நீங்கள் ஜெபிக்கிறீர்களா?
சிலர் ஒருபோதும் ஜெபிப்பதில்லை
"நீங்கள் ஜெபிக்கிறீர்களா?" என்று நான் உங்களிடம் கேட்கிறேன். ஏனெனில், இன்றைய கிறிஸ்தவத்தில் தனிப்பட்ட ஜெபத்தைப் போலப் புறக்கணிக்கப்படும் கடமை வேறொன்றும் இல்லை.
கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வதற்குச் சாதகமான ஒரு காலப்பகுதியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முன்னெப்போதையும் விட இப்போது பல இடங்களில் திருச்சபைகளும் ஆராதனைத் தலங்களும் உள்ளன. முன்பைக் காட்டிலும் இப்போது அதிகமான மக்கள் ஆராதனைகளில் கலந்துகொள்கிறார்கள். மக்கள் இவ்வளவு பொதுவான ஜெபக் கூட்டங்களை நடத்தினாலும், அநேகர் தனிஜெபம் செய்வதில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். தேவனுக்கும் நமது ஆத்துமாவுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்களை மனிதக் கண்கள் காண்பதில்லை; இதன் காரணமாகவே பலர் தனிஜெபத்தை உதாசீனப்படுத்துகிறார்கள்.
ஆயிரக்கணக்கான மக்கள் ஒருபோதும் ஜெபத்தின் வார்த்தைகளை உச்சரிப்பதில்லை என்று நான் கருதுகிறேன். அவர்கள் உண்கிறார்கள், குடிக்கிறார்கள், உறங்குகிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள், மீண்டும் இல்லம் திரும்புகிறார்கள். கர்த்தர் கொடுத்த காற்றைச் சுவாசித்து, அவருடைய உலகத்திலே உலவி, அவருடைய கிருபையினால் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஒருநாள் மரிக்கப்போகும் சரீரத்தைப் பெற்றிருக்கும் அவர்களுக்கு முன்பாக நியாயத்தீர்ப்பும் நித்தியமும் காத்திருக்கிறது. அப்படியிருந்தும் அவர்கள் தேவனிடம் ஜெபிப்பதில்லை. அழிந்துபோகும் மிருகங்களைப் போலவும், ஆத்துமா இல்லாத உயிரினங்களைப் போலவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்களுக்குச் சுவாசத்தையும் ஜீவனையும் அனைத்தையும் அருளிய தேவனிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாத இவர்களுக்கு, இறுதியில் தேவனுடைய வாயிலிருந்து நித்திய தண்டனை வரப்போகிறது. இது எவ்வளவு கொடூரமானது! இது மறைவாக நடக்கும் ஒன்றல்ல, அனைவரும் அறியும் விதமாகவே நிகழப்போகிறது.
வெறும் சடங்காச்சார ஜெபங்கள்
ஆயிரக்கணக்கான மக்களின் ஜெபங்கள் வெறும் உதட்டு வார்த்தைகளாகவும், மனப்பாடம் செய்தவற்றைத் திரும்பத் திரும்பச் சொல்வதாகவும் மட்டுமே இருக்கின்றன. அந்த வார்த்தைகளின் பொருளைக் கூட உணராமல் அவர்கள் ஜெபிக்கிறார்கள். சிலர் சிறுவயதில் பள்ளியில் கற்ற ஜெபத்தை அவசர அவசரமாகச் சொல்கிறார்கள்; சிலர் தாங்கள் பின்பற்றும் விசுவாச அறிக்கையிலிருந்து ஜெபிக்கிறார்கள், ஆனால் அதன் ஆழத்தை உணருவதில்லை. இன்னும் சிலர் கர்த்தர் கற்பித்த ஜெபத்தைச் சொல்கிறார்கள், ஆனால் அதில் உள்ள ஆசீர்வாதங்களை உணர்ந்தோ, முழு மனதோடோ அவர்கள் அதைச் செய்வதில்லை.
இறையியலை நன்கு அறிந்தவர்கள் கூடத் தங்கள் ஜெபங்களைக் குறித்து அஜாக்கிரதையாக இருக்கிறார்கள். படுக்கையில் சாய்ந்தபடி முணுமுணுப்பது அல்லது வேலை செய்து கொண்டிருக்கும்போது கவனமில்லாமல் ஜெபிப்பது என அலட்சியமாக இருக்கிறார்கள். இப்படி ஜெபித்துவிட்டு, தேவன் தங்கள் ஜெபத்தைக் கேட்டுவிட்டார் என்று அவர்கள் தவறாக எண்ணிக் கொள்கிறார்கள். இருதயத்திலிருந்து வராத வார்த்தைகள் ஆத்துமாவிற்கு எந்தப் பயனும் தராது. அது விக்கிரகங்களுக்கு முன்பாக எழுப்பப்படும் பொருளற்ற சத்தத்தைப் போன்றது. உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழாமல், வெறும் உதடுகளிலிருந்து வரும் வார்த்தைகள் ஜெபமே அல்ல.
தமஸ்கு வீதியில் கர்த்தர் சவுலைச் சந்திப்பதற்கு முன்பாக, சவுல் பல நீண்ட ஜெபங்களைச் செய்திருப்பார் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவர் இயேசுவைச் சந்தித்த பிறகு நொறுங்குண்ட இருதயத்தோடு ஜெபித்தபோதுதான், "அவன் இப்பொழுது ஜெபம் பண்ணுகிறான்" (அப்போஸ்தலர் 9:11) என்று கர்த்தர் சாட்சி பகர்ந்தார். இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் நான் உண்மையைத்தான் சொல்கிறேன்.
மனிதன் ஏன் ஜெபிப்பதில்லை?
ஜெபிப்பது என்பது மனிதனின் இயல்பான குணம் அல்ல. "மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை" (ரோமர் 8:7). மனித இருதயம் தேவனை விட்டுத் தூரமாகச் செல்வதையே விரும்புகிறது. கர்த்தருக்கு முன்பாக மனிதர்களுக்கு ஒருவித பய உணர்வு மட்டுமே எஞ்சியிருக்கிறது.
தன் பாவத்தை உணராமலும், தன் ஆவிக்குரிய நிலையை அறியாமலும், காணப்படாதவைகளின் மேல் விசுவாசம் இல்லாமலும் ஒருவன் ஜெபிப்பதில் என்ன பயன்? மக்கள் இவற்றை அறிவால் அறிந்திருந்தாலும், உள்ளத்தால் உணரவில்லை. அநேகர் அகலமான பாதையில் பயணிக்கிறார்கள்; இதனால்தான் மிகச் சிலரே உண்மையாக ஜெபிக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.
ஜெபிப்பதை நாகரிகமற்ற செயலாகக் கருதுபவர்களைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். பலர் ஜெபிக்க வெட்கப்படுகிறார்கள். மற்றவர்கள் முன்னிலையில் ஜெபிக்கப் பயந்து, புறஜாதி மக்களுடன் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் ஜெபிக்காமலே உறங்கச் செல்கிறார்கள். அவர்கள் நாகரிகமாக உடை உடுத்தி, சமூகத்தில் நல்ல நிலையில் இருந்தாலும், ஜெபிக்க மறுக்கிறார்கள். சமுதாயத்தில் மக்கள் ஜெபிக்கத் தயங்குவதை நான் கண்கூடாகக் காண்பதால், வெகு சிலரே உண்மையாக ஜெபிக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
அநேக மக்களின் வாழ்க்கையைப் பாருங்கள். அவர்கள் இரவும் பகலும் பாவத்தோடு உறவாடிக் கொண்டிருக்கும்போது, அவர்கள் உலகத்திற்கு எதிராக ஜெபிக்கிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? தேவனுக்காகச் சேவை செய்யச் சிறிதும் விருப்பமில்லாதவர்கள், அதற்கான கிருபையைத் தேவனிடம் கேட்பார்கள் என்று எதிர்பார்ப்பது இயலாத காரியம். ஜெபமும் பாவமும் ஒரே இருதயத்தில் குடியிருக்க முடியாது. ஜெபம் பாவத்தை ஒழிக்கும் அல்லது பாவம் ஜெபத்தை ஒழிக்கும்.
மரணத் தருவாயில் ஜெபம்
பலருடைய மரணத் தருவாயைச் சிந்தித்துப் பாருங்கள். மரணத்தை நெருங்கும்போதுதான் தாங்கள் தேவனுக்கு எவ்வளவு அந்நியர்களாக இருக்கிறோம் என்பதைப் பலர் உணருகிறார்கள். அவர்கள் சுவிசேஷத்தை அறியாததற்காக மட்டுமல்ல, கர்த்தரிடம் பேசுவதற்கான வல்லமை அற்றவர்களாக இருப்பதைக் கண்டும் வருந்துகிறார்கள். அந்த இக்கட்டான நேரத்தில் தேவனிடம் செல்ல அவர்கள் எடுக்கும் முயற்சிகள் தடுமாற்றம் நிறைந்ததாக இருக்கின்றன. அவர்கள் இதற்கு முன்பு கர்த்தரிடம் பேசியதே இல்லை.
ஒரு போதகர் மரணப்படுக்கையில் இருந்த ஒரு பெண்ணைச் சந்தித்தபோது, அவள் தனக்காக ஜெபிக்கும்படி கேட்டாள். போதகர், "உங்களுக்காக நான் என்ன ஜெபிக்க வேண்டும்?" என்று கேட்டபோது, அவளுடைய ஆத்துமாவிற்குத் தேவையான ஒரு வார்த்தையைக்கூட அவளால் சொல்ல முடியவில்லை. அவள் ஒரு சடங்காச்சாரமான ஜெபத்தை மட்டுமே எதிர்பார்த்தாள். மரணப்படுக்கை பல இரகசியங்களை வெளிப்படுத்தும். வியாதியிலும் மரணத்தின் விளிம்பிலும் உள்ள மக்களிடம் நான் கண்ட இந்தக் காட்சிகள், "சிலரே ஜெபிக்கிறார்கள்" என்ற என் எண்ணத்தை உறுதிப்படுத்துகின்றன.
உங்கள் இருதயத்தை என்னால் பார்க்க முடியாது; உங்கள் தனிப்பட்ட ஆவிக்குரிய நிலையை நான் அறியேன். ஆனால், வேதத்தையும் உலகத்தையும் உற்று நோக்கும்போது, இதைவிட முக்கியமான கேள்வியை என்னால் கேட்டுவிட முடியாது: "நீங்கள் ஜெபிக்கிறீர்களா?"