வேதாகமத்தை வாசி

Click to Subscribe

உன்னதப்பாட்டு 1

                   
புத்தகங்களைக் காட்டு
1சாலமோனின் தலைசிறந்த பாடல்
2தம் வாயின் முத்தங்களால் அவர் என்னை முத்தமிடுக! ஆம், உமது காதல் திராட்சை ரசத்தினும் இனிது!
3உமது பரிமளத்தின் நறுமணம் இனிமையானது: உமது பெயரோ பரிமள மணத்தினும் மிகுதியாய்ப் பரவியுள்ளது: எனவே, இளம் பெண்கள் உம்மேல் அன்பு கொள்கின்றனர்.
4உம்மோடு என்னைக் கூட்டிச் செல்லும், ஓடிடுவோம்: அரசர் என்னைத் தம் அறைக்குள் அழைத்துச் செல்லட்டும்! களிகூர்வோம், உம்மில் அக்களிப்போம்: திராட்சை இரசத்தினும் மேலாய் உம் காதலைக் கருதிடுவோம்: திராட்சை இரசத்தினும் உமது அன்பைப் போற்றிடுவோம்!
5எருசலேம் மங்கையரே, கறுப்பாய் இருப்பினும், நான் எழில்மிக்கவளே! கேதாரின் கூடாரங்களைப் போலுள்ளேன்: சாலமோனின் எழில்திரைகளுக்கு இணையாவேன்.
6கறுப்பாய் இருக்கின்றேன் நான் என என்னையே உற்றுப் பார்க்க வேண்டா! கதிரவன் காய்ந்தான்: நான் கறுப்பானேன்: என் தமையர் என்மேல் சினம் கொண்டனர்: திராட்சைத் தோட்டத்திற்கு என்னைக் காவல் வைத்தனர்: என் தோட்டத்தையோ நான் காத்தேன் அல்லேன்!
7என் நெஞ்சத்தின் அன்புக்குரியவரே! எங்கே நீர் ஆடு மேய்ப்பீர்? எங்கே நண்பகலில் மந்தையை இளைப்பாற விடுவீர்? எனக்குச் சொல்வீர்! இல்லையேல், உம் தோழர்களின் மந்தைகட்கருகில் வழி தவறியவள் போல் நான் திரிய நேரிடும்!
8பெண்களுக்குள் பேரழகியே, உனக்குத் தெரியாதெனில், மந்தையின் கால்சுவடுகளில் நீ தொடர்ந்துபோ: இடையர்களின் கூடாரங்களுக்கு அருகினிலே உன்னுடைய ஆட்டுக்குட்டிகளை மேய்த்திடு!
9என் அன்பே, பார்வோன் தேர்ப்படை நடுவே உலவும் பெண்புரவிக்கு உன்னை ஒப்பிடுவேன்.
10உன் கன்னங்கள் குழையணிகளாலும் உன் கழுத்து மணிச்சரங்களாலும் எழில் பெறுகின்றன.
11பொன்வளையல்கள் உனக்குச் செய்திடுவோம்: வெள்ளி வளையங்கள் அவற்றில் கோத்திடுவோம்.
12என் அரசர் தம் மஞ்சத்தில் இருக்கையிலே, என் நரந்தம் நறுமணம் பரப்புகின்றது.
13என் காதலர் வெள்ளைப்போள முடிப்பென என் மார்பகத்தில் தங்கிடுவார்.
14என் காதலர் எனக்கு மருதோன்றி மலர்க்கொத்து! எங்கேதித் தோட்டங்களில் உள்ள மருதோன்றி!
15என்னே உன் அழகு! என் அன்பே, என்னே உன் அழகு! உன் கண்கள் வெண்புறாக்கள்!
16என்னே உம் அழகு என் காதலரே! எத்துணைக் கவர்ச்சி! ஆம், நமது படுக்கை பைந்தளிர்!
17நம் வீட்டின் விட்டங்கள் கேதுரு மரங்கள்: நம்முடைய மச்சுகள் தேவதாரு கிளைகள்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.