சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் (லூக்கா 18-1)
நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்; (1 திமோத்தேயு 2:1)
நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா?
நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா? என்று நான் உங்களை கேட்கிறேன். ஏனென்றால் ஜெபமே மனிதனின் இரட்சிப்புக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. நான் உங்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். அது மூன்று வார்த்தைகளில் அடங்கியது. நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா? இந்தக் கேள்விக்கு நீங்கள் மட்டுமே பதிலளிக்க முடியும். நீங்கள் பொது ஆராதனையில் கலந்துகொள்கிறீர்களா இல்லையா என்பது உங்கள் போதகருக்கு தெரியும். உங்கள் வீட்டில் குடும்ப ஜெபம் நடத்துகிறீர்களா இல்லையா என்பது உங்கள் குடும்பத்தாருக்கு தெரியும். ஆனால், நீங்கள் தனிப்பட்ட முறையில் ஜெபிக்கிறீர்களா இல்லையா என்பது உங்களுக்கும் தேவனுக்கும் மட்டுமே தெரியும்.
நான் உங்களுக்கு சொல்லப்போகிற இந்த காரியத்தை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுகிறேன். இந்த கேள்வியை குறித்து, இது எங்களின் தனிப்பட்ட விஷயம் என்று சொல்லாதீர்கள். உங்கள் இருதயம் தேவனுடைய பார்வைக்கு முன்பாக சுத்தமாக இருக்கும் போது நீங்கள் எதைப்பற்றியும் பயப்பட தேவையில்லை!
நாங்கள் ஜெபிக்கிறோம் என்று சொல்லி என்னுடைய கேள்வியை அலட்சியப்படுத்திவிடாதீர்கள்! இந்த கேள்வி மிகவும் அவசியமானாதா என்றும் என்னிடம் கேட்காதீர்கள். ஒருசில நிமிடங்கள் நான் சொல்லப் போகிற காரியங்களை பொறுமையுடன் கேளுங்கள். அப்போது தான் நான் இந்த கேள்வியை கேட்டதற்கான காரணத்தை புரிந்துக்கொள்வீர்கள்.
இரட்சிப்பிற்கு தேவை
நான் இதை ஒரு ஆலோசனையாக சொல்லாமல், மிக முக்கியமான தேவை என்று சொல்லுகிறேன். நான் இப்போது ஒரு குழந்தையிடமோ அல்லது ஒரு முட்டாளிடமோ பேசவில்லை. அதேபோல நான் ஒரு அவிசுவாசியிடமும் பேசவில்லை. எங்கே கொஞ்சம் கொடுக்கப்படுகிறதோ, அங்கே கொஞ்சம் கேட்கப்படும். தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளும் மக்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். அப்படி தங்களை அழைத்துக்கொள்ளுகிற மக்களைப் பார்த்து நான்சொல்வது என்னவென்றால், ஜெபிக்காத எந்த ஒரு ஆணோ அல்லது பெண்ணோ இரட்சிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது.
இரட்சிப்பு கிருபையினால் மாத்திரமே கிடைக்கிறது என்று ஆணித் தரமாக சொல்லுகிறேன். மிகப்பெரிய பாவிக்கும் அது முழுமையாய் இலவசமாக கிடைக்கிறதாய் இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்ளுகிறேன். இன்றும் மரணப்படுக்கையில் இருப்பவர்களை பார்த்து "இப்போதே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள், அப்போது நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்" (அப் 16:31) என்று சொல்ல தயங்கமாட்டேன். ஆனால், ஒருவர் இந்த வார்த்தைகளைக் கேட்காமலேயே இரட்சிக்கப்பட்டதாக நான் வேதத்தில் பார்க்கவில்லை. மனிதர்கள் தங்கள் இருதயத்திலிருந்து "கர்த்தராகிய இயேசுவே, எனக்கு அதைத் தாரும்" என்று கேட்காமல் தங்கள் பாவத்திற்கான மன்னிப்பை பெற்றுகொண்டதாக நான் பார்க்கவில்லை. தங்கள் ஜெபங்களின்மூலமாக மட்டுமே இரட்சிப்பை யாரும் பெறுகிறதில்ல. ஆனால், ஜெபிக்காமல் இரட்சிப்பை பெற்று கொண்ட ஒருவரையும் நான் கண்டதுமில்லை!
ஒருவர் வேதத்தை வாசிப்பது இரட்சிப்புக்கு முற்றிலும் அவசியமானது அல்ல! ஏனென்றால் மனிதர்கள் படிப்பறிவு அற்றவர்களாகவோ அல்லது குருடராகவோ இருந்தாலும் கூட கிறிஸ்து அவர்கள் இருதயத்தில் இருக்க முடியும்! அதேபோல் மனிதர்கள் சுவிசேஷ பிரசங்கத்ததை கேட்பதும் இரட்சிப்பை பெற்றுக் கொள்வதற்கு அத்தியாவசிய தேவை யில்லை. ஏனெனில் மக்கள் சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களிலே கூட வாழலாம் அல்லது வாழ்நாள் முழுவதும் படுக்கையிலே இருக்கும் வியாதியுள்ளவராய் இருக்கலாம் அல்லது செவிடராய் இருக்கலாம். ஆனால் ஜெபத்தைப் பற்றி அதையே சொல்லமுடியாது. ஜெபமானது மனிதன் இரட்சிப்பை பெற்றுக்கொள்வதற்கு அத்தியாவசிய தேவையாய் இருக்கிறது.
தனிப்பட்ட பொறுப்பு
மனிதர்கள் கற்றுகொள்வதற்கும், சுகாதாரத்தை பெற்று கொள்வதற்கும் வித்தியாசமான பாதையென ஒன்றுமில்லை. பிரதம மந்திரிகள், அரசர்கள், ஏழை மற்றும் விவசாயிகள் என அனைவரும் ஒரே மாதிரி தான் தங்கள் சரீரத் தேவைகளையும், இருதயத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளுகிறார்கள். எந்த மனிதனும் மற்றவர்களுக்கு பதிலாக உண்ணவோ, குடிக்கவோ அல்லது தூங்கவோ முடியாது. அதேபோல் எந்த ஒரு மனிதனும் மற்றவர்களுக்காக கல்விக் கற்க முடியாது. இவை அனைத்தும் ஒவ்வொருவரும் தாங்களே செய்ய வேண்டியவை, இல்லையெனில் அவை நிறைவேறாது.
எப்படி நமது மனதுக்கும் உடலுக்கும் தேவைகள் இருக்கிறதோ அதேபோல் நமது ஆத்துமாவிற்கும் தேவைகள் இருக்கிறது. நமது ஆத்துமா நன்றாக இருப்பதற்கு ஒருசில தேவைகள் மிகவும் அத்தியாவசியமாய் இருக்கிறது. அந்த தேவைகளை ஒவ்வொருவரும் தங்களுக்கென்றே செய்யவேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கென்றே மனந்திரும்பவேண்டும். ஒவ்வொருவரும் கிறிஸ்துவிடம் தங்களுக்கென்றே செல்லவேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கென்றே தேவனிடம் ஜெபிக்க வேண்டும். இந்த காரியங்களை உங்களுக்காக நீங்கள் மட்டுமே செய்யமுடியும். உங்களுக்கு பதிலாக வேறு யாராவது இவைகளை செய்யமுடியாது. ஜெபிக்காமல் இருப்பது தேவனுக்குள் இல்லாமல் இருப்பதாகும், கிறிஸ்துவுக்குள் இல்லாமல் இருப்பது, கிருபை இல்லாமல் இருப்பதாகும், நம்பிக்கை இல்லாமல் இருப்பது, பரலோகம் இல்லாமல் இருப்பதாகும். அது நரகத்தின் சாலையில் போய்க்கொண்டிருப்பது போல் ஆகும். இப்போது, நான் கேட்கும் கேள்வியான நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா? என்று கேட்பதில் ஆச்சரியமில்லையே?
ஜெபிப்பவர்கள்
மறுபடியும் நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா? என்று கேட்கிறேன். ஏனெனில் ஜெபம் செய்வதின் பழக்கமே மெய்யான கிறிஸ்தவனின் ஒரு உறுதியான அடையாளமாய் இருக்கிறது.
பூமியில் வாழ்கின்ற ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையும் ஜெபத்திற்கு மரியாதை கொடுக்கிறார்கள். எப்போது ஜீவனைபெற்று, கிறிஸ்தவ சத்தியத்தை அறிந்துகொள்ள ஆரம்பிக்கிறார்களோ அந்த நிமிடமே அவர்கள் ஜெபிக்கிறார்கள். ஒரு குழந்தை இந்த உலகத்தில் பிறக்கும்போது அது உயிரோடுயிருப்பதற்கான முதல் அறிகுறி சுவாசிப்பது. அதுபோல் மறுபிறப்படைந்தவர்களின் முதல் செய்கை ஜெபமாய் இருக்கிறது.
கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒவ்வொரு மனிதனிலும் காணப்படும் பொதுவான அம்சம் ஜெபம். "அவர்கள் இரவும் பகலும் அவரை நோக்கி கூப்பிடுகிறார்கள்" (லூக் 18:1). பரிசுத்த ஆவியானவர் அவர்களை புதுசிருஷ்டியாக மாற்றி, தத்தெடுக்கப்பட்டவர்கள் என்ற உணர்வை அவர்களுக்கு தந்து, அவர்களை 'அப்பா பிதாவே' என்று கூப்பிட வைக்கிறார். (ரோம 8:15) கர்த்தராகிய இயேசு அவர்களை எழுப்பி, அவர்களுக்கு நாவையும் பேச்சையும் கொடுத்து, இனி ஊமையாய் இருக்கமாட்டாய் என்கிறார். தேவனுக்கு ஊமையான பிள்ளைகள் கிடையாது. எப்படி பிறந்த குழந்தை அழுகிறதோ அதேபோல், ஜெபிப்பது புது சிருஷ்டியின் ஒரு பகுதியாய் இருக்கிறது. அவர்கள் அவர்களுக்கு தேவையான கிருபையின் அவசியத்தை பார்க்கிறார்கள். அவர்களுடைய வெறுமையையும், பெலவீனத்தையும் உணர்கிறார்கள். இதைக்காட்டிலும் ஞானமான காரியத்தை அவர்கள் அவர்களுக்கு செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் ஜெபிக்க வேண்டும்.
நான் வேதத்தில் உள்ள பரிசுத்தர்களின் வாழ்க்கையை கவனித்து பார்க்கிறேன். ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை உள்ள முழு வரலாற்றிலும் எந்த ஒரு மனிதனையும் ஜெபம் செய்யாதவனாக நான் பார்க்கவில்லை. இரட்சிக்கப்பட்டவர்களைக் குறித்து, அவர்கள் கர்த்தரை நோக்கி கூப்பிட்டார்கள் (1பேது 1:17) அல்லது அவர்கள் இயேசு கிறிஸ்துவை நோக்கி கூப்பிட்டார்கள் (1கொரி 1:2) என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் கெட்டுப்போகிறவர்களைக் குறித்து, ‘அவர்கள் கர்த்தரை நோக்கி தொழுகிறதில்லை’ (சங் 14:4) வேதம் சொல்லுகிறது.
வேதத்தின் நாட்களிலிருந்து வரலாற்றில் மேம்பட்ட வாழ்க்கை வாழ்ந்த அநேக கிறிஸ்தவர்களின் வாழ்க்கையை நான் படித்திருக்கிறேன். அவர்களில் சிலர் செல்வந்தர்கள், சிலர் ஏழைகள், சிலர் நன்கு படித்திருப்பார்கள், ஒரு சிலர் படிப்பறிவு இல்லாதவர்களாய் இருந்திருக்கிறார்கள். சிலர் எப்பிஸ்கோப்பியர் (Episcopalians), சிலர் கிறிஸ்தவ பெயர்களை கொண்டவர்கள், சிலர் கல்வினிச போதனையை பின்பற்றுபவர்கள், சிலர் ஆர்மினீச போதனையை பின்பற்றுபவர்கள், சிலர் கர்த்தருடைய திருபந்தியை விருப்பத்துடன் அனுசரிப்பார்கள். ஆனால் இவர்கள் அனைவரிடமும் காணப்பட்ட ஒரு பொதுவான பண்பு அனைவரும் ஜெபிக்கிற மக்களாய் இருந்திருக்கிறார்கள்.
நம்முடைய காலத்தில் மிஷனரி சங்கங்களின் அறிக்கைகளை நான் வாசித்திருக்கிறேன். உலகத்தில் உள்ள அநேக ஆண்களும் பெண்களும் சுவிசேஷத்தை பெற்றுக்கொள்ளுகிறதை நான் சந்தோஷத்தோடு பார்க்கிறேன். ஆப்பிரிக்காவிலும், நியூசிலாந்திலும், இந்தியாவிலும், சீனாவிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மனந்திரும்புகிற ஒவ்வொரு மக்களும் மற்றவர்களுடன் எல்லா காரியத்திலும் வித்தியாசப்படுகிறார்கள். ஆனால் எல்லா மிஷனரி இயக்கங்களின் மூலமாக நான் அறிந்து கொண்ட வியக்கத்தக்க விஷயம்: மனந்திரும்புகிற மக்கள் ஜெபிக்கிறார்கள் என்பதே!
ஜெபிக்காமல் இருப்பது
ஒரு நபர் ஜெபத்திலே கருத்தின்றி, நேர்மையின்றி ஜெபிக்கலாம் என்பதை நான் மறுக்கவில்லை. ஒரு மனிதன் ஜெபிப்பதை பொறுத்தே அவனுடைய ஆத்தும நிலை இருக்கிறது என்று நான் சொல்லவில்லை. ஏனென்றால் எப்படி கிறிஸ்தவத்தின் அனைத்து காரியங்களிலும் மாய்மாலமும், பாசாங்குதனமும் இருக்கிறதோ அதேபோல் ஜெபத்திலும் இருக்கிறது. ஆனால், நான் சொல்லவருவது என்னவென்றால்: ஜெபிக்காமல் இருப்பது, ஒரு மனிதன் இன்னும் உண்மையான கிறிஸ்தவன் அல்ல என்பதின் தெளிவான அடையாளம். அவர்கள் உண்மையாகவே பாவத்தை இன்னும் உணரவில்லை. அவர்கள் தேவனை நேசிக்கவில்லை. அவர்கள் கிறிஸ்துவுக்கு கடன்பட்டிருக்கிறார்கள் என்பதை உணரவில்லை. அவர்கள் பரிசுத்தமாகுதலின் பாதையில் ஓடவில்லை. அவர்கள் பரலோகத்தை விரும்பவில்லை. அவர்கள் இன்னும் மறுபிறப்பை அடையவில்லை. அவர்கள் இன்னும் புது சிருஷ்டியாக மாற்றம் அடையவில்லை. ஒருவேளை அவர்கள் தெரிந்துகொள்ளுதலை பற்றியும், கிருபையை பற்றியும், விசுவாசத்தை பற்றியும், கிறிஸ்தவனுக்கு இருக்க வேண்டிய நம்பிக்கையை பற்றியும், வேதத்தை பற்றியும் பெருமையாக பேசி மக்களை ஏமாற்றலாம். ஆனால் அவர்கள் ஜெபிக்கவில்லை என்றால் இவை எல்லாமே வீண்தான்.
உண்மையான ஆதாரம்
நான் இன்னும் ஒருசில காரியங்களை சொல்லுகிறேன். பரிசுத்த ஆவியானவர் ஒரு மனிதனில் உண்மையாகவே செயல்படுகிறார் என்பதற்கு போதுமான சாட்சி ஒருமனிதன் தன்னுடைய இருதயத்திலிருந்து ஏறெடுக்கும் ஜெபமாகும். ஒரு மனிதன் நன்றாக பிரசங்கிகலாம், புத்தகம் எழுதலாம், அழகாக பேசலாம், நல்ல காரியங்களை செய்வதில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளலாம். ஆனால் இது எல்லாம் செய்தாலும் அவன் யூதாசை போலவும் இருக்கமுடியும். ஒரு மனிதனுக்கு அக்கறை வரும்போது அவன் தனியறைக்கு சென்று தன்னுடைய ஆத்துமாவை தேவனுக்கு முன்பாக ஜெபத்தில் ஊற்றிவிடுகிறான். ஜெபிப்பதை தேவன் மனந்திரும்புகிற மனிதனுக்கு அடையாளமாக சொல்லுகிறார். தேவன் அனனியாவை தமஸ்குவில் உள்ள யூதாவின் வீட்டிற்கு அனுப்பும்போது சவுல் மனந்திரும்பியதற்கான ஒரே ஒரு அடையாளத்தை மட்டுமே சொல்லி அனுப்புகிறார் "அவன் இப்போது ஜெபிக்கிறான்." (அப் 9:11).
ஒரு மனிதன் ஜெபத்தில் வருவதற்கு முன்பாக அநேக எண்ணங்கள் அவனுடைய சிந்தையில் ஓடும் என்பது எனக்கு தெரியும். அவர்களுக்கு அநேக பிரச்சனைகள், விருப்பங்கள், உணர்ச்சிவசமான காரியங்கள், வாழ்த்துக்கள், நம்பிக்கைகள், தீர்மானங்கள், பயங்கள் என பல விஷயங்கள் அவர்கள் சிந்தனையில் ஓடும். இந்த பிரச்சனைகள் எல்லாருக்கும் வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இதே மனதோடு ஜெபிப்பவர்கள் முடிவில் தேவனை தேடாத மக்களோடுதான் இருக்கப்போகிறார்கள். அநேக நேரங்களில் மனிதர்களின் ஜெபங்கள் காலையில் பெய்யும் பனி சூரியன் உதித்தவுடன் மறைவது போல இருக்கிறது. உண்மையான இருதயத்தில் இருந்தும், நொறுங்குண்ட ஆவியில் இருந்தும் ஆரம்பமாகும் ஜெபத்தின் மதிப்போ எல்லாவற்றைக்காட்டிலும் மிகவும் உயர்ந்தது.
பரிசுத்த ஆவியானவர் ஒரு பாவியை அவனுடைய பாவ வழியில் இருந்து அழைக்கிறதற்கு அநேக சந்தர்பங்களை பயன்படுத்தி மெதுவாக அவனை கிறிஸ்துவை பின்பற்ற செய்கிறார் என்பதை அறிவேன். ஆனால் என்னுடைய கண்கள் எதை காண்கிறதோ அதை வைத்துதான் என்னால் தீர்ப்பு செய்யமுடியும். நான் எந்த ஒரு மனிதனையும் அவன் விசுவாசிக்க ஆரம்பிக்காத வரை நீதிமான் என்று சொல்லமாட்டேன். அதேபோல் எந்த ஒரு மனிதனையும் அவன் ஜெபிக்க ஆரம்பிக்காதவரை விசுவாசி என்று சொல்ல மாட்டேன். ஊமையான விசுவாசத்தை பற்றி என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. விசுவாசத்தின் முதல் செய்கை தேவனுடன் பேசுவது. எப்படி சரீரத்திற்கு உயிர் முக்கியமாக இருக்கிறதோ அதேபோல் ஆத்துமாவிற்கு விசுவாசம் முக்கியமாக இருக்கிறது. எப்படி நம் சரீரத்திற்கு மூச்சு அவசியமாய் இருக்கிறதோ அதேபோல் நமது விசுவாசத்திற்கு ஜெபம் அவசியமாய் இருக்கிறது. எப்படி ஒரு மனிதன் மூச்சு விடாமல் உயிர் வாழமுடியும் என்பது என் அறிவுக்கு எட்டவில்லையோ அதேபோல் ஒரு மனிதன் விசுவாசிக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஜெபிக்காமல் இருப்பதும் என் அறிவுக்கு எட்டாத காரியமாயிருக்கிறது.
ஒரு சுவிசேஷ பிரசங்கி ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரசங்கிக்கும் போது அதை பார்த்து ஆச்சரியப்படாதீர்கள். ஏனென்றால் இந்த காரியத்தை உங்களுக்கு விளக்கப்படுத்துவதே அவர்கள் நோக்கமாய் இருக்கிறது. நீங்கள் ஜெபிக்க வேண்டும் என்பதே அவர்கள் விருப்பமாய் இருக்கிறது. கிறிஸ்தவ கோட்பாடுகளை குறித்த உங்கள் பார்வை சரியானதாக இருக்கலாம். புராட்டஸ்டன்டு சீர்திருத்தத்தின் மீது உங்கள் அன்பு சரியானதாக இருக்கலாம். ஆனாலும் இவையெல்லாம் உங்கள் தலை அறிவுடனும், உங்களின் திருச்சபையுடனும் நின்று விடலாம். ஆனால், பிரசங்கியாகிய எங்களுக்கு உண்மையாகவே நீங்கள் தேவ கிருபையின் சிங்காசனத்தின் முன்பு போகிறீர்களா என்பதும், எப்படி தேவனைப் பற்றி மற்றவர்களுடன் பேசுகிறீரகளோ அதேபோல் நீங்களும் தேவனுடன் பேசுகிறீர்களா என்பதை அறிவதும் தான் முக்கியமாய் இருக்கிறது.
நீங்கள் உண்மையான விசுவாசி என்பதை அறிய விரும்புகிறீர்களா? அப்படியானால் என் கேள்வி மிக முக்கியமானது என்பதை உறுதியாக நினைவில் வையுங்கள் - நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா?
சிலர் ஒருபோது ஜெபிக்கிறதில்லை
நீங்கள் ஜெபிக்கிறீர்களா? என்று நான் கேட்கிறேன், ஏனெனில் கிறிஸ்தவத்தில் தனிப்பட்ட ஜெபத்தைப் போல புறக்கணிக்கப்படும் கடமை வேறு எதுவும் இல்லை.
கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வதற்கு அருமையான சூழ்நிலைகள் நிறைந்த காலப்பகுதியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முன் எப்போதும் இருந்ததைவிட இப்போது அநேக இடங்களில் பொது ஆராதனை ஸ்தலங்கள் இருக்கின்றன. முன் எப்போதும் இருந்ததைவிட இப்போது அநேக மக்கள் ஆராதனைக்கு செல்லுகிறார்கள். இப்படி மக்கள் அனைத்து பொதுவான கிறிஸ்தவ ஜெபகூட்டங்களை நடத்தினாலும், அநேகர் தனிஜெபம் செய்வது இல்லை என்று முழுமையாக நம்புகிறேன். தேவனுக்கும் நமது ஆத்துமாவுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்களை எந்த கண்ணும் காண்பதில்லை. அதினால் அநேகர் தனிஜெபத்தை செய்யாமல் போகிறார்கள்.
ஆயிரக்கணக்கானோர் ஒருபோதும் ஜெபம் என்று ஒரு வார்த்தையும் உச்சரிப்பதில்லை என்று நான் நம்புகிறேன். அவர்கள் சாப்பிடுகிறார்கள், குடிக்கிறார்கள், தூங்குகிறார்கள், வேலைக்கு செல்லுகிறார்கள், மறுபடியும் வீட்டுக்கு திரும்புகிறார்கள். அவர்கள் கர்த்தர் கொடுத்த காற்றை சுவாசிக்கிறார்கள், தேவனுடைய உலகத்திலே சுற்றி திரிகிறார்கள், கர்த்தருடைய இரக்கங்களினால் சந்தோஷமடைகிறார்கள். அவர்கள் மரிக்கும் சரீரத்தை பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்பாக நியாயதீர்ப்பும் நித்தியமும் இருக்கிறது. ஆனாலும் அவர்கள் தேவனிடம் ஜெபிப்பதில்லை. அழிந்து போகிற மிருகத்தை போல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆத்துமா இல்லாத உயிரினங்களை போல வாழ்ந்து, உயிரினங்களை போல நடந்து கொள்ளுகிறார்கள். அவர்களுக்கு சுவாசத்தையும் ஜீவனையும் எல்லாவற்றையும் கொடுத்த தேவனிடம் ஒரு வார்த்தை கூட பேசியிருக்கமாட்டார்கள். முடிவிலே தேவனின் வாயிலிருந்து அவர்களுக்கு நித்தியத்திற்கு தண்டனை வரப்போகிறது. இது எவ்வளவு கொடூரமானது. ஆனால் இது ஒரு இரகசியமாக நடக்கப் போகிற காரியமல்ல. எல்லா மக்களும் அறிந்து கொள்ளுகிற விதத்தில்தான் இருக்கப்போகிறது.
சிலர் ஜெப வடிவங்களை மட்டும் பயன்படுத்துகிறார்கள்
அநேக ஆயிரகணக்கான மக்களின் ஜெபங்கள் வெறும் வாயின் வார்த்தைகளாகவும், மனப்பாடம் செய்த ஜெபத்தை திரும்ப திரும்ப சொல்வதாகவும் தான் இருக்கிறது. மனப்பாடம் செய்த ஜெபத்தின் அர்த்தத்தை கூட அறியாமல் ஜெபிக்கிறார்கள். ஒரு சிலர் சிறிய வயதில் தங்கள் பள்ளியில் சொல்லிகொடுத்த ஜெபத்தை அவசர அவசரமாக சொல்லி விடுவார்கள். ஒரு சிலர் தாங்கள் பின்பற்றுகிற விசுவாச அறிக்கையில் இருந்து ஜெபிப்பார்கள். ஆனால் அவர்கள் விசுவாச அறிக்கை என்ன எதிர்பார்க்கிறது என்பதை மறந்துபோய் ஜெபிப்பார்கள். ஒரு சிலர் ஜெபத்தில் இயேசு சொல்லிக் கொடுத்த ஜெபத்தை செய்வார்கள். ஆனால் அந்த ஜெபத்தை மனப்பூர்வமாகவோ அல்லது அதின் ஆசிர்வாதங்களை அறிந்தவர்களாகவோ ஜெபிக்கமாட்டார்கள்.
நன்றாக இறையியலை தெரிந்துவைத்திருக்கிறவர்கள் கூட தங்கள் ஜெபங்களை குறித்து மிகவும் அலட்சியமாகவே இருக்கிறார்கள். படுக்கைக்கு சென்ற பிறகு வாயில் முனுமுனுவென்று ஜெபிப்பது அல்லது துணி துவைக்கும் போது ஜெபிப்பது அல்லது காலையில் உடை உடுத்தும் போது ஜெபிப்பது என அலட்சியமாக இருக்கிறார்கள். ஆனால் இப்படி ஜெபித்துவிட்டு தேவனிடம் தங்கள் ஜெபம் கேட்கப் பட்டுவிட்டது என்று தவறாக நினைத்து கொள்ளுகிறார்கள். தேவனின் பார்வையில் இப்படி செய்கிற ஜெபம் ஜெபமாக ஏற்றுகொள்ளப்படாது. நம்முடைய இருதயத்திலிருந்து வராத வார்த்தைகள் நமது ஆத்துமாவிற்கு ஒரு நாளும் பயனை தராது. அது நரகலான விக்கிரகங்களுக்கு முன்பாக கொட்டுகிற முழக்கம் போல் இருக்கிறது. இருதயத்திலிருந்து வராமல் நமது வாயிலிருந்தும் உதடுகளிலிருந்தும் வருகிற ஜெபம் ஜெபமல்ல.
தமஸ்கு வீதியில் கர்த்தர் சவுலை சந்திப்பதற்கு முன்பு சவுல் அநேக நீண்ட ஜெபங்களை செய்திருப்பார் என நிச்சயம் நம்புகிறேன். ஆனால் இயேசுவை சந்தித்த அந்த நிகழ்ச்சிக்கு பிறகு நொறுங்குண்ட இருதயத்திலிருந்து சவுல் ஜெபிக்கும்போது "அவன் இப்போது ஜெபிக்கிறான்" என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறதா? நான் சொல்வதை கேளுங்கள். நான் காரணமின்றி இவ்வாறு பேசவில்லை என்பதைக் காட்டுகிறேன். எனது அறிக்கைகள் மிகைப்படுத்தப்பட்டவை என்றும் உத்தரவாதமற்றவை என்றும் நினைக்கிறீர்களா? கவனமாகக் கேளுங்கள், நான் உங்களுக்கு உண்மையை மட்டுமே சொல்கிறேன் என்பதை விரைவில் காட்டுகிறேன்.
மனிதன் ஏன் ஜெபிக்கிறதில்லை
ஜெபிப்பது என்பது எந்த ஒரு மனிதனின் இயற்கையான குணநலன் அல்ல. "மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை" (ரோமர் 8:7). மனிதனின் இருதயம் தேவனை விட்டு பிரிந்து தூரமாக போவதைத்தான் மிகவும் விரும்புகிறது. கர்த்தருக்கு முன்பாக மனிதர்களுக்கு பய உணர்வு மட்டுமே எஞ்சி இருக்கிறது.
தன்னுடைய பாவத்தைப்பற்றி உணராமல், தன்னுடைய ஆவிக்குரிய நிலையை உணராமல், காணப்படாத காரியங்களில் விசுவாசம் இல்லாமல், பரலோகத்தின் மீதும் பரிசுத்தத்தின் மீதும் விருப்பமில்லாமல் ஜெபிக்கும் ஜெபத்தினால் என்ன பிரயோஜனம்? இவை எல்லாவற்றையும் மக்கள் அறிவில் அறிந்திருக்கிறார்கள். ஆனால் உணர்வுகளில் அறிந்து வைத்திருக்கவில்லை. அநேக மக்கள் அகலமான பாதையில் பயணிக் கிறார்கள். காரியம் இப்படி இருப்பதால்தான், ஒருசிலர் மட்டுமே உண்மையாக ஜெபிக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.
ஜெபிப்பது என்பது நாகரிகமாக இருக்காது என்று சொல்லுகிறவர்களை பற்றி சிந்தித்து பாருங்கள். ஜெபிக்க அநேக மக்கள் வெட்கப்படுகிறார்கள். நூற்றுகணக்கான மக்கள் தாங்கள் ஜெபிப்பதை வெளிப்படையாக சொல்வதற்கு மறுக்கிறார்கள். ஆயிரக் கணக்கான மக்கள் புறஜாதி மக்களுடன் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஜெபிக்காமலே படுக்கைக்கு செல்கிறார்கள். நன்றாக உடுத்துகிறார்கள், திரையரங்ககளுக்கு செல்கிறார்கள், நன்றாக சிந்தித்து செயல்படுகிறார்கள், நல்ல நாகரீகத்துடன் இருக்கிறார்கள். ஆனால் ஜெபிக்க மறுக்கிறார்கள். நான் இதை மறுக்க முடியாது. ஏனெனில் அநேக மக்கள் ஜெபிக்க வெட்கப்படுகிறார்கள் என்பது சமுதாயத்தில் நான் பொதுவாக பார்க்க கூடியதாயிருக்கிறது. இதினால் தான் ஒருசிலர் மட்டுமே உண்மையாக ஜெபிக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.
அநேக மக்கள் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி சிந்தித்து பாருங்கள். இரவும் பகலும் அவர்கள் பாவத்தோடு விளையாடி கொண்டு இருந்ததையும், பாவத்தோடு கொஞ்சி கொளாவி கொண்டு இருந்ததையும் நீங்கள் சிந்தித்துபாருங்கள். உலகத்துக்காகவும் அதில் உள்ளவை களுக்காகவும் அவர்கள் வாழ்ந்தபோது, அவர்கள் உலகத்திற்கு எதிராக ஜெபித்தார்கள் என்று நாம் எப்படி சொல்லமுடியும்? தேவனுக்காக சேவை செய்ய ஒரு சிறிய அக்கறை கூட காட்டாத அவர்களை பார்த்து, தேவனுக்காக சேவை செய்ய கர்த்தரிடம் கிருபையை கேட்பார்கள் என்று எப்படி சொல்லமுடியும்? முடியவே முடியாது. அநேக மக்கள் தேவனிடம் எதையும் கேட்கவில்லை. அப்படி கேட்டாலும் எதை கேட்கிறோம் என்பதை அறிந்து கேட்கவில்லை என்பது மிகவும் தெளிவாய் தெரிகிறது. ஜெபமும் பாவமும் ஒருசேர ஒரே இருதயத்தில் வாழமுடியாது. ஜெபம் பாவத்தை இல்லாமலாக்கும் அல்லது பாவம் ஜெபத்தை இல்லாமலாக்கும். நான் அநேக மக்களின் வாழ்க்கையை பார்ப்பதால் இந்த உண்மையை மறுக்கமுடியாது. இதினால் தான் ஒருசிலர் மட்டுமே ஜெபிக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.
அநேக மக்களின் மரணங்களை பற்றி சிந்தித்து பாருங்கள். எத்தனை மக்கள் மரணத்திற்கு அருகில் செல்லும்போது தாங்கள் தேவனுக்கு அந்நியர்களாக இருப்பதைப் பார்த்திருப்பார்கள். அவர்கள் அப்போது சுவிசேஷத்தை அறியாமல் இருந்ததற்காக மட்டும் வருத்தப்படுகிறதில்லை. கர்த்தரிடம் பேசுவதற்கான வல்லமை அற்றவர்களாக இருப்பதை நினைத்து வருத்தப்படுகிறார்கள். அந்த தருணத்தில் தேவனிடம் செல்வதற்கு அவர்கள் எடுத்த முயற்சிகளில் தடுமாற்றமும் கூச்சமும் காணப்படுகிறது. அவர்கள் ஏதோ ஒரு புதிதான காரியத்தை கையில் எடுத்தது போல் காணப்படுகிறார்கள். அவர்கள் கர்த்தரிடம் இதற்கு முன்பாக பேசினதில்லை. யாரோ ஒருவர் அவர்களுக்கு அறிமுகம் தரவேண்டும் என நினைக்கிறார்கள். ஒரு போதகர் ஒரு பெண்ணின் வியாதியின் கடைசி தருணத்தில் சென்றபோது அந்த பெண் கவலையோடு போதகரிடம் கேட்ட காரியம் எனக்கு ஞாபகம் வருகிறது. அந்த வியாதி நிறைந்த பெண், போதகரை பார்த்து தனக்காக ஜெபிக்கும்படி மிகவும் ஆசையாக கேட்டாள். அதற்கு அந்த போதகர் நான் உங்களுக்காக என்ன ஜெபிக்கவேண்டும் என்று கேட்டார். ஆனால் அவளிடமிருந்து அவளுடைய ஆத்துமாவிற்கு பிரயோஜனமாக தேவனிடம் கேட்ககூடிய ஒரு வார்த்தைகூட பதிலாக வரவில்லை. அவள் எதிர்பார்த்ததெல்லாம் ஒரு சராசரி போதகரின் ஜெபத்தை மட்டுமே. நான் இதை தெளிவாக புரிந்துகொண்டேன். மரணப்படுக்கை பல இரகசியங்களை வெளிப்படுத்தும். வியாதி மற்றும் மரணப்படுக்கையில் உள்ள மக்களிடம் நான் கண்டதை என்னால் மறக்க முடியாது. இதுவும் சிலரே ஜெபிக்கிறார்கள் என்று நம்புவதற்கு என்னை வழி நடத்துகிறது.
உங்கள் இருதயத்தை என்னால் பார்க்க முடியாது. உங்களின் தனிப்பட்ட ஆவிக்குரிய காரியங்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் வேதத்தையும் உலகத்தையும் நான் பார்க்கிறபோது நிச்சயமாக இதைக் காட்டிலும் ஒரு முக்கியமான தேவையான கேள்வியை நான் கேட்டுவிட முடியாது. அது “நீங்கள் ஜெபிக்கிறீர்களா?” என்பதே.
தேவன் ஆயத்தமாயிருக்கிறார்
நீங்கள் ஜெபிக்கிறீர்களா? என்று கேட்கிறேன். ஏனெனில் ஜெபம் என்பது கிறிஸ்தவத்தின் மிகுந்த ஊக்கமளிக்கும் ஒரு செயல்.
மனிதன் ஜெபிக்க முயற்சிப்பான் என்றால் மட்டும் போதும், அதை எளிமையாக்குவதற்கு தேவனையான எல்லாம் தேவனிடம் இருக்கிறது. எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்கப்படும். கோணலான பாதைகள் செவ்வையாக்கப்படும். கரடுமுரடான பாதைகள் சமமாக்கப்படும். ஆனால் ஒரு மனிதன் ஜெபிக்காமல் இருப்பதற்கு எந்த சாக்குப்போக்கும் சொல்லமுடியாது.
எந்த மனிதனாக இருந்தாலும், அவன் எவ்வளவு பெரிய பாவங்களை செய்திருந்தாலும், உதவியற்ற நிலையில் இருந்தாலும் தேவனை பிதாவாக அழைக்க கூடிய வழி இருக்கிறது. இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையில் செய்த தியாக பலியின் மூலமாக ஒரு தீர்வை ஏற்படுத்தியிருக்கிறார். இனி தேவனுடைய பரிசுத்தமும் நீதியும் பாவிகளை பயமுறுத்தி அவர்களை பின்னுக்கு தள்ளப்போவதில்லை. ஆனால் இக்காரியங்கள் இயேசு கிறிஸ்துவின் மூலமாக தேவனிடம் சேருபவர்களுக்கும் கர்த்தருடைய கிருபையை தேடுபவர்களுக்கும் அவருடைய வார்த்தையை கேட்பவர்களுக்கும் மட்டுமே பொருந்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஏறெடுக்கப்பட்ட ஜெபம் ஒருபோதும் ஏமாற்றம் அடைந்ததில்லை. அந்த நாமத்தினாலே மனிதன் தைரியமாக தேவனிடத்தில் கிட்டிசேர்ந்து நம்பிக்கையோடு தேவனிடம் கேட்க முடியும். தேவனும் அந்த ஜெபத்தை கேட்பதற்கு ஆயத்தமாக இருக்கிறார். இந்த காரியங்களை சற்று சிந்தித்துப்பாருங்கள். இது உங்களை உற்சாகப் படுத்தவில்லையா?
எப்போதுமே ஒரு வழக்கறிஞர் உங்களுக்காக பரிந்து பேசுகிறவராக, அவர் மூலமாய் தேவனிடம் சேருகிறவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அந்த வழக்கறிஞர் இயேசு கிறிஸ்துவே. அவர் நமது ஜெபத்தை தம்முடைய சர்வ வல்லமையுள்ள பரிந்து பேசுதலின் மூலமாக தேவனிடம் சேர்க்கிறார். நமது ஜெபம் இயேசுவின் வல்லமையோடு கலக்கும்போது மிகவும் இனிமையாக கர்த்தருடைய சமூகம் நோக்கி செல்கிறது. அந்த ஜெபம், நம்மில் இருந்து பிறக்கும்போது எத்தனை பெலவீனமானதாக இருந்தாலும் நம்முடைய பிரதான ஆசாரியனும் மூத்த சகோதரனுமாகிய இயேசு கிறிஸ்துவின் பக்கத்தில் மிகவும் பலமுள்ளதாகவும் வல்லமையுள்ளதாகவும் இருக்கிறது. ஒரு வங்கி காசோலை காகிதம் கையொப்பம் இல்லாமல் இருந்தால் அது வெறும் வெற்று காகிதமே. ஒரு எழுதுகோலின் முனைப்பகுதியே அதற்கு மதிப்பை அளிக்கிறது. ஆதாமின் ஒரு ஏழைக்குழந்தை ஏறெடுக்கும் ஜெபம் மிகவும் பலவீனமானதுதான். ஆனால் இயேசுவின் கையினால் அதற்கு ஒப்புதல் கொடுக்கப்படும் போது அது மிகவும் பெலமுள்ளதாய் மாறுகிறது. ரோம சாம்ராஜ்யத்தில் ரோம குடியுரிமை பெற்ற ஜனங்களு க்கு உதவி செய்வதற்கு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு இருப்பார். அவரின் வாசற்படி எப்போதும் திறந்திருக்கும். அதேபோல் அவரிடம் இரக்கத்திற்காக, கிருபைக்காகக் கெஞ்சுகின்ற அனைத்து மக்களின் ஜெபத்தையும் கேட்பதற்கு இயேசு கிறிஸ்துவின் காதும் திறந்தே இருக்கிறது. அதுவே இயேசுவின் பணி. அவர்களின் ஜெபத்தை கேட்பதே இயேசுவுக்கு சந்தோஷமானது. இந்த காரியங்களை சற்று யோசித்து பாருங்கள். இது உங்களுக்கு உற்சாகம் அளிக்கவில்லையா?
ஜெபத்தில் நமது பலவீனங்களுக்கு உதவ பரிசுத்த ஆவியானவர் எப்போதும் தயாராக இருக்கிறார். நாம் தேவனிடம் பேசுவதற்கு செய்கிற முயற்சிகளில் உதவுவதே பரிசுத்த ஆவியானவரின் வேலையில் சிறப்பான வேலையாய் இருக்கிறது. எனக்கு ஒன்றும் சொல்ல தெரியவில்லையே என்று கவலை படத்தேவையில்லை. நாம் ஆவியானவரிடம் உதவியை கேட்கும்போது அவர் உதவ தயாராயிருக்கிறார். கர்த்தருடைய மக்கள் ஏறெடுக்கிற ஜெபமானது ஆவியானவரின் வார்த்தைகளே. அவர்களுக்குள் வாசம் செய்கிற பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு கிருபையின் ஆவியை கொடுத்து ஜெபிக்கும்படி செய்கிறார். நிச்சயமாக கர்த்தருடைய பிள்ளைகளின் ஜெபங்கள் கேட்கப்படும் என நம்பலாம். இது வெறுமனே வாயின் வார்த்தைகளில் முனுமுனுப்பவர்களுக்கு அல்ல, பரிசுத்த ஆவியின் உதவியோடு மன்றாடுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த காரியங்களை சற்று யோசித்து பாருங்கள். இவை உங்களுக்கு உற்சாகம் அளிக்கவில்லையா?
வாக்குத்தத்தங்கள்
ஜெபிக்கிறவர்களுக்கு மிகவும் பெரியதும் விலையேறப்பெற்றதுமான வாக்குறுதிகள் உள்ளன. இயேசுகிறிஸ்து பின்வரும் வசனங்களின் மூலமாக அதை சொல்லுகிறார் “கேளுங்கள் அப்பொழுது கொடுக்கப்படும். தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள். தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்கு திறக்கப்படும். ஏனெனில் கேட்கிறவன் எவனும் பெற்று கொள்ளுகிறான். தேடுகிறவன் கண்டடைகிறான். தட்டுகிறவனுக்கு திறக்கப்படுகிறது" (மத்தேயு 7:7,8). மேலும் "நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளை கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்" (மத்தேயு 21:22). "நீங்கள் என் நாமத்தினாலே எதை கேட்பீர்களோ குமாரனில் பிதா மகிமைபடும் படியாக அதை செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான்செய்வேன்." (யோவான் 14:13,14). இரவில் சென்று தன்னுடைய நண்பனிடம் உணவு வருந்திகேட்ட உவமை யிலிருந்தும், கைவிடப்பட்ட விதவையின் உவமையிலிருந்தும் இயேசு எதை சுட்டிகாட்டுகிறார்? (லூக்கா 11:5,18:1). இந்தப் பகுதிகளைச் சிந்தித்துப்பாருங்கள். இது உங்களை ஜெபிப்பதற்கு உற்சாகப்படுத்த வில்லையா?
உதாரணங்கள்
ஜெபத்தின் வல்லமையை விளக்கும் அருமையான உதாரணங்கள் வேதத்தில் இருக்கிறது. ஜெபத்தால் செய்ய முடியாத அளவுக்கு எதுவும் பெரியதாகவோ, கடினமானதாகவோ இல்லை. ஜெபம் நெருப்புக்கு எதிராகவும், காற்றுக்கு எதிராகவும், பூமிக்கு எதிராகவும், நீருக்கு எதிராகவும் ஜெயங்களை பெற்றிருக்கிறது. ஜெபம் செங்கடலை பிரித்தது. ஜெபம் கன்மலையில் இருந்து நீரையும், வானத்திலிருந்து அப்பத்தையும் கொண்டுவந்தது. ஜெபம் சூரியனை ஒரே நிலையிலே நிற்க வைத்தது. ஜெபத்தால் வானத்திலிருந்து அக்கினி இறங்கிவந்து எலியாவின் பலியை பட்சித்தது. ஜெபம் அகிதோப்பேலின் ஆலோசனையை பைத்தியமாக்கி விட்டது. ஜெபம் சனகெரிப் ராஜாவின் இராணுவாட்களை தூக்கியெறிந்தது. ஸ்கொட்லாந்து ராணியான மேரி ஜெபத்தை பற்றி சொன்ன வார்த்தைகள் மிகவும் மேன்மையானது. அவள் சொன்னது "பத்தாயிரம் போர்வீரர் கொண்ட படையை பார்க்கிலும் ஜான் நோக்ஸ் (John Knox) ஜெபத்திற்கு நான் பயப்படுகிறேன்." ஜெபம் வியாதி நிறைந்தவர்க்கு சுகம் கொடுத்தது. மரித்தவர்களை உயிரோடு எழுப்பியது. ஜெபம் அநேக ஆத்துமாக்களுக்கு மனந்திரும்புதலை கொண்டுவந்துள்ளது. ஆகஸ்தீனின் தாயாருக்கு ஒரு வயதான கிறிஸ்தவர் சொன்னது "அநேக வேண்டுதல்களுக்கு சொந்தகாரனாகிய உன் மகன் அழிந்துபோகப் போவதில்லை." ஜெபமும், வலிகளும், விசுவாசமும் எதை வேண்டுமானாலும் செய்யும். தேவனால் தத்தெடுக்கப்பட்டவனுக்கு எந்த ஒரு காரியமும் சாத்திய மற்றது இல்லை. இந்த ஜனங்களை அழிக்கப் போகிறேன் என்று தேவன் சொன்னபோது மோசே இஸ்ரவேல் ஜனங்களுக்காக தேவனிடம் மன்றாடினார் (யாத் 32:10). எவ்வளவு தூரம் ஆபிரகாம் சோதோமின் இரக்கத்திற்காக மன்றாடினாரோ அவ்வளவு தூரம் தேவனும் இரக்கம் காட்டினார். ஆபிரகாம் ஜெபத்தை நிறுத்தும் வரைக்கும் தேவன் இரக்கத்தை குறைக்கவே இல்லை. சற்று இதை சிந்தித்து பாருங்கள். இது உங்களை உற்சாகப்படுத்தவில்லையா?
ஆவிக்குரிய காரியங்களில் வெற்றிகளை பெறுவதற்கும், முன்னோக்கி செல்வதற்கும் நான் மேலே விளக்கிய ஜெபத்தை தவிர வேறு எந்த காரியத்தால் நமக்கு உதவி செய்ய முடியும்? தேவனின் இரக்கத்தை பெறவும், நம்முடைய வழிகளில் தடைபோடுகிற பாவத்தை மேற்கொள்ளுவதற்கு பெலத்தைப் பெறவும் ஜெபத்தைத் தவிர வேறு எந்த காரியம் நமக்கு உதவும்? ஒருவேளை நரகத்தில் இருக்கும் சாத்தான்களுக்கு அப்படியொரு வழி இருந்திருந்தால், அவர்கள் எத்தனை ஆவலுடனும் சந்தோஷத்துடனும் அதை செய்திருப்பார்கள்.
ஆனால், இத்தனை மகிமையான ஜெபத்தை அசட்டை செய்கிற மனிதன் முடிவில் எங்கே போகப்போகிறான் தெரியுமா? ஜெபமே செய்யாமல் மரணத்தை சந்திக்கிற மனிதனுக்கு கிடைக்ககூடிய பங்கு என்ன தெரியுமா? நிச்சயமாக இதை வாசிக்கிற நீங்கள் அந்த கூட்டத்தில் இருக்ககூடாது என விரும்புகிறேன். மறுபடியும் கேட்கிறேன் நீங்கள் ஜெபிக்கிறீர்களா?
மிகப்பெரிய வித்தியாசம்
நீங்கள் ஜெபிக்கிறீர்களா? என்று நான் கேட்கிறேன். ஏனெனில் ஜெபத்தில் விடாமுயற்சியுடன் இருப்பதே சிறப்பான பரிசுத்த வாழ்க்கையின் இரகசியமாகும்.
உண்மையாகவே கிறிஸ்தவர்களிடையே ஒருவருக்கொருவர் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. கர்த்தருடைய இராணுவத்தில் முதலில் நிற்பவர்களுக்கும் பின்னால் நிற்பவர்களுக்கும் இடையில் ஒரு பெரும் வேறுபாடு இருக்கிறது. அவர்கள் அனைவரும் ஒரே இராணுவத்தில் இருந்து போர் புரிகிறார்கள். ஆனால் ஒருசிலர் மிகவும் துணிவுடன் நல்ல போர் புரிகிறவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கர்த்தருடைய பணியை செய்கிறார்கள். ஆனால் ஒருசிலர் மற்றவர்களை காட்டிலும் சிறப்பாக செய்கிறார்கள். தேவன் கொடுத்த வெளிச்சம் அனைவரிடமும் இருக்கிறது. ஆனால் ஒருசிலர் மற்றவர்களை காட்டிலும் அதிகமாய் பிரகாசிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே ஓட்டத்தை தான் ஓடுகிறார்கள். ஆனால் ஒருசிலர் மற்றவர்களை காட்டிலும் வேகமாக ஓடுகிறார்கள். அவர்கள் எல்லாரும் ஒரே தேவனையும் இரட்சகரையும்தான் நேசிக்கிறார்கள். ஆனால் எப்படி ஒரு சிலரின் நேசம் மற்றவர்களின் நேசத்தை பார்க்கிலும் அதிகமாயிருக்கிறது. நம் மத்தியில் காரியம் இப்படி இல்லையா என நான் ஒவ்வொரு உண்மையான கிறிஸ்தவர்களை பார்த்தும் கேட்கிறேன்.
ஒரு சில கர்த்தருடைய பிள்ளைகள் மனம்திரும்புதலின் போது எப்படி இருந்தார்களோ அப்படியேதான் இருக்கிறார்கள். அவர்கள் மறுபிறப்பை அடைந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இன்னும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பழைய கிறிஸ்தவ அனுபவங்களையே சொல்லிக்கொண்டிருப்பார்கள். பத்து வருடத்திற்கு முன்பாக மனந்திரும்பியபோது எப்படி இருந்தார்களோ அப்படியே தான் இருப்பார்கள். அவர்களின் ஆவிக்குரிய தாகமும், கிறிஸ்தவத்தில் கொண்ட ஆர்வமும் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் இருக்கும். நிச்சயமாக அவர்கள் மோட்சப் பிரயாணிகள்தான். ஆனால் பழைய கிபியோனியர்களை போல காணப்படுகிறார்கள். அவர்களின் அப்பம் உலர்ந்து பூசணம் பிடித்திருக்கிறது. அவர்களின் பாதரட்சைகள் பழசாய் போயிருக்கிறது. அவர்கள் துணிகள் கிழிந்திருக்கிறது. நான் மிகுந்த துக்கத்துடனும் துயரத்துடனும் இதை சொல்கிறேன். நான் சொல்வது உண்மையில்லையா? என ஒவ்வொரு உண்மையான கிறிஸ்தவனையும் பார்த்து கேட்கிறேன்.
எப்போதும் முன்னேறிச் செல்கிற கர்த்தருடைய பிள்ளைகளும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் மழைக்கு பிறகு முளைக்கிற புல்லுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். அவர்கள் இஸ்ரவேல் மக்கள் விருத்தியடைந்ததுபோல வாழ்க்கையில் விருத்தியடைவார்கள். அவர்கள் கிதியோனைப் போல பின்தொடர்வார்கள். அவர்கள் ஒருசில நேரம் விழுந்து போகலாம், ஆனால் எப்போதும் இயேசுவை பின்பற்றுவதை நிறுத்தமாட்டார்கள். அவர்கள் எப்போதும் கிருபையின் மேல் கிருபையையும் விசுவாசத்தின் மேல் விசுவாசத்தையும் பலத்தின்மேல் பலத்தையும் சேர்த்துக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் அவர்களை சந்திக்கும்போதும் அவர்கள் இருதயம் விஸ்தாரமாக வளர்கிறது. அவர்களின் ஆவிக்குரிய நிலைமையும் உயரமாகவும் பலமாகவும் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் வளர்ச்சியடைந்து கிறிஸ்தவத்தில் அநேக காரியங்களை உணர்ந்து கொள்வார்கள். அவர்களின் விசுவாசத்தை செய்கைகளின் மூலம் மட்டுமல்ல. அவர்களின் செயல்களின் மூலமாகவும் காட்டு வார்கள். அவர்கள் நன்மை செய்வது மட்டுமல்ல, தாங்கள் செய்கிற நற்செயல்களை சொல்லிக் காட்டவோ அல்லது அதில் தோய்வு பெறவோமாட்டார்கள். அவர்கள் பெரிதான காரியத்திற்கு முயற்சி செய்து, பெரிதான காரியங்களை சாதிப்பார்கள். ஒருவேளை அவர்கள் தோற்று போனால் மறுபடியும் முயற்சி செய்வார்கள். அவர்கள் விழுந்துபோனால் மறுபடியும் எழுந்திருப்பார்கள். ஆனால் இவை எல்லாவற்றிலும் அவர்கள் தங்களை அப்பிரயோஜனமான ஊழியக்காரர்கள் என்றும், ஏழ்மையானவர்கள் என்றும் நினைத்து கொள்வார்கள். அவர்களிடம் ஆடம்பரத்தை பார்க்க முடியாது. அவர்களே எல்லாரின் கண்களுக்கு முன்பாகவும் கிறிஸ்தவத்தை அழகானதாகவும் அன்பானதாகவும் காட்டுகிறவர்கள். மனந்திரும்பாத மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையை பாராட்டுவார்கள். சுயநலம் கொண்ட உலக மனிதர்கள் கூட அவர்கள் மீது நல்ல கருத்துகளை கூறுவார்கள். அவர்களோடு இருப்பதும், அவர்கள் பேசுவதை கேட்பதும் எவ்வளவு சிறப்பானது. அவர்களை நீங்கள் சந்திக்கிறபோது மோசே கர்த்தருடைய சமூகத்தில் இருந்து வெளிவரும்போது எப்படி காணப்பட்டாரோ அப்படி காணப்படுவார்கள். நீங்கள் அவர்களோடு இணையும்போது அவர்கள் கூட இருப்பதால் அனலூட்டப்படுவீர்கள். உங்கள் ஆத்துமாவும் நெருப்பிற்கு அருகில் இருப்பது போல இருக்கும். அத்தகைய மனிதர்கள் ஒருசிலரே என்பது எனக்கு தெரியும். ஏன் இப்படிபட்ட மக்கள் பல பேர் இல்லை? என்பதே நான் உங்களை பார்த்து கேட்கும் கேள்வி.
வேறுபாட்டின் காரணம்
நான் மேலே விளக்கிய வேறுபாட்டை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறீர்கள்? என்ன காரணத்தினால் ஒருசில விசுவாசிகள் மற்றவர்களை காட்டிலும் பிரகாசமுள்ளவர்களாகவும் பரிசுத்தமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்? 20 பேர்களில் 19 பேர் இது அவர்களின் தனிப்பட்ட ஜெபப்பழக்கத்தினால் ஏற்பட்ட வித்தியாசம் என்றே நிச்சயம் சொல்வார்கள். குறைவாக ஜெபிப்பவர்களால் சிறப்பான பரிசுத்த வாழ்க்கையை வாழமுடியாது. சிறப்பான பரிசுத்த வாழ்க்கையை வாழுகிறவர்கள் நிச்சயமாக அதிகமாக ஜெபம் செய்கிறவர்களாக இருப்பார்கள் என நம்புகிறேன்.
இந்த செய்தியை கேட்கிற ஒரு சிலருக்கு இந்த காரியங்கள் ஒரு எச்சரிக்கையின் ஒலியாக இருக்கும் என நிச்சயமாக சொல்லுகிறேன். நேர்த்தியான பரிசுத்த வாழ்க்கை ஒரு வரம் என்றும், அதை ஒரு சிலர் மட்டுமே வாழமுடியும் என்றும் அநேகர் தவறான எண்ணம் கொண்டிருப்பதாக எனக்கு தெரிகிறது. புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் வாழ்க்கை வரலாறை பார்த்து தூரத்தில் நின்று இரசிக்கிறார்கள். அவர்களுக்கு அருகில் வாழ்கிற பரிசுத்தமான மனிதர்களை அழகானவர்களாக நினைக் கிறார்கள். இந்த வாழ்க்கை ஒவ்வொரு விசுவாசிக்கும் எட்டக்கூடிய தாகவே இருந்தாலும் ஒருசிலர் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் என்கிற அவர்களின் தவறான எண்ணமே அவர்களை பெற்றுக்கொள்ள முடியாமல் செய்கிறது. இது மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் தவறான எண்ணம்.
மிகச்சிறந்த கிறிஸ்தவ வாழக்கை என்பது விசுவாசத்தோடே கிருபையின் சாதனங்களை பயன்படுத்துவதில் தான் தங்கியிருக்கிறது என நம்புகிறேன். நாம் அசாதாரண முறையில் ஆவிக்குரிய தாலந்துகளை பெற்றுக் கொள்ளுகிறோம் என்று நான் சொல்ல வரவில்லை. ஒரு மனிதன் தேவனிடம் மனந்திரும்பிய பிறகு, தேவன் அவனுக்கு கொடுத்திருக்கின்ற கிருபையின் சாதனங்களை முழு முயற்சியோடு பயன்படுத்தும்போதே அத்தகைய பரிசுத்தமான வாழ்க்கையை வாழ முடியும் என நான் சொல்லுகிறேன். இயேசுகிறிஸ்துவின் திருச்சபையில் மிகவும் சிறப்பாக செயல்படுகிற விசுவாசிகள், கர்த்தர் கொடுத்த வழிமுறையான தனிஜெபத்தை சிறப்பான முறையில் பயன்படுத்துவதாலே வளர்ந்திருக்கிறார்கள் என முழு நிச்சயத்துடன் அறிக்கையிடுகிறேன்.
ஜெபம் வல்லமையுள்ளது
வேதத்துக்கு உள்ளும் புறம்பும் மிகவும் பிரகாசமான சிறந்த வாழ்க்கையை வாழ்ந்த தேவனுடைய ஊழியக்காரரின் வாழ்க்கையை பாருங்கள். மோசேயை பற்றியும் பவுலைப் பற்றியும் என்ன எழுதியிருக்கிறது என்று பாருங்கள். சீர்திருத்தவாதிகளான லூத்தரை (Luther) பற்றியும் பிராட்போர்டை (Bradford) பற்றியும் வரலாற்றில் என்ன பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பாருங்கள். வைட்ஃபீல்ட் (Whitefield), செசில் (Cecil), வென் (Venn), பிக்கர்ஸ்டெத் (Bickersteth) மற்றும் மெச்சிகன் (M’Cheyne) போன்றோரின் தனிப்பட்ட தெய்வீக வாழ்க்கையில் எது தொடர்புபட்டிருக்கிறது என்று கவனியுங்கள். தனிஜெபம் செய்யமால் வெற்றியடைந்த ஏதேனும் பரிசுத்தவான்களையோ அல்லது இரத்த சாட்சிகளையோ என்னிடம் காண்பியுங்கள் பார்க்கலாம். அது முடியாது, ஏனெனில் அவர்கள் ஜெபிக்கிற மனிதர்களாய் இருந்திருக்கிறார்கள். ஜெபத்தை சார்ந்து இருங்கள். ஏனென்றால் ஜெபமே சக்தி வாய்ந்தது.
ஜெபமே பரிசுத்த ஆவியின் தொடர்ச்சியான வழிநடத்துதலை பெற்று தருகிறது. இவரே ஒரு மனிதனின் இருதயத்தில் கிருபையின் கிரியையை தொடக்குவிக்கிறார். அவர் மட்டுமே ஒரு மனிதனை முன்னேற்ற பாதையில் வழிநடத்தி வாழ்க்கையை ஆசிர்வாதமாக மாற்றுகிறார். நாம் ஜெபிப்பதை ஆவியானவர் விரும்புகிறார். யாரெல்லாம் அதிகமாக அவரின் உதவியை கேட்கிறார்களோ அவர்கள் அதிகமாக ஆவியானவரின் உதவியை பெற்றுகொள்கிறார்கள்.
பிசாசுக்கு எதிராக போராடவும், நமக்குள் தொடர்ச்சியாக இருக்கும் பாவங்களை மேற்கொள்வதற்கும் ஜெபமே ஒரு உறுதியான தீர்வாய் இருக்கிறது. இருதயத்திலிருந்து ஏறெடுக்கும் ஜெபத்திற்கு முன்பாக பாவம் உறுதியாக நிற்க முடியாது. தேவனுக்கு முன்பாக உதவியை நாடி நிற்கிறவர்களிடம் பாவம் மேலும் தன் ஆளுமையை தொடராது. நம்முடைய பரலோக மருத்துவர் நம்முடைய அனுதின பிரச்சனையை தீர்க்கிறவராய் இருக்கிறபடியால் நம்முடைய மெய்யான நிலையை அவரிடம் விரிவாக தெரியப்படுத்த வேண்டும்.
நீங்கள் கிருபையில் வளர்ச்சியடைந்த தெய்வீகமானவர்களாக விரும்புகிறீர்களா? உண்மையாக நீங்கள் அப்படி இருக்க விரும்பினால் நீங்கள் ஜெபிக்கிறீர்களா? என்பதே உங்கள் முன் இருக்கும் மிக முக்கியமான கேள்வி.
பின்மாற்றம் உண்மையாகவே நிகழ்கிறது
நீங்கள் ஜெபிக்கிறீர்களா? என்று கேட்கிறேன். ஏனெனில் ஜெபத்தை புறக்கணிப்பதே கிறிஸ்தவத்தில் பின்வாங்கிபோவதற்கு மிகப் பெரிய காரணமாக இருக்கிறது.
நல்ல போராட்டம் செய்து பின்பு பின்வாங்கி போகுதல் என்ற ஒரு காரியம் கிறிஸ்தவத்தில் இருக்கிறது. மக்கள் கலாத்தியர்கள் போல சிறிது காலம் நன்றாக வாழ்ந்துவிட்டு பிறகு தவறான உபதேசத்திற்கு தங்களை உட்படுத்தி கொள்ளலாம். அவர்களின் உணர்ச்சிகள் அனலாக இருக்கும் போது பேதுருவைப் போல சத்தமாக கிறிஸ்துவை அறிக்கை செய்வார்கள். ஆனால், சோதனை நேரம் வரும்போது மறுதலித்து விடுவார்கள். மக்கள் சில வேளைகளில் பவுடன் இருந்த மாற்குவைப்போல, வைராக்கியத்தில் குறைந்து காணப்படுவார்கள். சிலவேளைகளில் மக்கள் தேமாவைப் போல, அப்போஸ்தலர்களைப் பின்பற்றி உலக ஆதாயத்தை சார்ந்து கொள்ளுகிறார்கள்.
பின்வாங்கி போகுதல் என்பது மிகவும் பரிதாபமான காரியம். மனிதனுக்கு நேரிடுகிற அனைத்து கஷ்டத்தை பார்க்கிலும் இது மிகவும் அதிக கஷ்டத்தைத் தரக்கூடியது. ஒரு உடைந்த கப்பல், சிறகொடிந்த கழுகு, முழுவதும் களைகள் நிரம்பிய தோட்டம், ஸ்வரங்கள் இல்லாத வீணை, இடிக்கப்பட்ட சபைக்கட்டிடம் போன்ற காட்சிகள் நமக்கு சோகத்தை தரக்கூடியவை. ஆனால் அதைக்காட்டிலும் பின்வாங்கி போகுதலே மிகவும் வேதனையானது. காயப்பட்ட மனசாட்சியின் குற்ற உணர்வுகள், கர்த்தருடைய எச்சரிப்பின் அம்பினால் துளைக்கப்பட்ட இருதயம், உள்ளான குற்ற உணர்வினால் உடைந்த ஆவி என இவை அனைத்தும் நரகத்தின் ருசியை தரவல்ல காரியங்கள். இவை இந்த பூமியில் நரகமாயிருக்கிறது. உண்மையாகவே ஞானியாகிய சாலோமோன் சொன்னது சரியான விஷயமே. "பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலே திருப்தியடைவான்'' (நீதி 14:14).
பின்மாற்றத்தின் காரணம்
அநேகர் பின்வாங்கி போவதற்கு என்ன காரணமாயிருக்கிறது? பொதுவான விதியாக தனிஜெபத்தை செய்யாமலிருப்பதே முதலாவது முக்கிய காரணமாயிருக்கிறது என நம்புகிறேன். சந்தேகமில்லாமல் பின்வாங்கிபோகுதலைப் பற்றிய இந்த இரகசிய உண்மை இறுதி நாள்வரை தெரியாது. ஆனால் கிறிஸ்துவின் ஊழியக்காரனாக என்னுடைய மனசாட்சியில் இருந்து நான் இந்த கருத்துகளை சொல்லுகிறேன். நான் மறுபடியும் தெளிவாக சொல்லுகிற என்னுடைய கருத்து என்னவெனில் பின்வாங்கி போகுதல் பொதுவாக ஆரம்பமாவது தனிஜெபத்தை செய்யாமல் இருப்பதாலேயே.
ஜெபம் செய்யாமல் வேதம் வாசிப்பது, ஜெபம் செய்யாமல் பிரசங்கம் கேட்பது, ஜெபம் செய்யாமல் திருமண ஒப்பந்தம் செய்வது, ஜெபம் செய்யாமல் பயணங்களை மேற்கொள்வது, ஜெபம் செய்யாமல் வசிப்பிடங்களை தேர்வுசெய்வது, ஜெபம் செய்யாமல் நண்பர்கள் உருவாக்கப்படுவது, அனுதின ஜெபத்தை அவசர அவசரமாகவும், முழு இருதயம் இல்லாமலும் செய்வது என இவையனைத்தும் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துகொள்ளுகிற அநேக மக்களை ஆவிக்குரிய இயலாமைக்கு வழிநடத்தும் படிகட்டுகளாகவும், தேவன் அவர்களுக்கு நியமித்திருக்கும் பயங்கரமான அழிவிற்கு வழிநடத்தும் காரியங்களாய் இருக்கின்றன.
இயேசு கிறிஸ்துவின் சபையில் காணப்பட்ட பின்வாங்கிபோன லோத்து, நிலையற்ற சிம்சோன், மனைவியை வணங்கும் சாலமோன், முரண்பாடான ஆசா, வளைந்துகொடுக்கும் யோசபாத், உலக காரியத்தின் மேல் அக்கறை காட்டின மார்த்தாள் போன்றோரிடம் ஜெபம் செய்யாமல் காரியங்களை செய்கிற நிலை இருந்தது. இந்த வரலாறுகளிலிருந்து தெரிகிற ஒரு உண்மை: அவர்கள் அனைவரும் தனி ஜெபத்தை குறித்த அக்கறை இல்லாமல் இருந்ததே அவர்களின் இந்த நிலைமைக்கு காரணமாயிருந்தது.
முதலில் மறைந்திருக்கும்
மக்கள் வெளிப்படையான பாவத்தில் வீழ்ச்சியுறுவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பே அவர்கள் உள்ளான தோல்வியை அடைந்திருக்கிறார்கள் என முழு நிச்சயமாய் நம்பலாம். அவர்கள் உலகத்தின் கண்களுக்கு முன்பாக பின்வாங்கிப் போன நிலைமையை அடைவதற்கு முன்பே அவர்கள் முழங்காலில் நின்று ஜெபிப்பதில் பின்வாங்கி போயிருக்கிறார்கள். அவர்கள் “இரவும் பகலும் விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” என்கிற ஆண்டவரின் கட்டளையை கைகொள்ளாமல், பேதுருவை போல தங்கள் பெலனையெல்லாம் இழந்துவிட்டு சோதனை நேரத்தில் பேதுருவை போல இயேசுவை மறுதலித்து விடுவார்கள்.
உலகம் அப்படிபட்ட மக்களின் வீழ்ந்துபோன நிலைமையை பார்த்து சத்தமாக சிரிக்கும். ஆனால் அந்த உலக மக்களுக்கு உண்மையான காரணம் எதுவும் தெரியாது. அனுதினமும் காலையில் கர்த்தருடன் தொடர்பு கொள்ளாத மனிதன் ஆவிக்குரிய நிலையில் மிகவும் பெலவீனமாக இருக்கிறான். உலக மனிதர்கள் அவனை பயப்படுத்தும்போது தேவனை விட்டுவிட்டு பேய்களுக்கு தூபம் காட்ட சென்று விடுவான்.
நீங்கள் உண்மையிலேயே ஒரு கிறிஸ்தவனாக இருந்தால், ஒருநாளும் பின்வாங்கமாட்டீர்கள் என நிச்சயமாய் நம்புகிறேன். நீங்கள் பின்வாங்கும் கிறிஸ்தவராக இருக்க விரும்பவில்லை என்றால், நான் உங்களிடம் கேட்கும் கேள்வியை நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் ஜெபிக்கிறீர்களா?
துக்கம் பெருகுகிறது
கடைசியாக நீங்கள் ஜெபிக்கிறீர்களா? என்று கேட்கிறேன். ஏனெனில் ஜெபமே மகிழ்ச்சியையும், மனநிறைவையும் பெற்று கொள்வதற்கு சிறந்த வழியாக இருக்கிறது.
நாம் துக்கம் நிறைந்த உலகில் வாழ்கிறோம். பாவம் உலகத்தில் பிரவேசித்ததில் இருந்து உலகம் இந்த நிலைமையில்தான் இருக்கிறது. பாவம் எப்போதும் துக்கத்தோடுதான் இருக்கும். பாவம் இந்த உலகத்தில் இருந்து வெளியேற்றப்படும் வரைக்கும் எந்த ஒரு மனிதனும் துக்கத்திலிருந்து தப்பிக்கமுடியாது. துக்கத்தில் இருந்து தப்பிக்க நினைப்பது ஏமாற்றத்தில்தான் போய் முடியும்.
சந்தேகமின்றி சிலர் மற்றவர்களைவிட அதிகமான கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். ஆனால் சிலர் எந்தவித கவலையுமின்றி அநேக நாட்கள் வாழ்கிறார்கள். நமது சரீரம், சொத்து, குடும்பம், குழந்தைகள், உறவினர்கள், வேலைக்காரர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், மேலும் நமக்கு இவ்வுலகத்தில் கிடைத்த வேலைகள் என இவையனைத்தும் நம்மை பாதுகாக்கும் நீருற்றுகளாய் இருக்கின்றன. இருந்தாலும் வியாதிகள், மரணங்கள், இழப்புகள், ஏமாற்றங்கள், பிரிவினைகள், நன்றிகெட்டதனங்கள், அவதூறு போன்ற காரியங்களையும் நாம் சந்திக்க வேண்டியுள்ளது. இவைகள் இல்லாமல் நாம் வாழ்க்கைப் பயணத்தை கடக்க முடியாது. இன்றோ அல்லது என்றோ நாம் நிச்சயம் இந்த காரியங்களை சந்தித்தே ஆக வேண்டும். நம்முடைய விருப்பங்கள் அதிகமாகும்போது நமக்கு துன்பங்களும் அதிகமாகிறது. எந்தளவிற்கு நேசிக்கிறோமோ அந்த அளவிற்கு அழவும் வேண்டியிருக்கிறது.
துக்கத்திற்கு பதில்
இதுபோன்ற உலகில் மகிழ்ச்சிக்கு சிறந்த வழி எது? நாம் எப்படி இந்தக் கண்ணீர்ப் பள்ளத்தாக்கை எளிதாக கடக்க முடியும்? எல்லாவற்றையும் தேவனிடம் ஜெபத்தில் எடுத்து செல்லும் பழக்கத்தை தவிர வேறு எந்த வழிமுறையும் எனக்கு தெரியாது.
இதுவே பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் வேதம் தருகிற எளிமையான ஆலோசனை. சங்கீதக்காரன் என்ன சொல்லுகிறார் என்று தெரியுமா? "ஆபத்து காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு. நான்உன்னை விடுவிப்பேன். நீ என்னை மகிமைபடுத்துவாய்." (சங்கீதம் 50:15). "கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு அவர் உன்னை ஆதரிப்பார். நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்." (சங்கீதம் 55:22). அப். பவுல் என்ன சொல்லுகிறார் என்று பாருங்கள். "நீங்கள் ஒன்றுக்குங் கவலைப் படாமல் எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக காத்துக்கொள்ளும்." (பிலி 4:6,7). அப். யாக்கோபு என்ன சொல்லுகிறார் என்று பாருங்கள். "உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்." (யாக் 5:13).
வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பரிசுத்தவான்களின் வாழ்க்கையிலும் தனிஜெபம் இருந்தது. யாக்கோபு தன்னுடைய சகோதரனாகிய ஏசாவிற்கு பயந்தபோது ஜெபம் செய்தான். வனாந்தரத்திலே இஸ்ரவேல் மக்கள் மோசேக்கு எதிராக கல்லெறிய தயாராக இருந்தபோது, மோசே ஜெபம் செய்தான். இஸ்ரவேல் மக்கள் ஆயியின் மனிதர்களுக்கு முன்பாக முறியடிக்கப்பட்ட போது யோசுவா ஜெபம் செய்தான். கேகிலாவில் தனக்கு பொல்லாப்பு இருக்கிறது என்று அறிந்தபோது தாவீது ஜெபம் செய்தான். சனகெரிப்பிடம் இருந்து கடிதம் வந்தபோது எசேக்கியா ஜெபம் செய்தான். பேதுரு சிறையில் போடப்பட்டபோது சபை இதைத்தான் செய்தது. பிலிப்பி சிறைச்சாலையில் பவுல் அடைக்கப்பட்டபோது செய்ததும் ஜெபம்தான்.
இயேசு நம் நண்பன்
உண்மையாக இதுபோன்ற பாடுகள் நிறைந்த உலகத்தில் சந்தோஷமாக வாழ ஒரே வழி நம்முடைய அனைத்து கவலைகளையும் கர்த்தர் மீது வைத்து விடுவதுதான். விசுவாசிகள் அவர்களின் சுமைகளை அவர்களே சுமக்கும்போது நிச்சயம் வருத்தம் மட்டுமே அடைவார்கள். ஆனால் தேவனிடம் அவர்களின் பிரச்சனையை சொல்லும்போது பிரச்சனையை எளிதாக வெற்றிகொள்ளமுடியும். சிம்சோன் காசாவில் செய்ததுபோல். மாறாக தங்கள் சுமையை தாங்களே சுமப்போம் என்பார்களாகில் நிச்சயம் ஒருநாள் வெட்டுக்கிளியும் அவர்களுக்கு பாரமாக தெரியும்.
நம்முடைய மனதில் இருந்து நம்முடைய துக்கங்களை சொல்லும் போது நமக்கு உதவி செய்வதற்கு ஒரு நண்பர் எப்போதுமே ஆயத்தமாயிருக்கிறார். அந்த நண்பர் இந்த உலகத்தில் இருந்தபோது ஏழைகள் மீதும், வியாதியுள்ளவர்கள் மீதும், துக்கமுள்ளவர்களின் மீதும் இரக்கம் காட்டினார். அவர் முப்பத்து மூன்று வருடங்கள் மனிதர்கள் மத்தியில் வாழ்ந்ததால், அவருக்கு மனிதனுடைய இருதயத்ததை பற்றி நன்றாக தெரியும். அந்த நண்பர் அழுகிறவர்கள் கூட அழுதார். அவர் துக்கமும் பாடும் நிறைந்த வராயிருந்தார். அந்த நண்பரால் நமக்கு உதவி செய்யமுடியும். அவரால் சரியாக்கப்பட முடியாத எந்தவித உலக வலிகளும் கிடையாது. அந்த நண்பர் இயேசு கிறிஸ்து. சந்தோஷமாக இருப்பதற்கான ஒரேவழி எப்போதுமே நம்முடைய இருதயத்தை அவருக்கு திறந்து காட்டுவதுதான். நாம் அனைவரும் ஒரு கிறிஸ்துவின் அடிமையைப் போல நமக்கு பிரச்சனை நேரிடும் போதெல்லாம் தேவனிடம் கண்டிப்பாகசொல்லவேண்டும்.
மனிதர்கள் வெளிப்பிரகாரமாக எந்த நிலைமையில் இருந்தாலும் பரவாயில்லை. அவர்கள் இயேசுவை நம்பி அவரை நோக்கி கூப்பிடும்போது அவர் அவர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறார். சிறையில் மன அமைதியையும், வறுமையின் மத்தியில் மனநிறைவையும், துயரங்களின் மத்தியில் ஆறுதலையும், கல்லறையின் விளிம்பில் மகிழ்ச்சியையும் அவரால் கொடுக்க முடியும். அவரிடம் ஜெபத்தில் கேட்கிற ஒவ்வொருவனுக்கும் நிறைவான சமாதானம் ஊற்றப்பட ஆயத்தமாயிருக்கிறது. மனிதர்களே சந்தோஷம் வெளிப்புறமான காரியங்களை பொறுத்து அமைவதில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அது இருதயத்தின் நம்பிக்கையை பொறுத்து அமைகிறது.
ஜெபத்தின் விளைவு
நம்முடைய சிலுவை எவ்வளவு பாரமாக இருந்தாலும், ஜெபம் நமக்காக அதன் சுமைகளை குறைக்கும். அது அவற்றைத் தாங்க உதவும் கிறிஸ்துவை நம் பக்கம் கொண்டு வரக்கூடும். நமது பாதைகள் மூடப்படும்போது ஜெபம் நமக்கு கதவை திறந்து வைக்கிறது. இதுதான் வழி இதில் செல் என்று சொல்லுகிற இயேசுவை நமக்கு காட்டுகிறது. நமது அனைத்து உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களும் நம்மை விட்டு அகலும்போதும் “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, நான் உன்னை கைவிடுவதுமில்லை” என்று சொல்லும் ஒரு நபரை நமது அருகில் கொண்டு வருகிறது. உலகத்தாரின் அன்பு நம்மிடம் இருந்து எடுபடும் போதும், உலகம் நமக்கு வெறுமையாய் இருக்கும் போதும் ஜெபம் நமக்கு ஆறுதலை தருகிறது. ஜெபம் நம்முடைய இருதயத்தின் வெற்றிடத்தை நிரப்பி, இருதயத்தில் எழும்புகிற அலைகளை அமைதிபடுத்துகிறது. இயேசு கிறிஸ்துவை நம்மிடம் கொண்டுவருகிறது ஜெபம். ஆனால் கஷ்டமென்னவெனில் அநேக மக்கள் வனாந்தரத்தில் தண்ணீருக்காக அலைந்த ஆகாரைப் போல, அவர்களுக்கு அருகில் உள்ள ஜீவத்தண்ணீரின் கிணற்றைக் காணாதவர்கள் போல குருடராய் இருக்கிறார்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அதற்காக இதை விட பயனுள்ள ஒரு கேள்வியை நான் உங்களிடம் கேட்க முடியாது என்பது எனக்குத் தெரியும்: நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா?
இந்த ஆக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு இதுவே சரியான நேரம். நான் மிக முக்கியமான விஷயங்களை உங்கள் முன்பாக காட்டியிருக்கிறேன் என நம்புகிறேன். இந்த முக்கியமான காரியம் உங்கள் ஆத்துமாவிற்கு பிரயோஜனமாயிருக்கும்படி என்னுடைய இருதயத்தில் இருந்து ஜெபிக்கிறேன்.
சாக்கு சொல்ல இடமில்லை
முடிவின் வார்த்தைகளாக உண்மையாக ஜெபிக்காத வாசகர்களுக்கு நான் சொல்லுவது:
இந்த ஆக்கத்தை வாசிக்கிற அனைவரும் ஜெபிக்கிற மக்களாக இருப்பீர்கள் என்பதை நான் நம்பவில்லை. ஒருவேளை நீங்கள் ஜெபிக்காத மக்களாக இருந்தால் நான் தேவனின் சார்பாக இன்று உங்களுக்கு சொல்லும் அறிவுரையை கவனமாக கேளுங்கள்.
ஜெபிக்காத வாசகர்களே! நான் மிகுந்த வேதனையுடன் உங்களை எச்சரிக்கிறேன். நீங்கள் பயங்கரமான ஆபத்தில் இருக்கிறீர்கள். ஒருவேளை நீங்கள் இப்போது இருக்கிற நிலையில் இறந்தால், உங்கள் ஆத்துமாவை இழந்துவிடுவீர்கள். நீங்கள் மரணத்திற்கு பின்பு எழுந்திருக்கும்போது நித்தியத்திற்கும் பரிதாபமான நிலையில் இருப்பீர்கள். தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிற அனைவரையும், எந்த நிபந்தனையும் இல்லாமல் முழுமையாக எச்சரிக்கிறேன். நீங்கள் ஜெபிக்காமல் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வதற்கு எந்த ஒரு நல்ல காரியத்தை கூட காட்டமுடியாது.
எப்படி ஜெபிப்பது என்று தெரியாது என சொல்லுவது ஏற்று கொள்ளமுடியாதது. ஏனெனில் ஜெபம் என்பது கிறிஸ்தவத்தில் மிகவும் எளிமையான ஒரு செயல். ஜெபம் செய்வதற்கு நமக்கு புத்தக அறிவோ, பெரிய ஞானமோ அல்லது எதையாவது கற்றுக்கொள்ளவோ வேண்டியதில்லை. நம்முடைய இருதயத்தின் விருப்பத்தை தவிர வேறு எதுவும் அவசியமில்லை. ஒரு பலவீனமான குழந்தை தான் பசியில் இருக்கும் போது அழும். வறுமையில்வாடும் பிச்சைக்காரன் பிச்சையை கையேந்தி கேட்பான். அதுபோல் மிகவும் அறியாமையில் இருக்கும் மனிதன் கூட தேவனிடம் ஏதாவது சொல்ல விரும்பினால் நிச்சயம் அதை தன் மனதில் இருந்து சொல்லமுடியும்.
நான் ஜெபிப்பதற்கு ஏற்ற இடமில்லை என நீங்கள் சொல்லுகிற சாக்கும் ஏற்றுக்கொள்ள முடியாதது. யார் வேண்டுமானாலும் தேடினால் தனிமையான இடத்தை கண்டுபிடிக்க முடியும். நமது ஆண்டவர் மலைகளில் சென்று ஜெபம் செய்தார். பேதுரு வீட்டின் மேல்மாடியில் ஜெபம் செய்தார். ஈசாக்கு வயலிலே ஜெபம் செய்தார். நாத்தான்வேல் அத்திமரத்தின் அடியில் நின்று ஜெபம் செய்தார். யோனா திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து ஜெபம் செய்தார். ஜெபிக்கிறவனுக்கு, எந்த ஒரு மறைவான இடமும், ஒரு ஜெபக்கூடமாகவும், ஒரு பெத்தேலாகவும், தேவனின் பிரசன்னம் இருக்கும் இடமாகவும் இருக்கும்.
எனக்கு ஜெபிப்பதற்கு நேரமில்லை என சொல்லுவதும் பயனற்றது. நேரத்தை முறையாக செலவிடும்போது நமக்கு நிறைய நேரங்கள் கிடைக்கிறது. காலம் மிகவும் குறுகியதுதான். ஆனால் நமக்கு ஜெபிப்பதற்கு நேரம் இல்லாமல் போகும் அளவிற்கு அது குறுகியதல்ல. தானியேலின் கையில் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் அனைத்து விவகாரங்களையும் கையாளும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர் ஒரு நாளுக்கு மூன்றுவேளை ஜெபம் செய்தார். தாவீது ஒரு பெரிய ஜனக்கூட்டத்தின் ராஜாவாக இருந்தபோதும் அவர் சொல்லுகிறார்: "அந்திசந்தி (காலை, மாலை) மத்தியான வேளையிலும் நான் தியானம் பண்ணி முறையிடுவேன்." (சங் 55:11). உண்மையாகவே நீங்கள் நேரத்தை கண்டுபிடிக்க விரும்பினால் அது நிச்சயம் கிடைக்கும்.
எனக்கு விசுவாசமும், புது இருதயமும் கிடைக்காதவரை நான் எப்படி ஜெபிப்பது என்று நீங்கள் சொல்வதும் ஏற்க தகுந்த காரணம் அல்ல. இப்படி ஜெபிக்காமல் இருப்பது பாவத்தின்மேல் பாவத்தை சேர்ப்பது போல் ஆகும். அது மனந்திரும்பாமல் இருந்து நரகத்திற்கு போவது போல மிகவும் கொடுமையானது. இதைக்காட்டிலும் மிகவும் மோசமானது “எனக்கு இவையெல்லாம் தெரியும், ஆனால் தேவனின் இரக்கத்திற்காக நான் அழுது கெஞ்சமாட்டேன்” என்று சொல்லுவதாகும். வேதத்தில் ஒருசில வசனங்கள் எந்த நிபந்தனையும் இல்லாமல் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏசாயா சொல்லுகிறார் “கர்த்தரை கண்டடையத்தக்க சமயத்தில் அவரை தேடுங்கள். அவர் சமீபமாய் இருக்கையில் அவரை நோக்கி கூப்பிடுங்கள்." (ஏசா 55:6). ஓசியா சொல்லுகிறார்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு. நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்" (ஓசி 14:1). பேதுரு மாயவித்தைக்காரனாகிய சீமோனிடம் சொல்லுகிறார்: “உன் துர்குணத்தைவிட்டு மனந்திரும்பி தேவனிடம் வேண்டிகொள்" (அப் 8:22). உங்களுக்கு விசுவாசமும் புது இருதயமும் வேண்டுமென்றால் அதற்காக தேவனிடம் சென்று அழுகையோடு வேண்டுதல் செய்யுங்கள். ஜெபிப்பதற்காக செய்யும் முயற்சியே பல நேரங்களில் மரித்த ஆத்துமாவை உயிரடையச் செய்கிறது.
ஜெபிக்காத வாசகர்களே, நீங்கள் தேவனிடம் எதையுமே கேட்கிறதில்லை. நீங்கள் நரகத்தோடும், மரணத்தோடும் உடன்படிக்கை செய்து கொண்டுவிட்டீர்களா? அவியாத அக்கினியிலும், புழுவின் மத்தியிலும் சமாதானத்தை கண்டுகொண்டீர்களா? உங்களின் எந்த பாவங்களும் மன்னிப்படைய தேவையில்லையா? நித்திய அழிவை குறித்த ஏதாவது பயம் உங்களுக்குள் இருக்கிறதா? ஏன் உங்களுக்கு பரலோகத்தின் மீது பசிதாகம் இல்லை? தயவுசெய்து உங்களுடைய இந்த நிலையில் இருந்து இன்றே விழித்து கொள்ளுங்கள். இன்றே உங்களுடைய முடிவை பற்றி சிந்தியுங்கள். இன்றே விழித்திருந்து தேவனை நோக்கி ஜெபியுங்கள். அநேகர், கர்த்தாவே! கர்த்தாவே! எங்களுக்கு திறவும் என்று கதறி அழப்போகிற நாள் வரப்போகிறது. ஆனால் அந்த கதறுதல் காலதாமதமானதால் மதிப்பில்லாமல் போகப்போகிறது. அநேகர் அந்நாட்களில் பாறைகளே எங்கள் மீது விழுங்கள், மலைகளே எங்களை மறைத்து கொள்ளுங்கள் என்று கதறி அழுவார்கள். நான் மிகுந்த பாசத்துடன் இன்றே உங்களை எச்சரிக்கிறேன். இது உங்களுடைய ஆத்துமாவினுடைய முடிவாய் இருந்துவிட வேண்டாம். இரட்சிப்பு உங்களுக்கு மிக அருகில் இருக்கிறது. இவற்றையெல்லாம் கேட்டுவிட்டு முடிவில் பரலோகத்தை இழந்து போய்விடாதீர்கள்.
நீங்கள் இரட்சிப்பை விரும்புகிறீர்களா?
உண்மையாகவே இரட்சிக்கப்பட வேண்டும் என ஆசைக் கொண்டு, அதற்காக என்ன செய்ய வேண்டும், எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று தெரியாதவர்களுக்கு நான் அன்பாக சில ஆலோசனைகளை சொல்லுகிறேன். சில வாசகர்கள் இந்த மனநிலையில் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன், அப்படி ஒருவர் இருந்தால் நான் அவருக்கு அன்பான அறிவுரை வழங்க வேண்டும்.
ஒரு பயணத்தை ஆரம்பிக்கும்போது நிச்சயமாக அதில் முதல்படி இருக்கும். அமைதியாக இருப்பதிலிருந்து முன்னோக்கி போகுதலில் நிச்சயமாக ஒரு மாற்றம் இருக்கிறது. இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து கானான் தேசம் சென்ற பயணம் மிகவும் நீண்டதும், இடைவிடாத பயணமாக இருந்தது. அவர்கள் யோர்தானை கடப்பதற்கு நாற்பது வருடங்கள் ஆயிற்று. அந்த பயணத்தை ஆரம்பித்தவுடன் அவர்கள் ராமசேஸிலிருந்து சுக்கோத்திற்கு பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஆவியின் கிரியையும் ஒரு மனிதன் எப்போது பாவத்திலிருந்தும், உலகத்திலிருந்தும் வெளிவந்து முதல்படி எடுத்து வைக்கிறானோ, அவன் இருதயத்திலிருந்து எப்போது ஜெபத்தை ஏறெடுக்கிறானோ அப்போது தான் நடக்க ஆரம்பிக்கும்.
ஒவ்வொரு கட்டிடமும் கட்டப்படுவதற்கு முன்பு முதலில் அடிக்கல் நாட்டப்பட வேண்டும். பின்பு அதின்மேல் அஸ்திபாரம் போடப்பட வேண்டும். நோவாவின் பேழை கட்டிமுடிக்கப்பட நூற்று இருபது ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனாலும், நோவா அதை உருவாக்க வெட்டிய முதல் மரத்தின் மீது தனது கோடரியை வைத்த நாள் என்று ஒரு நாள் இருந்தது. சாலோமோன் கட்டின தேவாலயம் மிகவும் புகழ் பெற்றது; ஆனால் அந்த மோரியா மலையின் ஆழத்தில் அந்த பெரிய கல் நாட்டப்பட்ட நாள் ஒன்று இருந்தது. ஆவியானவரின் செயல்களை ஒரு மனிதனின் இருதயத்தில் எப்போது பார்க்க முடியுமென்றால், அவன் தனது இருதயத்தை ஜெபத்தின் மூலமாக தேவனிடம் ஊற்றும் போதுதான்.
என்ன செய்ய வேண்டும்
உண்மையாக இரட்சிப்பை பெற்றுக்கொள்ள விரும்பினால் நான் சொல்வதை செய்யுங்கள். இன்றே தனிமையான ஒரு இடத்திலிருந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முழுமனதோடும், ஆர்வத்தோடும் உங்களுடைய ஆத்துமா இரட்சிக்கப்பட வேண்டும் என ஜெபம் செய்யுங்கள்.
நீர் பாவிகளை ஏற்று கொள்ளுகிறீர் என்று நான் கேள்விபட்டதாலும், “என்னிடம் வருபவர்களை நான் ஒருபோதும் புறம்பே தள்ளுவதில்லை என்று நீரே சொல்லியிருக்கிறீர் என்பதாலும் நான் உம்மிடம் வருகிறேன்” என்று அவரிடம் சொல்லுங்கள். நான் மிகவும் கீழ்த்தரமான பாவி என்றும், நான் உம்முடைய அழைப்பை ஏற்று விசுவாசத்தினால் உம்மிடம் வருகிறேன் என்றும் அவரிடம் சொல்லுங்கள். நான் இனி நித்தியமாக என்னை முழுவதுமாக உம்முடைய கைகளில் அர்ப்பணிக்கிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள். நீங்கள் உங்களில் ஆதரவற்றவர்களாயும், நம்பிக்கையற்றவர்களாயும் உள்ளீர்கள் என அவரிடம் சொல்லுங்கள். அவர் உங்களை ஏற்று கொள்ளவில்லை என்றால் நீங்கள் அழிந்துபோவீர்கள் என்று அவரிடம் சொல்லுங்கள். பாவத்திலிருந்தும், அதின் குற்ற உணர்விலிருந்தும் உங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ஜெபியுங்கள். உங்களை மன்னிக்கும்படியாகவும், உங்களுடைய பாவங்களை அவருடைய இரத்தத்தில் கழுவும்படியாகவும் அவரிடம் வேண்டுதல் செய்யுங்கள். உங்களுக்கு புது இருதயத்தை கொடுக்கும்படியாகவும், உங்களுடைய இருதயத்தில் பரிசுத்த ஆவியானவரை அருளும்படியாகவும் அவரிடம் வேண்டுதல் செய்யுங்கள். இதுமுதல் அவருடைய சீஷனாயும், வேலைக்காரராயும் இருப்பதற்கு வேண்டிய விசுவாசத்தையும், கிருபையையும், நற்கிரியை செய்ய வல்லமையையும் கொடுக்கும்படியாக அவரிடம் வேண்டுதல் செய்யுங்கள். வாசகர்களே இன்றே அவரிடம் செல்லுங்கள்.
உங்கள் சொந்த நடையில், சொந்த வார்த்தைகளில் அவரிடம் சொல்லுங்கள். ஒருவேளை வியாதியில் இருக்கும்போது மருத்துவர் உங்களிடம் வந்தால் அவரிடம் எங்கே வலிக்கிறது என்று நிச்சயம் சொல்லுவீர்கள். அதுபோல உங்கள் ஆத்துமா நிச்சயம் உங்கள் பாவத்தை உணர்ந்தால், இயேசுவிடம் சொல்வதற்கு சரியான காரியங்கள் இருக்கும். நீங்கள் பாவியாக இருப்பதினால் அவருடைய அழைப்பின் மீது சந்தேகப்படாதிருங்கள். பாவிகளை ஏற்று கொள்வது அவருடைய பணி. அவர் சொல்லியிருக்கிறார்: "நீதிமான்களையல்ல பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்." (லூக் 5:32).
சந்தேகப்படாதீர்கள்
நீங்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று நினைத்து அவரிடம் செல்வதற்கு தயங்காதீர்கள். எதற்காகவும், யாருக்காகவும் காத்திருக்காதீர்கள். காத்திருத்தல் சாத்தானிடமிருந்து வருகிறது. நீங்கள் எந்த நிலைமையில் இருக்கிறீர்களோ? அதே நிலைமையில் அவரிடம் செல்லுங்கள். உங்கள் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறதோ, அவ்வளவு வேகமாக நீங்கள் அவரிடம் வருவது அவசியமாயிருக்கிறது. நீங்கள் சரியாக்கப்பட முடியாதபடிக்கு அவரிடம் இருந்து விலகி விடாதீர்கள்.
உங்களுடைய ஜெபங்கள் திக்கி திக்கி இருப்பதற்காகவும், அதில் வார்த்தைகள் வலிமையில்லாமல் இருப்பதற்காகவும், ஜெபத்தில் உங்கள் மொழிநடை எளிமையாக இருப்பதற்காகவும் பயப்படாதேயுங்கள். இயேசு கிறிஸ்துவால் உங்களை புரிந்து கொள்ள முடியும். எப்படி குழந்தையின் முதல் அழுகையை தாயால் புரிந்து கொள்ளமுடிகிறதோ, அதேபோல இரட்சகரும் பாவிகளின் வேண்டுதல்களை புரிந்து கொள்ளுகிறார். உங்களின் பெருமூச்சுகளையும், உங்களின் புலம்பல்களையும் அவரால் புரிந்து கொள்ளமுடியும்.
உடனடியாக பதில் கிடைக்காததால் விரக்தியடைய வேண்டாம். நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, இயேசு கேட்டுக்கொண்டிருக்கிறார். அவரிடம் இருந்து பதில் தாமதப்படும்போது, அது நிச்சயமாக ஏதோ ஒரு நல்ல நோக்கத்திற்காக தான் தாமதப்படும். நீங்கள் தொடர்ச்சியாக ஆர்வத்துடன் அவரிடம் வேண்டுதல் செய்யுங்கள். நிச்சயம் பதில் கிடைக்கும். ஒருவேளை தாமதமானால் அதற்காக காத்திருங்கள். நிச்சயம் பதில் கிடைக்கும்.
வாசகர்களே, நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற ஆசையிருந்தால் நான் உங்களுக்கு மேலே கொடுத்த அறிவுரைகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். இதை முழுமனதுடனம் நேர்மையாகவும் செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் இரட்சிப்பை பெற்றுகொள்வீர்கள்.
போராட்டம்
முடிவாக ஜெபிக்கிற வாசகர்களுக்கு நான் சொல்லுவது: இந்த ஆக்கத்தை வாசிக்கிற சில வாசகர்களுக்கு ஜெபம் என்றால் என்ன என்பது தெளிவாக தெரிந்திருக்கும். தேவனால் தத்தெடுக்கப்பட்ட ஆவியை பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்கு நான் ஒரு சில வார்த்தைகளை ஆலோசனையாகவும், உங்களை உற்சாகப்படுத்தவும் கூறுகிறேன்.
ஆசாரிப்பு கூடாரத்தில் தூபம் செய்யப்படுவதற்கென்று சில விதிமுறைகள் இருக்கிறது. எல்லாவித தூபத்தையும் அங்கே காட்ட முடியாது. இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஜெபத்தை பற்றியும், அந்த ஜெபத்தை ஏறெடுக்கப்பட வேண்டிய விதத்தை பற்றியும் மிகவும் கவனமாயிருங்கள்.
ஜெபிக்கிற சகோதரர்களே, உங்களின் கிறிஸ்தவ வாழ்க்கை சிறப்பாக இல்லையென்றால் அதற்கு நிச்சயமாக உங்களின் ஜெபக்குறைவு தான் காரணம். அப்போஸ்தலர் பின்வருமாறு சொல்வதுபோல உங்களால் சொல்லமுடியாது. "அதாவது நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தை காண்கிறேன்." (ரோம 7:21) ஒரு சில சமயங்களில் நீங்கள் முழங்காலில் நின்று ஜெபிக்கும் போது உங்களுக்கு தாவீதின் வார்த்தைகள் புரியும். அதாவது "வீண்சிந்தனைகளை நான் வெறுக்கிறேன்." (சங் 119:113). ஒரு ஏழை விசுவாசியின் பின்வரும் வார்த்தைகளை சற்று சிந்தித்துபாருங்கள். "தேவனே என்னை எல்லா சத்துருக்களினின்றும் விலக்கிகாரும். எல்லாரைப் பார்க்கிலும் பொல்லாத மனிதனாகிய என்னிடமிருந்தும் என்னை விலக்கிகாரும்." ஆனால் ஒரு சில தேவனுடைய பிள்ளைகள் எப்போதும் ஜெபத்தில் போராடுபவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் முழங்காலில் நின்று ஜெபிக்கும் போது பிசாசு அவர்கள் மீது அதிகமாக கோபப்படுகிறான். நம்முடைய ஜெபத்தினால் நமக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென்றால் நிச்சயம் அந்த ஜெபத்தை சந்தேகிக்க வேண்டும். நம்முடைய ஜெபத்தைப் பற்றிய காரியங்களில் நாம் மிகவும் மோசமான நீதிபதியாயிருக்கிறோம். நம்முடைய ஜெபங்கள் நமக்கு பிரியமாய் அல்ல, அது தேவனுக்கு பிரியமானதாய் இருக்க வேண்டும். உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையின் நலனுக்காக நான் சற்று கடினமாக அறிவுரை தரும்போது என்னை கோபித்து கொள்ளாதீர்கள். கடைசியாக ஒரு விஷயம் நாம் அனைவரும் இதை உணர வேண்டும். நாம் அனைவரும் கண்டிப்பாக ஜெபிக்க வேண்டும். ஜெபத்தை விட்டுவிடக் கூடாது. நாம் கண்டிப்பாக முன்னேறிபோக வேண்டும்.
நம் நிலைமை
ஜெபத்தை மிகவும் பணிவுடனும் மரியாதையுடனும் செய்ய வேண்டும் என உங்களை அறிவுறுத்துகிறேன். நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள். நம்முடைய நிலையில் இருந்து தேவனிடம் நாம் பேசவேண்டுமென்றால் அது எவ்வளவு பெரியகாரியம். அவருடைய சமூகத்தில் அஜாக்கிரதையுடனோ அல்லது கவனமில்லாமலோ சென்றுவிடாமல் மிகவும் ஜாக்கிரதையுடன் செல்லுங்கள். நான் நிற்கிற இடம் மிகவும் பரிசுத்தமானது, இது வானத்தின் வாசலே அல்லாமல் வேறல்ல. நான் என்ன பேசுகிறேன் என்பதை அறியாமல் பேசிக்கொண்டிருந்தால் நான் தேவனை அலட்சியப் படுத்துகிறேன். என்னுடைய இருதயத்தில் அக்கிரமம் இருந்தால் தேவன் என்னுடைய வார்த்தைகளை கேட்கமாட்டார் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்வோம். சாலோமோன் சொன்ன வார்த்தைகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். "தேவசமூகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும் மனம்பதறி ஒரு வார்த்தையும் சொல்லாமலும் இரு. தேவன் வானத்திலிருக்கிறார், நீ பூமியிலிருக்கிறாய்" (பிர 5:2). ஆபிரகாம் ஆண்டவரிடம் பேசும்போது தூளிலும் சாம்பலிலும் இருந்து அடியேன் பேசுகிறேன் என்றார். யோபு ஆண்டவரிடம் பேசும்போது நான் நீசன் என்கிறார். நாமும் இந்த மனநிலையில்தான் இருக்க வேண்டும்.
ஜெபிக்கும் போது ஆவியில் நிறைந்து ஜெபிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறேன். நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால் நம்முடைய ஜெபங்கள் வெறும் சடங்காச்சாரமாக இல்லாமல் அதில் ஆவியானவரின் உதவியை தொடர்ச்சியாக நாடவேண்டும் என்பதே. சடங்காச்சாரம் என்று வருகிறபோது அங்கே பரிசுத்த ஆவியானவருக்கு இடமே இருக்காது. இந்த உண்மை தனிஜெபத்திற்கு மிகவும் பொருந்தும். ஒருவேளை நம்முடைய ஜெபங்கள் உணர்ச்சிகள் அற்று, தொடர்ச்சியாக நம்முடைய வாயில் இருந்து வரும் வார்த்தைகளின் தொகுப்பாகவோ அல்லது உணராமலே ஆவிக்குரிய உதவிகளை கேட்பதாகவோ அல்லது மிகவும் முக்கியமான வேர்போன்று இருக்கிற காரியங்களை உணராமலோ கேட்பதாகவோ அல்லது அனுதினமும் சொல்லுகிற மனப்பாட ஜெபமாகவோ இருக்கலாம். நான் இந்த காரியங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என விரும்புகிறேன்.
நமக்கு அனுதினமும் ஒருசில தேவைகள் இருக்கிறது என எனக்கு நன்றாகதெரியும். ஆனால் அதற்காக அவை எல்லாவற்றையும் ஒரேமாதிரி வார்த்தைகளைதான் பயன்படுத்தி கேட்க வேண்டும் என்றில்லை. இந்த உலகமும், பிசாசும், நமது இருதயமும் எல்லா நாளும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. ஆனால் நாம் அனுதினமும் ஒரேமாதிரி நம்முடைய வேண்டுதல்களை ஏறெடுப்பதால், அங்கே பழக்கத்தினால் வார்த்தைகள் மனப்பாடமாகிவிடுகிறது. அதினால்தான் இந்த காரியங்களில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்லுகிறேன். நம்முடைய ஜெபங்களின் நடையும், வார்த்தைகளும் ஆவியினால் வழிநடத்தப்பட்டதாக இருக்கவேண்டும். தனிப்பட்ட ஜெபங்களில் நம்முடைய பொது ஆராதனை ஜெபப் புத்தகத்தை (அன்றைய ஆங்கில ஆராதனையின் போது பயன்படுத்தப்பட்ட ஜெபப் புத்தகம்) பயன்படுத்துவதை நான் நன்மையாக கருதமாட்டேன். எந்தவித புத்தகத்தையும் படிக்காமல் நம்மால் மருத்துவரிடம் நம்முடைய பிரச்சனையை விளக்ககூடுமானால், நிச்சயமாக நம்முடைய ஆத்துமாவின் நிலைமையையும் ஆண்டவரிடம் எடுத்து சொல்லமுடியும். ஒரு மனிதன் உடைந்த காலில் இருக்கும்போது அவன் ஊன்றுகோலை பயன்படுத்தினால் அது ஒரு பொருட்டல்ல. ஆனால் அதே மனிதன் தொடர்ச்சியாக ஊன்று கோலை பயன்படுத்த விரும்பினால் அது நல்ல காரியமல்ல. நான் அந்த மனிதன் சீக்கிரமே வலிமையடைந்து, அவனது ஊன்றுகோலை தூக்கி எறிவதை பார்க்க விரும்புகிறேன்.
பயிற்சி
ஜெபிப்பதை உங்களுடைய வாழ்க்கையின் தொடர்ச்சியான வேலையாக வைத்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகிறேன். தொடர்ச்சியாக ஜெபிப்பதால் வருகிற ஒருசில நன்மைகளை நான் விளக்கப் போகிறேன். நம்முடைய தேவன் ஒழுங்கின் தேவனாய் இருக்கிறார். யூதர்களின் தேவாலயத்தில் காலையிலும், மாலையிலும் பலியிடும் செயல் காரணமில்லாமல் வைக்கப்படவில்லை. ஒழுக்கமின்மை என்பது பாவத்தின் கனியாகும். ஒருநாளின் இருபத்து நான்கு மணிநேரத்தில் ஜெபத்திற்கான நேரங்களை ஒதுக்குவது உங்களின் ஆத்துமாவுக்கு மிகுந்த பயனைத் தரும். எப்படி சாப்பிடுவதற்கென்றும், வேலை செய்வதற்கென்றும் நேரத்தை ஒதுக்கியுள்ளீர்களோ அதுபோல ஜெபிப்பதற் கென்றும் நேரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள். அதற்காக எந்த நேரங்களை ஒதுக்கவேண்டும் என்பது உங்களின் சொந்த விருப்பம். கடைசியாக, இந்த உலகத்திடம் பேச ஆரம்பிப்பதற்கு முன்பாக காலையில் தேவனிடம் பேசிவிடுங்கள். அதேபோல் அனைத்து வேலையும் செய்து முடித்தபிறகு உறங்குவதற்கு முன் தேவனிடம் பேசுங்கள். நான் சொல்லுகிற இந்த காரியத்தை உங்கள் மனதில் ஆழமாக பதித்து கொள்ளுங்கள். அனுதினமும் ஜெபிப்பது என்பது மிகவும் சிறப்பான செயலாகும். ஜெபிப்பதை ஓரமாக தள்ளிவைத்து விடாதீர்கள். அலட்சியமாகவோ அல்லது ஏனோதானோ வென்றோ ஜெபத்தை செய்யாதீர்கள். நீங்கள் உலக வேலைகளை செய்தாலும், செய்யாவிட்டாலும் பரவயில்லை. ஆனால் ஜெபத்தை அனுதினமும் செய்யுங்கள்.
ஜெபிப்பதை விடாமுயற்சியுடன் செய்ய வேண்டும் என அறிவுறுத்துகிறேன். தனிஜெபத்தை சரியாக செய்ய பழகிகொள்ளுங்கள். அந்த பழக்கத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்காதீர்கள். ஒருசில சமயங்களில் நாம் தான் குடும்ப ஜெபம் செய்யப்போகிறோமே, தனிஜெபம் செய்யவில்லையென்றால் என்ன ஆகப்போகிறது என உங்கள் இருதயம் சொல்லும். சில சமயங்களில் உடல் சரியில்லை, சோர்வாக இருக்கிறது என உங்கள் சரீரம் சொல்லும். சில சமயங்களில் இன்று மிகவும் முக்கியமான ஒரு வேலை இருக்கிறது, அதனால் ஜெபத்தை சுருக்கமாக செய் என உங்கள் மனது சொல்லும். இவ்விதமான அனைத்து எண்ணங்களும் சாத்தானிடமிருந்து வருகின்றன. இவையனைத்தும் உங்கள் ஆத்துமாவை புறக்கணிக்கும் செயல்கள். உங்கள் ஜெபங்கள் எப்போதும் நீண்ட நேரத்திற்கு இருக்கவேண்டும் என நான் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் ஜெபம் செய்யாமல் பின்வாங்குவதற்கு எந்தவித காரணத்தையும் முன்கொண்டுவராதீர்கள். அப்.பவுல் சொல்லுகிறார்: இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். அவர் மக்கள் எப்போதும் முழங்காலில் நின்று ஜெபித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற அர்த்த்தில் சொல்லவில்லை. அவர் சொல்ல வருவது நம்முடைய ஜெபங்கள் நித்தமும் செலுத்தப்படும் சர்வாங்க தகனபலிபோல தொடர்ச்சியாக அனுதினமும் செய்யப்படவேண்டும். எப்படி விதைப்பும், அறுப்பும், குளிர்காலமும், வெயில்காலமும் தொடர்ந்து வருகிறதோ அதேபோல் தொடர்ச்சியாக செய்யப்பட வேண்டும். பலிபீடத்தில் இருக்கும் அக்கினி, பலியை தகனிக்க எப்போதும் அவியாமல் எரிந்து கொண்டிருந்ததுபோல, ஜெபம் இருக்கவேண்டும். காலையிலும் இரவிலும் ஜெபம் செய்தல் என்ற இரண்டு எல்லைகளுக்கு நடுவாக நாள்முழுவதும் செய்யும் ஜெபம் சங்கிலியால் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் அலுவலகத்தில் இருந்தாலோ அல்லது தெருமுனையில் இருந்தாலோ அமைதியாக ஜெபத்தை ஏறெடுக்கலாம். நெகேமியா, அர்தசஷ்டா முன்பாக செய்ததுபோல். தேவனுக்கு கொடுக்கிற நேரம் பிரயோஜனமற்றது என்று ஒருபோதும் என்னிவிடாதீர்கள். ஓய்வுநாளுக்கு என்று ஞாயிறு தினத்தில் விடுமுறை அளிக்கிறதால் எந்த ஒரு தேசமும் ஏழ்மையாய் போனதில்லை. தனி ஜெபத்தை தொடர்ந்து செய்வதினால் முடிவில் எந்த ஒரு கிறிஸ்தவனும் இழப்பை சந்திக்கமாட்டான்.
மனப்போக்கு
ஜெபிக்கும்போது முக்கியமாக ஊக்கமாக ஜெபிக்கவேண்டும் என்று அறிவுரையாக சொல்லுகிறேன். ஊக்கமாக ஜெபிக்கிறேன் என்பதை காண்பிப்பதற்கு கத்தியோ அல்லது மிக அதிகமாக சத்தம் போட்டோ ஜெபிக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஜெபத்தை உண்மையுடனும், ஆர்வத்துடனும், அக்கறையுடனும், விருப்பத்துடனும் செய்யவேண்டும். உண்மையாகவே ஒரு காரியத்தில் அக்கறை இருக்கும்போது அதன்மீது எப்படி கவனம் செலுத்துவோமோ அதுபோல் ஜெபத்தை செய்ய வேண்டும். ஊக்கமுள்ள ஜெபம் அநேக காரியங்களை சாதிக்கும். ஜெபிப்பதை வேதம் அநேக ஒப்புமைகளை பயன்படுத்தி விளக்குகிறது. தட்டுதல், மல்யுத்தம் செய்தல், கடினமாக உழைத்தல், முயற்சி செய்தல் போன்றவை வேதத்தில் ஜெபத்திற்கு ஒப்புமையாக பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
வேதாகம் உதாரணங்கள் நமக்கு பல பாடங்களை கற்பிக்கின்றன. உதாரணமாக, யாக்கோபுவை பாருங்கள். அவர் பெனியேலில் இருந்தபோது “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மை போகவிடேன்." (ஆதி 32:26) என்று பொழுது விடியுமளவும் அந்த தேவதூதனுடன் போராடுகிறார். தானியேல், மற்றொரு உதாரணம், அவர் எப்படி கெஞ்சுகிறார் என்று பாருங்கள். "ஆண்டவரே கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும்; என் தேவனே, உம்முடைய நிமித்தமாக அதைத் தாமதியாமல் செய்யும்;" (தானி 9:19). நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மற்றொரு உதாரணம் அவரைப்பற்றி (எபி 5:7)-ல் பின்வருமாறு எழுதப்பட்டிருக்கிறது. "அவர் மாம்சத்திலிருந்த நாட்களில் தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து," ஐயோ, நம்முடைய அநேக விண்ணப்பங்கள் இப்படி இல்லையே! இப்படிப்பட்ட ஜெபங்களை நம்முடைய ஜெபங்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் நாம் எவ்வளவு மந்தமாக உணர்ச்சியற்று இருக்கிறோம். நீ எதற்காக ஜெபிக்கிறாயோ அதை உன் மனது விரும்பவில்லை என தேவன் நம்மை பார்த்து சொன்னால் அந்த வார்த்தை எவ்வளவு உண்மையாயிருக்கும்.
நாம் இந்த தவறில் இருந்து திருந்துவோமாக, மோட்சப் பயணம் புத்தகத்தில் இரக்கம் என்ற பெண்மணி குறுகிய வாசலை ஓங்கி தட்டியதுபோல நாமும் கர்த்தரின் கிருபைக்காக கெஞ்சுவோமாக. நீர் திறக்கவில்லை என்றால் நான் அழிந்துபோவேன் என்று சொன்ன இரக்கம் என்ற பெண்மணியைபோல சொல்வோமாக. குளிர்ந்த நிலையில் நெருப்பில்லாமல் ஏறெடுக்கப்படும் பலியை நினைவில் கொள்ளுங்கள். அந்தப்பலி தகனிக்கப்படாது. டெமோஸ்தீனஸின் (Demosthenes) என்ற சிறந்த பேச்சாளரின் கதையை எப்போதும் ஞாபகத்தில் கொள்ளுங்கள். ஒருநாள் ஒரு மனிதன் அவரிடத்தில் வந்து தன்னுடைய நிலைமையை சொல்லும்போது டெமோஸ்தீனஸ் எந்தவித அக்கறையும் இல்லாமல் அதை கேட்டார். அதே மனிதன் அந்த நிலைமையை கண்ணீரோடும் கவலையோடும் சொன்னபோது “நீ சொல்வதெல்லாம் உண்மை, இப்போது உன்னை நம்புகிறேன்” என்று டெமோஸ்தீனஸ் சொன்னார்.
ஜெபிக்கும்போது விசுவாசத்துடன் ஜெபிக்கும்படி உங்களை அறிவுறுத்துகிறேன். நாம் ஏறெடுக்கும் ஜெபங்கள் கர்த்தருடைய சமூகத்தில் கேட்கப்பட வேண்டும் என்று விசுவாசிக்க வேண்டும். நாம் கர்த்தருடைய சித்தத்திற்கு உட்பட்டு விண்ணப்பம் செய்யும்போது அந்த விண்ணப்பங்கள் பதிலை பெறுகின்றன. இயேசு கிறிஸ்து இந்த கட்டளையை வெளிப்படையாக கொடுத்திருக்கிறார். "நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்" (மாற் 11:24). அம்பு தன்னுடைய இலக்கை நோக்கி செல்வதற்கு அதன் முனையில் பறவையின் இறகை வைப்பதுபோல், ஜெபம் அதன் இலக்கை அடைவதற்கு விசுவாசம் அவசியமாகிறது. விசுவாசமில்லாத ஜெபம், அடைய வேண்டிய இலக்கை அடையாது.
ஜெபிக்கும்போது வாக்குத்ததங்களை சொல்லி ஜெபிக்கும் பழக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும். ஜெபிக்க முழங்கால் இடும்போது நாம் ஒரு சில வாக்குத்தத்தங்களை தயார் செய்து கொண்டு செல்ல வேண்டும். ஆண்டவரே நீர் எங்களுக்கு வாக்களித்திருக்கிறீர். நீர் சொல்லியபடியே எங்களுக்கு செய்யும். இதுதான் யாக்கோபு, மோசே, தாவீது போன்றவர்களின் பழக்கமாய் இருந்தது. சங்கீதம் 119-ம் அதிகாரம் முழுவதும் வேண்டுதலாய் இருக்கிறது. உம்முடைய வார்த்தையின்படி செய்தருளும் என்று கேட்டிருக்கிறார். இதற்குமேல் நம்முடைய வேண்டுதல்கள் பதிலை பெற்று தரும்படியாக நாம் பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். ஒரு வணிகன் தன்னுடைய கப்பலை கடலில் அனுப்பிவிட்டு அந்த கப்பல் திரும்ப பொருட்களுடன் வரும்வரை திருப்தி அடையாதிருக்கிறது போல, நாமும் நம்முடைய ஜெபங்கள் பதிலை பெற்றுதர எதிர்பார்த்திருக்க வேண்டும். ஆனால் இன்றைய கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் இந்த காரியம் இல்லாமல் இருக்கிறது. பேதுரு சிறையில் இருந்தபோது எருசலேம் சபையில் மக்கள் இடைவிடாமல் ஜெபித்தார்கள். ஆனால் அந்த ஜெபத்திற்கு பதில் கிடைத்தபோது, அதை அவர்கள் நம்புவதற்கு அரிதாயிருந்தது (அப் 12:15). இது ராபர்ட் டிரெயிலின் ஒரு புனிதமான கூற்று "மனிதன் ஜெபத்தில் எதையாவது பெற்றுகொள்ள வேண்டுமென்று கவனமற்று ஜெபிக்கும் போது, அந்த ஜெபம் போய் சேரவேண்டிய இடத்தை போய்ச் சேராது.”
விண்ணப்பித்தல்
நான் ஜெபிக்கும்போது உறுதியுடன் ஜெபிக்கும்படி அறிவுறுத்துகிறேன். ஒரு சிலரின் ஜெபங்கள் ஏனோதானோ என்று இருக்கும். ஆனால் ஒரு சிலரின் ஜெபங்களில் ஒரு சிறப்பான உறுதி காணப்படும். அந்த ஜெபம் மிகவும் விரும்பத்தக்கதாய் இருக்கும். நான் குறிப்பிடுகிற இந்த உறுதி எதுவென்றால் இஸ்ரவேல் மக்களை அழிக்காமல் இருக்கம்படி மோசே ஏறெடுத்த ஜெபத்தில் இருந்தது. "மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி கர்த்தாவே தேவரீர் மகாபலத்தினாலும், வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்தி லிருந்து புறப்பட பண்ணின உம்முடைய கோபம் பற்றி யெரிவதென்ன?" (யாத் 32:11). இஸ்ரவேல் ஜனங்கள் ஆயியின் மக்களுக்கு முன்பாக முறியடிக்கபட்டபோது யோசுவா ஏறெடுத்த ஜெபத்தில் அந்த உறுதி காணப்பட்டது. “உமது மகத்தான நாமத்திற்கு என்ன செய்வீர்?" (யோசு 7:9). இந்த உறுதி மார்டின் லூத்தரிடமும் இருந்தது. அவருடைய ஜெபத்தை கேட்ட ஒரு மனிதர் பின்வருமாறு சொல்லுகிறார்: “அவர் ஜெபிக்கும்போது அவரிடம் சிறப்பான ஆவியும் சிறப்பான உறுதியும் காணப்பட்டது. கடவுள் நிச்சயமாக தருவார் என்ற எதிர்பார்ப்பில் ஒரு பிச்சை கேட்பதைபோல மிகுந்த உறுதியுடன் இருந்தது. ஒரு அன்பான தகப்பனிடமோ அல்லது நண்பனிடமோ கெஞ்சுவதை போல இருந்தது அவரின் ஜெபம்.” 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சிறந்த ஸ்காட்டிஷ் போதகர் புருஸ் என்பவரிடம் இந்த உறுதி காணப்பட்டது. அவருடைய ஜெபங்களை பற்றி குறிப்பிடுகையில் "பரலோகத்தை நோக்கி குறிவைத்து சுடப்பட்ட துப்பாக்கி குண்டைபோல் இருந்தது” என்று சொல்லுகிறார்கள். இந்த ஒரு காரியத்தில் நம்முடைய நிலைமையை குறித்து மிகவும் பயப்படுகிறேன். ஒரு விசுவாசிக்கு இருக்கிற முழுமையான உரிமைகளை நாம் முழுமையாக சிந்தித்து பார்ப்பதில்லை. உண்மையாக நாம் தேவனிடம் உறுதியுடன் பேசுகிறதில்லை. தேவனே நாங்கள் உம்முடைய பிள்ளைகள் அல்லவா? நாங்கள் பரிசுத்தமாக வாழ்ந்தால் அது உமக்கு மகிமையை தராதா? சுவிசேஷம் பரம்பி மக்கள் ஆசிர்வதிக்கப்பட்டால் அது உமக்கு கனத்தை கொண்டுவந்து சேர்க்காதா? என்று நாம் அடிக்கடி மன்றாடுவதில்லை.
அடுத்ததாக, நாம் ஜெபிக்கும்போது முழுமையாக ஜெபிக்கும்படி அறிவுறுத்துகிறேன். பார்வைக்காக நீண்ட ஜெபம் செய்கிற பரிசேயர்களை வைத்து நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து எச்சரித்த எச்சரிக்கையை நான் மறந்துபோகவில்லை. அதுபோல வீண் விண்ணப்பங்களை ஏறெடுக்க வேண்டாம் என்று நான் அறிவுறுத்துகிறேன். ஆனால், இன்னுமொரு பக்கம் அவரே முழு இரவும் பிதாவிடம் தொடர்ச்சியாக ஜெபத்தில் தரித்திருந்து நமக்கு மாதிரியை வைத்து விட்டு போயிருக்கிறார். நாம் இந்த நாட்களில் அப்படி ஜெபிக்கிறதில்லை. நம்முடைய ஜெபங்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் குறுகியதாக இருக்கிறது. தங்களுடைய முழுமையான நேரங்களில் மக்கள் ஜெபத்திற்கு எவ்வளவு நேரங்களை தருகிறார்கள் என்று கேட்டால் மக்களிடமிருந்து திருப்திகரமான பதில் கிடைப்பதில்லை. அநேக மக்களின் தனிஜெபங்கள் மிகவும் வலிமையற்றதாகவும், குறுகியதாகவும் இருப்பதை பார்த்து பயப்படுகிறேன். அவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் உயிருடன்தான் இருக்கிறார்கள் என்பதை நிருபிப்பதற்கு அந்த ஜெபங்கள் போதுமானவையாக இல்லை. அவர்கள் தேவனிடம் கேட்பது மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. அவர்கள் தேவனிடம் அறிக்கையிடுவது குறைவு, தேவனுக்கு நன்றி செலுத்துவதும் குறைவாகத்தான் இருக்கிறது. ஐயோ! இது முற்றிலும் தவறு. விசுவாசிகள் தங்களால் கிறிஸ்தவத்தில் முன்னேறி செல்ல முடியவில்லை என்று சொல்கிறது பொதுவாக காணப்படுகிறது. அவர்கள் விரும்புகிற அளவிற்கு அவர்களால் கிருபையில் வளர முடியவில்லை என்று எங்களிடம் சொல்லுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் உண்மையாக தேவனிடம் அதிகமான கிருபைகளை கேட்பதில்லை. அவர்கள் தேவனிடம் கேட்பதும் குறைவு, தேவனிட மிருந்து பெற்று கொண்டதும் குறைவு. இவர்களின் இந்த நிலைமைக்கு காரணம் அவர்களின் பலவீனமான, வளர்ச்சி குறைந்த, முதுகெழும்பில்லாத அவசரம் அவசரமான சிறிய குறுகிய ஜெபமே. தேவன் சொல்கிறார்: "உன் வாயை விரிவாய் திற, நான் அதை நிரப்புவேன்" (சங் 81:10). ஆனால், நாம் எலிசாவை சந்தித்த இஸ்ரவேலின் இராஜாவை போல ஐந்து அல்லது ஆறு முறை அம்பு எய்வதற்கு பதிலாக மூன்று முறை அம்பு எய்துவிட்டு அமைதியாக இருக்கிறோம்.
குறிப்பாக ஜெபிக்க வேண்டியதன் அவசியத்தை உங்களூக்கு காண்பிக்க விரும்புகிறென். ஜெபிக்க தேவையான விண்ணப்பங்களை தயார் செய்துவிட்டு ஜெபிக்கும்படியாக நான் அறிவுறுத்துகிறேன். நாம் எப்போதும் பொதுவான காரியங்களை சொல்லியே ஜெபிக்கக்கூடாது. நமது சரியான தேவைகளை கிருபையின் அரியாசனம் முன்பு விளக்கப்படுத்த வேண்டும். நாம் பாவிகள் என்று அறிக்கையிட்டால் மட்டும் போதாது, நமது மனசாட்சி சொல்லுகிற நம்முடைய அனைத்து பாவங்களையும் தேவன் முன்பாக அறிக்கையிட வேண்டும். எங்களை பரிசுத்தப்படுத்தும் என்று சொல்லிமட்டும் ஜெபித்தால் போதாது, எந்தெந்த கிருபைகளில் நாம் குறைவாக இருக்கிறோம் என்பதை அறிந்து அதற்காக ஜெபிக்க வேண்டும். நாம் பிரச்சனையில் இருக்கிறோம் என்று தேவனிடம் சொன்னால் மட்டும் போதாது, நம்முடைய பிரச்சனையை முறையாக விளக்கப்படுத்த வேண்டும். தனது சகோதரனாகிய ஏசாவுக்கு யாக்கோபு பயந்தபோது அவர் செய்த ஜெபம் இப்படித்தான் இருந்தது. அவர் எதற்காக பயப்படுகிறார் என்று சரியாக தேவனிடம் விளக்கப்படுத்தினார் (ஆதி 32:11). தன்னுடைய எஜமானாகிய ஆபிரகாமின் மகனுக்கு பெண் தேட சென்றபோது எலெயாசார் செய்த காரியமும் இதுதான். தன்னுடைய தேவை எது என்பதை மிகவும் துல்லியமாக தேவனிடம் விளக்கினார் (ஆதி 24:12). அப்.பவுலின் சரீரத்திலே ஒரு முள் ஏற்பட்டபோது பவுல் செய்ததும் இதுதான். அவர் அந்த முள் நீங்கும்படியாக கர்த்தரிடத்தில் வேண்டி கொண்டார் (2கொரி 12:8).
இதுதான் உண்மையான விசுவாசமும் நம்பிக்கையும். தேவனுக்கு எந்த ஒரு காரியமும் எளிது என்று நாம் விசுவாசிக்க வேண்டும். ஒரு நோய்வாய்ப்பட்ட மனிதன் தன்னுடைய நோயின் தன்மையை சரியான முறையில் மருத்துவரிடம் விளக்கப்படுத்தாதபோது, அவனைப்பற்றிய நம்முடைய எண்ணம் எப்படி இருக்கும்? தன்னுடைய கணவனிடம் நான் கவலையாக இருக்கிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டு, ஏன் கவலையாக இருக்கிறேன் என்பதை விளக்கப் படுத்தாத மனைவியைப் பற்றி நம்முடைய எண்ணம் என்னவாக இருக்கும்? நான் பிரச்சனையில் இருக்கிறேன் என்று தகப்பனிடம் சொல்லிவிட்டு, என்ன பிரச்சனை என்பதை விளக்கப் படுத்தாத குழந்தையை பற்றிய நம்முடைய எண்ணம் எப்படி இருக்கும்? கிறிஸ்துவே நம்முடைய மணவாளன். நம்முடைய இருதயத்தின் மருத்துவர். அவருடைய பிள்ளைகளின் உண்மையான தகப்பன். நாம் எந்த தயக்கமும் இல்லாமல் நம்முடைய நிலைமையை அவரிடம் காட்டவேண்டும். நாம் எந்த இரகசியத்தையும் அவரிடம் இருந்து மறைக்கக்கூடாது. நம்முடைய முழு இருதயத்தோடும் அவரிடம் சொல்லவேண்டும்.
மற்றவர்களுக்காகவும் ஜெபிக்கும்படி நான் உங்களை அறிவுறுத்துகிறேன். சுபாவமாகவே நாம் மிகவும் சுயநலவாதிகளாய் இருக்கிறோம். நாம் இரட்சிகக்ப்பட்டு மனந்திரும்பியபோதும் கூட நம்முடைய சுயநலம் என்பது நம்மை பிரிய மறுக்கிறது. நம்முடைய சொந்த ஆத்துமாவை பற்றியும், நம்முடைய சொந்த முன்னேற்றத்தை பற்றியும் மட்டுமே சிந்திக்கிற மனநிலையில் இருக்கிறோம். மற்றவர்களை மறந்து போய்விடுகிறோம். இந்த மனநிலையில் இருந்து விடுபட்டு மற்றவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். ஒரு பொதுவான ஆவியில் இருந்து சிந்தித்து பழகவேண்டும். நம்முடைய விண்ணப்பங்கள் மத்தியில், மற்றவர்களின் பெயர்களும் நம்முடைய ஜெபத்தில் இடம்பெற வேண்டும். நம்முடைய இருதயத்திலே முழு உலகத்தையும், புறஜாதி மக்களையும், யூதர்களையும், ரோமன் கத்தோலிக்கர்களையும், மெய்யான கிறிஸ்தவர்களின் சரீரமான சபையையும், நாம் வாழ்கிற இந்த தேசத்தையும், நாம் சார்ந்து இருக்கிற சபையையும், நாம் தங்கியிருக்கிற வீட்டில் உள்ளவர்களையும், நமது தொடர்பில் உள்ள நண்பர்களையும், சொந்தக்காரர்களையும் சுமந்து பழகவேண்டும். ஒவ்வொருவருக்காகவும் நம்முடைய விண்ணப்பங்களை ஏறெடுக்க வேண்டும். இது மிகவும் உயர்வான பொதுச்சேவை. யார் எனக்கென ஜெபத்தை ஏறெடுக்கிறார் களோ, அவர்களே என்மீது மெய்யான அன்பு வைத்திருப்பவர்கள். இது நம்முடைய ஆத்துமாவின் நலனை பெரிதும் பாதுகாக்கும். இப்படி ஜெபிப்பதின் மூலமாக நம்முடைய இரக்ககுணம் மிகவும் விரிவடைகிறது. அது நம்முடைய இருதயத்தை விசாலமாக்குகிறது. இதுதான் சபைக்கும் நலனை கொண்டுவரும். சுவிசேஷத்தின் அனைத்து சக்கரமும் ஜெபிப்பதின் மூலமாகவே நகர்கிறது. இப்படி ஜெபிப்பவர்களே, மக்களுக்காக சீனாய் மலையில் கர்த்தரிடம் பேசின, கர்த்தருக்கென்று பெரிதான காரியங்களை செய்த மோசேயைபோலவும், அருமையான யுத்தங்களை நடப்பித்த யோசுவாவைப்போலவும் இருக்கிறார்கள். இதுதான் கிறிஸ்துவைப் போலாகுதல். அவர் தன்னுடைய மக்களுக்காக பிதாவின் முன்பு பிரதான ஆசாரியராக நிற்கிறார். கிறிஸ்துவை போல மற்றவர்களின் நலனை பார்ப்பது எவ்வளவு பெரிய சிறப்பான காரியம். இவர்களே பிரசங்கிங்களுக்கு மெய்யான உதவிகளை செய்வார்கள். ஒருவேளை நான் ஒரு கிறிஸ்தவ கூட்டத்தை உருவாக்கினால், அதில் இப்படி ஜெபிக்கிற மக்கள் இருந்தால் அது எவ்வளவு சிறப்பாக இருக்கும்.
நன்றி செலுத்துதல்
ஜெபிக்கும்போது தேவனுக்கு நன்றி செலுத்தும்படிக்கு நான் உங்களை அறிவுறுத்துகிறேன். தேவனிடம் தேவைகளை கேட்பது எப்படியோ, அதுபோல ஜெபத்தில் நன்றி செலுத்துவதும் ஒரு பகுதி என்பது எனக்கு நன்றாக தெரியும். வேதத்தை கவனிக்கும்போது அதில் ஜெபமும், நன்றி செலுத்துதலும் இணைந்து காணப்படுகிறது. தேவனுக்கு நன்றி செலுத்தாமல் ஏறெடுக்கிற ஜெபத்தை நான் மெய்யான ஜெபமாக கருதமாட்டேன் என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார்: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவ ற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்" (பிலி 4:6). "இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். ஸ்தோத்திரத்தோடே ஜெபத்தில் விழித்திருங்கள்" (கொலோ 4:2). தேவனின் இரக்கத்தினாலே நாம் இன்னும் நரகத்தில் இல்லாமல் இருக்கிறோம். அவருடைய இரக்கத்தினாலே இன்று நமக்கு பரலோகத்தை பற்றிய நம்பிக்கை இருக்கிறது. அவருடைய இரக்கத்தினாலே நாம் தேவனைப்பற்றி அறிந்து கொள்ளுகிற தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவருடைய இரக்கத்தினாலே நாம் பரிசுத்த ஆவியினாலே அழைக்கப்பட்டு, நம்முடைய பாவங்களுக்கு தக்க தண்டனையை இன்னும் பெறாமல் இருக்கிறோம். அவருடைய இரக்கத்தினாலே நாம் இன்றுவரை உயிர்வாழ்ந்து, அவருடைய நாமத்தை மகிமைபடுத்தும்படியான வாய்ப்பு கிடைத்திருக்கிறது இது அவருடைய இலவசமான கிருபையினாலே கிடைத்தது.
என்றென்றைக்கும் நிலைத்திருக்கிற அவருடைய அன்பினாலே இதெல்லாம் நமக்கு கிடைத்தது. முழுமையாக தேவனுக்கு நன்றி செலுத்தாதவர்கள் சிறப்பான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ முடியாது. அப்போஸ்தலனாகிய பவுல் தேவனுக்கு நன்றி செலுத்தாமல் ஒரு நிருபத்தைகூட எழுத ஆரம்பிக்கவில்லை. கடந்த நூற்றாண்டில் வைட்ஃபீல்ட் மற்றும் நம் காலத்தில் பிக்கர்ஸ்டெத் போன்ற மனிதர்களின் ஜெபங்களில் தேவனுக்கு நன்றி செலுத்துதல் பெரும்பகுதியாய் இருந்திருக்கிறது. இதை வாசிக்கிறவர்களே, இவர்களைப்போல நீங்களும் தற்போதைய காலத்தில் எரிந்து பிரகாசிக்கிற ஒளியாய் இருக்க வேண்டுமா? அப்படியென்றால் மனதார தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். இனி நமது ஜெபங்கள் தேவனுக்கு நன்றி செலுத்தும் ஜெபங்களாய் இருக்கட்டும்.
விழித்திருங்கள்
ஜெபிக்கும்போது மிக விழிப்புடன் கவனமாக ஜெபிக்கும்படி அறிவுறுத்துகிறேன். கிறிஸ்தவத்தில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டிய ஒருகாரியம் ஜெபம். ஏனென்றால் அங்கேதான் உண்மையான கிறிஸ்தவம் ஆரம்பமாகிறது. இங்கேதான் கிறிஸ்தவனின் எழுச்சியும், வீழ்ச்சியும் இருக்கிறது. ஜெபத்தில் என்னென்ன காரியங்களை விண்ணப்பங்களாக ஏறெடுக்கிறீர்கள் என்று சொல்லுங்கள், நான் உடனே உங்கள் ஆத்துமாவின் நிலைமையை சொல்லுகிறேன். ஜெபமே ஆத்துமாவின் உயிர்நாடியாய் இருக்கிறது. இங்கேதான் ஆத்துமாவின் நலன் சோதிக்கப்படுகிறது. ஜெபமே நம்முடைய ஆவிக்குரிய நிலையை அளவிடும் கருவி. இந்த கருவியை கொண்டு நம்முடைய ஆவிக்குரிய நிலைமை நன்றாக இருக்கிறதா என்பதை நம்முடைய இருதயத்தில் உணரமுடியும். இனி நம்முடைய முழு கவனத்தை தனிப்பட்ட ஜெபத்தின் மீது வைப்போமாக. உண்மையான கிறிஸ்தவனுக்கு இதுவே முதுகெழும்பாய் இருக்கிறது. பிரசங்கங்கள், புத்தகங்கள், கைப்பிரதிகள், கிறிஸ்தவ மக்களின் நட்பு இவை அனைத்தும் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ மிகவும் உதவி செய்கிறவை. ஆனால், இவை தனிஜெபத்தை ஒதுக்கி வைப்பதால் வரும் இழப்பை சரிசெய்யாது. உங்களை தனிஜெபம் செய்ய முடியாமல் தடுக்கிற மக்கள் மத்தியிலும், சூழ்நிலைகள் மத்தியிலும், இடங்களிலும் இருந்து விலகி கொள்ளுங்கள்.
உங்களை ஆவிக்குரிய நிலைமையில் வளரச்செய்கிற, தேவனிடம் பேசுவதற்கு எப்போதும் தடங்கள் இல்லாத வேலையையும், நண்பர்கள் கூட்டத்தையும் கவனமாக தேடி கண்டுபிடித்து கொள்ளுங்கள். இந்த காரியங்களில் மிகவும் உறுதியுடன் இருங்கள். நீங்கள் உங்கள் ஜெபங்களை பாதுகாத்து கொண்டால் உங்கள் ஆத்துமாவுக்கு எந்த தீங்கும் வராது.
நான் மிகுந்த பணிவுடன் இந்த காரியங்களை உங்களிடம் தருகிறேன். சற்று இதை நிதானமாக சிந்தித்துப் பாருங்கள். ஜெபத்தைப்பற்றிய இந்த காரியங்கள் என்னுடைய சொந்த ஆவிக்குரிய நலனுக்கு மிகவும் பிரயோஜனமாய் இருந்தது. மேலே விளக்கிய அனைத்தும் தேவனுடைய சத்தியங்கள் தான் என முழுநிச்சயமாய் நம்புகிறேன். நானும், நான் மிகவும் விரும்புகிற நீங்களும் இந்த சத்தியங்களை அதிக அதிகமாய் உணரும்படியாய் வேண்டுகிறேன்.
நாம் வாழ்கிற இந்த காலம் ஜெபிக்கிற காலமாய் இருக்க வேண்டும். இந்த நாட்களில் வாழ்கிற கிறிஸ்தவர்கள் ஜெபிக்கிற கிறிஸ்தவர்களாய் இருக்கவேண்டும். மேலும் இன்றைய திருச்சபைகள் ஜெபிக்கிற சபைகளாய் இருக்கவேண்டும். இந்த ஆக்கத்தை எழுதி அனுப்புகிற வேளையில் என்னுடைய இருதயத்தின் விருப்பமும் என்னுடைய ஜெபமும் என்னவென்றால் ஜெபிக்கிற ஆவி விருத்தியடைய வேண்டும். இன்றுவரை ஜெபிக்காத மக்கள் இன்றே கர்த்தரை நோக்கி ஜெபித்திட வேண்டும். ஜெபிக்கிற கிறிஸ்தவர்கள் கவனுத்துடன் ஜெபிக்க வேண்டும் என்பதே.
"சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணுங்கள்" (லூக் 18:1).
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.