1 | நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்: அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். |
2 | அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார். சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்: கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்: என் காலடிகளை உறுதிப்படுத்தினார். |
3 | புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்: பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர்: |
4 | ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்: அத்தகையோர் சிலைகளை நோக்காதவர்: பொய்யானவற்றைச் சாராதவர். |
5 | ஆண்டவரே! எண்ணிறந்தவற்றை நீர் எமக்கெனச் செய்துள்ளீர்: உமக்கு நிகரானவர் எவரும் இலர்: என் கடவுளே! உம் அருஞ்செயல்களும் திட்டங்களும் எங்களுக்காகவே: அவற்றை நான் எடுத்துரைக்க விரும்புவேனாகில் அவை எண்ணிலடங்கா. |
6 | பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை: எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை: ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். |
7 | எனவே, 'இதோ வருகின்றேன்: என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது: |
8 | என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்: உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது' என்றேன் நான். |
9 | என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்: நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை: ஆண்டவரே! நீர் இதை அறிவீர். |
10 | உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைக்கவில்லை: உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும் நீர் அருளும் மீட்பைப்பற்றியும் கூறியிருக்கின்றேன்: உம் பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை. |
11 | ஆண்டவரே: உமது பேரிரக்கத்தை எனக்குக் காட்ட மறுக்கதேயும்: உமது பேரன்பும் உண்மையும் தொடர்ந்து என்னைப் பாதுகாப்பனவாக! |
12 | ஏனெனில், எண்ணிறிந்த தீமைகள் எனைச் சூழ்ந்து கொண்டன: என் குற்றங்கள் என்மீது கவிந்து என் பார்வையை மறைத்துக்கொண்டன. அவை என் தலைமுடிகளைவிட மிகுதியானவை: என் உள்ளம் தளர்ந்து என்னைக் கைவிட்டது. |
13 | ஆண்டவரே, என்னை விடுவிக்க மனமிசைந்தருளும்: ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும். |
14 | என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் அனைவரும் அவமானமும் குழப்பமும் அடையட்டும்! என் கேட்டில் மகிழ்வுறுவோர் தலைகுனிந்து பின்னடையட்டும்! |
15 | என்னைப் பார்த்து”ஆ!ஆ!” என்போர் தாம் அடையும் தோல்வியினால் அதிர்ச்சியுறட்டும்! |
16 | உம்மைத் தேடுவோர் அனைவரும் உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்! நீர் அருளும் மீட்பில் நாட்டங்கொள்வோர், “ஆண்டவர் எத்துணைப் பெரியவர்!” என்று எப்போதும் சொல்லட்டும்! |
17 | நானோ ஏழை: எளியவன்: என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்: நீரே என் துணைவர், என் மீட்பர்! என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். |