1 | என் கடவுளே! என் எதிரிகளினின்று என்னை விடுவித்தருளும்: என்னை எதிர்த்து எழுவோரிடமிருந்து எனக்குப் பாதுகாப்பளித்தருளும். |
2 | தீமை செய்வோரிடமிருந்து எனக்கு விடுதலை அளித்தருளும்: கொலைவெறியரிடமிருந்து என்னைக் காத்தருளும். |
3 | ஏனெனில், அவர்கள் என்னைக் கொல்வதற்காகப் பதுங்கியுள்ளனர்: கொடியவர் என்னைத் தாக்கத் திட்டமிட்டுள்ளனர்: நானோ, ஆண்டவரே! குற்றம் ஏதும் இழைக்கவில்லை: பாவம் ஏதும் செய்யவில்லை: |
4 | என்னிடம் குற்றமில்லாதிருந்தும், அவர்கள் ஓடிவந்து என்னைத் தாக்க முனைகின்றனர்: என்னை எதிர்கொள்ளுமாறு எழுந்தருளும்: என்னைக் கண்ணோக்கும், |
5 | படைகளின் கடவுளாகிய ஆண்டவரே! நீர் இஸ்ரயேலின் கடவுள்! பிற இனத்தார் அனைவரையும் தண்டிக்க எழுந்துவாரும்: தீங்கிழைக்கும் அந்தத் துரோகிகளுள் எவருக்கும் இரக்கம் காட்டாதேயும். (சேலா) |
6 | அவர்கள் மாலைவரை காத்திருந்து, அதன்பின் நாய்களைப் போலக் குரைத்து கொண்டு நகரினுள் சுற்றித் திரிகின்றனர். |
7 | அவர்கள் வாய் பேசுவதைக் கவனியும்: அவர்களின் நாவின் சொற்கள் வாள் போன்றவை: 'நாங்கள் பேசுவதை கேட்கிறவர் யார்?' என்கின்றார்கள். |
8 | ஆனால், ஆண்டவரே, நீர் அவர்களைப் பார்த்து எள்ளி நகைக்கின்றீர்: பிற இனத்தார் எல்லாரையும் பார்த்து நீர் ஏளனம் செய்கின்றீர்: |
9 | நீரே என் ஆற்றல்! உமது உதவியை எதிர்பார்க்கின்றேன்: ஏனெனில், கடவுளே! நீரே என் அரண். |
10 | என் கடவுள் தமது பேரன்பால் என்னை எதிர்கொள்ள வருவார்: கடவுள் என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் காணும்படி செய்வார். |
11 | அவர்களை ஒரேயடியாய்க் கொன்று விடாதேயும்: இல்லையேல், உம் வல்லமையை என் மக்கள் மறந்துவிடுவர்: என் தலைவரே! எங்கள் கேடயமே! அவர்களை உமது வலிமையால் நிலைகுலையச் செய்யும். |
12 | அவர்களின் வாய் பேசுவதும் நா உரைப்பதும் பாவமே: அவர்கள் தற்பெருமை அவர்களைச் சிக்கவைப்பதாக! அவர்கள் சபிக்கின்றனர்: அடுக்கடுக்காய்ப் பொய் பேசுகின்றனர். |
13 | ஆகவே, வெகுண்டெழுந்து அவர்களை அழித்துவிடும்: இனி இராதபடி அவர்களை ஒழித்துவிடும்: அப்பொழுது, கடவுள் யாக்கோபின் மரபினரை ஆள்கின்றார் எனவும் அவரது அரசு உலகின் எல்லைவரைக்கும் உள்ளது எனவும் அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். (சேலா) |
14 | அவர்கள் மாலைவரை காத்திருந்து, அதன்பின், நாய்களைப்போல குரைத்துக் கொண்டு நகரினுள் சுற்றித்திரிகின்றார்கள். |
15 | அவர்கள் இரைதேடி அலைகின்றனர்: வயிறு நிறையாவிடில் முறுமுறுக்கின்றனர். |
16 | நானோ உமது ஆற்றலைப் புகழ்ந்து பாடுவேன்: காலையில் உமது பேரன்பைப் பற்றி ஆர்ப்பரித்துப் பாடுவேன்: ஏனெனில், நெருக்கடியான வேளையில் நீர் எனக்கு அரணும் அடைக்கலமுமாய் இருந்தீர். |
17 | என் ஆற்றல் நீரே! உம்மைப் போற்றிப் பாடுவேன்: ஏனெனில், கடவுள் எனக்கு அரண்: கடவுளே எனக்குப் பேரன்பு! |