1 | கடவுளே! என் விண்ணப்பக் குரலைக் கேட்டருளும்: என் எதிரியினால் விளையும் அச்சத்தினின்று என் உயிரைக் காத்தருளும். |
2 | பொல்லாரின் சூழ்ச்சியினின்றும் தீயோரின் திட்டத்தினின்றும் என்னை மறைத்துக் காத்திடும். |
3 | அவர்கள் தங்கள் நாவை வாளைப் போலக் கூர்மையாக்குகின்றார்கள்: நஞ்சுள்ள சொற்களை அம்புபோல் எய்கின்றார்கள்: |
4 | மறைவிடங்களில் இருந்துகொண்டு மாசற்றோரைக் காயப்படுத்துகின்றார்கள்: அச்சமின்றி அவர்களைத் திடீரெனத் தாக்குகின்றார்கள்: |
5 | தீங்கு இழைப்பதில் உறுதியாய் இருக்கின்றார்கள்: 'நம்மை யார் பார்க்க முடியும்' என்று சொல்லி மறைவாகக் கண்ணிகளை வைப்பதற்குச் சதித்திட்டம் தீட்டுகின்றார்கள்: |
6 | நேர்மையற்ற செயல்களைச் செய்யத் திட்டமிடுகின்றார்கள்: “எங்கள் திறமையில் தந்திரமான சூழ்ச்சியை உருவாக்கியுள்ளோம்” என்கின்றார்கள்: மனிதரின் உள்ளமும் உள்நோக்கமும் மிக ஆழமானவை. |
7 | ஆனால், கடவுள் அவர்கள்மேல் அம்புகளை எய்ய, அவர்கள் உடனே காயமுற்று வீழ்வார்கள். |
8 | தங்களது நாவினாலேயே அவர்கள் அழிவார்கள்: அவர்களைப் பார்ப்போர் அனைவரும் எள்ளி நகைப்பார்கள். |
9 | அப்பொழுது எல்லா மனிதரும் அச்சம் கொள்வர்: கடவுளின் செயல்களை எடுத்துரைப்பர்: அவரது அருஞ்செயலைப்பற்றிச் சிந்திப்பர். |
10 | நேர்மையாளர் ஆண்டவரில் அகமகிழ்வர்: அவரிடம் அடைக்கலம் புகுவர்: நேரிய உள்ளத்தோர் அவரைப் போற்றிடுவர். |