நீங்கள் ஜெபிக்கிறீர்களா என்று கேட்கிறேன். ஏனெனில் ஜெபம் செய்வதை புறக்கணிப்பதே கிறிஸ்தவத்தில் பின்வாங்கிபோவதற்கு மிகப் பெரிய காரணமாய் இருக்கிறது.

நல்ல அறிக்கை செய்து பின்பு பின்வாங்கி போகும் ஒரு காரியம் கிறிஸ்தவ மதத்தில் இருக்கிறது. மக்கள் கலாத்தியர்கள் போல சிறிதுகாலம் நன்றாக வாழ்ந்துவிட்டு பிறகு தவறான உபதேசத்திற்கு தங்களை உட்படுத்தி கொள்ளுவார்கள். அவர்களின் உணர்ச்சிகள் அனலாக இருக்கும்போது பேதுருவைப் போல சத்தமாக கிறிஸ்துவை அறிக்கை செய்வார்கள். ஆனால் சோதனை நேரம் வரும்போது மறுதலித்துவிடுவார்கள். மக்கள் சில வேளைகளில் பவுலின் கூட இருந்த மாற்குவை போல வைராக்கியத்தில் குறைந்து காணப்படுவார்கள். சிலவேளைகளில் மக்கள் தேமாவை போல அப்போஸ்தலர்களை பின்பற்றி உலக ஆதாயத்தை சார்ந்து கொள்ளுகிறார்கள்.

பின்வாங்கி போகுதல் என்பது மிகவும் பரிதாபகரமான விஷயம். மனிதனுக்கு நேரிடுகிற அனைத்து கஷ்டத்தை பார்க்கிலும் இது மிகவும் அதிக கஷ்டத்தை தரக்கூடியது. ஒரு உடைந்த கப்பல், சிறகொடிந்த கழுகு, களைகள் முழுவதும் நிரம்பிய ஒரு தோட்டம், ஸ்வரங்கள் இல்லாத வீணை, இடிக்கப்பட்ட சபைக்கட்டிடம் போன்ற காட்சிகள் நமக்கு கஷ்டத்தை தரக்கூடியது. ஆனால் அதைக்காட்டிலும் பின்வாங்கி போகுதலே மிகவும் கஷ்டமானது. காயப்பட்ட மனசாட்சி தன்னையே குற்றபடுத்தி கொள்ளும் நினைவுகள், கர்த்தருடைய எச்சரிப்பின் அம்பினால் துளைக்கப்பட்ட இருதயம், உள்ளான குற்ற உணர்வினால் உடைந்த ஆவி என இவை அனைத்தும் நரகத்தின் ருசியை தரவல்ல காரியங்கள். இவை இந்த பூமியில் நரகமாயிருக்கிறது. உண்மையாகவே ஞானியாகிய சாலோமோன் சொன்னது சரியான விஷயமே. "பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலே திருப்தியடைவான்.'' நீதிமொழிகள் 14:14.

அநேகர் பின்வாங்கி போவதற்கு என்ன காரணமாயிருக்கிறது? பொதுவான முறைப்படி தனிஜெபத்தை செய்யாமலிருப்பதே முதலாவது முக்கிய காரியமாயிருக்கிறது என நம்புகிறேன். சந்தேகமில்லாமல் பின்வாங்கிபோகுதலை பற்றிய இந்த இரகசிய உண்மை கடைசி நாள்வரைக்கும் தெரியாது. ஆனால் கிறிஸ்துவின் ஊழியக்காரனாக என்னுடைய மனசாட்சியில் இருந்து நான் இந்த கருத்துகளை சொல்லுகிறேன். நான் மறுபடியும் தெளிவாக சொல்லுகிற என்னுடைய கருத்து என்னவெனில் பின்வாங்கி போகுதல் பொதுவாக ஆரம்பமாவது தனிஜெபத்தை செய்யாமல் இருப்பதாலே.

ஜெபம் செய்யாமல் வேதம் வாசிப்பது, ஜெபம் செய்யாமல் பிரசங்கம் கேட்பது, ஜெபம் செய்யாமல் திருமண ஒப்பந்தம் செய்வது, ஜெபம் செய்யாமல் பயணங்களை மேற்கொள்வது, ஜெபம் செய்யாமல் வசிப்பிடங்களை தேர்வுசெய்வது, ஜெபம் செய்யாமல் நண்பர்கள் உருவாக்கப்படுவது, அனுதின ஜெபத்தை அவசர அவசரமாகவும் இருதயம் இல்லாமலும் செய்வது என இவையனைத்தும் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துகொள்ளுகிற அநேக மக்களை ஆவிக்குரிய இயலாமைக்கு வழிநடத்தும் படிகட்டுகளாகவும், கடவுள் அவர்களுக்கு நியமித்திருக்கும் பயங்கரமான அழிவின் இடத்திற்கும் வழிநடத்தும் காரியங்களாய் இருக்கின்றன.

இயேசுகிறிஸ்துவின் சபையில் காணப்பட்ட பின்வாங்கிபோன லோத்து, நிலையற்ற சிம்சோன், அப்பாவி ஆச, வளைந்து கொடுக்கும் யோசபாத், உலக காரியத்தின் மேல் அக்கறை காட்டின மார்த்தாள் போன்றோரிடம் ஜெபம் செய்யாமல் காரியங்களை செய்கிற நிலை இருந்தது. இந்த வரலாறுகளிலிருந்து தெரிகிற ஒரு உண்மை: அவர்கள் அனைவரும் தனிஜெபத்தை குறித்த அக்கறை இல்லாமல் இருந்ததே அவர்களின் இந்த நிலைமைக்கு காரணமாகிறது.

மக்கள் வெளிப்படையான பாவத்தில் வீழ்ச்சியுறுவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பே அவர்கள் உள்ளான தோல்வியை அடைந்திருக்கிறார்கள் என முழுநிச்சயமாய் நம்பலாம். அவர்கள் உலகத்தின் கண்களுக்கு முன்பாக பின்வாங்கி போன நிலைமையை அடைவதற்கு முன்பே அவர்கள் முழங்காலில் நின்று ஜெபிப்பதில் பின்வாங்கிபோயிருக்கிறார்கள். அவர்கள் இரவும் பகலும் விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்ற ஆண்டவரின் கட்டளையை கைகொள்ளாமல் பேதுருவை போல தங்கள் பெலனையெல்லாம் இழந்துவிட்டு சோதனை நேரத்தில் பேதுருவை போல இயேசுவை மறுதலித்து விடுவார்கள்.

உலகம் அப்படிபட்ட மக்களின் வீழ்ந்துபோன நிலைமையை பார்த்து சத்தமாக சிரிக்கும். ஆனால் அந்த உலக மக்களுக்கு உண்மையான காரணம் எதுவும் தெரியாது. அனுதினமும் காலையில் கர்த்தருடன் தொடர்பு கொள்ளாத மனிதன் ஆவிக்குரிய நிலையில் மிகவும் பெலவீனமாக இருக்கிறான். உலக மனிதர்கள் அவனை பயப்படுத்தும்போது கடவுளை விட்டுவிட்டு பேய்களுக்கு தூபம் காட்ட சென்று விடுவான்.

நீங்கள் உண்மையிலேயே ஒரு கிறிஸ்தவனாக இருந்தால் ஒருநாளும் பின்வாங்கமாட்டீர்கள் என நிச்சயமாய் நம்புகிறேன். நீங்கள் பின்வாங்கி போய்விடக்கூடாது என்று விரும்பினால் நீங்கள் ஜெபிக்கிறீர்களா? என்று நான் கேட்ட கேள்வியை நினைவில் வைத்திருங்கள்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.