1 | 'நான் என் நாவினால் பாவம் செய்யாதவண்ணம் என் நடைமுறைகளைக் காத்துக்கொள்வேன்: பொல்லார் என்முன் நிற்கும் வரையில், என் வாய்க்குப் பூட்டுப் போட்டுக் காத்துக் கொள்வேன்' என்று சொன்னேன். |
2 | நான் ஊமையைப்போல் பேசாது இருந்தேன்: நலமானதைக்கூடப் பேசாமல் அமைதியாய் இருந்தேன்: என் வேதனையோ பெருகிற்று. |
3 | என் உள்ளம் என்னுள் எரியத் தொடங்கிற்று: நான் சிந்தனையில் ஆழ்ந்தபோது நெருப்பு மூண்டது: அப்பொழுது என் நா பேசியதாவது: |
4 | 'ஆண்டவரே! என் முடிவு பற்றியும் என் வாழ்நாளின் அளவு பற்றியும் எனக்கு அறிவுறுத்தும்: அப்போது, நான் எத்துணை நிலையற்றவன் என உணர்ந்து கொள்வேன். |
5 | என் வாழ்நாளைச் சில விரற்கடை அளவாக்கினீர்: என் ஆயுட்காலம் உமது பார்வையில் ஒன்றுமில்லை: உண்மையில், மானிடர் அனைவரும் தம் உச்ச நிலையிலும் நீர்க்குமிழி போன்றவரே! (சேலா) |
6 | அவர்கள் நிழலைப்போல நடமாடுகின்றனர்: அவர்கள் வருந்தி உழைப்பது வீண்: அவர்கள் சேமித்து வைக்கின்றனர்: ஆனால் அதை அனுபவித்து யாரென அறியார். |
7 | என் தலைவரே, நான் இப்போது எதை எதிர்பார்க்கட்டும்? நான் உம்மையே நம்பியிருக்கிறேன். |
8 | என் குற்றங்கள் அனைத்தினின்றும் என்னை விடுவித்தருளும்: மதிகேடரின் பழிப்புரைக்கு என்னை ஆளாக்காதேயும். |
9 | நான் ஊமைபோல் ஆனேன்: வாய் திறவேன்: ஏனெனில், எனக்கு இந்நிலைமையை வருவித்தவர் நீரே. |
10 | நீர் தந்த வாதையை என்னிடமிருந்து நீக்கிவிடும்: உமது கை அடித்த அடிகளால் நான் அழிவுக்கு ஆளானேன். |
11 | குற்றத்தின் பொருட்டு நீர் மனிதரைத் தண்டிக்கும்போது பூச்சி அரிப்பதுபோல் அவர்களுக்கு விருப்பமானவற்றை நீர் அழிக்கின்றீர்: உண்மையில் மானிடர் அனைவரும் நீர்க்குமிழி போன்றவரே! (சேலா) |
12 | ஆண்டவரே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்: என்னுடைய மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்: என் கண்ணீரைக் கண்டும் மௌனமாய் இராதேயும்: ஏனெனில், உமது முன்னிலையில் நான் ஓர் அன்னியன்: என் மூதாதையர் போன்று நான் ஒரு நாடோடி! |
13 | நான் பிரிந்து மறையும் முன்பு சற்றே மகிழ்ச்சி அடையும்படி, உம் கொடிய பார்வையை என்னிடமிருந்து திருப்பிக்கொள்ளும். |