1 | கடவுளின் செயலுக்காக நான் மௌனமாய்க் காத்திருக்கின்றேன்: எனக்கு மீட்பு கிடைப்பது அவரிடமிருந்தே: |
2 | உண்மையாகவே என் கற்பாறையும் மீட்பும் அவரே: என் கோட்டையும் அவரே: எனவே நான் சிறிதும் அசைவுறேன். |
3 | ஒருவரைக் கொல்லவேண்டுமென்று நீங்கள் அனைவரும் எவ்வளவு காலம் வெறியுடன் தாக்குவீர்? நீங்கள் எல்லாரும் இடிந்த மதிலுக்கும் சிதைந்த வேலிக்கும் ஒப்பாவீர். |
4 | அவர் இருக்கும் உயர்நிலையிலிருந்து அவரைத் தள்ளிவிடத் திட்டமிடுகின்றனர்: பொய் சொல்வதில் இன்பம் காண்கின்றனர்: அவர்களது வாயில் ஆசிமொழி: அவர்களது உள்ளத்திலோ சாபமொழி. (சேலா) |
5 | நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு: ஏனெனில், நான் எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே: |
6 | உண்மையாகவே, என் கற்பாறையும் மீட்பும் அவரே. எனவே, நான் சிறிதும் அசைவுறேன். |
7 | என் மீட்பும் மேன்மையும் கடவுளிடமே இருக்கின்றன: என் வலிமைமிகு கற்பாறையும் புகலிடமும் கடவுளே. |
8 | மக்களே! எக்காலத்திலும் அவரையே நம்புங்கள்: அவர் முன்னிலையில் உங்கள் உள்ளத்தில் உள்ளதைத் திறந்து கொட்டுங்கள்: கடவுளே நமக்கு அடைக்கலம். (சேலா) |
9 | மெய்யாகவே, மானிடர் நீர்க்குமிழி போன்றவர்: மனிதர் வெறும் மாயை: துலாவில் வைத்து நிறுத்தால், அவர்கள் மேலே போகின்றார்கள்: எல்லாரையும் சேர்த்தாலும் நீர்க்குமிழியை விட எடை குறைகின்றார்கள். |
10 | பிறரைக் கசக்கிப் பிழிவதில் நம்பிக்கை வைக்காதீர்: கொள்ளையடிப்பதில் குறியாய் இராதீர்: செல்வம் பெருகும்போது, உள்ளத்தை அதற்குப் பறிகொடுக்காதீர். |
11 | 'ஆற்றல் கடவுளுக்கே உரியது!' என்று அவர் ஒருமுறை மொழிய, நான் இருமுறை கேட்டேன். |
12 | 'என் தலைவரே! உண்மைப் பேரன்பு உமக்கே உரியது!' ஏனெனில், ஒவ்வொரு மனிதருக்கும் அவர்தம் செயல்களுக்குத் தக்க கைம்மாறு நீரே அளிக்கின்றீர். |