தேவன் ஆயத்தமாயிருக்கிறார்

'நீங்கள் ஜெபிக்கிறீர்களா?' என்று கேட்கிறேன். ஏனெனில், ஜெபம் என்பது கிறிஸ்தவ ஜீவியத்தில் மிகுந்த ஊக்கமளிக்கும் ஒரு செயலாகும்.

மனிதன் ஜெபிக்க முயற்சி செய்தால் மட்டும் போதும், அதை எளிமையாக்குவதற்குத் தேவையான எல்லாம் தேவனிடம் இருக்கிறது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிக்கப்படும். கோணலானவைகள் செவ்வையாக்கப்படும்; கரடுமுரடானவைகள் சமமாக்கப்படும். எனவே, ஒரு மனிதன் ஜெபிக்காமல் இருப்பதற்கு எந்தச் சாக்குப்போக்கும் சொல்ல முடியாது.

எந்த மனிதனாக இருந்தாலும், அவன் எவ்வளவு பெரிய பாவங்களைச் செய்திருந்தாலும், உதவியற்ற நிலையில் இருந்தாலும், தேவனைப் பிதாவாக அழைக்கக்கூடிய வழி ஒன்று இருக்கிறது. இயேசு கிறிஸ்து நமக்காகச் சிலுவையில் செய்த தியாக பலியின் மூலமாக அதற்கொரு தீர்வை ஏற்படுத்தியிருக்கிறார். இனி தேவனுடைய பரிசுத்தமும் நீதியும் பாவிகளைப் பயமுறுத்தி, அவர்களைப் பின்னுக்குத் தள்ளப்போவதில்லை. ஆனால், இக்காரியங்கள் இயேசு கிறிஸ்துவின் மூலமாகத் தேவனிடம் சேருகிறவர்களுக்கும், கர்த்தருடைய கிருபையைத் தேடுகிறவர்களுக்கும், அவருடைய வார்த்தையைக் கேட்கிறவர்களுக்கும் மட்டுமே பொருந்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஏறெடுக்கப்படும் ஜெபம் ஒருபோதும் ஏமாற்றமடைந்ததில்லை. அந்த நாமத்தினாலே மனிதன் தைரியமாகத் தேவனிடத்தில் கிட்டிச்சேர்ந்து, நம்பிக்கையோடு தேவனிடம் கேட்க முடியும். தேவனும் அந்த ஜெபத்தைக் கேட்பதற்கு ஆயத்தமாக இருக்கிறார். இந்தக் காரியங்களைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். இது உங்களை உற்சாகப்படுத்தவில்லையா?

எப்போதுமே ஒரு வழக்கறிஞர் உங்களுக்காகப் பரிந்து பேசுகிறவராக, அவர் மூலமாய்த் தேவனிடம் சேருகிறவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். அந்த வழக்கறிஞர் இயேசு கிறிஸ்துவே. அவர் நமது ஜெபத்தைத் தம்முடைய சர்வ வல்லமையுள்ள பரிந்துபேசுதலின் மூலமாகத் தேவனிடம் சேர்க்கிறார். நமது ஜெபம் இயேசுவின் வல்லமையோடு கலக்கும்போது, அது மிகவும் இனிமையாகக் கர்த்தருடைய சமூகம் நோக்கிச் செல்கிறது. அந்த ஜெபம் நம்மிலிருந்து பிறக்கும்போது எத்துணை பலவீனமானதாக இருந்தாலும், நம்முடைய பிரதான ஆசாரியனும் மூத்த சகோதரனுமாகிய இயேசு கிறிஸ்துவின் கரங்களில் அது மிகவும் பலமுள்ளதாகவும் வல்லமையுள்ளதாகவும் மாறுகிறது. ஒரு வங்கிக் காசோலை கையொப்பம் இல்லாமல் இருந்தால், அது வெறும் வெற்றுக்காகிதமே. ஒரு எழுதுகோலின் முனைப்பகுதியே அதற்கு மதிப்பை அளிக்கிறது. ஆதாமின் சந்ததியாகிய ஒரு ஏழைக்குழந்தை ஏறெடுக்கும் ஜெபம் மிகவும் பலவீனமானதுதான். ஆனால், இயேசுவின் கையினால் அதற்கு ஒப்புதல் கொடுக்கப்படும்போது அது மிகவும் பலமுள்ளதாய் மாறுகிறது. உரோம சாம்ராஜ்யத்தில், உரோமக் குடியுரிமை பெற்ற ஜனங்களுக்கு உதவி செய்வதற்கு என்று ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டிருப்பார். அவரின் வாசற்படி எப்போதும் திறந்திருக்கும். அதேபோல, இரக்கத்திற்காகவும் கிருபைக்காகவும் தன்னிடம் கெஞ்சுகின்ற அனைத்து மக்களின் ஜெபத்தையும் கேட்பதற்கு இயேசு கிறிஸ்துவின் காதுகளும் திறந்தே இருக்கின்றன. அதுவே இயேசுவின் பணி. அவர்களின் ஜெபத்தைக் கேட்பதே இயேசுவுக்குச் சந்தோஷமான காரியம். இந்தக் காரியங்களைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். இது உங்களுக்கு உற்சாகம் அளிக்கவில்லையா?

ஜெபத்தில் நமது பலவீனங்களுக்கு உதவப் பரிசுத்த ஆவியானவர் எப்போதும் தயாராக இருக்கிறார். நாம் தேவனிடம் பேசுவதற்குச் செய்கிற முயற்சிகளில் உதவுவதே பரிசுத்த ஆவியானவரின் முதன்மையான பணியாய் இருக்கிறது. 'எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லையே' என்று கவலைப்படத் தேவையில்லை. நாம் ஆவியானவரிடம் உதவியைக் கேட்கும்போது அவர் உதவத் தயாராயிருக்கிறார். கர்த்தருடைய மக்கள் ஏறெடுக்கிற ஜெபமானது ஆவியானவரின் வார்த்தைகளே. அவர்களுக்குள் வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியானவர், அவர்களுக்குக் கிருபையின் ஆவியைக் கொடுத்து ஜெபிக்கும்படிச் செய்கிறார். நிச்சயமாகக் கர்த்தருடைய பிள்ளைகளின் ஜெபங்கள் கேட்கப்படும் என நம்பலாம். இது வெறுமனே உதடுகளில் முணுமுணுப்பவர்களுக்கு அல்ல; பரிசுத்த ஆவியின் உதவியோடு மன்றாடுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்தக் காரியங்களைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். இவை உங்களுக்கு உற்சாகம் அளிக்கவில்லையா?

வாக்குத்தத்தங்கள் ஜெபிக்கிறவர்களுக்கு மிகவும் பெரியதும் விலையேறப்பெற்றதுமான வாக்குத்தத்தங்கள் உள்ளன. இயேசுகிறிஸ்து பின்வரும் வசனங்களின் மூலமாக அதைச் சொல்லுகிறார்: “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்” (மத்தேயு 7:7, 8). மேலும், "நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ, அவைகளையெல்லாம் பெறுவீர்கள்" (மத்தேயு 21:22). "நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்" (யோவான் 14:13, 14). நடு இரவில் சென்று தன்னுடைய நண்பனிடம் உணவு வருந்திக் கேட்ட உவமையிலிருந்தும், கைவிடப்பட்ட விதவையின் உவமையிலிருந்தும் இயேசு எதைச் சுட்டிக்காட்டுகிறார்? (லூக்கா 11:5; 18:1). இந்தப் பகுதிகளைச் சிந்தித்துப் பாருங்கள். இது உங்களை ஜெபிப்பதற்கு உற்சாகப்படுத்தவில்லையா?

உதாரணங்கள் ஜெபத்தின் வல்லமையை விளக்கும் அருமையான உதாரணங்கள் வேதத்தில் இருக்கின்றன. ஜெபத்தால் செய்ய முடியாத அளவுக்கு எதுவும் பெரியதாகவோ கடினமானதாகவோ இல்லை. ஜெபம் நெருப்புக்கு எதிராகவும், காற்றுக்கு எதிராகவும், பூமிக்கு எதிராகவும், நீருக்கு எதிராகவும் ஜெயங்களைப் பெற்றிருக்கிறது. ஜெபம் செங்கடலைப் பிரித்தது. ஜெபம் கன்மலையிலிருந்து நீரையும், வானத்திலிருந்து அப்பத்தையும் கொண்டுவந்தது. ஜெபம் சூரியனை ஒரே நிலையிலே நிற்கவைத்தது. ஜெபத்தால் வானத்திலிருந்து அக்கினி இறங்கிவந்து எலியாவின் பலியைப் பட்சித்தது. ஜெபம் அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பைத்தியமாக்கிவிட்டது. ஜெபம் சனகெரிப் ராஜாவின் இராணுவத்தைத் தூக்கியெறிந்தது. ஸ்காட்லாந்து ராணியான மேரி ஜெபத்தைப் பற்றிச் சொன்ன வார்த்தைகள் மிகவும் மேன்மையானவை. அவள் சொன்னது: "பத்தாயிரம் போர்வீரர்கள் கொண்ட படையைப் பார்க்கிலும், ஜான் நாக்ஸின் (John Knox) ஜெபத்திற்கு நான் பயப்படுகிறேன்." ஜெபம் வியாதி நிறைந்தவர்களுக்குச் சுகம் கொடுத்தது; மரித்தவர்களை உயிரோடு எழுப்பியது. ஜெபம் அநேக ஆத்துமாக்களுக்கு மனந்திரும்புதலைக் கொண்டுவந்துள்ளது. அகஸ்டீனின் தாயாருக்கு ஒரு முதிர்ந்த கிறிஸ்தவர் சொன்னது: "அநேகக் கண்ணீர் வேண்டுதல்களுக்குச் சொந்தக்காரனாகிய உன் மகன் அழிந்துபோகப் போவதில்லை." ஜெபமும், வேதனைகளும், விசுவாசமும் எதை வேண்டுமானாலும் செய்யும். தேவனால் தத்தெடுக்கப்பட்டவனுக்கு எந்த ஒரு காரியமும் சாத்தியமற்றது இல்லை. "இந்த ஜனங்களை அழிக்கப்போகிறேன்" என்று தேவன் சொன்னபோது, மோசே இஸ்ரவேல் ஜனங்களுக்காகத் தேவனிடம் மன்றாடினார் (யாத்திராகமம் 32:10). எவ்வளவு தூரம் ஆபிரகாம் சோதோமின் இரக்கத்திற்காக மன்றாடினாரோ, அவ்வளவு தூரம் தேவனும் இரக்கம் காட்டினார். ஆபிரகாம் ஜெபத்தை நிறுத்தும் வரைக்கும் தேவன் இரக்கத்தைக் குறைக்கவே இல்லை. சற்று இதைச் சிந்தித்துப் பாருங்கள். இது உங்களை உற்சாகப்படுத்தவில்லையா?

ஆவிக்குரிய காரியங்களில் வெற்றிகளைப் பெறுவதற்கும், முன்னோக்கிச் செல்வதற்கும் நான் மேலே விளக்கிய ஜெபத்தைத் தவிர வேறு எந்தக் காரியத்தால் நமக்கு உதவிசெய்ய முடியும்? தேவனின் இரக்கத்தைப் பெறவும், நம்முடைய வழிகளில் தடைபோடுகிற பாவத்தை மேற்கொள்வதற்குப் பெலத்தைப் பெறவும் ஜெபத்தைத் தவிர வேறு எந்தக் காரியம் நமக்கு உதவும்? ஒருவேளை நரகத்தில் இருக்கும் பிசாசுகளுக்கு அப்படியொரு வழி இருந்திருந்தால், அவர்கள் எத்தனை ஆவலுடனும் சந்தோஷத்துடனும் அதைச் செய்திருப்பார்கள்!

ஆனால், இத்தனை மகிமையான ஜெபத்தை அசட்டை செய்கிற மனிதன் முடிவில் எங்கே போகப்போகிறான் தெரியுமா? ஜெபமே செய்யாமல் மரணத்தைச் சந்திக்கிற மனிதனுக்குக் கிடைக்கக்கூடிய பங்கு என்ன தெரியுமா? நிச்சயமாக, இதை வாசிக்கிற நீங்கள் அந்தக் கூட்டத்தில் இருக்கக்கூடாது என விரும்புகிறேன். மறுபடியும் கேட்கிறேன், நீங்கள் ஜெபிக்கிறீர்களா?

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.