1 | ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு என்னைக் கண்டியாதேயும்: என் மீது சீற்றம்கொண்டு என்னைத் தண்டியாதேயும்: |
2 | ஏனெனில், உம் அம்புகள் என்னுள் பாய்ந்திருக்கின்றன: உமது கை என்னை அழுத்திக் கொண்டிருக்கின்றது. |
3 | நீர் கடுஞ்சினங்கொண்டதால் என் உடலில் நலமே இல்லை: என் பாவத்தால் என் எலும்புகளில் வலுவே இல்லை. |
4 | என் குற்றங்கள் தலைக்குமேல் போய்விட்டன: தாங்கவொண்ணாச் சுமைபோல அவை என்னை வெகுவாய் அழுத்துகின்றன. |
5 | என் புண்கள் அழுகி நாற்றமெடுக்கின்றன: என் மதிகேடுதான் இதற்கெல்லாம் காரணம். |
6 | நான் மிகவும் ஒடுங்கிப்போனேன்: நாளெல்லாம் துயருற்றுத் திரிகின்றேன். |
7 | என் குடல் முற்றிலும் வெந்து போயிற்று: என் உடலில் சற்றேனும் நலம் இல்லை. |
8 | நான் வலுவற்றுப் போனேன்: முற்றிலும் நொறுங்கிப்போனேன்: என் உள்ளக் கொதிப்பினால் கதறுகின்றேன். |
9 | என் தலைவரே, என் பெருமூச்செல்லாம் உமக்குத் தெரியும்: என் வேதனைக் குரல் உமக்கு மறைவாயில்லை. |
10 | என் உள்ளம் வேதனையால் துடிக்கின்றது: என் வலிமை என்னைவிட்டு அகன்றது: என் கண்களும்கூட ஒளி இழந்தன. |
11 | என் நண்பர்களும் தோழர்களும் நான் படும் வாதை கண்டு விலகி நிற்கின்றனர்: என் உறவினரும் என்னைவிட்டு ஒதுங்கி நிற்கின்றனர். |
12 | என் உயிரைப் பறிக்கத்தேடுவோர் எனக்குக் கண்ணி வைக்கின்றனர்: எனக்குத் தீங்கிழைக்கத் துணிந்தோர் என் அழிவைப் பற்றிப் பேசுகின்றனர்: எப்போதும் எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்கின்றனர். |
13 | நானோ செவிடர்போல் காது கேளாமலும் ஊமைபோல் வாய் திறவாமலும் இருக்கின்றேன். |
14 | உண்மையாகவே, நான் செவிப்புலனற்ற மனிதர்போலும் மறுப்புரை கூறாத நாவினர் போலும் ஆனேன்: |
15 | ஏனெனில் ஆண்டவரே, நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்: என் தலைவராகிய கடவுளே, செவிசாய்த்தருளும். |
16 | 'அவர்கள் என்னைப் பார்த்துக் களிக்க விடாதேயும்: என் கால் தடுமாறினால் அவர்கள் பெருமை கொள்வர்' என்று சொன்னேன். |
17 | நான் தடுமாறி விழும் நிலையில் இருக்கின்றேன்: நான் எப்போதும் வேதனையில் உள்ளேன். |
18 | என் குற்றத்தை நான் அறிக்கையிடுகின்றேன்: என் பாவத்தின் பொருட்டு நான் அஞ்சுகின்றேன். |
19 | காரணமின்றி என்னைப் பகைப்போர் வலுவாய் உள்ளனர்: வீணாக என்னை வெறுப்போர் பலராய் உள்ளனர்: |
20 | நன்மைக்குப் பதிலாக அவர்கள் எனக்குத் தீமை செய்கின்றனர்: நன்மையே நாடும் என்னைப் பகைக்கின்றனர்: |
21 | ஆண்டவரே! என்னைக் கைவிடாதேயும்: என் கடவுளே! என்னைவிட்டு அகன்றுவிடாதேயும். |
22 | என் தலைவரே! மீட்பரே! எனக்குத் துணைசெய்ய விரைந்து வாரும். |