பின்மாற்றம் உண்மையிலேயே நிகழ்கிறது
நான் உங்களைப் பார்த்துக் கேட்கிறேன்: "நீங்கள் ஜெபிக்கிறீர்களா?" ஏனெனில், ஜெபத்தைப் புறக்கணிப்பதே கிறிஸ்தவ வாழ்வில் ஒரு விசுவாசி பின்வாங்கிப் போவதற்கு மிகப் பெரிய காரணமாக இருக்கிறது.
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடிவிட்டு, பின்பு பின்வாங்கிப் போகுதல் என்ற ஒரு காரியம் கிறிஸ்தவத்தில் உண்டு. கலாத்தியர்களைப் போல, மக்கள் சிறிது காலம் நன்றாக வாழ்ந்துவிட்டு, பிறகு தவறான உபதேசங்களுக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ளலாம். உணர்ச்சிகள் மேலோங்கியிருக்கும்போது, பேதுருவைப் போலச் சத்தமாகக் கிறிஸ்துவை அறிக்கை செய்வார்கள்; ஆனால், சோதனை நேரம் வரும்போது அவரை மறுதலித்து விடுவார்கள். சில வேளைகளில், பவுலோடு இருந்த மாற்குவைப் போல வைராக்கியம் குறைந்து காணப்படுவார்கள். மற்றும் சில வேளைகளில், தேமாவைப் போல அப்போஸ்தலர்களைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு உலக ஆதாயத்தைச் சார்ந்து கொள்வார்கள்.
பின்வாங்கிப் போகுதல் என்பது மிகவும் பரிதாபமான ஒரு காரியம். மனிதனுக்கு நேரிடுகிற மற்ற அனைத்துக் கஷ்டங்களைப் பார்க்கிலும், இது மிகவும் அதிக வேதனையைத் தரக்கூடியது. உடைந்த கப்பல், சிறகொடிந்த கழுகு, முழுவதும் களைகள் மண்டிய தோட்டம், நரம்பறுந்த வீணை, இடிக்கப்பட்ட சபைக்கட்டிடம் போன்ற காட்சிகள் நமக்குச் சோகத்தைத் தரக்கூடியவை. ஆனால், அதைக் காட்டிலும் ஒரு விசுவாசி பின்வாங்கிப் போகுதலே மிகவும் வேதனையானது. காயப்பட்ட மனசாட்சியின் குற்றவுணர்வுகள், கர்த்தருடைய எச்சரிப்பின் அம்பினால் துளைக்கப்பட்ட இருதயம், உள்ளான குற்றவுணர்வினால் உடைந்த ஆவி—இவையனைத்தும் நரகத்தின் வேதனையை ருசிக்கச் செய்யவல்ல காரியங்கள். சொல்லப்போனால், இது இந்தப் பூமியிலேயே நரகத்தை அனுபவிப்பதற்குச் சமம். உண்மையிலேயே ஞானியாகிய சாலொமோன் சொன்னது முற்றிலும் சரியே: "பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலே திருப்தியடைவான்" (நீதிமொழிகள் 14:14).
பின்மாற்றத்திற்கான காரணங்கள்
அநேகர் பின்வாங்கிப் போவதற்கு என்ன காரணம்? பொதுவான விதியாக, தனிஜெபத்தை ஏறெடுக்காமலிருப்பதே முதலாவது முக்கிய காரணம் என நான் நம்புகிறேன். சந்தேகமில்லாமல், பின்மாற்றத்தைப் பற்றிய இந்த இரகசிய உண்மை இறுதிநாள் வரை உலகத்திற்குத் தெரியாது. ஆனால், கிறிஸ்துவின் ஊழியக்காரனாக என்னுடைய மனசாட்சியிலிருந்து நான் இந்தக் கருத்தைச் சொல்கிறேன். நான் மறுபடியும் தெளிவாகச் சொல்ல விரும்பும் காரியம் என்னவெனில், 'பின்மாற்றம்' என்பது பொதுவாகத் தனிஜெபத்தை விட்டுவிடுவதிலிருந்தே ஆரம்பமாகிறது.
ஜெபமில்லாமல் வேதம் வாசிப்பது, ஜெபமில்லாமல் பிரசங்கம் கேட்பது, ஜெபமில்லாமல் திருமண ஒப்பந்தம் செய்வது, ஜெபமில்லாமல் பயணங்களை மேற்கொள்வது, ஜெபமில்லாமல் வசிப்பிடங்களைத் தேர்வுசெய்வது, ஜெபமில்லாமல் நண்பர்களை உருவாக்கிக் கொள்வது, மற்றும் அனுதின ஜெபத்தை அவசர அவசரமாக முழு இருதயமில்லாமல் செய்வது—இவையனைத்தும் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளும் அநேகரை ஆவிக்குரிய இயலாமைக்கு வழிநடத்தும் படிக்கட்டுகளாகும். மேலும், தேவன் அவர்களுக்கு நியமித்திருக்கும் பயங்கரமான அழிவிற்கும் இவை வழிவகுக்கின்றன.
இயேசு கிறிஸ்துவின் சபையில் காணப்பட்ட பின்வாங்கிப்போன லோத்து, நிலையற்ற சிம்சோன், மனைவிகளால் வழிவிலகிப்போன சாலொமோன், முரண்பாடான ஆசா, வளைந்துகொடுக்கும் யோசபாத், உலகக் காரியங்களின் மேல் அக்கறைகாட்டின மார்த்தாள் போன்றோரிடம் ஜெபமில்லாமல் காரியங்களைச் செய்கிற நிலைப்பாடே காணப்பட்டது. இந்த வரலாற்றுச் சம்பவங்களிலிருந்து நமக்குத் தெளிவாகும் ஒரு உண்மை என்னவெனில்: அவர்கள் அனைவரும் தனிஜெபத்தைக் குறித்த அக்கறையில்லாமல் இருந்ததே அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணமாயிருந்தது.
முதலில் மறைந்திருக்கும் வீழ்ச்சி
மக்கள் வெளிப்படையான பாவத்தில் வீழ்வதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பே, அவர்கள் உள்ளான தோல்வியை அடைந்திருக்கிறார்கள் என முழு நிச்சயமாய் நம்பலாம். அவர்கள் உலகத்தின் கண்களுக்கு முன்பாகப் பின்வாங்கிப்போன நிலைமையை அடைவதற்கு முன்பாகவே, முழங்காலில் நின்று ஜெபிப்பதில் பின்வாங்கிப் போயிருக்கிறார்கள். "சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்" என்கிற ஆண்டவரின் கட்டளையைக் கைக்கொள்ளாமல், தங்கள் பெலனையெல்லாம் இழந்துவிட்டுச் சோதனை நேரம் வரும்போது பேதுருவைப் போல இயேசுவை மறுதலித்து விடுகிறார்கள்.
உலகம் அப்படிப்பட்டவர்களின் வீழ்ந்துபோன நிலைமையைப் பார்த்துச் சத்தமாகச் சிரிக்கும். ஆனால், உலக மக்களுக்கு அதன் உண்மையான காரணம் ஒருபோதும் தெரியாது. அனுதினமும் காலையில் கர்த்தரோடு தொடர்புகொள்ளாத மனிதன், ஆவிக்குரிய நிலையில் மிகவும் பெலவீனமாகவே இருக்கிறான். உலக மனிதர்கள் அவனைப் பயமுறுத்தும்போது, அவன் தேவனை விட்டுவிட்டுப் பேய்களுக்குத் தூபங்காட்டச் சென்றுவிடுவான்.
நீங்கள் உண்மையிலேயே ஒரு கிறிஸ்தவராக இருந்தால், ஒருநாளும் பின்வாங்க மாட்டீர்கள் என நிச்சயமாய் நம்புகிறேன். நீங்கள் பின்வாங்கும் ஒரு கிறிஸ்தவராக இருக்க விரும்பவில்லை என்றால், நான் உங்களிடம் கேட்கும் இந்தக் கேள்வியை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்: "நீங்கள் ஜெபிக்கிறீர்களா?"