே அவர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகத் தோன்றினாலும், அவர்களுடைய விசுவாசம் அதற்கு எதிராக செயல்பட்டது. மேலும், இந்த தெய்வீக வாக்குத்தத்தத்தில் நம்பிக்கை வைக்கத் தவறியவர்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி தேவையற்ற பயத்துக்கு ஆளானார்கள்.
“சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது." இங்கே முதலில் நம்முடைய சிந்தனைக்கு வருவது சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாக நடப்பிக்கும் தேவன் எவ்வளவு பெரியவர் என்பதுதான்! இடைவிடாமல் செயல்படும் அக்கிரமம் எவ்வளவு பயங்கரமானது? இந்த படைப்பில் எண்ணிலடங்காத உயிரினங்கள் எத்தனை உள்ளன? தடைகளை ஏற்படுத்தும் சுயநல ஆசைகள் எவ்வளவு அதிகமாக உள்ளன? தேவனோடு போரிடும் எதிரிகளின் எண்ணிக்கை எத்தனை? தேவனின் செயல்களைத் தொடர்ந்து எதிர்க்கும் எத்தனையோ வான மண்டல சேனைகள் உள்ளன. ஆயினும், எல்லாவற்றின் மீதும் சர்வ வல்லமை கொண்ட தேவன், எல்லா சூழ்நிலைகளிலும் அசைக்க முடியாதவராகவும் ஆளுகை உடையவராகவும் இருக்கிறார். அவருடைய மகிமையான சிங்காசனத்திலிருந்து எல்லாவற்றையும் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே செய்கிறார் (எபேசியர் 1:11). இந்த தேவனுக்கு முன்பாக பயபக்தியுடன் நிற்போம். ஏனெனில் "சகல ஜாதிகளும் அவருக்கு முன்பாக ஒன்றுமில்லை, அவர்கள் சூனியத்தில் சூனியமாகவும், மாயையாகவும் எண்ணப்படுகிறார்கள்” (ஏசாயா 40:17). நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் முன்பாக பயபக்தியுடன் வணங்குவோம் (ஏசாயா 57:15). உங்கள் சத்தத்தை உயர்த்தி அவருக்குத் துதியைச் செலுத்துங்கள். ஏனெனில் நேரடியான தீமையில் இருந்தும் அவர் மிகப்பெரிய நன்மையை வெளிக்கொண்டு வர வல்லவர்.
“சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது." படைப்பில் வெற்றிடம் என்று எதுவும் இல்லை. மேலும் படைக்கப்பட்ட விஷயங்கள் கூட அவற்றுக்காக நியமிக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதில் தோல்வி அடைவதில்லை. எதுவும் வெறுமையாய் இருப்பதில்லை. ஒவ்வொன்றும் அதற்கு நியமிக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்ற தேவனால் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொன்றும் அதன் படைப்பாளியான தேவனின் பார்வைக்கு விருப்பமான ஒரு முடிவை நோக்கி நிரந்தரமாக உழைக்கின்றன. அவருடைய கட்டளையின் படியே அனைத்தும் நடக்கின்றன,
“சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது.” அவை அவ்வாறு நடப்பது மட்டுமல்ல, அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. அனைவரும் நேர்த்தியாய் ஒருங்கிணைந்து செயல்படுவதால், அவைகளில் இருக்கும் அழுத்தங்களை அபிஷேகம்பெற்ற காதுகளால் மட்டுமே பிரித்தறிய முடியும். எல்லாம் நன்மைக்கு ஏதுவாக நடப்பது என்பது வெறுமனே அல்ல, அவை துணைக் காரணிகளாகவும் பரஸ்பர சகாயகர்களாகவும் இணைந்தே அனைத்தும் ஒன்றாக வேலை செய்கின்றன. அதனால் தான் துன்பங்கள் அரிதாகவே தனியாக வரும். மேகத்திற்கு மேல் மேகம், புயலுக்கு மேல் புயல் என அவை எழும்புகின்றன. யோபுவுக்கு நடந்தது போலவே, துர் செய்திகளைத் தொடர்ந்து மிகவும் வேதனையான கெட்ட செய்திகள் வரும். ஆயினும் இங்கேயும் விசுவாசம் தேவனுடைய ஞானத்தையும் அவருடைய அன்பையும் கண்டறியத் துடிக்கும். ஒரு உணவின் மதிப்பு அதில் சேர்க்கப்படும் பொருட்களின் கலவையால் தீர்மானிக்கப்படுகிறது. தேவனின் செயல்கள் இவ்விதமாகவே இருக்கும். அவரது திட்டத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் வெறுமனே நடக்கவில்லை, ஒன்றாக நடக்கும். இதை உணர்ந்த இஸ்ரேலின் மெல்லிசைப் பாடகர், “உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்” (சங்கீதம் 18:16) என்று தேவனைப் புகழ்கிறார்.
“சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது.” விசுவாசிகள் எத்தனை அல்லது எப்பேர்ப்பட்ட துன்பங்களில் இருந்தாலும், அவை எல்லாம் அவர்களின் நன்மைக்காக பணி செய்கின்றன என்றும், அவைகள் நாம் பரலோகத்தில் நித்திய சுதந்தரத்தைப் பெறுவதற்கு ஏதுவாகப் பங்களிப்பு செய்கின்றன என்றும் இந்த வசனங்கள் நமக்கு கற்பிக்கின்றன. மிகவும் ஆபத்தான காரியங்களில் இருந்தும் மிகப் பெரிய நன்மையை நமக்குக் கொண்டு வரும் தேவனின் ஏற்பாடு எவ்வளவு அற்புதமானது என்று பாருங்கள்! வானத்தின் கோள்களை தங்களின் சுற்றுவட்டப்பாதையில் கட்டுப்படுத்தும் அவருடைய மாபெரும் சக்தியைக் கண்டு நாம் வியப்படையலாம். தொடர்ந்து வரும் பருவங்களும், பூமி புதுப்பிக்கப்படுகிறதும் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. ஆனால் இவைகளிலும் மேலான ஆச்சரியம் என்னவென்றால் மனித வாழ்வின் குழப்பமான நிகழ்வுகளின் தீமையினின்று நன்மையை வெளிக்கொண்டு வந்து, சாத்தானின் வல்லமை, வெறுப்பு மற்றும் அவனது அழிக்கும் சூழ்ச்சிகளிலிருந்து அவருடைய பிள்ளைகளுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும் தேவனின் செயல் தான் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும்.
“சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது” இவ்விதமாக நடப்பதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. முதலாவதாக, படைப்பில் உள்ள அனைத்தும் அதன் நிர்வாகியின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால், இரண்டாவதாக, தேவன் நம்முடைய நன்மையை நாடுவதால், மேலும் நமது நன்மையை மட்டுமே நாடுவதால், மூன்றாவதாக, சாத்தான் தேவனின் அனுமதியின்றி நம்முடைய தலையில் ஒரு முடியை கூட தொட முடியாது; ஒருவேளை அது சாத்தனுக்கு தேவன் அனுமதித்தால் அதையும் நம் நன்மைக்காகவே அவர் அனுமதித்திருப்பார், அவை அனைத்தும் இயல்பாகவே நல்லவை அல்ல, ஆனால் அவை அனைத்தையும் நம் நன்மைக்கு ஏதுவாக தேவன் மாற்றுகிறார். நம்முடைய வாழ்வில் எதுவும் நோக்கம் இல்லாமல் நடப்பதில்லை, ஓவ்வொன்றும் நமது நன்மைக்காக தேவனின் நோக்கத்தின்படியே நடக்கின்றன. அனைத்தும் தேவனின் நித்திய நோக்கத்திற்கான ஒரு வழிமுறையாகும், மேலும் அவை தேவனுடைய குமாரனின் சாயலுக்குள் நாம் வருவதற்கென குறிக்கப்பட்ட ஆசீர்வாதம் தான், நம்முடைய பரலோக பிதா தாம் தெரிந்துக்கொண்டவர்களின் நன்மைக்காக கிறிஸ்துவின் துன்பம், இழப்பு மற்றும் பாடுகள் அனைத்தையும் பயன்படுத்துகிறார்.
“தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு" இது ஒரு உண்மையான கிறிஸ்தவனின் தனித்துவமான அடையாளம். அதற்கு எதிரிடையான அடையாளம் மறுபிறப்பு அடையாதவரின் வாழ்க்கை. ஆனால் எல்லா பரிசுத்தவான்களும் தேவனை நேசிப்பார்கள். அவர்களின் விசுவாச அறிக்கைகளில் சிறிய வேறுபாடுகள் இருக்கலாம். அவர்களின் திருச்சபைகளின் ஒழுங்கு முறைகளில் சில வேறுபாடுகள் இருக்கலாம், அவர்களின் ஆவிக்குரிய நலன்கள் சமமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த ஒரு விஷயத்தில் அவர்கள் ஒன்றுபட்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கிறிஸ்துவை விசுவாசிக்கிறார்கள் மற்றும் அவர்கள் தேவனை நேசிக்கிறார்கள். நமக்கு மீட்பரை ஈவாக கொடுத்தமைக்காக அவர்கள் தேவனை நேசிக்கிறார்கள். தேவன் தங்களைப் பாதுகாக்கும் பிதாவாக உரிமையுடன் நேசிக்கிறார்கள். அவருடைய மகத்துவத்தினாலும், பரிசுத்தத்தினாலும், ஞானத்தினாலும், விசுவாசத்தினாலும் அவர்கள் அவரை நேசிக்கிறார்கள். இவர்களை அவர் நடத்தும் விதத்திற்காக அவரை நேசிக்கிறார்கள். அவர் எதைக் கொடுக்கிறார், எதைக் கொடுக்க மறுக்கிறார், எதை அங்கீகரிக்கிறார், எதைக் கண்டிக்கிறார் என்பதைப் பொறுத்து அவர்கள் அவரை நேசிக்கிறார்கள். அவர் எல்லாவற்றையும் நன்றாகச் செய்கிறார் என்று தெரிந்திருப்பதுடன், ஒழுக்கத்திற்காக அவர் பயன்படுத்தும் சிட்சைக்காகவும்கூட அவரை நேசிக்கிறார்கள். அவரில் உள்ள எதுவும், அவரிடமிருந்து வரும் எதுவும், அவரை நேசிக்காதபடி செய்ய முடியாது. “அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்." (1 யோவான் 4:19) இது தேவனைப்பற்றி அவர்களுக்கு இருக்கும் உறுதி.
“தேவனை நேசிப்பவர்களுக்கு". ஐயோ! என் தேவனை நான் எவ்வளவு குறைவாக நேசிக்கிறேன். என் அன்பின்மையால் நான் வருந்துகிறேன். என் அன்பு குறைந்ததினால் என்னை நானே துன்புறுத்திக் கொண்டிருக்கிறேன். ஆம், நான் என்னையும், என் சுயத்தையும், உலகையும் மிகவும் நேசிக்கிறேன். ஆனால் 'நான் உண்மையில் என் தேவனை நேசிக்கிறேனா?” என்ற கேள்வி என்னை ஆட்டிப்படைக்கிறது. அப்படியானால், தேவனை நேசிக்க ஆசைப்படுவது ஒரு நல்ல அறிகுறி அல்லவா? தேவனை நான் எவ்வளவு குறைவாக நேசிக்கிறேன் என்பதே நான் அவரை வெறுக்கவில்லை என்பதற்கு நிச்சயமான சான்றாக உள்ளது. அவர்களின் இதயத்தின் கடினத்தன்மையின் காரணமாக, அவர்களின் நன்றியின்மை காரணமாக, ஒவ்வொரு தலைமுறையிலும் பரிசுத்தவான்கள் இவ்வாறு புலம்பியிருக்கிறார்கள். “தேவனை நேசிப்பது என்பது பரலோகத்தின் மீது நமக்கு இருக்கும் அன்பு.” ஆனால் பூமிக்குரிய ஈர்ப்புகளும் அழுத்தங்களும் இதற்குத் தடையாக நிற்கின்றன. ஆத்துமா இந்த பலவீனமான உடலின் நிர்பந்தத்திலிருந்து தப்பித்து அந்த பிரகாசமான மற்றும் சுதந்திரமான பரலோகத்தை அடையும் வரை அந்த நிலையில் இருந்து நாம் விடுபட முடியாது” (டாக்டர் சால்மர்ஸ்).
"அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கு". புதிய ஏற்பாட்டில் அழைக்கப்பட்டவர்கள் என்ற வார்த்தை வெறும் சுவிசேஷத்தை விசுவாசிப்பதற்கு வெளிப்புறமாக “அழைக்கப்பட்டவர்" என்று எங்கும் பயன்படுத்தப்படவில்லை. இந்த வார்த்தை எப்போதும் இரட்சிப்புக்கு ஏதுவான, உள்ளான அழைப்பையே குறிக்கும். இந்த அழைப்பை உருவாக்குவதா அல்லது அவமதிப்பதா என்பதில் நமக்கு எந்தவிதமான அதிகாரமில்லை, ரோமர் மற்றும் பல வேதபகுதிகளிலும் சொல்லப்படவதுபோல, “அவர் சகல ஜாதிகளையும், அவர்களுக்குள் இயேசு கிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும், தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்துக்குக் கீழ்ப்படியப்பண்ணும்பொருட்டு, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் அருளிச்செய்திருக்கிறார்” (ரோமர் 1:6,7).
அன்புள்ள வாசகரே! இந்த அழைப்பு உங்களிடம் வந்தடைந்திருக்கிறதா? நீ ஊழியர்களின் அழைப்பைக் கேட்டிருக்கிறாய், சுவிசேஷத்தின் அழைப்பைக் கேட்டிருக்கிறாய், மனசாட்சியின் அழைப்பைக் கேட்டிருக்கிறாய், ஆனால் உள்ளான நிலையிலும் மறுக்கவும் முடியாததுமான பரிசுத்த ஆவியானவரின் அழைப்பை கேட்டிருக்கிறாயா? நீ இருளிலிருந்து வெளிச்சத்திற்கும், மரணத்திலிருந்து ஜீவனுக்கும், உலகத்திலிருந்து கிறிஸ்துவுக்கும், சுயத்திலிருந்து தேவனிடத்திற்கும் அழைக்கப்பட்டிருக்கிறாயா? நீ தேவனால் அழைக்கப்பட்டிருக்கிறாயோ என்பதை உறுதிப்படுத்துவது உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். அந்த அழைப்பின் மகிழ்ச்சியான, ஜீவனை கொடுக்கும் இன்னிசை உன் இதயத்தில் எதிரொலித்ததா? ஆனால் எனக்கு அத்தகைய அனுபவம் இருப்பதை நான் எப்படி உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்? இதை உறுதி செய்வதற்கான ஒரு திட்டவட்டமான அளவுகோல் நாம் வாசிக்கும் இந்த தலைப்பின் உரையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. யார் இரட்சிக்கப்படுவதற்கு ஏற்ற அழைப்பினை தேவனால் பெற்றுக்கொண்டார்களோ அவர்கள் தேவனை அதிகமாக நேசிக்கிறார்கள். தேவனை வெறுப்பதற்குப் பதிலாக, அவரை மகிமைப்படுத்துவார்கள். அவருடைய சந்நிதிலிருந்து பயந்து ஓடுவதற்குப் பதிலாக, அவர்கள் தேவனைத் தேடுவார்கள். அவருடைய மகத்துவத்தைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, அவர்கள் தேவனை திருப்திப்படுத்தவும், மகிமைப்படுத்தவும் மட்டுமே விரும்புவார்கள்.
"அவருடைய தீர்மானத்தின்படி". இந்த அழைப்பு மனித தகுதிகள் அடிப்படையிலானது அல்ல. மாறாக இது தேவனின் சித்தத்தின்படி உண்டான ஒரு அழைப்பு. “அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்” (2 தீமோத்தேயு 1:9). அந்த வசனத்தில் “அவருடைய தீர்மானத்தின்படியும்" என்ற சொற்றொடரைச் சேர்ப்பதன் மூலம், சிலர் தேவனை நேசிப்பதற்கும் மற்றவர்கள் விரும்பாததற்கும் தேவனின் இறையாண்மை தான் காரணம் என்பதை பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்துகிறார். அவர்களில் இருக்கும் எந்த ஒரு மகத்துவத்தால் அல்ல, மாறாக அவரது விலையேறப்பெற்ற கிருபையின் காரணமாகவே இருக்கிறது.
இந்த வார்த்தையில் நடைமுறை மதிப்பும் உள்ளது. கிருபையின் கோட்பாடுகள் வெறும் ஒரு விசுவாசப்பிரமாணத்தை உருவாக்குவதற்காக மட்டும் கொடுக்கப்படவில்லை. அவை அருளப்பட்டதின் முக்கிய நோக்கங்களில் ஒன்று பயத்தால் நசுக்கப்பட்ட இதயங்களை தேவனின் அன்பினால் தேற்றுவதே! இந்த அன்பு நம் இதயங்களில் எப்போதும் தொடர்ச்சியாகப் பாய்வதுடன், அதில் வளர்க்கக்கூடிய வகையில் நாம் இடைவிடாமல் அந்த அன்பினால் ஊக்கம் பெறுகிறவர்களாகவும் இருக்க வேண்டும். ஒரு அழகான காட்சி அல்லது படத்தைப் பற்றிய நமது இரசனையைப்போலவே, நீங்கள் மறுபடியும் அந்த அன்பின் அழகைப் பார்க்கத் திரும்புவீர்கள். இந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் நாம் நம்பியிருக்கும் சத்தியத்தை நம் மனதில் கொண்டுவரும்படியாக வேத வசனத்தின் மீது அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. “நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்” (1 கொரிந்தியர் 15:2). “நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால் உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன்" (2 பேதுரு 3:1,2) என்கிறார் அப்போஸ்தலன். “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்று ஆண்டவர் சொன்னார் (லூக்கா 22:19). ஆகவே, நாம் பொல்லாதவர்களாகவும், ஆயோக்கியமானவர்களாகவும் இருக்கும்போது, அவருடைய கிருபையால் அவர் நம்மை அழைத்த அந்த மணிப் பொழுதை நாம் நினைவுகூரும் போது, அவருடைய அன்பு நம் இருதயங்களில் புதுப்பிக்கப்படுகிறது. நரக நெருப்பிலிருந்து உங்களை வெளியே கொண்டு வந்த கிருபையை நினைத்து உங்கள் இதயம் நன்றியுணர்வுடன் பொங்குகிறது. மேலும் மற்ற அநேகர் புறம் தள்ளப்பட்டபோதும் உங்களைத் தமது சர்வவல்ல மற்றும் நித்தியமான சித்தத்தின் வழியாக மட்டுமே உங்களை அழைத்தார் என்பதைக் கண்டு பிடிப்பதால் தேவன் மீதான உங்கள் அன்பு இன்னமும் அதிக ஆழமாகும்.
நமது வேத பகுதியின் கடைசிப்பகுதியில் (ஆங்கில மொழிபெயர்ப்பில் முதல் பகுதியில் வருகிறது) “சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” என்பதை ஒவ்வொரு விசுவாசியும் அறிந்திருப்பதை அப்போஸ்தலன் இங்கு பேசுகிறார். இந்த அறிதல் என்பது கற்பனையை காட்டிலும் ஞானமானது. சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்பது ஒரு ஆழமான ஆசையைப் பார்க்கிலும் மேலானது. எல்லாம் நன்றாக நடக்கும் என்கிற ஒரு சாதாரண நம்பிக்கையை நாம் வெளிப்படுத்துவதாக சொல்வதில்லை. மாறாக சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது என்பதை நாம் அதிக உறுதியாக நம்புகிறோம். இந்த அறிதல் என்ற வார்த்தையின் பொருள் ஆவிக்குரிய அறிவு என்பதே அல்லாமல் மேலோட்டமான புத்திக்கூர்மையின் அறிவல்ல. இது முடிவில்லாத ஞானமுள்ளவரின் கரங்களில் இருந்து நாம் அனைத்தையும் பெற்றுக்கொள்கிறோம் என்ற விசுவாசித்தினால் வரும் அறிவு. தேவனுடன் உள்ள உறவில் இருந்து நாம் விலகி நிற்கும்போது இந்த ஞானத்தில் இருந்து நாம் அதிக ஆறுதல் அடைய முடியாது என்பது சத்தியமே. மேலும் விசுவாசம் நம்மில் இல்லாத பட்சத்தில் இந்த அறிவில் தொடரவும் முடியாது. ஆனால் நாம் கர்த்தருடன் ஐக்கியப்பட்டிருக்கும்போதும், நமது பெலவீனங்களில் அவரை முற்றிலும் சார்ந்து கொள்ளும் போதும், இந்தப் பாக்கியமுள்ள உறுதி நம்முடையதாகிறது. “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதை உடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசாயா 26:3).
நமது வேதபகுதிக்கு மிகவும் நெருக்கமான வாழ்வியல் உதாரணமாக, யாக்கோபின்; வாழ்க்கைச் சம்பவம் திகழ்கிறது. இது பல வழிகளில் நம் அனைவரின் வாழ்க்கைக்கும் ஏற்ற ஒரு உதாரணம் தான். ஒரு இருண்டதும், கனத்ததுமான மேகம் அவரைச் சூழ்ந்தது. கடுமையான சோதனை அவரது விசுவாசத்தை உலுக்கியது. அவரது பாதங்கள் நழுவியது என்றே சொல்லும் அளவிற்குச் சென்றது. அவரது புலம்பலின் வார்த்தைகளைக் கேளுங்கள். “அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: ‘என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள். யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை, பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள். இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது" (ஆதியாகமம் 42:36) என்றார். ஆனாலும் அந்த சந்தர்ப்ப சூழல்கள் அவருடைய மங்கிய விசுவாசப்பார்வையில் இருள் போலத் தோன்றினாலும் அதே வேளையில் இந்தச் சூழல்கள் தான் அவருடைய வாழ்வின் இறுதிப்பகுதியை மகிமை நிறைந்த இருளற்ற அஸ்தமனத்திற்கு நேராக வழிநடத்தியது. சகலமும் அவருடைய நன்மைக்காக நடந்தேறியது! ஆகவே, கலங்கி நிற்கும் ஆத்துமாவே, அதிக இக்கட்டான சூழ்நிலைகள் சீக்கிரமாக முடிந்துவிடும். மேலும் நீங்கள் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்கையில் நீங்கள் இப்போது கண்ணாடியில் பார்ப்பதுபோல இல்லாமல், எந்தவித நிழலும் இல்லாத தெய்வீகப் பிரசன்னத்தின் பிரகாசத்தைக் கண்டு, சகலமும் உங்களுடைய தனிப்பட்ட மற்றும் நித்திய நன்மைக்கே நடந்தது என்று உணர்வீர்கள்.
“ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்." (ரோமர் 8:18).
இந்த வார்த்தைகளை எழுதியவர் இன்னல்களுக்கு முற்றிலும் அந்நியராகவும், அல்லது சிறிய துன்பங்களைத் தவிர வேறு எந்த பெரிய சோதனையையும் அவர் அனுபவித்திருக்க வாய்ப்பில்லை என்று சிலர் நினைக்கலாம். ஆனால், இந்த வார்த்தைகள் பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டது. மிகவும் கடினமான சூழ்நிலைகளில் மூழ்கி பல்வேறு சோதனைகள், கக்ஷ்டங்கள் மற்றும் துன்புறுத்தல்களை ஏராளமாக அனுபவித்த ஒருவரால் எழுதப்பட்ட வரிகள் தான் இவைகள். அவருடைய (அப். பவுல்) சொந்த சாட்சியைக் கேளுங்கள். “யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்து தரம் அடிபட்டேன். மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன். ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும், பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.” (2 கொரி. 11:24-27).
“ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்." (ரோமர் 8:18). இது வாழ்க்கைப் பயணத்தில், மகிழ்ச்சியில் திருப்தியடைந்து, ரோஜாப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சொகுசு நடையின் அனுபவத்தில் இருந்து இந்த வார்த்தைகள் வரவில்லை. மாறாக, தன் சொந்த மக்களால் வெறுக்கப்பட்டு, கண்ணீர் வடிக்கும் அளவிற்கு காயப்பட்டு, வாழ்வின் அடிப்படை வசதிகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டவரிடம் இருந்து வரும் வார்த்தைகள்தான் அவை. இப்படிப்பட்ட அனுபவங்களைச் சந்தித்தவர் வெளிப்படுத்தும் இவ்வளவு மகிழ்ச்சியுள்ள எதிர்பார்ப்பை எப்படி விளக்குவது? தனக்கு நேரிட்ட இந்த சோதனைகள், இன்னல்களுக்கு மேலாக அவர் உயர்ந்து நிற்பதன் இரகசியம் என்னவாக இருக்க முடியும்?
முதலாவதாக, இவ்வளவு துன்பங்களை அனுபவித்த இந்த அப்போஸ்தலன், கிறிஸ்தவருக்கு இருக்கும் இன்னல்கள் தற்காலிகமானவை என்று தன்னைத்தானே ஆறுதல்படுத்திக்கொண்டார். அவை ‘தற்போதைய காலத்திற்கு’ மட்டுமே உரியவை. கிறிஸ்துவை வெறுப்பவரின் துன்பங்களுக்கு முற்றிலும் மாறான மற்றும் உன்னதமான அனுபவம் இது. கிறிஸ்துவை நிராகரிப்பவர்களுடைய உபத்திரவம் நித்திய காலமாக இருக்கும். அவர்கள் நித்திய நரகத்தில் வேதனைப்படுவார்கள். ஆனால் விசுவாசிகளுக்கு ஏற்படும் உபத்திரவங்கள் அதற்கு முற்றிலும் வேறானது. அது காலையில் பூத்து மாலையில் உதிரும் பூக்களைப் போன்றதும், காணப்பட்டு காணாமல் போகும் நிழலைப்போன்றது. மொத்தத்தில் இன்னும் சில வருடங்கள் மட்டுமே இந்த உபத்திரவங்கள் வழியாகக் கடந்து போய், கண்ணீரும் பெருமூச்சுகளும் இல்லாத பாக்கிய நாட்டை சென்றடைவோம்.
இரண்டாவதாக, இனி வெளிப்படவிருந்த “மகிமையை” விசுவாசக் கண்களால் அப்போஸ்தலன் கண்டார். பவுலுக்கு இந்த “மகிமை" ஒரு இனிமையான கனவை விட அதிக மேலானதாக இருந்தது. இது அவருக்கு நடைமுறைச் சத்தியமாக, அவரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் அவருக்கு ஆறுதல் அளித்தது. இது விசுவாசத்தின் மீதான உண்மையான சோதனைகளில் ஒன்று. கிறிஸ்துவை உடையவர்களுக்கு உபத்திரவத்தில் பெரும் ஆதரவு இருக்கிறது. ஆனால் அவிசுவாசிக்கு அது கிடைக்காது. தேவனின் பிள்ளைகள் தங்கள் பிதாவின் முன்னிலையில் “பரிபூரண மகிழ்ச்சி” இருப்பதை அறிவார்கள். அவருடைய வலது கரத்தில் “நித்தியப் பேரின்பம்” உண்டு என்பதை அவர்கள் அறிவார்கள் (சங். 16:11). மேலும் விசுவாசம் அவைகளைப் பற்றிக்கொண்டு, தனிப்பட்ட வாழ்வில் சொந்தமாக்கி, அவைகள் தரப்போகும் ஆறுதலான சந்தோக்ஷங்களை எண்ணி நிகழ்காலத்தில் நம்பிக்கையோடே வாழ்கிறது. இஸ்ரவேலர் வனாந்தரத்தில் நடந்தாலும் தங்களுக்கு வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் கூடிய எதிர்பார்ப்பு அவர்களுக்கு ஊக்கம் தந்தது போல (எண்ணாகமம் 13:23, 26), இன்றும் விசுவாசி தரிசித்து நடவாமல் விசுவாசத்துடன் நடக்கிறார். தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தி இருக்கிறார் (1 கொரிந்தியர் 2:9,10) என்பதை அவர் விசுவாசித்து நடக்கிறார்.
மூன்றாவதாக, அப்போஸ்தலன் “இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமை” குறித்து மகிழ்ச்சியடைகிறார். இதன் முழு அர்த்தம் என்னவென்றால் நமக்கு இப்போது புரியும் திறன் இல்லை. ஆனார் இதைக்குறித்து வேதம் அதிக விளக்கத்தை நமக்குத் தருகிறது. அந்த நாளில் நாம்:
என்ன ஒரு அற்புதமான ஆசீர்வாதம் இது! தற்போது எந்த ஒளிக்கதிரையும் காணமுடியாத என்னில் எப்பேர்ப்பட்ட மகிமை வெளிப்படப்போகிறது! என்னில் - மிகவும் வழிதவறிய, மிகவும் தகுதி அற்ற, அதிக பாவமுள்ள என்னில் வெளிப்படப்போகிறது. ஜோதிகளின்; பிதாவுடன் மிகவும் சிறிய அளவில் மட்டுமே ஐக்கியப்பட்டிருக்கிறேன்! இப்படிப்பட்ட என்னில் பிதாவின் இந்த மகிமை; வெளிப்படுவது சாத்தியமா? சாத்தியமே என்று தவறில்லாத தேவனுடைய வார்த்தை உறுதிப்படுத்துகிறது. தேவனின் மகிமையின் பிரதிபலிப்பான அவரிடம் நான் வசிப்பதன் மூலம் ஒளியின் குழந்தையாக இருந்தால், நான் இப்போது உலகின் இருண்ட நிழல்களுக்கு மத்தியில் வசித்தாலும், ஒரு நாளில் வானத்தின் ஒளிகளைக் காட்டிலும் நான் பிரகாசிப்பேன். நம்முடைய கர்த்தராகிய இயேசு இந்த பூமிக்கு திரும்பி வரும்போது, அவரை “விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராய்” இருப்பார் (2தெசலோனிக்கேயர் 1:9).
இறுதியாக, அப்போஸ்தலன் நிகழ்காலப் “பாடுகளை” இனி நம்மில் வெளிப்படும் “மகிமையுடன்" ஒப்பீட்டளவில் நிறுத்துப் பார்த்து, முதலானது இரண்டாவதுடன் ஒப்பிடவும் தகுதியானது அல்ல என்று உரக்கச்சொல்கிறார். இக்காலப் பாடு நிலையற்றது, இனிவரப்போவது நித்தியமானது. எல்லைக்குட்பட்ட ஒன்றிற்கும் எல்லைக்கு அப்பாற்பட்ட ஒன்றிக்கும் எந்த சம்பந்த விகிதமும் இல்லை என்பது போல, பூமிக்குரிய துன்பங்களுக்கும் பரலோக மகிமைக்கும் எந்தவித ஒப்பீடும் இல்லை.
மகிமையின் ஒரு இமைப்பொழுது என்பது வாழ்நாள் முழுவதும் பாடுகளை விட அதிக கணமானது. இம்மானுவேலின் தேசத்தின் மகிமையுடன் ஒப்பிடும்போது நம்முடைய வருடக்கணக்கான பிரயாசம், வியாதி, வறுமையின் போராட்டம், அல்லது எல்லாவிதமான துக்கங்களை; என்னவென்று சொல்வது! தேவனின் வலது கரத்தில் நித்திய பேரின்ப நதியில் அனுபவிக்கும் ஒரு துளி, பரலோகத்தில் ஒருமுறை சுவாசிக்கும் மூச்சுகாற்று, இரத்தத்தால் கழுவப்பட்டவர்களுடன் சேர்ந்து சிம்மாசனத்தைச் சூழ்ந்திருக்கும் ஒரு மணிநேரம், உலகின் எல்லாக் கண்ணீருக்கும் துயரங்களுக்கும் மேலான இழப்பீடாகிறது. “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்." வாசகரும் எழுத்தாளரும் இந்த வார்த்தைகளை விசுவாசத்துடன் ஏற்றுக்கொண்டு, தற்போதைய சூழ்நிலைகளுக்கு அவற்றைப் பயன்படுத்தவும், அதன் விளைவாக தேவனுடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, அவை கொண்டு வரும் மகிழ்ச்சியை அனுபவிக்கவும் பரிசுத்த ஆவியானவர் உதவுவாராக!
“தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?" (ரோமர் 8:32).
மேலே குறிப்பிட்ட வசனம் தெய்வீக தர்க்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இது ஒரு முன்மாதிரியில் இருந்து ஒரு முடிவை உள்ளடக்கி வருகிறது. அந்த முன்மாதிரி தேவன் தம் மக்களுக்காக கிறிஸ்துவை ஒப்புக்கொடுத்தார். ஆகவே அவர்களுக்கு வேண்டிய அனைத்தும் நிச்சயம் அவர்களுக்குத் தரப்படும் என்பது தான். இதுபோன்ற உறுதியான சத்தியத்திற்கு வேதத்தில் பல எடுத்துக்காட்டுகள் இருப்பதைக் காண்கிறோம். “இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? (மத்தேயு 6:30). “நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே" (ரோமர் 5:10). “ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?" (மத்தேயு 7:11). ஆகவே இங்கே நமது வசனப்பகுதியில் வரும் இந்த சத்திய சிந்தனை எதிர்பேச முடியாததாகவும், நேரடியாக நம் மனதிலும் உள்ளத்திலும் ஊடுவுகிறதாகவும் இருக்கிறது.
நம்முடைய அன்பான தேவன் தம்முடைய குமாரனை நமக்குக் கொடுப்பதில் எவ்வளவு கிருபையாக இருக்கிறார் என்பதை இந்த வசனம் நமக்கு வெளிப்படுத்துகிறது. இது நம் மனதிற்கு அறிவுறுத்துவதற்காக மட்டுமல்ல, நம் இதயங்களை ஆறுதலடையச் செய்யவும், பாதுகாப்பு கொடுக்கவும் எழுதப்பட்டது. தம்முடைய குமாரனை நமக்குப் பரிசாகக் கொடுத்த தேவசெயல், தம்முடைய மக்களுக்குத் தேவையான அனைத்து ஆசீர்வாதங்களையும் பெறுவதற்கான தேவனுடைய உறுதிமொழியாக இருக்கிறது. பெரிதான ஒன்று சிறிதானதை உள்ளடக்கி வருகிறது. அவருடைய சொல்லிமுடியாத ஆவிக்குரிய வரம் நமக்கு வேண்டிய அனைத்துவித தற்காலிக இரக்கங்களுக்குமான உத்தரவாதமாகும். நமது வேதபகுதியில் உள்ள நான்கு பகுதிகளைக் கவனியுங்கள்:
இது நாம் அரிதாக தியானிக்கும் சத்தியத்தின் ஒரு முக்கிய அம்சத்தை நம்முடைய கவனத்திற்குக் கொண்டுவருகிறது. கிறிஸ்துவின் தியாகத்தை அடிக்கடி தியானிப்பதன் மூலம், அவருடைய அன்பு மரணத்தை விட வலிமையானது என்றும், தம்முடைய மக்களுக்காக எந்த துன்பத்தை விடவும் அவருடைய இரக்கம் பெரியது என்று நாம் அவரை போற்றுகிறோம். ஆனால், தம்முடைய நேச குமாரன் பரலோக வீட்டை விட்டுப் பிரிந்தது தேவனுக்கு எவ்வளவு வருத்தமாக இருந்திருக்கும்! தேவன் அன்பானவர். அன்பை விட மென்மையானது எதுவும் இல்லை. தேவன் உணர்ச்சியற்றவர் என்று சொல்லும் 'ஸ்டோயிக்ஸ்” எனப்படும் மத்தியகாலங்களில் வாழ்ந்த கிரேக்க தத்துவவாதிகளின் வாதத்தோடு எனக்கு உடன்பாடு இல்லை. தேவன் தனது நேச குமாரனை அனுப்பியது பிதாவின் மாபெரும் தியாகம்.
இந்த வசனத்தில் உள்ள வாக்குறுதி மொழியின் அடிப்படையிலான கம்பீரமான உண்மையை கவனமாக சிந்தியுங்கள். தேவன் தனது சொந்த குமரானை கொடுப்பதற்கு யோசிக்கவில்லை. இந்த வார்த்தைகள் புனிதமானவை, தெளிவானவை மற்றும் உருகச் செய்பவை. மீட்பதற்கு என்ன தேவை என்பது தேவனுக்கு மட்டுமே தெளிவாகத் தெரியும், வேறு யாருக்கும் தெரியாது. நியாயப்பிரமாணம் கடுமையானதும், வளைந்து கொடுக்காததும் மட்டுமல்லாமல், பரிபூரணமான கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறது. நியாயம் கண்டிப்பானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருந்து, குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல் முழுைமான திருப்தியைத் தரும் தீர்ப்பை எதிர்பார்க்கிறது. ஆனாலும் மீட்பிற்கான ஒரே வழியாக தேவன் தனது குமரானை இந்த பூமிக்கு அனுப்பத் தயங்கவில்லை.
பெத்லகேமின் மாட்டு தொழுவத்தின் தாழ்ச்சியையும், இழிநிலையையும், மனிதர்களின் நன்றியின்மையையும், தலை சாய்க்க இடமில்லாத அவலத்தையும், தேவபக்தி இல்லாதவர்களின் வெறுப்பையும், எதிர்ப்பையும், சாத்தானின் பகையையும் மற்றும் அவன் இழைக்கும் துன்பங்கள் ஆகிய அனைத்தையும் அவர் சந்திக்க நேரிடும் என்பதைத் தெரிந்தும் தேவன் “தம்முடைய சொந்த குமாரன் என்றும் பாராமல்” அவரைத் தந்தருளினார். தேவன் தனது பரிசுத்த நீதியை நிறைவேற்றுவதற்கு எந்தவித சமரசம் செய்யவில்லை, பாவத்திற்கான தண்டனையை நிறைவேற்றினார். அவரது நேச குமாரனை அனுப்புவதற்கு எந்தவித தயக்கமும் காட்டவில்லை, துன்மார்க்கரின் கைகள் அவரை சிலுவையில் அறைந்தபோதும், அவரின் இரத்தம் கடைசி துளி வரை செலுத்த வேண்டியிருந்தது. தேவகோபாக்கினையின் பாத்திரத்தின் கடைசிச் சொட்டுவரை உறிஞ்சப்பட வேண்டியதாய் இருந்தது. பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று இயேசு தோட்டத்தில் கதறினாலும்;, தேவன் அவரை ஒப்புக்கொடுக்கத் தயங்கவில்லை. துன்மார்க்கமான கரங்கள் அவரை மரத்தில் ஆணியடித்தபோதும், தேவன் “பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருக்ஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்” என்று கதறினார் (சகரியா 13:7).
'நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர்.” இங்கே பிதாவானவர் ஏன் இவ்வளவு விலைமதிப்பு மிக்க தியாத்தைச் செய்தார் என்று நமக்குச் சொல்லப்படுகிறது. நம் அனைவரையும் தப்புவிக்கும்படியாகவே அவர் கிறிஸ்துவை ஒப்புக்கொடுத்தார். கிறிஸ்துவின் மீது அவருக்கு அன்பு இல்லை என்பதால் இதை அவர் செய்யவில்லை, மாறாக அவர் நம்மீது அற்புதமான, ஒப்பற்ற, விவரிக்க முடியாத அன்பினால் இதைச் செய்தார்! மகா உன்னதரின் அற்புதமான இந்தத் திட்டத்தைக் கண்டு ஆச்சரியப்படுங்கள். “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16). உண்மையாகவே இந்த அன்பு கற்பனைக்கு எட்டாதது. அவர் செய்த இந்த விலைமதிப்பற்ற தியாகத்தை, முணுமுணுப்பு இல்லாமல், தயக்கமின்றி, அவர் தனது மிகுந்த அன்பினால் அவைகளை சுதந்திரமாக செய்தார்.
ஒருமுறை கலகம் செய்த இஸ்ரவேல் மக்களிடம் தேவன், “எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? (ஓசியா 11:8) என்று கேட்டார். நிச்சயமாக அவர் தமது பரிசுத்த நேச குமாரனைப் பற்றி இதைச் சொல்வதற்கு இன்னும் எண்ணில்லாத காரணம் இருக்கிறது. இருப்பினும், அவமானம் மற்றும் வெட்கம், வெறுப்பு மற்றும் துன்பங்களைச் சகிக்க அவர் தனது குமாரானை ஒப்புக்கொடுக்க அவர் தயங்கவில்லை. ஆதாமின் கீழ்ப்படியாமையால், சீரழிந்து தீட்டுப்பட்டுப்போனதும், பொல்லாததும் பாவிகளுமான, தீயதும் பயனற்றதுமான சந்ததியாராகிய நமக்காகவே அதைச் செய்தார். தேவனிடம் இருந்து விலகி “தூர தேசத்திற்குப் புறப்பட்டுப் போய்” துன்மார்க்கமான வாழ்க்கைமுறையால் ஆஸ்திகளை அழித்துப்போட்ட நமக்காக அவரை ஒப்புக்கொடுத்தார் (லூக்கா 15:13). ஆம், “ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து அவனவன் தன்தன் வழியிலே” போனவர்களான நமக்காகவே அதைச் செய்தார் (ஏசாயா 53:6). பிறரைப் போலவே நாமும் சுபாவமாகவே தேவ கோபத்திற்கு உரியவர்களாய் இருந்த நமக்காக (எபேசியர் 2:3), நன்மையான எதுவும் வாசம்பண்ணாத நமக்காக தேவன் இந்த தியாகத்தைச் செய்தார் (ரோமர் 7:18). அவருடைய பரிசுத்தத்தை வெறுத்து, அவருடைய வார்த்தையைப் புறக்கணித்து, அவருடைய கட்டளைகளை மீறி, அவருடைய பரிசுத்த ஆவியை எதிர்த்த நமக்காக தேவன் அவரை ஒப்புக்கொடுத்தார். நித்திய நரக நெருப்புக்கு விதிக்கப்பட்டவர்களும், நம்முடைய பாவங்களின் முழு ஊதியத்திற்கும் தகுதியானவர்களுமாகிய நமக்காக அவரைத் தந்தருளினார்.
ஆம்! சக விசுவாசியே, சில சமயங்களில் நீங்கள் துன்பங்களைச் சந்திக்க நேரிடும் போது, தேவனைக் கடுமையானவராகச் சித்தரிக்க சோதிக்கப்படும் உங்களுக்காகத்தான் தேவன் இதைச் செய்தார். உங்கள் வறுமையை தேவனுடைய அலட்சியம் என்றும், இருண்ட சூழ்நிலையில் நடக்கும் போது கர்த்தர் கைவிட்டதாகவும் நினைக்கிற உனக்காகவே அவர் ஒப்புகொடுக்கப்பட்டார். ஓ, தேவனை அவமதிக்கும் இத்தகைய சந்தேகங்களின் குற்றத்தை உடனடியாக அவரிடம் அறிக்கை செய்யுங்கள், மேலும் தம் சொந்த குமாரன் என்றும் பாராமால் அவரைத் தந்தருளின தேவனின் அன்பை இனி மீண்டும் ஒருபோதும் கேள்வி கேட்காதீர்கள் (ரோமர் 8:32).
இந்த வசனப்பகுதியில் உள்ள 'அனைவருக்கும்” என்ற சொல்லை நான் விளக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை உண்மையின் எதிர்பார்ப்பாகக் காண்கிறேன். தேவன் எல்லாருக்காகவும் தம்மை ஒப்புக்கொடுத்தார் என்பதல்ல, மாறாக நம் அனைவருககாகவும் ஒப்புக்கொடுத்தார். இது இந்த வேதபகுதிக்கு முந்தய வசனங்களில் நிச்சயமாக வரையறை செய்யப்பட்டுள்ளது. 31வது வசனத்தில் ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது, “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” 30வது வசனத்தில் வரும் “நம்” என்ற வார்த்தை தேவன் முன்குறித்து, அழைத்து, நீதிமானாக்கி, மற்றும் மகிமைப்படுத்தியவர்களைக் குறிக்கிறது என்பது நமக்கு தெளிவாகிறது, எனவே 'நம்” என்பவர்கள் பரலோகத்தின் விருப்பத்திற்கு உரியவர்கள், தேவனுடைய சர்வவல்ல கிருபையின் பாத்திரங்கள் மற்றும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் ஆவர். ஆனால் அவர்கள் தங்களில் தாங்களே அவர்களுடைய செயல் மற்றும் இயல்பில் கோபாக்கினையத் தவிர வேறெதற்கும் தகுதியானவர்கள் இல்லை. ஆனால் தேவனுக்கு ஸ்தோத்திரம். நம் எல்லாருக்காகவும் - நம்மில் மோசனமானவர்கள் மற்றும் சிறப்பானவர்கள் அனைவருக்காகவும், ஐந்து கோடி கடனாளிக்கும், ஐந்து ரூபாய் கடனாளிக்கும் இந்த வாக்குறுதி பொருந்தக் கூடியதாக இருக்கிறது.
தலைப்பு உரையின் முதல் பகுதியின் அடிப்படையில், பரிசுத்த ஆவியானவர் இங்கு ஏற்படுத்துகின்ற “முடிவுரை”யைக் கவனமாக சிந்தியுங்கள். “தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” தேவ ஆவியனவரால் எழுதப்பட்ட அப்போஸ்தலின் இந்த வார்த்தை நமக்கு எவ்வளவு அறுதலான வார்த்தை. உயர்வில் இருந்து சிறயதைப் பற்றிய வாதத்தைப் பின்பற்றி தேவன் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாராக இருக்கிறார் என்று விசுவாசிக்கு உறுதியளிக்கிறார். தேவன் விருப்பத்தோடும் தாராளமாகவும் தம்முடைய சொந்த குமாரனை நமக்குக் கொடுத்தார் என்பது மற்ற அனைத்து அவசியமான இரக்கத்தையும் பெறுவதற்கான உத்தரவாதமாகும்.
பல துன்பங்களினால் சோர்ந்துபோயிருக்கும் ஒரு விசுவாசிக்கு, இந்தச் செய்தி தேவனின் நித்திய நம்பிக்கையின் மாறாத கண்காணிப்பாகும். பெரிதானவற்றைச் செய்த தேவனால் சிறியவற்றைச் செய்யாமல் விட்டுவிடுவாரோ? நித்திய அன்பு என்றும் மாறாது. கிறிஸ்துவே அருளிய அன்பு மற்ற ஆசீர்வாதங்களை வழங்கத் தயங்காத அன்பு. கிறிஸ்துவை ஒப்புக்கொடுக்கத் தயங்காத அன்பு அதன் நோக்கங்களையும் தரத் தவறுவதும் இல்லை. தேவையான ஆசீர்வாதங்களைத் தர வருத்தப்படுவதும் இல்லை. வருத்தமான விக்ஷயம் என்னவென்றால், நம்மிடம் இருப்பதை விட நம்மிடம் இல்லாததைப் பற்றி நம் இதயம் அதிகம் கவலைப்படுகிறது. ஆகவே, கடவுளின் அன்பையும், அதிலிருந்து வரும் ஆசீர்வாதங்களையும் தொடர்ந்து நினைவுகூருவதன் மூலம், தேவனின் ஆவி நம் சோர்வுற்ற இதயங்களின் எண்ணங்களைத் தணித்து, நம்முடைய அதிருப்தியுள்ள ஆத்துமாக்களை சத்தியத்தின் அறிவால் திருப்திப்படுத்துகிறது.
இந்த வசனத்தில் உள்ள எண்ண ஓட்டத்தைக் கவனமாக ஆராயுங்கள். முதலில், பெரிய பரிசு கேட்காமலேயே கொடுக்கப்பட்டது. கேட்டால் மற்ற ஈவுகளைத் தராதிருப்பாரோ? நம்மில் யாரும் தேவனுடைய அன்புக் குமாரனைக் கொடுக்குமாறு கேட்கவில்லை. ஆனாலும் தேவன் அவரை அனுப்பினார்! இப்போது, நாம் கிருபையுள்ள சிங்காசனத்திற்கு வந்து நம்முடைய விண்ணப்பங்களை ஏறெடுப்பதற்கான சிறந்த வாய்ப்பு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தினாலே நமக்குக் கிடைத்துள்ளது.
இரண்டாவதாக, அந்த ஒரு மாபெரும் பரிசு (கிறிஸ்து) அவருக்கு மிகப்பெரிய விலைகொடுக்க வேண்டியதாய் இருந்தது. ஆதைவிடச் சிறிய பரிசுகளை அவர் தராமல் போவாரோ? அது அவருக்குப் பெரிய இழப்பைத் தரப்போவதில்லை, மாறாக கொடுப்பதின் சந்தோக்ஷத்தையே தரப்போகிறது. ஒரு நண்பர் எனக்கு ஒரு வரைப்படத்தை பரிசாகக் கொடுத்தால், அதை வர்ணத் தாளால் போர்த்திக் கொடுப்பதற்கான செலவைச் செய்ய வருத்தப்படுவாரோ? அல்லது ஒரு அன்பானவர் எனக்கு ஒரு நகையைப் பரிசாகக் கொடுத்தால், அதை வைக்க உதவும் சிறிய பெட்டியை தரமாட்டாரா? அப்படியானால், தன் சொந்த குமாரனைக் கொடுக்கத் தயங்காத பரலோக பிதா, உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு எந்த நன்மையையும் எப்படி நிறுத்தி வைப்பார் என்று சிந்தித்துப்பாருங்கள் (சங்கீதம் 84:11).
மூன்றாவதாக, தேவன் இந்த மகிமையான வரத்தை (கிறிஸ்து) நாம் தேவனுக்கு எதிரிகளாக இருக்கும் போதே வழங்கினார். இப்போது, நாம் அவருடன் சமாதானம் செய்து, அவருடைய கிருபைக்குள் வந்த பிறகு அவருடையவர்களாக இருக்கிற நமக்கு மற்றதைக் கொடுக்காமல் இருப்பது எப்படி? நாம் பாவத்தில் இருந்தபோதே, நம்மீது சிறந்த அன்பைக் கொண்டிருந்த தேவன், இப்போது அவருடைய குமாரனின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் கழுவப்பட்ட நமக்கு இன்னும் பெரிய நன்மையைச் செய்ய அவர் விரும்புவார் என்பதைப் பாருங்கள்!
இந்த வேதபகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ள காலத்தை கவனியுங்கள். “அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்குத் தாராளம் அருளாதிருந்ததெப்படி?” என்று அல்ல, ஆனால் இதுவும் மெய் தான். ஏனெனில் இப்போது நாம் தேவனுடைய சுதந்தரராய் இருக்கிறோம். நமது வேதபகுதி இன்னும் அதிகம் செல்கிறது: “அவரோடுகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பது எப்படி?” இவ்வசனத்தில் இரண்டாவது பகுதி தேவன் ஏற்கனவே செய்த நல்ல விக்ஷயங்களைக் கணக்கிடுவது மட்டுமல்லாமல், இப்போதும் இனி எப்போதும் நமக்குத் தேவையான ஆறுதலான நம்பிக்கையையும் அளிக்கிறது. அருளாதிருப்பதெப்படி? என்ற இந்த வார்த்தைக்கு எந்தவித கால அளவு எதுவும் இல்லை. நிகழ்காலத்திலும் இனி வருங்காலத்திலும் எப்போதும் தேவன் தம்மை மிகப்பெரிய கொடையாளராகவே வெளிப்படுத்துகிறார். நம் எல்லாருக்காவும் கிறிஸ்துவை ஒப்புக்கொடுத்த தேவனிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலும் இல்லை (யாக்கோபு 1:17).
தேவன் கொடுக்கும் முறையைக் கவனியுங்கள். “அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” தேவனிடம் தேனொழுகப் பேசி அவரிடம் பெற வேண்டியதில்லை. அவரிடம் கொடுக்க விருப்பம் இல்லாத நிலையைக் கண்டு அதை நாம் மேற்கொண்டு தான் பெற வேண்டும் என்பதில்லை. நாம் பெற்றுக்கொள்வதைவிட இன்னும் அதிகம் நமக்குத் தர மேன்மேலும் அவர் ஆவலாய் இருக்கிறார். உண்மையில், அவர் நமக்கு நன்மை செய்வதற்கு எதுவும் கடன்பட்டிருக்கவில்லை. அப்படி இருந்தால், தாராளமாகத் தராமல், கொடுக்க வேண்டுமே என்கிற கட்டாயத்தில் இருந்து தந்திருப்பார். தம்முடையவர்களுக்கு தம் விருப்பப்படிச் செய்ய அவருக்கு பூரண அதிகாரம் இருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். அவர் விரும்பியபடி யாருக்கும் கொடுக்கும் சுதந்திரம் அவருக்கு இருக்கிறது.
இலவசம் என்ற சொல் தேவன் எந்தவித தடையுமின்றி இலவசமாகத் தருகிறார் என்ற கருத்தைத் தருவது மட்டுமின்றி, தான் கொடுக்கும் ஈவுகளுக்கு எந்த விலையும் வைப்பதில்லை, அவருடைய ஆசீர்வாதங்களுக்கு அவர் எந்த விலையும் நிர்ணயிப்பதில்லை என்ற அர்த்தத்தையும் தருகிறது. அவர் இரக்கங்களை விற்கும் சில்லரை வியாபாரியோ, நல்ல ஈவுகளை பண்டமாற்று செய்கிறவரோ அல்லர். அவ்வாறு இருந்திருந்தால் அவர் அருளும் ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்குமான சரியான விலை கொடுக்க வேண்டியதாய் இருந்திருக்கும். அப்படி இருந்திருந்தால் ஆதாமின் சந்ததியில் யாரால் அந்த விலையைக் கொடுக்கும் வசதி இருந்திருக்கும்? இல்லை, கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம், தேவனுடைய பரிசுகள் “பணமும் இன்றி, விலையும் இன்றி” (ஏசாயா 55:1) நமக்குக் கிடைக்கின்றன – நமது தகுதியின் அடிப்படையிலோ அல்லது சம்பாத்தியத்தின் அடிப்படையிலோ வருவதில்லை.
இறுதியாக, இந்த வாக்குறுதியின் பரந்த தன்மையில் மகிழ்ச்சி அடையுங்கள்: “அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” என்ற அந்த வார்த்தையில் தேவனின் வாக்குறுதி எவ்வளவு பெரியது என்பதை பரிசுத்த ஆவியானவர் இங்கே நமக்கு வெளிப்படுத்துகிறார். சக கிறிஸ்தவனே! உனக்கு என்ன வேண்டும்? மன்னிப்பு வேண்டுமா? ஆனால், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்." (1 யோவான் 1:9) என்று தேவன் சொல்லவில்லையா? உங்களுக்கு கிருபை வேண்டுமா? “நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாகி, சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகத்தக்கவர்களாய் இருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராய் இருக்கிறார்" என்று அவர் வாக்குக் கொடுக்கவில்லையா (2 கொரிந்தியர் 9:8)? ஒருவேளை உங்கள் சரீரத்தில் முள் உள்ளதா? அதுவும் வழங்கப்படுகிறது. “என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது” (2 கொரிந்தியர் 12:7). உங்களுக்கு ஓய்வு வேண்டுமா? அப்படியானால் நம்முடைய இரட்சகரின் அழைப்புக்கு செவிகொடுங்கள். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்." (மத்தேயு 11:28). உங்களுக்கு ஆறுதல் வேண்டுமா? அவர் “சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவர்" அல்லவா? (2 கொரிந்தியர் 1:3).
“அவரோடே கூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” அன்பானவர்களே! நீங்கள் விரும்புவது பூமிக்குரிய தேவை என்றால்? உன்னுடைய பாத்திரத்தில் உணவும், பானையில் எண்ணெயும் சீக்கிரமே தீர்ந்து விடும், எதுவும் இல்லாமல் போய்விடுமோ என்று நீ கவலைப்படுகிறீர்களா? அப்படியானால், உங்கள் தேவையை தேவனுக்கு முன் வைத்து, ஒரு சிறுபிள்ளையைப் போல அவர்மேல் விசுவாசத்தை வையுங்கள். தேவன் உங்களுக்கு மேன்மையான ஆசீர்வாதங்களைத் தந்து விட்டு, வாழ்வுக்கான சிறிய தேவைகளைப் புறக்கணிப்பார் என்று நினைக்கிறீர்களா? அப்படி அல்ல. “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்." (பிலிப்பியர் 4:19).
நிச்சயமாக, நீங்கள் கேட்கும் அனைத்தையும் தருவதாக அவர் வாக்குறுதி அளிக்கவில்லை. ஏனென்றால், நாம் அநேக வேளைகளில் தகாதவிதமாய் விண்ணப்பம் செய்கிறோம் (யாக்கோபு 4:3). நம் வசனப்பகுதியில் உள்ள வாக்குறுதியின் வரம்பைக் கவனமாகப் பாருங்கள், “அவரோடே கூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” நாம் பல நேரங்களில் விரும்பும் விண்ணப்பத்திற்கான பதில் கிடைத்து விடுமானால் அதுவே நமக்கும் கிறிஸ்துவுக்கும் நமக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தும். ஆகவே இது போன்ற நேரங்களில், தேவன் தம்முடைய உத்தமத்தின் நிலையில் அவற்றை நமக்குக் கொடாமல் நிறுத்தி விடுகிறார்.
புதுப்பிக்கப்பட்ட ஒவ்வொரு இதயத்திற்கும் ஆறுதலைத் தரும் நான்கு விக்ஷயங்களை நாம் இதுவரை சிந்தித்துள்ளோம். 1) பிதாவின் விலையேறப்பெற்ற தியாகம். நம்முடைய தேவன் மாபெரும் ஈவுகளைத் தரும் தேவன். உண்மையோடும், உத்தமத்தோடும் நடந்துகொள்பவர்களுக்கு அவர் எந்த நன்மையும் செய்யமால் இருப்பதில்லை. 2) பிதாவின் கிருபையுள்ள திட்டம். நமக்காகவே கிறிஸ்து கைவிடப்பட்டார். நம்முடைய மேன்மையான, நித்தியமான நலனே அவருடைய உள்ளத்தில் நிறைந்திருந்தது. 3) பரிசுத்த ஆவியின் மூலமாக ஆசீர்வதிக்கப்பட்ட விளைவு. விலையுயர்ந்ததை கொடுக்கத் தயங்காத தேவன், சிறிதானதைக் கொடுப்பதற்கும் தயாராகவே இருக்கிறார். அவர் தம்முடைய சொந்த குமாரனை நமக்காக கொடுத்தார் என்ற சத்தியமே நமது மற்ற தேவைகளைப் பூர்த்தி செய்யவர் என்பதற்கான முழு உத்தரவாதம். 4) ஆறுதல் தரும் வாக்குறுதி. இந்த வாக்குறுதி நிகழ்காலத்திற்கும், வரப்போகும் காலத்திற்கும், நம் இதயங்களுக்கு நம்பிக்கையையும், நம் மனதில் அமைதியையும் கொண்டுவரும் ஒரு ஆசீர்வாதமாகும். இந்தச் சிறிய தியானத்தின் மேல் தேவன் தனது ஆசீர்வாதத்தை அருளுவாராக!
“நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள். அவர் கிருபை என்றுமுள்ளது." (சங்கீதம் 136:23)
“நம்மை நினைத்தவர்” என்பது நாம் அவரை மறப்பதற்கு எதிரான குறிப்பிடத்தக்க மற்றும் ஆசீர்வாதமான வேறுபாடாகும். நமது மற்ற திறன்களைப் போலவே, நமது நினைவும் பாவத்தினால் பாதிக்கப்பட்டு, கேட்டின் அடையாளங்களைச் சுமக்கிறது. பயனுள்ள விக்ஷயங்களை மறந்துவிட்டு நன்மையானவைகளை நினைவில் வைக்க முடியாத நமது திறனே இதற்குச் சான்றாகும். மனிதன் சிறு வயதில் பாடிய அல்லது கேட்ட ஒரு பாலர் பள்ளிப் பாடலைத் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்துக்கொள்கிறான். ஆனால் பயனள்ள பிரசங்கத்தையோ 24 மணி நேரத்திற்குள் மறந்துவிடுகிறான். இதைவிட மிகவும் வருத்தமான மற்றும் ஆழமான காரியம் என்னவென்றால் தேவனையும், அவர் நமக்கு காட்டிய எண்ணற்ற கருணைகளையும் சுலபமாக மறந்துவிடுகிறோம். ஆனால் தேவனுக்கு என்றும் மகிமை உண்டாகட்டும். அவர் என்றும் நம்மை மறப்பதில்லை. அவர் உண்மையாய் நினைவுகூறுகிற தேவனாக இருக்கிறார்.
நாம் வேதாகம ஒத்துவாக்கியத்தில் பார்க்கும்போது, “நினைவு கூறுதல்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்ட முதல் ஐந்து முறையும் தேவனுடன் தொடர்புடைய நிலையில் பயன்படுத்தப் பட்டதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். “தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்” (ஆதியாகமம் 8:1). “அந்த வில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப்பார்ப்பேன்" (ஆதியாகமம் 9:16). “தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப்போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பிவிட்டார்” (ஆதியாகமம் 19:29). இதுபோல தேவனுடைய நினைவித் தாங்கி வசனங்கள் வரும்போது, முதன் முதலில் இந்த வார்த்தை மனிதனைக் குறிக்கும் வகையில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பாருங்கள்: “ஆனாலும் பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான்" (ஆதியாகமம் 40:23)!
நமது கவனத்தில் எடுத்துக்கொண்ட வேதபகுதியின் வரலாற்று சூழல் எகிப்தின் செங்கல் சூளைகளில் இஸ்ரேல் மக்கள் பட்ட பாடுகளைப் பற்றியது. அவர்கள் உண்மையாகவே அங்கு மிகவும் மோசமான நிலையில் இருந்தனர். தேவனை அறியாத கடின இதயம் கொண்ட அரசனால் ஒடுக்கப்பட்டும், இரக்கமற்ற அதிகாரிகளின் சவுக்கு அடிகளின் கீழ் அவர்கள் புலம்பித் தவிக்கும் அடிமை நிலையில் இருந்தனர். அவர்களுக்கு இரக்கம் காட்ட யாரும் இல்லாத நிலையில் யெகோவா தேவன் அவர்களின் கூக்குரலைக் கேட்டு அவர்களுக்கு இரங்கும்படி கண்ணோக்கமானார். அவர்களுடைய “தாழ்ந்த நிலையில்" அவர்களை நினைவு கூர்ந்தார். இதற்குக் காரணம் என்ன? யாத்திராகமம் 2:24-25 சொல்லுகிறது: “தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார். தேவன் அவர்களை நினைத்தருளினார்.” (யாத்திராகாமம் 2:24,25)
மேலும் வரலாறு மீண்டும் திரும்புகிறது. இஸ்ரவேலரின் தாழ்ந்த நிலை இன்னமும் உச்சத்திற்கு வரவில்லை. அவர்களுடைய அனுபவங்கள் கடந்த 19 நூற்றாண்டுகளில் அதிக அச்சத்தை ஏற்படுத்துவதாகவே இருந்திருந்தாலும், மிகவும் மோசமான காரிருளின் இரவு இன்னமும் அவர்களுக்கு முன்பதாக வர வேண்டியதாய் இருக்கிறது. இந்தக் கிருபையின் காலம் முடிவுக்கு வரும்போது, இதுவரை இல்லாத நியாயத்தீர்ப்புகள் யூதர்கள் மீது இறங்கும். அது அவர்கள் அடிமைத்தனக் காலத்தில் இருந்தவைகளைவிட மோசமானதாக இருக்கும். “மகா உபத்திரவ காலத்தில்” தான் அவர்கள் மிக மோசமான துன்பங்களை அனுபவிப்பார்கள். “ஐயோ! அந்த நாள் பெரியது. அதைப் போன்ற நாளில்லை. அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம். ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்” (எரேமியா 30:7) என்று எழுதப்பட்டிருப்பது போல நடக்கும். தேவன் அவர்களுடைய முன்னோர்களுடன் செய்த உடன்படிக்கையை நினைவுகூருவார்.
ஆனால், நமது வேதபகுதி இஸ்ரவேலர்களான ஆபிரகாமின் நேரடி சந்ததியினருக்கு மட்டுமே என்று சுருக்கிவிடக்கூடாது. இது “தேவனுடைய இஸ்ரவேல்" (கலாத்தியர் 6:16) ஆகிய யாவருக்குமானது. தேவன் அளிக்கும் இரட்சிப்பில் பங்குகொள்ளும் இன்றைய விசுவாசிகளும் சங்கீதக்காரனுடன் இணைந்து, “நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்" என்று சொல்லலாம். நமது விழுந்துபோன சிருக்ஷ்டிகளாக, நம்மை நாமே இரட்சித்துக் கொள்ள முடியாத அளவுக்கு மோசமான நிலையிலும் அக்கிரமத்திலும் இருக்கிறோம். ஆனால் அவரது அற்புதமான கிருபையால் தேவன் நம்மீது பரிதாபம் கொண்டார். நாம் விழுந்து கிடந்த இடத்தில் அவர் வந்து, நம்மைப் பார்த்து நம்மீது மனதுருகினார் (லூக்கா 10:33). எனவே ஒவ்வொரு கிறிஸ்தவனும், “பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தினார்" (சங்கீதம் 40:2) என்று கூறலாம்.
அவர் ஏன் நம்மை நினைவு கூர்ந்தார்? “நினைவுபடுத்துதல்" என்ற சொல், ஏற்கனவே இருந்த நம்மீதான அன்பு மற்றும் இரக்கத்தின் சிந்தைகளைச் சொல்கிறது. எகிப்தில் இருந்த இஸ்ரவேலர்களைப் போலவே, அவர் நம்முடைய இயல்பிலேயே பாழாய்ப்போன நிலையில் கிடந்த நம்மையும் நினைவு கூர்ந்தார். அவர் நித்தியகாலமாய் நமது உறுதியான மீட்பிற்காக ஏற்படுத்திய தம்முடைய உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். நாம் தீத்து 1:2ல் வாசிப்பதுபோல “பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணி” இருக்கிறார். கிறிஸ்து யாருக்காக தம்முடைய ஜீவனைக் கொடுத்தாரோ அவர்களுக்கு நித்திய ஜீவன் வழங்கப்படும் என்று வாக்களித்துள்ளார். ஆம், தேவன் “உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டதை" (எபேசியர் 1:4) நினைவு கூர்ந்தார். எனவே ஏற்ற காலத்தில் அவர் நம்மை மரணத்திலிருந்து ஜீவனுக்குள் நம்மை கொண்டுவந்தார்.
ஆயினும், இந்த ஆசீர்வாதமான வார்த்தை தேவ இரட்சிப்பின் கிருபை நாம் பெற்றுக்கொண்ட ஆரம்ப அனுபவத்துக்கும் அப்பால் கடந்து செல்கிறது. சரித்திர அடிப்படையில் நமது வசனப்பகுதி எகிப்தில் இருந்தபோது மட்டுமே தேவன் தம்மக்களை நினைவு கூர்ந்தார் என்று கூறவில்லை, ஆனால் இந்த வசன சூழமைவின்படியே, அவர்கள் வாக்காளிக்கப்பட்ட தேசத்திற்கு வனாந்த வழியாய்ப் பயணம் செய்த காலமுழுவதும் தேவன் நினைவு கூர்ந்தார் என்று சொல்ல முடியும். இஸ்ரவேலின் வனாந்தர அனுபவங்கள் அனைத்தும், இன்று எதிர்மறையான உலகத்தில் வாழும் பரிசுத்தவான்களுக்கான முன் அடையாளங்களே. ஒவ்வொரு நாளும் கர்த்தர் அவர்களை நினைவுகூர்ந்து அவர்களின் தேவைகளையும், பசியையும் தீர்த்து அவர்கள் மீது காட்டிய அக்கறை நம்முடைய பரலோக வீட்டை நோக்கிய பயணத்தில் நமக்கான அனைத்து தேவைகளைச் சந்திப்பதிலும் வெளிப்படும் என்பதை நமக்கு விளக்குகிறது. பூமியில் நமது தற்போதைய நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. ஏனென்றால் நாம் இப்போது அரசர்களாய் ஆளுகை செய்கிறவர்கள் அல்ல. ஆனாலும் நம்முடைய தேவன் எப்போதும் நம்மை அவருடைய நினைவில் கொண்டு, அனைத்து சமயத்திலும் நமக்கு ஒத்தாசையாக செயல்படுகிறார்.
“நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்". எப்பொழுதும் நாம் சாதகமான சூழ்நிலைகளில் இருக்க நமக்கு அனுமதி இல்லை. இந்த இயற்கை உலகைப் போலவே நம் வாழ்வும் இருக்கிறது. வெளிச்சமும் பிரகாசமான நாட்களைத் தொடர்ந்து மேகம் மூட்டத்துடன் கூடிய இருண்ட நாட்களும் வரும். கோடை காலத்தைத் தொடர்ந்து குளிர்காலமும் வரும். ஏமாற்றங்கள், இழப்புகள், துன்பங்கள் மற்றும் மரணத்தால் வரும் துக்கங்கள் நம் வழியே வந்து நம்மை தாழ்ச்சி அடையச் செய்கின்றன. மேலும் பல வேளைகளில் நம் நண்பர்களின் ஆதரவு நமக்கு அதிகமாகத் தேவைப்படும் போது அவர்களும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள். நமக்கு உதவி செய்வார்கள் என்று நாம் நினைத்தவர்கள் கூட நம்மைத் கைவிட்டனர். ஆனால், அப்போதும், நம்மை “நினைத்தவர்" தம்மை நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் (எபிரெயர் 13:8) என்பதை விளங்கப்பண்ணியதால், மீண்டும் நம் வாழ்வில், “அவர் கிருபை என்றுமுள்ளது" என்ற உண்மை மறுபடியும் நிரூபிக்கப்பட்டது.
“நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்". இந்த வார்த்தைகளை வாசிக்கும் ஒருசிலர் இந்த வார்த்தைகளை மற்றொரு விதத்தில் நடைமுறைப்படுத்த நினைக்கலாம்: அதாவது நீங்கள் ஆதியில் கொண்டிருந்த அன்பில் இருந்து விலகியிருக்கும் வேளையாக, உங்கள் இதயம் தணிந்து போய், உங்கள் வாழ்க்கை இந்த உலகத்திற்குள் ஈர்க்கப்பட்டதாகவும். நீங்கள் பின்வாங்கிப்போன நிலைக்குத் தள்ளப்பட நிலையில் இருக்கலாம். அது வாஸ்தவத்தில் மிகவும் பரிதாபமான தாழ்ச்சி நிலை தான். அப்படி இருந்தும் நம்முடைய உண்மையுள்ள தேவன் உங்களை நினைவு கூர்ந்தார். ஆம், நாம் ஒவ்வொருவரும சங்கீதக்காரனுடன்;; சேர்ந்து, “அவர் என் ஆத்துமாவைத் தேற்றி (மறுபடியும் புதுப்பித்து என்று மூல மொழியில் வருகிறது), தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்" (சங்கீதம் 23:4) என்று சொல்ல நிறைய காரணங்கள் உள்ளன.
“நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்". இந்த வார்த்தைகளை விசுவாசியின் வாழ்க்கையில் மற்றொரு சூழ்நிலையிலும் பயன்படுத்தலாம். அது என்னவென்றால் பரிசுத்தவானின் வாழ்வின் கடைசிப் பெரும் நெருக்கடியாகிய இவ்வுலகை விட்டுச் செல்லும் நேரம் தான். உடலில் உள்ள அனைத்து உயிர்ச்சக்திகளும் மந்தமாகி, தன் சுபாவமான சக்திகள் அனைத்தையும் இழந்து நிற்கும் நிலையில், அவனில் தாழ்வு நிலை உருவாகிறது. ஆனால் அப்போதும் கர்த்தர் நம்மை நினைக்கிறார், ஏனெனில் “அவர் கிருபை என்றுமுள்ளது.” மனிதனின் உட்சபட்ச நெருக்கடி தேவன் கிரியை செய்கிற வாய்ப்பே அல்லாமல் வேறில்லை. நம்முடைய பெலவீனத்தில் அவருடைய பெலம் பூரணமாய் விளங்கும். இந்த நிலையில் தான் அவர் நம்மை நினைத்து “பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன். நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன். என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.” (ஏசாயா 41:10) என்ற வாக்குத்தத்தம் நிறைவேறும்படி செய்து நமக்கு மிகப்பெரிய ஆறுதலைத் தருகிறார்.
“நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்." உண்மையில் இந்த வசனம் நாம் நித்திய வாசஸ்தலத்தில் கர்த்தரோடு இருக்கும்போது தேவனைத் துதிப்பதற்கு பொருத்தமான வார்த்தைகளை நமக்கு வழங்குகிறது. நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்த அவருடைய உடன்படிக்கையின் உண்மைக்காகவும், அவருடைய ஒப்பற்ற கிருபைக்காகவும், அவருடைய இரக்கத்திற்காகவும், நாம் எவ்வளவாய் அவரைப் புகழப் போகிறோம்! அப்போது நாம் அவரால் முழுவதும் அறியப்பட்டபடியே நிறைவாக அறிந்துகொள்வோம். நமது நினைவுகளும்கூட புதுப்பிக்கப்பட்டு, பூரணப்படுத்தப்பட்டவர்களாய், தேவன் நம்மை நடத்திய அனைத்து வழிகளையும் நினைவில் கொண்டு வருவோம் (உபாகமம் 8:2). அந்த நினைவைக்கொண்டு நன்றியுடனும் சந்தோக்ஷமுடனும் “அவருடைய கிருபை என்றென்றும் உள்ளது” என்று நாம் ஆமோதித்து அவரை ஆராதிக்கிறோம்.
“ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்." (யோபு. 23:10)
யோபு இங்கே தன்னைத் திருத்திக் கொள்கிறார். இந்த அதிகராத்தின் தொடக்கத்தில், “இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரண்டுத்தனமாக எண்ணப்படுகிறது. என் தவிப்பைப்பார்க்கிலும் என் வாதை கடினமானது." (யோபு 23:2) என்று யோபு குறை கூறுவதைக் காண்கிறோம். தன்மீதான சுமை தாங்க முடியாத அளவுக்கு அதிகமாய் இருப்பதாக யோபு உணர்ந்தார். ஆனால் இப்படிப்பட்ட மனப்பான்மையிலிருந்து மீள்கிறார். அவர் தனது ஆவேச உக்கிரத்தைத் தடுத்து, தன் மூர்க்கமான சிந்தனையைத் திருத்திக்கொள்கிறார். நாம் அனைவரும் நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் இந்த பூமியில் வாழ்ந்த ஒரே ஒரு மனிதருக்கு மட்டும் அந்தத் தேவை ஏற்படவில்லை.
யோபு இந்த இடத்தில் தன்னைத் தானே ஆறுதல்படுத்திக் கொள்கிறார். தேவத் திட்டத்தின் இரகசியங்களை யோபுவால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவர் நடக்கும் பாதை தேவனுக்குத் தெரியும். தன்னை அமைதிப்படுத்தும் தேவனுடைய பிரசன்னத்தை யோபு ஊக்கமாய்த் தேடினார், ஆனால் அந்த முயற்சி குறிப்பிட்ட காலத்திற்கு வீணாகவே இருந்தது. அதனால்தான் “இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை. பின்னாகப்போனாலும் அவரைக் காணேன். இடதுபுறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன். வலது புறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார்” (யோபு 23:8,9) என்று அங்கலாய்த்தார். ஆனாலும் அவர் இந்த ஆசீர்வாதமான சத்தியத்தைக்கொண்டு தன்னை தான் ஆறுதல் படுத்திக்கொண்டார்: என்னால் தேவனைப் பார்க்க முடியாவிட்டாலும், அதைவிட ஆயிரம் மடங்குக்கு சிறப்பானது என்னவென்றால், அவர் என்னைக் காண்கிறவர் – “அவர் அறிவார்" மேலே இருக்கும் ஒருவர் நம் சூழ்நிலைகளைப் பற்றி அலட்சியமானவரோ, நம் நிலையைப் புரியாதவரோ அல்ல. ஒரு குருவி கீழே விழுவதைக்கூட அவர் கவனிக்கிறார் என்றால், நம்முடைய தலைமுடிகளையும் அவர் எண்ணுகிறவரானால், நிச்சயமாக நான் நடக்கும் பாதையை அவர் அறிவார்.
இங்கே யோபு வாழ்க்கையின் உன்னதமான பார்வையை வெளிப்படுத்துகிறார். அவர் எத்தனை மாபெரும் நம்பிக்கையைக் காட்டுகிறார் பாருங்கள். அவரது துன்பங்கள் அவரை சந்தேகிக்கிறவராக மாற்ற அனுமதிக்கவில்லை. தனக்கு வந்த சோதனைகள் மற்றும் இன்னல்கள் தன்னை மூழ்கடித்துவிட அனுமதி தரவில்லை. இருள் சூழ்ந்த மேகத்தின் பிரகாசமான பகுதியை நோக்கினார் – அது தேவனுடைய பகுதி, புத்திக்கும் புலன்களுக்கும் மறைக்கப்பட்ட பிரகாசமான பகுதி. வாழ்வைப் பற்றிய நெடியை பார்வையை அவர் தெரிந்துகொண்டார். தற்போதைய அக்கினிமயமான சோதனைகளுக்கும் அப்பால் பார்த்து, அவைகளின் முடிவு புடமிடப்பட்ட பொன் போன்றது என்று அறிக்கை செய்தார்: “ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்." இந்த வசனத்தில் மூன்று மாபெரும் சத்தியங்கள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன. அவற்றைத் தனித்தனியே சுருக்கமாக ஆராய்வோம்.
அ) என் வாழ்வைப் பற்றிய தெய்வீக அறிவு
“நான் போகும் வழியை அவர் அறிவார்". தேவனின் சர்வஞானம் என்பது அவருடைய தெய்வீகத்தின் சிறந்த பண்புகளில் ஒன்றாகும். “அவருடைய கண்கள் மனுக்ஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது. அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்" (யோபு 34:21). “கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது” (நீதிமொழிகள் 15:3). “நடைமுறை கிறிஸ்தவ வாழ்வின் மிகப்பெரிய சோதனைகளில் ஒன்று, தேவனுடைய சர்வஞானத்திற்கும் எனக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதே,” என்றார் சார்லஸ் ஸ்பர்ஜன். அன்பான வாசகரே! தேவனின் சர்வ ஞானத்திற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? அது உங்களை எவ்வாறு பாதிக்கிறது? அது உங்களைத் கலங்கப் பண்ணுகிறதா அல்லது ஆறுதல் தருகிறதா? உங்கள் வழிகள் அனைத்தையும் தேவன் அறிந்திருக்கிறார் என்ற உண்மையிலிருந்து தப்பிக்க விரும்புகிறீர்களா? அந்த முயற்சியே போலியானதும், சுயநலமானதாகவும், மாய்மாலமானதாகவும் தான் இருக்க வேண்டும். தேவன் தனது வழிகள் அனைத்தையும் அறிந்திருக்கிறார் என்ற எண்ணம் ஒரு பாவியை மிகவும் பயமுறுத்துகிறது. அவன் அதை மறுக்கிறான் அல்லது அதை மறப்பதற்கு வழிகளைத் தேடுகிறான். ஆனால் கிறிஸ்தவர்களுக்கு அது ஆறுதலை அளிக்கிறது. என்னுடைய சோதனைகள், இன்னல்கள், துக்கங்கள் மற்றும் அவரை மகிமைப்படுத்துவதற்காக நான் எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் தேவன் அறிந்திருக்கிறார் என்ற உணர்வு எவ்வளவு ஊக்கமளிக்கிறது! நான் நடக்கும் எல்லா வழிகளையும் தேவன் அறிந்திருக்கிறார் என்ற உண்மை கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களுக்கு மகிமையாகவும், கிறிஸ்துவில் இல்லாதவர்களுக்கு சங்கடமாகவும் இருக்கிறது.
“நான் போகும் வழியை அவர் அறிவார்". யோபு நடந்த பாதையை அவனது தோழர்களுக்குத் தெரியவில்லை. யோபுவைத் தவறாகப்; புரிந்து கொண்டனர். கடினமான சூழலில் இருந்த யோபுவுக்கு இது மிகவும் வேதனையான காரியம். அவரது நண்பர்களே யோபுவை ஒரு ஏமாற்றுக்காரன் என்று நினைத்தார்கள். அவன் ஒரு கொடிய பாவி என்றும், அதனால் தான் தேவனால் தண்டிக்கப்படுகிறான் என்றும் அவர்கள் கருதினர். ஆனால், அவரோ தான் ஒரு தகுதியில்லாத பரிசுத்தவான் என்றும் பாசாங்கு செய்பவர் அல்ல என்பதையும் அறிந்திருந்தார். அவர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என அவர்களிடம் அறைகூவல் விடுத்தார். “நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்." இங்கு நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்று உள்ளது. என் சக விசுவாசியே, உங்கள் சகமனிதர்கள், ஆம், உங்களுடன் பயணிக்கும் கிறிஸ்தவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு, உங்கள் வாழ்வில் நடக்கும் தேவசெயலைத் தவறாக அர்த்தம் சொல்வார்கள். ஆனால் சர்வஞானியாகிய தேவன் நீங்கள் போகும் வழியை அறிவார் என்கிற பாக்கியமான சத்தியத்தால் உங்களை ஆறுதல்படுத்திக் கொள்ளுங்கள்.
“நான் போகும் வழியை அவர் அறிவார்". இந்த வார்த்தைகள் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டால், யோபுக்குக்கூட அவர் நடந்துக் கொண்டிருந்த வழி தெரியாது. அதேபோல, நாம் நடக்கும் வழிகளும் நமக்குத் தெரியாது. வாழ்க்கை பலவேளைகளில் மர்மமாகவே இருப்பது போலத் தெரிகிறது. ஆண்டுகள் கடந்தும் தீர்வு கிடைக்கிறதில்லை. வாழ்க்கை தத்துவார்த்த சிந்தனையும் நமக்கு உதவாது. மனித வேட்கை என்பது ஒரு விசித்திரமான புதிர். நாம் இயந்திர சாதனங்கள் அல்ல என்பதை நமது சிந்தனைத்திறன் தெளிவாக்குகிறது. நம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் நமது விருப்பத்தேர்வுகளைப் பயன்படுத்துகிறோம். இருந்தபோதிலும், நமது சுதந்திரம் இறுதியானது இல்லை என்பது நமக்குத் தெரியும். நம்மால் எதிர்க்க முடியாத பல நன்மையும் தீமையுமான அழுத்தங்கள் நமது முடிவுகளை பாதிக்கின்றன. பாரம்பரியமும், வாழ்வுச்சூழலும் நம்மீது வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நமது சுற்றுப்புறங்கள், சூழ்நிலைகள் போன்றவற்றை நாம் புறக்கணிக்க முடியாது. மேலும், நம்முடைய முடிவுகளைத் தீர்மானிக்கும் தேவதிட்டம் பற்றி நாம் என்ன சொல்வது? நாம் எடுக்கும் வழியைப் பற்றி நமக்கு எவ்வளவு குறைவான அறிவே உள்ளது பாருங்கள். “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்" (எரேமியா 10:23) என்கிறார் தீர்க்கன் எரேமியா. நாம் இங்கே புதிர் நிறைந்த மண்டலத்தில் நுழைகிறோம். அதை மறுப்பது அர்த்தமற்றது. அதை ஒப்புக்கொண்டு, “கர்த்தராலே மனுக்ஷருடைய நடைகள் வாய்க்கும். ஆகையால் மனுக்ஷன் தன் வழியை அறிந்து கொள்வதெப்படி?" (நீதிமொழிகள் 20:24) என்ற ஞானியின் கருத்துடன் உடன்படுவதே சிறப்பானதாக இருக்க முடியும்.
மற்றுமொரு கோணத்தில் பார்க்கும் பட்சத்தில் யோபு தான் நடக்கும் வழியை அறிந்திருந்தார் எனலாம். அந்தப் பாதை என்ன என்பதை அடுத்த இரண்டு வசனங்களில் விளக்குகிறார்: “என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது. அவருடைய நெறியைவிட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன். அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை. அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்" (யோபு 23:11, 12). யோபு தேர்ந்தெடுத்த பாதை சிறந்த பாதை, வசனத்தின் படியான பாதை, தேவனின் பாதை - அதுவே யோபுவின் பாதை. அன்பான வாசகரே! அந்த பாதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது உன்னதமான தேர்ந்தெடுத்தல் அல்லவா! யோபு பொறுமையானவர் மட்டுமல்ல, ஞானம் உள்ளவரும் கூட! நீங்களும் அதுபோன்ற பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்களா? “என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது. அவருடைய நெறியைவிட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன்" என்று உங்களால் சொல்ல முடியுமா? (வசனம் 11). அவ்வாறு சொல்ல முடிந்தால், அந்த கிருபையை உங்களுக்கு வழங்கிய தேவனை துதிசெய்யுங்கள். அப்படிச் சொல்ல முடியாவிட்டால், அவருடைய கிருபையை வேண்டி மன்றாடாமல் இருந்ததிற்காக வெட்கத்துடன் உங்கள் தவறை ஒப்புக் கொள்ளுங்கள். உடனே முழங்காலிட்டு விழுந்து பணிந்து மன்னிப்புக் கேளுங்கள். எதையும் மறைக்காமல், ஒன்றையுமம் ஒளித்து வைக்காமல் அறிக்கை செய்யுங்கள். “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருந்து, நம்முடைய பாவங்களை மன்னித்து, எல்லா அநியாயத்தினின்றும் நம்மைச் சுத்திகரிப்பார்" (1 யோவான் 1:9) என்று எழுதப்பட்டிருப்பதை நினைவில் வையுங்கள். அன்பு வாசகரே வசனம் 12 உங்கள் மற்றும் எனது தோல்வியை விவரிக்கவில்லையா? நாம் தேவனுடைய கட்டளைக்கு முன்பாக நடுங்காமலும், அவருடைய வார்த்தையை பொருட்படுத்தாமலும், அவரை விட்டு விலகியும் சென்றிருக்கிறோமே! ஆகவே, இப்போது, ஒவ்வொரு நாளும் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கும், அவருடைய வார்த்தையை நம் இதயங்களில் வைப்பதற்கும் அவருடைய கிருபையை மன்றாடுவோம்.
“நான் போகும் வழியை அவர் அறிவார்." நீங்கள் எந்த பாதையை பின்பற்றுகிறீர்கள்? ஜீவனுக்கு நேராக நடத்தும்; குறுகலான பாதையா? அல்லது அழிவுக்குக் கொண்டு செல்லும் விசாலமான பாதையா? அன்பான நண்பரே! இந்த காரியத்தைப் பற்றிய நிச்சயம் உங்களுக்கு இருக்கட்டும். வேத வசனம் சொல்லுகிறது: “ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்” (ரோமர் 14:12). ஆனால் இந்த விக்ஷயத்தில் நீங்கள் ஏமாற்றப்படவோ, உறுதியற்றவராகவே இருக்கலாகாது. ஏனென்றால் “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார் (யோவான் 14:6).
ஆ) தெய்வீகப் பரிசோதனை
“அவர் என்னை சோதித்த பின்” “வெள்ளியை உலைக்கலமும், பொன்னைப் புடமும் சோதிக்கும். இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்" (நீதிமொழிகள் 17:3). கடந்த காலத்தில் இஸ்ரவேலைத் தேவன் இவ்வாறே பரிசோதித்தார். இதுபோலவே இப்போதும் கிறிஸ்தவர்கள் பரிசோதிக்கப்படுகிறார்கள். கானான் தேசத்துக்குள் நுழைவதற்கு முன்பும், எகிப்தை விட்டு வெளியேறியது முதல் அவர்களின் வரலாற்றை விவரிக்கவும் இஸ்ரவேலர்களை நோக்கி மோசே சொன்ன வார்த்தைகளைக் கவனியுங்கள், “உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருக்ஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக" (உபாகமம் 8:2). இவ்விதமாக தான் தேவன் நம்மை பரிசோதித்து, ஆராய்ந்து, நாம் தாழ்மைப்படும்படி செய்கிறார்.
'அவர் என்னைச் சோதித்தபின்” இதை நாம் அதிகம்; புரிந்து கொண்டால், நம்முடைய துன்பங்களின் மத்தியில் நாம் பொறுமையுடன் சகித்துக்கொள்ள வல்லவர்களாவோம். ஒவ்வொரு நாளும் வாழ்வில் நாம் சந்திக்கும் தடைகள், நம்மை அதிகம் எரிச்சல் அடையச்செய்யும் விக்ஷயங்கள் - அவைகளின் அர்த்தம் என்ன? இவைகள்; அனுமதிக்கப்படுவது ஏன்? இந்தக் கேள்விகளுக்கான பதில் இதுதான். இதோ, தேவன் உங்களைப் பரிசோதிக்கிறார். இந்த விளக்கம் தான் (குறைந்த பட்சம் ஒரு பகுதியாக) அந்த ஏமாற்றங்களுக்கும், உங்கள் பூமிக்குரிய நம்பிக்கை உடைக்கப்படும் அந்த நேரங்களுக்கும், அந்தப் பெரிய இழப்புகளுக்கும் - தேவன் உங்களைப் பரிசோதித்தார், பரிசோதிக்கிறார், என்பதே சரியாக இருக்கும். தேவன் உங்கள் சுபாவத்தை, உங்கள் தைரியத்தை, உங்கள் விசுவாசத்தை, உங்கள் பொறுமையை, உங்கள் அன்பு, உங்கள் உத்தமத்தைப் பரிசோதிக்கிறார்.
“அவர் என்னைச் சோதித்த பின்" தேவனுடை பரிசுத்தவான்கள் கூட அடிக்கடி அவர்கள் எதிர்க்கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகளுக்குத் சாத்தான் மீது பழி சுமத்துகிறது வழக்கம். அவர்களுடைய துன்பங்களுக்குப் பொறுப்பு அந்தப் பெரிய எதிரி என்று கருதுகிறார்கள். ஆனால் இப்படி நினைப்பது மனதுக்கு ஆறுதலாக இருக்காது. சாத்தான் பல சிக்கல்களையும் சிரமங்களையும் உருவாக்குகிறான் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனாலும் சாத்தானுக்கும் மேலே சர்வவல்ல தேவன் இருக்கிறார்! தேவனின் அனுமதியின்றி சாத்தானால் நம் தலைமுடியை அசைக்க முடியாது. ஒருவேளை அப்படி நம்மை சோதிப்பதற்கு சாத்தானுக்கு தேவன் அனுமதித்தால், அவைகள்; நம்மைப் பரிசோதிக்கும்படி தேவன் அவைகளைப் பயன்படுத்திக் கொள்கிறார். ஆகவே, இந்த முக்கியமற்ற காரணங்களையெல்லாம் தாண்டி, “எல்லாவற்றையும் தம்முடைய சித்தத்தின்படியே செய்கிற” தேவனை நோக்கிப் பார்க்கக் கற்றுக்கொள்வோம் (எபேசியர் 1:11). யோபு உண்மையில் செய்தது இதுதான்.
யோபு புத்தகத்தின் முதல் அதிகாரத்தில், யோபுவை துன்புறுத்துவதற்கு சாத்தான் தேவனின் அனுமதியைப் பெற்றான் என்று வாசிக்கிறோம், அவன் யோபுவின் வேலையாட்களைக் கொன்று அவன் மந்தையைக் கொள்ளையடிக்க, சபேயரைப் பயன்படுத்தினான். (வசனம் 1:14-15). வேலையாட்களைக் கொல்லவும் ஒட்டகங்களைத் திருடவும் கல்தேயர்களைப் பயன்படுத்தினான். (வசனம் 17). யோபின் பிள்ளைகளைக் கொல்வதற்கு அவர் ஒரு பெரிய சூறாவளியைப் பயன்படுத்தினான். (வசனம் 19). ஆனால் இவையெல்லாம் நடந்தபோது யோபு எவ்விதமாக பதிலளித்தார்? “அதற்கு யோபு, ‘கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார். கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்’” (யோபு 1:21). மனித சூழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு, அவற்றைச் செயல்படுத்தும் சாத்தானுக்கு அப்பால் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி ஆளும், தேவனை யோபு பார்க்க முடிந்தது. தேவன் தன்னைப் பரிசோதிக்கிறார் என்பதை உணர்ந்தார். புதிய ஏற்பாட்டில் இதையே நாம் பெறுகிறோம். உபத்திரவத்தின் மத்தியில் கடந்து சென்ற ஸ்மிர்னாவில் உள்ள சபைக்கு எழுதிய கடிதத்தில், “நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே. இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்;” (வெளிப்படுத்துதல் 2: 10) என்று எழுதினார் யோவான் அப்போஸ்தலன். சுிறையில் அவர்கள் தள்ளப்பட்டது என்பது தேவன் அவர்களைப் பரிசோதிக்கத் தரப்பட்ட அனுமதியே.
இதை மறப்பதால் நாம் எவ்வளவு இழக்கிறோம்? எவ்வளவு கடினமான சூழ்நிலையாக இருந்தாலும், எவ்வளவு வலிமிகுந்த நிலை எதுவாக இருந்தாலும், தேவன் தம்முடைய பிள்ளைகளை எல்லாவற்றிலும் பரிசோதிக்கிறார் என்பதை அறிவது இருதயம் உடைந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறதாக இருக்கிறது. இதற்கு நமது இரட்சகர் என்ன ஒரு சிறந்த உதாரணம். பேதுரு மல்கூஸ் என்பவனின் காதைத் துண்டித்தபோது கர்த்தர் சொன்ன வார்த்தைகள் “பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ? என்றார்" (யோவான் 18:11). மனிதர்கள் தங்கள் ஆத்திரத்தை அவர் மீது கொட்ட ஆயத்தமாயினர். சர்ப்பம் அவர் குதிகாலைப் பதம்பார்க்கப்போகிறது. ஆனால் இயேசுவோ அவைகளுக்கு அப்பாலும் மேலாகவும் பார்த்தார். அன்புள்ள வாசகரே! தேவனிடமிருந்து வரும் பாத்திரத்தில் இருந்து எவ்வளவு கசப்பாக இருந்தாலும் (அது நம் இரட்சகர் பருகியதற்கும் எண்ணற்ற அளவில் குறைவானதே) குடிக்க தயாராக இருங்கள். சில சூழ்நிலைகளில் நாம் தேவனுடைய ஞானத்தைக் கேள்வி கேட்பவர்களாக இருக்கிறோம். தேவன் நமக்கு அளிக்கும் சில அனுபவங்களால் நாம் தாழ்மை அடைகிறோம். என்னால் சுமக்க முடியாத பாரத்தை தேவன் ஏன் என் மீது சுமத்தினார்? பிறர் நேசிப்பவர்களைக் காப்பாற்றியவர் என் அன்புக்கு உரியவர்களை மட்டும் ஏன் மரணத்தின் வாயிலாக கொண்டுச் செல்கிறார்? என் உடல் நலனும்; வலிமையும் என் பார்வையும் ஏன் எனக்கு மட்டும் மறுக்கப்பட வேண்டும்? இது போன்ற எல்லாக் கேள்விகளுக்குமான முதல் பதில் இது தான், “ஓ மனிதனே! தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்?" (ரோமர் 9:20)! எந்தவொரு உயிரினமும் அதன் படைப்பாளரான மாபெரும் தேவனைக் கேள்வி கேட்பது துன்மார்க்கமும் கீழ்ப்படியாமையும் கலந்த செயல் தான். “உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?" (ரோமர் 9:20). தேவனுடைய கிருபை நம் மீறுகிற உதடுகளை அடக்கி, கடினப்பட்ட இதயங்களில் பொங்கி எழும் புயல்களைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று நாம் ஒவ்வொருவரும் எத்துணை ஊக்கமாய் மன்றாட வேண்டும் என்பதை யோசித்துப்பாருங்கள்!
ஆனால் தாழ்மையோடு சர்வத்தையும் அறிந்த தேவன் அனுமதிக்கும் அனைத்திற்கும் அடிபணிபவர்களுக்கு, வேதாகமம் சரியான தீர்வுகளைத் தருகிறது. இந்த ஒளி நமது அறிவுத்திறனுக்குத் திருப்தி தருவதாக இல்லாமல் போகலாம். ஆனால் ஒரு குழந்தையைப் போல விசுவாசமுடன் ஏற்றுக்கொள்பவர்களுக்கு ஆறுதலையும் பெலத்தையும் அது தருகிறது. இதைப் பற்றி பேதுரு இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இதிலே (இரட்சிப்பு) நீங்கள் மிகவும் சந்தோக்ஷப்படுகிறீர்கள். என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும். அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.” (1 பேதுரு 1:6,7). இங்கே நாம் மூன்று காரியங்களைக் கவனிக்கிறோம். முதலாவது - விசுவாசத்திற்கு சோதனை தேவை. தேவன் இந்த வார்த்தையை சொல்லுவதால் நாம் இவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, இந்த விசுவாசத்தின் சோதனை தங்கத்தை விட விலையேறப்பெற்றது. அது தேவனின் பார்வையில் விலையேறப்பெற்றது (சங்கீதம் 116:15) எனவே அது நம்முடைய பார்வைக்கும் விலையேறப் பெற்றதாக இருக்க வேண்டும். மூன்றாவதாக, தற்போதைய சோதனை நமது எதிர்காலத்தை மனதில் கொண்டுள்ளது. இந்தப் பரீட்சையைச் சாந்தமாகச் சகித்துக் கொண்டு, தைரியமாக எதிர்கொள்பவர்கள், இரட்சகராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளிலே பெரும் வெகுமதியைப் பெறுவார்கள்.
மேலும் 1 பேதுரு 4:13-13ல் நமக்கு இவ்வாறு புத்திமதி தரப்பட்டள்ளது: “பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோக்ஷப்படுங்கள்”. முந்தைய வசனங்களில் வெளிப்படுத்தப்பட்ட அதே எண்ணங்களையே இதே வசனத்திலும் நாம் காண்கிறோம், எனவே பரிசோதனை மிகவும் அவசியம். அது இடையூறு என்று நாம் நினைக்கக்கூடாது, அதற்காக நாம் ஆயத்தப்பட வேண்டும். கிறிஸ்து மீண்டும் வரும்போது, அவரால் தாராளமாக பலன்பெறுவோம் என்பது நமது ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கையாக இருக்க வேண்டும். கிறிஸ்துவின் பாடுகளில்; பங்குகொள்கிற தகுதி நமக்குக் கிடைத்திருப்பதால் நாம் அவற்றை விசுவாசத்தின் தைரியத்துடன் மட்டுமல்ல, மகிழ்ச்சியுடனும் எதிர்கொள்ள வேண்டும். அவரும் பாடுபட்டார், எனவே குருவைப் பின்பற்றும் சீடனாக நாமும் பாடுபடுவது தேவையானதே.
“அவர் என்னைச் சோதித்த பின்" அன்புள்ள கிறிஸ்தவ வாசகரே! இதற்கு விதிவிலக்கு ஒன்றும் இல்லை, தேவனுக்கு பாவம் செய்யாத ஒரே ஒரு குமாரன் இருந்தார், ஆனால் துக்கம் இல்லாத ஒரு குமாரர் இல்லை. துரிதமாகவோ அல்லது தாமதமாகவோ, ஏதாவது ஒரு வடிவத்தில், கடினமும் கணமுமான சுமையாகிய சோதனையை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். “இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்கள் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் சுவிசேக்ஷத்தில் எங்கள் உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம். இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே” (1தெசலோனிக்கேயர் 3:2-3). மேலும், “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும்" (அப்போஸ்தலர் 14:22) என்றும் எழுதப்பட்டுள்ளது. இதுபோன்றே ஒவ்வொரு தலைமுறையிலும் நடந்துள்ளது. ஆபிரகாம் சோதிக்கப்பட்டார், கடுமையாக சோதிக்கப்பட்டார். அவ்வாறே யோசேப்பு, யாக்கோபு, மோசே, தாவீது;, தானியல், மற்றும் அப்போஸ்தலர்கள் போன்ற இன்னும் பலரும் சோதிக்கப்பட்டனர்.
இ) முடிவான கனி
“நான் பொன்னாக விளங்குவேன்" என்ற சொற்றொடரின் காலத்தைக் கவனியுங்கள். யோபு ஏற்கனவே சுத்தமான பொன்னாக இருப்பதாக சிந்தனை செய்யவில்லை. “நான் தங்கம் போல் வெளிவருவேன்," என்று அவர் அறிக்கையிட்டார். அப்போதும் தன்னில் களிம்பு அதிகமாக இருந்தது யோபுவுக்கு நன்றாகவே தெரியும். தான் ஏற்கனவே பூரணரானதாகப் பெருமை கொள்ளவில்லை. அதற்கு மாறாக யோபு சொன்னதை இந்தப் புத்தத்தின் இறுதி அதிகாரத்தில் வாசிக்கிறோம். “நான் என்னை அருவருத்து ... மனஸ்தாபப்படுகிறேன்” (யோபு 42:6). அவ்வாறு யோபு உணர்ந்தது சரிதான். நாமும் அவ்வேறே உணர்ந்திருப்போம். நம்முடைய சரீரத்தில் எந்தவித நன்மையும் இல்லை என்பதை உணர்ந்து (ரோமர் 7:18), யோபுவைப் போல ஒப்புக்கொள்வது நல்லது. தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் நம்மையும் நம்முடைய நடத்தையையும் ஆராயும்போது, எண்ணற்றதும், கணக்கிட முடியாததுமான பாவங்கள் காணும்போது, நம்மை வெறுப்பதற்கு நமக்கும் பல காரணங்கள் இருப்பதைக் காண்கிறோம்! அன்புள்ள கிறிஸ்தவனே! இன்னும் நம்முள் பலவித அழுக்குகள் இருக்கிறது. ஆனால் நம்முடைய நிலை என்றென்றும் இப்படியே இருந்துவிடாது.
“நான் பொன்னாக விளங்குவேன்." யோபு 'என்னை சோதித்தபின் பொன்னாக காணப்படுவேன்” என்றோ, 'பொன்னைப்போல காணப்பட ஆசைப்படுகிறேன்” என்றும் சொல்லவில்லை. முழுமையான விசுவாசத்துடன், உறுதியான நம்பிக்கையுடன், “நான் பொன்னாக விளங்குவேன்" என்று அறிவித்தார். ஆனால் அது அவருக்கு எப்படித் தெரிந்தது? நமது இறுதி முடிவு ஆரோக்கியமானதாக இருக்கும் என்று எப்படி நாம் உறுதியாக நம்புவது? ஏனென்றால், தேவனுடைய நோக்கங்கள் ஒருபோதும் மாறாதாது: “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவார்" (பிலிப்பியர் 1:6). நமது இறுதியான முடிவு ஆரோக்கியமானதாக இருக்கும் என்று எப்படி உறுதியாக நம்புவது? தேவனுடைய வாக்குறுதி நம்பகமானது என்பதால் நாம் அந்த உறுதியைப் பெறலாம். “கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்” (சங்கீதம் 138:8). ஆகவே பாடுகளிலும் சோதனைகளிலும் கடந்து போகிறவர்களே, நீங்கள் சந்தோக்ஷப்படுங்கள். நீங்கள் கடந்து வரும் பாதை இனிமையற்றதாகவும், வலி நிறைந்ததாகவும் இருந்தாலும், முடிவு அழகானதாகவும் உறுதியானதாகவும் இருக்கப்போகிறது.
“நான் பொன்னாக விளங்குவேன்." இந்த வார்த்தைகள் வலியையும், துக்கத்தையும் நன்கு அறிந்த ஒருவரால் சொல்லப்பட்டவை. ஆனால் இந்த அக்கினி சோதனையின் வாயிலாக நடந்து கொண்டிருக்கும்போது கூட, எல்லாமே நேர்மறையான முடிவுக்கு வழிவகுக்கும் என்று அவர் நம்புகிறார். அத்தகைய வெற்றி முழக்கம் நம்முடைதாகட்டும். “நான் பொன்னாக விளங்குவேன்" என்பது மாம்சீகமான வீண்பெருமை அல்ல, ஆனால் தேவனைப் பற்றி உறுதியுடன் இருக்கும் மனதில் இருந்து வெளிப்படும் நம்பிக்கையின் வார்த்தைகளே. இதில் பெருமை பாராட்ட நமக்கு ஒன்றும் இல்லை – சகல மகிமையும் நம்மைப் பொன் போல ஆக்கும் தெய்வீக சுத்திகரிப்பாளருக்கே உரியது (யாக்கோபு 1:12).
இப்போது நமக்கு முன்பாக இரண்டு மையக்கருத்துக்கள் உள்ளன. முதலாவதாக, நாம் தீவிரமான சோதனையின் உலைக்குள் இருக்கும் போது, அன்பு நம் சகிப்புத்தன்மையை அளவிடும். “அவர்; வெள்ளியைப் புடமிட்டுச் சுத்தகரிப்பவர்போல அமர்ந்திருப்பார் (தேவகிருபையின் பொறுமை).” (மல்கியா 3:3). இரண்டாவதாக, அக்கினி சூளையில் மூன்று எபிரேய வாலிபர்களுடன் தேவன் இருந்தது போல், நம் சோதனையின் சூளையிலும் தேவன் நம்மோடும் இருப்பார் (தானியேல் 3:25). நம் எதிர்காலம் உறுதியானது: பரலோகத்தில் மிகவும் அதிசயமாய் இருப்பது தங்கத்தின் தெருவோ, தங்கத்தால் செய்யப்பட்ட இசைக் கருவிகளாகவோ அல்ல, ஆனால் தேவனின் சாயல் பொறிக்கப்பட்ட பொன்னான ஆத்துமாக்களாக – அதாவது, தம்முடைய குமாரனின் சாயலுக்கு ஒப்பாயிருக்க முன்குறிக்கப்பட்ட ஆத்துமாக்கள் (ரோமர் 8:29)! அத்தகைய மகிமையான எதிர்காலத்திற்காக, வெற்றிகரமான முடிவிற்காக, மற்றும் அழகான இலக்கிற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாகட்டும்.
“கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே” (எபிரெயர் 12:5).
தேவனுடைய சிட்சைக்கும் தண்டனைக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்வது மிக அவசியம். இந்த வேறுபாட்டை உணர்ந்துகொள்வது தேவமகிமையையும், கனத்தையும் நிலைநிறுத்துவதற்கும், கிறிஸ்தவனின் உள்ளான சமாதானத்திற்கும் இன்றியமையாதது. இந்த வேற்றுமை மிகவும் எளியது என்றாலும் அது நம் கண்களுக்கு மறைவாகி விடுகிறது. தேவனுடைய மக்கள் தங்கள் பாவத்திற்காக தண்டிக்கப்படுவது ஒருபோதும் சாத்தியமில்லை. ஏனெனில் அவர்களின் பாவங்கள் ஏற்கனவே சிலுவையில் தண்டிக்கப்பட்டுள்ளன. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய இடத்தில் நம்முடைய பாவங்களுக்கான முழு தண்டனையையும் ஏற்றுக்கொண்டார். அதனால்தான், “அவருடைய குமாரனாகிய இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்" (1யோவான் 1:7) என்று எழுதப்பட்டுள்ளது. தேவனின் நீதியும், அன்பும், கிறிஸ்து செலுத்திய முழு விலையையும் மீண்டும் நம் மீது விதிக்க அனுமதிக்காது. ஆனால் தண்டனைக்கும் சிட்சைக்கும் உள்ள வித்தியாசம ஒருவர் அனுபவிக்கும் துன்பங்களின் இயல்பில் இருப்பதில்லை. இதை நினைவில் கொள்வது மிகவும் அவசியம். இவை இரண்டுக்கும் மூன்று வித்தியாசங்கள் உள்ளன. முதலில் தேவன் செயல்படும் அடிப்படைகள். முதலாவதில், தேவன் நியாயாதிபதியாகச் செயல்படுகிறார். ஆனால் இரண்டாவதில் தந்தையாகவே செயல்படுகிறார். குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகு, தண்டனைத் தீர்ப்பை அறிவிப்பது நீதிபதியின் வேலை. தேவனுடைய பிள்ளைகள் மீது அத்தகைய தண்டனைக்கு உரிய தீர்ப்புக்கு உட்படமாட்டார்கள். ஏனெனில் அவர்களுடைய பாவம் கிறிஸ்துவின் மீது சுமத்தப்பட்டது. “அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்” (1 பேதுரு 2:24).
எனவே, ஒரு விசுவாசி தன் பாவத்திற்காக தண்டிக்கப்படுவதில்லை என்பது உண்மைதான் என்றாலும், ஒரு கிறிஸ்தவனுக்கு மேலும் தண்டனை இல்லை (ரோமர் 8:3) என்பது உண்மைதான் என்றாலும் அவன் தேவனால் கண்டிக்கப் படுகிறான். கிறிஸ்தவன் கிறிஸ்தவன் அல்லாதவனிலிருந்து முற்றிலும் மாறான நிலையில் இருக்கிறான். அவன் தேவனின் குடும்பத்தைச் சேர்ந்தவன். தேவனுக்கும் அவனுக்கும் உள்ள உறவு தந்தைக்கும் குமாரனுக்கும் உள்ள உறவைப் போன்றது. எனவே குமாரன் என்ற முறையில் ஒழுங்கில்லாமல் நடக்கும்போது அவன் சிட்சிக்கப்பட வேண்டும். தேவனின் ஒவ்வொரு பிள்ளைகளின் இருதயங்களுக்குள்ளும் மதியீனம் ஒட்டிக்கொண்டிருக்கும், அவைகளை சரிசெய்யும்படி கண்டிப்பதும், கீழ்ப்படுத்துவதும் தாழ்மைப்படுத்துவதும் மிகவும் அவசியமாகிறது.
இரண்டாவதாக, தண்டனைக்கும், ஒழுங்குபடுத்துதலுக்கும் உள்ள வேறுபாடு, அவற்றை யார் பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்தது. தண்டனையைப் பெறுகிறவர்கள் தேவனுடைய எதிராளிகள். சிட்சையைப் பெறுவது அவருடைய பிள்ளைகள். முழு உலகத்தின் நியாயாதிபதியாக, தேவன் இனி வருங்காலத்தில் தம் எதிரிகள் மேல் பழிவாங்குவார். தமது குடும்பத்தின் தகப்பனாக, தேவன் தம் பிள்ளைகளின் ஒழுக்கத்தைப் பராமரிக்கிறார். ஒன்று தீர்ப்புக்குரிய சட்டம் சார்ந்தது, மற்றொன்று தகப்பன் தன் பிள்ளைகளை வளர்ப்பதின் காண்பிக்கும் ஒழுக்கம் சார்ந்தது.
மூன்றாவதாக, இரண்டிற்கும் இடையிலான வேறுபாடு அவற்றின் நோக்கத்தில் காணப்படுகிறது. ஒன்று பழிவாங்குதல் மற்றொன்று சரிசெய்தல். ஒன்று தேவனின் கோபத்தால் உண்டானது. மற்றொன்று அவருடைய அளவற்ற அன்பினால் உண்டாகிறது. தேவனின் தண்டனை என்பது பாவிகளின் நன்மைக்காக ஒருபோதும் விதிக்கப்படவில்லை, ஆனால் தேவனின் நியாயபிரமாணத்தை மகிமைப்படுத்தவும் அவரது ஆளுகையை நியாயப்படுத்தவும் அனுப்பப்படுகிறது. ஆனால் தேவனின் சிட்சை அல்லது கண்டிப்பு, அவரது பிள்ளைகளின் நலனுக்காக அனுப்பப்படுகிறது. “அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா? அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள். இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்." (எபிரேயர் 12:9,10).
மேலே காட்டப்பட்டுள்ள வேறுபாடுகள், தெய்வீக தண்டனை மற்றும் தெய்வீக ஒழுக்கத்தை ஒன்றாகக் கருதும் கிறிஸ்தவர்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை உணர எச்சரிப்பதாகும். ஒரு விசுவாசி தெய்வீக ஒழுக்கத்தினால் நடத்தப்படும்போது, தன்னை தேவன் தன்னை தண்டிக்கிறார் என்று நினைப்பது தவறு. அப்படி நினைப்பது இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தத்தை அவமதிப்பதாகும். தேவன் தம்முடைய அன்பினால் உங்களைத் ஒழுங்குப்படுத்துகிறார், கோபத்தால் உங்களை அழித்துவிடவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்தக் கிறிஸ்தவனும் இந்தச் சிட்சையைத் தவிர்க்க முடியாத தீமையாக, சுமக்க வேண்டிய சுமையாகக் கருதலாகாது. மாறாக தேவனுடைய நன்மையிலும் உண்மையிலும் இருந்து இது வருவதால், இந்தப் பெரிய ஆசீர்வாதத்திற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். தேவனால் ஒழுக்கத்துடனும், கண்டிப்புடனும் நடத்தப்படுவது நாம் அவருடைய பிள்ளைகள் என்பதற்கு சான்றாகும். எந்தத் தந்தையும் தன் குடும்பத்தவர் அல்லாத ஒருவரைக் கண்டிப்பதில்லை. அவர் தனது வீட்டாரை நேர்மையான பாதையில் நடப்பதற்கே ஒழுங்குபடுத்துகிறார். தெய்வீக ஒழுக்கம் நம் நன்மைக்காகவும் நமக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கவே அனுமதிக்கப்படுகிறது. எனவே, ஒழுங்குபடுத்தும் தடியைத் தாண்டி, அதைக் கையாளும் சர்வஞானியாகிய தேவனுடைய கரத்தைப் பார்க்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த நிருபத்தைப் பெற்றுக்கொண்ட அந்த எபிரெயக் கிறிஸ்தவர்கள் அந்த நேரத்தில் பெரும் சோதனைகளையும், இன்னல்களையும் அனுபவித்தனர். அவர்கள் இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் போதும், பின்னர் அப்போஸ்தலர்களின் ஊழியத்தின் மூலமாகவும்; மேசியாவை விசுவாசிக்க யூதர்கள் மத்தியில் இருந்து வழிநடத்தப்பட்ட மீதியானவர்களான சிறுகூட்டத்தார்;. அந்த நேரத்தில் மேசியாவின் இராஜ்ஜியம் விரைவில் ஸ்தாபிக்கப்பட்டு இந்த பூமியின் மீது ஆட்சி அமைக்கப்படும் என்றும் அவர்கள் அந்த ராஜ்யத்தின் மிக உயர்ந்த பதவிகளை வகிக்க முடியும் என்றும் நினைத்திருக்கலாம். ஆனால் ஆயிர வருட அரசாட்சி இன்னமும் வரவில்லை. மேலும் அவர்கள் பல கசப்பான அனுபவங்களைச் சந்திக்க நேரிட்டது. இவர்கள் புறஜாதிகளால் வெறுக்கப்பட்டது மட்டுமல்லாமல், விசுவாசிக்காத தங்களுடைய சொந்த மக்களாலும் ஒதுக்கி வைக்கப்பட்டனர். இதனால் அவர்கள் இயல்பு வாழ்க்கை நடத்துவது கூட மிக கடினமாகிவிட்டது. தேவனுடைய திட்டம் அகோர முகமுடையதாய்த் தோன்றியது. கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட அநேகர் யூதமார்க்கத்திற்குத் திரும்பச் செல்ல விழைந்து, அதில் கொஞ்சக்காலம் செழிப்பையும் அனுபவித்தனர். விசுவாசமுள்ள யூதர்களின் உபத்திரவம் அதிகமடையத் துவங்கியபோது, அவர்களும் விசுவாசத்தை விட்டுப் பின்வாங்க சோதிக்கப்பட்டார்கள். கிறிஸ்தவத்தைத் தழுவியது அவர்களுடைய தவறா? நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவைப் பற்றிக்கொண்டதால் அவர்கள் மீது பரலோகம் கோபப்பட்டதா? அவர்கள் துன்பம் தேவன் அவர்கள் மீது தயவுள்ளவராக இல்லை என்பதின் அறிகுறியாகத் தெரிகிறது அல்லவா?
தங்கள் அவிசுவாசமுள்ள இருதயங்களின் சிந்தை உடையவர்களாகிய மக்களை அப்போஸ்தலன் கையாண்டவிதம் நமக்கு போதனை தரக்கூடியதாகவும், ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்றாகவும் உள்ளது. அவர்களுடைய வேதங்களிலிருந்து அவர்களுக்குப் பதிலைக் கொண்டு வருகிறார். நீதிமொழிகளில் வரும் எச்சரிப்பை அவர்களுக்கு ஞாபகப்படுத்தி, அவர்களுடைய சூழலுக்குள் பொருத்துகிறார். முதலில் நாம் குறிப்பிடும் வசனத்தைக் கவனியுங்கள்: “உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்” (எபிரெயர் 12:5). பழைய ஏற்பாடில் உள்ள புத்திமதிகள் பழைய உடன்படிக்கைக் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே சுருக்கலாகாது என்பதை இது நமக்குக் காட்டுகிறது: அவை புதிய உடன்படிக்கையின் காலத்தில் வாழ்கிற நமக்கும் அதே வலிமையுடனும் நேரடியாகவும் பொருந்துகின்றன. “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. அது நமக்குப் பிரயோஜனமுள்ளது” (2 தீமோத்தேயு 3:16) என்பதை நாம் மறந்து விடாதிருப்போமாக. பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடு போலவே நமது போதனைக்காகவும்;, எச்சரிப்புக்காகவும் கொடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, நமது வேதபகுதியில் உள்ள வார்த்தையின் காலத்தைக் கவனியுங்கள் “உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.” அப்போஸ்தலர் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்ட தேவனின் வார்த்தையைப் பற்றி பேசுகிறார். என்றாலும் இவ்வாறு பேசியிருக்கிறார் என்று எழுதாமல், இவ்வாறு பேசுகிறார் என்று எழுதுகிறார். இதே நியமம் ஏழு முறை வெளிப்படுத்தல் இரண்டாம் மற்றும் மூன்றாம் அதிகாரத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது: “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.” இந்த வசனங்களில் ஆவியானவர் சொல்லிய வார்த்தை என்று இல்லாமல், சொல்லுகிற வார்த்தை என்று பயன்படுத்தியிருப்பதைக் கவனியுங்கள். பரிசுத்த வேத வார்த்தைகள் இன்றும் பேசுகிற தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தையாக இருக்கிறது.
இப்போது நம் வேதபகுதியில் உள்ள “மறந்தீர்கள்" என்ற வார்த்தையைக் கவனிப்போம். நீதிமொழிகள் 3:11,12 வசனங்களில் உள்ள எச்சரிப்பை அன்றைய எபிரேய கிறிஸ்தவர்கள் அறியவில்லை என்று அர்த்தமல்ல, மாறாக அவர்கள் அதை தங்கள் கவனத்தில் இருந்து வழுவிப்போக விட்டுவிட்டார்கள். அவர்கள் தேவனுடைய தகப்பன் பண்பையும், பிள்ளைகளாக அவருடன் இருந்த உறவையும் மறந்துவிட்டார்கள். அதன் விளைவாக தேவன் அவர்களை நடத்தும் முறையையும், நோக்கத்தையும் தவறாகப் புரிந்துகொண்டார்கள். தங்களை வழிநடத்தும் விதத்தில் தேவனுடைய அன்பைப் பாராமல், தங்கள் வாழ்வுச் சூழல்கள் தேவனுக்கு அவர்கள்மீது வெறுப்பு இருப்பதையே காண்பிக்கிறது என்று தப்பெண்ணம் கொண்டார்கள். இதன் காரணமாக, அவர்கள் தங்களைத் தாங்களே மகிழ்ச்சியுடன் தேவனுக்கு அர்ப்பணிப்பதற்குப் பதிலாக, விரக்தியையும் நம்பிக்கையற்ற தன்மையையும் காட்டினார்கள். இங்கே நமக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கை உள்ளது. தேவன் தமது திட்டப்படி நம்முடன் இடைப்படும் வழிகளை நம்முடைய சொந்த அறிவால் உற்று நோக்காமல், தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும். “என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே” (நீதி 3:11) என்று பிள்ளைகளிடம் பேசுவது போல நம்மிடம் பேசும் இந்த எச்சரிக்கையை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம் அல்லவா!
இந்த வேதபகுதியில் ‘சிட்சை’ என்கிற வார்த்தைக்கு கிரேக்க மொழியில் “பைடியா’ என்கிற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் வரும் “பைடியோன்” என்கிற வார்த்தை இளம் பிள்ளைகளைக் குறிக்கிறதாக உள்ளது. இது போன்ற வார்த்தை உபயோகத்தை யோவான் 21:5 மற்றும் எபிரேயர் 2:13 ஆகிய பகுதிகளிலும் காணமுடிகிறது. இந்த வார்த்தை பிள்ளைகளுடன் கையாளும் ஒரு மென்மையான வழிமுறையைக் குறிக்கிறது. சீடனையும் நீதிநெறிக் கல்வியையும் பிரித்துப்பார்க்க முடியாததுபோல, கிரேக்க மொழியில் “ஒழுக்கம் மற்றும் குமாரன்கள்" என்ற வார்த்தைகள் பிரிக்க முடியாதவை. அதே வேளையில் பிள்ளை வளர்ப்பு என்பது மென்மையான ஒன்று. எனவே இங்கே பயன்படுத்தும் வார்த்தை தம் மக்களுக்குத் தேவன் தரும் படிப்பினை, வளர்ப்பு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையவை. எனவே இங்கு பயிற்சி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது மிகவும் நியாயமானது. இது ஒரு தந்தை தனது பிள்ளைகளை அன்புடனும் ஞர்னமுடனும் திருத்துவது போன்ற காட்சியை வெளிப்படுத்துகிறது.
பெரும்பாலும் குமாரனை திருத்தம் செய்ய கையில் ஒரு பெரம்பு தேவைப்படும். ஆனால் நம் எண்ணங்களை இந்த அம்சத்திற்குள் மட்டுப்படுத்துவது மிகப்பெரிய தவறு. ஒவ்வொரு முறையும் ஒழுக்கம் என்பது தவறு செய்த தனது பிள்ளைகளுக்கு தேவன் திருத்துவதற்காக கொடுக்கும் அடியாக பார்க்கக்கூடாது. தேவனின் பரிசுத்தமான மக்களும், தேவனுக்கு மிகவும் கீழ்ப்படிதலுள்ள பிள்ளைகளும் கூட பல முறை துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள், இன்னும் அனுபவிக்கிறார்கள், பல நேரங்களில் தேவன் நம்மைத் திருத்துவதற்காக துன்பத்தை நாம் வாழ்வில் அனுமதிக்கிறார், தண்டிக்கும்படியாக அல்ல. சுயநீதி மற்றும் தன்னிறைவு ஆகியவற்றிலிருந்து நம்மை வெறுமையாக்குவதற்கும், நமது மீறல்களையும், நம் இதயத்தின் கொடிய நோயையும் வெளிப்படுத்தவும் அவை அனுப்பப்படுகின்றன. சில சமயங்களில் நம்மை ஆவிக்குரிய ரீதியில் பலப்படுத்துவதற்காக இப்படிப்பட்ட துன்பங்கள் அனுப்பப்படுகின்றன. அனுபவத்தில், வளர்வதற்கும் பயனுள்ள நிலைக்கு வளரவும் அவை நமக்கு உதவுகின்றன. அதுமட்டுமின்றி, நாம் செய்யும் சேவையில் வரும் வெற்றியால் நாம் கர்வப்படாமல் இருக்க நமது வாழ்வில் வீழ்ச்சியைத் தடுக்கும் விதமாக இந்தச் சிட்சை உதவுகிறது. இங்கே நான்கு உதாரணங்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
மேற்கண்ட சிட்சைகளின் வித்தியாசமான நோக்கங்களுக்காக, அதாவது அவை ஒழுக்கத்திற்காகவும், சீர்திருத்துதலுக்காகவும், கற்றுக்கொள்வதற்காகவும், நமது தற்காப்பிற்காகவும் தரப்படுவதை நாம் விளங்குவது அவசியம். நாம் துன்பத்திற்கான காரணத்தைக் கண்டறிவதிலும், பிறருடைய துன்பங்களைக் குறித்து தீர்ப்பிடுவதிலும் எத்துனை பலவீனராகவும், மதிகேடராகவும் செயல்பட்டு விடுகிறோம் பாருங்கள்! நம்முடைய சக கிறிஸ்தவன் தெய்வீகப் பிரம்பின் கீழ் இருக்கும்போது அவருடைய பாவங்களுக்காகவே; தண்டிக்கப்படுகிறார் என்று முடிவு கட்டாதிருப்போமாக. அடுத்த அத்தியாயத்தில் தேவசிட்சையை எந்த மனப்பாண்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி சிந்திப்போம்.
“அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.” (எபிரெயர் 12:5).
தேவனுடைய சிட்சை எல்லாருக்கும் பரிசுத்தமானதாகத் தோன்றுவதில்லை. அவைகளால் சிலர் கடினப்படுகிறார்கள். மற்றவர்கள் அதன் கீழ் நொறுக்கப்படுகிறார்கள். துன்பங்களை நாம் எதிர்கொள்ளும் மனப்பான்மையைப் பொறுத்தே அதன் விளைவு செயல்படுகிறது. சோதனைகளிலும் துன்பங்களிலும் உள்ளார்ந்த நன்மை எதுவும் இல்லை. அவைகள் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதால் மட்டுமே நாம் பயனடைய முடிகிறது. எபிரெயர் 12:11 தெளிவுபடுத்துவது போல், “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோக்ஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும். ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.” நமக்குத் தேவையானது மென்மையான மனசாட்சியும் மென்மையான இதயமும் மட்டுமே.
இந்த வேதபகுதியில் கிறிஸ்தவன் இரண்டு ஆபத்துகளைக் குறித்து எச்சரிக்கப்படுகிறான். இந்த இரண்டு ஆபத்தான மனோபாவங்களில் மிகவும் கவனமாக இருங்கள். அவைகள் “அற்பமாக எண்ணாதே" மற்றும் “சோர்ந்து போகாதே" என்பதே. இந்த இரண்டு உச்சங்களையும் தவிர்த்து சமநிலையோடிருக்க வேண்டியது அவசியம். வேதத்தில் உள்ள ஒவ்வொரு சத்தியத்தையும் அதை சமநிலைப்படுத்தும் வெவ்வேறு பக்கங்களைக் கொண்டிருப்பது போல, ஒவ்வொரு தீமைக்கும் எதிர்வினையும் இருக்கிறது. ஒருபுறம், ஒழுக்கத்தின் தடியை இழிவுபடுத்தும் அகந்தையுள்ள இதயத்தால் உங்களைத் தாழ்த்திக் கொள்ள விருப்பமில்லாத மனநிலை. மறுபக்கம் முற்றிலும் மூழ்கடிக்கச் செய்கிற சோர்புக்குள்ளாக்கி விரக்தியடையச் செய்யும் மனநிலை. “நீதியின் பாதை இரண்டு பிழையான மலைகளுக்கு இடையே உள்ள ஒரு குறுகிய பாதை, இந்த குறுகிய பள்ளத்தாக்கு வழியாக நடந்து அதன் இலக்கை அடைவதே கிறிஸ்தவ வாழ்வின் இரகசியம்” என்கிறார் சார்லஸ் ஸ்பர்ஜன்.
கிறிஸ்தவர்கள் பல வழிகளில் தேவனின் சிட்சையை “வெறுக்கிறார்கள்". அவைகளில் நான்கை நாம் குறிப்பிடுவோம்:
அ) அக்கறையின்மை. அக்கறையின்மை என்பது மனுக்ஷீக ஞானத்தின் கொள்கை – மோசமான வேலையைச் சிறப்பாக்கும் தன்மை. உலக மனிதன் தன் சுயபெலத்தைச் சார்ந்து துணிச்சலுடன் முன்னேற விரும்புகிறான். அவன் தெய்வீக தேற்றளவாளர், ஆலோசனை கர்த்தர், மற்றும் பரம வைத்தியனாகிய கர்த்தருடைய உதவியின்றி, தனக்கு இருக்கும் அற்பமான வளங்களையே சாரவேண்டி உள்ளது. தேவனுடைய பிள்ளைகளும் சாத்தானின் பிள்ளைகள் போல் நடந்துகொள்வது சொல்ல முடியாத வருத்தத்தை தருகிறது. பாதகமான சூழ்நிலைகளில் விலகிச் செல்லும் ஒரு கிறிஸ்தவன் தேவனின் கண்டிப்பை வெறுக்கிறவனாக இருக்கிறான். இருதயத்தை கடினப்படுத்துவதை விட நொறுங்குண்ட நருங்குண்ட இருதயத்தை உடையவானாக இருப்பது மேன்மை.
ஆ) புகார் செய்வதன் மூலம். எபிரேயர்கள் வனாந்தரத்தில் செய்தது இதுதான். இன்றும் இவ்வாறு செய்பவர்கள் விசுவாச சமூகத்தில் பலர் இருக்கிறார்கள். நம்மில் சிலருக்கு உடல்நல குறைவு ஏற்ப்பட்டால் நம்முடைய நண்பர்கள் கூட நெருங்கி வருவதைத் தவிர்க்கும் அளவிற்கு அவர்களுக்குத் தொந்தரவாக மாறிவிடுகிறோம். சில நாட்களாக உடல்நல குறைவு ஏற்பட்டதும், நுகத்துக்குப் பழக்கப்படாத காளையைப் போல முணுமுணுக்கிறோம். நம்மை விட குறைவான பாரத்தை சுமப்பவர்களை பொறாமையுடன் பார்த்து விரக்தியடைகிறோம், இவையெல்லாம் அனுபவிக்க நான் என்ன பாவம் செய்தேன்? என்பதான கேள்வியை கேட்ப்போம். வாசகரே! எச்சரிக்கை! முறுமுறுப்பவர்களுக்கு ஐயோ! முதல்முறை நாம் நம்மை தாழ்த்திக் கொள்ளாவிட்டால், இரண்டாவது முறை தேவன் நம்மை கண்டித்து ஒழுங்குபடுத்துவார். ஆபரணத்தில் இன்னும் எவ்வளவு அழுக்கு உள்ளது என்பதை உனக்கு நீயே நினைவூட்டிக்கொள். உன் இருதயத்தின் அக்கிரமத்தைக் கண்டு, தேவன் உன்னை இரட்டிப்பாக தண்டியாமல் போனதைக் குறித்து ஆச்சரியப்படு. “என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே"
இ) விமர்சனங்களின் மூலம். நாம் அடிக்கடி கடிந்துகொள்ளுதலின் பலனைக் கேள்வி கேட்கிறோம். நாம் கிறிஸ்தவர்களாக இருப்பதால் நாம் இரட்சிக்கப்படாத காலத்தில் இருந்ததைவிட இப்போது அதிக ஞானமுடன் செயல்படும் திறன் நமக்கு இருக்கிறது. சிறு குழந்தைகளாக இருந்தபோது வீட்டில் பிரம்பு தேவையில்லாத ஒன்றாக நினைக்கிறோம். தேவனின் பிள்ளைகள் அடிக்கடி இப்படித்தான் நினைக்கிறார்கள். எல்லாம் அனுகூலமாக நடக்கும்போது, எதிர்பாராத சில ஆசீர்வாதங்கள் நம்மீது பொழியும் போது, அவற்றைக் தேவனின் கருணை என்று சொல்லுவதில் நமக்குச் சிரமம் இல்லை, ஆனால் நம்முடைய எண்ணங்கள் முறியடிக்கப்படும் போதோ அல்லது நட்டத்தை சந்திக்க நேரிடும்போதோ, நம் சிந்தனை முற்றிலும் மாறுபடுகிறது. ஆனால், “ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்துத் தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே. கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்” (ஏசாயா 45:7) என்று எழுதப்படவில்லையா?
படைப்பாளியிடம் “என்னை ஏன் இப்படி படைத்தாய்?" என்று எத்துனை முறை படைப்பு கேள்விகேட்கிறது? இது என் ஆத்துமாவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று பார்க்க முடியவில்லையே என்று நாம் கேட்கிறோம். ஒருவேளை நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால், நான் அடிக்கடி ஜெப ஆலயத்திற்குச் சென்றிருப்பேன் வியாபாரத்தில் நக்ஷ்டம் ஏற்படாமல் இருந்தால், தேவனுடைய ஊழியத்திற்குக் கொடுக்கும்படி அதிக பணம் இருந்திருக்கும்! இந்த இக்கட்டினால் எனக்கு என்ன நன்மை நடக்கப்போகிறது என்கிறோம். யாக்கோப்பை போல அனைத்தும் நமக்கு விரோதமாக இருக்கிறது என்று ஆச்சரியப்படுகிறோம் (ஆதியாகமம் 42:36). இது தேவனின் கண்டித்தலை அலட்சியப்படுத்துதே அல்லாமல் வேறில்லை. உன்னுடைய அறியாமை தேவனுக்கு சவால் விடலாமா? உன்னுடைய குறுகிய பார்வையால் தேவனுடைய அநந்த ஞானத்தைக் கேள்வி கேட்கலாமா?
ஈ) கவனக்குறைவு மூலம் பலர் தங்களுடைய வழிகளை சரிசெய்துகொள்ள விரும்புவதில்லை. நமது வேதபகுதி தரும் எச்சரிக்கை நம் அனைவருக்கும் தேவை. தேவனின் கண்டிப்பை இகழ்வோர் பலர் உள்ளனர். அதனால் அவர்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. எத்தனையோ கிறிஸ்தவர்கள் தேவனால் திருத்தப்பட்டாலும் அது வீணாகி விடுகிறது. நோய்கள், தீமைகள் மற்றும் இழப்புகள் பலவற்றை நடந்தாலும் ஜெபத்தோடு சுயபரிசோதனை செய்ய அவர்கள் முன்வருவதில்லை. சகோதரியே, சகோதரனே, கவனமாய் இருங்கள்! தேவன் உங்களைக் கடிந்துகொண்டால், “உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள்" (ஆகாய் 1:5), “உங்கள் கால்நடையைச் சீர்தூக்கிப்பாருங்கள்" (நீதிமொழிகள் 4:26). தேவன் கடிந்துகொள்வதற்கு தக்க காரணம் உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். பல கிறிஸ்தவர்கள் தங்கள் கண்டிக்கபடுவதிற்கான காரணத்தை கவனமாக ஆராய்ந்திருந்தால், தங்கள் துன்பங்களில் பாதி அளவு தீவிரத்தைத் தவிர்த்திருப்பார்கள்.
தேவனின் கண்டிப்பை வெறுக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்ட பிறகு, தேவனின் கடிந்து கொள்ளுதலைக் குறித்து விரக்தியடைய வேண்டாம் என்று நாம் இப்போது புத்திமதி பெறுகிறோம். குறைந்தபட்சம் மூன்று வழிகளில் தேவனின் கடிந்துகொள்ளுதலால் கிறிஸ்தவன் சோர்வடைகிறான்.
அ) தன் எல்லா முயற்சிகளையும் கைவிடும்போது. விரக்தியில் மூழ்கும்போது இது நடக்கிறது. இது தன்னால் தாங்கிக்கொள்ள முடியாதது என்று அதில் சிக்கியவர் அடிக்கடி உணர்கிறார். அவர் இருதயம் கலங்குகிறது, இருள் அவரைச் சூழ்ந்துள்ளது. எதிர்பார்ப்யின் சூரியன் மறையும்போது, நன்றிக் குரல் மௌனமாகிறது. 'மனச்சோர்வு' என்பது நம் கடமையைச் செய்ய நம்மைச் சக்தியற்றவர்களாக ஆக்குவதற்குச் சமமாகும். ஒரு நபர் மயங்கிவிட்டால் அசைவற்று இருப்பார். எத்தனை கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வில் போராட்டம் வரும்போது மனச்சோர்வடைந்து தங்கள் போராட்டத்தை முற்றிலுமாக கைவிடுகிறார்கள்? துன்பப்படும் போது தேவனுடைய கரம் என் மீது பாரமாக இருக்கிறது, அதை எதிர்க்கொள்ள என்னால் எதுவும் செய்ய முடியாது என்று எத்தனை பேர் உணர்கிறார்கள்? பிரியமானவர்களே, நம்பிக்கையில்லாத மற்றவர்களைப்போல துக்கப்படாதிருங்கள் (1 தெசலோனிக்கேயர் 4:13). “அவரால் கடிந்துக் கொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே" (எபிரெயர் 12:5). தேவனிடம் அதை எடுத்துச் செல்லுங்கள்: அவருடைய கரத்தை அதில காண முயலுங்கள். உங்கள் துன்பங்களும்கூட உங்கள் நன்மைக்காகவே நடப்பதன் ஒரு பகுதிதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆ) அவருடைய குமாரத்துவத்தை கேள்விக்குட்படுத்தும் போது. தேவனுடைய பிரம்பு தங்கள் மீது வரும் போது தாங்கள் தேவனுடைய குமாரர்கள் அல்ல என்று முடிவுக்கு வருபவர்கள் கிறிஸ்தவர்களிடையே அதிகம் உள்ளனர். “நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்." (சங்கீதம் 34:19), “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும்" (அப்போஸ்தலர் 14:22) என்று எழுதப்பட்டிருப்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள், நான் தேவனுடைய பிள்ளை என்றால் எனக்கு ஏழ்மையும், துன்பங்களும் ஏன் வர வேண்டும் ஒருவர் கேட்கலாம்;. எபிரெயர் 12:8 சொல்வதைக் கவனியுங்கள்: “எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.” ஆகவே பரீட்சைகள் உங்களைச் சுத்தப்படுத்தி, தேவையற்றவைகளைக் களைந்து, தூய்ைமாக்கும் தேவனுடைய அன்பின் அச்சாரமாகப் பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். குடும்பத்தின் தந்தை தனது வீட்டிற்கு வெளியே உள்ளவர்களைப் பற்றி அதிகம் கவலைகொள்வதில்லை: மாறாக வீட்டில் உள்ளவர்களையே காப்பாற்றுவதிலும், நடத்துவதிலும், பராமரிக்கிறதிலும், தன் விருப்பத்தின்படி சரியாக வாழ்வதை உறுதிசெய்வதிலும் அக்கறையாக இருக்கிறார். தேவனும் அவ்வாறே கிரியை செய்கிறார்.
இ) அவர் ஏமாற்றமடையும் போது. சிலர் தங்கள் துன்பங்களிலிருந்து ஒருபோதும் வெளியே வர முடியாது என்று நினைக்கிறார்கள். நான் எவ்வளவுதான் ஜெபித்தாலும் எனக்கு நேரிடும் துன்பங்கள் என் வாழ்வில் இருந்து மறையவில்லை என்று சொல்கிறார்கள். விடியலுக்கு முன் அதிக இருளின் நேரம் இருக்கும் என்பதை அறிந்து நாம் ஆறுதல் அடைய வேண்டும். எனவே, தேவனின் கடிந்துகொள்ளுதலில் சோர்ந்து போகாதீர்கள். வேறு சிலர், அவருடைய வாக்கைப் பற்றிக்கொண்டு கெஞ்சினேன். ஆனாலும் இன்னும் என் நிலை சரியாகவில்லை. தம்மை நோக்கிப்பார்க்கிறவர்களை அவர் விடுவித்தார் என்று எண்ணினேன். ஆனால் நான் அழைத்தும் அவர் பதில் தரவில்லை. இனி எனக்குப் பதிலே கிடைக்காது என்றும் பயப்படுகிறேன் என்கிறார்கள். தேவனுடைய பிள்ளையே, உன் பிதாவைக் குறித்து இப்படிப் பேசுவதா! இவ்வளவு காலமாக என்னை தண்டித்துள்ளார் எனவே தேவன் என்னைத் தண்டிப்பதை நிறுத்தமாட்டார் என்கிறீர்கள். ஆனால் தேவன் என்னை நீண்ட காலம் கண்டிப்பதன் காரணம் நான் சீக்கிரத்தில் விடுதலையடைய வேண்டும் என்பதற்காகத் தான் என்று நீங்கள் சொல்ல வேண்டும். அலட்சியம் வேண்டாம், சோர்வும் வேண்டாம். தேவனுடைய கிருபை இந்த இரண்டு எதிர்துருவங்களில் இருந்து எழுத்தாளரையும், வாசகர்களையும் பாதுகாப்பாராக!
“கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு. யாக்கோபு அவருடைய சுதந்தரவீதம்." (உபாகமம் 32:9).
இந்த வசனம் மிகவும் ஆச்சரியமான சத்தியத்தை நம் முன் வைக்கிறது. அது எவ்வளவு ஆச்சரியமானது என்றால், இது எந்த மனித சிந்தனையிலிருந்தும் தோன்றாத விதமாக இருக்கிறது. சர்வவல்லமையுள்ள தேவனுக்கு ஒரு சந்ததி உள்ளது என்றும், அந்த சந்ததி அவருடைய மக்கள் என்றும் இந்த வசனம் நமக்கு தெரியப்படுத்துகிறது. அவர் இந்த உலகத்தை தனது சுதந்திரமாக்கிக்கொள்ள மறுத்துவிட்டார் - அது ஒரு நாளில் எரிந்து சாம்பலாகும். தேவ தூதர்களின் கூட்டங்களைக் கொண்ட பரலோகம் கூட அவரது இதயத்தைத் திருப்திப்படுத்தவில்லை. நித்தியத்தில் கர்த்தராகிய தேவன் எதிர்பார்ப்புடன் பேசிய வார்த்தைகள் “மனுமக்களுடனே மகிழ்ந்து கொண்டிருந்தேன்" என்பதே (நீதிமொழிகள் 8:31).
அவருடைய பரிசுத்தவான்கள் அவருடைய சுதந்தரம் என்று இந்த ஒரு வசனம் மட்டும் சொல்லவில்லை. “கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்." (சங்கீதம் 135:4) என்பதாக சங்கீதத்தில் வாசிக்கிறோம். தேவனாகிய கர்த்தர் தனக்காக யாக்கோபைத் தேர்ந்தெடுத்தார். அவர் இஸ்ரேலை தனது சொந்தப் பொக்கிக்ஷமாக நிறுவினார். மல்கியா 3:17ல் அவர்களைத் தன்னுடைய சம்பத்து என்று அழைக்கிறார். அவர்கள் தேவனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள் என்பதால் அவருடைய உன்னதமான அன்பு அவர்களுக்கு அருளப்படுவதுடன், அவர்களுக்காக பரலோகத்தில் தங்குமிடங்கள்கூடத் தயாராகி வருகின்றன!
இந்த அற்புதமான சத்தியம் புதிய ஏற்பாட்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எபேசியர் 1:18 ஐப் பார்க்கவும் “தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்; தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்” என்று அவர்களுக்காக வேண்டுவதை அப்போஸ்தலன் அறிவிக்கிறார். பரிசுத்தவான்கள் தேவனிடம் சுதந்திரம் பெறுவது மட்டுமல்லாமல், அவர்களுக்கான அந்தச் சுதந்தரத்தை அவரே உருவாக்கிப் பாதுகாக்கிறார். இது என்ன ஒரு ஆச்சரியமான வார்த்தை! அவர் எவ்வளவு மகத்தான தேவனாக இருந்தும் நம்முடைய விசுவாசம், அன்பு மற்றும் ஆராதனையின் மூலம் தம்மை மேலும் செல்வந்தராக கருதுவதற்குத் தேர்ந்தெடுக்கிறார். இது என்ன ஒரு அற்புதமான சிந்தனை! வேதத்தில் வெளிப்படுத்தப்பட்ட மிக அற்புதமான சத்தியத்தில் ஒன்று, ஒன்றுக்கும் வழியில்லாத பாவிகளைத் தெரிந்தெடுத்து அவர்களைத் தமக்குச் சுதந்தரமாக்குகிறார் நம் தேவன்!
ஆனால் தேவனுக்கு நம்முடைய தேவை என்ன இருக்கிறது? நாம் எவ்விதமாக அவரை செல்வந்தராக்க முடியும்? ஞானம், வல்லமை, கிருபை, மகத்துவம் இவை அனைத்தும் தேவனிடம் இருக்கிறது அல்லவா? ஆம் அது உண்மைதான் ஆனால் அவருக்கு தேவையானது வேறு ஒன்று இருக்கிறது. அவர் விரும்பும் பாத்திரங்கள். அதாவது சூரியன் பிரகாசிக்க பூமி தேவைப்படுவது போல, தேவனுக்கும் நிரப்பப்பட பாத்திரங்கள் தேவை. அவருடைய மகிமையைப் பிரதிபலிக்கும் பாத்திரங்கள், அவருடைய கிருபையின் ஐஸ்வரியத்தை ஊற்றக்கூடிய பாத்திரங்கள் அவருக்குத் தேவை.
தேவனுடைய மக்கள் அவருடைய “பங்கு", அவரது சிறப்பு “சொந்த பொக்கிக்ஷம்", அவரது “சொத்து" என்று அழைக்கப்படுவதைக் கவனியுங்கள். இது மூன்று காரியங்களைக் குறிக்கிறது. முதலாவதாக, சுதந்தரமானது மரணத்தின் வழியாகக் கிடைக்கிறது. அதுபோல தேவனுடைய சுதந்தரம் அவருடைய ஒரேபேறான குமாரனின் மரணத்தின் மூலம் நமக்குக் கிடைக்கிறது. இரண்டாவதாக, சுதந்திரம் ஒரு நபருக்கும் அவரது வாரிசுகளுக்கும் நிரந்தரமாக கிடைக்கிறது. மூன்றாவதாக, சுதந்திரம் ஒரு தனிநபருக்கு சொந்தமானது. அதில் பங்கு பெறவும், பயன்படுத்தவும், அனுபவிக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு. இப்போது தேவனின் சுதரந்தத்தைப் பற்றி ஐந்து விக்ஷயங்களைச் சிந்திப்போம்.
வெளிப்படுத்துதல் 21-ம் அதிகாரத்தில் நமக்கு முன் இருக்கும் பரலோகத்தின் காட்சி அற்புதமானது மற்றும் மகிமை வாய்ந்தது. “பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன். முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின. சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருக்ஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுக்ஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார். அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்” (வெளிப்படுத்தல் 21:1-3).
செப்பனியா 3:17-ல் உள்ள இந்த வார்த்தை ஆச்சரியமாக இருக்கிறது, “உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார், அவர் உன்னை மிகுந்த மகிழ்ச்சியுடன் இரட்சித்து, தம்முடைய அன்பினால் உன்னில் இளைப்பாறுவார். உன் மகிழ்ச்சியில் களிகூருகிறார்." “நான் திருப்தியாக இருக்கிறேன். இங்கே நான் என்றென்றும் வாழ்வேன், என் சந்ததியோடு நான் என்றென்றும் வாசம் செய்வேன். நான் இரட்சித்து மீட்டுக்கொண்ட பாவிகளின் மேல் என் மகிமையை ஊற்றுவேன்” என்று மாபெரும் தேவன் அறிவிக்கிறார். எனவே, சங்கீதக்காரனுடன் நாமும் இணைந்து “இந்த புரிதல் எனக்கு அப்பாற்பட்டது, இது எனக்குப் புலப்படாதது" என்று பாடலாம் (சங்கீதம் 139:6). தேவனுடைய கிருபை நாம் பெற்ற அழைப்புக்கு ஏற்ற விதமாக நடக்க நமக்கு உதவி செய்வதாக.
“பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார். அவனை நடத்தினார். அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்” (உபாகமம் 32:10).
தலைப்பு வசனத்திற்கு முன் உள்ள வசனம், “கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு. யாக்கோபு அவருடைய சுதந்தரவீதம்" என்று கூறுகிறது. இந்த உண்மை தவறாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது என்பதற்காக அடுத்த வசனத்தில் வேறு விதமாகக் கூறப்பட்டிருக்கிறது. “யாக்கோபு அவருடைய சுதந்தரவீதம்" இந்த வேதபகுதியில், தேவன் தம்முடைய சுதந்திரத்தைத் தனதாக்குவதற்காக எடுத்த முயற்சியைப் பற்றி நாம் கற்றுக்கொள்கிறோம். இதில் நாம் கவனித்து, ஆனந்தப்படக் கூடிய நான்கு விக்ஷயங்கள் இருக்கிறது.
“அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார்” “கண்டுபிடித்தார்" என்ற வார்த்தையில், தேடுதல் என்ற அர்த்தம் இருக்கிறது என்று சொல்ல தேவையில்லை, இங்கே நமது கண்களுக்கு முன்பாக நம்மைத் தேடுகிற தேவனைக் குறித்த ஆச்சரியமான காட்சியை சமர்ப்பிக்கிறோம். படைத்தவருக்கும் மனிதனுக்கும் இடையில் வந்த பாவம் பிரிவினையையும் தூரமாகுதலையும் கொண்டு வந்தது. வீழ்ச்சியின் விளைவாக, உலகில் நுழையும் ஒவ்வொரு மனிதனும் “தேவனுக்கு எதிரான பகை" உள்ள மனநிலையில் இருக்கிறான். இதன் விளைவாக தேவனை தேடுபவர்கள் இல்லை. எனவே தேவன் அதிசயமான முறையில் தம்மைத் தாழ்த்தி, தம்முடைய தனித்துவமான அன்பினாலும் கிருபையினாலும் மனிதனைத் தேடுகிறவராகிறார்.
“கண்டறிதல்" என்ற சொல் தேடுவதை மட்டுமல்ல, தேடப்பட்டவரின் தகுதியற்ற தன்மையையும் பாவத்தையும் கருத்தில் கொண்டு, தேடுபவரின் அன்பையும் குறிக்கிறது, மாபெரும் தேவன் தனது மகாமேன்மையான தயவுக்கு முன்குறிக்கப்பட்டவர்கள் அவரது கிருபையைப் பெற வேண்டும் என்பதற்காக அவர்களைத் தேடும்படி தனது மனதைச் செலுத்தி, அவர்களைத் தேடுபவரானார். தேவன் ஆபிரகாமின் மீது தனது மனதை வைத்தார், ஆகையால் தான் ஊர் என்ற கல்தேயரின் தேசத்தில் விக்கிரக ஆராதனை செய்யும் மக்களிடையே அவரை கண்டறிந்தார். தேவன் யாக்கோபின் மீது தனது மனதை வைத்தார். யாக்கோபு தனது சகோதரனுக்கு பயந்து போகையில் நிலத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது யாக்கோபைக் கண்டார். அதுபோலவே மோசேயை நித்திய அன்பால் நேசித்தபடியால் மீதியான் வனாந்தரத்தில், மோசேயைக் கண்டறிந்தார் (யாத்திராகமம் 3:1). இதே விதமாக உலகில் உள்ள ஒவ்வொரு உண்மையான கிறிஸ்தவனையும் அந்த அன்பு தேடி கண்டுக்கொள்கிறது. “என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன், என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன்" (ரோமர் 10:20).
தேவன் உன்னை கண்டுபிடித்தாரா? இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், நமது வேதபகுதியின் முதல் பகுதியில் சொல்லப்பட்டிருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். “பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார்" உனக்கு இந்த உலகம் அவ்விதமாக தோன்றுகிறதா? சூரியனுக்கு கீழே அனைத்தும் வருத்தத்தை தரக்கூடியதாக இருக்கிறதா? ஒவ்வொரு நாளும், இந்த உலகம் உங்களுக்குப் பாரமானதாகத் தோன்றுகிறதா? உலகத்தில் உங்கள் இருதயங்களைத் திருப்தி செய்யும் காரியம் ஒன்றுமில்லை, உங்களுக்குப் பயனுள்ள சேவை செய்ய ஒன்றுமில்லை என்று கண்டிருக்கிறீர்களா? இந்த உலகம் உங்களுக்கு உண்மையாகவே பாழான நிலத்தை போலவும் வெறுமையான வனாந்தர வெளியாகவும் தோன்றுகிறதா?
இந்த இரண்டாவது சோதனையையும் பார்ப்போம். தேவன் தான் முன்குறித்தவர்களைச் சந்திக்கும் போது அந்த நபருக்கு தன்னை குறித்து வெளிப்படுத்துகிறார். தேவன் அவர்களுக்கு அவருடைய சர்வ வல்லமையுள்ள இறையான்மையைம், அவருடைய மாபெரும் பலத்தையும், கற்பனைக்கு எட்டாத பரிசுத்தத்தையும், அவருடைய கருணையையும், வெளிப்படுத்துகிறார். அவ்விதமாக உனக்கு தேவன் வெளிப்படுத்தினாரா? அவருடைய சர்வ வல்லமையுள்ள இறையான்மையைம், அவருடைய மாபெரும் பலத்தையும், கற்பனைக்கு எட்டாத பரிசுத்தத்தையும், அவருடைய கருணையையும், எவ்வளவேனும் வெளிப்படுத்தினாரா? “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.” (யோவான் 17:3).
இந்த மூன்றாவது சோதனையையும் பயன்படுத்துவோம்: தேவன் தன்னை உங்களுக்கு வெளிப்படுத்தி இருந்தால், அவர் உங்களைக்குரித்தும் வெளிப்படுத்துவார். ஏனெனில் அவருடைய வெளிசத்தில் தான் நாம் ஒளியைக் காண்கிறோம். உங்கள் நிலையைக் குறித்து வெளிப்படுத்துவது மிகவும் வேதனையான மற்றும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். அபிராகமுக்கு தேவன் தரிசனத்தின் மூலமாக தோன்றியபோது ஆபிரகாம் தேவனிடம் பேசிய வார்த்தைகளைக் கவனியுங்கள்: “இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன்." (ஆதியாகமம் 18:27). அவர் ஏசாயா தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தியபோது அவர், “ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுக்ஷன்” என்று சொன்னார். (ஏசாயா 6:5). தேவன் யோபுவுக்குத் தன்னை வெளிப்படுத்திய போது, “நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்” என்றார் (யோபு 42:6). குறிப்பு! இங்கு யோபு நான் என் அக்கிரம வழிகளை வெறுக்கிறேன் என்று சொல்லவில்லை, மாறாக அவர் "நான் என்னை வெறுக்கிறேன்" என்று சொல்லுகிறார். அன்புள்ள வாசகரே! உங்களுக்கு இந்த அனுபவம் உள்ளதா? நீங்கள் காணாமல் போன, வீழ்ச்சியடைந்த நிலையில் உள்ளீர்கள் என்பதை உங்களால் உணர முடிகிறதா? உங்களில் எந்தவித நன்மையும் இல்லை என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள முடிகிறதா? நீங்கள் நரகத்திற்கு மட்டுமே தகுதியானவர் என்பதை உங்களால் உணரமுடிகிறதா? உங்களுக்கு இதுபோன்ற அனுபவம் உண்டா? அப்படியென்றால் அதுவே சரியான ஆதாரம், ஆம், தேவன் உங்களைக் கண்டுபிடித்தார் என்பதற்கு இதுவே நேர்மறை சான்றாக இருக்கிறது.
“அவனை நடத்தினார்” கண்டுபிடித்தார் என்பது தேவன் தனது மக்களிடம் இடைபடும் விதத்தின் முடிவல்ல, அவரது செயல்பாடுகளின் ஆரம்பம் மட்டுமே! அவர்களைக் கண்டறிந்த தேவன் அவர்களை என்றும் கைவிடுவதில்லை. காணாமல் போய் அலைந்து கொண்டிருக்கும் தன்னுடைய பிள்ளையை கண்டறிந்த தேவன், தற்போது அவர்களை இடுக்கமான பாதையில் வழிநடத்துகிறார். தேவனுடைய வழிநடத்துதல் குறித்து ஓசியாவின் புத்தகத்தில் அழகான காரியத்தை வாசிக்கிறோம். “நான் எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கப் பழக்கினேன்” (ஓசியா 11:3). அன்பு நிறைந்த தாய் தன் சிறு பிள்ளையின் கால்கள் பலவீனமாயும் நடக்கப் பழக்கமும் இல்லாத போது, கைப்பிடித்து நடக்கப்பழக்குவதுபோல, தேவனும் தம்முடைய மக்களைக் கரம்பிடித்து தம்முடைய நாமத்தினிமித்தம் நீதியின் பாதைகளில் நடத்துகிறார். அப்படிப்பட்டது தான் தேவனுடைய வாக்குத்தத்தம்: “அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்” (1 சாமுவேல் 2:9). தேவனின் வழிநடத்தலில் மூன்று பரிமாணங்கள் உள்ளன.
அ. சுவிசேக்ஷத்தின் நடத்துதல். - இயேசு சொல்லுகிறார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” (யோவான் 14:6). ஆனால், அவர் இவ்விதமாகவும் சொல்லுகிறார், “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்" (யோவான் 6:44). இதுதான் தேவன் வழிநடத்தும் பாதை. அவர் பாவியை இயேசு கிறிஸ்துவிடம் அழைத்துச் செல்கிறார். அன்புள்ள வாசகரே! நீங்கள் இந்த பாதையில் இரட்சகரிடம் வழி நடத்தப்பட்டிருக்கிறீர்களா? கிறிஸ்துவே உங்களுடைய நம்பிக்கையாக இருக்கிறாரா? அவருடைய விலைமதிப்பற்ற இரத்தம் மட்டுமே உங்களுக்கு போதுமானது என்று நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியானால், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடம் உங்களை வழிநடத்தியதற்காக பிதாவாகிய தேவனை துதிப்பதற்கு எவ்வளவு பெரிய காரணம் இருக்கிறது!
ஆ. போதித்து நடத்துதல். – “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்;" (யோவான் 16:13) என்று இயேசு கூறினார். நம்மால் சத்தியத்தை கண்டுபிடித்து, அதில் நடக்கும் திறன் நம்மிடம் இல்லை, எனவே நம்மை சத்தியத்தை நோக்கி வழிநடத்தப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. “மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்" (ரோமர் 8:14). அவரே நம்மை வேத வசனம் என்னும் புல்லுள்ள இடங்களில் மேய்த்து அவருடைய வாக்குத்தத்தமாகிய அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் நம்மைக்கொண்டு போய் விடுகிறார் (சங்கீதம் 23:2)! அவருடைய வார்த்தையிலிருந்து பிரகாசிக்கும் ஒவ்வொரு ஒளிக்கதிர்க்கும் நாம் எவ்வளவு நன்றியுடன் இருக்க வேண்டும்!
இ. அன்றாட வாழ்வியல் நடத்துதல். - “நீர் உம்முடைய மிகுந்த மனஉருக்கத்தின்படியே, அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை. அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகஸ்தம்பமும், அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினிஸ்தம்பமும், அவர்களை விட்டு விலகவில்லை" (நெகேமியா 9:19). அன்றைக்கு கர்த்தர் இஸ்ரவேலர்களை எப்படி வழி நடத்தினாரோ, அதே வகையில் இன்றும் இந்த வனாந்தரம் என்னும் உலகில் ஒவ்வொரு அடியிலும் நம்மை வழிநடத்துகிறார். இது எவ்வளவு பெரிய கருணை! “நல்ல மனுக்ஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும். அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்" (சங்கீதம் 37:23). ஆம், நம் வாழ்வில் உள்ள அனைத்தும் உன்னதமான தேவனால் நடத்தப்படுகிறது. என் காலங்கள் அனைத்தும் உம் கையில், எல்லா நிகழ்வுகளும் உம் கட்டளையால் நடக்கின்றன. எல்லாம் வந்து, நிலைத்து முடிய வேண்டும், நமது பரம நண்பரின் விருப்பப்படியே.
“அவனை உணர்த்தினார்” தேவன் நமக்கும் அதையே செய்கிறார்; தேவன் நமக்கு ஆலோசனை தரும்படியாகவே தம்முடைய இரக்கத்தின்படியே, வேதத்தை நமக்கு கொடுத்து ஆசீர்வதித்திருக்கிறார், அவர் நம்மை இருளில் தடவித் திரியாதபடி நம் கால்களுக்கு ஒரு தீபத்தையும், நம் பாதைக்கு வெளிச்சத்தையும் கொடுத்தார். மேலும், அவருடைய வார்த்தையை நாம் புரிந்துகொள்ளும் பணியை போதிய திறனற்ற நமது சுய அறிவுக்கே விட்டுவிடவில்லை. நமக்கு போதிப்பதற்காகத் தடுமாற்றம் இல்லாத போதகர் கொடுக்கப்பட்டிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நமது போதகர். “நீங்கள் பரிசுத்தராலே அபிக்ஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் அவராலே பெற்ற அபிக்ஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை” (1 யோவான் 2:20,27).
தேவனுடைய வார்த்தையைப் பற்றிய சரியான புரிதல் என்பது மனித புத்திசாலித்தனத்தால் அடையக்கூடிய ஒன்றல்ல, அது தேவனால் நமக்குக் கொடுக்கப்பட்ட ஈவு. இதைப் பற்றி இவ்விதமாக எழுதப்பட்டுள்ளது: “பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்" (யோவான் 3:27). வார்த்தைகள் எவ்வளவு தெளிவாக எழுதப்பட்டிருந்தாலும், நீங்கள் பார்வையற்றவனாக இருந்தால் என்ன பயன்? ஆகவே “ஜென்மசுபாவமான மனுக்ஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்” (1 கொரிந்தியர் 2:14) என்று எழுதப்பட்டுள்ளது. ஆவிக்குரிய பகுத்தறிவு பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே வழங்கப்படுகிறது.
“அவனை உணர்த்தினார்" நமது பலவீனத்தை தேவன் எவ்வளவு பொறுமையாக தாங்குகிறார்! எவ்வளவு கிருபை உள்ளவராய் நமக்கு திரும்பவும் கொஞ்சம் கொஞ்சமாக கற்பனையின் மேல் கற்பனையையும், பிரமாணத்தின் மேல் பிரமாணத்தையும் நமக்குச் சொல்லித்தருகிறார் (ஏசாயா 28:10). நாம் எவ்வளவு மந்தமாக இருந்தாலும், அவர் நம்மைப் போதிக்கிறதில் பொறுமை காக்கிறார். ஏனெனில் கர்த்தர் நமக்காக யாவையும் செய்து முடிப்பார் (சங்கீதம் 138:8) என்று வாக்குறுதி அளித்துள்ளார். அவர் உங்களை உணர்த்தியுள்ளாரா? மனிதன் முழுமையான வீழ்ந்துவிட்டான் என்றும், பாவத்திலிருந்து தன்னை தானே விடுவித்துக்கொள்ள அவன் சக்தியற்றவன் என்றும் போதித்திருக்கிறாரா? நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் (யோவான் 3:7) என்கிற நம்மைத் தாழ்த்த வேண்டிய சத்தியத்தையும், மறுபிறப்பின் அனுபவம் தேவனால் மட்டுமே சாத்தியம் என்றும், அதில் மனித பங்கு எதுவும் இல்லை (யோவான் 1:13) உங்களுக்கு உணர்த்தி இருக்கிறாரா? எல்லா பாவங்களிலிருந்தும் சுத்திகரிக்க அவருடைய இரத்தம் போதுமானது (1 யோவான் 1:7) என்றும் தேவனுடைய குமாரனின் பரிகார பலியின் சிறப்பை அவர் உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறாரா? அப்படியானால், அப்படிப்பட்ட தெய்வீக உணர்த்துதலுக்காக நீங்கள் அவருக்கு நன்றி சொல்ல எவ்வளவு பெரிய காரணம் இருக்கிறது பாருங்கள்!
“அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்." கிறிஸ்தவம் ஒரு நிபந்தனை சார்ந்த மதமோ, ஏதேச்சையானதும் நிச்சயமற்றதுமான மதமோ அல்ல. அத்தகைய மதத்திற்கு பொருத்தமான பெயர் அர்மீனியனிசம். இந்த ஆர்மினியனிசம் என்ற பிரிவு ரோமன் கத்தோலிக்க அமைப்பின் குமாரத்தி ஆகும். அது தேவனை அவமதிக்கிறதும், வேதத்தை எதிர்க்கிறதும், ஆத்துமாக்களை அழிவுக்கு நேராய் கூட்டிச் செல்வதுமான இந்த ரோமன் கத்தோலிக்க மதம். அதன் தந்தை பிசாசாகிய சாத்தான் என்பதால், அது மனிதனுடைய சுய நீதியையும் சுய மேன்மையையும் ஊக்குவிக்கிறது, மனிதனுக்கு இரட்சிக்கப்படும் திறன் உள்ளது என்று போதிக்கிறது, மேலும் பல உண்மையற்ற கூறுகள் மூலம் நிச்சயமற்ற தன்மையையும் கவலையையும் உருவாக்குகிறது. ஆனால் கிறிஸ்தவம் உறுதியைக் கொண்டுவருகிறது. அந்த உறுதியானது தேவனின் மாறாத அன்பிலிருந்தும் திட்டத்திலிருந்தும் எழுகிறது. நற்கிரியையைத் துவங்கியவராகியே தேவனே அதை நிறைவேற்றவும் செய்வார்.
“கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர். அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை. அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்" (சங்கீதம் 37:28). இது எவ்வளவு பாக்கியம்! நோவா குடிபோதையில் இருந்தபோது கர்த்தர் அவரைக் கைவிட்டாரா? நிச்சயமாக இல்லை. அபிமலேக்கிடம் பொய் சொன்ன போது தேவன் ஆபிரகாமைக் கைவிட்டாரா? இல்லையே. மோசே பாறையை அடித்ததால் அவரைக் கைவிட்டாரா? நிச்சயமாக இல்லை என்பதை இயேசு கிறிஸ்துவின் மறுரூபமலைக் காட்சி நிரூபிக்கிறது. அதேபோல தாவீது தன் பாவத்தால் கர்த்தருடைய எதிரிகள் தேவனுடைய நாமத்தைத் தூக்ஷிக்க இடங்கொடுத்த பாவங்களினிமித்தம் அவனைக் கைவிட்டாரா? நிச்சயமாக இல்லை. அதற்குப் பதிலாக அவனை மனந்திரும்புதலுக்கு வழி நடத்தி, தன்னுடைய பாவத்தை ஒப்புக்கொள்ளச் செய்து, தன்னுடைய தாசரில் ஒருவரை அனுப்பி, “நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்” (2 சாமுவேல் 12:13) என்று சொல்லக் கட்டளையிட்டார்.
“கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார். (சங்கீதம் 121: 5 – 8). இவைகள் நமது உண்மையுள்ள தேவனின் உறுதியான உடன்படிக்கையின் சான்றுகள். இவை மூவொரு தேவனான கர்த்தரின் மாறாத வாக்குறுதிகள். பொய் சொல்லாத தேவனின் சத்தியத்தின் வாக்குறுதிகள் இவை. தேவனின் வாக்குறுதியில் எந்த நிபந்தனையும் இல்லை. ‘ஒருவேளை’ என்ற வார்த்தைக்கு இங்கு இடமில்லை. விசுவாசியின் மீது தேவனின் பாதுகாப்பிற்கு எந்த சூழ்நிலையும் தடையாக இல்லை. எந்த மாற்றமும் அந்த தெய்வீக ஸ்திரத்தன்மையை மாற்றவோ பாதிக்கவோ முடியாது. ஐஸ்வரியம் வலையில் அகப்படுத்தினாலும், வறுமை இடறச் செய்ய முயற்சித்தாலும்;, சாத்தான் நம்மை சோதித்தாலும், உள்ளான பாவங்கள் எரிச்சலூட்டினாலும், இவையெல்லாம் கிறிஸ்துவின் ஆடுகளாகிய நம்மில் ஒருவரைக் கூட அழிக்க முடியாது. மறுபுறம், இதுபோன்ற அனுபவங்கள் அனைத்தும் நம் தேவனின் இரட்சிப்பின் கரத்தை இன்னும் நேரடியாகவும் மகிமையாகவும் வெளிப்படுத்த உதவுகின்றன.
“கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே” நாம் காக்கப்பட்டிருக்கிறோம் (1 பேதுரு 1:5). கோபமடைந்த புறஜாதி பேரரசர்களின் சிங்கக் கூண்டுகளும், நெருப்புக் குழிகளும் முன்குறிக்கப்பட்டவர்களின் விசுவாசத்தைச் சோதிக்க முயற்சிக்கும், ஆனால் அவைகள் இவர்களின் விசுவாசத்தைக் காயப்படுத்தவோ அழிக்கவோ முடியாது. கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே, நம்மை கண்டறிந்து, வழிநடத்தி, போதித்து, இரட்சிக்கும் திருத்துவ தேவனுக்கு நன்றி செலுத்த முடியும் எவ்வளவு பெரிய காரணம் இருக்கிறது பாருங்கள்!
“துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்" (மத்தேயு 5:4)
துக்கம் என்பதை விரும்பத்தகாததும், வேதனை நிறைந்ததுமான மனித இயல்பு எனலாம். நமது மனம் துன்பத்தினாலும் கவலையினாலும் உடனடியாகவே சுருங்கி விடுகிறது. இயல்பாகவே நாம் மகிழ்ச்சியான சமுதாயத்தை விரும்புகிறோம். நமது தியான வசனம் மீண்டும் பிறவாதவர்களுக்கு விநோதமாய்த் தோன்றலாம், ஆனால் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு இது இனிமையானதகவும், மன நிறைவான இசையாகவும் தோன்றுகிறது. ஒருவேளை பாக்கியவானாய் இருந்தால், ஏன் துயரப்பட வேண்டும்? நீங்கள் துயரப்படுகிறவர்களாய் இருந்தால் எப்படி பாக்கியவான்கள் ஆவீர்கள்? இந்த வார்த்தைகளை நாம் சிந்திக்கும்போது, ‘அந்த மனிதன் பேசியது போல் ஒருவரும் ஒருபோதும் பேசவில்லை' என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். “துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்" என்பது உலக வாழ்க்கைக்கு நேர் எதிரானது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு தலைமுறையிலும் மனிதர்கள் செல்ந்தவர்களையும் மகிழ்ச்சியோடு வாழ்கிறவர்களையும் பாக்கியவான்களாகக் கருதுகிறார்கள். ஆனால் கிறிஸ்து மட்டுமே ஆவியில் தாழ்மை உள்ளவர்களை, துயரப்படுகிறவர்களை பாக்கியவான்கள் என்கிறார். எல்லாவிதமான துன்பங்களையும் அவர் இந்த இடத்தில் குறிப்பிடவில்லை என்பதே உண்மை. மரணத்திற்கு ஏதுவான துக்கமும் உள்ளது. “லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது” (2 கொரிந்தியர் 7:10). ஆனால் இங்கு வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதம் ஆவிக்குரிய துயரத்திற்கு மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. ஆசீர்வதிக்கப்பட்ட துயரம் என்பது தேவனின் பரிசுத்தம், நன்மை மற்றும் நமது சொந்த துன்மார்க்கம், நமது வீழ்ச்சியான இயல்பு, நமது நடத்தையில் இருக்கும் புரட்டுத்தனம் போன்றவற்றை அங்கீகரிப்பதால் வரும் துயரம்.
சுவிசேக்ஷ பகுதியில் வரும் பாக்கியவான்கள் குறித்த எட்டு குறிப்புகள் நான்கு ஜோடிகளாக அமைக்கப்பட்ட வகையில் தியானிப்பது நலமாக இருக்கும். இந்தப் புரிதல் நியாயமானது என்பதை நாம் இந்த தியானத்தில் தொடரும்போது புரிந்து கொள்ளலாம். இந்த எட்டில் முதல் ஆசீர்வாதம் ஆவியில் எளிமையுள்ளவர்களுக்கு என்பதை தங்களில் ஒன்றும் இல்லை, வெறுமையே உள்ளது என்கிற சத்தியத்தை உணர்பவர்கள் என்று நாம் அர்த்தம் கொள்கிறோம். அப்படியான ஏழ்மையில் இருந்து துயரத்திற்குக் கடந்து செல்வது புரிந்து கொள்ள மிகவும் இலகுவானதே. உண்மையில் இவை இரண்டும் தோழர்கள் என்றே கருதும் அளவிற்கு ஒன்றுடன் மற்றொன்று மிகவும் நெருக்கமாகப்; பின்தொடர்கின்றது.
இங்கே “துயரம்" என்ற வார்த்தையின் அர்த்தம் பலவீனம், துன்பம், இழப்பு போன்ற உணர்வுகளை விட அதிகம். இது பாவத்திற்காக வரும் துயரம். “இங்கு துக்கப்படுவது என்பது நமது ஆவியில் உணரும் கைவிடப்பட்ட நிலை, நமக்கும் தேவனுக்கும் பிரிவினையை ஏற்படுத்திய நம் அக்கிரமங்கள் நிமித்தம் வரும் துயரம், நம்மிடம் உள்ள அறச்செயல்களைப் போற்றியதின் விளைவாக வந்த துயரம், நமது சுய-நீதியைச் சார்ந்துகொண்டதால் வந்த துயரம், தேவனை எதிர்த்து, தேவனின் சித்தத்திற்கு விரோதமாக இருந்ததற்கான கவலை. இது போன்ற துயரம் ஆவியின் எளிமையுடன் எப்போதும் இணைந்தே பயணிக்கிறது” (டாக்டர். பெர்ஸன்).
நம்முடைய இரட்சகர் எப்படிப்பட்ட நபரை பாக்கியவான் என்று அழைத்தார் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணத்தை லூக்கா 18 -ல் நாம் பார்க்கிறோம். அங்கு சொல்லப்பட்ட ஜெபம் கவனிக்கதக்கது. முதலாவதாக ஒரு சுயநீதி உள்ளவன் தேவாலயத்தில் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். (லூக்கா 18:11,12). அவன் சொன்னவை உண்மையாக இருந்திருக்கலாம், ஆனால் அந்த பரிசேயன் ஆக்கினைக்குள்ளானவானகவே தன் வீட்டுக்குப்போனான். அவனுடைய சிறந்த ஆடை அழுக்கான கந்தைதான் என்றும், அவனது அங்கி கலங்கமுள்ளது என்பதை தெரிந்துக்கொள்ளாமல் போனான். அதன்பிறகு ஆயக்காரனைக்குறித்து நாம் வாசிக்கிறோம். “எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, என் அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்து பிடித்தது, நான் நிமிர்ந்து பார்க்கக்கூடாதிருக்கிறது” (சங்கீதம் 40:12) என்று சங்கீதக்காரனைப் போல, புலம்புகிறவனாக ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். அவன் நீதிமானாக தன்னுடைய வீட்டுக்கு சென்றான் (லூக்கா 18:13). ஏனெனில் அவன் ஆவியில் எளிமையுள்ளவனாகவும், தன் பாவத்திற்காகப் புலம்பியவனாகவும் இருந்தான்.
தேவனால் பிறந்த பிள்ளைகளின் பிறப்பின் முதல்வகை அடையாளங்கள் இவை தான். தாங்கள் ஆவிக்குரிய ரீதியில் துயரப்படுகிறவர்கள் என்பதை உணர்ந்து, அதற்காக வருத்தப்படாதவர்கள், அவர்கள் திருச்சபையின் உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, அந்த திருச்சபையில் பணியாற்றுபவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவோ பார்க்கவோ முடியாது. நொறுங்குணடு பணிந்த இருதயத்தில் வாசம்பண்ணும்படி மகா தேவன் இறங்கி வருவதைக் குறித்து கிறிஸ்தவ வாசகர் எத்துணை நன்றியாக இருக்க வேண்டும். பழைய ஏற்பாடில் இதிலும் மகத்துவமான ஒன்றை வேறு எங்கு நாம் காணமுடியும். தேவனுடைய பார்வையில் வானங்கள் கூட சுத்தமில்லாதிருக்குமானால், மனிதன் அவருக்கு ஏற்ற ஆலயத்தை எந்த மனிதனால் கட்டி எழுப்ப முடியும்? அது எவ்வளவு அழகானதாகவே, மேன்மையானதாகவோ இருந்தாலும் அது தேவன் வாழ உகந்த இடமாகாது என்பதை ஏசாயா 66:2 மற்றும் ஏசாயா 57:15 உணர்த்துகின்றன.
“துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்.” துயரப்படுவது என்பது ஒருவன் தனது பாவங்களினால் வேதனைப்படும் போது உணரும் உணர்வு. ஆனால் அந்த எல்லைக்குள் மட்டுமே மட்டுப்படுவதில்லை. இப்படிப்பட்ட துயரம் கிறிஸ்தவ நிலைக்கு இயல்பான குணம். விசுவாசியை வருத்தமடையச் செய்து, அவன் இருதயத்தில் “நான் நிர்ப்பந்தமான மனுக்ஷன்” (ரோமர் 7:24) என்று கதறப் பண்ணும் அநேக காரியங்கள் உள்ளன. நாம் எளிதில் பின்நோக்கி இழுக்கும்படி நம்முடைய அவிசுவாசம் செயல்படுகிறது, நம்முடைய பாவங்கள் நம் தலைமுடியை விட அதிகமாகி, நம்மை வருத்தமடையச் செய்கிறது. நமது பயனற்ற, வாழ்க்கை நம்மில் தொடர்ச்சியான பெருமூச்சுக்கு உட்படுத்திவிடுகிறது. கிறிஸ்துவின் சந்நிதிலிருந்து இலகுவாக விலகிச் செல்லும் நமது மனநிலை, அவருடன் நெருக்கம் இல்லாத நிலைமை, அவர் மீதான பூரணமற்ற அன்பு ஆகியவை அனைத்தும் நம்மை மிகவும் வருத்தப்படுத்துகின்றன. இது மட்டுமல்ல. வெளிதோற்றத்தால் தங்களை பக்தி உள்ளவர்களாக காண்பித்துக்கொண்டு அதன் பலத்தை மறுதலிக்கும் நிலை எப்பக்கத்திலும் அதிகரித்திருக்கிறது (2 தீமோத்தேயு 3:5). தேவனின் சத்தியத்தை அவமதிக்கும் ஆயிரக்கணக்கான தளங்களிலிருந்து வெளிவரும் பொய்யான உபதேசங்கள், தேவ மக்களிடையே பிளவுகள், சகோதரர்களிடையே ஏற்படும் சச்சரவுகள், இவை அனைத்தும் பெரும் வேதனையை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல், உலகில் நடக்கும் கொடூரமான துன்மார்க்கநிலை, கிறிஸ்துவை அவமதிக்கும் மனிதர்கள், சொல்லொணாத் துன்பங்கள் சூழ்ந்திருப்பது போன்றவைகளை நினைக்கும்போது நமக்குள்ளேயே நாம் பெருமூச்சு விடுகிறோம். ஒரு கிறிஸ்தவன் தேவனுக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறாரோ, அவ்வளவு அதிகமாக ஆண்டவரைப் புண்படுத்தும் அனைத்தும் அவரையும் துக்கப்படுத்துகிறது. அவனுடைய மனப்பான்மை சங்கீதகரானோடும் (சங்கீதம் 119:53), எரேமியாவோடும் (எரேமியா 13:17) மற்றும் எசேக்கியேலிடமும் (எசேக்கியேல் 9:4) ஒத்துப்போகிறது.
“அவர்கள் ஆறுதலடைவார்கள்". இந்த ஆறுதல் முதன்மையாக குற்றஞ்சாட்டும் மனசாட்சியை அகற்றுவதிலிருந்து வருகிறது. இந்த ஆறுதல் பரிசுத்த ஆவியானவர் கிருபையின் சுவிசேக்ஷத்தை பாவ உணர்வு பெற்று இரட்சகரின் தேவையை உணர்ந்த நபரில் அப்பியாசப்படுத்துவதன் மூலம் நிறைவடைகிறது. பாவத்திற்காகப் பிராயச்சித்தம் செய்த இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வழியாக இந்த மன்னிப்பு இலவசமாகவும், முழுமையாகவும் கிடைக்கிறது என்கிற உணர்வை உண்டாக்குகிறது. பிரியமானவருக்குள் அங்கிகரிக்கப்பட்ட (எபேசியர் 1:6) ஒவ்வொரு இருதயத்தையும் நிரப்பும் எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானத்தினால் இந்த ஆறுதல் உண்டாகிறது. தேவன் ஆரோக்கியம் வரப்பண்ணுவதற்கு முன்னர் காயப்படுத்துகிறார். அவர் உயர்த்துவதற்கு முன்பு தழ்மைப்படுத்துவார். முதலில் அவர் நீதியையும் பரிசுத்தத்தையும் வெளிப்படுத்துகிறார், பின்னர் அவர் தம் இரக்கத்தையும் கிருபையையும் வெளிப்படப் பண்ணுகிறார்.
“அவர்கள் ஆறுதலடைவார்கள்" என்ற சொல்லாடல் கிறிஸ்தவர்களின் வாழ்வில் தொடர்ந்து நிறைவேறி வருவது நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. போக்குச்சொல்ல முடியாத தன்னுடைய தோல்விக்காக துக்கத்துடன் தன் பாவங்களையெல்லாம் ஒப்புக்கொண்ட பிறகு, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் தான் பரிசுத்தப்படுத்தப்படுவேன் என்ற பதிலையும் ஆறுதலையும் பெறுகிறான் (1 யோவான் 1:7). தன்னைச் சுற்றி கிறிஸ்துவிற்கு நடக்கும் அவமானத்தைக் கண்டு அவர் புலம்பினாலும், சாத்தான் முற்றிலுமாக அகற்றப்பட்டு, கிறிஸ்து ராஜா தனது கிருபையின் சிம்மாசனத்தில் அமர்ந்து நீதியின் ராஜ்யத்தை நிறுவுவார் என்ற அறிவு அவருக்கு ஆறுதலாக இருக்கிறது. கர்த்தரின் கடிந்துகொள்ளும் கரம் அவன் மீது தங்கியிருந்தாலும், தற்போது விதிக்கப்படும் தண்டனைகள் அனைத்தும் அவனுக்கு துக்கமாகத் தோன்றினாலும், ஆனந்தம் என்பது இல்லை என்றாலும், வரப்போகும் மகத்தான நித்திய மகிமைக்கு அவனைத் தயார்படுத்துவதற்காகவே (2 கொரிந்தியர் 4:17) இவையனைத்தும் இருப்பதை உணர்ந்துகொள்வது அவனுக்கு ஒரு பெரிய ஆறுதல். தன் தேவனுடன் ஐக்கியம் கொண்ட ஒரு விசுவாசி அப்போஸ்தலனுடன் சேர்ந்து, “துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோக்ஷப்படுகிறவர்களாகவும்" (2 கொரிந்தியர் 6:10) இருக்கிறோம் என்று கூறலாம். ஆனால் பலமுறை மாரா என்ற கசப்பான தண்ணீரை குடிக்க நேரிட்டாலும், தேவன் அதன் அருகிலே கசப்பை முறிக்கும் ஒரு செடியை அதன் பக்கத்திலே நட்டிருப்பதைக் காண்பார். ஆம், இப்போதும் துயரப்படுகிற கிறிஸ்தவர்கள் தெய்வீக ஆறுதல் தருகிறவரால் ஆறுதல் அடைகிறார்கள். அவருடைய ஊழியர்கள் ஊழியத்தின் வழியாகவும், சக கிறிஸ்தவர்களின் உற்சாகமூட்டும் வார்த்தைகளினாலும் ஆறுதல் அடைகிறார்கள். இது போன்ற வாய்ப்புகள் இல்லாதபோது, தேவனுடைய வார்த்தையின் வாக்குறுதிகள் அவர்களின் நினைவில் கொண்டு வரப்பட்டு ஆறுதல் பெறுகிறார்கள். நல்ல ரசம் கடைசிவரைக்கும் வைத்து வைக்கப்பட்டிருக்கிறது. சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்" (சங்கீதம் 30:5). அவர் இல்லாதது போன்ற இந்த நீண்ட இரவில், துக்கம் அனுபவித்தவராகிய மனுக்ஷகுமாரனுடன் ஐக்கியம்கொள்ள பரிசுத்தவான்கள் அழைக்கப்படுகின்றனர். ஆனால் தேவனுக்கே மகிமை, "நாம் அவருடன் பாடுசகித்தால், அவரோடே கூட ஆளுகையும் செய்வோம்" என்று எழுதப்பட்டுள்ளது (ரோமர் 8:17). அந்த மேகமற்ற விடியலைக் காணும்போது அது எவ்வளவு ஆறுதலையும் சந்தோக்ஷத்தையும் நமக்குத் தரும்! அப்போது ஏசாயா 35:10-ல் சொல்லப்பட்ட வார்த்தை நிறைவேறும்: “துக்கமும் பெருமூச்சும் பறந்துபோகும்." அது மட்டுமல்லாமல் வெளிப்படுத்துதல் 21:3-4ல் சொல்லப்பட்ட வார்த்தையும் நிறைவேறும்.
“நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள்." (மத்தேயு 5:6).
முதல் மூன்று பாக்கியவான்கள் பரிசுத்த ஆவியின் ஏவுதலின்படி இதயத்தின் நோக்கங்களில் கவனம் செலுத்துகின்றன. முதலில் நாம் தேவை உள்ளவர்கள், வெறுமையானவர்கள் போன்ற உணர்வை அடைகிறோம். இரண்டாவதாக, நான் என்னை நானே நியாயந்தீர்க்கிறேன், என் தவறுகளை அடையாளம் கண்டு, என் பாவங்களுக்காக வருத்தப்படுகிறேன். மூன்றாவதாக, நான் தேவனுக்கு முன்பாக என்னை நியாயப்படுத்துவதை நிறுத்திவிட்டு, நான் பெருமையான பேசும் என் சுயநீதியையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, சாந்தமானவனாக மண்ணிலும் சாம்பலிலும் விழுந்து மனந்திரும்புகிறேன். இப்போது இந்த நான்காவது ஆசீர்வாதத்தில் என் கவனம் எனக்கு வெளியே ஏதோவொன்றின் மீது ஈர்க்கப்படுகிறது. என்னிடம் அது இல்லை என்பதை நான் உணர்கிறேன், ஆனாலும் அது எனக்கு மிகவும் தேவையானது என்பதை அறிந்து அதற்காக ஏங்குகிறேன்.
நமது தியான வசனத்தில் வரும் “நீதி" என்ற வார்த்தையைப் பற்றி காரணமின்றி நிறைய வெறுமையான வாதங்கள் முளைத்துள்ளன. இதன் முக்கியத்துவத்தை உணர, இந்த வார்த்தை பயன்படுத்தப்படும் பழைய ஏற்பாட்டுப் பகுதிகளைக் கருத்தில் கொண்டு இந்த தலைப்பை முழுமையாகவும் மற்றும் புதிய ஏற்பாட்டு விளக்கங்களின் வெளிச்சத்திலும் அவற்றைப் புரிந்துக்கொள்ள வேண்டும்.
“ஆகாயமண்டலங்கள் நீதியைப் பொழியக்கடவது; பூமி திறவுண்டு, இரட்சிப்பின் கனியைத்தந்து, நீதியுங்கூட விளைவதாக் கர்த்தராகிய நான் இவைகளை உண்டாக்குகிறேன்." (ஏசாயா 45:8). இந்த வசனத்தின் முதல் பாகத்தின் வார்த்தைகள் பூமியின் மீது கிறிஸ்துவின் வருகையை குறித்து விளக்குகிறது. இரண்டாவது பாகம் நமக்காக அவருடைய மரணம் உயிர்தெழுதலை தெரிவிக்கிறது. “நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்” (ரோமர் 4:25). “முரட்டு இருதயமுள்ளவர்களே, நீதிக்குத் தூரமானவர்களே, எனக்குச் செவிகொடுங்கள். என் நீதியைச் சமீபிக்கப்பண்ணுகிறேன், அது தூரமாயிருப்பதில்லை. என் இரட்சிப்புத் தாமதிப்பதுமில்லை. நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கட்டளையிடுவேன்." (ஏசாயா 46:12-13) “என் நீதி சமீபமாயிருக்கிறது. என் இரட்சிப்பு வெளிப்படும். என் புயங்கள் ஜனங்களை நியாயந்தீர்க்கும். தீவுகள் எனக்குக் காத்திருந்து, என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும். (ஏசாயா 51:5) “கர்த்தர் சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள். என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது.” (ஏசாயா 56:1). “கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன். என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது. மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார். பூமி தன் பூண்டுகளை விளைவிப்பது போலவும், தோட்டம் தன்னில் விதைக்கப்பட்டவைகளை முளைவிப்பதுபோலவும், கர்த்தராகிய ஆண்டவர் எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கப்பண்ணுவார்” (ஏசாயா 61:10,11). இந்த வேதபகுதிகள் தேவனுடைய நீதியை தேவன தரும் இரட்சிப்பிற்கு இணையாகச் சொல்வதைத் தெளிவாக்குகிறது.
இந்த வசனங்கள் ரோமர் நிருபத்தில் மேலும் விளக்கி, சுவிசேக்ஷத்தைப் பற்றிய தீர்க்கமான விளக்கங்களை அப்போஸ்தலன் தருகிறார். ரோமர் 1:16,17 -ல் இவிதமாக நாம் வாசிக்கிறோம், “கிறிஸ்துவின் சுவிசேக்ஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேக்ஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது." அதேபோல், ரோமர் 3:22-24 -ல் இவ்விதமாக எழுதப்பட்டுள்ளது. “அது இயேசு கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே. விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்.” ரோமர் 5:19 -ல் ஆசீர்வாதமான அறிவிப்பு வருகிறது: “அன்றியும் ஒரே மனுக்ஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.” இதே வேளையில் நாம் ரோமர் 10:4 ல் இவ்வாறு கற்றுக்கொள்கிறோம்: “விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்."
ஒரு பாவியிடம் நீதி என்பது எவ்வளவேனும் இல்லை. “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;" என்று எழுதப்பட்டிருக்கிறது. அதனால்தான் தேவன் தம்முடைய மக்கள் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துவுக்குள் பரிபூரண நீதியை வழங்கியுள்ளார். இந்த நீதி, தேவனுடைய நியாயபிரமாணத்தை நிறைவேற்றம் என்பது, நம் சார்பாக மற்றொருவரால் (இயேசு கிறிஸ்துவால்) சாத்தியமானதாகும். இப்போது இந்த நீதியானது விசுவாசிக்கும் ஒவ்வொரு பாவிக்கும் கிறிஸ்துவால் சாட்டப்படுகிறது. தேவனுடைய மக்களின் பாவங்கள் கிறிஸ்துவின் மீது எவ்விதமாக சுமத்தப்பட்டதோ, கிறிஸ்துவின் நீதி அவர்கள் மீது அவ்விதமாக சுமத்தப்படுகிறது. (பார்க்கவும் 2 கொரிந்தியர் 5:21). இதுவே நமக்குத் தேவையான, ஆசீர்வதிக்கப்பட்ட நீதியைக் குறித்த வேத போதனையின் சுருக்கமான விளக்கமாகும்.
“நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்;" பசி என்பது ஒரு நபரின் பற்றாக்குறையை அங்கீகரிப்பதை குறிக்கிறது, முதலில், பரிசுத்த ஆவியானவர் தேவனின் பரிசுத்தமான கட்டளைகளை நம் இதயத்தின் முன் வைக்கிறார். அந்த பரிசுத்த கட்டளைகளின் தரத்தை அவரால் ஒருபோதும் குறைக்க முடியாது. “வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்” (மத்தேயு 5:20) என்பதை அவர் நமக்கு நினைவூட்டுகிறார். இரண்டாவதாக அவன் தேவனுடைய எதிர்பார்ப்புக்கு எவ்வளவு பின்தங்கியிருக்கிறான் என்பதை உணர்ந்துக் கொள்கிறான், இது அவனை தேவனுக்கு முன்பாக துக்கப்படுத்துவதற்கு அது வழி நடத்துகிறது. உங்களுக்கு இப்படிப்பட்ட அனுபவம் இருக்கிறதா?
மூன்றாவதாக பரிசுத்த ஆவியானவர் ஊக்கப்படுத்திய இருதயத்தில் பசிதாகத்தை பிறக்கவைத்து அவன் தனக்கு இல்லாததைக் தேடும்படி அவனைத் தூண்டப்படுகிறான், அப்பொழுது அவனுடைய பார்வை கிறிஸ்துவின் பக்கமாக செய்கிறது. ஏனெனில் அவரே “நமது நீதியாயிருக்கிற கர்த்தர்" (எரேமியா 23:6). என்பதை அவன் அறிகிறான்.
முந்தையதைப் போலவே, இந்த நான்காவது ஆசீர்வாதமும் இரட்சிப்புக்கு முன் தொடங்கி, இரட்சிக்கப்பட்ட பாவியில் பூரணப்படுத்தப்படுகிறது. பசியின் இந்த அனுபவம் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. ஒரு காலத்தில் கிறிஸ்துவால் இரட்சிக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்ட இந்த மனிதன் இப்போது அவரைப் போல இருக்க ஆசைப்படுகிறான். இந்த செயல்முறையை ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்க்க முடிந்தால், அது கடவுளுக்காக ஏங்கும் ஒரு புதுப்பிக்கப்பட்ட இதயம்; (சங்கீதம் 42:1) அவருடன் நெருங்கிய ஐக்கியத்தை விரும்புவர் அவருடைய மகனின் சாயலாக மாற வேண்டும் என்ற ஏங்குகிறார். புதிய இயல்பு அத்தகைய குணங்களை வலுப்படுத்தவும், தூண்டவும், திருப்திப்படுத்தவும் அடிப்படையான தெய்வீக ஆசீர்வாதத்தை நாடுகிறது.
நம் வேதபகுதியின் மூலம் முன்வைக்கப்படும் அத்தகைய அற்புதமான யோசனை மனித நுண்ணறிவிலிருந்து எழுந்திருக்க முடியாது. ஜீவ அப்பமாகிய அவரோடு நாம் ஐக்கியமாகி, சகல பரிபூரணமும் வாசமாக இருக்கும் தேவகுமாரனுடன் இருந்தும், பசிதாகமாய் இருப்பது எப்படி சாத்தியம்? ஆனால் புதுப்பிக்கப்பட்ட இருதய அனுபவம் அப்படித்தான் இருக்கிறது. இங்குள்ள வினைச்சொல்லின் நேரத்தைக் கவனியுங்கள், “உடையவர்கள் பாக்கியவான்கள்” என்று சொல்லாமல் “பசி தாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்” என்று வருகிறது. அன்பான வாசகரே, உங்கள் சாதனகைளிலும் உங்கள் தற்போதைய நிலையிலும் திருப்தி அடைகிறீர்களா? பசி தாகத்துடன் இருப்பது ஒவ்வொரு தலைமுறையிலும் தேவனுடைய பரிசுத்தவான்களின் அனுபவம் (காணவும் சங்கீதம் 82:4, பிலிப்பியர் 3:8,14)
“அவர்கள் திருப்தி அடைவார்கள்". தலைப்பு உரையின் முதல் பகுதியின் உட்பொருளைப் போலவே, இது இரட்டிப்பாக பூர்த்தி செய்யப்படுகிறது. ஒன்று இரட்சிப்பின் தொடக்கத்தில் நிகழும் நிறைவு, மற்றொன்று இரட்சிக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் தொடரும் நிறைவு. கடவுள் ஒருவரின் வாழ்க்கையில் பசியை உண்டாக்குவது அதைத் திருப்திப்படுத்த மட்டுமே. ஒரு தாழ்ந்த பாவி கிறிஸ்துவின் தேவையை உணர வைக்கப்படுகிறான், அதனால் அவன் இழுக்கப்பட்டு தன்னைத் தொடும்படி வழிநடத்தப்படுகிறான். மனந்திரும்பி தகப்பனிடம் திரும்பிய ஊதாரித்தனமான மகனைப் போல, விசுவாசியான பாவி இப்போது கொழுத்த கன்றுக்கு ஒப்பிடப்பட்டவரால் வளர்க்கப்படுகிறார். யெகோவாவில் எனக்கு நீதி இருக்கிறது என்பதை (ஏசாயா 45:24) அவர் அறிவார்.
“அவர்கள் திருப்தியடைவார்கள்" 'அவர்கள் நிரப்பப்படுவார்கள்” துன்மார்க்கத்துக்கு ஏதுவான மதுவால் அல்ல, “ஆவியால் நிரப்பப்படுவார்கள்" (எபேசியர் 5:18). அவர்கள் எல்லா புத்திக்கும் மேலான கடவுளின் சமாதானத்தால் (பிலிப்பியர் 4:7) நிரப்பப்பட்டுள்ளனர். அவர்கள் துக்கமற்ற தெய்வீக ஆசீர்வாதங்களால் நிரப்பப்படுவார்கள். நமக்காக எல்லாவற்றையும் செய்த அவருக்கு ஏறெடுக்கும் துதி ஸ்தோத்திரத்தினால் நிரப்பப்படுவார்கள். இந்த ஏழை உலகம் கொடுக்க முடியாததும் எடுக்க முடியாததுமானவற்;றால் அவர்கள் நிரப்பப்படுவார்கள். அவருடைய நிறைவால் அவர்களுடைய பாத்திரம் நிரம்பி வழிகிறது. ஆனால் இவை அனைத்தும் கடவுளை நேசிப்பவர்களுக்கு சுவைக்க மட்டுமே கொடுக்கப்படுகின்றன. வரவிருக்கும் மகிமையில் நாம் அவருடைய பரிசுத்தத்தால் நிரப்பப்படுவோம், ஏனென்றால் அவர் தோன்றும்போது நாம் அவரைப் போல இருப்போம். அப்போது நமது பாவ சுபாவம் முற்றிலும் நீங்கும். அதற்குப் பின், பசியும் தாகமும் ஒருபோதும் இருக்காது. (வெளிப்படுத்துதல் 7:16).
“இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்” (மத்தேயு 5:8).
இது நம் ஆண்டவரின் எதிரிகளின் கைகளால் சிதைக்கப்பட்ட மற்றொரு ஆசீர்வாதம். தங்கள் மூதாதையர்களான பரிசேயர்களைப் போலவே, தாங்கள் மட்டுமே சத்தியத்தில் உயர்ந்தவர்கள் என்பதுபோல் நடந்துகொள்கிறார்கள், மெய்யான தேவனுடைய மக்களிடம் இருக்கும் பரிசுத்தம் தங்களிடம் மட்டுமே இருப்பதாக பெருமை பேசுகிறார்கள். தங்களில் இருந்த பழைய பாவ சுபாவம் முழுவதுமாக பரிசுத்தமாகிவிட்டதாகவோ, அல்லது அவர்களிலுள்ள சரீர சுபாவம் முற்றாக தேவன் அழித்துவிட்டதாகவும் அதினால், அவர்கள் ஒருபோதும் பாவம் செய்யவில்லை என்றும், குறைந்த பட்சம் எந்த பாவ இச்சைகளும் எண்ணங்களும் அவர்களுக்குள் நுழையவில்லை என்றும். நினைத்து ஏமாற்றப்பட்ட துரதிக்ஷ்டசாலிகள் கிறிஸ்தவ வரலாற்றில் உண்டு. ஆனால் தேவனுடைய வார்த்தை இப்படியாக சொல்கிறது. “நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது” (1 யோவான் 1:8).
சந்தேகத்திற்கு இடமின்றி, அத்தகைய மக்கள், தங்கள் வஞ்சகமான மற்றும் வீண் கருத்துக்களை நியாயப்படுத்த, வேதத்தை சுட்டிக்காட்டி, வசனப் பகுதிகளை மேற்கோள் காட்டி, பாவ பரிகார விக்ஷயத்தில் தேவனுடைய நீதியின் வார்த்தைகளை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.” என்பது நமது இருதயங்கள் தீமையான அசுத்தங்களில் இருந்து கழுவப்பட்டது என்று அர்த்தம் அல்ல, மாறாக கிறிஸ்துவின் தியாகபலி நமது பாவங்களுக்கான தண்டனையை முற்றிலும் அகற்றி இருக்கிறது என்பது தான். “பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின" (2 கொரிந்தியர் 5:17) என்ற வசனப்பகுதி இந்த உலகத்தில் நாம் இருக்கும் நிலையை குறித்ததல்ல, தேவனுக்கு முன்பாக நிற்கும் கிறிஸ்தவனின் நிலையைக் குறிக்கிறது.
இருதயத்தில் சுத்தம் என்பது பாவமே இல்லாத வாழ்க்கை என்ற அர்த்தமுடையது அல்ல என்பதை ஆவியானவரால் எழுதப்பட்ட தேவனின் பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாற்றை நாம் ஆராயும்போது தெளிவாகிறது, நோவா ஒரு சமயத்தில் குடிபோதையில் இருந்தார். ஆபிரகாமும் தெளிவற்றவராகவும் திசைதிருப்புகிறவராகவும் நடந்து கொண்ட உதாரணங்கள் உள்ளன. மோசே கீழ்ப்படியாதவராக ஆனார். யோபு தான் பிறந்த நாளைச் சபித்தார். எலியா யேசபேலின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் ஓடிப்போனார். பேதுரு கிறிஸ்துவை அவர் எனக்கு யாரென்று தெரியாது என்று மறுத்தார். உண்மைதான்! இருப்பினும், இவை அனைத்தும் கிறிஸ்தவம் நிறுவப்படுவதற்கு முன்பே நடந்தது என்று சிலர் கேள்வி எழுப்பலாம். ஆம், ஆனால் அதன் பிறகும் அவ்வாறுதான் நடந்தது. அப். பவுலை விட கிறிஸ்துவைப் பின்பற்றிய ஒருவரை நாம் எங்கே போய்க் கண்டுபிடிக்க முடியும்? அவருடைய அனுபவம் எப்படி இருக்கிறது? ரோமர் நிருபத்தின் 7வது அதிகாரத்தைப் வாசித்துப் பாருங்கள். “ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன். உள்ளான மனுக்ஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது." (ரோமர் 7:21,22,23) என்று எழுதுகிறார். இங்கு அப். பவுல் மனதளவில் நான் தேவனுக்கும் சரீர காரியத்தில் பாவத்திற்கும் அடிமையாய் இருக்கிறேன் என்கிறார். ஓ..! கிறிஸ்தவ வாசகரே! உண்மையில் நம்முடைய பழைய மனிதனின் அசுத்தமும் அவருடைய இருதயத்தில் இருந்துகொண்டு தான் இருக்கிறது என்பதைப் பற்றி அறிவும் உணர்வும் தான் நமக்கு சுத்தமான இருதயம் இருக்கிறது என்பதற்கான முடிவான சான்று. நமது வேதபகுதியை இன்னும் நெருக்கமாகப் பார்க்க முயலுவோம்.
“இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்". மலைப் பிரசங்கத்தின் எந்த அம்சத்தைப் பற்றி கருத்துத் தெரிவிப்பதற்கு முன், கர்த்தராகிய இயேசு யூத சமயத்தில் பிறந்து வளர்ந்தவர்களிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆவியால் போதிக்கப்பட்ட ஒருவர் இவ்விதமாக கூறினார், 'இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம், யூதர்கள் கடைப்பிடிக்கும் வெளிப்புற சுத்திகரிப்பு அல்லது பரிசுத்தம் மற்றும் தேவனுடனான இந்த பரிசுத்தத்தின் தொடர்பை நமது தேவன் மறைமுகமாக குறிப்பிடுகிறார் என்று நான் நினைக்காமல் இருக்க முடியாது. சிலை வழிபாட்டால் தீட்டுப்படுத்தப்பட்ட புறஜாதியாரிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தேவனுடைய மக்கள் என்று அழைக்கப்படும் இந்த யூதர்கள், கர்த்தருக்குப் பரிசுத்த மக்களாக ஏற்;படுத்தப் பட்டனர். பரிசுத்த ஜனங்களாக, ஜீவனுள்ள மெய்யான தேவனை ஆராதனை முறைகளின் மூலம் தேவனிடம் செல்லும் பாக்கியம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இத்தகைய பரிசுத்தம் மற்றும் தேவனுடன் தொடர்பு கொள்ளும் பாக்கியத்தைப் அடைந்த இவர்களில் வீண் பெருமை வந்தது.
ஆனால் மேசியா இராஜ்யத்தின் வாரிசுகளுக்கு இதைவிட ஒரு உன்னதமான தன்மையும், அதிக பாக்கியமும் இருக்கும். அவர்கள் வெளிப்புறமாக மட்டும் பரிசுத்தமாக இருப்பதுடன் நில்லாமல், “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்". தேவனின் மகிமை தங்கும் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவது மட்டுமல்லாமல், தேவனைப் தரிசிக்கவும், அவருடன் நெருங்கிய உறவுக்குள் நுழையவும் வேண்டும். யூதர்களின் வெளிப்புற சட்டங்கள் மற்றும் கடமைகளுக்கு மாறாக, மேசியாவின் ஊழியர்கள் என்கிற வகையில் நமக்கான உறவு உள்ளான ஆவிக்குரிய நிலையில் வெளிப்படுகிறது. நமக்கு முன்பாக உள்ள இந்த வசனப்பகுதி மிகவும் முக்கியமானதும், பூரிப்படையச்செய்யும் சத்தியமாயும் இருக்கிறது. (டாக்டர்: ஜான் புரௌண்)
“இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்". இயேசு சொல்லிய இந்த வார்த்தைகள் அதே நேரடி அர்த்தம் உடையதா, அல்லது உருவகமானதா? என்கிற கேள்வியில் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. ஒரு நபர் மறுபடியும் பிறக்கும்போது கிடைக்கும் புதிய இதயத்தை அது குறிக்கிறதா? அல்லது தேவ ஆவியால் பரிசுத்தப்படுத்தப்படுவதால் அவனுக்குள் நிகழும் மாற்றத்தின் தினசரி செயல்முறையைக் குறிக்கிறதா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளன. ஒருவேளை இவை இரண்டும் ஒன்றாக வருகிறதாக இருக்கலாம். ஆசீர்வாதங்களின் வரிசையில் இந்த ஆசீர்வாதம் பிந்தி வருவதால் நமது இரட்சகர் ஆசீர்வதித்த புதிய இருதய சுத்தம் என்பது நமது மறுபிறப்பின் அனுபவத்தில் தொடங்கி வளர்ந்தேறுகிற ஒன்று தான் என்று நாம் விளங்கிக்கொள்ளலாம். இருப்பினும், ஒரு இரட்சிக்கப்படாத நபரில் இதய சுத்தம் இல்லாததால், இங்கு குறிப்பிட்ட இதய சுத்தத்திற்கு மூலம் மறுபிறப்பு என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும்.
சங்கீதக்காரன் சொன்னார், “இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர். அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்” (சங்கீதம் 51:6). இன்றைய கிறிஸ்தவ வெளிப்புற மறுமலர்ச்சி மற்றும் சீர்திருத்தத்தை விட இது எவ்வளவு ஆழமானது! இங்கே வெளிப்புறப் பிரயாசங்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இன்று நாம் நம்மைச் சுற்றி இருக்கும் பெரும்பாலான கிறிஸ்தவம், செயல்களினால் மூலம் இரட்சிப்பைத் தேடும் ஒரு மதமாக அல்லது சரியான விசுவாச சட்டத்திற்கு அறிவுப்பூர்வமாக இசைந்திருப்பதை மட்டும் முக்கியப்படுத்துகிற மதமாக இருக்கிறது. ஆனால் தேவன் இதயத்தைப் பார்க்கிறார். இங்கே இருதயம் என்ற வார்த்தை மனம், ஆசைகள், சித்தம் போன்ற மனதின் உள்ளே இருக்கும் அனைத்தையும் உள்ளடக்கியது. தேவன் அந்தரங்கத்தை பார்ப்பவராக இருப்பதால், அவர் தனது மக்களுக்கு ஒரு புதிய இதயத்தைத் தருகிறார் (எசேக்கியேல் 36:26). இந்த சுத்த இதயத்தைப் பெற்றவர்கள் அனைவருமே பாக்கியவான்கள் தான்.
மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்த ஆறாவது பாக்கியமான பண்பு நமது மறுபிறப்பில் நமக்குக் கொடுக்கப்பட்ட புதிய இதயம் மற்றும் சுபாவத்தின் அடுத்தடுத்த மாற்றம், ஆகிய இரண்டையுமே குறிக்கின்றன என்று நான் நம்புகிறேன். முதலில் மறுஜென்ம முழுக்கு (தீத்து 3:5) வழியாக நமது ஆசாபாசங்கள் சுத்திகரிக்கப்பட்டு, நமது விருப்பங்கள் பூமிக்குரியவைகளாக இல்லாமல், பரத்துக்குரியவைகளாக மாற்றப்படுகின்றன. இதற்கு இணையாக “விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி” (அப்போஸ்தலர் 15:9) என்னும் வசனத்தைக் குறிப்பிடலாம். இத்துடன் சேர வேண்டியது மனசாட்சியின் சுத்திகரிப்பு - “துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.” (எபிரேயர் 10:22).
இந்த வசனங்கள் அனைத்தும் மனசாட்சியிலிருந்து பாவத்தின் சுமையை அகற்றுவதையும், விசுவாசத்தின் மூலம் நீதிமான்களாக்கப்படுவதையும் தேவனோடு சமாதனப்படுவதையும் குறிக்கிறது (ரோமர் 5:1).
ஆனால் இங்கே கிறிஸ்துவால் புதுப்பிக்கபட்ட இதயத்தின் சுத்தம் இதோடு நின்று விடாமல் முன்னோக்கி செல்கிறது. சுத்திகரிப்பு என்றால் என்ன? அசுத்தத்திலிருந்து விடுதலை, பிரிக்கப்படாத அன்பு, விசுவாசம் மற்றும் நேர்மையான தன்மை ஆகியவை. ஒரு கிறிஸ்தவப் பண்பாக நாம் அதை தெய்வீக வெளிப்படைத்தன்மை என்று விவரிக்கிறோம். இது கபடம் மற்றும் போலித்தனத்திற்கு எதிரானது. உண்மையான கிறிஸ்தவம் பொறாமை, வெறுப்பு, வஞ்சகம் மற்றும் கள்ளத்தனம் ஆகியவற்றை வெறுக்கிறது. வார்த்தைகளிலும், வெளிப்புற நடத்தையிலும் பரிசுத்தமாக நடந்துகொள்வது மட்டும் போதாது. மெய்யான தேவனுடைய பிள்ளைகள் தனது ஆசைகள், எண்ணங்கள் மற்றும் நோக்கங்களில் பரிசுத்தமாக இருக்க வேண்டும்;. இதுவே கிறிஸ்தவனின் பண்பு. ஒவ்வொரு விசுவாசியும் சந்திக்க கூடிய பரிசோதனையின் கேள்விகள் இவை தான்: பரத்துக்குரிய காரியங்களில் எனது கவனம் இருக்கின்றதா? எனது நோக்கங்கள் பரிசுத்தமானதா? நான் ஏன் தேவனுடைய பிள்ளைகளுடன் சபைகூடி வருகிறேன்? மனிதகள் பார்க்க வேண்டும் என்றா? அல்லது தேவனைச் சந்தித்து அவருடைய உறவை அனுபவிக்கும்படியாகவா?
“அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்." இந்த ஆசீர்வாதங்களுடன் இணைக்கப்பட்ட வாக்குதத்தங்களின் நிறைவேற்றம் இப்போதும் எதிர்காலத்திலும் எவ்வாறு நடைபெறும் என்பதை மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் ஆத்மீக விவேகத்தோடு இருப்பார்கள். அவர்கள் மன கண்கள்; திறக்கப்பட்டு, தேவனின் பரிசுத்தத்தைப் பார்த்து, அவருடைய குணாதிசயங்களின் மேன்மையை உணர்வார்கள். உங்கள் கண் பிரகாசமாக இருந்தால், உங்கள் சரீரம் முழுவதும் பிரகாசமாக இருக்கும். சத்தியத்தின் மீதுள்ள விசுவாசம் இதயத்தை பரிசுத்தப்படுத்துகிறது, அதனால் அவர்கள் தேவனை தரிசிப்பார்கள். சத்தியம் என்பது இயேசு கிறிஸ்துவின் முகத்தில் காணப்படுகிற தேவனின் வெளிப்பாடே அல்லாமல் வேறென்னவாக இருக்கமுடியும்! அதில் தேவனின் பரிசுத்தமும் பரிபூரண கிருபையும் இணைந்துள்ளன. விசுவாசிகள் தெய்வீக சுபாவத்தை தெளிவாகவும் திருப்திகரமாகவும் காண்பது மட்டுமல்லாமல், ஒரு நெருக்கமான, ஆனந்தமான தெய்வீக இருப்பு மற்றும் தேவனோடு உறவு ஆகியவற்றை அனுபவிக்கிறார். அவர்கள் தேவனுக்கு மிக நெருக்கமாக இருக்கிறார்கள். தேவனுடைய சித்தம் இப்போது தன்னுடைய சித்தமாகிறது, அவர்களுடைய ஐக்கியம் பிதாவுடனும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுடனும் உள்ளது.
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் இவ்விதமாக தேவனை தரிசிப்பார்கள். கடந்த காலங்களைவிட வருங்காலங்களில் தேவனைப் பற்றிய அவர்களின் புரிதல் மேலும் வளர்ச்சியடையும், மேலும் தேவனுடனான அவர்களின் ஐக்கியம் இன்னும் பெருகும். “நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருக்ஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன். இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.” (1 கொரிந்தியர் 13:9-12) அல்லது சங்கீதக்காரனின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால், “நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன். நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.” (சங்கீதம் 17:15) எனலாம். அதுவரையில், அது வரும்போது மட்டுமே, “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்” என்ற இந்த வார்த்தைகளின் முழுமையான அர்த்தமும் நமக்குத் தெளிவாகப் புரியும் (முனைவர் ஜான் பிரவுன்).
பாக்கியவான்களைக் குறித்த நம்முடைய சிந்தனை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆளுமைக்கு நம்மை வழிநடத்தவில்லை என்றால், நமது தியானம் முழுமையடையாது. பாக்கியவான்களின் பண்புகள் வரிசையை விளக்குவதற்கு நாம் ஏற்கனவே சிரத்தை எடுத்துள்ளோம். ஆனால் உண்மையில் கிறிஸ்தவனின் குணாதிசயங்கள் எந்த மாறுபாடும் இல்லாமல் கிறிஸ்துவின் குணாதிசயத்துடன் மிகவும் ஒத்ததாக இருக்க வேண்டும், இந்த ஆசீர்வதிக்கப்பட்ட மனிதனின் சரியான உதாரணத்தை நாம் கிறிஸ்துவில் காணலாம். இந்த தெய்வீகப் பண்புகள் கிறிஸ்துவில் மிகவும் பிரமாதமாக வெளிப்பட்டு, மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கின்றன, மேலும் அவை அவரைப் பின்பற்றுபவர்களிடம் மங்கலாக மட்டுமே பிரதிபலிக்கின்றன. ஒன்றிரண்டு மட்டுமல்ல, இந்த அருட்கொடைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தெய்வீக பரிபூரணங்களும் அவரில் பரிபூரணமாக உள்ளன. என்னைப் பொறுத்தவரை அவர் “சிறந்தவர்" மட்டுமல்ல, “மிகவும் சிறந்தவர்". கிறிஸ்துவை மகிமைப்படுத்த அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவர், கிறிஸ்துவின் காரியங்களை நம் ஆத்துமாக்களுக்கு வெளிப்படுத்துவாராக!
முதலாவதாக, “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்;", “அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே." அவரைக் குறித்து சொல்லிய இந்த வேத வார்த்தை எவ்வளவு பாக்கியமானது! ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தன்னுடைய வாழ்வை மாட்டுத் தொழுவத்தில் தொடங்கினார். அவர் தனது குழந்தைப் பருவத்திலும் இளமைப் பருவத்திலும் தச்சுப் பணியைச் செய்து பாடுப்பட்டார். மேலும் அவரது ஊழியத்தின் தொடக்கத்திற்குப் பிறகு, “நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுக்ஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.” சங்கீதத்தில் மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனமாக எழுதப்பட்ட பகுதிகளில் தனது ஆவியின் எளிமையைப் பற்றி பலமுறை ஒப்புக்கொண்டதை பார்க்க முடியும். “நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்." (சங்கீதம் 69:29). “கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும். நான் சிறுமையும் எளிமையுமானவன்." (சங்கீதம் 86:1). “நான் சிறுமையும் எளிமையுமானவன், என் இருதயம் எனக்குள் குத்துண்டிருக்கிறது.” (சங்கீதம் 109:22).
இரண்டாவதாக, “துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்". கிறிஸ்து உண்மையாகவே துயரப்படுபவர்களில் முதன்மையானவர். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம் அவரை “துக்கம் நிறைந்தவராகவும் பாடு அனுபவித்தவராகவும்" சித்தரிக்கிறது (ஏசாயா 53:3). “அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்படுவதை,” பாருங்கள் (மாற்கு 3:5). ஊமையும் செவிடுமான மனிதனை விடுதலையாக்கும்போது அவர் பெருமூச்சு விட்டதைப் பாருங்கள் (மாற்கு 7:34). லாசருவின் கல்லறையில் எப்படி அழுதார் என்பதைக் கவனியுங்கள். எருசலேமைப் பற்றி அவர் புலம்புவதைக் கேளுங்கள். “எருசலேமே, எருசலேமே, கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்" (மத்தேயு 23:37). கெத்செமனே தோட்டத்தில் அவர் செய்த கண்ணீருடன் கூடிய ஜெபங்களையும் மன்றாட்டுகளையும் பயபக்தியுடன் பாருங்கள் (எபிரேயர் 5:7). சிலுவையில் தொங்கும்போது, “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" (மாற்கு 15:34) என்று கதறியதை பணிவுடன் பாருங்கள். அவருடைய விண்ணப்பத்தைக் கேளுங்கள். “வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவையில்லையா? கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தினதினால் எனக்கு உண்டான என் துக்கத்துக்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்." (புலம்பல் 1:12)
மூன்றாவதாக, “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்". மகிமை நிறைந்த தேவன் மனிதனாக ஊழியம் செய்த போது காண்பித்த சாந்தகுணத்திற்கு சுவிசேக்ஷத்தில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. அவருடன் இருக்கும்படி தெரிந்துகொண்ட சீக்ஷர்கள் விவரத்தில் இதை நாம் பார்க்க முடிகிறது. அவர் தெரிந்தெடுத்தது ஞானிகளையும், கல்விமான்களையும், பெரிதும், மேன்மையுமானவர்களையும் அல்ல, மாறாக அவர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள் தான். அவருடன் தொடர்பில் இருந்த மக்களின் நிலையைப் பாருங்கள். அவர் ஐசுவரியவான்களையும் புகழ்பெற்றர்களையும் நாடாமல், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதனாய் இருந்தார் (மத்தேயு 11:19). அவர் செய்த அற்புதங்களில் இதை கவனியுங்கள். அவரால் குணமடைந்தவர்களிடம் தங்களுக்கு நேர்ந்ததை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்வதை நாம் பார்க்கலாம். அவருடைய ஊழியத்தில், பணிவானதாக இருப்பதைக் கவனியுங்கள். மாயக்காரர் செய்வதைப்போல தாரை ஊதுவியாமல், விளம்பரத்தைத் தவிர்த்து, புகழைத் துறந்து, ஊழியம் செய்து எளிமையாக வாழ்ந்தார். மக்கள் அவரை புகழ்ந்தப்போது அவர்களிடமிருந்து விலகி சென்றார். (மாற்கு 1:45, 7:17). அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்தபோது, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்." (யோவான் 6:15). அவருடைய சகோதரர்கள் தன்னை உலகுக்குக் காண்பிக்கச் சொன்ன போது, அதை மறுத்து இரகசியமாய்ப் போனார் (யோவான் 7:4-10). வேத வாக்கியங்களை நிறைவேற்றும்படி, இயேசு தம்மை இஸ்ரவேலுக்கு அறிமுகம் செய்த போதும், அவர் எருசலேமில் “தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாய்” வெளிப்படுத்தினார் (சகரியா 9:9).
நான்காவதாக, “நீதியின் மீது பசி தாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்", மனுக்ஷ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் உள்ளார்ந்த வாழ்க்கையைப் பற்றிய இந்த சுருக்கம் எவ்வளவு ஆச்சரியமானது, “நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்.” (ஏசாயா 11:5) அவர் இந்த உலகத்தில் பிரவேசிக்கும் முன் பரிசுத்த ஆவியானவர் கொடுத்த சாட்சி அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், (எபிரெயர் 10:7) பன்னிரெண்டு வயது சிறுவனாக இருந்தபோது இயேசு, “என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார்” (லூக்கா 2:49). அவருடைய ஊழியத்தின் தொடக்கத்தில், "நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்." (மத்தேயு 5:17) என்று அவர் தனது சீஷர்களிடம் கூறினார். என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது." (யோவான் 4:34) தம் சீக்ஷரிடம் பகிர்ந்தார். பரிசுத்த ஆவியானவர் அவரைப் பற்றி சாட்சியாளிக்கிறார், “நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்ததைலத்தினால் அபிக்ஷேகம் பண்ணினார்" (சங்கீதம் 45:7). எனவே “ஆண்டவரே நமது நீதி” என்று கூறுவது பொருத்தமானது.
ஐந்தாவதாக, “இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்". கிறிஸ்து இரக்கத்தின் உருவமாய் உள்ளவர். அவருடைய இரக்கமே தொலைந்துபோன பாவிகளை பரலோக மகிமையாக மாற்றியது. அவருடைய அற்புதமான, தனித்துவமான இரக்கமே, அவருடைய ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படும்படி அவர்களுக்காக சாபமாக ஒப்புக்கொடுக்கும்படி சிலுவைக்கு அழைத்துச் சென்றது அந்த இரக்கமே! எனவே, “நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்" (தீத்து 3:5). அவர் இன்றும் நமக்கான பிரதான ஆசாரியராய் நம்மீது இரக்கத்தை வெளிப்படுத்துகிறார் (எபிரேயர் 2:17). மேலும் நாம் நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகி இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருக்கிறோம் (யூதா 21). அவர் தம் மக்களுக்கு இன்னும் இரக்கம் காட்டுகிறவரார் இருக்கிறார், ஏனெனில் “அந்த நாளில் கர்த்தர் நமக்கு இரக்கம் அளிப்பார்" (2 தீமோத்தேயு 1:18).
ஆறாவது, “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்" இந்த வசனம் கூட கிறிஸ்துவில் முழுமை பெறுகிறது. அவர் “குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து” (1 பேதுரு 1:19). அவர் மனிதனானபோது, அவர் மனித அசுத்தங்களால் தீட்டுப்படவில்லை. அவருடைய மனித வாழ்வு பரிசுத்தமானதாக இருந்தது (லூக்கா 1:36). அவர் “பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும்” ஆகவே இருந்தார் (எபிரேயர் 7:26). "அவரிடத்தில் பாவமில்லை" (1 யோவான் 3:5). எனவே, "அவர் பாவஞ்செய்யவில்லை (1 பேதுரு 2:22) அவர் பாவம் அறியாதவராக இருந்தார் (2 கொரிந்தியர் 5:21). அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறார்" (1 யோவான் 3:3). பரிபூரணமான பரிசுத்த சுபாவத்தை அவர் கொண்டிருப்பதால் அவருடைய செயல்கள் அனைத்தும் பரிசுத்மானவை. “நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை” (யோவான் 8:50) என்ற வேத வார்த்தைகளில் அவருடைய வாழ்க்கையின் முழு சாராம்சமும் அடங்கியுள்ளது.
ஏழாவது, “சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்", அவருடைய சிலுவையின் இரத்தத்தால் நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணிவர் என்பது நமது இரட்சகருக்கு மிகவும் பொருத்தமானது. தேவன் அவரை நம் பாவம் போக்கும் “கிருபாதாரபலியாக” ஏற்படுத்தினார். அதாவது அவர் தேவனுடைய கோபத்தைச் சாந்தப்படுத்தி, உடைத்துப்போடப்பட்ட நியாயப்பிரமாணத்தின் நீதியை முழுமையாக நிறைவேற்றவும், தேவனுடைய நீதியை மகிமைப்படுத்தவும் நியமிக்கப்பட்டார், அவர் இதுவரை பிரிந்திருந்த யூதர்களையும் புறஜாதிகளையும் ஒன்றிணைத்தார் (எபேசியர் 2:11 ஐப் பார்க்கவும்). இனிவரும் நாட்களில் இந்த சபிக்கப்பட்டதும் யுத்தங்களால் சிதைந்ததுமான பூமியில் சமாதானத்தை ஏற்படுத்துவார். அவர் தனது தந்தையாகிய தாவீதின் சிம்மாசனத்தில் அமர்வார். அப்போது, “அவருடைய கர்த்தத்துவத்திற்கும் அதன் சமாதானத்துக்கும் முடிவு இல்லை" என்ற வாக்குத்தத்தம் நிறைவேறும் (ஏசாயா 9:7).
எட்டாவது, “நீதியினிமித்தம் துன்புறுத்தப்பட்டவர்கள் பாக்கியவான்கள்" இயேசுவைப்போல ஒருவரும் நீதிக்காகத் துன்பப்பட்டிருக்க முடியாது. வெளிப்படுத்துதல் 12:4 எவ்வளவு அற்புதமாகன வார்த்தை பாருங்கள்! தீர்க்கதரிசனத்தின் ஆவியால் அவர் முன்னறிவித்தது, “சிறுவயது முதல் நான் சிறுமைப்பட்டவனும், மாண்டுபோகிறவனுமாய் இருக்கிறேன்” (சங்கீதம் 88:15). அவருடைய ஊழியத்தின் ஆரம்ப கட்டத்தில், இயேசுவுக்கு நேர்ந்ததை வாசிக்கிறோம். “எழுந்திருந்து, அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர்கட்டப்பட்ட செங்குத்தான மலைசிகரத்தில் இருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளி விடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டு போனார்கள்” (லூக்கா 4:29). தேவாலய வளாகங்களிலும் அவர் மீது கல்லெறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டனர் (யோவான் 8:59). அவர் தனது ஊழியத்தின் ஒவ்வொரு அடியிலும் எதிரிகளை எதிர்கொண்டார். சுயநீதியுள்ள யூதர்கள் அவரைப் பேய் பிடித்தவன் என்று குற்றம் சாட்டினார்கள் (யோவான் 8:48). நகர வாசலில் அமர்ந்திருந்தவர்களும் அவருக்கு விரோதமாய்ப் பேசினார்கள். மதுபானம் பண்ணுகிறவர்களின் பாடலும் ஆனார் (சங்கீதம் 69:12). அவரை விசாரிக்கையில் அவருடைய தலை முடியைப் பிடுங்கினார்கள் (ஏசாயா 50:6), முகத்தில் துப்பி, ஏளனம் செய்து, தங்கள் கைகளால் அவரைத் தாக்கினார்கள் (மத்தேயு 26:67). அவர் (இயேசு) கசையடியால் அடிக்கப்பட்டு, முட்களால் முடிசூட்டப்பட்டு, தனது சொந்த சிலுவையை கல்வாரிக்கு எடுத்துச் சென்றார், அங்கு அவர் சிலுவையில் அறையப்பட்டார். இறக்கும் தருணத்தில் கூட, அவர் அவரை அமைதியாக விடவில்லை. அவர்கள் அவரை பல வழிகளில் வன்முறைக்கு உட்படுத்தி, கேலிகளால்; துன்புறுத்தினர். இதையெல்லாம் ஒப்பிடுகையில், அவருக்காக நாம் அனுபவிக்கும் துன்புறுத்தல் எந்த வகையிலும் மிகவும் இலகுவானதே!
இவ்வாறே இந்த பாக்கியப்பண்புகளுடன் இணைக்கப்பட்ட வாக்குறுதிகள் கிறிஸ்துவில் முழுமையாக நிறைவேற்றப்படுகின்றன. அவர் ஆவியில் எளிமையானவராக இருந்தார், ஆனால் பரலோக ராஜ்யம் முதன்மையாக அவருக்கு சொந்தமானது. அவர் புலம்பினார், ஆனால் அவர் தனது துன்பத்தின் பலனைக் கண்டு ஆறுதல் அடைவார். அவர் சாந்தத்தின் மொத்த உருவம், ஆனால் மகிமையின் சிங்காசனத்தில் அமர்வார். அவர் நீதிக்காகப் பசிதாகம் உடையவராய் இருந்தார்;, ஆனால் இப்போது அவர் தம்முடைய ஜனங்களுக்காக ஆயத்தம்; செய்திருக்கும் நீதியில் மக்கள் பயனடைவதைக் கண்டு திருப்தியடைகிறார். அவர் இதயத்தில் தூய்மையானவர், அதனால் கடவுளை யாரும் பார்க்காத வகையில் பார்க்கிறார் (மத்தேயு 11:27). அவர் சமாதானம் பண்ணுகிறவர் என்பதால்;, அவருடைய இரத்தத்தால் வாங்கப்பட்ட அனைவரும் அவரைக் கடவுளின் மகன் என்று சொந்தங் கொண்டாடுகிறார்கள். பாடுசகிக்கிறவராக, அவர் பெற்ற வெகுமதி தனித்துவமானது. எல்லா நாமங்களுக்கும் மேலாக அவருடைய நாமம் உயர்த்தப்பட்டது. பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்க்கையை மனுபுத்திரரில் மிகவும் அழகானவராகிய தேவகுமாரன் குறித்த சிந்தையால்; அதிகமதிகமாக நிரப்புவாராக!
“அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது." (2 கொரிந்தியர் 4:17)
உபவத்திரத்தினால் மனம் தளராமல் இருப்பதற்கும், துன்பங்களில் மனம் தளராமல் இருப்பதற்கும் இந்த வசனம் ஒரு பெரிய காரணத்தைத் தருகிறது. குறுகிய கால உபவத்திரத்தை நித்தியத்தின் வெளிச்சத்தில் பார்ப்பதற்கு நம்மை இந்த வசனம் ஊக்குவிக்கிறது. இப்போதைய உபவத்திரங்கள் உள்ளான மனிதனின் மீது நன்மையான விளைவை ஏற்படுத்தும் என்பதை இந்த வசனம் குறிக்கிறது. இந்த சத்தியத்தை நீங்கள் உறுதியாக விசுவாசித்தால், வலிமிகுந்த நிகழ்கால அனுபவங்களை நீங்கள் எளிதாக சமாளிக்க முடியும். இந்த கொஞ்சக்கால உபவத்திரம் நமக்கு மேலும் மேலும் நித்திய மகிமையைக் கொண்டு வரும். நம்முடைய உபவத்திரம் இலகுவானது. அது குறுகிய காலம் மட்டுமே இருக்கும். ஆனால் வரப்போகும் மகிமையோ பெரியதும், நித்தியமானதும் ஆகும். இந்த வேறுபாட்டின் முக்கியத்துவத்தைத் தெளிவாக புரிந்து கொள்ள இந்த வசனத்தின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக பகுப்பாய்வு செய்ய வேண்டும். ஆனால் இந்த வசனப்பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளை கடைசியில் இருந்து பார்ப்போம்.
இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், “மகிமை" என்பதற்கு “கபோத்" என்ற எபிரேய வார்த்தைக்கு “கனம்" என்றும் அர்த்தம் உண்டு. தங்கம் மற்றும் விலையுயர்ந்த இரத்தினங்களின் எடை அதிகரிக்கும் போது அவற்றின் மதிப்பும் அதிகரிக்கிறது. பரலோகம் சமப்ந்தமான பேரானந்தத்தை உலக சம்ந்தமான புரிதலுக்குள் விவரிக்க இயலாது. அடையாளத்தால் தரப்படும் விளக்கங்கள் முழுமையற்றது. இந்த வசனத்தில் விரிவான விளக்கங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு விசுவாசிக்கு நித்தியத்தில் மகிமை காத்திருக்கிறது. நாம் மகிமையானது என்று சொல்லும்போது மிகவும் சிறப்பானதையும் பூரணமானதையும் விளக்கும் மனித மொழி வர்ணனையின் உட்சபட்ச எல்லையை அடைந்து விடுகிறோம். ஆனால் விசுவாசிக்குக் காத்திருக்கும் மகிமையானது அந்த எல்லைகளைவிட மிகவும் கனமானது, பூமிக்குரியவைகள் வேறு எதுவும் அதனுடன் ஒப்பிட முடியாதது, அதன் மதிப்பீடு மதிப்பீடுகளின் அளவுகளுக்கும் அப்பால் செல்கிறது. அதன் மகத்தான மதிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. இந்த அற்புதமான மகிமை நிலையற்றதாகவும் அல்லது தற்காலிகமானதாகவும் இல்லாமல், தெய்வீகமானதும் மற்றும் நித்தியமானதுமாக இருக்கிறது. அது தெய்வீகமனதாக இல்லாவிட்டால் அது நித்தியமாக இருக்க முடியாது. ஆம், நம்முடைய மகிமையான தேவன் அவருக்குத் தகுதியானதையும், அவரைப் போன்றதையும், அதாவது அவரைப் போலவே முடிவில்லாத மற்றும் நித்தியமானதை நமக்குக் கொடுக்கப்போகிறார்.
(அ) "உபவத்திரம்" என்பது மனிதனுக்கு வருகிற இயல்பான ஒன்று தான். “அக்கினிப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனுக்ஷன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான்" (யோபு 5:7). இது பாவத்தின் விளைவுகளின் ஒரு பகுதியாகும். வீழ்ந்த மனிதன் தன் பாவ நிலையில் இருந்துக்கொண்டே மகிழ்ச்சியை அனுபவிப்பது தகுதியாக இருக்க முடியாது. தேவனுடைய பிள்ளைகளும் இதற்கு விதிவிலக்கல்ல, “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும்" (அப்போஸ்தலர் 14:22). மகிமையான மற்றும் அழியாமைக்குக் கொண்டு செல்வதற்கு, தேவன் நம்மை இடுக்கமான பாதையில் வழிநடத்துகிறார்.
(ஆ) நம்முடைய உபவத்திரம் இலகுவானது. உபவத்திரம் என்றாலே இலகுவாக இருக்காது. பெரும்பாலும் அவை சுமையாகவும், வருத்தமாகவும் இருக்கும். இருப்பினும், பொதுவாக அவை இலகுவானவை. நாம் எதற்கு பாத்திரவான்கள் என்பதை ஒப்பிடும்போது அவை இலகுவானவை தான். நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பாடுகளுடன் ஒப்பிடும்போது அவை இலகுவானவை. ஆனால், நாம் பெறப்போகும் மகிமையின் ஸ்தானத்தை ஒப்பிடும் போது, நமது உபத்திரவம் உண்மையாகவே இலகுவானது எனபது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. இதே அப்போஸ்தலனாகிய பவுல் வேறொரு இடத்தில் இவ்விதமாக கூறுகிறார், “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்" (ரோமர் 8:18).
(இ) உபத்திரவம் தற்காலிகமானவை. நம்முடைய உபத்திரவம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தாலும், அத்தகைய வாழ்க்கை மெத்தூசலாவைப்போல நீடிய ஆயுளாகப் போனாலும்;, நமக்கு கிடைக்போகும் நித்தியத்துடன் ஒப்பிடும்போது இதுவும் லேசானதே! நம்முடைய உபத்திரவம் சிறிது காலம் தோன்றி மறைந்து போகும் நீராவி போன்றது. நம்முடைய உபவத்திரத்தை சரியான கண்ணோட்டத்தில் பார்க்க தேவன் நமக்கு ஞானத்தை தருவாராக.
சிறிது காலம் மட்டும் இருக்கும் நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. நிகழ்காலம் எதிர்காலத்தைப் பாதிக்கிறது. இதைப் பற்றி நாம் தத்துவ ரீதியில் தர்க்கம் செய்வது சரியல்ல. தேவனுடைய வார்த்தையை அவர் சொன்ன விதமாக விசுவாசிப்பது நமக்கு மிகவும் முக்கியம். மற்றவர்களின் அனுபவம், மற்றும் அவர்களுடைய உணர்வு இதிலிருந்து வேறுபட்டிருக்கலாம். பல சமயங்களில் உபத்திரவங்கள் நம்மை சோர்வடையச் செய்யவும், எதிர்த்து நிற்கிறவர்களாக மாற்றவும், திருப்தி அற்றவர்களாக்கவும் வருவது போல நமக்கு தோன்றுகிறது. நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மற்றும் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த உபத்திரவங்கள் நமது மாம்ச இயல்பை பரிசுத்தப்படுத்த அனுப்பப்படவில்லை. அவை நம்மில் உள்ள “புதிய மனிதனின்" நன்மைக்காகவே உள்ளன. அது மட்டுமல்ல, வரப்போகும் மகிமைக்கு நம்மை தயார்படுத்த இந்த உபத்திரம் உதவுகிறது. உபத்திரவம் நம்மை உலகத்தின் மீதான ஆர்வத்திலிருந்து பிரித்து விடுகிறது. இந்தப் பாவமும்; துக்கமும் நிறைந்த உலகத்திலிருந்து நாம் விடுவிக்கப்படும் சமயத்தை அதிகம் அதிகமாக எதிர்நோக்கும்படி செய்கின்றது. தேவன் தம்மை நேசிப்பவர்களுக்காக ஏற்படுத்தியிருக்கிறவைகளைப் புரிந்துகொள்ள இவை நமக்கு உதவுகின்றன.
ஆனால் விசுவாசி செய்ய வேண்டியது இதுதான். தராசின் ஒருபுறத்தில் உபத்திரங்களையும், மறுபுறம் வரவிருக்கின்ற மகிமையையும் வைத்துப் பாருங்கள். நாம் அவற்றை ஒப்பிட முடியுமா? அதை ஒப்பிடவே முடியாது. மகிமையின் ஒரு கணம் வாழ்நாள் முழுவதும் பட்ட உபவத்திரத்தை விட அதிகமாக உள்ளது. தேவனின் வலது பாரிசத்தில் நித்திய மகிழ்ச்சியோடு இருப்பதை ஒப்பிடுகையில் இந்த வருடங்கள் ஏற்படும் உபத்திரம், நோய், வறுமை, இக்கட்டுகள் மற்றும் இரத்த சாட்சியாக மரிப்பது ஆகியவை பரலோகத்தில் தேவனுடைய வலதுகரத்தில் நாம் எப்போதும் அனுபவிக்கப்போகும் இன்பங்களுடன் ஒப்பிடும்போது, நாம் பரத்தில் சுவாசிக்கும் ஒரு மூச்சு காற்று இந்த உலகின் அனைத்துவித எதிர்மறையான அனைத்தையும் இது அணைத்துப் போடும்;. பிதாவின் வீட்டில் நாம் கழிக்கும் ஒரு நாள் இந்த பயங்கரமான வனாந்தர வாழ்க்கையைவிட அதிக மகிழ்ச்சியைத் தரப்போகிறது. வரப்போகும் மகிமையில் நமக்காக ஆயத்தம் செய்யப்பட்டுள்ளதை இப்போதும் நாம் எதிர்பார்ப்புடன் அனுபவித்து ஆனந்தப்பட வேண்டிய விசுவாசத்தையும் பெலத்தையும் தேவன் நமக்குத் தந்தருள்வாராக!
“ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்." (பிலிப்பியர் 4:11).
நிறைவற்ற தன்மை! உலகில் எப்போதாவது இவ்வளவு அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதா? இருக்காது என்பதில் சந்தேகம் வேண்டாம். நாம் பெருமைப்படும் அளவிற்கு வளர்ச்சியும், ஐசுவரியத்தின் மிகப்பெரிய விருத்தியும் இருந்தும், அனுதின சந்தோக்ஷங்களுக்காக நேரத்தையும் பணத்தையும் செலவழித்தாலும், திருப்தியின்மை எங்கும் வியாபித்திருக்கிறது. எந்த தரப்பு மக்களும் இதில் விதிவிலக்கல்ல. எலே;லாரும்; உறுதியற்றும், திருப்தியற்றும் இருக்கிறார்கள். தேவனுடைய மக்களிலும் அநேகர்சுகூட இந்த சந்ததியின் அசுத்த ஆவியாகிய திருப்தியின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மனநிறைவு! அத்தகைய அனுபவத்தைப் பெறுவது சாத்தியமா? அல்லது இது ஒரு நல்ல கற்பனை மட்டுமா? அல்லது கிட்டத்தட்ட கனவில் வரும் கதையைப் போன்றதா? அதைப் பூமியில் பெறுவது சாத்தியமா? அல்லது பரலோகத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும்தான் அது பொருந்துமா? ஒருவேளை பூமியில் அதைப் பெற முடிந்தால், அது நிலைத்திருக்குமா? அல்லது சில காலத்திற்கு மட்டும் நிடிக்குமா? இதுபோன்ற எல்லாக் கேள்விகளுக்கும் அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளில் பதில் இருக்கிறது. “ என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை. ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்" (பிலிப்பியர் 4:11).
பவுலின் இந்த வார்த்தைகளை அவர் எந்த சூழலில் எழுதினார் என்பதைக் கவனித்தால் நாம் அதின் வீரியத்தை நன்றாகப் புரிந்துகொள்வோம். இந்த நிருபத்தை அவர் எழுதும்போது (அல்லது ஒருவேளை வேறொரிடம் சொல்ல அந்த உதவியாளர் எழுதியிருக்கலாம்), அவர் பேரரசர் அரண்மனை மெத்தையில் இருந்து எழுதவில்லை. அல்லது நல்ல வசதியான மற்றும் தங்கள் தேவபக்தியில் சிறந்து விளங்கிய கிறிஸ்தவருடைய மாளிகையில் இருந்தும் எழுதவில்லை. மாறாக அவர் சிறையில் (பிலிப்பியர் 1:13-14) கட்டப்பட்டவராக இதை எழுதுகிறார். வேறொரு நிருபத்தில் கட்டுண்டவன் என்று தன்னை அடையாளப்படுத்துகிறார் (எபேசியர் 4:1). இந்த நிலையில் இருந்தாலும் அவர் மனரம்மியமாக இருப்பதை வெளிப்படுத்துகிறார்.
கொள்கைக்கும் நடைமுறைக்கும், இலட்சியத்திற்கும் அனுபவத்திற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. ஆனால் அப். பவுலின் விக்ஷயத்தில், மனநிறைவு என்பது இடைவிடாத உண்மையான அனுபவமாக இருக்கிறது. “நான் எந்த நிலைமையிலிருந்தாலும்” என்ற அவரது வார்த்தைகளை நாம் கவனிக்கிறோம். ஆனால் பவுல் எப்படி அத்தகைய அனுபவத்தில் பிரவேசித்தார்? இத்தகைய அனுபவம் எதைக் கொண்டுள்ளது? முதல் கேள்விக்கான பதிலை "மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்" என்பதில் நாம் காணலாம். 'ஆவியின் ஞானஸ்நானத்தை நான் பெற்றதால் மனநிறைவை பெற்றேன்,” என்று அவர் கூறவில்லை. இந்த ஆசீர்வாதத்தை தேவனுக்கு முழுமையாக அர்ப்பணித்ததினால் பெற்றுக்கொண்டேன் என்றும் அவர் கூறவில்லை. அது நம்முடைய உள்ளார்ந்த குணத்தால் இல்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அவர் அதை கிறிஸ்தவ அனுபவம் என்ற பள்ளியில் கற்றுக்கொண்டார். இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விக்ஷயம் என்னவென்றால், அவர் தன்; தனது ஊழியத்தின் கடைசி நாட்களில் எழுதிய நிருபங்களில் ஒன்றில் இந்த வாக்கியத்தை எழுதினார்!
அப். பவுல் அனுபவித்த “மனநிறைவு" நேர்மறையான மற்றும் இனிமையான சந்தர்ப்பத்தில் இருந்து வரவில்லை என்பது மேலே சுட்டிக்காட்டப்பட்ட உண்மையிலிருந்து தெளிவாகிறது. அதிலிருந்து மாறுபட்ட சில பொதுவான கருத்துக்களையும் நீக்குகிறார்கள். ஒருவரின் இதயத்தின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றாமல் திருப்தி அடைய முடியாது என்பது அநேகர் நினைக்கிறார்கள். சிறைசாலையில் மனநிறைவான ஒருவரை யாரும் பார்ப்பதில்லை. எனவே ஒன்று தெளிவாகிறது இங்கு குறிப்பிடப்படும் மனநிறைவு என்பது வெளிதோற்றத்தில் அல்ல, உள்ளிருந்து வருபவை. இதை தேவனிடம் இருந்தே பெறும்படி நாட வேண்டும், மற்ற படைப்பின் மகிழ்வில் அல்ல.
இன்னும் கொஞ்சம் ஆழமாகச் செல்ல முயற்சிப்போம். மனநிறைவு என்றால் என்ன? இது தேவனின் சர்வவல்ல திட்டதில் வரும் அவருடைய பராமரிப்பில் திருப்தியாய் இருப்பது தான். இது முறுமுறுப்புக்கு எதிரானது. முறுமுறுப்பு தேவனுக்கு எதிரான கலகக் குரல் எழுப்பி, ஒரு களிமண் தன்னை வனைந்தவனைப் பார்த்து, “என்னை ஏன் இப்படி உருவாக்கினீர்” என்று கேள்வி கேட்பதற்குச் சமம் (ரோமர் 9:20). தன் நிலையைக் குறித்து முறுமுறுப்பதைவிட, மனரம்மியம் உள்ள மனிதன் தனது சூழ்நிலையும் காரியங்களும் இன்னமும் மோசமாக இல்லை என்பதை எண்ணி தேவனுக்கு நன்றி சொல்கிறான். தனக்கு இருக்கும் நிகழ்காலத் தேவைக்கும் அதிகமாக இச்சிப்பதைக் காட்டிலும், தன்னைக் குறித்து இன்னும் தேவன் கரிசனையாக இருக்கிறார் என்று ஆண்டவருக்குள் அகமகிழ்கிறான். அப்படிப்பட்டவன் தான் தன்னிடம் உள்ளதைப் போதும் என்கிற மனநிலையுடன் திருப்தி அடைகிறவன் (எபிரெயர் 13:5).
பேராசை தான் மனநிறைவுக்கு எதிரான கொடிய தடையாக இருக்கிறது. அது ஒரு புற்றுநோயைப் போல நிகழ்கால மனநிறைவை அரித்து விடுகிறது. “பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்” (லூக்கா 12:15) என்று கர்த்தர் தம்முடைய சீக்ஷர்களுக்கு கனமான எச்சரிக்கையைக் கொடுத்ததற்குக் காரணமில்லாமல் இல்லை. சில காரியங்கள் நம்மை இன்னும் ஏமாற்றும். அவை சேமிப்பு, வருங்கால பாதுகாப்பு, அதாவது வேலை செய்ய முடியாத காலங்களுக்காக இருப்பு வைத்தல் போன்ற நல்ல பெயர்களில் தோன்றுகின்றன. வேதம் பண ஆசையை “விக்கிரக வழிபாடு" என்று அழைக்கிறது. “விக்கிரகாராதனையான பொருளாசை” (கொலோசெயர் 3:5) என்பது தேவன் மீது இருதயத்தை வைக்காமல் பொருள்களின்மீது இருதயத்தை சாயப்பண்ணுவதாகும். “தா, தா, என்கிற இரண்டு குமாரத்திகள்” (நீதி. 30:15) உடைய அட்டையைப் போன்றது பொருளாசையுடைய இருதயத்தின் மொழி. பேராசை கொண்ட ஒரு மனிதன் தன்னிடம் சிறிதளவு இருந்தாலும் அல்லது நிறைவானதாக இருந்தாலும் இன்னும் வேண்டுமென்றே விரும்புகிறான். இது பவுலின் வார்த்தைகளின் இருந்து எவ்வளவு மாறாக இருக்கிறது பாருங்கள்: “உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம்” (1 தீமோ. 6:8). லூக்கா நற்செய்தியில் உள்ள இந்த வார்த்தைகள் கட்டாயம் நமக்குத் தேவையானவை: “உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள்" (லூக்கா 3:14).
“போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்" (1 தீமோத்தேயு 6:6). இந்த வேத வார்த்தை நம்மை கவலை, அடிமைத்தனம், பேராசை மற்றும் சுயநலம் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கிறது. இந்த மனநிலை தேவன் கொடுப்பவைகளில் ஆனந்தப்படுவதற்;கு நமக்கு விடுதலையைக் கொடுக்கிறது. இதற்கும் பின்வரும் வார்த்தைகளிலும் உள்ள வேறுபாட்டைக் கவனியுங்கள்: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுக்ஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்." (1தீமோத்தேயு 6:9-10). இந்த உலக கவலையிலிருந்து நம்மை விடுதலை செய்து, நம்மிடம் இருப்பதில் மனநிறைவு அடைய அருள்புரிவாராக.
மனநிறைவு என்பது தேவனைச் சார்ந்து இளைப்பாறும் இதயத்திலிருந்து வருகிறது. தேவன் தருகிற எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை அனுபவிக்கும் ஆத்துமாவின் நிலை. தேவனுடைய சித்தத்திற்கு என் விருப்பத்தை ஒப்புக்கொடுத்ததால் வரும் மனநிலை அது. தேவன் எல்லாவற்றையும் திறம்பட செய்கிறார் என்பதை உறுதிபட நம்பும் ஆனந்த பாக்கியம். இப்போதும் அவர் சகலத்தையும் நன்மைக்கேதுவாக நடப்பிக்கிறார் என்கிற உறுதிப்பாடு. இந்த அனுபவத்தை “தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறிவதால்” (ரோமர் 12:2) பெறமுடிகிறது. நம் வாழ்வில் அனுமதிக்கப்படும் அனைத்தும் தவறு செய்ய முடியாத சர்வவல்லமையுள்ள தேவனின் கையிலிருந்து வருகிறது. அவர் தம் பிள்ளைகள் தேவையில்லாமல் ஒரு கண்ணீரைக் கூட சிந்துவதை விரும்பாத அளவு அன்பானவர் என்பதை நாம் புரிந்து ஏற்றுக்கொண்டால் மட்டுமே, நமக்கு உண்மையான மனநிறைவு கிடைக்கும்.
நமது கடைசி வார்த்தைகள் கீழ்கண்டவாறு இருக்கட்டும்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சந்நிதியில் அதிகம் இருப்பதால் மட்டுமே உண்மையான மனநிறைவு சாத்தியம். அதைத்தான் நமது தியானப்பகுதி வலியுறுத்தி உள்ளது: “தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும். எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" (பிலிப்பியர் 4:12,13). ஒருபோதும் திருப்தியற்றவராகவே இல்லாத பிதாவுடன் நாம் நெருங்கிய உறவில் பழகி இருக்கும்போதுதான், முறுமுறுக்கும் பாவத்திலிருந்து நாம் விடுபட முடியும். இதைப் படிக்கிறவர்களும், எழுதுகிறவரும், தேவனுடைய வார்த்தையாகிய கண்ணாடியால் கர்த்தருடைய மகிமையை தரிசித்து, அதன் விளைவாக, “ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து” மறுரூபப்படுவோமாக (2 கொரிந்தியர் 3:18).
“கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது." (சங்கீதம் 116:15).
மாம்சத்தில் மிகவும் இருக்கத்தை ஏற்படுத்தும் மிகப்பெரிய காரியத்தைப் பற்றிய ஆசீர்வாதமும் ஆறுதலும் தரும் வேத வசனங்களில் ஒன்று தான் நமது தியான வசனப்பகுதி. தேவனுடைய மக்கள் பெரும்பாலும் இந்த காரியத்தில் தேவ வார்த்தை என்ன சொல்லுகிறது. என்தை ஜெபத்துடன் ஆராய்ந்து, விசுவாசித்து புரிந்துகொண்டார்கள் என்றால், மரண பயத்திலிருந்து முழுமையாக இல்லாவிட்டாலும் பெரிய அளவில் விடுவிக்கப்படுவார்கள். ஐயோ! பலர் அவ்விதமாக இல்லாமல் அதற்கு பதிலாக தங்கள் எண்ணங்கள் மற்றும் கற்பனைகளுக்கு இடமளித்து, பயத்துக்கு ஆளாகிறார்கள். அவர்கள் விசுவாசத்து நடவாமல் தரிசித்து நடக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரை நோக்கிப் பார்த்து, அவருடைய வழிநடத்துதலுடன் வேத வசனத்தின்; வெளிச்சத்தில் ஒரு கிறிஸ்தவனின் மரணம் குறித்த தேவனுடைய வெளிப்பாட்டை அறிந்து, மரணம் பற்றிய சோகத்தையும், அவிசுவாசத்தையும் அகற்ற முயற்சிப்போம்.
“கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது." (சங்கீதம் 116:15). ஒரு விசுவாசி மாரிக்கும் போது தேவன் அவர் மீது கவனம் செலுத்துகிறார் என்பதை இந்த வேத வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. “அவர் பார்வைக்கு" என்ற வார்த்தையைக் கவனியுங்கள், தேவனுடைய கண்கள் எப்போதும் நம்மீது உள்ளன எனபது உண்மையே! அவர் உறங்குகிறதில்லை, தூங்குகிறதுமில்லை. நீர் என்னைக் காண்கிற தேவன் என்று நாம் எல்லாக் காலங்களிலும் அறிக்கைசெய்கிற உண்மைதான் அது. ஆனால் நம்முடைய முக்கியமான சந்தர்ப்பங்களில் அவர் அதிகக் கரிசனையும் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று வேதம் சொல்கிறது. “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும் ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்” (சங்கீதம் 46:1). “நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்” (ஏசாயா 43:2).
"கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது", இந்த வசனம் மரணத்தைப் பற்றி மிகவும் அரிதாகவே விசுவாசிகள் சிந்திக்கின்ற அம்சத்தை நம் முன் நிறுத்துகிறது. தேவனுடைய பார்வையில் இதை அவர் எவ்வாறு காண்கிறார் என்பதை இங்கே நாம் காண்கிறோம். மற்ற காரியங்களைப் போலவே மரணத்தைப் பற்றியும் நமது பார்வையில் அதிகம் சிந்திக்கிறோம். ஆனால் இந்த வேதபகுதி மரணத்தைப் பரலோக கண்ணோட்டத்தில் குறிப்பிடுகிறது. அது பயங்கரமானது, துயரமானது, மோசமானது என்று சொல்லாமல் “அருமையானது” என்று கூறுகிறது. இது நம்மில் ஒரு கேள்வியை எழுப்புகிறது: தேவனுடைய பக்தர்களின் மரணம் அவருடைய பார்வையில் ஏன் மதிப்புமிக்கதாக இருக்கிறது? மனித வாழ்வின் இந்தக் கடைசி நிகழ்வு அவருக்கு அருைமாய் இருப்பது ஏன்? இதற்கு ஓரிரு பதில்களை விரிவாகக் கூறாமல் சுருக்கமாகத் தர முயல்கிறேன்.
பரிசுத்தவான்கள் எப்போதும் அவருக்கு அன்பானவர்கள்! அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே, வானங்கள் உருவாவதற்கு முன்னரே, அவருடைய அன்பு அவர்களின் மீது இருந்தது. அவர்களுக்காகவே அவர் தன்னுடைய உன்னதமான ஸ்தானத்தை விட்டு வந்தார். அவருடைய பரிசுத்தமான விலைமதிப்பற்ற இரத்தத்தை சிந்தி, இரட்சிப்பை கொடுப்பதற்காக தன் உயிரை தியாகமாக மனமுவந்து கொடுத்தார். அந்த பிரதான ஆசாரியரின் இதயத்தில் எழுதப்பட்டு, அவருடைய உள்ளங்கைகளில் பொறிக்கப்பட்டது அவர்களுடைய பெயர்களே! அவர்கள் அவரது பிதாவின் அன்பின் பரிசுகள். தம்முடைய பிள்ளைகள். அவரது சரீரத்தின் அங்கங்களாக இருக்கிறார்கள். ஆகவே அவர்ள் சம்பந்தப்பட்ட அனைத்தையும் அவர் நேசிக்கிறார். அவர்களின் தலையில் உள்ள முடியெல்லாம் எண்ணப்படும் அளவிற்கு அவர்கள் மீதான நேசம் ஆழமானது. அவர் தம்முடைய தூதர்களை அவர்களுக்கு ஊழியம் செய்யவும், அவர்களைப் பாதுகாக்கவும் அனுப்புகிறார். அவர்கள் அவருக்குப் பிரியமானவர்களாய் இருப்பதால் அவர்களுடைய மரணம் கூட பார்வைக்கு அருமையானது.
நாம் உபத்திரம் படுவது அவசியமாக இருக்கிறது. நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும் (அப்போஸ்தலர் 14:22). ஆனால் "அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை." (புலம்பல் 3:33) தேவன் நம்முடைய உபத்திர விக்ஷயத்தில் அலட்சியமாக இருப்பதில்லை. தம் பழைய ஏற்பாடு மக்கள் குறித்து இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்” (ஏசாயா 63:9). “தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்” (சங்கீதம் 103:13). அதேப்போல நமது பிரதான ஆசாரியராகிய இயேசு கிறிஸ்து நமது பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடியவர் என்று நாம் வாசிக்கிறோம் (எபிரெயர் 4:15). ஆகையால் இங்கே அவருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவருடைய பார்வையில் விலைமதிப்புள்ளதாக இருப்பதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது – அதாவது அது அவர்களின் கவலைகள் மற்றும் பாடுகளுக்கு முடிவைக் குறிக்கிறது.
தேவன் தான் நேசிப்பவர்களின் தேவைகளை சந்திக்க ஊழியம் செய்வதைத் தவிர அவருடைய அன்பு வேறு எதிலும் திருப்தி அடைவதில்லை. மரண நேரத்தை விட ஒரு கிறிஸ்தவனுக்கு மிகவும் தேவையான உதவி வேறு எதிலும் இருக்காது. மனிதனின் இக்கட்டு தேவனின் செயல்பாட்டிற்கான வாய்ப்பு. எனவே இக்கட்டான சூழ்நிலையில் பிதாவாகிய தேவன் நடுங்கிக் கொண்டிருக்கும் தன்னுடைய பிள்ளையிடம், “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன். திகையாதே. நான் உன் தேவன். நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்" (ஏசாயா 4:10). இந்த காரணத்திற்காகவே ஒரு விசுவாசி நம்பிக்கையுடன் கூற முடியும்: “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன். தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர். உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்" (சங்கீதம் 23:4). நம்முடைய ஒவ்வொரு பலவீனமும் அவருடைய பலத்தை நோக்கி அபயமிடுகிறது. நம்முடைய தேவை அவருடைய சர்வ வல்லமையுள்ள ஈவுக்காக வேண்டுகிறது. இந்தச் சத்தியம் ஆசீர்வாதமான வகையில் இந்த வார்த்தைகளில் உதாரணப்படுத்தப்படுகிறது: “ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்” (ஏசாயா 40:11). ஆம், நம்முடைய பலவீனங்களில் அவருடைய வல்லமை பூரணப்படுத்தப்படுகிறது. ஆகவே, அவருடைய அன்பாலும், கருணையாலும், வல்லமையாலும் அவருடைய பரிசுத்தவான்களுக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்பாக மரணம் இருப்பதால், அது தேவனுடைய பார்வையில் அருமையானது.
தேவன் தன்னுடைய மக்கள் தன்னோடு இருப்பதை பார்த்து மகிழ்ச்சியடைகிறார், இந்த ஆசீர்வாதமான சத்தியம் அவர் பூமியில் ஊழியம் செய்தபோது உறுதியான சான்றாக வெளிப்படுகிறது. அவர் செல்லும் இடமெல்லாம் தம்முடைய அன்பான சீடர்களை அழைத்துச் சென்றார். கானா ஊரில் திருமணத்திற்கும், எருசலேமில் பரிசுத்த பண்டிகைக்காகவும், யாவீரு வீட்டில் மரித்த பெண்ணை உயிரோடு எழுப்பும் போதும். மறுரூப மலைக்கு போகும்பொதும் அவர் சென்ற எல்லா இடங்களிலும் அவர்கள் எப்போதும் அவரைப் பின்தொடர்ந்தனர். “அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும் ... நியமித்தார்" (மாற்கு 3:14). அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் (எபிரெயர் 13:8). அதனால்தான், “நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.” என்ற இந்த உறுதியை நமக்குத் தருகிறார் (யோவான் 14:3). ஆகையால் பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது. “நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத் தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்” (2 கொரிந்தியர் 5:8).
ஒரு பக்தன் நம் மத்தியிலிருந்து பிரிந்தால் நாம் துக்கப்படுகையில், கிறிஸ்து மகிழ்ச்சியடைகிறார். “பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்" (யோவான் 17:24). பரலோகத்தில் அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் பிரவேசிக்கும் போதும் அவருடைய ஜெபத்திற்கு பதில் கிடைத்ததை எண்ணி நமதாண்டவர் பூரிப்படைகிறார். இந்த சாவுக்கேதுவான சரீரத்திலிருந்து விடுபட்ட தனது ஒவ்வொரு பிள்ளையின் வழியாக, அவர் அனுபவித்த துன்பங்களின் பலனைக் கணடு திருப்தி அடைகிறார். ஆகவே, கிறிஸ்துவுக்கு ஏற்படும் மகிழ்ச்சியின் காரணத்தால் பரிசுத்தவான்களின் மரணம் அவருடைய பார்வையில் விலையேறப்பெற்றது.
இங்கே “விலையேறப்பெற்றது” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரேய வார்த்தையின் முழுமையைக் கண்டறிவது மிகவும் சுவாரஸ்யமாக மற்றும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த வார்த்தை "விலைமதிப்பற்றது" என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது!" (சங்கீதம் 36:7) அந்தப் பரிசுத்தவான் எவ்வளவு மேன்மையாகவோ, தாழ்ச்சியாகவே வாழ்ந்தாலும், அவருடைய மரணம் கர்த்தரின் பார்வைக்கு அருமையானது.
அதே எபிரேய வார்த்தை “கனமானது" என்றும் மொழிபெயர்க்கப்படலாம். “உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு” (சங்கீதம் 49:5). இங்கே நாயகிகள் என்கிற பதம் கனமுள்ள பெண்கள் என்கிற வகையில் மொழிபெயர்க்கலாம். அகாஸ்வேரு அரசன் ஆமானிடம், “ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான்;” (எஸ்தர் 6:6). ஆம், பூமிக்குப் பதிலாக பரத்திற்கு மாற்றம் பெறுவது உண்மையில் கனமானது தான். “இந்தக் கனம் அவருடைய பரிசுத்தவான்கள் யாருக்கும் உண்டாகும், அல்லேலூயா” (சங்கீதம் 149:9).
இந்த வார்த்தையின் எபிரெயப் பதம் “பிரகாசம்” என்கிற அர்த்தத்தையும் கொண்டதாக விளங்குகிறது. “சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாய்ச் செல்லும்போதும்...” (யோபு 31:26). பரிசுத்தவான் மரணத்தில் விட்டுச் செல்கிற உறவினருக்கு அது இருள் நிறைந்தும், துயரம் நிறைந்தும் காணப்பட்டாலும், அது கர்த்தருடைய பார்வையில் பிரகாசமாக இருக்கிறது: “சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்” (சகரியா 14:7). பரிசுத்தவான்களின் மரணம் கர்த்தருடைய பார்வையில் விலையேறப்பெற்றதாக, சிறந்ததாக, கனத்துக்குரியதாக, பிரகாசமானதாக இருக்கிறது. இந்தச் சிறிய தியானம் தம்முடைய பரிசுத்தவான்களுக்கு அருமையானதாக இருப்பதாக.
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.