வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 63

                   
புத்தகங்களைக் காட்டு
1கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்: என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது: நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது.
2உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.
3ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது: என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன.
4என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்: கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.
5அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்: என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும்.
6நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்: இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன்.
7ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்: உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன்.
8நான் உம்மை உறுதியாகப் பற்றிக் கொண்டேன்: உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது.
9என்னை அழித்துவிடத் தேடுவோர் பூவுலகின் ஆழத்திற்குள் செல்வர்.
10அவர்கள் வாளுக்கு இரையாவர்: நரிகளுக்கு விருந்தாவர்.
11அரசரோ கடவுளை நினைத்துக் களிகூர்வார்: அவர்மேல் ஆணையிட்டுக் கூறுவோர் அனைவரும் பெருமிதம் கொள்வர்: பொய் சொல்வோரின் வாய் அடைக்கப்படும்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.